- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 6 June 2011

காயீனின் மனைவி


நூல் தலைப்பு – ஆதியாகமம்
நூலாசிரியர் – சகோ. வசந்தகுமார்
வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி

(ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பர்களினதும் வேதத்தை எதிர்ப்பவர்களினதும் கேள்விகளில் ஒன்றுதான் காயீனின் மனைவி பற்றியது. ஆபேலின் மரணத்திற்கு பின் சேத் பிறந்தாக வேதாகமத்தில் குறிப்பு உண்டு. அப்படியாயின் காயீனின்  மனைவி எங்கிருந்து வந்தாள். இதற்கு பல்வேறு இறையியல் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது)

ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பவர்களின் உள்ளத்தில் “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்?“ எனும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலாது. ஏனெனில் ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களிலும் ஆதாம் ஏவாள் எனுமிருவர் மட்டுமே இருக்கின்றனர். இவர்கள் இருவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட முதல் மனிதர்கள். (ஆதி. 1:26-27, 21-23) இவர்களுக்கு முன்பு உலகில் மனிதர் எவரும் இருந்ததில்லை. ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தில் இவர்களுக்கு காயீன் ஆபேல் எனும் இரு பிள்ளைகள் பிறக்கின்றனர். (ஆதி 4:1-2) இதன்படி அச்சமயம் ஆதாம், ஏவாள், காயீன் எனும் மூவர் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் 4ம் அதிகாரம் 17ம் வசனத்தில் “காயீன் தன் மனைவியை அறிந்தான்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காயீனின் மனைவி சடுதியாக எங்கிருந்து வந்தாள் என்ற கேள்வி எழுவது இயற்கையே. எனினும் இவ்வதிகாரத்தின் 14ம் வசனத்தில் “என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் என்னைக் கொன்று போடுவான்“ என காயீன் கூறுவதிலிருந்து, அச்சமயம் வேறு மனிதர்களும் உலகில் இருந்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டால் காயீனின் மனைவி அவர்களில் ஒருத்தி என்பது தெளிவாகும். 

ஆதியாகமம் நான்காம் அதிகாரம் வரை ஆதாம். ஏவாள், காயீன், ஆபேல் என்போரைப் பற்றி எழுதியுள்ள மோசே 5ம் அதிகாரத்தில் ஆபேல் என்போரைப் பற்றி எழுதியுள்ள மோசே 5ம் அதிகாரத்தில் முதல் மனிதனான ஆதாமின் வம்சவரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார். (ஆதி 5:1-4) 930 வருடங்கள் வாழ்ந்த ஆதாம் பல ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பெற்றதாக இவ்வம்சவரலாறு அட்டவணை அறியத் தருகிறது. (ஆதி. 5:4-5) ஆதாமுக்கு பல ஆண்பிள்ளைகளும் பல பெண்பிள்ளைகளும இருந்தபோதிலும் வேதசரிததிரத்திற்கு அவர்களது வாழ்க்கை வரலாறுகள் அவசியப்படாததினாலேயே அவர்களைப் பற்றிய விடயங்கள் வேதாகமத்தில் குறி்பபிடப்படவில்லை. இவர்களே ஆதியாகமம் 4:14 இல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவர்களாவர். அக்காலத்தில் முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் என்போரும் அவர்களுடைய பிள்ளைகள் மட்டுமே உலகில் இருந்தமையால் அவர்கள் தங்களுக்குள்ளாக மணம் முடிக்க வேண்டியிருந்தது. தேவ அறிவுறுத்தலின்படி ஆதாமின் வம்சம் விருத்தியடைவதற்கு (ஆதி. 1:28) ஆதாமின் மகனும் மகளும் மணமுடிப்பதைவிட அக்காலத்தில் வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை(01) உண்மையில் அக்காலத்தில் திருமணங்கள் அனைத்தும் சகோதர சகோதரித் திருமணமாகவே இருந்தது (02) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த ஆபிரகாமின் மனைவி கூட அவனது ஒன்றுவிட்ட சகோதரியாகவே இருந்தாள். (ஆதி 20:12) “மோசேயின் காலத்திலும் எகிப்திய அரசரகள் கூட தங்களது சகோதரிகளையே மணம் முடித்தனர்.(01)

ஆதாமையும் ஏவாளையும் தனிப்பட்ட நபர்களாக கருதாத நவீன இறையியலாளர்கள், காயீனின் மனைவி அவனுடைய சொந்த சகோதரி எனும் உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. “ஆதாம்“ எனும் எபிரேய வார்த்தையி்ன் அர்த்தம் “மனிதன்“ என்பதால் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டிருககும் “ஆதாம்“ என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனின் பெயரை அல்ல. மாறாக அது மனுகுலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவான பதம் (03) என்பதே அவர்களது விளக்கமாகும். இதன்படி ஆரம்பத்தில் ஆதாம் எனும் ஒரு மனிதன் அல்ல. பல மனிதர்கள் இருந்துள்ளனர். எனவே காயீனின் மனைவி அவனுடைய சொந்தச் சகோதரியாக இருக்க வேண்டியதில்லை எனக் கூறலாம். ஆனால் புதிய ஏற்பாடு ஆதாமை தனிப்பட்ட மனிதனாகவே குறிப்பிட்டுள்ளமையினால் இவ்விடயத்தில் நவீன இறையிலாளர்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ரோமர் 5ம் அதிகாரத்தில் பல தடவைகள் பவுல் ஆதாமை “ஒருவன்“ எனக் குறிப்பிட்டுள்ளார். (ரோமர் 5:12-21) இவ்வதிகாரத்தில் 15ம், 17ம் வசனங்களில் ஒரு மனிதனாகிய ஆதாமும் இன்னுமொரு மனிதனாகிய கிறிஸ்துவும் ஒப்பிடப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளார்கள். ஆதாம் தனிப்பட்ட ஒரு மனிதன் அல்ல என்றால் இயேசுகிறிஸ்துவும் தனிப்பட்ட மனிதன் அல்ல எனறே கூற வேண்டும். ஏனென்றால் ஆதாம் எனும் ஒரு மனிதனுடைய பாவம் காரணமாக மனுக்குலததுக்கு ஏற்பட்ட கேட்டிலிருந்து இயேசு கிறிஸ்து எனும் ஒரு மனிதர் மூலம் மனுக்குலத்துக்கு கிட்டும மீட்பைப் பற்றியே ரோமர் 5:12-21 இல் விளக்கப்பட்டுள்ளது. எனவே இயேசு கிறிஸ்து தனிப்பட்ட நபர் என்பதினால் அவரைப் போலவே ஒரு மனிதன் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதாமும் ஒரு தனிப்பட்ட ஒரு மனிதன். உண்மையில் “ஆதாம் ஒரு மனுக்குலம் மட்டுமல்ல. மாறாக தனிப்பட்ட ஒரு மனிதன் என்பதே பவுலின் நம்பிக்கையாகவும் ரோமர் 5:12-21 இலுள்ள தர்க்கத்திற்கான ஆதாரமாயுமுள்ளது. (04) 1 கொரிந்தியர் 15:21,22, 45 இலும் இதேவிதமாக ஆதாமும் இயேசுக்கிறிஸ்துவைப் போல தனிப்பட்ட நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

ஆதாமிற்கு முன்பும் மனிதர்கள் உலகில் இருந்துள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர் (05) இத்தகைய கருத்துடைய வேதவியாக்கியானிகள் காயீனின் மனைவி ஆதாமுக்கு முன்பிருந்த மனிதர்களுடைய வம்சத்தில வந்த ஒரு பெண் என்றே கருதுகின்றனர். ஆனால் வேதாகமம் ஆதாமைத் தனிப்பட்ட ஒரு மனிதனாகவும் (ரோமர் 5:12-21) உலகின் முதல் மனிதனாகவுமே அறிமுக்ப்படுத்துகின்றது. ஆதியாகமம் 1:1 இலுள்ள ஆதியிலே எனும் வார்த்தை மூலமொழியில் “வானங்களும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட காலத்தையே குறிக்கிறது (06) அதற்கு முன்பு தேவனைத் தவிர வேறெதும் இருக்கவில்லை. ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவன் ஆறு நாட்களும் சிருஷ்டித்தவைகள் நிரற்படுத்தப்பட்டள்ளன. ஆறாவது நாளே மனிதன் சிருஷ்்டிக்கப்பட்டுள்ளான். ஆதி. 1:26-31) அதற்கு முன் மனிதர் எவரும் இருக்கவில்லை. ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்படட மனிதனுடைய பெயரே ஆதாம் உலக மாந்தர் அனைவரும் அந்த ஆதாமின் வம்சத்தினர் ஆதாமே உலகின் முதலாவது மனிதன் என்பதை 1 கொரிந்தியர் 15:45, 47 அறியத் தருகிறது. 

உலக மாந்தர் அனைவரும் ஆதாம் எனும் ஒரு மனிதனில் இருந்து வந்தவர்கள் எனும் உண்மையை அப். 17:26 அறியத் தருகிறது. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; எனும் உண்மையை இவ்வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மூலமொழியின் படி இவ்வசனம் ஆங்கில வேதாகமத்தில் சரியான முறையில் “ஒரு மனிதனில் இருந்து மானிட ஜாதிகள் அனைத்தும் உருவாகி (07) என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது சகல மனிதர்களும் ஒரு மனிதனாகிய ஆதாமிலிருந்து வந்தவர்கள்.(08 ) என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். அந்த ஒரு ஆதாமிலிருந்து வந்தவர்கள் நோவாவின் குடும்பத்தினரை தவிர மற்ற அனைவரும் உலகலாளவிய ஜலப்பிரளயத்தில் மரித்தனர். (ஆதி. 6:13, 7:21) அதன் பின்னர் நோவாவின் பிள்ளைகள் மூலமே மனிதர்கள் பூமியெங்கும் பரவினார்கள். (ஆதி. 9:18-19) எனவே, ஆரம்பத்தில் ஆதாமை் தவிர வேறு மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கு வேறு எவ்வித ஆதாரமும் இல்லை. எல்லோரும் ஆதாமிலிருந்து வந்துள்ளமையால் ஆதாமின் ஆண்பிள்ளைகள், மணமுடிப்பதற்கு நம் சகோதரிகளைத் தவிர வேறு பெண்கள் உலகில் இருக்கவில்லை. 

மோசேயின் காலம் வரை சகோதரிகளைத் திருமணமுடிப்பது சமுதாயத்தால் அங்கீகரிககப்பட்ட முறையாகவே இருந்தது. ஆனால் சீனாய் மலையில் தேவன் மோசேயின் மூலமாகவே கொடுத்த நியாயப்பிரமாணம் சகோதர சகோதரி திருமணத்தை முற்றாகத் தடை செய்துள்ளது. ஒருவன் தன் சொந்த சகோதரியை மட்டுமல்ல ஒன்றுவிட்ட சகோதரியை மணம் முடிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. லேவியராகமம் 18:9 இல் “உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது“ எனக் கட்டளையிடப்பட்டுள்ளது. லேவியராகமம் 18 அம் அதிகாரத்தில் “நிர்வாணமாக்குதல்“ எனும் பதமானது தாம்பத்திய உறவுக்கான சொல்லாகவே உள்ளது.(09) லேவியராகமம் 18 :8-9 இன் கட்டளைகள் உபாகமம் 27:20,22 இல் மறுபடியுமாகக் கொடுக்கப்பட்ட போது நிர்வாணமாக்குதல் என்பதற்குப் பதிலாக “சயனித்தல்“ எனும் வாரத்தை உபயோகிக்கப்பட்டிருப்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது. ஆங்கில வேதாகமத்தில் இப்பதம் “பாலுறவு“ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் லேவியராகமம் 18:9 இல் “வீட்டில் பிறந்தவள் ஒருவனது சொந்த தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்தவவளாவாள். புறத்தில் பிறந்தவள் தகப்பன் அல்லது தாய் தனது திருமண உறவுக்கு வெளியில் பெற்ற பிள்ளையாகும் (10) இத்தகைய சகோதரர்களுக்கிடையிலான திருமணத்தை தடைசெய்துள்ள நியாணப்பிரமாணம் “உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி. உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி“(லேவி. 18:11) தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் (உபா 27:22) எனக் கூறுகிறது. 

ஒருவன் தன் சகோதரியை மணமுடிப்பபதைத் தேவன் தடை செய்திருப்பதனால் அவர் சிருஷ்டித்த முதல் மனிதனாகிய ஆதாமின் பிள்ளைகள் தம் சகோதரிகளை மணமுடிக்கத் தேவன் எவ்வாறு அனுமதிக்கலாம் என கேட்கலாம். உண்மையில் “மனித இனம் விருததியடைவதற்கு சகோதரர்களுகு்கிடையிலான திருமணம் அவசியமாயிருந்த காலம் வரை மட்டுமே தேவன் அத்தகைய திருமணங்களை அனுமதித்திருந்தார்.(11) அதே சமயம் ஆரம்பகால மனிதர்களின் “ஜீன்கள்“ (அதாவது மானிட பரம்பரை அலகு) எவ்விதப் பாதிப்புக்கும் உட்படாதவையாக இருந்தமையால் இரத்த உறவு முறைகளில் உ்ளளவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் பாதிக்கப்படவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல மானிட “ஜீன்கள்“ பாதிக்கப்படத் தொடங்கியமையால் உறவினர்களுக்கிடையிலான பிறக்கும் பிள்ளைகளும் பாதிப்படையத் தொடங்கின.  (02) இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் “உறவினர்களுக்கிடையிலான திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் ஒன்றில் அங்கவீனர்களாக இல்லையென்றால் வியாதியுடையவர்களாக இல்லையென்றால் புத்தி பேதலித்தவர்களாக இருப்பார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளர். (12) “இன்று இரத்த உறவு முறையில் திருமண முடிப்பவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளின் “ஜீன்கள் (மானிடப் பரம்பரை அலகு) பாதிக்க்பபட்டவர்களாகவும், தீங்கு விளைவிப்பவையாகவும் உள்ளன. (13)எனவே உறவினர்களுக்கிடையிலான திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் பாதிக்கத் தொடங்கும்வரை இத்தகைய திருமணங்களை அனுமதித்திருந்த தேவன் அதன்பின்னர் மனித இனத்தின் நன்மை கருதி, உறவினர்களை் திருமணம் முடிப்பதைத் தடை செய்துள்ளார். 



References 
1. Hard Saying Old Testament by Walter C. Kaiser
2. The Genesis Record  A Scientific & Devotional Commentary by Henry M. Morris
3. Man is Revolt by Emil Brunner
4. Christian Theology by Millard J. Erickson 
5. Understanding the Bible by John Stott
6. in the Beginning : Genesis 1-3 by E.J. Young
7. New International Version of the English Bible
8. The interpretation of the Act of the Apostles by R.C.H. Len ski
9. Leviticus in the Expositors Bible Commentaries by Laird Harris 
10. Leviticus in the Tyndale OT Commentaries by R.K. Harrison   
11. Genesis Vol1. in the Bible Student Commentaries by G,CH Aalders
12. The Bible has the Answers by Henry M. Morris
13. Genesis : An Expositional Commentary by James M. Boices 





தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. //அச்சமயம் வேறு மனிதர்களும் உலகில் இருந்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டால் காயீனின் மனைவி அவர்களில் ஒருத்தி என்பது தெளிவாகும்//

    ஐயா இறைவன் படைக்காமல் வேறு மனிதர்கள் பூமியில் எப்படி வந்தார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆதாம் ஏவாளை மட்டும்தான் கடவுள் படைத்தார். ஆதாம் ஏவாளுக்கு அநேகம் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களின் 3 பேரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நேரத்தில் சகோதர சகோரிகள் திருமணமே நடைபெற்று வந்தது. எனவே காயின் மனந்தது அவளது சகோதரியையே.

      Delete