- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 26 December 2012

நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், ….. ,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.(மத்தேயு 10:5-6)



இயேசு கிறிஸ்து தன் சீடர்களை இறை பணிக்காக அனுப்பும் போது “நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.“ என்று கட்டளையிட்டார். (மத். 10:5-6) இயேசு உலக இரட்சகராக வந்த போதிலும் அவர் தனது இறைப்பணியை இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் வரையறை செய்யும் விதத்தில் புறஜாதியார் பட்டணங்களுக்குப் போகவேண்டாம் என சீடர்களுக்குக் கட்டளையிட்டமை அநேகருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இயேசுவும் கூட மத்தேயு 15.24 தன் பணியையும் இஸ்ரேலுக்கு மாத்திரம் வரையறை செய்துள்ளார். இதனால் சிலர் இவை இயேசு கிறிஸ்துவின் கூற்றுகள் அல்ல எனும் கருத்துடையவர்களாகவும் உள்ளனர். புறஜாதியினர் இரட்சிப்படைதை விரும்பாத யூத கிறிஸ்தவர் இவ்வாக்கியங்கள இயேசு கிறிஸ்துவின் கூற்றாக வேதத்தில் புகுத்தியுள்ளர்(1) என்பதே இவ்வசனங்களுக்கு கொடுக்கும் விளக்கமாகும். மேலும் இவ்வறிவுறுத்தல் மத்தேயுவின் சுவிஷேசத்தில் மட்டுமே இடம் பெறுவதால், யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூலில் இயேசுவின் மூலம் மக்களுக்கு கிட்டும் இரட்சிப்பு யூதர்களுக்கு மட்டும் உரியதாகவே காட்டப்பட்டுள்ளது என்றும் சில இறையியலாளர்கள் தர்க்கிக்கின்றனர். இதனால் புத்தகத்தின் இறுதியில் உள்ள சகல மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் எனும் இயேசுவின் கட்டளை மத்தேயுவின் எழுதப்பட்டவை அல்ல என்றும் அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்றும் இவர்கள் கருதுகின்றனர். (2)

இயேசுவின் கூற்றானது மானிட இரட்சிப்பைப் பற்றிய தேவனுடைய திட்டத்தின் காலக்கிரம முறையின்படி விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும். (3) சுவிஷேசமானது முதலில் யூதருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். இரட்சிப்பு யூதர்களின் வழியாக வந்துள்ளமையால்(யோவான். 4:22) முதலில் யூதர்களுக்கு அதைப் பற்றிய சுவிஷேச செய்தி அறிவிக்கப்பட்ட பின்பே புறஜாதியாருக்கு அறிவிக்கப்பட வேண்டியிருந்தது. (ரோமர் 1.16, 2.9-10) மத்தேயு 10ம் அதிகாரத்தில் இயேசு முதல் தடவையாகத் தன் சீடரைப் புறஜாதிப் பட்டணங்களுக்குப் போக வேண்டாம் என கட்டளையிட்டுள்ளார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளமையால் இயேசு தன் சீடர்களை முதலில் யூதர்களிடமே அனுப்பியுள்ளார். எனினும் பிற்காலத்தில் அவர் சகல இன மக்களுக்கும் சுவிஷேசத்தை அறிவிக்கும்படி கட்டளையிட்டார்(மத். 28.19-20) இவ்வித ஒழுங்கு முறையையே பிற்காலத்தில் ஆதிச் சபையினரும் அப்போஸ்தர்களும் பின்பற்றியுள்ளதை அப்போஸ்தலர்களுடைய நடபடிகளின் புத்தகத்தில் நாம் அவதானிக்கலாம். (அப். 1:8, 13:5, 44-48, 14:1) 

மத்தேயுவின் சுவிஷேசம் யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டது என்பது உண்மையாயினும் (4) இயேசுவின் சுவிஷேசம் யூதர்களுக்கு மட்டுமேயானது என மத்தேயு கூறவில்லை. சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஒரு யூத இனவாதியாக சித்தரித்துள்ள போதிலும்(5) அவரது சுவிஷேசத்தில் ஆரம்பத்திலிருந்து புறஜாதியாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இயேசுவை யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மெசியாகவாக காண்பிக்கும் மத்தேயு, அவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் என்று கூறவில்லை. நான்கு புறஜாதிப் பெண்களை இயேசுவின் வம்ச வரலாற்றில் உள்ளடக்கியுள்ள மத்தேயு, புறஜாதியரான சாஸ்திரிகள் அவரைத் தரிசிக்க வருவதையும் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். (மத். 1 :1-17, 2 :1-11) மேலும், இயேசு புறஜாதியாருடைய விசுவாசத்தைப் பாராட்டும் சம்பவங்களும் மத்தேயுவின் சுவிஷேசத்தில் உள்ளன.  (மத். 8 :10, 15 :28) சுவிஷேசம் சகல ஜாதியினருக்கும் அறிவிக்கப்படும் \என்பதும் (மத். 24 :14, 26 :13) புறஜாதியாரும் தேவனுடைய இராட்சியத்திற்குள் வருவார்கள் என்பதும் (மத். 8 :11, 21 :43) மத்தேயுவின் நூலில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் இறுதிக் கட்டளை சகல இன மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது. (மத். 28 :19-20)

இயேசு சகல இன மக்களினதும் இரட்சகராக வந்த போதிலும் அவர் யூதராக யூத மண்ணுக்கே வந்தார். “தேவனுடைய இரட்சிப்பின் செய்தியை உலகிற்கு அறிவிக்கும் மக்களாக  யூதர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். (ஆதி. 12 :3. ஏசா 60 :3) இதனால் இரட்சிப்பின் செய்தி முதலில் யூதர்களுக்கே அறிவிக்கப்பட்டது.(6) இயேசு யூத ஜனங்களை “காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்“ எனக் குறிப்பிட்டுள்ளார். (மத். 10 :6) இச்சொற்பிரயோகம் சிலர் தர்க்கிப்பது போல “இஸ்ரவேல் மக்களில் ஒரு பகுதியினரை மட்டும் குறிக்கும் விபரணம்“(7) அல்ல. ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் இச்சொற்பிரயோகம் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் குறிக்கும் விபரணமாகவே இருந்தது. இயேசுவும் இத்தகைய அர்த்தத்துடனே இச்சொற்பிரயோகத்தை உபயோகித்திருக்க வேண்டும். மேலும் “இஸ்ரவேலரின் வீடு எனும் சொற்பிரயோகம் யாக்கோபின் சந்ததியினர் அனைவரையும் குறிக்கும் விபரமாக இருப்பதும்“ (8) இதை உறுதிப்படுத்துகின்றது. இஸ்ரவேல் மக்கள் மேய்பனில்லாத ஆடுகளாக (மத். 9 :6) தொலைந்து போயிருந்தனர். (எரே. 50 :6, எசே. 34 :11,16) அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தி தேவனிடம் கொண்டு வருவதற்காக இயேசு முதலில் தன் சீடர்களை அவர்களிடம் அனுப்பினார். தேவனுடைய திட்டத்தில் யூதர்களுக்கு சிறப்பான இடம் இருந்தமையால் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.(9)


குறிப்புகள்      

(1) F.W. Beare, The Gospel According to Matthew, St. Francisco : Harper & Row, 1981, pp. 241-242.

(2) Adoff von Harnack, The Mission and Expansion of Christianity in the First Three Centuries, New York: Harper & Brothers, 1962, p.40.

(3) John P. Meier, Law and History in Matthew’s Gospel. Rome:BIP 1976, p. 27-30

(4) இயேசுவை பழைய ஏற்பாட்டு வாக்கியங்களின் நிறைவேறுதலாக வந்துள்ள மேசியாவாக மத்தேயு சித்தரித்துள்ளார். இயேசுவின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடும் மத்தேயு தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்டது நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது என பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளார். “மத்தேயுவில் மட்டும் 50 இற்கும் அதிகமான பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன. (Robert H. Mounce, New International Biblical Commentary : Mathew. P 3-4) ஏனைய சுவிஷேசங்களில் இந்த அளவு அதிகமான பழைய ஏற்பாட்டு குறிப்புகள் இல்லை. மேலும், லூக்காவைப் போல்லாது மத்தேயுவில் இயேசுவின் வம்ச வரலாறு அட்டவணை யூதர்களின் தப்பான ஆபிரகாமில் ஆரம்பிக்கின்றது. (மத். 1:1) இயேசுவை யூதர்களின் வம்சத்தில் வந்த தாவீதின் குமரனாக மத்தேயு சித்தரித்துள்ளார்.   “முதலாம் நூற்றாண்டில் இப்பெயரானது தாவீதின் வம்சத்தில் வந்தவர்களை மட்டுமல்ல தாவீதின் சிங்காசனத்தை மறுபடியும் யூதர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வரும் மேசியாவின் பெயராகவும் இருந்தது.” (Leon Morris, New Testament Theology p. 126) ஒன்பது தடவைகள் இயேசுவிற்கு இப்பெயரை உபயோகிக்கும் மத்தேயு (மாற்குவிலும் லூக்காவிலும் இப்பெயர் முறையே மூன்று தடவைகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது) அவரை யூதர்களின் மேசியாவாகக் காண்பித்துள்ளார். மேலும் அரமிக் வார்த்தைகளை மொழி பெயர்க்காமல் மத்தேயு அவற்றை அரமிக் வார்த்தையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதும் (5:22, 27:6) யூதக் கலாச்சாரப் பழக்க வழக்கங்களுக்கு விளக்கங்கள் கொடுக்காமலிருப்பதும் (மத். 15:2 ஐ மாற். 7:3-4 உடன் ஒப்பிடவும்) தேவனுடைய ராச்சியம் என்பதற்குப் பதிலாக யூதர்கள் உபயோகித்த பரலோக ராட்சியம் எனும் சொற்பிரயோகத்தை உபயோகித்துள்ளமையும், இயேசுவின் போதனைகளில் யூதர்களோடு தொடர்புள்ள பல விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதும் (மத். 6:16-18, 12:1-14, 24:20, 5:23-24, 17:24-27) மத்தேயுவின் சுவிஷேசம் யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. (R.T. France, Tyndale New Testament Commentaries: Mathew p. 17-18) 

(5) சிலர் மத்தேயு “மதம் மாறிய யூத மதப் போதகர் எனக் குறிப்பிடுகையில் (Pointed out in David J. Bosch, Transforming Mission p 59-60), ஏனையவர்கள் மத்தேயு தனக்கு கிடைத்த இயேசு பற்றிய விடயங்களை யூத மயப்படுத்தியுள்ளதாக கருதுகின்றனர். (Schuyler Brown, ‘The Two-Fold Presentation of the Mission in Matthew’s Gospel’ in Studia Theologica Vol 31[1977], p 21-32) மறுபுறத்தில் இயேசு யூதர்களைக் கடிந்து கொள்ளும் சம்பவங்களை சுட்டிக் காட்டும் வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தேயு யூதர்களுக்கு எதிரானதும் புறஜாதியினருக்கு சார்பானதுமான சுவிஷேசம் என்றும் கருதுவதோடு மத்தேயுவை ஒரு புறஜாதியானவாகவும் சித்தரித்துள்ளனர். (K.W. Clark, The Gentile Bias and Other Essays Leiden : Brill. 1980 p4)

(6) Louis A. Barbieri : The Bible Knowledge Commentary : Matthew, p. 41-42

(7) Krister Stendhal, The School of St. Mathew and its use of the Old Testament. Philadelphia: Fortress, 1968

(8) Leon Morris, The Gospel According to Mathew p. 246

(9) William Barclay, The Daily Study Bible : Mathew 1-10 p. 363 

இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 
















Thursday 13 December 2012

பாலியல் : கவனமாயிருக்க வேண்டியதொரு பகுதி




……..நீங்கள் எதிர்பாலாருடன் சேர்ந்த ஒருவரைக் குறித்து மிதமான உணர்வைக் கொண்டிருக்கையில் …….. இந்த நபருடனான உங்களது உறவைக் குறித்து நீங்கள் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும்.

கிறிஸ்தவன் தனது வாழ்வில் ஓர் உறவுக்குள்ளோ அல்லது நிதானக் குறைவால் ஏற்படும் உறவுக்குள்ளோ, முன்னதாகவே திட்டமிட்டுப் போவது மிகவும் அரிதாகவே காணப்படும். அநேகமான நேரங்களில் பின்பற்ற வேண்டிய பொதுவான விதிமுறைகளைக் குறித்தது கவனக் குறைவாக இருத்தலே, அவர்கள் இப்படியான உறவுக்குள்ளே சறுக்கிச் செல்வற்கு காரணமாகின்றது. அவர்கள்  அந்நியொன்னியமான காரியங்களைக் குறித்து  அதிகமான  அளவாளாதிருப்பார்கள். அல்லது தனிமையில் அநேக நேரங்களைச் செலவிட்டிருப்பார்கள். வேறொருவரால் கொடுத்திருக்க கூடிய உதவியை அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்திருப்பார்கள். அல்லது தனது துணை வீட்டில் இல்லாத வேளையில் குறிப்பட்ட நபரை வீட்டில் அதிக காலம் வைத்திருந்திருப்பார்கள். எம்மைப் பாவத்தில் வீழ்த்த்தக்க சூழ்நிலைகளி லிருந்து தப்புவதற்கு நாமாகவே அவதானமாய் தப்ப வேண்டிய வேளைகளும் உண்டு. யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பின் வஸ்திரத்தைப் பிடித்து என்னோடு சயனி என்று சொன்ன வேளையிலே, அவன் இதனையே செய்தான். மாறாக, எல்லையே மீறாமல், நின்று, அவளோடு கதைப்பேன் என்று யோசேப்பு தீர்மானிக்கவில்லை. அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியில் ஓடிப்போனான். (ஆதி. 39.12) பவுல் தீமோத்தேயுவிடம் பாலியலுக்குரிய இச்சைகளுக்கு விலக்கியோடும்படி ஆலோசனை வழங்கினார். (2 தீமோஃ 2.22)

வாழ்க்கையிலே மிகவும் நிச்சயமற்ற காரியங்களில் ஒன்று பெண்ணை நாடிய ஒரு ஆணின் வழியென்று வேதாகமம் சொல்கிறது. (நீதி. 30.18-19) அதாவது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய பகுதி இதுவாகும். ஏனெனில் இந்த இடத்தில் நாம் எளிதில் பாவத்தில் விழுந்து விடலாம். (நீதி. 2.16-19, 5:1-23, 7:4-27) ஒரு காரியம் அசுத்தமானதாக இருக்கும்போது அது அசுத்தமானது என்று எம்மையே நம்ப வைத்து ஏமாற்றிவிடக் கூடியது மனிதனது இதயம். இதனால், எமது வாழ்க்கையில் ஆபத்தானதொரு காரியம் நிகழக்கூடும் என்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளாமல் இருக்க கூடும். ஆனால்,  அதனை எடுத்துச்  சொல்வதில் அவர்களுக்குப் பயம் இருக்கலாம். அல்லது அவர்கள் அதனை சந்தேகப்படாமல், அவர்கள் காணும் நிகழ்வை அசுத்தமானதாகவும் எண்ண மாட்டார்கள். 

நீங்கள் எதிர்பாலைச் சேர்ந்த ஒருவரைக் குறித்து பிடித்தமான உணர்வைக் கொண்டிருக்கையில் நீங்களோ அல்லது அவரோ திருமணமாகாதவராய் இருந்தால், இந்த நபருடனான உங்களது உறவைக் குறித்து நீங்கள் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும். இது பாலியல் ரீதியான உணர்வாய் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது அவரை சந்திக்க வேண்டுமென்கின்ற உணர்வு, அல்லது அவருடன் அடிக்க கதைக்க வேண்டும் அல்லது அவரை அடிக்கடி பாரக்க வேண்டும் அல்லது அவருக்கு எப்பொழுதும் உதவி செய்ய வேண்டும் என்றதான உணர்வுகளாயிருக்கலாம். எதிர்பாலைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்படக்கூடிய இப்படியான உணர்வுகள் நீங்கள் தேவ ஊழியம் செய்யும்போது கூட ஏற்படும். ஏனெனில் நீங்கள் மிகவும் அழகான ஒரு காரியத்தை இணைந்து செய்கிறீர்கள். அது மிகவும் அழகானதும் சுத்தமானதுமாக ஆரம்பிக்கலாம். ஆனால் அது ஒரு ஆபத்தானதாக மாறிவிடலாம். 

நான் கிறிஸ்துவுக்காக இளைஞரில் பணியாற்றுகின்றேன். வாலிபருக்கான ஊழியங்களிலே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சினை என்னெவெனில் இளம் பெண்பிள்ளைகள் தங்களது ஆண் வாலிபத் தலைவர்மீது அளவில்லா மதிப்பு வைத்திருப்பதன் காரணமாக, அவர்களையும் அறியாமலே அந்த வாலிப தலைவர் மீது ஓர் நெருக்கமான ஈர்ப்பை வளர்த்துக் கொள்வார்கள். சாத்தானானவன் இப்படியான சந்தர்ப்பங்களை உடனடியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கைகளை சின்னாப்பின்னப்படுத்த முயலுவான். திருமாணமான ஆண் ஊழியர்கள் குறிப்பாக அவர்களுடைய மனைவிமார் அவர்களது ஊழியங்களிலே அதிகம் இசைவாக இல்லாத நிலைமைகளில், இப்படியான சூழ்நிலைகளில் விழுந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாயிருக்கும். 

எமது பழைய ஆண் நண்பர்களையும் பெண் நண்பிகளையும் குறித்து எமது உள்ளத்திலுள்ள இனிமையான உணர்வுகள் எமது இதயத்திலிருந்து விட்டுப்போகும் என்று நான் எண்ணவில்லை. சில வேளைகளில் இந்த உணர்வுகள் சச்சரவான சூழ்நிலைகளில் வெளிப்படுத்தப்படலாம். இதுவும் ஒரு வகையான இனிமையான உணர்வு என்ற காரணத்தால் அது விரைவில் காதலுணர்வாக மாறிவிடலாம். நீங்கள், குறிப்பிட்ட நபரை அநேக ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரைக் கண்டவுடன் வித்தியாசமான உணர்வுகள் வெளிப்பட்டு, அதைக் கட்டுப்படுத்தவும்  கடினமாகலாம். ஒரு காலத்தில் சாதாரண உணர்வு ரீதியான பந்தத்தை விட அதிகமான பிணைப்பை வைத்திருந்த எதிர்பாலாரை இப்போது சந்திக்கும்போது, நாம் இந்த ஆபத்துக்களைக் குறித்து அவதானமாயிருந்து கவனமாய் நடந்து கொள்ள வேண்டும். 

ஜெரி ஜெக்கின்ஸ் என்பர் எமது திருமணங்களை எப்படிக் காத்துக் கொள்வது என்பதனைக் குறித்து எழுதியுள்ள ‘HEDGES’ (புதர்வேலி) என்ற புத்தகத்தில் எமது திருமணங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வளர்க்க வேண்டிய புதர்வேலிகளைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். இப்படியானதொரு புதர்வேலியைக் குறித்து அவர் இப்படிச் சொல்கின்றார். “நான் வேடிக்கையாகவேனும் கிளர்ச்சியூட்டும் அல்லது பகிடிக் காதல் தொடர்பான சம்பாஷனைகளைத் தவிர்த்துக் கொள்வேன். “அவர் தொடர்ந்து சொல்லும்போது, இதற்கான காரணம் வார்த்தைகளின் வல்லமையை நாம் நம்புவதாலும் தமக்குக் கிடைக்கும் பாராடுதலுக்கும் மக்கள் சார்பான முறையில் மறுஉத்தரவு கொடுப்பதுமே என்கிறார் “பயனற்ற பகிடியான காதல் உறவுகள் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவரும்“ ஏனெனில் அடுத்தவர் அதிக கவனத்தை எதிர்பார்க்கின்றவராகவும் கவனம் தேவைப்படுகின்றவராகவும் இருக்கலாம். ஒருவரை அதிகமாகப் பாதிக்கக் கூடியது “நீங்கள் அழகானதொரு உடையை அணிந்திருக்கின்றீர்கள்“ என்று சொல்வதற்குப் பதிலாக, எம்மை அறியாமலேயே “இன்று நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளீர்கள்“ என்று புத்தியீனமாக நாம் சொல்லக்கூடும் என்று ஜென்கின்ஸ் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

“நாங்கள் இருவரும் எவ்வளவு பொருத்தமானவர்கள். நீங்கள் என்னைத் திருமணம் செய்திருக்க வேண்டும்“. அல்லது “எனது மனைவியைச் சந்திக்க முன்னர் உங்களைச் சந்தித்திருந்தால் உங்களையே நான் திருமணம் செய்திருப்பேன்“ போன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை.அத்துடன், அது எமது துணையைக் கேவலப்படுத்துவதாகும். ஆனாலும் கிறிஸ்தவர்கள் இப்படியான கூற்றுக்கள் சொல்லப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களை நான் அறிவேன். 

இந்த விடயத்தில் எமது துணையிடமோ அல்லது நமக்கு வரப்போகும் துணையிடமோ பகிர்ந்துகொள்ள முடியாத எதனையும் துணை தவிர்ந்த வேறொரு எதிர்பாலான ஒருவரோடு செய்யவோ, கதைக்கவோ கூடாது என்பது என்பது நாம் பின்பற்ற வேண்டிய நல்லதொரு காரியமாகும். கலாநிதி ஜேய் கெஸ்லர் அவர்கள், தனது திருமணமான மகள் தனக்குக் கூறிய ஒரு விடயத்தை எழுதியுள்ளார். “என்னுடைய கணவர் ஓரிரவு மட்டும் ஒரு பெண்ணுடன் எதேச்சையாக பாலுலறவில் ஈடுபட்டார் என்று கேள்விப்படும்போது மனப்பாதிப்புக்குள்ளாவதைவிட ஒரு பெண்ணுடன் ஆழமான நட்பை வைத்திருந்து அவர் என்னிடம் பகிரமுடியாத அல்லது பகிர்ந்து கொள்ளாத காரியங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனக் கேள்விப்படுவதால் அதிக பாதிப்புக்குள்ளாவேன்.“ என்றாள். இந்தக் குறிப்பின் மூலம் கலாநிதி கெஸ்லரோ அல்லது நானோ இப்படியான ஓரிரவு பாலுறவுக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், இங்கே, தனது கணவன் தன்னிடம் மட்டுமே செல்ல வேண்டிய காரியங்களை, பகிர்ந்து கொள்ளும்படியாக வேறொரு பெண் தனது கணவனின் இதயத்தைக் கவர்ந்துள்ளாள் என்பது தன்னை மிகவும் அதிகமாய் பாதிக்கும் என்ற அவளுடைய கூற்றே இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். 


இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்




Wednesday 12 December 2012

பூமியின் மேல் … சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். (மத்தேயு 10:34)


இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அவர் உலகிற்கு அறிவிக்க வந்த செய்தியையே முரண்படுத்தும் கடினமான வாக்கியமாகப் பலரால் கருதப்படுவது, அவர் தான் பூமியின் மேல் பட்டயத்தை அனுப்ப வந்தேன் எனத் தெரிவித்தமையாகும். இயேசு சமாதானப் பிரபுவாகவும் (ஏசா. 9.6)(1) சமாதானக் காரணராகவும் (எபே. 2:14) இருப்பதோடு, அவர் உலகிற்கு அறிவிக்கும் செய்தி சமாதானத்தைப் பற்றியதாகவே உள்ளது. (எபே. 2.17, மத். 10.13) மேலும் அவர் தனது சமாதானத்தை நமக்குத் தருவதாகவும் வாக்களித்துள்ளார். (யோவான் 14:27) இதனால் இயேசுவின் சீடர்கள் அவர் உலகிற்கு சமாதானத்தையே கொண்டு வந்துள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களுடைய நம்பிக்கையை தகர்த்தெறியும் விதத்தில் “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.(மத். 10:34) எனக் கூறியமை கிறிஸ்தவர்களாகிய நம்மால் புரிந்துக் கொள்வதற்கு கடினமான வார்த்தைகளாகவே உள்ளன.
 
உண்மையில் இயேசு உலகிற்குக் கொண்டு வந்த சமாதானம் எத்தகையது என்பதை நாம் அறிந்திருந்தால் அவரது இக்கூற்றை முரண்பாடானதாகக் கருத மாட்டோம். “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்“ என இயேசு கூறுவதிலிருந்து அவரது சீடர்கள் “அவர் சமாதானத்தையே கொண்டு வந்துள்ளார்“ என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் என்பதை அறியத் தருகின்றது. இயேசுவின் காலத்தைய யூதர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணி அனுப்பப்படும் இரட்சகரை(2) எதிர்பார்த்துக் கொண்டிருந்த்தோடு, அவர் தம்மை ரோம இராட்சியத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து தமக்கு சமாதானமிக்க இராட்சியத்தைப் பெற்றுத் தருவார் என்றும் நம்பினர். (3) “மேசியாவின் வருகை உலகளாவிய சமாதானத்தைக் கொண்டு வரும்“ என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது.(4). எனினும் இயேசு இத்தகைய நோக்கதோடு வராதமையால்(5) தன்னை சமாதானத்தைக் கொண்டு வருபவராக எண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இயேசு கொண்டு வந்த சமாதானம் ஆவிக்குரியதாக இருந்தது வேதத்தில் சமாதானம் என   மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் சண்டைகளற்ற சகஜ நிலையைக் குறிக்கும் பதம் அல்ல. மாறாக இது ஒப்புரவாக்கப்படும் செயலையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது இயேசு மக்களைத் தேவனோடு ஒப்புரவாக்குகின்றவராய் செயல்படுகின்றார். இது பாவத்தினால் பிரிந்திருந்த தேவனையும் மனிதனையும் ஒப்புரவாக்கி தேவனுக்கும் மனிதருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. இதை அவர் சிலுவையில் மக்களுடைய பாவங்களை பரிகரித்ததன் மூலம் செய்துள்ளார். (6). இயேசு இத்தகைய சமாதானத்தைப் பற்றியல்ல. அதாவது அக்கால யூதர்களும் தனது சீடர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விதமான சமாதானத்தை தருவதற்காக தான் வரவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
 
யூதர்களின் எதிர்பார்த்த விதமான அரசியல் ரீதியான சமாதானத்தைக் கொண்டு வராத இயேசு தான் பட்டயத்தையே அனுப்ப வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் பட்டயம்“ எனும் வார்த்தை இங்கு சொல்லர்த்தமாக உபயோகிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உண்மையில் இயேசு ரோம இராட்சியத்தோடு போராடுவதற்காக இவ்வுலகிற்கு வரவில்லை. சில வேத ஆராய்ச்சியாளர்கள் லூக்கா 12.49 இல் இயேசு குறிப்பிட்ட விடயமே, அதாவது பூமியின் மேல் அக்கினியை போட வந்தேன்“ என்னும் அவரது கூற்று மத்தேயுவில் பட்டயத்தை அனுப்ப வந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளதாக கருதுகின்றனர். (7) எனினும் அக்கினியை போட வந்தேன் எனும் கூற்று நியாயத்தீர்ப்பைப் பற்றிய குறிப்பாக இருப்பதனாலும்(8) இயேசுவின் இக்கூற்று லூக்கா 12.51 குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஷ
 
உண்மையில் “பட்டயம்“ எனும் வார்த்தை என்ன அர்த்தத்துடன் இயேசுவால் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதையும் லூக்கா 12.51 இன் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. லூக்காவில் பட்டயம் என்பதற்குப் பதிலாக “பிரிவினை“ என்னும் வார்த்தை உள்ளது. எனினும் இயேசுவின் கூற்றின் ஆரம்ப வரிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. “நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன்“ என லூக்கா 12.51 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்தேயுவில் “பட்டயத்தை அனுப்ப வந்தேன்“ எனக் கூறிய இயேசு அதைப் பற்றி விளக்கும்போது “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.“ (மத். 10.35) “பட்டயம்“ என்னும் வார்த்தையை அவர் பிரிவினையைக் குறிக்கும் ஒரு உருவகமாகவே உபயோகித்துள்ளார்(9) என்பதை அறியத் தருகின்றது. இதிலிருந்து இயேசு அனுப்பும் பட்டயம் “குடும்ப அங்கத்தினர்களுக்கிடையிலான பிரிவினை என்பது தெரிகின்றது. (10)
 
இயேசு “பட்டயத்தை அனுப்ப“ (மத். 10.34) அதாவது பிரிவினையை உண்டாக்க“ (லூக்கா. 12.51) வந்ததாக்க் குறிப்பிட்டுள்ளமையினால், அவரது வருகை எவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ள விதமாக்க் குடுமப் அங்கத்தினரிடையே பிரிவினையையும் பகையையும் ஏற்படுத்தும் என்பதும் இன்று அநேகர் கேட்கும் கேள்வியாகவுள்ளது. உண்மையில் இயேசுவின் சுவிஷேசத்திற்கும் மக்கள் அளிக்கும் உத்தரவாத்தை அடிப்படையாக்க் கொண்டே குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்படுகின்றன. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போதும் ஒரேவிதமான முறையில் இயேசுவை ஏற்றுக் கொள்வதில்லை. “அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு அளிக்கும் உத்தரவாதம் வித்தியாசப்படுவதனால், அதை அடிப்படையாக்க் கொண்டு அவர்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்படுகின்றன(11) உண்மையில் ஒரு குடும்பத்திலேயே இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களும் நிராகரிப்பவர்களும் இருப்பதனால் அவர்களிடையே பிரிவினைகள் ஏற்படுகின்றன. (12) இதைப் பற்றியே இயேசு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புகள்.
(1) ஏசாயா 9:6 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீரக்கதரிசனமாகும்.

(2) இவரே மேசியா என அழைக்கப்பட்டார். மேசியா என்பது எபிரேயப் பெயராகும். இதனது அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும். கிரேக்கத்தில் இத்தகைய கருத்தைத் தரும் பதம் “கிறிஸ்டோஸ்“ என்பதாகும். இது தமிழில் கிறிஸ்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவே தேவனால் அபிஷேசிக்கப்பட்டு அனுப்பட்டவர் என்பதனாலேயே இயேசு என்னும் அவரது பெயரோடு கிறிஸ்து என்னும் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

(3) Donald Gulthire. New Testament Thelogy. P. 237 மத்தேயு 8:4 இற்கான விளக்கத்தையும் பாரக்கவும்.

(4) Robert H. Mounce, New International Biblical Commentary : Mathew. P. 98

(5) இதனாலேயே என்னுடைய இராட்சியம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்று இயேசு தெரிவித்தார்.

(6) எபேசியர் 2ம் அதிகாரத்தில் பவுல் இதைப் பற்றி விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

(7) Mathew Black, “Uncomfortable Words’ in The Expository Times. Vol XXXI[1969-1970], p. 118

(8) லூக்கா 12:49 இன் விளக்கத்திற்கு இந்நூலின்…… பக்கத்தைப் பாரக்கவும்

(9) Leon Morris, The Gospel According to Mathew p. 266

(10) லூக்காவின் சுவிஷேசத்தில் “52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். (லூக்கா 12:52-53)

(11) Donald A. Hagner, Word Biblical Commentary: Matthew, p. 292

(12) R. T. France, Tyndale New Testament  Commentary: Matthew,p 188
 
இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 
 

Saturday 1 December 2012

கர்த்தர் வெறுக்கும் காயீனின் வழி


வேதப் பகுதி: ஆதியாகமம் 4:1
    
உலகின் ‘முதல் கொலைகாரனான'  காயீனின் வாழ்வு, கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்றக் கூடாத ஒரு வழியாகப் புதிய ஏற்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்’ (1யோவா.3:12), என்று அறிவுறுத்தும் புதிய ஏற்பாடு, தேவனை மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள் செல்லும் வழியாகக் காயீனின் வழி உள்ளதாகக் கூறுகிறது (யூதா.11). 

(1). அது அவிசுவாசத்தின் வழி (ஆதி.4:1)    
கிறிஸ்தவம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். காயீனின் வழி விசுவாசமுள்ளதாக இருக்கவில்லை. அவன் அவிசுவாசத்துடன் தேவனிடம் வந்தமையால் தேவன் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.    

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி அல்லது ‘காணப்படாத வைகளின் நிச்சயம்’  ஆகும் (எபி.11:1). விசுவாசத்தைக் குறிப்பிடும் ‘பிஸ்டிஸ்’  (pistis) என்னும் கிரேக்கப்பதம், ‘அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை’  என்னும் அர்த்தமுடையது. கண்களினால் காணாததையும், வேதாகமம் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு உறுதியாக நம்புவதே விசுவாசமாகும் (எபி.11:6). காயீனின் வழி இத்தகைய விசுவாசமுடையதாக இருக்கவில்லை.  

தேவனுக்கு காணிக்கை செலுத்தும்போது ஆபேல் தன்னுடைய மந்தையில் ‘முதற் பிறந்தவைகளில் கொழுமையானவைகளைத்’ தெரிவுசெய்ததை (ஆதி.4:4) வேதாகமம் அவனுடைய ‘விசுவாசச் செயல்’ என்று கூறுகிறது (எபி.11:4). ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருந்த காலத்திலும், அதன் பின்பும், தேவனை வழிபடுகிறவர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், காயீன் பிறந்தபொழுது, ‘கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்“ (ஆதி.4:1) என்னும் ஏவாளுடைய கூற்று அர்த்தமற்றதாகவே இருக்கும். எனவே, காயீனும் ஆபேலும், தங்களுடைய பெற்றோரிடமிருந்தே தேவனுக்கு காணிக்கை செலுத்தி அவரை வழிபடும் முறையை அறிந்திருக்கவேண்டும். ஆதாம் கூறியவற்றை ஆபேல் விசுவாசித்துள்ளான். ஆனால் காயீனோ, கடமைக்காகத் தேவனுக்கு காணிக்கை செலுத்தியுள்ளான்.   

ஆபேல் விசுவாசத்துடன் காணிக்கை செலுத்தியமையால், அவன் நீதிமான் என்று தேவனால் நற்சாட்சி பெற்றான் (எபி.11:4). ஆதாமின் மூலமாகத் தேவ னைப் பற்றி அறிந்துகொண்ட காரியங்களை ஆபேல் விசுவாசித்து அதன்படி செயற்பட்டமையால், அவன் தேவனுடைய பார்வையில் நீதிமானாக இருந்தான். வேதாகமப் போதனையின்படி, தேவனைப் பற்றி அறிந்து கொள்வதை, அல்லது தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதே அவருடைய பார்வையில் நீதிமானாக இருப்பதற்கான வழியாக உள்ளது (ஆதி.12:5-6, ரோ.4:1-25).      

கிறிஸ்தவர்களாகிய நாம் காயீனின் அவிசுவாச வழியில் செல்கிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனைப் பற்றி வேதாகமம் கூறும் காரியங்கள் உண்மை என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நாமும் ஆபேலைப் போல தேவனுடைய பார்வையில் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.     

காயீனுடைய காணிக்கை “இரத்தம் சிந்தும் பலியா“  இராதமையினாலேயே தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், காயீனும் ஆபேலும் தங்களுடைய பாவங்களுக்குப் பலி செலுத்தியதாக ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு காணிக்கை செலுத்தினார்கள் என்றே இவ்வதிகாரம் கூறுகிறது (ஆதி.4:3-4). ஷகாணிக்கை| என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “மின்ஹா“(minha) என்னும் எபிரேயப் பதம் தேவனைக் கனப்படுத்துவதற்காக அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பதையே குறிக்கின்றது. இரத்தப் பலியைக் குறிப்பிடும் “ஸீபாஃ“(zebah) என்னும் எபிரேயப் பதம் இவ்வதிகாரத்தில்  உபயோகிக்கப்படவில்லை. எபிரேயர் 11:4ல், ஆபேலினுடைய காணிக்கையைப் “பலி“ என்று குறிப்பிட்டுள்ளது தவறாகும். இங்கு “தைசியா“(thysia)என்னும் கிரேக்கப் பதம் இரத்தப் பலியைக் குறிப்பிடும் சொல் அல்ல. இரத்தமற்ற காணிக்கைகளைத் தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறுவது வேதாகமப் போதனையை முரண்படுத்தும் கருத்தாகவே உள்ளது (யாத்.23:16, உபா.26:2-4). காயீன் இரத்தப் பலியையே செலுத்தியிருந்தாலும் தேவன் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால், தேவன் தமக்கு கொடுக்கப்படும் காணிக்கைப் பொருளையோ, அல்லது அது கொடுக்கப்படும் சடங்காசார செயல்முறைகளையோ அல்ல, மாறாக அதைக் கொடுப்பவனுடைய உள்ளத்தின் நிலைமை எப்படி இருக்கின்றது என்பதையே பார்க்கிறவராக இருக்கின்றார் (ஆமோ.5:21-24, ஓசி.6:6, ஏசா.1:11-17, மீகா.6:6-8, எரே.7:19-20, லூக்.21:1-4). 


(2) அந்தகார ஆதியாகமம் 4:5ஆ
காயீனுடைய வழி அவிசுவாசத்தின் வழியாக மட்டுமல்ல, அது அந்தகார வழியாகவும் இருந்தது. அவிசுவாசியாக இருந்த காயீன் மனந்திரும்பி வெளிச் சத்திற்கு வர மனமற்றவனாக இருளிலேயே இருந்தான். மனிதர்கள் மனந்திரும்பி தம்மிடம் வருவதற்குத் தேவன் பல சந்தர்ப்பங்களை அவர்களுக்கு கொடுக்கிறவராக இருக்கின்றார். தேவன் காயீனுடைய காணிக்கையை நிராகரித்த போதிலும், அவனுடைய உள்ளத்தின் நிலைமை மாற்றமடைவதற்காக அவனோடு பேசினார்.  

தேவன் தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதது காயீனுக்கு நியாய 
மானதாகத் தென்படவில்லை. தேவன் என்ன காரணத்திற்காகத் தன்னுடைய 
காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவன் ஆராய்ந்து பார்க் காமல், தேவனுடைய செயல் நியாயமற்றது என்னும் எண்ணத்தில் இருந்தான். 

இவ்வசனங்களில் “எரிச்சல்“  என்பது மூலமொழியின்படி “கோபம்“ என்றே இருக்க வேண்டும். காயீன் தேவன்மீதும் தன் சகோதரன் மீதும் கடும் கோபத்துடன் இருந்தான். அந்தகாரத்தில் இருந்த காயீனின்  உள்ளத்தின் நிலையை மாற்றமடைந்த அவனுடைய முகபாவம் வெளிப்படுத்தியது. 

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, தேவன் எவ்வாறு அவர்களைத் தேடி 
வந்தாரோ, அதேவிதமாக கோபத்தோடு இருந்த காயீனையும் தேவன் தேடி வந்தார். தேவன் காயீனிடம் கேட்ட கேள்விகள், அவன் எதற்காகக் கோபமாக இருக்கிறான் என்பதை அறியாத நிலையில் கேட்கப்பட்டவைகள் அல்ல. மாறாக, காயீன் தான் இருக்கும் நிலையை அறிந்துகொள்வதற்காகவே தேவன் அவனிடம் நீ ஏன் கோபமாயிருக்கிறாய்? உன் முகம் மாற்றமடைந்ததற்கான காரணம் என்ன என்று அவனிடம் கேட்டார். காயீன் தான் எதற்காகக் கோபமாயிருக்கின்றேன் என்பதை ஆராய்ந்து பார்த்து, தன்னுடைய கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப் பார்ப்பதற்காகத் தேவன் அவன் கோபமா யிருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.     

தேவனுடைய கூற்று 7ம் வசனத்தில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. இதற்குக் காரணம், மூலமொழியில் இவ்வசனம் தெளிவற்றதாக இருப்பதோடு, பிற்காலத்தில் திருத்தப்பட்டும் உள்ளது. எனினும், “நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ“  என்னும் வாக்கியத்தில் “நன்மை செய்தால்“ என்பது “சரியானதைச் செய்தால்“ என்றும், “மேன்மையில்லையோ“ என்பது நீ “ஏற்றுக் கொள்ளப்படுவாய்“ அல்லது “மன்னிக்கப்படுவாய்“  என்றும் அர்த்தமுடையது. அதாவது, அவன் மனமாற்றம் அடைந்தவனாக சரியான நோக்கத்துடன் இன்னுமொரு காணிக்கையைச் செலுத்தினால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றே தேவன் அவனிடம் கூறியுள்ளார்.  

காயீன் தன்னுடைய மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்“  என்கிறார் தேவன். “பாவம் இரைக்காகக் காத்திருக்கும் பயங்கரமான ஒரு மிருகமாக இங்கு உவமிக்கப்பட்டுள்ளது. 7ஆம் வசனத்தின் கடைசி இரண்டு வாக்கியங்களிலும் “அவன்“ என்பது “அது“ என்றும் “அவனை“  என்பது  “அதை“ என்றும் இருக்க வேண்டும். அதாவது “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்“. அதன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அதை ஆண்டுகொள்வாய் என்பதே சரியான  மொழிபெயர்ப்பாகும். பாவம் காயீனைத் தன்னிடமாய் வைத்திருக்க விரும்பும். ஆனால் அவன் அதை மேற் கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும். பாவம் செய்யும் ஆசை காயீனை ஆட்கொள்ளலாம். அதை அவன் மேற்கொள்ள வேண்டும்.      

(இ) அன்பற்ற வழி (ஆதி.4:8). 

அந்தகாரத்திலிருந்த காயீன் வெளிச்சத்திற்கு வராதிருந்தமையால், அவனுடைய வழி அன்பற்றதாக இருந்தது. தன் சகோதரன்மீது கோபம் கொண்ட காயீனின் உள்ளத்தில் பகை காணப்பட்டது. உள்ளத்திலிருக்கும் பகை கொலைக்கு சமமானது என்று வேதம் கூறுகிறது (மத்.5:21-22, 1யோவா.3:15). காயீனின் அன்பற்ற வழி இது உண்மை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தன் சகோதரன் மீது கோபப்பட்ட காயீன் அவனைக் கொலை செய்தான் (ஆதி.4:8). இத்தகைய காயீனின் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதம் கூறுகிறது (1யோவா.3:12). 

(கட்டுரையாசிரியர் Dr.M.S. வசந்தகுமார் (தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம்)