- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 25 February 2011

என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28)


நூல்: கர்த்தரின் வார்த்தையில் கடினவரிகள்
(யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்)
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி


(வேதபுரட்டர்கள் இயேசுவின் தெய்வீகத் தன்மையை மறைப்பதற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இயேசுவை பிதாவினை விட தாழ்வானவராக காட்டுவதற்கு இவ்வசனத்தை பாவிக்கின்றனர. இக்கட்டுரையில் ஆசிரியர் இத்தகைய கருத்து சரியானதுதான என ஆராய்ந்துள்ளார்.)

இயேசுக்கிறிஸ்துவின் போதனைகளில் சில வாக்கியங்கள் முழுமையாக விளங்கிக் கொள்வதற்குச் சிரமானவைகளாக இருப்பதனால், பலர் அவரை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய கூற்றுக்களில் ஒன்று. அவரது தன்மையையும் தேவத்துவத்தையும் சர்வவல்லமையையும் அநேகர் சந்தேகிப்பதற்கும் மறுதலிப்பதற்கும் காரணமாயுள்ளது. ஏனென்றால் அவர் பிதாவாகிய தேவனைப் பற்றிக் குறிப்பிடும்போது யோவான் 14:28 இல் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என தெரிவித்துள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் அனைவரும் தங்களின் உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.(1) இயேசுக்கிறிஸ்துவே பிதா தம்மிலும் பெரியவர் என்று கூறியமையால் அவர் பிதாவைவிடத் தாழ்மையானவர் என்றும் பிதாவுக்குச் சம்மான வல்லமையும் தெய்வீகமும் அற்றவர் என்றும் போதிப்பதற்கு வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தை உபயோகித்து வருகின்றனர்.

இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவை எச்சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இன்று பலகையான உபதேசக்குழப்பங்கள் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளதற்குப் பிரதான காரணம், கிறிஸ்தவர்கள் வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது(2) அவை சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தைக் கருத்திற் கொள்ளாமல் அவற்றை வியாக்கியானம் செய்வதேயாகும். உண்மையில் இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்திலேயே “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்“ என்று கூறினார். பிதாவுக்குச் சம்மான நிலையில் பிதாவைப் போல தேவமகிமையுடன் இருந்த இயேசுக்கிறிஸ்து தமது பரலோக மகிமையைவிட்டு, மனிதராக தாழ்வான நிலைக்கு வந்தார். இதைப் பற்றி வேதாகமம் விளக்கும்போது பிலிப்பியர் 2:6-7 ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்பிரயோகம் மூலமொழியில் “பற்றிப்பிடித்துக் கொண்டிராமல்“(3) என்னும் அர்த்தமுடையது. எனவே, இயேசுக்கிறிஸ்து தேவனுக்குச் சம்மாயிருக்கும் நிலையைப் பற்றி பிடித்துக் கொண்டிராமல், அதை விட்டுத் தாழ்வான நிலைக்குப் பூமிக்கு வந்துள்ளார்.

இயேசுக்கிறிஸ்து பிதாவைவிட தாழ்வான நிலைக்கு வநதாலும் அவர் தமது தேவத்துவத்தைத் துறந்து விட்டு வரவில்லை. என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனோடு சமமாக பரலோகத்தில் இருக்கும் நிலையையே அவர் விட்டு வந்துள்ளார் என்பதை நாம் மறக்கலாகாது. இயேசுக்கிறிஸ்து இவ்வுலக விட்டு மறுபடியுமாக பிதாவிடம் செல்லும்முன்பு அவரோடு பேசும்போது பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும் என்று யோவான் 17:5 இல் கூறியமை அவர் தமக்கிருந்த மகிமையையே பரலோகத்தில் விட்டு இவ்வுலகத்திற்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. பிலிப்பியர் 2:6-7ல் “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்“ என்னும் வாக்கியத்தில் “ரூபம்“ என்பதற்கு மூலமொழியில உபயோகிக்கப்பட்டுள்ள “மோர்பே“ (Morphe) என்னும் கிரேக்கப்பதம் “உட்புறத் தன்மையை குறிக்கும் கிரேக்கப்பதமாகும்.(4) எனவே, இது இயேசுக்க்கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும் குணவியல்பையும் சுட்டிக் காட்டுகிறது.(5) இயேசுக்கிறிஸ்து இவற்றை விட்டு வந்ததாக வேதாகமம் கூறவில்லை. ஆதியிலிருந்தே தெய்வீக வார்த்தையாக இருந்த அவர் (யோவா. 1:1) மாம்சமாகியபோது, தெய்வீகத்தன்மையை இழந்து மாம்சமாக மாறிவிடவில்லை. யோவான் 1:14 இல் வார்த்தை மாம்சமாகி“ என்னும் வாக்கியத்தில் “ஆகி“ என்னும் பதம் மூலமொழியில் சிறப்பான அர்த்தம் உடையது. இது, “ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாறியதை அல்ல. மாறாக, முன்பு இருந்த நிலையோடு இன்னுமொரு புதிய நிலை சேர்க்கப்பட்டதையே குறிக்கின்றது.(6) அதாவது இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகிற்கு வந்தது தெய்வீகத் தன்மையைத் துறப்பதை அல்ல மானிடத் தன்மைகளை சேர்ப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது(7). எனவே, அவர் இவ்வுலகத்தில் மனிதராக வாழ்ந்த காலத்திலும் தேவனாகவே இருந்தார் இதனால்தான் ‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. (கொலோ 2:9 என்றும் “தேவனே மாமிசத்தில் வெளிப்பட்டார்’ (1 தீமோ 3:16) என்றும் வேதாகமம் அறியத்தருகிறது.

இயேசுக்கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் முழுமையான தேவனாக இருந்தபோதிலும், பிதாவை விடத் தாழ்வான நிலையிலேயே இருந்தார். ஏனென்றால் பிதா பரலோகத்தில் மகிமை பொருந்தியவராய் இருந்தார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ, பூலோகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்தார். உண்மையில், இத்தகைய நிலையைக் கருத்திற் கொண்டே இயேசுக்கிறிஸ்து என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று கூறினார். அதாவது “இயேசுக்கிறிஸ்து தாம் அச்சமயம் இருந்த நிலையையும் பிதாவின் நிலையையும் ஒப்பிட்டே இவ்வாறு கூறியுள்ளார்.( எனினும் அவர் எப்போதும் இவ்வாறு தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருந்து விடவில்லை. உலக மாந்தருடைய பாவங்களைப் போக்குவதற்காக தம்மை பலியாக இவ்வுலகத்திற்கு வந்த அவர், பாவப் பலியாக சிலுவையில் மரித்த பின்னர், உயிரோடெழுந்து மறுபடியுமாகத் தாம் முன்பிருந்த உன்னத நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் எல்லாவற்றுக்கும் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டதை பிலி 2:9-11 அறியத்தருகிறது.(9). உண்மையில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தபோது அவர் கூறியவை உயர்த்தப்பட்ட நிலைக்கு பொருந்தாது. எனவே, அவர் தாழ்வான நிலையில் இருந்தபோது கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என தர்கிப்பது தவறாகும். உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று “அவருடைய தற்காலிக நிலைப் பற்றியதேயன்றி, அவருடைய தன்மையைப் பற்றியது அல்ல(10) என்பதை நாம் மறக்கலாகாது.

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும் யோவான் 10:30 இல் குறிப்பிட்டுள்ளபடி அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். எனவே இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர் அல்ல. யோவான் 14:28 இல தாம் பிதாவைவிடத் தாழ்மையானத் தன்மையுடையவர் என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிடவில்லை என்பதை மூலமொழியில் உபயோகித்துள்ள பதம் தெளிவாகக் காட்டுகின்றது. கிரேக்க மொழியில் “பெரியது“ (meizon) என்பதையும் “சிறந்தது“ (Kreitton) என்பதையும் வேறுபடுத்திக் காட்ட இரு வித்தியாசமான சொற்கள் உள்ளன. (11) இயேசுக்கிறிஸ்து சிறந்தது “ (Kreitton) என்று அர்த்தம் தரும் பதத்தை உபயோகித்திருப்பாரேயானால் அவரைவிட பிதா உயர்வானவர் என்றே கருத வேண்டும். ஆனால் இயேசுக்கிறிஸ்து உபயோகித்த “பெரியவர்“ என்னும் பதம் தேவத் தன்மையின் மேன்மையினைச் சுட்டிக் காட்டும் வார்த்தை அல்ல. பிதா பரலோகத்திலும் தாம் பூலோகத்திலும் அச்சமயம் இருந்தமையினாலேயே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதனால் அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என்று எவ்விதத்திலும் கூறமுடியாது.

அடிக்குறிப்புகளும் உசாத்துணை நூல்களும்
Footnote and Reference
(1) கி.பி 4ம் நூற்றாண்டில் ஏரியஸ் என்பவரினால் உருவாக்கப்பட்ட தவறான போதகத்திற்கு அதாவது பிதாவாகிய தேவனைவிட இயேசுக்கிறிஸ்து தாழ்வானாவர் என்னும் உபதேசத்திற்கு அவர் உபயோகித்த வசனங்களில் இதுவும் ஒன்றாகும் (L.B. Berkhof, The History of Christian Doctrines pp 84-85) ஏரியனிசம் (Arianism) என்று அழைக்கப்படும் இவ்வுபதேசம் கி.பி 318இல் நைசீயா என்னுமிடத்தில் கூடிய கிறிஸ்தவத் திருச்சபையின் ஆலோசனை சங்க்க் கூட்டத்தில் பிழையான வேதப்புரட்டு என்று கணிப்பிட்டுத் தடை செய்யப்பட்ட போதிலும் அதன் பின்பும் இத்தவறான உபதேசத்தின் செல்வாக்கு கிறிஸ்தவ உலகில் இருந்துள்ளது. (R.E. Olson, The Story of Christian Theology pp 141-160) இன்று யெகோவாவின் சாட்சிகள் இதேவிதமான தவறான உபதேசத்தப் பரப்பி வருகின்றனர். இவர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “இயேசுக்கிறிஸ்துவின் தன்மை தேவனின் தன்மையை விடத் தாழ்வானது (Anonymous. Let God be true, p110) என்றும் இதனால் “பிதாவைப் போல அவரால் தேவனாக இருக்க முடியாது. (Anonymous Reasoning from the Scripture p410) என்றும் கூறுகின்றனர். இதுபற்றிய மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் “யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்“ நூலினைப் பாரக்கவும்
(2) இயேசுக்கிறிஸ்து பிதாவுக்குச் சமமானனவர், பிதாவைப்போல் முழுமையான தேவத்தத்துவமுடையவர் என்பதற்கு ஆசிரியரின் இயேசுக்கிறிஸ்து இறைவனா? எனும் நூலினைப் பாரக்கவும்
(3) K. S. Wuest, Philipians in Greek New Testament, pp 64-65
(4) J.B. Lighfoot, Saint Paul’s Epistle to The Philippians PP110, 127-133
(5) G.F. Hawthorme, Philippians, World Biblical Commentary, P84
(6) W, Hendriksen, New Testament Commentary : John P84
(7) M.J. Erickson, Christian Theology P735
( A.W. Pink, Exposition of the Gospel of John, pp281-282
(9) பிலிப்பியர் 2:9-11 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(10) J.C. McDoell, Jesus : A Biblical Defence of His Deity, P87
(11) கிரேக்கத்தில் “மெய்ஸ்ஸொன் (meizon) க்ரீட்டொன் (Kreitton) என்னும் இரு பதங்களும் முறையே “பெரியது“ “சிறந்தது“ என்றும் அர்த்தம் கொண்ட பதங்களாகும்.

Tuesday 22 February 2011

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)


நூல்: கர்த்தரின் வார்த்தையில் கடினவரிகள் 
(யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்)
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி

இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளில், அவர் தம்மை பற்றி வெளிப்படுத்திய விடயங்களும் உள்ளன. எனினும், இவற்றில் சில கூறுகள், அநேகரால் புரிந்து கொள்ள முடியாத கடினமான வசனங்களாகவே உள்ளன. இதனால், இவை தவறான முறையினால் வியாக்கியானம் செய்யப்பட்டும் வந்துள்ளது. இத்தகைய ஒரு கூற்று,  யோவான் 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தின் 30ம் வசனத்தில் இயேசுக்கிறிஸ்து , நானும் பிதாவும்  ஒன்றாயிருக்கிறோம் (யோவான் 10:30) என்று தெரிவித்துள்ளார். இவ்வசனத்தை ஆதாரமாக்க கொண்டு சில கிறிஸ்தவர்கள் பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவும் வெவ்வேறானவர்கள் அல்ல  என்றும், ஒரு தெய்வமே இரு பெயர்களினால் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றும் கருதுகின்றனர்.(1)  பிதாவும் குமாரனும்  வெவ்வேறானவர்கள் என்பதற்குப் புதிய ஏற்பாட்டில் இருவரும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள பல பகுதிகள் உள்ளன.  உதாரணத்திற்கு இயேசுக்கிறிஸ்வின் ஞானஸ்நானத்தின்போது அவர் பூமியில் இருக்கும்போது பிதா வானத்திலிருந்து பேசினார். மேலும்  பூமியிலிருக்கும் இயேசுக்கிறிஸ்து பிதாவோடு ஜெபத்தில் தொடர்பு  கொண்டார். (யோவான் 17.1). இதைப்போன்ற பல வேதப்பகுதிகள் புதிய ஏற்பாட்டில் உள்ளபோதிலும் இயேசுக்கிறிஸ்து நானும் பிதாவும்  ஒன்றாயிருக்கிறோம் என்று கூறியது அநேகருக்கு குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

இயேசுக் கிறிஸ்துவின் கூற்றை நாம் சரியான விதத்தில் விளங்கிக்  கொள்வதற்கு, இவ்வாக்கியம் மூலமொழியில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்துவின் இந்த கூற்றை நாம் சரியாக விளங்கிக் கொள்வதற்கு, இவ்வாக்கியம் மூலமொழியில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.. ஏனென்றால்  இக்கூற்றானது மூலமொழியில் உள்ள விதமாக தமிழில்  மொழிபெயர்க்கப்படவில்லை. மூலமொழியில் “ஒன்றாயிருக்கிறோம்“  எனும் வார்த்தையானது ஒன்றன்பால் பதமாகவே உள்ளது.(2)  (அதாவது heis என்னும் ஆண்பால்பதம் அல்ல. hen எனும் ஒன்றன்பால் பதமே உபயோகிக்கப் பட்டுள்ளது) உண்மையில் இப்பதம் ஆண்பால் பதமாயிருந்தாலேயே “ஒன்றாயிருக்கிறோம்“ அல்லது ஒருவராயிருக்கிறோம் என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் பிதாவும் இயேசுக்கிறிஸ்துவும் ஒருநபர் அல்ல(3) . அவர்கள் இருவர். இதனால் இயேசுக்கிறிஸ்து ஆண்பால் பதத்தை உபயோகிக்காமல் ஒன்றன்பால் பதத்திலேயே பேசியுள்ளார். எனவே “ஒரு நபர் என்பதல்ல. ஒரு பொருள் என்பதே இதன் அர்த்தமாகும்.(4)  சில கிறிஸ்தவர்கள்  ஒன்றன்பால் பதம் உபயோகிக்கப்பட்டதைக் கருத்திற் கொண்டாலும் அவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை,, அவரும் பிதாவும் ஒரே நபரல்ல. ஆனால் ஒரே சித்தமுடையவர்கள் என்று விளக்குகின்றனர்.  “பிதாவும் குமாரனும் சிந்தையிலும் நோக்கத்திலும் செயலிலும் ஒன்றாயிருக்கிறார்கள்“(5) என்பதே இவர்கள் இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்கு கொடுக்கும் விளக்கமாகும். இதற்கும் முன்னுள்ள வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்துவின்  இத்தகைய கூற்றுக்கு இத்தகைய அர்த்தம் உள்ளதென்பதும் அவர் இவ்வுலகில் வாழும்போது பிதாவின் சித்தத்தின்படியே செயற்பட்டு வந்தார் என்பதும் உண்மை என்றாலும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் இதைவிட மேலான தெய்வீக இரகசியத்தை வெளிப்படுத்துகின்றன.  

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்னும் கூற்றினூடாக  இயேசுக்கிறிஸ்து என்ன கூறினார் என்பதை அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் சரியாகப் புரிந்து கொண்டனர். இதனால்தான் உடனடியாக அவர்மீது எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டனர். (யோவா 10.31) உண்மையில் நானும் பிதாவும் ஒரே சிந்தையுடையவர்கள் என்று சொன்னதற்கு யூதர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்ல முற்பட்டார்கள் என்று சொல்வது அர்த்தமற்றது. ஏனென்றால் தேவனுடைய சித்தத்தின்படி  செயல்படுவது கல்லெறிந்து கொல்லப்படக்கூடியளவிற்கு பயங்கரமான தேவதூஷணம் அல்ல. தேவசித்தத்தை அடைவதே யூத மார்க்கத்தின் முக்கிய இலக்காயிருந்தது(6).  யூதர்கள் இயேசுக்கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல முற்பட்ட  சந்தர்ப்பங்களை அவதானித்துப் பார்க்கும்போது, அவர் தம்மை  தேவன் என்று கூறுவதை அவர்கள் புரிந்து கொண்டனர் என்பதை  அறிந்திடலாம்.  நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல்  கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று  சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிற படியினால் உன்மேல் கல்லெறிகிறோம் (யோவான் 10.33) என்றே யூதர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து நானும் “பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்“ என்னும் கூற்றின் மூலம் இயேசுக்கிறிஸ்து தாம் தேவன் என்பதை கூறுகிறார் என்பதை யூதர்கள் அறிந்து  கொண்டனர் என்பது தெளிவாகின்றது. இது அவர்களுக்கு  தேவதூஷணமாயிருந்த்து. இதனால்தான் பழைய ஏற்பாட்டு  நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட விதமாக, தேவதூஷணம்  சொன்ன இயேசுக்கிறிஸ்துவிற்க மரண தண்டனை கொடுப்பதற்காக (லேவி 24.16) அவர் மீது எறிவதற்குக் கல்லுகளை எடுத்துக் கொண்டனர். 

இயேசுக்கிறிஸ்துவின் கூற்றில் “ஒன்றாயிருக்கிறோம் என்னும்  சொற்பிரயோகம் மூலமொழியில் ஒன்றன்பால் .பதமாக இருப்பதனால்,  இதை ஒரு பொருளுடையவர்களாய் இருக்கிறோம் என்றே மொழிபெயர்க்க வேண்டும். எனவே, இயேசுக்கிறிஸ்துவும் தேவனும் ஒரே தெய்வீகச்சாரம் அல்லது தன்மை உடையவர்கள்“(7)  என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். அதாவது பிதாவாகிய தேவன் தெய்வீகத் தன்மை அல்லது சாரமுடையவராயிருப்பது போலவே இயேசுக்கிறிஸ்துவும் தெய்வீகத் தன்மையுடையவராய் இருக்கிறார் என்பதையே அறியத் தருகிறார். “இயேசு கிறிஸ்துவும் தேவனும் இரு நபர்களாக உள்ளபோதிலும் ஒரே தன்மையுடையவர்களாய் இருக்கின்றனர் அதாவது, பிதாவைப் போலவே இயேசுக்கிறிஸ்துவும் தெய்வீகத் தன்மைகளுடைய தேவனாய் இருக்கிறார்.(8)

Citation & Endnote
(1) கிறிஸ்தவ இறையியிலில் தேவன் பன்மை நிலையில் அதாவது ஒரு தேவன் மூவராக இருக்கிறார் என்றும் திரித்துவ உபதேசம் மானிட அறிவினால் கிரகிக்க முடியாத தெய்வீக இரகசியமாகவுள்ளது. கிறிஸ்தவர்கள் மூன்று தெய்வங்களை வழிபடாமல் ஒரு தெய்வத்தையே வழிபடுகின்றபோதிலும், அந்த ஒரு தெய்வம் மூவராயிருக்கிறார் என்பது மானிட மொழியில் விளக்கப்பட முடியாத ஆனால் நிஜமான தற்பாரியமாயுள்ளது. 
(2) அதாவது heis என்னும் ஆண்பால்பதம் அல்ல. hen எனும்  ஒன்றன்பால் பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது
(3) D.A. Carson, John : The Pillar New Testament Commentary, P 394
(4) L.Morris, Expository Reflections n the Gospel of John, P391
(5) F.F Bruce, The Gospel of John, P. 233
(6) A.Fernando, The Supremacy of Christ pp. 49-50
(7) J. McDowell & B. Larson, Jesus : Biblical Defense of his Deity P94
(8) W. Hendriksen New Testament Commentary : John P. 126 

-



Tuesday 15 February 2011

தேவனையே நம்பி வாழ்தல்



தேவன் தன் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் எனும் விசுவாசத்துடன் இவ்வுலகில் வாழ்ந்தவர் ஜோர்ஜ் முல்லர் என்பவராவார். (1805-1898) இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்னுமிடத்தில் அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வந்த இவர் தேவனை மட்டுமே நம்பி வாழந்தார். நூற்றுக்குமதிகமான அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வந்த ஜோர்ஜ் முல்லர் எவரிடமும் தன் அநாதை விடுதிக்குப் பணம் தரும்படி கேட்கவேயில்லை. தேவன் தன் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளை எப்படியும் போஷிப்பார் எனும் உறுதியான விசுவாசத்துடன் அவர் வாழ்ந்து வந்தார். 
ஒருநாள் காலையில் பிள்ளைகளுக்கு சாப்பிடுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. ஆனால் தேவன் எப்படியும் அன்றைய காலை ஆகாரத்தைத் தருவார் என விசுவாசித்த ஜோர்ஜ் முல்லர், பிள்ளைகள் அனைவரையும் உணவு மண்டபத்தில் இருக்கச் செய்து, “அன்பின் தேவனே, நீர் எமக்கு இன்று தரப்போகின்ற உணவுக்காக நன்றி“ என்று ஜெபித்தார். 

ஜோர்ஜ் முல்லர் ஜெபித்து முடித்த உடன் பேக்கரியிலிருந்து புதிய பாண் (Bread) வந்து சேர்ந்தது. பானைக் கொண்டு வந்தவன் “இரவில் தேவன் என்னோடு பேசி காலையில் கொடுக்கும்படிச் சொன்னார்“ என்று ஜோர்ஜ் முல்லரிடம் தெரிவித்தான்.

அன்றைய தினம் காலையில் வழமைப்போல் விற்பனைக்காக பால் கொண்டு சென்ற ஒருவனது வண்டி உடைந்தமையால், இனிமேல் தன்னால் பாலை விற்கமுடியாது என்பதை அறிந்து அதை ஜோர்ஜ் முல்லரின் அநாதை விடுதிக்குக் கொடுத்தான். 

 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங். 34.10) என்பதற்கு ஜோர்ஜ் முல்லரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாய் உள்ளது.  கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்.37:4-5)


(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Wednesday 9 February 2011

சங்கீதங்களின் (எபிரேய) கவித்துவம் - (2)


சமதன்மையின் மற்றுமொரு அம்சம் “ஒன்றுசேர்க்கும் சமதன்மை (Synthetic Parallelism) ஆகும். சங்கீதத்தின் முதல் வரியில் சொல்லப்பட்ட விடயத்தை இரண்டாவது வரியில் பூரத்தி செய்யும் விதத்தில்  எழுதப்படும் வசனங்கள் ஒன்றுசேர்க்கும்  சமதன்மையுடன் உள்ளவையாகும். 

கர்த்தரே மகா தேவனும், 
எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். (9)

ஒன்றுசேர்க்கும் சமதன்மையில் முதலாவது வரியில் சொல்லப்பட்டுள்ள விடயத்திற்கான காரணத்தை அல்லது நோக்கத்தை அல்லது முதல் வரியின் விளைவை இரண்டாவது வரி அறியத் தரும் (10). சங்கீதம் 95:3 உள்ள மேற்குறிப்பிட்ட வசனத்தில் முதல் வரியின் காரணம் இரண்டாவது வரியில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கர்த்தர் மகாதேவனாயிருப்பதற்கான காரணம் இரண்டவது வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சங்கீதம் 9.10 இல் “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை“ என்னும் முதல் வரியின் விளைவு இரண்டாவது வரியில் “ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எபிரேயக் கவிதைகளில் ஒன்றுசேர்க்கும் சமதன்மையானது, ஒரு வசனத்தின் இரு வரிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்புடன் சம்பந்தப்பட்டதாகும். ஆனால், சில சங்கீதங்களில் முதல் வரியில் சொல்லப்பட்ட விடயத்தின் தொடர்ச்சி இரண்டாம் வரியில் மட்டுமல்ல அதனைத்  தொடர்ந்து வரும் மூன்றாவது வரியிலும் சில சந்தர்ப்பங்களில் அதற்கும் மேலதிகமான வரிகளிலும் இருக்கும். சங்கீதங்களில் உள்ள இத்தகைய தொடர்பு விரிவுபடுத்தப்பட்ட சமதன்மை அல்லது உச்சநிலையடையும் சமதன்மை“ (Climactic Parallelism) என்று  என்று அழைக்கப்படுகிறது. சங்கீதம் 34:4 இல் இத்தகைய சமதன்மை உள்ளது. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனம் தனியொரு வாக்கியமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவிவிலியத்தில் இது மூன்று வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (11)

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்
எல்லாவகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார் (11)

எபிரேயக் கவிதைகளில் எழுதப்படும்போது உபயோகிக்கப்படும் இன்னுமொரு சமதன்மை உருவகச் சமதன்மை (Emblematic Parallelism) ஆகும். இத்தகைய வசனங்களில் ஒருவரியில் உபயோகிக்கப்பட்டிருக்கும் உருவகத்திற்கான விளக்கம் அடுத்த வரியில் இருக்கும். உதாரணத்திற்கு சங்கீதம் 21:16 இல் முதல் வரியில் உள்ள உருவக விபரணம் இரண்டாம் வரியில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. 

நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; 
பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது;

இவ்வசனத்தின் முதல் வரியில் “நாய்கள்“ என்னும் பதம் இரண்டாம் வரியிலுள்ள பொல்லாதவர்களை வர்ணிக்கும் விபரமாக உள்ளது. (12) இதேவிதமாக இச்சங்கீதத்தின் 6ம் வசனத்தில் “நானோ ஒரு புழு“ என்னும் உருவகம் அடுத்த வரியில் சொல்லப்பட்டதை விளக்கும் விதத்தில் உருவகச் சமதன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. உருவகச் சமதன்மையுள்ள வசனங்களில் ஒருவரி உருவகமாகவும் மற்றவரி சொல்லர்த்தமாகவும் இருக்கும் என்பதை கருதிற் கொண்டு இத்தகைய வசனங்களை வியாக்கியானம் செய்ய வேண்டும். மேலும், உருவகமானது சொல்லர்த்தமான வரியில் சொல்லப்பட்டுள்ளதை விளக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட விபரணமாகவே இருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. உருவகச் சமதன்மையுள்ள வசனங்களில் உருவக விபரணம் இருப்பதை கருத்திற்கொள்ளாதுவிட்டால் அவ்வசனங்களைத் தவறாகவே விளங்கிக் கொள்வோம். உதாரணத்திற்கு 60ம்  சங்கீதம் 3ம் வசனத்தின் இரண்டாவது வரியில் தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்க கொடுத்தீர்.“ என்னும் வாக்கியம், முதலில் சொல்லப்பட்ட விடயத்தை விளக்கும் உருவகமாக, உருவகச் சமதன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இதை அவதானிக்காவிட்டால் தேவன் மதுபானத்தைக் குடிக்க கொடுத்தார் என்னும் தவறான கருத்து உருவாகும்(13). எனவே, சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு நாம் அவற்றின் சமத்தன்மையை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை

(ஆ) முதலெழுத்தலங்காரம்

சமதன்மைக்கு அடுத்ததாக எபிரேயக் கவிதைகளில் உள்ள இன்னுமொரு சிறப்பம்சம் “முதலெழுத்தலங்காரம்“ (Acrosticism)  ஆகும். இது அரிச்சுவடியின் ஒழுங்கில் ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். முதல் வரி “அ“ என்ற எழுத்தில் இரண்டாவது வரி “ஆ“ என்ற எழுத்தில் மூன்றாவது வரி “இ“ என்ற எழுத்தில் என்று அரச்சுவடியின் ஒவ்வொரு எழுத்தையும் ஆரம்பமாகக் கொண்டு எழுதப்படும் முறை இதுவாகும். இஸ்ரவேல் மக்கள் ஞானப் போதனைகளைக் கற்பிப்பதற்கு இம்முறையில் பாடல்களை எழுதுவதைத் தங்களுடைய வழக்கமாக்க் கொண்டிருந்தனர். சங்கீதப் புத்தகத்தில் 9,10,25,34,37,111,112,119,145 என்னும் சங்கீதங்கள் மூலமொழியில் இவ்வாறே எழுதப்பட்டுள்ளன. (14)

119ம் சங்கீதத்தில் முதல் எட்டு வசனங்களும் எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்திலும் அடுத்த 8 வசனங்களும் இரண்டாவது எழுத்திலும் அதற்கடுத்த 8 வசனங்களும் மூன்றாவது வரியிலுமாக எபிரேய அரிச்சுடியிலுள்ள 22 எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் 8 வசனங்களைக் கொண்ட பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. (15) ஒரு மொழியிலுள்ள முதலெழுத்தலங்காரத்தை இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது முடியாத காரியமாக இருப்பதனால். எந்தவொரு மொழிபெரய்ப்பும் முதலெழுத்தலங்காரத்துடன் இச்சங்கீதங்களை மொழிபெயர்க்கவில்லை. இதேவிதமாக ஒரேவித ஓசையுடைய சொற்களை ஆரம்ப வார்த்தைகளாகக் கொணடு எழுதப்பட்டுள்ள சங்கீதங்களும் பிறமொழிகளில் கவித்தன்மை இழந்த நிலையிலேயே உள்ளது. (16)

F
Footnote & Citation
(9) இவ்வசனத்திலும் நாம் உபயோகிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பில் “உம்“ என்னும் வேற்றுமையுருப்பு சேர்க்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். திருவிவிலியத்தில் இவ்வசனம் பின்வருமாறு இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஏனெனில் ஆண்டவர் மான்புமிகு இறைவன்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்
(10) T.N. Stettett, How to Understand Your Bible p..123
(11) நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனம்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்“ என்று உள்ளது
(12) .N. Sterrett, How to Understand Your Bible p..124-125
(13) தேவனுடைய கரத்தில் உள்ள மதுபானத்தைக் குடிப்பது“ என்னும் உருவகம் தேவனுடைய கடுமையான தண்டனைக்கான உருவகமாக வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டிருப்பதை ஏசாயா 51:17-23 எரேமியா 25:15-16 என்னும் வசனங்களிலும் நாம் அவதானிக்கலாம். இது “அதிகளவு மதுவருந்தியனுடைய தடுமாற்றம் அடையும் தன்மையை விளக்க வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள உருவகமாகும்.“ (M.E. Tate, Psalms 51-100: Word Biblical Commentary Vol . 20 p. 105)
(14) ,இவற்றில் 9, 10ம் சங்கீதங்கள் ஆரம்பத்தில் தனியான ஒரு சங்கீதமாக இருந்ததாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இவ்விரு சங்கீதங்களும் தனியொரு சங்கீதமாகவே உள்ளது. பிற்காலத்தில் இதை இரு சங்கீதங்களாகப் பிரிக்கும்போது 10ம் சங்கீதத்தின் முதல் 6 வசனங்களிலும் முதலெழுத்தலங்காரம் இல்லாமல் போய்விட்டது.
(15) D.N. Freedman ‘Acrostic Psalms in the Hebrew Bible : Alphabetic and otherwise’ pp408-431 ; J.H. Walton, W.H. Matthew & M.W. Chavals, The IVP Bible Background Commentary – Old Testament p511
சங்கீதங்களைத் தவிர வேதாகமத்தில் புலம்பல் புத்தகமும் முதலெழுத்தலங்காரத்துடன் எழுதப்பட்டள்ளது. இதில் 3ம், 5ம் அதிகாரங்களைத் தவிர ஏனைய ஒவ்வொரு அதிகாரமும் எபிரேய மொழி அரிச்சுவடியுள்ள 22 எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் 22 வசனங்களைக் கொண்டுள்ளது. 3 ம் அதிகாரத்தில் 66 வசனங்கள் உள்ளன. இது 22இன் மூன்று மடங்காகும். இவ்வதிகாரத்தில் மும்மூன்று வசனங்களாக அரிச்சுவடியின் எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 31:10-31 இல் குணசாலியான பெண்ணைப் பற்றிய விபரணமும் முதலெழுத்தலங்காரத்துடன் எழுதப்பட்டுள்ளது.
(16) ஆஙகிலத்தில் இவை Alliterative Psalms

Thursday 3 February 2011

சங்கீதங்களின் (எபிரேய) கவித்துவம்

நூற்தலைப்பு : சங்கீதங்களின் சத்தியங்கள்
நூலாசிரியர் : சகோ. எம்.எஸ்.வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

சங்கீதங்கள் இஸ்ரவேல் மக்களின் பாடல் புத்தகமாக இருப்பதனால் இவை, எபிரேய மொழியில் கவிதைகளுக்கு உள்ள சிறப்பான தன்மைகளுடன் எழுதப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் மரபுக்கவிதைகள் “எதுகை, மோனையுடன்யுடன் எழுதப்பட்டிருப்பது போலவே, வேதாமத்திலுள்ள சங்கீதங்கள், எபிரேய மொழியில் உள்ள கவிதைகளின் சிறப்பம்பங்களுடன் எழுதப்பட்டுள்ளன. இதனால் இவற்றை அறியாத நிலையில் சங்கீதங்களைச் சரியான விதத்தில் வியாக்கியானம் செய்ய முடியாது. எபிரேயக் கவிதைகளில் இரண்டு முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இவை இவ்வித்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன.


(அ) சமத்தன்மை

எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சம் அவற்றில் காணப்படும் சமத்தன்மை (Parallelism) ஆகும். இஸ்ரவேல் மக்கள் கவிதைகள் எழுதும்போது சமத்தன்மையுடனேயே எழுதுவது வழக்கம். சமதன்மை என்பது சங்கீதத்தின் வசனங்களில் இரண்டு வரிகளுக்கிடையில் இருக்கும் சிறப்பான தொடர்பாகும். (1) இத்தொடர்பினை அறியாத நிலையில் சங்கீதங்களை வியாக்கியானம் செய்வது பிழையான கருத்துக்கள் நமது உபதேசத்திற்குள் வருவதற்கு வழிவகுக்கும். “தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டுள்ள போதிலும், அது மானிட மொழியிலேயே நமக்குத் தரப்பட்டுள்ளமையால், மானிட மொழியின் தன்மைகளை அறிந்து தேவனுடைய வார்த்தையை நாம் வியாக்கியானம் செய்ய வேண்டும்.(2) மேலும், சங்கீதங்கள் மனிதர்கள் தேவனோடு பேசிய வார்த்தைகளாகவே இருப்பதனால், அவர்கள் தங்களுடைய மொழியில் கவிதைகள் எழுதப்படும் மொழியில் சங்கீதங்களை எழுதியுள்ளார்கள். எனவே. சங்கீதங்களை வியாக்கியானம் செய்வதற்கு எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எபிரேயக் கவிதைகள் தனி ஒரு வரியில் ஒரு விடயத்தை சொல்லாமல் அதை இரண்டு அல்லது மூன்று தடவைகள் திருப்பிச் சொல்வது வழமை. எனினும், ஒரு வரியில் சொல்லப்பட்டதை அடுத்த வரியில் திருப்பிச் சொல்லும்போது அது முதல் வரியில் குறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளினாலேயே மறுபடியும் சொல்லாமல், வேறு வார்த்தைகளினால் எழுதப்படும். இவ்வாறு எபிரேயக் கவிதைகளில் முதல் வரிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் இடையில் இருக்கும் சிறப்பான தொடர்பே சமதன்மை(3) ஆகும். இத்த்தைய தொடர்பைக் கருத்திற் கொள்ளாத நிலையில் சங்கீதங்களை வியாக்கியானம் செய்பவர்கள் முதல் வரிக்கும் அதனைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை அறியாதவர்களாக ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு புதிய விடயங்கள் இருப்பதாகக் கருதி சங்கீதங்களின் கருத்தைச் சிதைத்து விடுகின்றனர். உதாரணத்திற்கு சங். 1:1 (துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்) இல் மூன்றுவிதமான மனிதர்களைப் பற்றி அல்ல. நீதிமான் எப்படிப்பட்டவனாக இருக்க மாட்டான் என்று என்று மூன்று விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எனவே, சங்கீதங்களை சரியான வித்த்தில் புரிந்து கொள்வதற்கு எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையில் சில அம்சங்கள் உள்ளன. இவை சங்கீதத்தின் வரிகளுக்கிடையிலான தொடர்பை அடிப்படையாக்க கொண்டு வித்தியாயப்படுகின்றன. எனினும். பெரும்பாலான சங்கீதங்கள் “ஒத்தகருத்து சமதன்மை (Synonymous Parallelism) என்பது முதலாவது வரியில் எழுதப்பட்டுள்ள விடயம் இரண்டாவது வரியில் (சில நேரங்களில் மூன்றாம் நான்காம் வரிகளிலும்) வேறு வார்த்தைகளில் எழுதப்பட்டிருப் பதாகும். இது முதல் வரியில் சொல்லப்பட்டதை வலியுறுத்திக் கூறுவதற்காக அதை மறுபடியுமாக, ஆனால் வேறு வார்த்தைகளில் இரண்டாவது வரியில் எழுதும் முறையாகும். (4) (உறுதிப்படுத்தும் சமதன்மை (Affirming Parallelism எனவும் சில ஆய்வாளர்கள் கொள்வர்) (உதாரணத்திற்கு 49ம் சங்கீதத்தின் முதலிரு வசனங்களில், முதல் வசனத்தில் சொல்லப்பட்ட விடயம் இரண்டாவது வசனத்தில் வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். (49:1)
பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும்
ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள்
எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். (49:2) 

இதில் முதலாம் வசனத்திலுள்ள “ஜனங்கள்“ என்பதே இரண்டாம் வசனத்தில் “பூமியின் குடிகளே“ என்று வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் முதலாம் வசனத்திலுள்ள “நீங்கள் எல்லோரும்“ என்பதே இரண்டாம் வசனத்தில் “, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும்“ என்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலாம் வசனத்திலுள்ள “இதைக்கேளுங்கள்“ என்பது இரண்டாம் வசனத்தில் “ஏகமாய் செவிகொடுங்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு வசனங்களிலும் ஒரு விடயமே இரண்டு தடவைகள், ஆனால் வித்தியாசமான வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு விடயம் இரண்டு வரிகளில் அல்லது இரண்டு வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதே “ஒத்த கருத்துச் சமதன்மை“ ஆகும். அதை அறியாத நிலையில். இரண்டு வசனங்களிலும் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுவது தவறாகும். எபிரேயக் கவிதைகளில், “சொல்லப்படும் விடயத்தை விளக்குவதற்காகவும் வலியுறுத்திச் சொல்வதற்காகவும் இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது(5) ஒரு வசனத்திலேயே இரு தடவைகள் ஒரு விடயம் வித்தியாசமான வார்த்தைகளில் ஒத்தக்கருத்துச் சமதன்மையுடன் எழுதப்பட்டிருப்பதற்கு 3ம் சங்கீதம் 1ம் வசனம் ஒரு உதாரணமாக உள்ளது.

கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்!
எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.


இவ்வசனத்தில்முதலாம் வரியிலுள்ள , என் சத்துருக்கள் என்பதே இரண்டாவது வரியில் “எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, “பெருகியிருக்கிறார்கள்!“ என்று முதல் வரியில் உள்ளதே இரண்டாம் வரியில் “அநேகர்“ என்று உள்ளது. சங்கீதங்களில் உள்ள இத்தகைய ஒத்த கருத்துச் சமதன்மை பெரும்பாலான வசனங்களில் தெளிவாக தென்படும் விதத்தில் நம் தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் ஒத்தக்கருத்துச் சமதன்மை உள்ள பல வசனங்களில் இரண்டு வரிகளும் “உம்“ என்னும் வேற்றுமையுருப்பினால் ஒன்றாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சங்கீதப் புத்தகத்திற்கு வெளியில் வேறு புத்தகங்களில் இருக்கும் கவிதைகளில் ஏசாயா 1:3 இல் உள்ள ஒத்தகருத்துச் சமதன்மை உள்ள வசனம் இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் வந்த திருவிவிலியத்தில் மூலமொழியில் உள்ள ஒத்தக் கருத்துச் சமதன்மை தெளிவாகப் புலப்படும் வித்த்தில் இவ்வசனம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை
என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை


இம்மொழிபெயர்ப்பில், முதலாம் வரியிலுள்ள “இஸ்ரயேல்“ (6) என்பது இரண்டாவது வரியில் “என் மக்கள்“ என்றும் முதல் வரியிலுள்ள “அறிந்து கொள்ளவில்லை“ என்பது இரண்டாவது வரியில் “புரிந்து கொள்ளவில்லை“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சங்கீதங்களை வாசிக்கும்போது, மூலமொழியில் இவை சமதன்மையுடனே எழுதப்பட்டுள்ளன என்பதை கருத்திற் கொண்டவர்களாக, ஒவ்வொரு வசனத்தையும் நாம் வாசிக்க வேண்டும். அப்போது சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் சொல்லப்பட்டுள்ள விடயத்தை நம்மால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

சமதன்மையில் ஒத்தகருத்து சமதன்மை மட்டுமல்ல இன்னும் சில அம்சங்களும் உள்ளன. பெரும்பாலான சங்கீதங்கள் ஒத்தகருத்துச் சமதன்மையுடன் எழுதப்பட்டிருக்கையில் சில சங்கீதங்களிலும், கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நீதிமொழிகள் புத்தகத்தில் சமன்மையின் இன்னுமொரு சம்சமான “எதிர்கருத்துச் சமதன்மை (Antithetic) உள்ளது. எதிர்கருத்துச் சமதன்மையில் முதலாவது வரியில் சொல்லப்பட்டதற்கு எதிரான விடயம் இரண்டாவது வரியில் குறிப்பிடப்பட்டிருக்கும். சங்கீதம் 37:21 இத்தகைய எதிர்க்கருத்தச் சமதன்மையை அவதானிக்கலாம்.

துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்;
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.


முதலாம் சங்கீதத்தில் முதல் 3 வசனங்களும் ஒத்தக்கருத்துச் சமதன்மை எழுதப்பட்டுள்ள போதிலும் 4ம் 5ம் வசனங்கள் 5ம் வசனங்கள முதல் மூன்று வசனங்களுடன் எதிர்கருத்துச் சமதன்மையில் உள்ளன. எபிரேயக் கவிதைகளில் எதிர்கருத்துச் சமதன்மையுடன் எழுதப்படும்போது, வசனங்களின் இருவரிகளில் ஒரு வரிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே சங்கீதக்காரன் இரண்டு வரிகளிலும் இரண்டு விடயங்களை எழுதியுள்ளான் என கருதலாகாது. இவ்வாறு “எழுத்தாளர் தான் சொல்ல முற்படுவதை அதற்கு எதிரானதுடன் முரண்படுத்திக் காட்டும்போது சொல்லப்படும் விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (7) மேலும் இரு விடயத்தின் இரு எதிரிடையான விளைவுகளும் இதில் காட்டப்பட்டுள்ளமையால், இரண்டில் எது சிறந்தது என்பதை அறிந்து சரியானதன்படி செயற்படுவதற்கு வாசகருக்கு ஆலோசனையளிப்பதற்கும் எதிர்கருத்து சமதன்மை முக்கியமாக உள்ளது.( உதாரணத்திற்கு நீதிமொழிகள் புத்தகத்தில் இத்தகைய எதிர்கருத்து சமதன்மையில் நீதியானதும் அநீதியானதுமான வழிமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.

(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Footnote & Citation
(1) G.B. Gray, The Forms o Hebrew Poetry P. 236
(2) W.A. VanGemeren, Psalms : The Expositor’s Bible Commentary P.8
(3) R. Alter. The Art Biblical Poetry. Pp-26, 62-84, ‘The Psalms-Beauty Heightened Through Poetic Structer’ pp 28-41; R. Lowth, Lectures on the Sacred Poetry the Hebrew Volume 1. pp. 68-69
(4) இதனால்தான் சில வேதஆராய்ச்சியாளர்கள் இதனை “உறுதிப்படுத்தும் சமதன்மை (Affirming Parallelism) என்று அழைப்பதே பொருத்தமானது என்று கூறுகின்றனர்
(5) T.N. Strrertt, How to Understand Your Bible, pp. 122-123
(6) இஸ்ரவேல் என்பதே “இஸ்ரயேல்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(7) T.N. Strrertt, How to Understand Your Bible, p. 123
(8) G.H. Wilson, Psalms Vol 1: The NIV Application Commentary P. 42