- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 29 June 2011

தமது வழியின் ஆதியாய் கொண்டிருந்தார் (நீதி. 8:22)


(நீதிமொழிகள் 8.22 அடைப்படையாக் கொண்டு இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என நிரூபிக்க வேதப்புரட்டர்கள் முற்படுகின்றனர். ஏரியஸ் தொடக்கி வைத்த வேதப்புரட்டு இன்று யெகோவா சாட்சிகளின் உபதேசங்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இவ்வசனம் உண்மையாக போதிப்பது என்ன? இக்கட்டுரை இதனை ஆராய்கின்றது)

இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும். இன்னுமொரு வசனம் நீதிமொழிகள் 8:22 ஆகும். இவ்வசனத்தில் கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின்ஆதியாகக் கொண்டிருந்தார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் நீதிமொழிகள் 8ம் அதிகாரம் ஞானம் பேசுவது போலவே எழுதப்பட்டுள்ளது. (நீதி. 8:1-4) எனவே 22ம் வசனமும் ஞானத்தின் கூற்றாகவே உள்ளது. இவ்வசனத்தில் ஆதியாகக்கொண்டிருந்தார்“ எனும் வாக்கியத்தை யெகோவாவின் சாட்சிகள் “ஆதியில் சிருஷ்டித்தார்“ எனும் அர்த்தத்திலேயே விளக்குகின்றனர். (60) இதன்படி. தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்பாக. சகலவற்றையும் சிருஷ்டிப்பற்கும் முன்பாகத் தேவன் ஞானத்தை சிருஷ்டித்துள்ளார் என்றும் “தான் தேவனுடைய ஆரம்பப் படைப்பு என்று ஞானம் கூறுவதாகவும் இவ்வசனத்திற்கு அர்த்தம் கற்பித்துள்ளனர். மேலும், இவ்வசனத்தில் “இயேசுக்கிறிஸ்துவே ஞானமாக உவமிக்கப்பட்டிருக்கிறார்“ என்றும் இதனால் அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர் (61)

இவ்வசனத்தில்  “கொண்டிருந்தார்“ (62) என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதத்தை (63)சிருஷ்டித்தார்(qanah)(64) என்றும் பெற்றார்(65) என்றும் மொழிபெயர்க்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை(66). பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இப்பதம் சிருஷ்டித்தார் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், தேவன் சகலவற்றையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு ஞானத்தை சிருஷ்டித்தார் என்றால் ஆரம்பத்தில் அவர் ஞானமற்றவராக இருந்தார் என்று கூற வேண்டும். மேலும் பழைய ஏற்பாட்டில் 84 தடவைகள் இப்பதம் இடம்பெற்றிருந்தாலும் ஏழு இடங்களில் மட்டுமே இதை “சிருஷ்டித்தார்“ என்றும் மொழிபெயர்க்கக் கூடியதாகவுள்ளது. எனினும் இவ்விடங்களிலும், இப்பதம் கட்டாயமாக இவ்விதமாகத்தான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதில்லை(67) இவ்விடயங்களிலும் இதை “கொண்டிருந்தார்“ என்றும் மொழிபெயர்க்கலாம். சில வேத ஆராய்ச்சியாளர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டேன் (8.23) (68) “ஜெனிபிக்கப்பட்டேன்“ (8.24,26) என்று ஞானம் கூறுவதனால், ஞானம் சிருஷ்டிக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று கருதினாலும் (69) நீதிமொழிகள் கவிதை நடையில் எழுதப்பட்டிருப்பதை நாம் மறக்கலாகாது. (70) உண்மையில், “ஞானம்“ எப்போது எப்படி உருவானது என்பதைப் பற்றியல்ல, மாறாக அது ஆதியிலிருந்தே தேவனோடிருக்கிறது என்பதையே இவ்வசனங்கள் கவிதை நடையில் அறியத் தருகின்றன. (71) இவை உலகைச் சிருஷ்டிப்பதற்கும் முன்பு தேவனோடு ஞானமும் இருந்தது. (72) என்பதையும் “அவர் ஞானத்துடன் சகலவற்றையும் சிருஷ்டித்துள்ளார் (73) என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

நீதிமொழிகள் 8:22 இயேசுக்கிறிஸ்துவே ஞானமாக உவமிக்கப்பட்டி ருப்பதாகக் கூறும் யெகோவாவின் சாட்சிகள் ஆதிச்சபைப் பிதாக்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விபரணமாகவே நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தை வியாக்கியானம் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். (74) உண்மையில் கி.பி. 4ம் நூற்றாண்டில் இயேசுகிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலித்து அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதித்த ஏரியஸ் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பை ஆதாரமாக் கொண்டு, ஞானம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதால் அது உவமிக்கும் இயேசுக்கிறிஸ்துவும் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறினார். பிழையான போதனை என்று அறிவிக்கப்பட்ட இந்த ஏரியஸ் என்பவரின் போதனைகளையே இன்று யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர். (75)

கிறிஸ்தவ சபைத் தலைவர்களில் சிலர் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்துவே ஞானமாக உவமிக்கப்பட்டுள்ளார் என்று கருதியது உண்மையினும் (76) நீதிமொழிகள்  இத்தகைய உவமானத்துடன் எழுதப்படவில்லை. நீதிமொழிகள் 8ம் அதிகாரம் மட்டுமல்ல, முதல் 9 அதிகாரங்களிலும் பல இடங்களில் ஞானம் பேசுவதுபோல் எழுதப்பட்டுள்ளது. எனவே இவ்விடங்களில் எல்லாம் இயேசுக்கிறிஸ்துவே பேசுகிறார் என்றே கூறவேண்டும் அப்படியாயின் இயேசுக்கிறிஸ்துவை “தெருக்களில் சத்தமிடும் பெண்ணாகவும் (நீதி 1:20-21). விவேகம் என்பவருடன் ஏழு தூண்களுள் வீட்டில் வாழ்வதாகவும்“ விளக்க வேண்டும் (நீதி. 8:12, 9.1)(78) உண்மையில் இது ஒரு அர்த்தமற்ற விளக்கமாகும். மேலும் நீதிமொழிகளில் ஞானம்  பெண்பால் பதத்தாலேயே குறிக்கப்பட்டுள்ளது (79) எனவே இயேசுக்கிறிஸ்துவையும் ஒரு பெண்ணாகவே கருத வேண்டும். இது அர்த்தமற்ற அபத்தமான விளக்கமாகும் உண்மையில் தேவஞானமே நீதிமொழிகளில் ஒரு நபராக உவமிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வசனங்களை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விபரணமாக் கருதுவது தவறாகும்.

(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய : யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.  வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி)

Footnote & Reference

(60)  .இவர்களது வேதாகமத்தில் Jehovah himself produced me at the beginning of his way, the earliest of his way, the earliest of his achievements of long ago’ என்றுள்ளது

(61) Anonymous, Aid to Bible Understanding, p 918

(62) ஆங்கிலத்தில் King James Versions மற்றும் New International Version வேதாகமங்கள் இவ்விதமாகவே இப்பதத்தை மொழிபெயர்த்துள்ளன. 
(63) மூலமொழியில் கானா (qanah) எனும் எபிரேயப்பதம்

(64) Revised Standard Version மற்றும் New English Bible என்பன சிருஷ்டித்தார் என்று இப்பத் ததை மொழிபெயர்த்துள்ளன..

(65) New International Version அடிக்குறிப்பில் இம்மொழிபெயர்ப்பு உள்ளது

(66) R.E. Murphy, Proverbs : World Biblical Commentary p 48

(67) D. Kidner, Proverbs : Tyndale Old Testament Commentaries, p79

(68) மூலமொழியின்படி இவ்வசனத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டேன்“ என்பது நியமிக்கப்பட்டேன்“ என்றே உள்ளது

(69) Whybray, R.N. ‘Proverbs 8.22-31 and its Supposed Protypes’ pp. 504-542

(70) கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள வேதப் பகுதிகளை உரை நடைப் பகுதிகளை வியாக்கியானம் செய்வது போல விளக்கக் கூடாது.

(71) C.G. Martin, Proverbs : New International Bible Commentary, p664

(72) S.S. Buzzell, Proverbs : The Bible Knowledge Commentary OT p. 922

(73) J. Phillips Exploring Proverbs Volume one, pp 196-197

(74) Anonymous, Aid to Bible Understanding p918

(75) கி.பி. 325இல் Nicaea எனுமிடத்தில் கூடிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் ஏரியஸ்சின் போதனைகள் வேதப்புரட்டு என்று அறிவிக்கப்பட்டது. (L.Berkhof, The History of Christian Doctrines p 86)

(76) இதனால் இன்றைக்கும் சில கிறிஸ்தவர்கள் இவ்விதமான கருத்துடையவர்களாக இருக்கின்றனர். (Cf.W. Arnot, Studies in Proverbs : Laws from Heaven for Life on Earth, pp 150-152).

(77) இத்தகைய எழுத்து முறை “உயிருருவக அணி“ என்று அழைக்கப்படுகின்றது. அதாவது உயிரற்ற சடப்பொருட்களையும் பண்பு பெயரினால் அழைக்கப்படுபவற்றையும் உயிருள்ள நபர்களாக வர்ணித்து எழுதுவதற்கம் பேசுவதற்கும் உவமையணி உபயோகிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Personification என்று அழைக்கப்படுகின்றது.

(78) R.M. Bowan, Why You Should Believe in the Trinity, p 60

(79) K.T. Aitken, Proverbs : The Daily Study Bible, p 20.       

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment