- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 24 November 2013

பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” (மத். 15:25-26) (மாற்கு 7:24-30)




இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே யூத இனவாதத்தை வலியுறுத்தும் ஒரு வாக்கியமாக இன்று அநேகரால் விமர்சிக்கப்படும் பிசாசினால் கொடிய வேதனைப்படும் தன் மகளைக் குணப்படுத்தும்படி மன்றாடிய ஒரு கனானியப் பெண்ணுக்கு அவர் கொடுத்த பதிலாகும். அந்தக் கானானியப் பெண்(1) “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்“ என்று இயேசுவைப் பணிந்துகொண்டபோது அவர் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்று அவளுக்கு கூறினார். (மத். 15:25-26) மாற்கு எழுதிய சுவிஷேசத்திலும் இச்சம்பவத்தை நாம் வாசிக்கலாம். (மாற்கு 7:24-30). (2)இஸ்ரவேலர் பாலஸ்தீனாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அப்பிரதேசத்தில் கானானியர்களே குடியிருந்தமையால் அப்பெண் யூதர்களுடைய ஆரம்பகால எதிரியின் பரம்பரையில் வந்தவளாக இருந்தாள். (3) இயேசுவினுடைய காலத்தில் தீரு சீதோன் பகுதிகளில் வாழ்ந்த கானானியர்கள், யூதர்களுடன் பகைமை கொண்டவர்களாகவே இருந்தனர்.(4) யூதப் போதகர்கள் யூதரல்லாதவர்ககளைக கானானியர் என்றே அழைத்தனர்(5) இதனால் அக்காலத்தைய யூத இனவாதிகளைப் போல இயேசுவும் கானானியப் பெண்ணுக்கு உதவி செய மறுத்துள்ளார் என்பது அநேகரது தர்க்கமாகவுள்ளது.(6)

உண்மையில் இயேசு கானானியப் பெண்ணோடு நடந்து கொண்ட முறை நமக்கு அதிக குழப்பத்தையே ஏற்படுத்துகின்றது. இயேசு தன் ஊழிய காலத்தில் யூத எல்லையைத் தாண்டி புறஜாதி நாட்டுக்குப் போகவில்லை என்பதையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் அவதானிக்கலாம். அவர் தீரு சீதோன் பட்டணங்கள் இருந்த திசையில் சென்றதாகவே மத்தேயு குறிப்பிட்டுள்ளார். (மத். 15:21) இயேசு தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளுக்குப் போனதாகக் கூறும் மாற்கு (7:24) இச்சம்பவத்தின் பின், அப்பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டாகவே அறியத்தருகின்றார். (மாற். 7:31) இதிலிருந்து இயேசு தீரு சீதோன் பகுதியில் யூதேய எல்லை வரையிலுமே சென்றுள்ளார் என்பதும் “கானானியப் பெண் இயேசுவை யூத மண்ணிலேயே சந்தித்துள்ளாள்.(7). என்பதும் தெளிவாகின்றது. இது இயேசு புறஜாதி மண்ணை மிதிப்பதற்கும் விரும்பாத கடுமையாக இனவாதியாக இருந்துள்ளதைக் காண்பிக்கின்றது என்பது வேதவிமசகர்களது கருத்தாகும்(8). மேலும் இயேசு ஆரம்பத்தில் அப்பெண்ணுக்கு பதிலொன்றும் கூறாமல் அவளை அசட்டை செய்துள்ளார். ““ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்“  என அவள் மன்றாடிய போதும் (10) அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.(மத்.15:22-23) “ இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே“ எனும் சீடர்களின் வார்த்தைகள் (மத். 15:23) மூலமொழியில் “அவளது வேண்டுதலை அருளச் செய்த விண்ணப்பமாகவே உள்ளது.(12) ஆனாலும் இயேசுவோ, கானானியப் பெண்ணுக்கு உதவி செய்யாமல் தன் சீடர்களிடம் 'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்(மத். 15:24) (13) இதனால், இயேசு புறஜாதியாருக்கு உதவி செய்ய மனமற்றவராக இருந்துள்ளதாகப் பலர் கருதுகின்றனர். (14)

இயேசுவின் வார்த்தைகள் அதாவது தான் இஸ்ரவேல் மக்களிடத்திற்கே அனுப்பப்பட்டேன்“ எனும் அறிவிப்பு, கானானியப் பெண்ணுக்கல்ல  மாறாக சீடர்களுக்கே சொல்லப்பட்டது(15) என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இயேசு ஏற்கனவே அவர்களை ஊழியத்திற்கு அனுப்பும்பொழுது இஸ்ரவேல் மக்களிடத்திற்கே போகும்படி அறிவுறுத்தியிருந்தார். (மத். 5-6) இதற்குக் காரணம் வேததிட்டத்தின்படி முதலில் இஸ்ரவேல் மக்களுக்கே சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியிருநத்து. (16) தேவனுடைய திட்டத்தின் இந்தக் காலக்கிரம ஒழுங்கு முறையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனினும், இயேசு இஸ்ரவேல் மக்களுக்காக மட்டுமே உலகிற்கு வந்தார் எனக் கருதுவது தவறாகும். அவர் முழு உலகினருக்காகவும் வந்துள்ள போதிலும் சரீரப்பிரகாரமான அவரது ஊழியம் இஸ்ரவேலுக்கு மட்டுமானதாகவே இருந்தது. “இஸ்ரவேல் மக்களிடத்திற்கே தான் பிதாவினால் அனுப்பப்பட்டதை அறிந்திருந்த இயேசு அதைப் பற்றி இங்கு தெரிவித்துள்ளார். (17) இதனால், புறஜாதியாருக்குச் சுவிஷேசத்தை அறிவிக்க தன் அப்போஸ்தலர்களை நியமித்த இயேசு தனது ஊழியகாலத்தில் தன் பணியை இஸ்ரவேலில் மாத்திரமே செய்து வந்தார். 

சீடர்களுக்கு சொல்லப்பட்ட இயேசுவின் வார்த்தைகள் கானானியப் பெண்ணின் மனதைத் தளர்த்து விடவில்லை. இயேசுவால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்பதை நன்கறிந்திருந்த அவள்(18) ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள். (மத். 15:25) ஆனால் இயேசுவோ மறுபடியும் அவளது வேண்டுகோளை நிராகரித்ததுடன் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல (மத். 15:25-26) மாற்குவின் சுவிஷேசத்தில் இக்கூற்றானது “முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; எனும் வாக்கியத்தையும் உள்ளடக்கியுள்ளது. (மாற். 7:27) உண்மையில் ஒருவனை நாய் எனக் கூறுவது அவனை நிந்தித்து இழிவுபடுத்தி அழைக்கும் முறையாகும். யூதர்கள் புறஜாதியாரை நாய்கள் என்றே அழைத்தனர். (19) இயேசுவும் இனவாத யூதர்களைப் போல தம் இனத்தவர்களை பிள்ளைகளாகவும் புறஜாதியாரை நாய்களாகவும் குறிப்பிட்டுள்ளதாக வேத விமர்சகர்கள் அவர்மீது குற்றம் சாட்டுகின்றனர்(20) எனினும் இயேசு குறிப்பிட்டது “தெருநாய்களை” அல்ல. மாறாக வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளையே. என்பதையே மூலமொழியில் நாம் அவதானிக்கலாம். (21). மூலமொழியில் 7:6 இல் நாயைக் குறிக்க உபயோகிக்கப்பட்ட பதம் இவ்விடத்தில் உபயோகிக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் “நாய்கள்” என்றல்ல “நாய்க்குட்டிகள்” என்றே இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “தெருநாய்களை, வீட்டில்  பிள்ளைகள் சாப்பிடும் இடத்திற்கு அக்காலத்தில் எவரும் கொண்டுவர மாட்டார்கள்.” (22). எனவே அசுத்தமானவையாகக் கருதப்பட்ட தெருநாய்களை வீடுகளில் பிள்ளைகள் சாப்பிடும் மேசையின் கீழ் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. (23) மேலும் இயேசுவின் வார்த்தைகள் கடுமையான முறையில் சொல்லப்படவில்லை. அவர் நாய்களை எனும் பதத்தை உபயோகித்தாலும் இந்த உதாரணத்தின் மூலம் தான் சொல்ல முற்படுவதை அறிவத்துள்ளாரே தவிர அதைக் கடுமையான முறையில் புறஜாதியரை  இழிவுபடுத்தும் முறையில் அவர் கூறவில்லை. (24)

இயேசுவின் கூற்றில் பிள்ளைகள் இஸ்ரவேலரையும் நாய்கள் புறஜாதியாரையுமே குறிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் நாய்கள் எனும் பதத்தால் இயேசு புறஜாதியாரை இழிவுபடுத்திக் கூறவில்லை. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக அக்கால வீடுகளில் சாப்பாட்டு வேளையின்போது காணக்கூடிய ஒரு காட்சியை உதாரணமாகக் காண்பித்துள்ளார். 

தன்னுடைய ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதை பழமொழி போன்ற ஒரு உதாரணத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். தேவனுடைய திட்டத்தின்படி சுவிஷேசம் முதலாவது இஸ்ரவேல் மக்களுக்கே அறிவிக்கப்பட வேண்டியதாயிருந்த்து. (ரோமர். 1:16, 2:9, அப். 3:26, 13:46) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் அவர்களையே தன் பிள்ளைகளாகத் தெரிந்தெடுத்திருந்தார். (யாத். 4:22, உபா. 14:1, 32:6, ஏசா. 1:2, எரே. 31:9, ஓசி. 11:1, ரோமர் 9:5)மேசியாவை பற்றிய வாக்குத்தத்தங்களும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தன. (26) இதனால் அவர்களிடத்தே மெசியா அனுப்பப்பட்டிருந்தார். (யோவான் 1:1, ரோமர் 15:8) இஸ்ரவேல் மக்களுக்கான இயேசுவின் ஊழியம், தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை உறுதிப்படுத்தும் பணியாய் இருந்ததை ரோமர் 15:8 அறியத் தருகின்றது. இதனால் தேவனுடைய ராட்சியத்தின் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதையே இயேசு பிள்ளைகளின் அப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்ப்பட்டுள்ள போதிலும். அதில் புறஜாதியினருக்கு இடமில்லை எனக் கருதலாகாது. இயேசு சுட்டிக்காட்டியதை.அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்ட கானானியப் பெண். அச்சந்தர்ப்பத்திரலேயே புறஜாதிகளும் மேசிய யுகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினாள். இது ”நோவாவின் மூலம் தேவன் சகல மக்களோடும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலான நம்பிக்கை” என்பதே சில தேவ ஆராய்ச்சியாளர்களின் விளக்கமாகும். (27) தேவன் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களுடனான அவரது செயல்பாடுகளை உள்ளடக்கிய தாயிருக்கையில், அவர் நோவாவின் மூலம் செய்து கொண்ட உடன்படிக்கை சகல இனமக்களையும் உள்ளடக்கியுள்ளது. (28). எனினும் இத்தகைய இறையியல் கருத்துக்களை அக்கால கானானியப் பெண் அறிந்திருந்தாள் எனக் கூறமுடியாது. அவள் இயேசுக் கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்தே புறஜாதியான தனக்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். கானானியப் பெண்ணின் இத்தகைய விசுவாசத்தைப் பாராட்டிய இயேசு, அவளது வேண்டுகோளின்படியே அவளது மகளைக் குணப்படுத்தினார். 


குறிப்புகள்
(1) மாற்குவின் சுவிஷேசத்தில் இவர் “சீரோபேனிக்கியா தேசத்தவனாகிய கிரேக்க ஸ்திரி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளாள்(மாற். 7:26) புதிய ஏற்பட்டுக்காலத்தில் “பேனிக்கியா” என்பது சிசிலிய மற்றும் ரோம அரசாட்சியத்தின் மாகாணங்களின் பகுதியாகும். இதில் சிகிரியாவையும் தீரு சீதோன் பட்டணங்களையும் உள்ளடக்கிய பகுதி சீரோபேனிக்கியா என அழைக்கப்பட்டது. காத்தேஜ் எனும் பிரதேசத்தில் வாழ்ந்த பேனிக்கியர்கள் லிபோனிக்கேயர்கள் என அழைக்கப்பட்டனர். (John J. Bimson, Ed, Illustrated Encyclopedia of Bible Places p. 292) மத்தேயுவின் சுவிஷேசத்தில் பேனிக்கியானர்களின் பழைய பெயரான கானானியர் என்பது உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் இவள் கிரேக்கப் பெண் (மாற். 7:26) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்குக் காரணம் அவள் கிரேக்க கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டவளாய் இருந்தமையாகும். 

(2) மாற்குவில் கானானியப் பெண்ணின் மகளில் இருந்த பிசாசைத் துரத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கையில் மத்தேயுவில் இத்தகைய முக்கியத்துவத்தை நாம் அவதானிப்பதில்லை. மாறாக இயேசு யூதர்களுக்கு முதலில் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் எனும் இயேசுவின் கூற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

(3) எனினும் கானானியர்கள் கி.மு 3000 வரை பழமை வாய்ந்த ஜாதியினராக இருந்ததோடு அவர்களது கலாச்சாரம் மிக உயர்வானதாக இருந்தது. உலகிலேயே மிக பழைமை வாயந்த முதலாவது அறியப்பட்டுள்ள)அரிச்சுவடி கானானியருடையதாகவே உள்ளது. (Leon Morris, p 401)

(4) William Barclay ‘The Daily Study Bible : Mathew Vol II p. 121

(5)  யூதமதநூலான மிஷ்னாவில்  Qiddusin 1:3 லும் பாபிலேனியத் தல்மூட் சோட்டா 35லும் இத்தகைய குறிப்புகளை நாம் அவதானிக்கலாம்

(6) F.W. Bearer, The Gospel According to Matthew: A Commentary. P. 432

(7) Donald A . Hagner : World Biblical Commentary: Mathew p. 441

(8) சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு இந்த ஒரு சந்தர்ப்பத்தில் யூத எல்லையைத் தாண்டி புறஜாதி நாட்டக்சகுச் சென்று வந்தார் எனக் கருதுகின்றனர். (William Barclay, The Daily Study Bible: Mathew Vol II p. 120 W.F. Albright & C.S. Mann, The Anchor Bible Commentary: Mathew p. 187, D.A. Carson, The Expositor’s Bible Commentary: Mathew p. 354) எனினும் மூலமொழியில் மத்தேயு 15:22 இவ்வாறு  கூறவில்லை. எனினும் அவர் யோவான் 4ம் அதிகாரத்தில் சமாரியப் பட்டணங்களுக்குச் சென்றதை அவதானிக்கலாம். திருமணத்தில் இணைந்த்தன் மூலம் உருவான கலப்பினத்தவராக இருந்தனர். சமாரியர்கள் அக்காலத்தில் முழுமையான புறஜாதியராக அல்ல மாறாக பாதி இஸ்ரவேலராகக் கருதப்பட்டனர்.   

(9) இயேசு தாவீதின் வம்சத்தில் வந்த யூதர்களுடைய மேசியா என்பதே இதன் அர்த்தமாகும். 

(10) 22ம் வசனத்தில் கூப்பிட்டாள் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “கத்தினாள்” “அழுதாள்” “சத்தமாக ”கதைத்தாள்” எனும் அர்த்தங்களைக் கொண்டது. அவள் தனக்கு உதவி செய்யும்படி கதறியுள்ளாள். 

(11) சீடர்களுக்கு தொந்தரவாயிருக்குமளவிற்கு அவள் மன்றாயுள்ளாள். Donald A. Hangner, Word Biblical Commentary: Mathew p. 441

(12) Ibid p. 441

(13) இயேசுவின் இக்கூற்றில் அவர் அனுப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவானின் சுவிஷேசத்தில் இடம்பெறும் கூற்றுக்களில் அதாவது இயேசுதான் பிதாவினால் அனுப்பபட்டதாக்க கூறும் வாக்கியங்களின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளதாகக் சில இறையியியலாளர்கள் மத்தேயுவில் இடம்பெறும் இக்கூற்றை இயேசுவால் சொல்லப்பட்டதாக ஏற்றுக் கொள்வதில்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வாக்கியம் எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். (Rudolf Bultmann, The History of Synoptic Tradition. Oxford: Blackwell, 1963, p. 155) எனினும் இவ்விளக்கம் யோவானினுள்ள இயேசுவின் கூற்றுக்களையும் அவரால் சொல்லப்பட்டவைகள் அல்ல எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதாயுள்ளது. மேலும் “கிறிஸ்தவ சபையானது பவுலினுடைய ஊழியக் காலத்திற்கும் முன்பே புறஜாதியினருக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையால் இயேசு தான் இஸ்ரவேல் மக்களுக்கு வந்ததைப் பற்றிய இக்கூற்றை சபை உருவாக்கியிருக்க முடியாது. (J. Jeremias Jesus : Jesus Promise to the Nation London: SCM Press, 1962, p. 26-28) எனவே இது இயேசுவினால் சொல்லப்பட்ட கூற்றாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

(14) F.W. Beare, The Gospel According to Mathew : A Commentary. P. 432

(15) Donald A. Hagner, Word Biblical Commentary : Mathew p. 441

(16) மாற்கு இக்கூற்றைக் குறிப்பிடவில்லை. மேசியா இஸ்ரவேல் மக்களிடத்தில் அனுப்பப்பட்டார் என்பதை யூதர்கள் புரிந்து கொண்டாலும் போதியளவு விளக்கம் இன்றி இக்கூற்றை புறஜாதியினரால் கிரகிக்க முடியாதென்பதனால் மாற்கு இதைத் தவிர்த்திருக்கலாம்  

(17) D.A. Carson, The Expositor’s Bible Commentary: Mathew. P. 355

(18) இயேசு கலிலேயா நாடுகளில் செய்த அற்புதங்களை இவள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் தன் மகளைக் குணப்படுத்தும்படி அவள் அவரிடம் மன்றாடினாள். 

(19) William Barclay, Mathew Volume 2. P. 122

(20) F.W. Beare, The Gospel According to Mathew: A Commentary p. 342

(21) William L. Lane. The New International Commentary on the NT: Mark p. 261 E. Schweizer, The Good News According to Mark : Richmond: John Knox Press 1970, p 386

(22) Leon Morris : The Gospel According the Mathew p 404

(23) R.C.H. Lenski, The Interpretation of S. Mathews Gospel p. 598

(24)  William Barclay

(25) Robert H. Mounce, The New International Commentary: Mathew 442

(26) இது பற்றி மேலதிக விபரங்களுக்கு யோவான் 5:39 இற்கான விளக்கத்தைப் பார்க்கவும்

(27) Donald A. Hanger: World Biblical Commentary: Mathew p. 442

(28) W.J. Covenant and Creation p. 11


கட்டுரையாசிரியர் Dr. M.S. வசந்தகுமார்
நன்றி - சத்திய வசனம்



   





  

  

Tuesday 19 November 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 8- முன்னடையாளங்கள்


பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட்டிருக்கும் மனிதர்கள், பண்டிகைகள், பணிகள், நிகழ்ச்சிகள், பொருட்கள் ஆகிய இவைகளுள் சில முன்னடையாளங்களாக இருக்கின்றன. (Types) இவைகள் புதிய ஏற்பாட்டு மெய்ப்பொருளை நிழலாட்டமாக காட்டுகின்றன. 

1. முன்னடையாளமான மனிதர்கள்

(அ) ஆதாம் – மனித இனத்திற்குத் தலைமையானவன். கிறிஸ்து (இரண்டாம் ஆதாம்) மீட்கப்பட்ட மக்களுக்குத் தலைமையானவர். (ரோமர். 5:14; 1 கொரி. 15:22, 45)

(ஆ) யோசேப்பு – தன் சகோதர்களால் பகைக்கப்பட்டவன். பின்னால் தம் இனத்திற்கும் நாட்டிற்கும் அதிகாரியானான். (அப். 7:9-13) அது போல கிறிஸ்து யூத இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (யோவான். 1:11) என்றாலும் அவர் யூதருக்கும் உலக மக்கள் அனைருக்கும் இரட்சகரானார்.

(இ) மோசே – இயேசுவைப் போன்ற ஒரு தீரக்கதரிசி. இயேசுவைப் போன்ற ஒரு தலைவனாகவும், மீட்பனாகவும் ஏற்படுத்தப்பட்டான் (உபா. 18:15-18; அப். 3:22,23 7:35) 

(ஈ)ஆரோன்– பிரதான ஆசாரியராகிய இயேசுவிற்கு  முன்னடையாளமானவன்

(உ) மெல்கிசேதேக்கு – என்றென்றைக்கும் உயிரோடிருக்கின்ற பிரதான ஆசாரியரான இயேசுவிற்கு முன்னடையாளமானவர். (எபி. 7:15) அரசரும் ஆசாரியருமாகிய இயேசுவிற்கு முன்னடையாளமானர்

(ஊ) யோசுவா – மோசே செய்ய இயலாத ஒரு வேலையைச் செய்து இறை மக்களை கானான் நாட்டில் குடியேற்றினார். அதுபோல் நியாயப்பிரமாணம் செய்ய முடியாத ஒன்றை (ரோமர் 8:3, யோவான் 1:17) இயேசு செய்து முடித்து நம்மைப் பரம கானானிற்குள் குடியேற்ற தகுதியுடைவராக்கினார்)

(எ) தாவீது அரசன் – தம்மைச் சூழ்ந்திருந்த எல்லாப் பகைவர்களையும் வென்ற தாவீது மிகச் சிறந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன்னடையாளம் – (1 கொரி. 15:25, வெளி. 19:11-19)

(ஏ) சாலமோன் – சமாதானப் பிரபுவாகிய இயேசுவிற்கு முன்னடையாளம். தேவாலயத்தைக் கட்டின சாலமோன் திருச்சபையைப் பரிசுத்த ஆலயமாகக் கட்டுகின்ற இயேசுவிற்கு முன்னடையாளம். (மத். 16:18, எபே. 2:20-22)

கவனிக்க- மேற்சொல்லப்பட்ட மனிதர்கள் ஒரு சிலவற்றில் மட்டுமே இயேசுவிற்கு முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளும் இயேசுவிற்கு முன்னடையாளமானவைகள் எனக் கருதுவது தவறாகும். ஆதாம் மனித இனத்திற்கு தலைவனாயிருந்தபடியால் அந்த அளவில் அவன் இயேசுவைக் காட்டின முன்னடையாளமாயிருந்தான். ஆனால் விளக்கப்பட்ட கனியைப் புசித்தபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. 

மோசே மிகச் சிறந்த தீரக்கதரிசியும் இறைமக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பண்ணினவருமாயிருந்தபடியால் இவைகளில் அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருந்தான். பதற்றமாய் பேசியபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. ஆகவே முன்னடையாளங்களை விளக்கஞ் செய்யும்போது ஒரு சில செயல்களில் மட்டும் ஒற்றுமையைக் காணலாம். எல்லாற்றிலும் ஒற்றுமையைக் காண முற்பட்டால் சரியான உண்மையை விட்டு விலகிவிடுவோம். அத்துடன் இம்முறையை நாம் அளவிற்கு மீற கையாண்டால் பழைய ஏற்பாட்டின் மையக் கருத்துக்களையும் வரலாற்றுத் தன்மைகளையும் காணத் தவறிவிடுவோம். 


2. முன்னடையாளமான பண்டிகைகள்

(அ) ஓய்வுநாள் – விசுவாசத்தினால் வரும் இரட்சிப்பென்னும் இளைப்பாறுதலுக்கும் முடிவில்லா வாழ்விற்கும் அடையாளமாயிருக்கும். 
பாஸ்கா பண்டிகை- மீட்பிற்கு அடையாளமாகும்

(இ) பழைய ஏற்பாட்டுப் பலிகள் – வரப்போகின்ற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் இருக்கின்றன. (எபி. 10:1)


3. பணிகள்

பழைய ஏற்பாட்டு காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மூவகைப் பணியாட்கள் இருந்தனர். தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகிய இம் மூன்று பணியாட்களும் இயேசுவின் மூவகையான வேலைகளைக் காட்டுகின்றன. ஆகவே கிறிஸ்து

(அ) தீர்க்கதரிசி, போதகர், ஆசிரியர்

(ஆ) ஆசாரியர், மீட்பர், பரிந்துரைப்பவர்

(இ) அரசர், ஆண்டவர்

நாம் நற்செய்திப் பணியாற்றும்போது கிறிஸ்துவின் மூன்று பணிகளையும் சரிசமமாய் எடுத்துக் கூற வேண்டும். புதுவிசுவாசிகள் அவரை இரட்சகராக மாத்திரம் ஏற்றுக் கொள்வது போதாது. அவரை ஆசரியராகவும், அரசராகவும் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


4. நிகழ்ச்சிகள்

(அ) வெண்கலப் பாம்பு- கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பை நோக்கி பார்த்தவர்கள் பிழைத்ததுபோல சிலுவை மரத்தில் உயர்த்தப்பட்ட இயேசுவைப் நோக்கிப் பார்ப்பவர்கள் யாவரும் பிழைப்பார்கள். (ஏசா. 45:22, யோவான் 3:14,15)

(ஆ) இஸ்ரவேல் எகிப்தைவிட்டு புறப்பட்டு வனாந்திரவழியாகப் பயணஞ்செய்தபோது மன்னா உணவாக்க் கிடைத்தது முதல் பாறையிலிருந்து சுரந்த தண்ணீரை அருந்தி கானான் நாட்டில் வந்து சேர்ந்ததுவரை நிகழ்ந்த பல செயல்கள் மீட்கப்பட்ட திருச்சபையின் மோட்சப் பயணத்திற்கு முன்னடையாளமான ஒரு வரலாறாகும். (1 கொரி. 10:1-1)


5. பொருட்கள்

ஆசரிப்புக் கூடாரத்தின் சின்னஞ் சிறு வளையங்கள் கொக்கிகள் முளைகள் ஆகிய ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் கூறுவதைவிட அதன் முக்கியமான கருத்தினை உணர்ந்து கொள்வதே நன்று. “முதலாம் கூடாரம் நிற்குமளவு பரித்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவி தெரியப்படுத்தியிருக்கின்றார். (எபி. 9:8) யாரும் அதன் அருகில் செல்லக்கூடாது என்பது எச்சரிக்கையாகும். திரைச்சீலை போன்ற கிறிஸ்துவின் மாம்சம் கிழிக்கப்பட்டபேது தேவலாயத்தின் சீலையும் இரண்டாக்க் கிழிந்த்து. யாரும் நெருங்கக் கூடாது என்பதற்கு மாறாக, எவரும் அருகில் வரலாம். என்பவே நற்செய்தியின் கருத்தாகும். ”தூயகம் நுழைய அவருடைய இரத்ததின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு. உண்மையுள்ள உள்ளத்தோடும் உள்ளத்தோடும் முழு விசுவாச உறுதியோடும் நாம் அவரை அணுகிச் செல்வோமாக. (எபி. 10:19-22)

(அத்தியாயம் 8 முற்றிற்று)
(வளரும்)

Sunday 10 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(2)

2. ஓர் உவமை பெரும்பாலும் முக்கியமான உண்மை ஒன்றையே போதிக்கும் என்று முன்பு பார்த்தோம். அந்த முக்கியமான கருத்தைக் கூறுவதே போதும். உவமையின் விபரங்கள் ஒவ்வொன்றிற்கும் பொருள் காண முயற்சிப்பது தவறாகும். 
உதாரணமாக கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில் கூறப்பட்டுள்ள மோதிரத்திற்கும் மதியடிகளுக்கும், கொழுத்த கன்றுக்கும் கருத்துக்கூறுவது அவசியமில்லை. உவமைகள் சொல்வதில் நம் ஆண்டவராகிய இயேசு திறமைவாய்ந்தவர். உவமைகளைக் கூறும்போது சுருக்கமாகவோ அல்லது வர்ணித்தோ பொதுமக்களுடைய கவனத்தைக் கவருவார். ஆகவே வர்ணித்துக் கூறப்ப்ட்டகைளுக்கு கருத்துக் கூறதேவையில்லை. 

ஆனால் உயர்ந்த ஆடைக்கு ஆவிக்குரிய கருத்து கூறுவது பொருந்தும் என்பதே என் எண்ணம் இந்த உயர்ந்த ஆடை திருமண ஆடைக்கும் (மத் 22: 1-14) நீதியின் சால்வைக்கும் (ஏசா 61:10) ஒப்பாயிருக்கலாம். 

நல்ல சமாரியனைப் பற்றிய உவமையைக் எடுத்துக் கொள்வோம். இனம், மதம், நிறம் ஆகிய வேற்றுமைகளைப் பாராமல் அவதிப்படுபவர் யாருக்கும் உதவி செய்தல் வேண்டும் என்பது இந்த உவமையின் குறிக்கோள். “நீயும் அப்படியே செய்”(லூக். 10:37) இந்த அறைகூவலுக்கு தப்பும்படி சிலர் இதை நற்செய்திப் பகுதியாகப் பயன்படுத்துவர். சிலர் இவ்வுவமையின் ஒவ்வொரு அங்கத்தையும் எடுத்து கருதுக் கூறுவர். சத்திரத்தைத் திருச்சபை என்றும் இரண்டு பணத்தை இரண்டு சாக்கிரமந்துக்கள் என்றும் மிகைப்படுத்திக் கூறுவர். இது போன்ற முறையைக் கையாளுவது வேதத்தை திரித்துக் கூறுவதாகும். 


3. உதாரணமாக மொத்த கருத்திற்கு மாறான உபதேசங்களை நாம் உவமைகளின் மூலம் நிலைநாட்ட முயல்வது தவறு. 
உதாரணமாக லூக்கா 10:24 ஐசுவரியான் ஆபிரகாமை நோக்கித் தனக்கு ஓரரு உதவிசெய்யும்படி கேட்டுக் கொண்டதினால் நாம் இறந்த புனிதர்களை நோக்கி மன்றாடலாம் எனப் போதிப்பது வேதத்தின் மொத்தக் கருத்திற்கு மாறானது. 

லூக்கா. 15:11-32 கெட்ட குமாரன் மனந்திருந்தி வந்ததும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். இங்கு பாவத்தைப் போக்கும் பலியாய் மரிக்கவில்லை என்றும் நமக்கு நல்ல மாதிரியைக் காண்பிக்கும் தியாகியாய் இருந்தார் என்றும் நாம் புத்தி தெளிந்து தந்தையிடம் திரும்பிச் சென்றால் மன்னிப்பைப் பெறுவோம் என்றும், பாவப் பலியைப் பற்றிய பேச்சே கிடையாது என்றும், பாவத்தைப் போக்க கிறிஸ்து இயேசு இரத்தத்தை சிந்தினார் என்று நாம் கருதவும் கூறவும் தேவையில்லை என்றும் சிலர் கூறுவர். இந்தத் தவறான போதனை வேதாகமத்தின் முழுக் கருத்திற்கும் எதிரானதாகும். இப்பேர்ப்பட்ட போதனை கண்டிக்கத்தக்கது. ஓர் உவமை இரட்சிப்பின் முறையில் அடங்கியிருக்கும் சில முறைகளை மட்டுமே விளக்கும். இரட்சிப்பின் வழி முழுவதையும் ஒரே சுருக்கமான உவமையில் விளக்கக கூடிய உவமை எதுவும் கிடையாது. 


4. உவமையில் ஏதாவதொரு அங்கத்தை மட்டும் முக்கியமான போதனைக்கு தோரமாகக் கூறுவதும் தவறு.
உதாரணமாக பத்து கன்னிகைகளுள் பாதிபேர் இரட்சிக்கப்பட்டனர். பாதிபேர் இரட்சிக்கபடவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களில் பாதிபேர் சேர்க்கப்படுவர். பாதிபேர் புறம்பே தள்ளப்படுவர் என்பது அர்த்தமாகுமா?
அல்லது நான்கு வகையான நிலங்களில் விதைக்கப்பட்ட விதை உவமையில் ஒரு நிலத்தின் விதை மட்டுமே நல்ல பலனைத் தந்தபடியால் கூறப்பட்டு வரும் நற்செய்தி தூதுகளில் நான்கில் ஒரு பாகம்தான் பயன்பெறும் என்பது பொருளாகுமா?
அல்லது நூற்றில் ஒன்பது மட்ட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:1-7)
அல்லது பத்துக்கு ஒன்றுமட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:8-10)


5. உவமையில்லாதிருந்தும் ஓரளவு வமைகளைப் போன்ற ஒப்பனைகள் யோவான் நற்செய் நூலில் உள்ளன. (யோவான் நற்செய்தி நூலில் உவமைகள் இல்லை என்பதையும் அடையாள அற்புதங்கள் எட்டு மட்டுமே உள்ளன என்பதையும் மனதில் கொள்க)

இந்த ஒப்பனைகள்(Alleaories) 10ஆம், 15ஆம் அதிகாரங்களில் காணப்படுகின்றன.

10ஆம் அதிகாரம்

1. நல்ல மேயப்பன் – இயேசு “நானே“ என்றார். 10:11,14

2. ஆடுகள் 3. வாசைலைக் காக்கிறவன்

4. தொழுவம் – இயேசு 10:7,9

5. வாசல் – “எனக்கு முன் வந்தவர்” 10:8

6. திருடர். 

7. அந்நியர். 

8. ஓநாய். 

9. கூலிக்காரன்

மேற்கூறிய ஒன்பது குறிப்புகளில் வாசல், மேய்ப்பன், ஆகிய இரண்டிற்கும் மட்டுமே தம்மை உவமித்து இயேசு கூறியுள்ளார். 

15ம் அதிகாரம்

திராட்சைச் செடி – நானே 15:1 (இயேசு)

பயிடுகிறவர் – தந்தை

கொடிகள் – நீங்கள் 15:5

உவமையில்லாத ஒப்பனைத் தொடர்கள் பழைய ஏற்பாட்டிலும் உள்ளன. (உதாரணமாக சங். 80:8-15. நீதி. 5:15, பிர. 12:3-7)

(அத்தியாயம் 7 முற்றிற்று)
(வளரும்)

Monday 4 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(1)

உவமைகள் சிறு பிள்ளைகளும் எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க நல்ல கதைகள் எனக் கருதுவது தவறாகும். உவமைகள் நல்ல கதைகள் தான் ஆனாலும் அதற்குச் சரியான ஆவிக்குரிய விளக்கம் கூறுவது எளிதன்று. 

உவமை என்பது தெரிந்த ஒன்றைக் காட்டி தெரியாத ஒன்றை விளக்குவதாம். அதாவது ஒன்றைப் போல் மற்றொன்று அமைந்திருகின்றது என்று கூறுவதாம். 

இயேசு கிறிஸ்து உவமைகள் பயன்படுத்தியக் காரணத்தைக் கவனிக்கவும். (மத். 13:11-17) விண்ணுலக அரசின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது.அவர்களுக்கோ அருளப்படவில்லை. 

1. ஓர் உவமை முக்கியமான உண்மை ஒன்றையே கற்பிக்கும். ஒரு சில உவமைகள்(விதைக்கின்றவன், களைகள்) மட்டும் ஒன்றுக்கும் அதிகமான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் பெரும்பாலும்  உவமைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய கருத்துத்தான் உண்டு.
இந்த ஒரே கருத்து என்ன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?


(அ) உவமையின் துவக்கத்தில்
லூக்கா 18:1-8; சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பது (18:1) இவ் உவமையின் நோக்கம்

லூக்கா 18:9-14 தங்களை நீதிமான்கள் என்று நம்புவோரைக் (18:9) கடிந்து கொள்வதே இந்த உவமையின் நோக்கம்.
(ஆனால் இவ்வுவமையின் இறுதி (14ஆம்) வசனத்திலும் போதனையுண்டு.

லூக்கா 19:11-27 தேவனுடைய ராஜ்யம் உடனே வராது (வச 11) என்பதுதான் இவ் உவமையின் முக்கியமான கருத்து 


(ஆ) உவமையின் இறுதியில்
மத்தேயு 22:1-14 கடைசி வசனத்தில் இந்த உவமையின் முக்கியமான ஆவிக்குரிய கருத்தைக் காணலாம். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்” ஆகையால் “உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். (2 பேதுரு 1:110) என்பதே பொருள்

மத்தேயு 25:11-13 கடைசி (13ம் ) வசனத்தைப் பார்க்கவும். ….“விழித்திருங்கள்

லூக்கா 16:1-9 மற்றெல்லா உவமைகளைக் காட்டிலும் விளங்கிக் கொள்வதற்கு சற்று கடினமான இந்த உவமையின் முக்கிய கருத்தைக் கடைசி வசனத்தில்(9ம் வசனத்தில்) காணலாம். “அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.“ 
ஆண்டவருடைய சீடர்களில் சிலர் சகேயு, மத்தேயு என்பவர்களைக் போன்று அநியாயமான முறையில் செல்வதைத்த் திரட்டியிருந்தனர். (15:1) தங்கள் ஊழலின் பயனாகத் திரட்டிய செல்வதை எவ்வாறு செலவிடுவது என்ற கேள்வி எழுந்தபோது ஆண்டவர் இவ் உவமைமையைக் கூறினார். 

(i) கூடுமானால் யாரை வஞ்சித்தோமோ அவர்களுக்குத் திரும்ப செலுத்தவும். (நாலாந்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்- 19:8)

(ii) அவ்விதம் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் ஏழைகளுக்குக் கொடுக்கவும். (லூக். 1:22; 19:18) அதாவது அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு நண்பரைச் சம்பாதியுங்கள். என்று ஆண்டவர் கூறியிருக்கின்றார். நீதியற்ற கண்காணிப்பாளன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வாருவனாக அழைத்துக் கடன் பத்திரத்தைக் குறைத்து எழுதும்படி சொல்லியபோது தன் முதலாளியை வஞ்சிக்கவில்லை. தான் ஏற்கனவே அநியாயமாய்த் திரட்டிய செல்வத்தைப் பயன்படுத்திக் கடன்பட்டவர்கள் ஒவ்வாருவனுக்கும் தன் சொந்த செலவில் தயவு பாராட்டி இவ்விதம் அவர்களைத் தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டான். முதலாளியின் பணத்தை மீண்டும் அபகரித்துக் கடன் பத்திரங்களைக் மாற்றியிருப்பானேயானால் முதலாளி அவனை மெச்சிப் பேசியிருப்பானோ? 

எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் குணப்பாடாதற்கு முன் பரிசு சீட்டுக்களை வாங்கி ஒரு பெரிய இலட்சாதிபதியாகிறான் என்று வைத்துக் கொள்வோம். குணபட்டபின் தான் அந்த முறையில் பரிசு பெறது தவறு என்று உணர்கின்றான். என்ன செய்வது? ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை அரசுக்கு திருப்பிக் கொடுக்கலாம். அல்லது பொதுநலத்திற்கென நிறுவப்பட்ட ஏதாவது சில கல்வி நிலையங்களுக்கோ அல்லது மருத்துவ மனைகளுகக்கோ கொடுக்கலாம். கர்த்தருடைய பணிக்கென திருச்சபை அநீதியான உலகப் பொருட்களை வாங்கலாமா? வாங்கலாகாதா? என்பதைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

சென்ற நூற்றாண்டின் எப். என். சரிங்டன் (F.N. Charringdon) என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் மதுபானங்கள் மூலமாய் ஏராளமான செல்வத்தைத் திரட்டியவர்கள். சரிங்கடன் குணப்பட்ட பின்னும் தான் அனுபவித்து வருகின்ற செல்வங்கள் அநீதியான முறையில் வந்தவை என்பதை உணரவில்லை. ஒருநாள் இரவு லண்டன் மாநகரின் கீழ்ப்பகுதியில் (பரம ஏழைகள் வசித்த பகுதி) சென்ற போது சாராயக் கடைக்கு முன் நடந்த பயங்கரமான சண்டையையும் குடித்து வெறித்தவர்கள் தங்கள் மனைவிகளைத் துன்புறுத்தும் காட்சியையும் கண்டு மனவேதனை யடைந்தார். அப்போது அந்த சாராயக்கடையின் உரிமையாளரின் பெயர் தம் குடும்பப் பெயர் சரிங்டன் என அறிந்து அதிர்ச்சியுற்றார். அந்நாளே சரிங்கடன் அக்கம்பனியில் தனக்கருந்த பங்கை விற்றுவிட்டு தான் சம்பாதித்த ஏராளமான பணத்தை லண்டன் நகரின் கீழ்ப் பகுதி ஏழை மக்களின் நலத்திற்கெனச் செலவிட்டார். 

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் மூலம் முதலில் ஆண்டவருடைய சித்தத்தை அறியாதவர்கள் அறிந்தபின் நன்மையான செயல்கள் செய்தனர் என்பதை அறிகிறோம். ஆனால் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் அதன்படி செய்யாமல் திருச்சபையின் பணத்தையோ, சொதுக்களையோ அநியாயமான முறையில் செலவிடுகின்ற ஊழியக்காரன் அநேக அடிக்கள் அடிக்கப்படுவான். (லூக். 12:47)


(இ) சில வேளைகளில் உவமையின் முக்கிய கருத்து உவமையின் துவக்கத்திலும் இறுதியிலுமாக இருமுறை கூறப்பட்டிருக்கும். 
(i)  மத். 18:21,22,35 ‘அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் உன் சகோதரனுக்கு மன்னிக்க வேண்டும்” என்று சொல்கிறேன். 
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (18:35)

(ii)  பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்;(12:15) தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் (12:21)


(ஈ) சிலவேளைகளில் உவமை கூறப்பட்ட சூழ்நிலையைக் கொண்டு அதற்கு முன்னுள்ள வரலாறுகளைக் கொண்டு உவமையின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்
(i) லூக் 13:6-9 உவமைக்கு முன்னுள்ள வசனங்களைப் பார்க்கவும். மனமாற்றமடையாத யூத மக்கள் அழிதல் நிச்சியம் என்று வலியுறுத்திப் போதித்தபின் கனி கொடாத அத்திமரத்தின் உவமையைக் கூறினார். 

அத்திமரம் – யூத இனம்
முதலாளி – கடவுளின் நீதி (வெட்டுவதற்கு எத்தனித்தல்)
தோட்டக்காரன் – கடவுளின் நீடிய சாந்தம்

இப்பொழுது அத்தி மரத்தைச் சில சபைகளுக்கோ தனிப்பட்ட சில நபர்களுக்கோ ஒப்பிட்டு இந்த உவமையைப் பயன்படுத்தலாம். 

அடிக்கடி சுற்றிலும் கொத்தி எரு போடப்படும் கனி கொடாத அத்தி மரம் இரக்கமின்றிப் பிடுங்கப்படும. (நீதி. 29:1)

கவனிக்க. முதலாளியைக் கடவுள் என்றும் தோட்டக்காரனைக் கிறிஸ்து என்றும் கூறலாகாது. அவ்வாறு விளக்கஞ் செய்வது தவறான கருத்துக்களுக்கேதுவாகும். 

(ii)  லூக்கா 15:12-32 உவமைக்கு முன்னுள்ள 15:1,2 வசனங்களைப் பார்க்கவும். ஆயக்கார், பாவிகள்” ஆகிய எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்க அவரிடம் வந்த வண்ணமிருந்தனர். அதனால் பரிசேயரும், வேத அறிஞரும், இவன் பாவிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களோடு சாப்பிடவுஞ் செய்கிறானே என்று சொல்லி முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் இந்த உவமையை (அல்லது மூன்று உவமைகளை) அவர்களுக்குச் சொன்னார்.

இளைய மகன் – ஆயக்காரர், பாவிகள்
மூத்த மகன் – பரிசேயர், தேவ அறிஞர். 

(வளரும்)