- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 29 October 2011

தேவனுக்குப் பிரியமானதைக் கொடுத்தல்



அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரான ஆபிரகாம்லிங்கனுடைய பதவிக்காலத்தில் ஒருநாள். அவரைச் சந்திக்க ஒரு வயது முதிர்ந்த பெண் அவரது அலுவலகத்த்திற்குச் சென்றாள். தன்னைத் தேடி வந்த பெண்ணிடம் ஆபிரகாம் லிங்கன், “பெண்ணே, நான் உனக்கு செய்யவேண்டியது என்ன?“ என்று கேட்டார்.

மூடப்பட்டிருந்த சிறுகூடையொன்றை ஜனாதிபதியின் மேசையின் மீது வைத்த அப்பெண் “ஜனாதிபதி அவர்களே, இன்று நான் எனக்காகவோ இல்லையென்றால் மற்றவர்களுக்காகவோ, எதுவும் கேட்பதற்காக உம்மிடம் வரவில்லை. உமக்கு கொக்கீஸ் மிகவும் பிடிக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால் இக்கூடை நிறைய கொக்கீஸ்சை மிகவும் பிடிக்கும் என  கேள்விப்பட்டேன். அதனால் இக்கூடை நிறைய கொக்கீஸ்சை உமக்காக கொண்டு வந்தேன்“ என்றாள்

தன்னைப் பார்க்க வந்த பெண் கூறியவற்றைக் கேட்ட ஜனாதிபதியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. சில நிமிடங்கள் அவரால் எதுவும் பேசமுடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் அவர் அப்பெண்ணிடம் “பெண்ணே, சுயநலமின்றி என்னைப் பற்றிய நினைவுடன் நீ செய்த செயல் என் உள்ளத்தை உருக்குகிறது. நான் ஜனாதிபதியானதில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்துள்ளனர். ஆனால், இஙகு வந்தவர்களில் தனக்காகவோ இல்லையென்றால் மற்றவர்களுக்காகவோ எந்தவித உதவியையும் கேட்காதவர்களில் நீயே முதலாவது நபர்“ எனக் கூறினார். 

ஜனாதிபதியிடம் மக்கள் செல்லுவது போலவே நாம் எப்போதும் தேவைப்பட்டியல்களுடனேயே தேவனிடம் செல்கிறோம். நமக்கும் மற்றவர்களுக்கும் வேண்டியவைகளையே அவரிடம் கேட்கிறோம். ஆனால், கொக்கீஸ்சுடன் ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்கச் சென்ற அப்பெண், ஜனாதிபதிக்கு விருப்பமானது எது என்பதை அறிந்து அதைக் கொண்டுபோனமையால், ஜனாதிபதி மகிழ்வடைந்தார். அப்பெண்ணைப் போலவே நாமும் தேவனிடம் செல்லும்போது தேவனுக்குப் பிரியமானது எது என்பதை அறிந்து, அதை அவரிடம் எடுத்துச் செல்பவர்களாக இருக்க வேண்டும். தேவனுக்குப் பிரியமானதை நாம் அவருக்குக் கொடுக்கும்போது அது அவரை சந்தோஷப்படுத்தும். 

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்) 


Saturday 22 October 2011

ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவான் 9:4)




இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களில் புரிந்து கொள்வதற்கு கடினமாயிருக்கும் இன்னுமொரு வசனம் யோவான் 9:4 குறிப்பிடப்பட்டடுள்ளது. இவ்வசனத்தில், “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; என்று தெரிவித்த இயேசுகிறிஸ்து “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.“ என்றும் முன்னறிவித்துள்ளார். (யோவான் 9:4) இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் “பகற்காலம்“ “இராக்காலம்“ என்னும் வார்த்தைகள் என்ன அர்த்தத்தோடு உபயோகித்துள்ளார் என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. எனினும், இவ்விரு வார்த்தைகளையும் இயேசுகிறிஸ்து சொல்லர்த்தமாக உபயோகித்துள்ளார் என்னும் விள்ககம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால் யோவானுடைய சுவிசேஷத்தில் இவ்விரு சொற்பிரயோகங்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உருவக விபரணங்களாக “மக்களின் ஆவிக்குரிய நிலையை அறியத்தரும் சொற்பதங்களாகவே உள்ளன(1) எனினும், சில சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் இவ்வித அர்த்தங்களுடன் இவ்வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதையும் நாம் அவதானிக்கலாம் (2)

“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; (3) என்று இயேசுகிறிஸ்து கூறும்போது, இவ்வுலகத்தில் பணிபுரிவற்காகத் தமக்கு நியமிக்கப்படப்டுள்ள காலத்தையே குறிப்பிட்டுள்ளார். “இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பணியாற்றிய காலம் அவருக்குப் பகற்காலமாய் இருந்தது (4) இவ்வசனத்தில் “நான்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் “நாம் என்றே உள்ளது (5) எனவே, இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களையும் சேர்த்து “நாங்கள் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்“ என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார் (6) பிறவிக் குருடனைக் கண்ட சீடர்கள், அவன் குருடனாகப் பிறப்பதற்கு யார் காரணம் என்று கேட்டபோதே இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறியமையால் (யோவான் 9:1-4) அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை விட்டுவிட்டு, தேவன் தங்களுக்கு கொடுத்துள்ள காலம் முடிவடைவதற்குள் அவர் தந்த பணியைச் செய்ய வேண்டும் என்பதையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேவனால் கொடுக்கப்பட்ட பணியைச் செய்யவேண்டியதன் அவசியத்தைச் சீடர்களுக்குச் சுட்டிக் காட்டுவதறகாக “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று  இயேசுகிறிஸ்து கூறினார். இதற்கு அடுத்த வசனத்தில் இயேசுகிறிஸ்து  தாம் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருப்பதாக தெரிவித்துள்ளார். (யோவான 9:5) “இயேசுகிறிஸ்து இவ்வுலகிலிருக்கும் காலமே பகற்காலம் என்றும் அவர் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் வருவது இராக்காலம்“(7) என்றும் சிலர் கருதுகின்றனர். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் இருக்கும் காலமே பகற்காலம் என்பது உண்மை என்றாலும், (8) வரவிருக்கும் இராக்காலத்தில் ஒருவராலும் கிரியை செய்ய முடியாது எனறும் இயேசுகிறிஸ்து கூறுவதனால், அவர் பரமேற்றிச் சென்ற பின்னர் அவரது சீடர்களினால் தேவனுடைய கிரியைகளைச் செய்ய முடியாதிருந்தது என்றும் நாம் கூறவேண்டும். ஆனால், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் அறியத்தருவது போல, இயேசுகிறிஸ்துவின் சீடர்கள், அவர் குறிப்பிட்ட விதமாக, அவரையும் விட பெரிய கிரியைகளைச் செய்துள்ளமையால் (யோவான் 14:12) ஒருவரும் கிரியை செய்ய முடியாத இராக்காலம், இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் உள்ள காலம் என்று கூற முடியாது. 

உண்மையில் ஒருவரும் கிரியை செய்ய முடியாத  இராக்காலம் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமே உள்ளது(9). எனவே, அதற்கும் முன்னர், தேவன் தமக்குக் கொடுத்த பணியைச் செய்ய வேண்டும் என்பதேயே இயேசுகிறிஸ்துவின்  இவ்வசனத்தில் தம் சீடர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார். இராக்காலம் முடிவடைய மறுபடியும் பகற்காலம் வருவது போலவே, இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின்னர் மறுபடியுமாகச் சீடர்கள் பரிசுத்த ஆவியானவருடைய உதவியுடன் உலகில் பணிபுரியக் கூடியதாக இருந்தாலும், தமது சிலுவை மரணத்திற்கு முன்னர் தாம் செய்ய வேண்டிய பணிணைச் செய்து முடிக்க வேண்டும் என்பதையே இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் தம் சீடர்களுக்கு அறிவித்துள்ளார். (10) மேலும், அடுத்த வசனத்தில் “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்“ (யோவான் 9:5) என்று இயேசுகிறிஸ்து குறிப்பிடப் பட்டுள்ளமையால், அவர் இவ்வுலகத்திலிருந்து சென்ற பின்னர் உலகிற்கு ஒளி இல்லாமல் போய்விட்டது என்று நாம் கருதலாகாது. அதன் பின்னர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களும், தற்காலத்தில் கிறிஸ்தவர்களும் அவருடைய ஒளியை பிரதிபலிப்பவர்களாக இவவுலகத்தில் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

Footnote and Reference
(1) G.L. Borchert, John 1-11 : The New American Commentary, p 170. அக்காலத்தைய இலக்கியங்களைப் போலவே, யோவானுடைய சுவிசேஷத்திலும் ஒளி நன்மையையும் ஆவிக்குரிய மெய்வாழ்வையும், இருள் தீமையையும் பாவத்தையும், சாத்தானின் ஆளுகையையும் உருவகிக்கும் விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன. 

(2) உதாரணத்திற்கு யோவான் 3ம் அதிகாரத்தில் “நிக்கொதேமு“ இயேசுகிறிஸ்துவிடம் “இராக்காலத்தில் வந்தான்“ என்று குறி்பபிடப்பட்டிருப்பது, இவன் இரவு நேரத்தில் வந்தததையே“ (F. F. Bruce, The Gospel of John, p. 81) அறியத்தந்தாலும் (யோவான் 7:50) அவன் ஆவிக்குரிய அந்தகாரத்திலிருந்து (ஒளியாகிய இயேசுகிறிஸ்துவிடம்) வந்தான் என்னும் அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. அக்காலத்தைய யூதமதப் போதகர்கள் இரவு நேரத்திலேயே நியாப்பிரமாணத்தை ஆராய்ந்து படித்து வந்தமையால், யூதமதப் போதகனான நிக்கொதுமுவும இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவ்வித இடையூறுகளுமின்றி கற்பதற்காக இரவு நேரத்தில் அவரிடம் வந்தான் (G.R. Besley-Murray, John : Word Biblical commentary Volume 36, p 47) என்பதும் அவன் மற்ற யூதர்களுகு்குப் பயந்ததினால் எவருக்கும் தெரியாமல் இயேசுகிறிஸ்துவைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தைத் தெரிவு செய்தான். (W.Hendriksen, New Testament Commentary : John, p 132) எ்னபதும் உண்மை என்றாலும் “அவன் ஆவிக்குரிய அந்தகாரத்திலிருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்துள்ளான். (H. Hoskyns, The Fourth Gospel, p 211) என்பதை மறுப்பதற்கில்லை. “நிக்கொதேமு இரவுநேரத்தில் இயேசுகிறிஸ்துவிடம் வந்தாலும், அவனது ஆவிக்குரிய வாழ்வின் இருள் அவன் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது“ (E.W. Heisenberg, Commentary on the Gospel of John Volume 1, pp. 157-158; R.H. Lightfoot, St. John's Gospel : A Commentary p. 116)

(3) இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பணிபுரியும் போது, தம்மை அனுப்பிய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே செயற்பட்டு வந்தார் (யோவான் 6:38) இதனால்தான் இவ்வசனத்திலும் நான் “என்னை அனுப்பினவருடை கிரியைகளைச் செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். 

(4) J.C. Ryle, Expository Thoughts on John Volume 2, p. 160

(5) இதனால்தான் புதிய இலகு தமிழ் மொழிபெயர்பபில் இவ்வசனம் “பகல்வேளையாய் இருக்கும் போதே என்னை அனுப்பினவருடைய வேலையை நாம் செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிவிலியத்திலும் “நாம்“ என்றே மொழிபெயர்த்து்ள்ளனர். மேலும் “மோனஹன்“ மற்றும் “ராஜரீகம்“ என்போரது தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் இதனை நாம் அவதானிக்கலாம்.

(6) R.C.H. Lenski, The Interpretation of St. John's Gospel, P. 677

(7) J.C. Ryle, Expository Thoughts on John Volume 2, p 160 இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருந்து சென்றபின்னர் உள்ள காலமே இராக்காலம் என்னும் கருத்திற்கு ஆதாரமாக இவர்கள் ரோமர் 13:12 ஐ சுட்டிக்காட்டுவது வழமை. இவ்வசனத்தில் “இரவு சென்று போயிற்று பகல் சமீபமாயிற்று“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் இரவு என்பது இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் சரீரப்பிரகாரமாக இல்லாத காலம் என்றும் வரவிருக்கும் பகல் அவரது மறுவருகை என்றும் கூறுகின்றனர். (Ibid, p. 161)

(8) D.A. Carson, John : Pillar New Testament Commentary, pp 362-363

(9) G.L. Borchert, John 1-11 the New American Commentary, p. 314

(10) D.A. Carson, John: Pillar New Testament Commentary, pp 362-363

(11) E.A. Blum, John: The Bible Knowledge Commentary New Testament, p. 307

(அவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய “கர்த்தரின் வார்த்தைகளில் கடினமானவரிகள்“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி) 


Thursday 20 October 2011

கடவுள் இருக்கிறாரா?




ஒரு மனிதர் தன் தலைமுடியை வெட்டுவதற்காகவும் தாடியை சிரைப்பதற்காகவும் தன் வீட்டுக்கு அருகிலுள்ள பாபர் சலூனுக்கு சென்றார். அந்த பார்பர் வாடிக்கையாளருக்கு முடிவெட்டிக் கொண்டிருக்கும்போது இருவரும் பலதரப்பட்ட காரியங்களைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள். திடீரென அவர்கள் கடவுளைப் பற்றி உரையாட ஆரம்பித்தனர். 

பார்பர் கூறினார் : 'கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்புகிறதில்லை. ஏனெனில் கடவுள் என ஒருவர் இருந்தால் இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனையும் துன்பமும் கொடுமையும் காணப்பட வேண்டும்? எவ்வளவுபேர் பசி, பட்டினி வியாதியினால் கஷ்ட்டப்படபடுவதைப் பார்க்கிறோம். கடவுள் என ஒருவர் இருந்தால் இவைகளை எல்லாம் அவர் ஏன் அனுமதிக்க வேண்டும்?“ என்று கேட்டான். அதற்கு அந்த வாடிக்கையாளர் பதிலேதும் கூறவில்லை. அவர் அவனுடன் தொடர்ந்தும் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.

வாடிக்கையாளர், தான் வந்த வேலை முடிந்ததும் சலூனைவிட்டு வெளியேறினார் அவர் அந்த பாதை வெளியை வீதியைக் கட்க்கப்போகும் போது பாதை ஓரத்தில் நீண்ட தாடியும், பல மாதங்களாக வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்த அழுக்கான தலைமுடியும் கொண்ட ஒரு வயதான மனிதனைக் கண்டவுடனே அவர் மீண்டும் சலூனுக்குள் ஓடி சென்று, பார்பரை நோக்கி: “ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இநத உலகத்தில் பார்பர் என்ற ஒருவரே இல்லை“ என்று கூறினார். 

உடனே பார்பர் வாடிக்கையாளரை நோக்கி “நீங்கள் எப்படி கூறுவீர்கள்? இதோ நான் இருக்கிறேனே. உங்களுக்கு தலைமுடியையும் தாடியையும் சிரைத்து விட்டேனே...” எனக் கூற, “இல்லை, பார்பர் என ஒருவர் இல்லவே இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருந்திருந்தால் ஏன் நீண்ட தாடியும் வெட்டப்படாத அழுக்கான தலைமுடியும் கொண்ட பலர் தெருவோரங்களில் காணப்பட வேண்டும்?“ எனப் பதிலுக்குக் கேட்டார் அதற்கு பாபர் “அவர்கள் என்னிடம் வராவிட்டால் அதற்கு நான் காரணமா? என் வாய்விட்டு சொன்னான். 

உடனே வாடிக்கையாளர் “இதேபோலத் தான் கடவுள் என்ற ஒருவர் கடவுளாகவே இருக்கிறார். ஆனால் மனிதர்களோ தாங்கள் பிரச்சினைகளையும் வேதனைகளையும் மாற்றக் கூடிய அந்த மெய்யான ஆண்டவரிடம் வருவதேயில்லை. இதனால்தான் இந்த உலகில் இவ்வளவு வேதனையும் துன்பங்களையும் கண்டு கடவுள் இல்லை என்று சொல்லாதே“ எனக் கூறிவிட்டு அந்த சலூனைவிட்டு வெளியேறினார. 

(நன்றி : சத்தியவசனம் January - March 2008)  


Sunday 16 October 2011

ஐந்துவிரல் ஜெபம்




பெருவிரல் - இது உனக்கருகில் உள்ள விரலாகும். ஆகவே உனக்கு நெருக்கமானவர்களுக்காக முதலில் ஜெபிக்கத் தொடங்கு அவர்கள்தான் அடிக்கடி உன் ஞாபகத்திற்கு வரக்கூடியவர்கள். தமது அன்பானவர்களுக்காக ஜெபிப்பது “இனிமையான கடமை“ என C.S. லுயிஸ் என்ற தேவபக்தன் கூறியிருக்கிறார். 

ஆள்காட்டிவிரல் - இது ஒன்றை சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விரலாகும். எனவே வழிநடத்தும் உன் ஆசான்களாக போதகர்கள். ஊழியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என உனக்கு போதித்து வழிநடத்துபவர்களுக்காக ஜெபி. மற்றவர்களை சரியான பாதையிலே வழிநடததும் அவர்களுக்கு மிகுந்த ஞானம் அவசியமானதாகும். எனவே அவர்களை உனது ஜெபத்தில் நினைவுகூற மறவாதே.

நடுவிரல் - - இது உயரமான விரலாகும். இது தலைமைத்துவத்தை ஞாபகப்படுத்துகிறது. எமது தேசத்தின் தலைவர்கள், அரச அதிகாரிகள், வியாபார தொழிற்துறை வல்லுநர்கள், நிர்வாகிகளுக்காக ஜெபி். இவர்கள்தான் எமது நாட்டின் மக்களை வழிடத்தி, தேசத்தை கட்டியெழுப்புகிறவர்கள. எனவே அவர்களுக்கு தேவனுடைய வழிநடத்துதல் மிக அவசியம். 

மோதிரவிரல் - ஒரு இசைக்கலைஞனிடம் கேட்டால் விரல்களில் மிகவும் பெலவீனமானது இந்த விரலே என்பதை ஒப்புக் கொள்வான். இது வேதனை துன்பம் துயரத்தில் உள்ளவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும என்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டியது மிக அவசியம். 

சுண்டுவிரல் - இது கடைசி விரலாகும். மற்றவர்களுக்காக ஜெபிக்கும் நாம் கடைசியாக நமது தேவைகளை கர்த்தரிடத்தில் ஏறெடுக்கலாம். இப்படியாக முதலில் மற்றவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கும்போது, மற்றவர்களுக்காக நமது தேவைகளை சரியான விதத்தில் கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வதோடு ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்

(நன்றி : சத்தியவசனம் July - September 2006)



Tuesday 11 October 2011

சந்தேகத்திற்கிடமான நியமங்கள்



சந்தேகத்திற்கிடமான காரியங்கள் மீது சந்தேகப்படுவதை நிறுத்துங்கள்
வேதாகமம் ஒருநாளும் மாறாத புத்தகம். ஆனால் நாம் மாறிக் கொண்டேயிருக்கும் உலகத்தில் வசிக்கின்றோம். ஒவ்வொரு மனிதரும் அனுசரிக்கும் பழக்கவழக்கங்கள், நினைக்கும் எண்ணங்கள் யாவும் மாறிக் கொண்டிருக்கின்றன. நாகரீகமும் நடையுடை பாவனைகளும் ஒவ்வொரு மனிதர்களது ஈடுபாடுகள் யாவும் மாறிக் கொண்டே இருக்கும்போது ஒரு விசுவாசி எப்பொழுது எவ்விதம் தன் நிலையிலிருந்து மாற வேண்டும்.? எப்பொழுது மாறாமல் இருக்க வேண்டும். 



விசுவாசிகள் அடிக்கடி சங்கடப்படுத்தும் ஒரு கேள்வி என்னவென்றால் நிலையான சத்தியங்களைக் கொண்ட வேதாகமத்தின் வெளிச்சத்தை ஆதாரமாகக் கொண்டு மாறிக் கெண்டே போகும் உலக போக்கிற்கு ஏற்றபடி ஜீவிப்பது எப்படி? மாறிக்கொண்டே போகும் இவ்வுலகத்தில், வேதாகமத்தில் குறிப்பாக சொல்லப்படாத சில விஷயங்களை நாம் சந்திக்கும்போது நம் வாழ்க்கை முறையில் அவற்றுக்கு முகங்கொடுபபது எப்படி? இந்த கேள்விகளைக் கண்டு கலங்க வேண்டாம். தேவன் வாழ்வுமுறைக்கு வழிகாட்டும் வார்த்தையையும் நியமங்களையும் வேதாகமத்தில் கொடுத்திருக்கிறார். நமது மனம், உணர்ச்சி, சித்தம் ஆகியவற்றை உபயோகித்து இந்த நியமங்களை கடைபிடிக்க அவற்றை நம்மிடம் விட்டுவிட்டார். நம் கிறிஸ்தவ நடத்தை மற்ற நபருடைய அபிப்பிராயத்திலிருந்தோ அவருடைய மனசாட்சியிலிருந்தோ வராமல் நாமே ஆண்டவருடைய வார்த்தையை விளங்கிக் கொள்வதிலிருந்து வருவதற்காக ஆண்டவர் கொடுத்திருக்கும் வேதாகம நியமங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். 


தகுதியைப் பற்றிய நியமம்

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது (1 கொரிந்தியர் 6:12) ஆகையால் நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால் : “நான் செய்ய விரும்பும் இந்தக் காரியம் எனக்குத் தகுதியான நடத்தைத் தானா? மேற்கூறிய வசனத்திற்கு முன்னே எழுதப்பட்ட வசனங்களை வாசீப்பீர்களாகில் பவுல் கொரிந்து சபையினரின் பழைய வாழ்க்கையிலிருந்து ஆண்டவர் அவர்களை மீட்பதைப் பற்றி எழுதியிருப்பதைக் காணலாம். மீட்படைந்தவர்களிடமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது. ஆகவே சந்தேகத்திற்ககிடமான காரியம் கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள பதிய உறவிற்கு உகந்ததா? இக்காரியம் என் பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறதா? இதை அனுவித்தால் என் எதிர்கால நிலை இனிதாயிருக்குமா? இந்தக் கேள்விக்கு பதில் தயக்கம் தருமாயின் அதைவிடடு விலக வேண்டும். 

அடிமைப்படுவதைப் பற்றிய நியமம்
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.(1 கொரிந்தியர் 6:12)  சந்தேககப்படக் கூடிய காரியம் செய்வதால், நமது சரீரம், ஆத்துமா, ஆவிக்கு உண்டாகும் விளைவுகளைக் பற்றி யோசிக்க வேண்டும். ஏனென்றால் நான் என்னை எதுவும் அடிமையாக்க அனுமதிக்க கூடாது. இந்த இடத்திலே உணவைப்பற்றி பவுல் பேசுகிறார். அந்தக் காலத்திலே புகைபிடித்தல், டெலிவிஷன்(T.V), லாகிரி வஸ்துக்கள் (Drugs), சினிமா இதைப்போன்ற பிரச்சினைகள் இருக்கவில்லை. எனினும், இந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் எதற்கும் நாம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்ற நியமத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

அடுத்தமுறை புகைபிடிக்கிற ஒருவனை “நீ உன் சாட்சியைக் கெடுக்கிறாய்“ என்று சொல்ல விரும்புவாயாகில் உனக்கு காப்பி, டீ, மேலேயோ, பிரியாணி மேலேயோ, மற்றும் எந்தவிதத்திலோ உனக்கிருக்கும் அடிமைத் தனத்தைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொள்.! அடிமைத்தனம் கண்கள் மூலமாகவோ, வாயின் மூலமாகவொ, மூக்கின் மூலமாகவோ நுழையக்கூடும். ஆகவே அது எதுவாயிருந்தாலும் உன் நேரத்தை மனதை, சிந்தையை பாதிக்குமாயின் அதன் விளைவுகளை அறிந்து விலக வேண்டும. சந்தேகம் உண்டாக்கும் காரியங்களைச் சரியாக புரிந்து கொண்டு நமது ஆணடவரை விட்டு விலக் செய்யும் எந்த அடிமைத் தனத்திற்கும் துயரமாக விலகிச் செல்ல வேண்டும். 

பக்திவிருத்தியைப் பற்றிய நியமம்
“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும்  எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.(1 கொரிந்தியர் 10:23). இந்த வசனத்தை வைத்து வேதத்தில் தெளிவாக செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களாக இல்லாவிடில், அவை சரியானவைகள்“ என்று பவுல் சொல்லுகிறார் என்று அர்த்தப்படுத்தக்கூடாது. இவர் சந்தேகம் தரும் காரியங்களைக் குறித்து பேசுகிறார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். கேள்வி என்னவென்றால், “இந்தக் காரியம் என்னை ஆவியில் வளர்ச்சியடையச் செய்யுமா? அல்லது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் நமது ஆண்டவருடன் நடப்பதற்கும் தடையாயிருக்குமா? கிறிஸதுவின் மீதிருக்கும் அனலைக் குறைக்குமா? என்னுடைய ஜெப ஜீவியத்தைத் தடை செய்யுமா? என் நேரத்தின் கிரம ஒழுங்கை குறைக்குமா? என கேள்வி கேட்டுப் பார்த்து, அப்படி நடக்குமாயின், அதனை மறுக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்தாலும் அதைப் பார்த்து நம் வழியை நிர்ணயிக்கவே கூடாது. இநநியமனத்தின்படி ஆண்டவர் என்னுடன் என்ன பேசுகிறார் என்பதுதான் பக்திவிருத்திக்கு முக்கியமாகும். 

பலவீனரைக் குறித்த நியமம்
“ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.“ (1 கொரி. 8:9) 
பலவீனர் என்பது கிறிஸ்துவுக்குள் இருக்கும் அதிகாரத்தை சரியாக விளங்கிக்கொள்ளாத கிறிஸ்தவர்களைக் குறிக்கும். பவுல் இருந்த காலத்திலே இது மோசேயின் நியாப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சிசெய்து கொண்டிருந்தவ்களைக் குறித்தது. நமது நடத்தை அப்படிப்பட்டவர்களை எவ்விதம் பாதிக்கும் என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும். இந்த நியமத்தை கடைப்பிடிக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கிறிஸ்துவில் உனக்கிருக்கும் சுயாதீனத்தினாலே நீ செய்யும் காரியம். சத்தியத்தை முழுவதும் அறிந்து கொள்ளாத ஒரு சகோதரனுடைய நம்பிக்கையை அசைக்கும்படி செய்துவிடக்கூடாது. இவ்விதம் சந்தேகம் விளைவிக்கும் காரியங்களை விட்டுவிலகுவது கிறிஸ்துவில் இருக்கும் சுயாதீனத்தை கைக்கொள்வதை விட சிறந்ததாகும். 

இரட்சிக்கப்படாதவர்களுக்கு முன் இருக்க வேண்டிய சாட்சியின் நியமம்.
 “நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.“(1 கொரிந்தியர் 10:33) என்ற வசனத்தில் காண்கிறோம். இது ஒரு முக்கியமான சத்தியம். எத்தனையோமுறை தேவனை அறிந்த சபை விசவாசிகளே இரட்சிக்கப்பட்டாதவர்களை தஙகளுடைய அற்பமான சாட்சியினால் ஆண்டவரிடம் இழுக்கமுடியாதபடி செய்துவிடுகின்றனர். இவ்விதம் கெடுதி செய்த பிறகு அவர்கள் மனதை மாற்றுவது மிகவும் கஷ்டம். இன்னார் ஒரு கிறிஸ்தவன் என்றால் அவரிடம் இருந்து எனக்கொரு உபதேசமும் தேவையில்லையே?  என்று இரட்சிக்கப்படாத ஒருவர் சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? நீ செய்யலாமா, செய்யக்கூடாதா என்று சந்தேகப்படும் காரியத்தினூடாக மற்றவர்களுக்கு நீ சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு இடையூறாக இருக்குமா? என்று சோதித்து விட்டு விலக வேண்டும். 

நல் மனசாட்சியின் நியமம
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.(1 தீமோத்தேயு 1:5) 
மனச்சாட்சியைப் பற்றி சாதாரண மனிதன் விளங்கிக் கொள்ளாத அநேக காரியங்கள் உண்டு. நம் மனச்சாட்சி நமக்கு பிழையற்ற வழிகாட்டியல்ல. அதுவும் தவறுவிடும். வேதாகமம்தான் பிழையற்ற வழிகாட்டி. இருந்தபோதிலும் ஒரு விசுவாசி தவறு செய்யு்ம்போது அது குற்றம் என்று காட்டுவதற்கு ஆண்டவர் அவனது மனசாட்சியை தெளிவாக உபயோகிக்கிறார். சிலவேளை மற்றவர்கள் ஒரு விவாசியை தீர்ப்பு செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனசாட்சி  நிச்சியமாகத் தீர்ப்பளிக்கும். 

ஒரு விசுவாசி ஆண்டவருடைய வார்த்தையில் வளரும்போது, அவனுடைய மனசாட்சி ஆண்டவருடைய சித்தத்தின் தூண்டுதலுக்கு மனம்கொடுக்க ஏவுகிறது. அவனுடைய மனசாட்சி மூலம்தான் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தைகளின் நியமங்களை கடைபிடிக்க ஏவுகிறார். ஆகவே, நான் செய்ய விரும்பும் காரியம் அல்லது செய்துகொ்ணடிருக்கும் காரியம் எனது மனசாட்சிக்கு கஷ்டம் கொடுத்துக் கொண்டிருக்குமேயாகில் அதை விட்டுவிலக வேண்டும். 

ஸ்தோத்தரிக்கும் நியமம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, (எபேசியர் 5:20) 
நாம் செய்ய விரும்பும் அல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு காரியத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்க முடியுமாதலால் அல்லது இந்த வார்த்தைகளைப் பேச முடிவதால் அல்லது இந்த இடத்திற்குப் போக வழியிருப்பதால் உம்மை துதிக்கிறேன்“ என்று சொல்ல முடிந்தால் அதைச் செய்யுங்கள். அவரை ஸ்தோத்தரிக்க முடியாவிட்டால் அந்தக் காரியத்தை ஏற்றுக்கொள்ளாதிருங்கள்.!

மேலே கூறப்பட்ட நியமங்களைத் தவிர, ஒரு விசுவாசிகளுக்கு வேறே நியமம் இல்லை என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும்ஈ சந்தேகம் விளைவிக்கும் காரியங்களுக்கு உண்மையாய் உபயோகிப்பாயாகில் உன் நடத்தை என்னவாயிருகு்க வேண்டும் அறிந்து கொள்வாய். ஆனால். நீ இதைச் செய்யாமல் இதனைச் செய்யும்படி, இன்னொரு கிறிஸ்தவ சகோதரனுக்கு அப்படியே  உபயோகிக்கிக்காதே. சகோதரர் ஒருவர் வேதாகமத்தில் செய்யக்கூடாது என்று திட்டமாய் சொல்லியிருப்பதை செய்வாரேயானால் மட்டுமே அது தவறு என்று தீரப்பு செய்து அவரை திருப்பவதற்கு முயற்சிசெய். இக்கட்டுரையிலே வேதாகமத்தில் கூறப்படாத காரியங்களை செய்வதைப் பற்றி கவனித்தோம். மற்றவர்களுக்கு தீர்ப்பு எடுக்கையில் மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 

நமக்கு ஆண்டவர் தகாதது என காண்பிப்பது மற்ற சகோதரர் ஒருவருக்கு தகாததாய் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக சில சாதாரண காரியங்கள் நம்மை பழைய பாவ ஜீவியத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியதாக நாம் அவைகளை தவிர்கக் முயலுவோம். அதே காரியங்கள் மற்றவர்களுக்கும் ஏறதல்ல என்று நாம் அவர்களை கண்டிப்பது தவறாகும். மேற்கூறிய நியமங்களை உன் ஜீவியத்தில் கையாண்டதினால் கிடைத்த அறிவுறுத்தல்களை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆத்திரப்படாதே. ஏனென்றால்  “நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே (ரோமர் 14:10)

தேவ ஆவியானவரின் தலைமையில் வாழும் வாழ்க்கை ஒரு விசுவாசியை ஒருநாளும் நியமங்களை மீறுவதற்கு இழுத்துச் செல்லாது. மாறாக அவனைத் தொடர்ந்து, தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்க உதவிசெய்யும். (ரோமர் 8:29) கர்த்தர் தாமு நம் ஒவ்வொருவரையும் நல்வழியில் நடத்துவாராக!




(நன்றி சத்தியவசனம் :- September - November 2011, கட்டுரையாசிரியர் டி.ஒ.ஹோவாட்)

Thursday 6 October 2011

இன்பமான மணவாழ்வுக்கு சின்ன சின்ன ஆலோசனைகள்







  • இருவரும் ஒரே சமயத்தில் கோபப்படாதீர்கள்



  • வீடு பற்றிக் கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்

  • வாக்குவாதத்தில் இருவரில் யாராவது பெற்றி பெற்றேயாக வேண்டுமென்றால் அது மற்றவராக இருக்கட்டும். 




  • ஒருவரை ஒருவர் அன்போடு விமர்சிக்கவும் 




  • கடந்தகால தவறுகளைச் சொல்லிக்காட்டாதீர்கள்

  • உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்

  • தூங்கப்போகுமுன்பே சண்டைபோட்டு முடித்துவிடுவது உத்தமம்

  • தவறுகள் செய்துவிட்டால், உடனே ஒப்புக்கொள்ளவும் மன்னிப்பு கேட்கவும் தயராகவே இருங்கள். 

  • சண்டைக்கு இரண்டு பேர் தேவைதான். எனினும் மற்றவர் கோபமாயிருக்கும்போது தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். 



சத்தியவசனம் July-Septermber 2006



Sunday 2 October 2011

தேவனுடைய ஒரே பேறான குமாரன் (யோவான் 3:16)




இயேசு கிறிஸ்து “தேவனுடைய ஒரேபேறான குமாரன்“ (45) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும், அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாக யெகோவா சாட்சிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது. எபிரேயர் 11:19 ஈசாக்கு ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் எனறு குறிப்பிடப்பட்டுள்ளமையால், ஆபிரகாம் ஈசாக்கை சரீரப்பிரகாரமாய் பெற்றது போலவே, யெகோவா தேவன் பெற்ற பிள்ளையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். என்றும், இதனாலேயே அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்று குறிப்பி்டப்பட்டுள்ளார்.“ என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (46) இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதனால் அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர், இதனால் அவரல் தேவனாக இருக்க முடியாது என்பதே இவர்களது தர்க்கமாகும். (47)

ஈசாக்கை ஆபிரகாம் பெற்றதுபோலவே தேவன் இயேசு கிறிஸ்துவைப் பெற்றார் என்றும் ஈசாக்கு ஆபிரகாமுக்கு குமாரனாய் இருப்பதைப் போலவே இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு குமாரனாய் இருக்கின்றார். என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது தேவனையே நிந்திக்கின்ற கூற்றுக்களாகும். இது இயேசு கிறிஸ்துவுக்கு “ஒரு பரலோகத் தகப்பன் இருப்பது போல பரலோகத்தாயும் இருக்கின்றாள் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. (48) இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் நிராகரித்து, யெகோவா தேவனைக் கனப்படுத்துவதாக நினைக்கும் யெகோவாவின் சாட்சிகள் இத்தகைய விளக்கங்களினால் யெகோவா தேவனையே நிந்திக்கிறவர்களாக இருக்கின்றனர். மேலும், “ஒரேபேறான குமாரன்“ எனும் சொற்பிரயோகத்தை பெற்றெடுத்த ஒரேயொரு பிள்ளை“ என்று யெகோவாவின் சாட்சிகள் விளக்குவது தவறாகும். ஏனென்றால், ஈசாக்கு ஆபிரகாமின் “ஒரேபேறான குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் அவன் ஆபிரகாமின் ஒரேயொரு பிள்ளையாக இருக்கவில்லை. ஆபிரகாமுக்கு வெறு பிள்ளைகளும் இருந்தார்கள். (ஆதி. 16:11, 25:1-6) ஆபிரகாமுடைய பிள்ளைகளில் ஈசாக்கு சிறப்பானவனாகவும், ஒப்பற்றவனாகவும் இருந்தமையினாலலேயே எபிரேயர் நிருபத்தில் அவன் ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் என்று குறிப்பிடப்டப்டிருப்பதற்கான காரணமாகும்.

வேதாகமத்தில் “ஒரேபேறான குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்தில்  இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்படவில்லை (49) “ஒரேபேறான“ எனும் வார்த்தை இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தையும் ஒப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. (50) அதாவது இயேசு கிறிஸ்துவைப் போல தேவனுக்கு வேறொருவரும் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதேபோல “குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்துடன் மட்டும் வேதாமக்கால மக்களால் உபயோகிக்கப்படவில்லை. உண்மையில் , இதை அறியாதவர்களே, இயேசு கிறிஸ்து தேவன் பெற்ற பி்ள்ளை என்றும், இதனால் , அவர் தேவனைவிட தாழ்வானவர் என்றும் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். (51)

வேதாகமத்தில் ஒருவருக்கு பிறக்காதவர்களும் அவருடைய பிள்ளையாகக் குறிப்பிடப்படடடிருப்பதை நாம் அவதானிக்கலாம். இதனால்தான் சாமுவேலை ஏலி “என் மகனே“ என்று கூப்பிட்டார். (1 சாமு 3:16) சவுல் தாவீதைத் தன் குமாரன் என்று அழைத்துள்ளார். (1 சாமு 26:17) (52) அதேபோல, ஆசிரியர் தன் மாணவரை “என் மகனே“ என அழைப்பதை நீதிமொழிகளில் நாம் அவதானிக்கலாம். (நீதி. 7:1) எனவே வேதாகமத்தில் “குமாரன்“ “மகன்“ எனும் பதங்கள் ஒருவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே உபயோகிக்க்பபட்டுள்ளது என்று கூறமுடியாது. இயேசு கிறிஸ்துவும் “தாவீதின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் தாவீதுக்குப் பிறந்தவர் என்பது இதனது அர்த்தமல்ல. (மத். 1:1)(53) வேதாகமத்திலுள்ள வம்சவரலாறு அட்டவணைகளிலும், இடைக்கிடையே சில தலைமுறைகள் விடப்பட்டுள்ள போதிலும், ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (54) மேலும், தீரக்ககதரிசியின் சீடர்கள் “தீர்க்கதரிசியின் புத்திரர்“ என்றும் (1 ராஜா 20:35) பாடகர் குழுவினர் “பாடகரின் புத்திரர்“ என்றும் (நெகே. 12:28) அழைக்கப்பட்டுள்ளனர். வேதாகமம் குமாரன் எனும் பதத்தை உருவகமாக உபயோகித்துள்ளதையும் நாம் அவதானிக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றினது தன்மை அல்லது குணத்தைக் குறிப்பிடுவதற்கு மகன் என்னும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, தீமையான மனிதன் “நியாயக்கேட்டின் மகன்“ (சங். 89:22) என்று குறிப்பிடப்பட்டுள்ளமயால், இவன் மனிதனுக்கல்ல. நியாயக்கேட்டுக்கு பிறந்தவன் என்று கூறமுடியாது. மேலும். யாக்கோபையும் யோவானையும் இயேசு கிறிஸ்து இடியின் புத்திரர் என்று அழைத்தபோது, இவர்களிருவரும் இடிக்குப் பிறந்தவர்கள் எனும் அர்தத்தில் அல்ல. மாறாக இவர்களது குணம் இடியின் தன்மையைக் கொண்டிருந்ததையே சுட்டிக் காட்டியுள்ளார். (மாற். 3;17) அதேபோல, பர்னபா “ஆறுதலின் மகன்“ என்று அழைக்கப்பட்டுள்ளமை (அப். 4:36) அவன் ஆறுதலுக்குப் பிறந்தவன் என்பதனால் அல்ல. மாறாக, அவன் மற்றவர்களுக்கு ஆறுதலளிப்பவனாக இருந்தமையினாலேயாகும். இதேவிதமாகவே இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று வேத்தில் குறிப்பிட்டிப்பட்டிருப்பற்குக் காரணம் அவர் தேவனுக்குப் பிறந்தவர் எனும் அர்த்தத்தில் அல்ல. மாறாக அவர் தேவத்தன்மையுடையவர் என்பதனாலேயாகும். 


கிரேக்க மொழியில் குமாரன் என்பதைக் குறிக்க பொதுவாக இண்டு வார்த்தைகள் உள்ளன. இவற்றில் ஒன்று சரீரப்பிரகாரமாகப் பிறக்கும் மகனை மட்டுமே குறிக்கும். ஆனால் மற்ற பதம், சரீரப் பிரகாரமான மகனை மட்டுமல்ல மற்றவர்களையும் மகனாக அழைக்க உபயோகிக்கப்படும் (55) புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று குறி்ப்பிடப்படும் இடங்களில். சரீரப் பிரகாரமான மகனை மட்டும் குறிக்கும் கிரேக்கப் பதம் அல்ல, மாறாக உருவகமாகவும் உபயோகிக்கப்படும் பதமே உள்ளது. இதிலிருந்து இயேசு கிறிஸ்து தேவத்தன்மையுடையவர் என்பதைக் குறிப்பிடவே அவர் தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதன் மூலம் “இயேசு கிறிஸ்துவின் வழமையான தேவத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (56) இயேசு கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானர் என்பதை இது எவ்விதத்திலும் காண்பிக்கவில்லை. அவர் தேவனுக்கு சமமானவராக, தேவத் தன்மையுடையவராக இருப்பதையே இவ்விவரணம் அறியத் தருகிறது. (57)

இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரனாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல (யோவான் 10:36) மற்றவர்கள் தம்மை இவ்விதமாக அழைத்தபோது அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. (மத். 26:63-64). தம்மைத் தேவனுடைய குமாரனாகவும் தேவனைத் தம்முடைய பிதாவாகவும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட போது அவர் தம்மைத் தேவன் என்று கூறுகிறார் என்றே யூதர்கள் விளங்கிக் கொண்டனர். “யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்று இயேசு கிறிஸ்துவின் மீது குற்றம் சாட்டினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து நேரடியாக, தாம் தேவன் என்று அவர்களிடம் கூறியிருக்கவில்லை. மாறாக, தம்மைத் தேவனுடைய குமாரன் என்றே அவர்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் யூதர்கள் இதன் மூலம் அவர் தம்மைத் தேவனாகக் காண்பிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். இதனால் தான் இயேசு கிறிஸ்து “நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே, தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?“ எனறு கேட்டார். (யோவான் 10:33-36) தேவனுடைய குமாரன் எனும் வார்த்தையின் மூலம்,  தம்மை தேவன் என்று கூறியமை, யூதர்களுக்கு தேவதூஷணமாக இருந்தமையினால் அதற்காக நியாய்பபிரமாணச் சட்டத்தின்படின் கல்லெறிந்து கொல்வதன மூலமாக அவருக்கு மரண தண்டனை கொடுக்க அவர்கள் முற்படடனர். (58தேவனுடைய குமாரன்“ என்னும் விபரணம் இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது. (59) 

Footnote and References 
(45) யோவானுடைய எழுத்துக்களில் ஐந்து தடவைகள் “மொனொஜெஸ்“ (monogenes) எனும் கிரேக்கப் பதம் இயேசு கிறிஸ்துவிற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. இது “ஒரேபேறான“ குமாரன் அல்லது “ஒரேயொரு குமாரன்“ என்று அர்த்தந்தரும் விதத்தில் ஆங்கில வேதாகமஙகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (யோவான் 1:14, 1:18, 3:18, 1 யோவான் 4:9) 

(46) Anonymous, Should You Believe in the Trinity, p.16

(47) Ibid, p16.

(48) R.M. Bowman, Why you Should You Believe in the Trinity?, p. 83

(49) L. Morris, Jesus is the Christ: Studies in the Theology of John, p. 92

(50) B.B. Warfield, The Persons and Work of Christ  p.56

(51) புராணங்களை அடிப்படையாகக் கொண்ட மதங்களில் இருக்கும் தகப்பன் பிள்ளை உறவு முறையை வேதாகமத்துக்குள் கொண்டு வருவது தவறாகும். 

(52) ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தான் அவனுடைய அடியானும் அவனுடைய குமாரனுமாயிருப்பதாக அறிவித்தான் (2 ராஜா  16:7)

(53) மத்தேயுவினுடைய சுவிசேஷத்தில் 9 தடவைகள் இயேசு கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மாற்குவிலும் லூக்காவிலும் மூன்று தடவைகளும் புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளில் மூன்று தடவைகளும் இப்பெயர் உள்ளது. “இப்பெயர் இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதை மட்டுமல்ல. அவர் மேசியா என்பதையும் சுட்டிக் காட்டும் பெயராய் இருந்தது. (G. Dalman, The Words of Jesus, pp 319-324) மக்கள் இப்பெயரில் அவரை அழைத்தபோது, மேசியாவாகச் செயற்படும்படியே அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது “மேசிய எதிர்பாரப்புடனேயே“ மக்கள் இப்பெயரை அக்காலத்தில் உபயோகித்துள்னர். (L. Morris, New Testament Theology p 126)

(54) உதாரணத்திற்கு மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் உள்ள வம்சவரலாறு அட்டவணை 14 தலைமுறைகள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு பிரிவிலும் 14 தலைமுறைகளைவிட அதிகத் தலைமுறைகள் இருந்துள்ளதை அறிந்திடலாம்.  தலைமுறைகள் விடுப்பட்டாலும் ஒருவன் இன்னுமொருவனைப் பெற்றான் என்றே மத்தேயு குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் யூதர்களுடைய மொழி வழக்கில் தகப்பன் பிள்ளை உறவுக்கு மட்டுமே வார்த்தைகள் இருப்பதேயாகும். தமிழில் இருப்பது போல பாட்டன், பூட்டன். பேரன், கொள்ளுப்பேரன் என்ற உறவுமுறைகளுக்கெல்லாம் தனியான வார்த்தைகள் அவர்களது மொழிவழக்கில் இருக்கவில்லை. “அவர்கள் அனைவருமே தகப்பன் மகன் உறவு முறையாலேயே குறிக்கப்பட்டனர். எனவே வம்சவரலாறு அட்டவணையில் பல தலைமுறைகள் விடுப்பட்டாலும், ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்று எழுதுவது அவர்களின் மொழிவழக்கில் தவறானதாக இருக்கவில்லை. (L. Morris, Mattew : The Pillar New Testament Commentary, p 22)

(55) இவற்றில் டெக்னொன்“ (teknon) எனும் பதம் சரீரப்பிரகாரமாக மகனை மட்டும் குறிக்கையில் “ஹூய்யெஸ்(huios) எனும் பதம் மகனாக வரும் ஏனைய உறவுகளையும் குறிக்கும். 

(56) J. McDowell, Jesus : A Biblical Defence of His Deity, p 75

(57) L. Boettner, Studies in Thelogy, pp 152-153

(58) லேவியராகமம் 24:16 இல இதைப்பற்றிய கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. 

(59) B.B. Warfield, The Person and Work of Christ p. 77


(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் எழுதிய யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)