- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 24 June 2013

வேதாகமத்தில் விபச்சாரத்தின் பாரதூரத் தன்மை

இன்றைய உலகத்தில் விபச்சாரம் மிக சாதாரணமானது என்று கருதப்படுவதால் வேதாகமம் இதனை எவ்வளவு பாரதூரமாகக் கருதுகின்றது என்பதனை குறித்து ஒரு குறிப்பை உள்ளடகத் தீர்மானித்து இருந்தேன். பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை, “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” (யாத். 20:12, உபா. 5:18) என்று சொல்கிறது. பழைய ஏற்பாட்டில் விபச்சாரத்திற்கான தண்டனை மரணம். (லேவி. 20:10-12, உபா. 22:22-25) பண்டைய கிழக்குலகிலே விபச்சாரமானது, விவாக துணைக்கெதிராகச் செய்யப்படும் பாவமாக மட்டுமே கருதப்பட்ட வேளையிலும் யோசேப்பும் தாவீதும் குறிப்பிட்ட பிரகாரமாய் (ஆதி. 39:9, சங். 51:4) வேதாகமம் அதனை தேவனுக்கெதிரான பாவமாகக் கருதுகின்றது. தாவீதின் விபச்சாரத்தைக் குறித்து நாத்தான் தேவனின் வார்த்தையை வெளிப்படுத்திய வேளையில் “இப்போது நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டபடியால் ….(2 சாமு. 12:10) என்று குறிப்பிடுகின்றார். 


பீட்டர் கிறேய்ஜி என்பவர் பத்துக் கட்டளைகளில் விபச்சாரமானது எமது கவனத்திற்கென தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கான காரணம், வேறு எவ்விதமான பிழையான உறவு போலல்லாது, இது உடன்படிக்கை உறவுக்கு  உண்மையற்றதாயிருப்பதாகும் எனக் குறிப்பிடுகின்றார். பழைய ஏற்பாட்டின் பிற்பகுதியில் விக்கிர ஆராதனையும் இஸ்ரவேலரின் சமயக்கொள்கை மீறல்களும் விபச்சாரத்திற்கு ஒப்பு உவமையாக விபரிக்கப்படுகின்றது. (ஏசா. 52:3, எரே. 3:8-9, எசே.23:43, ஒசி. 2:2) அதாவது, திருமணப்பிணைப்பு தேவனுக்கும் அவருடைய மக்களுக்குமிடையேயான பிணைப்பை பிரதிபலிக்கின்றது. அது மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சத்துடன் தொடர்புடையது. அதாவது, அது தேவனுடனும் துணையுடனும் பிணைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம். 

இஸ்ரவேல் சமூகத்துடன் தேவனுடைய உடன்படிக்கை உறவில் மிக முக்கியமான அம்சமாக குடும்பம் இருந்தது என்ற உண்மையின் நிமித்தம் விபச்சாரம் பாரதூரமானதாக இருக்கின்றது. தேவன் தம் ஜனங்களுக்காக, அவருடைய விருப்பங்களில் அநேகமானவற்றை குடும்பத்தினூடாகவே நிறைவேற்றியுள்ளார். தேவனுக்கும் மனிதடனான உடன்படிக்கை உறவிலும் ஒரு மனிதனுக்கும் அவன் மனைவிக்கும்இடையிலான உடன்படிக்கை உறவிலும் உள்ள ஒப்படைப்புக் கொள்கையை வேதாகமம் மிக முக்கியமானதாக் கருதுகின்றது. இந்தக் கொள்கையை மீறுதல், தேவன் மனிதர்களுடன் செயலாற்றும் விதத்தை மீறுதலுக்கு ஒப்பாகும். இது மிகவும் மோசமான குற்றச் செயலாகும். பெற்றோரைக் கனப்படுத்த வேண்டியதை தேவன் முன்னதாகவே பத்துக்கட்டளைகளில் உள்ளடக்கினார். ஏனெனில், இஸ்ரவேலுடனான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தேவனுடனானதும், குடும்பத்துடனானதுமான பிணைப்பில் இதுவும் ஒரு அம்சமாகும். 

1 கொரிந்தியர் 6:12-20 இலே பவுல் விபச்சாரம் பாரதூரமானது என்பதற்கு மற்றுமொரு ஆழமான காரணத்தைத் தருகின்றார். இந்தக் காரியம் கிறிஸ்துவுக்கும் எமது சரீரத்திற்கும் இடையில் மிகவும் நெருங்கிய பிணைப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் ஆனதாகும். பவுல் இந்தக் குறிப்பை பின்வரும் ஒரே பந்தியில் காணப்படும் நான்கு வாக்கியங்கள் ஊடாக வலியுறுத்துகின்றார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். (1 கொரிந்தியர் 6:13) உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? (1 கொரி. 6:15).  அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். (1 கொரி. 6:17).  உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்,… (1 கொரிந்தியர் 6:19) கிறிஸ்துவுக்கும் எங்கள் சரீரங்களுக்கும் இடையேயான இப்படியான பிணைப்பின் காரணமாக, “உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். ,… (1 கொரிந்தியர் 6:20) என்ற பவுல் சொல்லுகிறார். 

தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது “அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்ற ஆதியாகமம் 2:24 ஐப் பயன்படுத்தியே, பாலுறவு சரீரங்களை ஒரு சரீரமாக்கும் என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலான உறவு, கிறிஸ்துவுடனான எமது உறவின் ஒரு அம்சமாகும். இதனால், சரீரத்தின் ஒரு பகுதி கிறிஸ்துவுடன் ஒன்றாயிருப்பதை குலைக்கின்ற பிரகாரமாய் மற்றொருவருடன் ஒன்றாயிருக்கின்றது.  வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? (1 கொரிந்தியர் 6:16) என பவுல் கேட்கின்றார். இம் மனிதன் கிறிஸ்துவை நிராகரித்துவிட்டு அவரை ஒரு வேசியினால் மாற்றீடு செய்கிறான். 

எமது சரீரத்தினால் செய்யப்படும் மற்றப் பாவங்களைவிட விபச்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமானது என பவுல் சொல்லுகின்றார். “மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். (1 கொரிந்தியர் 6:18). குடிப்பது போன்ற மற்றைய பாவங்களும சரீரத்திற்கு எதிரானவையே. ஆனால் விபச்சாரமோ, குறிப்பாக முக்கியமாக சரீத்திற்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறது. எப்படியெனில், கிறிஸ்துவுடனோடு மட்டுமே ஒன்றாயிருக்க வேண்டிய தன்மையை வேறொருவருடன் ஒன்றாயிருக்கும்படி ஆக்குகின்றது. இப்படியான விபச்சாரத்தினூடாக ஒன்றாயிருப்பதை கிறிஸ்து வெறுத்து ஒதுக்குகின்றார். 

விசுவாசிகளின் சரீரம் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கின்றது என்பதனை நாம் முழுவதுமாக விளங்கிக் கொள்ளாவிடில் இவ் விடயங்கள் ஒன்றும் அர்த்தமுள்ளவையாகத் தெரியாது. மாணவனொருவன் வாகனத்தைச் செலுத்துகையில் பாடசாலையின் அதிபர் முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மாணவன் வாகனத்தை ஓட்டும் மற்றச் சாரதிகளைத் தூஷித்து சாலை விதிகளை மீறுவானானால் எப்படி இருக்கும்? அதிபருக்கு அது எவ்வளவு அவமதிப்பாயிருக்கும். விபச்சாரமானது கிறிஸ்துவுக்கு இதையும்விட அதிகமான அவமதிப்பை ஏற்படுத்தும். வாகனத்திலிருந்த (எமது சரீரம்) கிறிஸ்துவை உதைத்துத் தள்ளிவிட்ட தன்மைக்கு ஏற்ற ஒரு செயற்பாடாக இதனைக் கொள்ளலாம். 

விபச்சாரத்தினால் ஏற்படும் பாரதூரமான உலகியல் விளைவுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. “இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். (2 சாமுவேல் 12:10) என்று தாவீதுக்கு சொல்லப்பட்டது. இதுவே தாவீதுக்கு நடந்தது. தேவனுடனான அவனது உறவு சீர்படுத்தப்பட்டது என்று சங்கீதம் 51:12 இல் அவன் விரும்பிக் கேட்ட இரட்சணியத்தின் சந்தோஷம் கிடைத்தது என்றும் நான் நம்புகிறேன். ஆனால் அவனது குடும்ப சரித்திரமோ விபச்சாரத்திற்குப் பின் அதிக மோதல்களை உடையதாக இருந்தது. 

இன்றும் இது உண்மையானதாகவே உள்ளது. துணையானவள் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் காயத்துடனேயே வாழ வேண்டும். பிள்ளைகள் இக்காயத்துடன் வாழ்வது மட்டுமல்ல அவர்களுடைய பெற்றோர் செய்த காரியத்தின் காரணமாக கோபத்துடனும் வெட்கத்துடனும் வாழ்வார்கள். 

தேவன் எமது பாவங்களை மன்னிக்கும்போது அதனை மறந்து போனாலும் மனிதர்கள் மறப்பதில்லை. இது அந்த மனிதனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவே இருக்கும். இந்த விபச்சார உறவில் இன்னுமொரு நபரும் இருக்கிறார். அவரும் மிகவும் ஆழமாகக் காயப்பட்டிருக்கிறார். ஒரு போதகர் இளம் நங்கையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் பின்னர் உண்மையான மனந்திரும்புதலின் காரணமாக தனது மனைவியுடன் தனது ஊழியத்திலும் மீண்டும் இணைந்து கொண்டார். ஆனால் அநேக வருடங்களின் பின்னர் அந்த இளம் நங்கை ஒரு விபச்சாரியாகிவிட்டாள் என்ற அவர் அறிந்து கொண்டார். 

இறுதியாக விபச்சாரமானது விசேடமாக ஒரு தலைவனால் செய்யப்பட்டிருந்தால் அது சபையில் அல்லது நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் குழப்பமடைந்தவர்களாயும் சோர்வற்றவர்களாயும் ஆகிறார்கள். காரணம், அவராலேயே முடியாமற்போனால் எங்களுக்கு என்ன நம்பிக்கை உள்ளது என்ற சிந்தனையேயாகும். உறுப்பினர்கள் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த்த்தன் காரணமாக, தலைவர்களைக் குறித்து அதிகப்பட்டியான குழப்பமும் கோபமும் அடைகிறார்கள். தலைமைத்துவம் தவறிழைத்தவருக்கு எதிராக ஒழுக்காற்றல் நடவடிக்கை எடுக்கும்போதே அல்லது சரியாக எடுக்காமல் விடும்போதோ, உறுப்பினர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் குழுக்களாகப் பிரிவதன் காரணமாக உறுப்பினர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் உடைக்கப்படுகின்றது. 

ஆபத்திலிருந்து விலகியோடப் பயன்படுத்தும் பதத்தைப் பாவித்து பவுல், “வேசித்தனத்திற்க விலக்கியோடுங்கள்(1 கொரி. 6:18) என்று சொல்லுகிறார். கொள்ளை நோயை நாம் தடுப்பதுபோல இதனைத் தடுக்க வேண்டும். காட்டுத் தீயை விட்டு நாம் தப்பியோடுவதுபோல் அல்லது எம்மை தாக்கி அழிக்கப் பார்க்கும் ஒரு மிருகத்திடமிருந்து தப்பியோட வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. நாம் சோதிக்கப்படும்போது நாம் அதனைவிட்டு பயத்தோடு ஓட வேண்டும். ஊழியத்திலுள்ள எனது நண்பரொருவர் விபச்சார பாவத்தில் விழுந்துபோன தனது முன்னாள் மூத்தக போதகரிடம், இளம் போதகர்களுக்கு அவர் கொடுக்கும் ஆலோசனை என்ன என்று கேட்டார். அவரோ, “அதனைச் செய்ய வேண்டாம் என எளிமையாகச் சொன்னார்.



இவ்வாக்கமானது Dr. Ajith Fernando (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்



Friday 21 June 2013

டெய்லரும் அருட்பணியும்

சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபகரான ஹட்சன் டெய்லர் என்பவர் நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்தபோதே, “நான் பெரிய மனிதனாகும்போது மிஷனரியாக சீனாவுக்குப் போவேன்" என்று அடிக்கடி கூறுவாராம். அவருடைய 17 வயதில் ஒரு துண்டுப்பிரதியை வாசித்து அதற்கூடாக இரட்சிக்கப்பட்டார். ஒருநாள், “எனக்காக சீனாவுக்குப் போ” என்ற கட்டளையைப் பெற்றார். ஒரு குரல் பேசியதைப்போலவே அது இருந்தது, அவர் அதற்கு தன்னை ஆயத்தம் பண்ணத் தொடங்கினார். அவர் சீனா சம்பந்தமான புத்தகங்களை வாசித்ததுடன் தனது பணிக்கு மருத்துவம் பெரிதாகப் பங்களிக்குமென எண்ணி, ஒரு வைத்தியரின் கீழ் வைத்தியம் கற்றார். அக்காலத்தில் தன் உணவுக்குக் கூட தேவனை நம்புவதற்குக் கற்றுக் கொண்டார். தனது ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொடுத்துதவுமளவிற்கு எளிய வாழ்க்கை நடத்தினார். சீனாவில் கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கத்தக்கதாக தன்னை ஆயத்தப்படுத்தினார். 

1853இல் சீனாவுக்கு போய் சுமார் ஏழு வருடங்கள் இருந்தவர், சுகயீனம் காரணமாக வீட்டுக்குத் திரும்பினார். வைத்தியத் துறையில் தன்னை சிறப்பாக்கிக் கொண்டதுடன் சீனருடைய வாழக்கைமுறையுடன், அவர்களது உடையையும் அணியத் தொடங்கினார். 1858இல் மரியா டைய்யர் என்பவரை மணம்முடித்து, ஆறு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆனார். மூன்று குழந்தைகள் மரித்தனர். 1870இல் மனைவியும் மரித்துவிட்டார். சில முரண்பாடுகள் காரணமாக சீன சுவிஷேச சங்கத்திலிருந்து விலகிய ஹட்சன் டெய்லர், சீனாவுக்கு மிஷனரிகள் எழும்பவேண்டுமென பாரப்பட்டார். ஒருநாள் பிரைட்டன் என்ற இடத்தில் நண்பரோடு தங்கியிருக்கையில், தனது வேதாகமத்தை எடுத்து, பிரிட்டனில் 24 திறமைமிக்க ஊழியர் வேண்டுமென ஜெபித்தார். இரண்டு நாட்களுக்குப் பின்பு ஒரு வங்கியில் 10 மாரக் பணத்தையிட்டு  “சீன உள்நாட்டு மிஷன்” என்ற பெயரில் கணக்கொன்றை ஆரம்பித்தார். 18 மிஷனரிகளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சீனாவில் சங்காய்க்குப் போய் ஊழியம் செய்தார். 1866இல் இரண்டாக இருந்த மத்திய ஸ்தாபனம் 1872இல் 13 ஆகவும், 1884இல் 20 அதிகமாகவும் 80-90 இடைப்பட்ட மிஷனரிகளையும் சுமார் 100 உதவியாளர்களையும் கொண்டதாக வளர்ந்த்து. 1890இல் 10000 ஊழியர்களுக்காக ஜெபித்தபோது 1153 பேர் முன்வந்தனர். பெண் ஊழியர்களும் ஊழியத்தில் சேவையாற்றினர். 

சீன உள்நாட்டு மிஷனரி சங்கத்தில் ஊழியர்கள் அதிகரிக்க அதிகரிக்க பணத்தேவையும் அதிகரித்தது. தேவஊழியத்திற்கு தேவனுடைய சந்திப்புக்கள் ஒருபோதும் குறைவாக இருந்த்தில்லை. டெய்லர் தன் தேவைகளுக்காக தேவனை மாத்திரமே நம்பியிருந்தார். அவரை உற்சாகப்படுத்திய இரண்டு வேதாகமச் சொற்கள் “எபனேசர்”, “யெகோவாயிரே” என்பனவாகும். 

ஹட்சன் டெய்லர் வெளிநாடுகளுக்குச் சென்று சீனாவில் நடக்கும் ஊழியங்களைப் பற்றிக் கூற அநேகர் பணஉதவி செய்ததுடன் ஆண்களும் பெண்களும் தங்களை ஊழியத்திற்கு ஒப்புக் கொடுக்கவும் செய்தனர். பல எதிரப்புகள் மத்தியில் ஊழியம் வளர்ந்தது. 1900 ஆண்டு பெக்சர் புரட்சியின் போது 58 மிஷனரிகளும் 21 பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். இந்தக் காரியமானது, அவ்வேளையில் லண்டனில் இருந்த ஹட்சன் டெய்லரை பெரிதும் கவலைக்குள்ளாக்கியது. சிறிது காலத்தின்பின் சீனா சென்ற ஹட்சன் டெய்லர் சுகவீனம் காரணமாக ஒருவருடத்தின் பின் மரித்துவிட்டார். 

ஹட்சன் டெய்லர் முதன்முறையாக மிஷனரியாகப்போக எண்ணியபோது, ஒரு வயதானவர் அவரை எச்சரித்து, “உன்னைத் தாங்க ஒரு ஸ்தாபனமும் இல்லாத நிலையில் சீனா செல்வதால் பெரிதான ஒரு தவறை நீ செய்கிறாய் இந்த மிஷன் ஏழு வருடங்கள் கூட நிலைக்காது என்றார். ஆனால், அவரது கணிப்பு தவறாக இருந்தது. சீன உள்நாட்டு மிஷன் ஆற்றிய சேவை அளப்பெரியது. அதுவே சபை சார்பற்ற முதல் மிஷனரி சங்கம் எனலாம். அது இங்கிலாந்திலிருந்து அல்ல, சீனாவிலிருந்தே இயங்கிய சங்கம். அது விசுவாசத்தில் இயங்கிய சங்கம். எந்தப் பெரிய அர்ப்பணம் அது. 

நாம் தேவனை நம்பி தேவனுக்குக் கீழ்ப்படிந்து தேவ ஊழியத்தில் இறங்குகையில் தேவன் எம்மோடு இருப்பதுடன், எமது எல்லாத் தேவைகளையும் சந்திக்கின்றார். “தேவனுடைய வழியில் செய்யப்படும் தேவ ஊழியத்திற்கு தேவனுடைய சந்திப்புக்கள் ஒருபோதும் குறைவாக இருந்ததில்லை” இந்த அனுபவம் எனக்குண்டா? ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையில் காணப்பட்ட விசுவாசமும் உனது வாழ்க்கையில் உண்டா? உனது நாளாந்த தேவைகள், ஊழியத் தேவைகள், தேவ வழியாக அவருடைய சித்தத்தின்படி அமைந்திருக்குமானால் நீ ஒருபோதும் கலங்கத் தேவையில்லை. ஏனெனில் எல்லாவற்றையும் அவரே சந்தித்து, உன் குறைவுகளை தமக்குள் அவரே நிறைவாக்குவார். அந்த விசுவாசத்துடன் உன்னுடைய ஓட்டத்தை ஓடு. 

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். (பிலிப்பியர் 4:19)(திருவிவிலியம்)


Tuesday 18 June 2013

அனுப்பாவிட்டால் எப்படி….?


வில்லியம் கேரி அவர்கள் மிஷனரி தாகமுள்ளவராக, மிஷனரி ஊழியத்தின் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கு ஒப்புக்கொடுக்கும்படி சவாலான உரைகளை நிகழ்த்தினார். இதற்காக ஒரு மிஷனரி சங்கமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எவரும் முன்வரவில்லை. அப்பொழுது நடந்த்து என்னவென்பதை ஜெ.பி. புறூக் என்பவர் இவ்வாறு வர்ணிக்கின்றார்.


“இதுகாறும் யாரேனும் ஒருவர் சுவிஷேசகனாக அயல்நாடு செல்ல வேண்டும்” என்ற எண்ணம் கொண்டிருந்த வில்லியம் கேரியின் இருதயத்தில் திடீரென ஒரு ஒளி மிளிர்ந்தது. ஒரு எண்ணம் மலர்ந்தது.  “மற்றவர்கள் போக வேண்டும் என்று கூறிவருகிறேன். நான் ஏன் போகக் கூடாது, மிஷனரி ஊழியத்திற்கு நானே செல்லாவிட்டால் வேறு யார் செல்வார்? நான் செல்ல முடியாத இடத்திற்கு பிறர் போகவேண்டுமென்று இனி நான் வாதிடுவது தவறு. “சுவிசேஷசத்தைப் பிரசங்கியாவிட்டால் உங்களுக்கு ஐயோ“ என்று பிறரைப் பார்த்து அறைகூவல் விடுகிறேனே; சுவிஷேசத்தைப் பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ இல்லையா? நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிஷேசத்தைப் பிரசங்கியுங்கள் என்று இயேசு கூறியபோது என்னையும் சேர்த்துத்தானே” கூறியுள்ளார். ஆகவே, உடனே, ஓடிச்சென்று கிறிஸ்துவின் பாதத்தில் வீழ்ந்து, “ஆண்டவரே, இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்” என்று வேண்டிக்கொள்வேன்.“ என்று தீர்மானித்தார்.

அதன்படி வில்லியம் கேரி அவர்கள் இந்தியாவிற்கு மிஷனரியாகப் போய் பலவித இன்னல்கள் மத்தியிலும் சோர்ந்துபோகாமல், அரும்பாடுபட்டு இந்தியருக்கு கிறிஸ்துவை அறிவித்தார். வேதவசனம் இந்திய மொழிகளில் இந்திய மக்களை அடையவேண்டுமெனப் பெரும்பாடுபட்டு, சுமார் 40 மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். வில்லியம் கேரி அவர்கள் தேவனுடைய அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு மிஷனரியாகச் சென்றதால் அநேக இந்தியர்கள் கிறிஸ்துவை அறிய ஏதுவாயிற்கு. இன்றும் சுவிஷேசம் அறிவிக்கப்படாத, ஒருமுறையேனும் இயேசு என்ற நாமத்தைக் கேள்விப்பட்டிராத அநேக நாடுகளும். அநேக பட்டணங்களும் கிராமங்களும், மக்களும் உண்டு. இவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைச் சொல்ல ஆட்களை அனுப்பும் என்று ஜெபிப்பதில் தவறில்லை. ஆனால்  “என்னை நற்செய்தியை அறிவிக்க அனுப்பும் ஆண்டவரே” என்று ஏன் நாம் எம்மை ஒப்புக் கொடுக்க கூடாது. மிஷனரி ஊழியத்தைச் செய்ய தேவன் உன்னையும்  அழைக்கின்றார் என்பதை இன்று நீ உணருவாயானால் அதற்கு ஆயத்தமாக நீ செல்வாயா?

பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? (ரோமர் 10:14-15)



Wednesday 12 June 2013

இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு. (மத். 8:4)

இயேசு கிறிஸ்துவினுடைய கூற்றுக்களில் இன்று அநேகருக்கு குழப்பதை ஏற்படுத்தியுள்ள வார்த்தைகள், அவர் தான் செய்த அற்புதங்களைப் பற்றி எவருக்கும் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்திய கட்டளையாகும். உதாரணத்திற்கு குஷ்டரோகி ஒருவனைக் குணமாக்கிய அவனிடம், “இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு“ (மத். 8:4) என்று கட்டளையிட்டார். (மாற். 1:43) அதேபோல் அசுத்த ஆவிகளைத் துரத்தும்போதும் இயேசு “தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாக கட்டளையிட்டார். (மாற். 3:12) மேலும், மரித்த சிறுமியை உயிரோடெழுப்பிய பின்னர் தான் செய்த அற்புதச் செயலை “ஒருவருக்கும் அறிவியாதபடி ……. உறுதியாக கட்டளையிட்டார். (மாற். 5:43) இயேசுவின் இத்தகைய அறிவிப்பை சுவிஷேசப் புத்தகங்களில் பல தடவைகள் வாசிக்கலாம். (மத். 9:30, 12:16, 16:20, 17:9, மாற். 7:36, 8:26, 9:9) இத்தகைய கூற்றுக்களை வாசிப்பவர்கள் அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்பதை அறியாமல், இயேசுவின் வார்த்தைகள் அறிவீனமானவைகள் எனக் கருதுகின்றனர். 



இயேசு கிறிஸ்து வாழ்ந்த பிரதேசத்தை கருத்திற் கொள்ளாமல் அவரது கூற்றுக்களை விளங்கிக் கொள்ள முற்படும்போதே அவை அறிவீனமானவைகளாகத் தென்படும். ஆனால், இயேசுவின் காலத்தைய பாலஸ்தீனவின் அரசியல் பொருளாதார மற்றும் மார்க்க விடயங்களைக் கருத்திற் கொள்ளும்போது அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை அறிந்திடலாம். உண்மையில்,மக்கள் தன்னைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இயேசு அற்புதங்கள் செய்யும் ஒருவராகப் பிரபல்யமடைய விரும்பவில்லை.(1) ஏனென்றால் அத்தகைய பிரபல்யம் பாலஸ்தீனாவில் அரசியல் பிரச்சினைகளைத் தோற்றவிக்க் கூடியதாக இருந்தது. இதனாலேயே தான் செய்த அற்புதங்களைப் பற்றி எவருக்கும் சொல்ல வேண்டாம் என இயேசு கட்டளையிட்டார். (2)

இயேசு கிறிஸ்துவினுடைய காலத்தில் அவர் வாழ்ந்த பலஸ்தீனா, ரோம சாம்ராட்சியத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது.(3) எனினும் யூதர்கள் மறுபடியும் தமக்கு சுயாதீன ராட்சியம் கிடைக்கும் எனும் நம்பிக்கையுடையவர்களாக, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு(4). தம்மை விடுவிப்பதற்குத் தேவனால் அனுப்பப்படும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இயேசு இவ்வுலகிற்கு வந்த காலம் யூதர்களைப் பொறுத்தவரை மேசியா வரும் காலமாகவே இருந்தது. எச்சந்தர்ப்பத்திலும் மேசியா வந்துவிடலாம் எனும் எதிர்பார்ப்புடன் மக்கள் அக்காலத்தில் இருந்தனர்.(5). மேலும், தேவனால் அனுப்ப்படும் மேசியா அற்புத அடையாங்களுடன் வெளிப்படுவார் என்றும், தமது முதற்பிதாக்களை மேசே எகிப்தின் அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தது போல வரவிருக்கும் மேசியா அற்புதச் செயல்கள் மூலம் தம்மை ரோமஅடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என நம்பினர். இதனால், தான் அற்புதங்கள் செய்பவராகப் பிரபல்யமானினால், யூதர்கள் தன்னை அரசியல் ரீதியான ராஜாவாக கருதி, ரோம அரசுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் என்பதனால், பல தடவைகள், தான் செய்த அறபுதங்களைப் பற்றி எவருக்கும் சொல்ல வேண்டாம் எனக் கட்டளையிட்டார். 

“மேசியாவை யூதர்கள் அரசியல் ரீதியான இரட்சகராகவே எதிர்பார்த்தனர். (6). வரவிருக்கும் மேசியா தம்மை “ரோம அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து தமக்கு ஒரு சுயாதின ராட்சியத்தை உருவாக்கிக் கொடுப்பார் என்றே அவர்கள் எண்ணினார்(7). இயேசுவின் அற்புதங்கள் அவர் தேவனால் அனுப்பப்படும் மேசியாவாகய் இருப்பாரோ எனும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. இயேசு கிறிஸ்து ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த சம்பவம் அக்கால மக்களின் இத்தகைய மனநிலையை நமக்கு அறியத் தருகின்றது. இயேசு இவ்வற்புதத்தைச் செய்த பின்னர் “அவர்கள் (மக்கள்) வந்து தம்மை ராஜாவாக்கும்படி பிடித்துக் கொண்டு போக மனதாயிருக்கிறார்கள்“ என்று இயேசு அறிந்து மறுபடியும் விலகி தனியே மலையின் மேல் ஏறினார்“ என்று யோவான் 6.15 இனால் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதர்கள் மேசியாவை அரசியல் ரீதியான தலைவராக எதிர்பார்த்தமையால், தான் ஒரு அரசியல்வாதி எனும் எண்ணம் மக்கள் மத்தியிலிருந்து நீங்கும் வரை அதாவது சிலுவை மரணம் வரை தான் மெசியா என்பதை யூதர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.(8). இயேசுவின் அற்புதங்கள் அவரை அரசியல் ரீதியான மேசியாவாக மக்களுக்கு கண்பித்தமையால்(9). அவர் தான் செய்த அற்புதங்களைப் பிரபல்யப்படுத்த விரும்பாமல் அது பற்றி யாருக்கும் கூற வேண்டாம் என்று கட்டளையிட்டார். 

குறிப்புகள்
1. Leon Morris, The Gospel According to Mathew, p. 190

2. Donal A.Hagner, Matthew 1-13 p. 199

3. ரோமர்கள் கி.மு. … பலஸ்தீனாவைக் கைப்பற்றி அதைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இயேசு பிறந்த காலத்தில் ஏரோதுவும் அதை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இயேசு பிறந்த காலத்தில் ஏரோதுவும் அதன் பின்னர் அவனுடைய பிள்ளைகளும் பாலஸ்தீனாவை ரோமர்களுக்காகவே ஆண்டு வந்தனர். 

4. பழைய ஏற்பாட்டில் வரவிருக்கும் மேசிய யுகம் யூதர்களுக்கு வளமானதும் ஆசீர்வாதம் மிக்கதுமான காலமாக முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (ஏசா. 26-29, எசே. 40-48, தானி. 12, யோவே. 2:28- 3:21) இரு ஏற்பாடுகளுக்குமிடைப்பட்ட காலத்தில், மேசியா தாவீதின் வம்சத்தில் வரும் ராஜாவாக, இஸ்ரவேலரின் எதிரிகளை அழித்து, அவர்களுக்கு ஒரு உலக ராட்சியத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர் எனும் எதிர்பார்ப்புடனேயே யூதர்கள் இருந்தனர். (Donald Guthire, New Testament Theology, Leicester : Inter Varsity Press, 1981, p. 237) 

5. இதனால்தான் கிழக்கில் தோன்றிய நட்சரத்திரத்தைப் பற்றி ஆராய்ந்த ஏரோதுவின் அரசியல் ஆலோசகர்கள், யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என உடனடியாக கூறக்கூடியவர்களாயிருந்தார்கள். (மத். 2:3-5). அதுமட்டுமல்ல யோவான் ஸ்நானகனின் ஊழியத்தைப் பார்த்தவர்கள் அவன் மேசியாவாயிருப்பானோ என எண்ணத் தொடங்கினர். (லூக். 3:15) இதனால் அவன்தான் மேசியா அல்ல என அறிக்கையிட வேண்டியதாயிருந்த்து. (யோவான். 1:20) இயேசுவின் ஆரம்ப சீடர்கள் அவர் மேசியா என்றே முடிவுகட்டி விட்டனர். (யோவா. 1:41)

6. S. Mowwnckel, He That Cometh, Oxford : Oxford University Press, 1959, p.7

7. Donald Guthrie, New Testament Theology, p. 238

8. Ibid. p. 240 சமாரியர்கள் மத்தியில் மேசியாவைப் பற்றிய இத்தகைய அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகள் இராதமையினாலோயே இயேசு தன்னோடு உரையாடிக் கொண்டிருந்த சமாரிப் பெண்ணுக்கு தான் மேசியா என்பதை வெளிப்படுத்தினார். (யோவான். 4:25-26)

9. மேசியா எங்கிருந்து வருவார் என்பதைப் பற்றி எவருக்கும் தெரிந்திருக்காது என்று யூதர்கள் கருதியாமையாலேயே இயேசுவின் வாழ்விடத்தை அறிந்திருந்த சில யூதர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. (யோவான். 7:25-27) எனினும் வரவிருக்கும் மேசியா அற்புதங்கள் செய்வார் என்பதில் அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. (யோவான். 7:31)  

 
நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - Dr. M.S. வசந்தகுமார்.  

Friday 7 June 2013

யாரை நான் அனுப்புவேன்?

ஆண்டவருடைய மகிமையைக் கண்ட ஏசாயா, தன் பாவநிலையை உணர்ந்து கொண்டார். தேவன் அவரைச் சுத்திகரித்து அழைப்பு விடுத்தபோது அந்த அழைப்பை ஏற்று தன்னை அர்ப்பணித்தார்.


ஸ்கொட்லாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்து, பல வருடங்களாக மிஷனரியாகப் பணிபுரிந்த ஒருவர், தனது நாட்டிற்குத் திரும்பி போய் “மிஷனரி ஊழியஞ்செய்ய இந்தியாவிற்குப் போகிறவர் யார்? என்று மிஷனரி ஊழியத்தை குறித்து ஒரு சவால் கொடுத்தார். ஆனால் ஒருவரும் மிஷனரியாகப் போக முன்வரவில்லை. அதைக் கண்ட அவர் மயக்கமடைய, மேடையைவிட்டு அவரைக் கொண்டுபோக நேர்ந்தது. அவர் சிறிது நேரத்தில் தன்னை மீண்டும் மேடைக்குக் கொண்டு போகுமாறு கூறினார். வைத்தியர் ஒருபுறமும், அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர் மறுபுறமுமாக அவரைத் தாங்கி நிற்க, அவர் அக்கூட்டத்தில் பேசத் தொடங்கினார். 

“ராஜ சேவைக்காக இந்தியாவிற்குப் போகக் கூடியவர்கள் யார்? என்று விக்டோரிய ராணி கேட்டபோது, நூற்றுக்கணக்கான வாலிபர்கள் நான் போகிறேன் எனக் கூறி முன்வந்தனர். இன்று இயேசு ராஜா அழைக்கின்றார். ஆனால், ஒருவரும் பதிலளிக்கவில்லையே“ எனக சத்தமிட்டுக் கூறிவிட்டு, சில விநாடிகள் அமைதியானார். பின்னர் திரும்பவும், “இந்தியாவிற்கு அனுப்ப ஸ்கொட்லாந்து தேசத்தில் ஆண்மக்கள் இல்லையா? நல்லது. இந்தியாவிற்கு அனுப்ப ஸ்கொட்லாந்து தேசத்தில் யாரும் இல்லையென்றால், நான் வயோதிபனாயும் பெலவீனனாயும் இருந்தாலும் திரும்பிப் போவேன். நான் பிரசங்கம் செய்ய இயலாதவன். ஆனாலும், கங்கை நதியில் படுத்திருந்து சாவேன். அப்படிச் செய்வதனால் தங்கள் ஆத்துமாக்களுக்காக கவலைப்பட்டு தன் ஜீவனைக் கொடுக்க ஸ்கொட்லாந்தில் ஒரு மனிதனாவது இருக்கிறான் என்பதை இந்திய மக்கள் அறிந்துகொள்ளட்டும்.” என்று கூறி தன் பேச்சை முடித்தார். கூட்டத்திலுள்ள வாலிபர்கள் தீவிரமாய் எழுந்து, “நான் போவேன்! நான் போவேன்! என்றனர். அநேக வாலிபர்கள் இந்தியாவிற்கு வந்து மிஷனரி ஊழியமும் செய்தனர். 


இதனை வாசிக்கும் நண்பனே, உன் செவிகளில் அந்த மிஷனரி அழைப்பு கேட்கின்றதா? இன்னமும் தேவனை அறியாமல் மரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தேவனுடைய அன்பையும் இரட்சிப்பின் வழியையும் அறிவிக்க நீ முன்வருவாயா? தேவனுடைய அழைப்பின் சத்தத்திற்கு “இதோ அடியேன், என்னை அனுப்பும்“ என்று உன்னை நீயே ஒப்புக் கொடுக்க உன்னால் முடியுமா?  


பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.(ஏசாயா 6:1-8)

Monday 3 June 2013

அருட்பணிக்கு அர்ப்பணம்

மேற்கிந்திய தீவுகளில் ஏராளமான கறுப்பினத்தவர்கள் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மிருகங்களைப் போல் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டார்கள். அடிமைகள்  மத்தியில் மிஷனரிமார்கள் பணி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடிமையாக இருந்த ஒருவன் தன் எஜமானால் ஐரோப்பாவிற்குக் கொண்வரப்பட்ட போது அவன் கிறிஸ்துவை அறிந்தான். அத்தோடு அடிமைகளாக இருப்பவர்களுக்கும் கிறிஸ்துவை அறிவிக்கப் பிரயாசைப்பட்டான். மொரோவிலிருந்த விசுவாசிகளின் ஐக்கியத்தைச் சேர்ந்த சின்சன்டோ இவரது சாட்சியைக் கேட்டு தனது ஐக்கியத்திலும் அந்த சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். இரண்டு வாலிபர்கள் துள்ளி எழுந்து மிஷனரிகளாகப் போகத் தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அந்த அடிமையை அவர்கள் சந்தித்துப் பேசியபோது “மிஷனரிகளாக அங்கு யாரும் போகமுடியாது. மிஷனரிமார்கள் ஒருவரும் அங்கு வரக்கூடாது என் தீவின் அதிபதி கங்கணங் கட்டியிருக்கிறான்” என்றான். “அப்போ நாம் அடிமைகளாகப் போவோம்” என்றார்கள் அவர்கள்.


அந்த அடிமையானவன் சிரித்துக் கொண்டே, “கொஞ்சம் பொறுங்கள். அடிமை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதோ பாருங்கள்” என்று தன் சட்டையைக் கழற்றி, தன் முதுகைக் காட்டினான். அந்த முதுகிலே இரும்பு ஆணியைக் கொண்டு கீறியதைப் போன்ற பயங்கரமான தழும்பு காணப்பட்டது. “அடிமை என்றால் இப்படித்தான் வாரினால் அடிக்கப்படுவர். சிறு குற்றங்களுக்குக் கூட மரக்கட்டையில்மேல் கிடத்தி வாரினால் அடிப்பார்கள். இப்படி அடிக்கப்பட்டதினாலேயே என் முதுகு உழுதநிலம்போல இருக்கின்றது.” எனக்கூறி “இதற்கு நீங்கள் ஆயத்தமா?” என்றான். அவ்விருவரும் தங்கினார்கள். 


அன்றிரவு அவர்கள் இருவருக்கும்  தூக்கமே வரவில்லை. ஒரு பக்கத்தில் அந்த அடிமையின் முதுகிலுள்ள தழும்புகள். அவற்றைப் பார்க்கவே அவர்களால் சகிக்கமுடியவில்லை. மறுபக்கம் ஆண்டவரின் வதைக்கப்பட்ட முகம், முள்முடி சூட்டப்பட்ட தலை, அவரது கன்னங்களிலே வடிந்தோடும் இரத்தம், அன்பு கலந்த வேதனை நிறைந்தமுகம், இவ்விரண்டுக்கும் நடுவிலே அவ்விரு வாலிபர்களும் அன்றிரவு சிக்கித் தவித்தனர். இதனால், தூக்கம் வரவில்லை. பொழுதுவிடியும் நேரத்தில் முடிவு செய்துவிட்டனர். “ஆண்டவரே உமக்காக நாம் அடிமைகளாகச் செல்கிறோம். இந்த உடலை நீர் தந்தீர். அது உமக்காகவே பயன்பட வேண்டும்.” என்று கூறி தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். 


மொரேவியன் மிஷனரி வாலிபர்கள் இருவரும் புறப்படும் நாள் வந்தது. ஹேம்போக் துறைமுகத்தின் கப்பலிலே இவ்விரு வாலிபர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். மிஷனரிகளாகச் சென்றுவிட்டு சில ஆண்டுகள் கழித்து, விடுமுறையில் வருவதுபோல் அவர்களால் வரமுடியாது. அடிமைகளாகச் செல்வதால் விடுமுறையும் கிடையாது. திரும்ப வரவும் முடியாது. திரும்பவும் தம் பிள்ளைகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கைக்கூட அவர்களுடைய பெற்றோருக்குக் கிடையாது. ஆகவே, அவர்கள் குமுறி அழுவதைப் பார்த்தபோது அவ்விரு வாலிபர்களும் அழுதார்கள். கப்பல் புறப்படவேண்டிய சமயம் வந்தத, கரைக்கும் கப்பருக்குமிடையே உள்ள தூரம் பெரிதாக்கிக் கொண்டு வந்தது, இடம் பெரிதாக பெற்றோரும் அதிகம் கதறி அழுதார்கள். அதனைப் பார்த்து உள்ளம் பொறுக்காதபடி அந்த இரண்டு வாலிபர்களும் ஒருவன் கையை ஒருவன் பிடித்துக் கொண்டு தங்கள் கரங்களை உயர்த்தி உரத்த குரலில் “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் பாடுகளின் பலனை அவருக்கு அளிப்பதற்காக இதோ எங்கள் உடலைத் தருகின்றோம்” என்று உரத்த குரலில் சொன்னார்கள். 


மொரோவின் மிஷனரி இயக்கம் உலகின் பல பாகங்களுக்கும் மிஷனரிகளை அனுப்பிய ஒரு இயக்கமாகும். அந்த மிஷனரிகளின் குழு ஒன்றே மெதடிஸ்த சபையின் ஸ்தாபகர் ஜோன் வெஸ்லிக்கும் சுவிஷேசத்தை அறிவித்தது. இவ் இயக்க மிஷனரிகளின் வாழ்வும், விசுவாசமும் தொலைந்து போனவர்களைக் குறித்த பாரமும், அர்ப்பணமும் வியக்கத்தக்கது. அந்த விதமான மிஷனரி ஊழியங்களைக் குறித்தான, புத்தகங்களை நாம் வாசிக்க வேண்டும். பிறரையும் ஊக்குவிக்க வேண்டும். எமது சபை, எமது பிரதேசம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வந்து தூரத்திலிருக்கும் தொலைந்துபோன மக்களைக் குறித்து பாராப்படுவோமா? 


தங்களைத் தாங்களே அடிமைகளாக ஒப்புவித்த இந்த வாலிபரின் அர்ப்பணம் நம்மை அசைக்கவில்லையா! இதனை வாசிக்கும் சகோதர சகோதரிகளே, இன்றைய தியானவேளை, நீயே உன் வாழ்க்கையை கர்த்தருக்குக் கொடுக்கும் தருமணமாக இருக்கட்டும். தேவனை அறியாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து, அவர்களை கிறிஸ்துவிணன்டையில் கொண்டுவர உன்னை ஒப்புக்கொடுப்பாயா? கர்த்தர்தாமே உன்னை ஆசீர்வதிப்பாராக!

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.  (1கொரிந்தியர் 9:19) (திருவிவிலியம்)