- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 29 May 2012

ஆபத்துக்காலத்தில் அடைக்கலமளிக்கும் ஆண்டவர்

2:1வேதப் பகுதி: யோனா 2:1-10


2:1அ. யோனா மீனின் வயிற்றிலிருந்து ஏறெடுத்த விண்ணப்பம். நாம் எவ்விடத்தில் இருந்தும் தேவனை நோக்கி மன்றாடலாம் என்பதை இது அறியத்தருகின்றது. தேவன் குறிப்பிட்ட சிறப்பான இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல (யோவான் 4:21). கடலில் தூக்கிப்போடப்பட்ட யோனா (1:15), இனிமேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்தவனாக தேவனிடம் சரணடைந்தான் (2:6-7). கப்பலில் இருந்தபொழுது மற்றவர்கள் ஜெபிக்கச் சொல்லியும் பேசாமல் இருந்த அவன் (1:6), இப்பொழுது நெருக்கடியான சூழ்நிலையில் தேவனிடம் மன்றாடுகிறான். நெருக்கடியான சூழ்நிலையில் நாம் தேவனைவிட்டு ஓடிப்போகாமல், யோனாவைப் போல அவரிடம் தஞ்சமடைய வேண்டும். துயரங்களும் நெருக்கடிகளும் வரும்போது தேவனைவிட்டு வழிவிலகிச் செல்வது அர்ததமற்றதும் ; அறிவீனமானதும், ஆபத்தானதுமான செயல் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.


யோனவின் ஜெபம் கிறிஸ்தவர்களாகிய இப்பிரசங்கத்தில் நமக்கு கற்பிக்கும் சத்தியங்களை இப்பிரசங்கத்தில் பார்ப்போம்.

(1). யோனா தேவனை அறிந்திருந்தான்.
2:1ஆ. “கர்ததர்’’ என்பது தேவன் இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட  உடன்படிக்கையின் பெயராகும். யோனா, தான் அறியாத தெய்வங்களிடம் முறையிடவில்லை. மெய்யான தேவனை இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் தனிப்பட்ட ரீதியாக அறிந்திருக்கின்றோமா? அப்பொழுது மட்டுமே நம்மால் தேவனிடம் நம் ஜெபங்களை ஏறெடுக்கமுடியும் (யோவான் 16:23). இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே மனிதர்கள் தேவனிடம் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளனர் (எபே.2:13-18, எபி.10:19-22). இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகளாகி, அவரை அப்பா, பிதாவே என்று உரிமையோடு அழைக்கக்கூடிய ஆசீhவாதம் ; கிடைக்கின்றது (யோவா.1:12, கலா.3:26, 4:6). 2:2-3. “பாதாளத்தின் வயிறு’’ என்பது மீனின் வயிறு அல்ல. 3ம் வசனம் அவன் கடலின் அடியில் இருப்பதைப் பற்றிய விவரணமாகவே உள்ளது. பாதாளம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ஷியொல்’’ என்னும் எபிரேயப் பதம் கல்லறை, குழி, பள்ளம், என்னும் அர்ததங்களையுடையது. இது மரித்தவர்களின் ; சரிரங்கள் செல்லுமிடத்தைக் குறிக்கின்றது (ஆதி.37:35, 42:38, 44:29, 44:31, எண்.16:30, யோபு.17:13-16, 21:13, 24:19, சங்.31:17, ஏசா.38:10). எனினும் யோனா மரித்த பின்னர் ஜெபித்ததாக அல்ல, மரணத்தருவாயில் இருக்கும்போது மன்றாடியதைப் பற்றியே குறிப்பிட்டுள்ளான்.

(2) யோனா தேவசெயலை அறிந்திருந்தான்.
2:3 கடலில் போடப்பட்ட யோனா, தேவன் தன்னைக் காப்பாற்றியுள்ளதை அறிந்திருந்தான். கப்பலிலிருந்தவர்கள் தன்னைக் கடலில் போட்டது மட்டுமே யோனாவுக்குத் தெரியும். மீனின் வயிற்றுக்குள் இருப்பது தெரியாது. கடலில் போடப்பட்ட யோனா, தான் இன்னும் உயிரோடு இருப்பதனால், கடலில் போடப்பட்ட போது தான் ஏறெடுத்த ஜெபத்திற்குத் தேவன் பதிலளித்து, தன்னைக் காப்பாற்றியதற் காகத் தேவனை ஸ்தோத்தரித்தான். இதனால்தான், 2 முதல் 7 வரையிலான வசனங்களின் வினைச்சொற்கள் இறந்தகாலத்தில் உள்ளன. கடலில் போடப்பட்ட யோனா, தான் மரிக்கும் நிலையில் இருந்தபோது ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டுத் தன்னை உயிரோடு காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி செலுத்தினான். நிகழ்காலத் தேவைக்காக ஜெபிக்கும்போது, கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்த நன்மைகளை நினைவுகூர்நது அவற்றுக்குத் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கவேண்டும் (1தெச.5:18, சங்.100:4, 150:6, 117:1, 145:3, 96:4, 106:48, 147:1). 2:4. யோனா தேவன் தன் வாழ்வில் செய்ததை அறிந்திருந்தமையால் அவரை இன்னும் அதிகமாக விசுவாசித்தான். கடலில் போடப்பட்ட தன்னைத் தேவன் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியமையால், அவர் நிச்சயம் தன்னைக் கரைசேர்பபார் என்னும் நம்பிக்கையுடன் அவன் இருந்தான். தேவசமுகத்திலிருந்து  தள்ளப்பட்ட தான் மறுபடியும் தேவசமுகத்தில் இருப்பேன் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. தேவன் முழுமையான விடுதலையைக் கொடுக்காத போதிலும், அவர் தன்னுடைய ஜெபத்திற்குப் பகுதியளவில் பதிலளித்து தன்னை இன்னும் உயிரோடு வைத்திருப்ப தனால், அவர் நிச்சயமாகத் தன்னை முழுமையாக விடுவிப்பார் என்னும் விசுவாசம் யோனவுக்கு ஏற்பட்டிருந்தது. எத்தகைய சூழ்நிலையிலும் தேவன் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் தளர்நது போகக்கூடாது  (யாக்.1:6, எபி.11:6). 2:4-6. கடலில் போடப்பட்டு மரிக்கும் நிலையை அடைந்த யோனாவைத் தேவன் ஒரு மீனின் வயிற்றுக்குள் அனுப்பி அவனை உயிரோடு காப்பாற்றினார் (1:17).


(3). யோனா தேவவசனங்களை அறிந்திருந்தான்
யோனாவின் ஜெபம் சங்கதப் புத்தகத்தின் வசனங்களாகவே உள்ளன. அவன்  தன்னுடைய அனுபவத்தையும் விண்ணப்பத்தையும் வேத வசனங்களில் வெளிப்படுத்தியுள்ளான் (சங்.120:1, 3:4, 18:4-5, 88:6-7, 42:7, 31:22, 5:7, 69:1-2, 49:15, 56:13, 103:4, 107:5, 31:6,50:14, 69:30, 107:22, 3:8, 37:39). சங்கதக்காரனின் அனுபவங்களில் தன்னை இனங்காணும் யோனா, சங்கதக்காரனின் வார்ததைகளிலேயே தன்னுடைய ஜெபத்தை ஏறெடுத்துள்ளான். கிறிஸ்தவர்களாகிய நாமும் வேத வசனங்களை அறிந்திருக்கவேண்டும். அனுதினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, வேதவசனங்களை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும் (சங்.1:2, நீதி.3:3, 7:3, கொலோ.3:16). ஜெபத்தின் வெற்றிக்கு தேவவசனம் நம்மில் நிலைத்திருக்கவேண்டும் (யோவா.15:7). வேதவசனங்களை உபயோகித்து ஜெபத்தை ஏறெடுக்கும்போது, தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கக்கூடியதாகவும் இருக்கும். 2:7-8. யோனாவின் ஜெபம் தேவனிடம் சென்றது. நமது ஜெபங்கள் எதுவும் வீணாய்பபோவதில்லை. அவற்றைத் தேவன் கவனித்துக் கேட்டு ஏற்றகாலத்தில் பதில் ; தருவார். ஆனால், மெய்யான தெய்வத்தை அறியாமல், பொய்யான தெய்வங்களை நம்புகிறவர்கள் தங்கள் வாழ்வுக்கு வரும் தேவனுடைய கிருபையைப் போக்கடிக்கிறவர்களாக இருக்கின்றனர். 2:9. யோனா பொருத்தனை செய்து ஜெபித்தான். எனினும் இது தேவனுடன் பேரம் பேசுகிற விதமாக மாறிவிடக்கூடாது. அதாவது, தேவனே நீர் இதைச் செய்யும் இதற்குப் பதிலாக நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணத்துடன் நாம் பொருத்தனை செய்யக்கூடாது. பொருத்தனையானது, தேவன் நமக்கு செய்யப்போகிற காரியத்திற்கு நன்றிசெலுத்துவதற்காகவே செய்யப்படவேண்டும். யோனா தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவதைப் பற்றிய சிந்தனையில் இருந்தானே தவிர, தேவன் செய்யவேண்டிய காரியத்தை மட்டும் சிந்தித்தவனாக இருக்கவில்லை. வேதாகமத்தில் பொருத்தனைகள் கட்டளைகளாகக் கொடுக்கப்படவில்லை. இது மனிதர் தாமாகவே விரும்பி செய்யும் காரியமாக இருந்தது (எண்.21:2, 1சாமு.1:11, சங்.22:25-26, யோனா.2:9, ஆதி.28:20-21). இதனால் இதற்கான வழிமுறைகள் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பொருத்தனைகள் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் (உபா.23:21-22, பிர.5:4-6). 2:10. தேவன் யோனாவின் ஜெபத்தைக் கேட்டு, அவனை மீனின் வயிற்றிலிருந்து விடுவித்தார். அவர் நம்முடைய ஜெபத்தையும் கேட்டு நம்மையும் நிச்சயம் விடுவிப்பார்.

கட்ரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்.  (தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம். )

Saturday 19 May 2012

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.(மத்தேயு 23:9) விளக்கம்


இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.
ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்'' (மத்தேயு 23:9)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் பாராட்டிப் போற்றவேண்டும் என்றும், சிறப்புப் பெயர்கள் சூட்டி தங்களை அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். யூத சமயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அத்தலைவர்கள் ''ரபி'' (போதகர்), ''தந்தை'' போன்ற பெயர்களால் அழைக்கப்படுவதை விரும்பினார்கள். அவர்களைப் பார்த்து இயேசு கூறியது: ''இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்''. சிலர் இயேசு கூறிய இச்சொற்களுக்குத் தவறான விளக்கம் தந்து, இயேசு நாம் யாரையும் தந்தை என அழைக்கலாகாது எனக் கூறுகிறார் என்பர். இது சரியான விளக்கம் அல்ல. இங்கே குறிக்கப்படுகின்ற ''தந்தை'' என்னும் சொல் நம் சொந்தப் பெற்றோரைக் குறிக்க நாம் பயன்படுத்தும் சொல் அல்ல. மாறாக, வணக்கமும் மரியாதையும் பெறும் வண்ணம் அக்கால மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் ''தந்தை'' என அழைக்கவேண்டும் என்று கோரியது சரியல்ல என்பதே இயேசுவின் போதனை. மேலும், கிறிஸ்தவ சபைகளில் தலைமைப் பொறுப்புக் கொண்டவர்களைத் தந்தையர் என அழைக்கும் வழக்கம் உண்டு. இதை இயேசு கண்டனம் செய்தார் என்பதும் சரியாகாது. கடவுள் ஒருவரே நம் அனைவருக்கும் தந்தை. அதே நேரத்தில் கடவுளின் பெயரால் நம்மை வழிநடத்தும் பொறுப்புடையோரை நாம் தந்தையர் என அழைப்பது பொருத்தமே.

-- போதகர் என்றும் தந்தை என்றும் திருச்சபையில் அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே இயேசுவின் போதனையைப் போதிப்பவர்களாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் தந்தையாகிற கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்பவர்களாக வாழ வேண்டும். அப்போது அவர்களுடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். அக்காலப் பரிசேயரிடமும் மறைநூல் அறிஞரிடமும் இயேசு கண்ட குறை நம்மிடையே தோன்றாது. வெளிவேடம் இல்லாத இடத்தில் உண்மையான பண்பு துலங்கி மிளிரும்.

Tuesday 8 May 2012

டைடானிக் - தவறிய பயணம்


டைடானிக் கப்பல் தெரியுமா? உங்களுக்கு? தெரியுமாவா? டைட்டானிக் சுப்பர் ஹிட் மூவியாச்சே தெரியாமலா? வருடங்கள் பல உருண்டோடினாலும் ஜெக் டவ்சன், ரோஸ் காதல் ஜோடியை மறக்க முடியுமா? ஆனால் அந்தக் காதல் கதை உண்மைக்கதையல்ல. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அபார மூளையில் உருவான கற்பனைக்கதை. ஆனால் உண்மையான டைடானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டில் பிரமாண்டமாய் கிளம்பியபோது கிளார்க் குடும்பதில் நடந்த உண்மை சம்பவத்தை யாராலுமே மறக்க முடியாது. அன்றைய நாளிதழ்கள் இந்த மறக்க முடியாத சம்பவத்தைத் தவறாமல் பதிவு செய்திருந்தது.

கிளார்க் தம்பதியினருக்கு ஒன்பது பிள்ளைகள். இங்கிலாந்தில் வசித்த இந்த குடும்பத்திருக்கு தங்கள் நாட்டில் இருந்த மற்றவர்களைப் போல அமெரிக்கா நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்பது அவர்களது நீண்டகால ஆசை. குடும்பமாக தினந்தோறும் Family Altar என்ற தங்களது குடும்ப ஜெபவேளையில் ஆண்டவரிடம் இந்த விண்ணப்பத்தை ஒவ்வொரு நாளும் சமர்ப்பித்தனர். அதற்கென்றே பணமும் சில வருடங்களாக சேர்க்க ஆரம்பித்தனர். 11 பேருக்கு டிக்கட் எடுக்க வேண்டுமல்லவா? நடுத்தர குடும்பம் என்ன செய்யும்?

அந்த நேரத்தில்தான் அந்த விளம்பரம் அவர்கள் கண்ணில் பட்டது. Titanic மூழ்கவே மூழ்காத கப்பல்! The Largest Sea Lines! உலகின் பிரமாண்டமான கப்பல்! - சகல ஆடம்பரங்களுடன் நீச்சல் குளம் உட்பட“

புது கப்பல், பிரமாண்டமானதாய், கேளிக்கைகள் நிறைந்ததாய், ஆடல், பாடல் ஆர்ப்பாட்டங்கள் எனப் பல சலூகைகள், கோடீஸ்வரன் செல்ல முதல் வகுப்பு, நடுத்தரத்திற்கு 2ம் வகுப்பு, ஏழைகள் செல்ல 3ம் வகுப்பு யாருக்குத்தான் கசக்கும்? விரைந்து சென்று முன்பதிவு செய்தார் கிளார்க். டிக்கட்டுகளையும் வாங்கிவிட்டனர். எல்லோருக்கும் ஒரே குஷி. அந்த நாள் எப்போது வரும், அவர்களுக்கு நாட்கள் மெல்லத்தான் நகர்ந்தன.

இதற்கிடையே தங்களது உற்றார் உறவினர், நண்பர்களின் பிரிவு உபசார விருந்துக்கள், மூட்டை முடிச்சுக்குள் பேக்கிங் என்று எல்லாமே. பிரிவோம் என்ற சோகமும் கப்பல் பயண சந்தோஷசமும் கலவையாய் உள்ளத்தை நிறைக்க இந்த சந்தோஷங்களுக்கு ஒரு சின்ன இடைவெளி. என்ன அது? ஆமாம். ஜூனியர் கிளார்க்கை நாய் கடித்து விட்டது. இந்த நாய்க கடி இடியாய் இவர்கள் தலையில் இறங்கியது.

ஒருவேளை வெறிநாய்க் கடியாக இருந்தால்? டாக்டர் அமைதியாக சொன்னார். “ஜூனியர் கிளார்க் வெளியே எங்கும் செல்லக் கூடாது; யாரும் அவரைப் பார்க்க உள்ளே வரவும் கூடாது; அவரைக் கடித்தது வெறிநாயாக இருந்தால்? Rabies உடனே பரவும்; எனவே ஒரு வாரம் தீவிர அவதானிப்பில் இருக்க வேண்டும்“ “ஐயகோ என் கடவுளே! ஒட்டுமொத்தமாக ஒலி்த்தன ஒன்பது குரல்களும்.

அம்மாவைத் தவிர, புயலுக்குப் பின் அமைதி மாதிரி கத்தி ஓய்ந்தபின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் சுருண்டனர். ஜூனியர் கிளார்க்குக்கு ஏற்பட்ட விபத்தால் முழு குடும்பத்தின் பயணமும் நிறுத்தப்பட்டது. ஜூனியர் கிளார்க் மட்டும் ஏப்ரல் 10, 1912 அன்று கனத்த மனதைச் சுமந்து கொண்டு துறைமுகம் சென்று பிரமாண்டமான டைடானிக் கப்பல், பயணிகள் ஆரவாரத்தோடு நகர்ந்து கொண்டிருந்ததை பார்த்து மற்றவர்களுக்கு கையசைத்து வாழ்த்துச் சொல்லி விட்டு வீடு திரும்பினார்.

மனதில் “ஐயகோ இந்தக் கப்பலில் நாங்கள் குடும்பமாய்ச் சென்றிருந்தால் எவ்ளளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால்.... அதிக சோகத்தோடும் கனத்த மனத்தோடும், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத அதிர்ச்சியான மனநிலையோடும், அவர் காணப்பட்டார். கலைந்துபோன கனவுகள், நிறைவேறாத ஆசைகள், சிதைந்த போன எண்ணங்கள் எதிர்பார்க்காத நிஜங்கள் என அவரது இதயம் மிகவும் கனத்தது.

ஏன் ஆண்டவரே இப்படிச் செய்தீர்? உமது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துத்தானே ஜெபித்தோம்? ஒவ்வொரு கட்டத்திலும் உமது வழிநடத்துதல்கள் இருந்ததே! கஷ்ட்டப்பட்டு பணம் சேர்த்தது. டைடானிக்கில் பல போட்டியாளர்களிடையே டிக்கட் கிடைத்தது. எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் நடத்தினீரே! கடைசியில் ஏன் இப்படி நடந்தது?

கேள்விக் கோர்வைகளுடன் கண்ணீர் கோர்வைகளும் சேர்ந்துகொள்ள மீளாத் துயரத்தில் ஜூனியர் கிளார்க் காணப்பட்டார். ஏன் ஆண்டவரே ஏன்? லாசர் மரி்த்து நான்கு நாள் தாமதித்து வந்த இயேசுவைப் போல, ஏன் என்ற கேள்விக்கு 4 நாட்களுக்கு பிறகு விடை வானொலியின் வாயிலாக கிடைத்தது.

ஆடம்பரமாய் அசைந்து சென்ற டைடானிக் கப்பல் ஏப்ரல் 15 அன்று அதிகாலையில் அட்லாண்டிக் கடலில் சென்றுகொண்டிருந்தபோது பனி மலையில் மோதியது. கப்பலின் ஒரு பகுதியில் ஒரு பெரிய ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் உள்ளே மளமளவென்று செல்ல இரண்டு மணிநேரத்தில் கப்பல் இரண்டாக உடைந்து மூழ்க ஆரம்பித்தது.

கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாத கப்பல் என்று முழக்கமிட்டு வெறும் 20 உயிர்காக்கும் படகுகளை மட்டுமே சுமந்து சென்ற பிரம்மாண்டமக் கப்பல் இப்பொழுது மூழ்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது.

2227 பேர் பயணித்த கப்பல் இரண்டாக உடைந்து மூழ்கியதில் 705 பேரைத் தவிர அனைவரும் மரித்துப் போயினர்.

இந்தத் துயர சம்பவம் நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்தாலும் உலக மக்கள் மனதில் நீங்காத ஒரு வடு. தப்பித்தோரில் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி காலத்தால் ஆற்றப்படாத காயங்களுடன் மரித்துள்ளனர். ஆனால் கிளார்க் குடும்பமோ முன்பு புரியாத, ஆனால் இப்பொழுது புரிந்து கொண்ட தேவனின் தெளிவான சித்தத்தை எண்ணி அவரை துதித்தது.

 “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.  பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.(ஏசாயா 55:8)

நம் கிட்டப் பார்வையில் நாம் எதிர்பார்க்கும் விதமாக காரியங்கள் நடக்காத போது தொய்ந்து ஆண்டவரை மறந்துபோய் சுலபமாக மறுதலித்து விடுகின்றோம். நாம் கேட்க மறுக்கின்ற காரியங்களிலும், மேலான ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கும்போதுதான் நம் சித்தத்தைவி்ட ஆண்டவரின் சித்தம் எத்தனை மகிமையானது என்பதை உணர்வோம். கடவுளின் சித்தத்தை எதிர்வுகூர்வார் யாருமில்லை.

(நன்றி ஆசீர்வாதம் சஞ்சிகை , மே 2001 ; கட்டுரையாசிரியர் : பிரிசில்லா போல்)

Saturday 5 May 2012

சபையில் ஆண் - பெண் நடத்தை பற்றிய சத்தியம் (தீமோத்தேயு 2:8-15)

ஜெபத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பவுல் இப்போது சபையின் ஜெபக் கூடங்கள் யாருடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டுமென அறிவுறுத்துகிறார்.

2:8 எல்லா மக்களுக்காகவும் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் (2:1) ஆண்களினாலேயே சபையில் ஏறெடுக்கப்பட வேண்டும். இத்தகைய ஜெபங்கள் பகிரங்க வழிபாடுகள் நடைபெறும் “எல்லா இடங்களிலும்“ ஏறெடுக்கப்பட வேண்டியவை. தேவனுடைய பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும் ஜெபமானது ஆண்களினாலேயே நடத்தப்பட வேண்டும். “சில சமயங்களில் கள்ளப் போதகங்கள் பெண்களின் தலைமைத்துவத்தை வலியுறுத்தியிருக்கலாம்.

பகிரங்க வழி்பாடுகளில் ஆண்கள் கோபமும் தர்க்கமுமி்ல்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டும்.

1. கைகளை உயர்த்தி ஜெபிப்பது யூத ஜெபமுறையாயிருந்தது. (1 இராஜா 8:22; 2 நாளா. 6:13; எஸ்றா 9:5; சங். 28:2இ 14:12; புலம். 2:10) கைகள் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அவை “அர்ப்பணிக்க்கப்பட்டதாயும் அசுத்தமற்றதாயும் இருக்க வேண்டும்.' இது உள்ளான பரிசுத்தத்தின் வெளிப்பிரகாரமான அடையாளமாகும். (D.L)  அசுத்தமான கைகளுடன்(மன்னிப்பு பெற்று சுத்தமாகாத இதயத்துடன் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் தேவனைப் பிரியப்படுத்தாதவை(சங். 24:3-4; மத். 5:23-24 ; ஏசா 1:15)) கைகளை உயர்த்தி, உள்ளங்கை மேல் பக்கமாயிருக்கும் வண்ணம் ஜெபிப்பது தேவனை முற்றிலுமாய் நம்பி, தாழ்மையுடன் எதிர்ப்பார்த்திருப்பதை விளக்கும் விபரணமாகும். (W.H)

2. கோபமற்றவர்களாயிருக்க வேண்டும். “மனித மனதில் உள்ள கசப்பு, ஜெபம் தேவண்டை சேர்வதைதத் தடுக்கும் தடையாகவுள்ளது. (W.B). 'உடைந்த மானிட உறவுகளும் ஜெபத்திற்கு தடையாகவுள்ளன. (D.L)

3. தர்க்கிப்பில்லாதவர்களாயிருக்க வேண்டும். கிரேக்க பதம் “தர்க்கம்“ என்றும் “சந்தேகம்“ என்றும் பொருள்படும். தர்க்கம் என்று எடுத்தால் கோபத்தை அதாவது முன் சொன்னதை திருப்பிச் சொல்வதாய் அமையும். சகப்பு், சண்டைகளும், வாக்குவாதங்களும், ஜெபத்திற்கும் தடையாக அமையும். “சந்தேகம்“ என்பது சிறந்த மொழிபெயர்ப்பு (W.B) ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கு முன்பு தேவன் பதிலளிப்பார் எனும் நம்பிக்கை நமக்கிருக்க வேண்டும். “தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறவர் என்ற நம்பிக்கையோடேயே நாம் ஜெபங்களைத் தேவனுடைய பிரசன்னத்திற்கு கொண்டு வரவேண்டும். (W.B) (யாக். 1:6-7)

“சரியான செயல்முறைகள் மட்டுமல்ல. சரியான மனநிலையும் ஜெபத்தி்ற்கு அவசியம். (D.G) மற்ற மக்களைப்பற்றிய எரிச்சலற்ற தன்மையும் தேவன் மீதான முழுமையான நம்பிக்கையும் ஜெபத்திற்கு அவசியம் தேவை. (G.W)

2:8-9 சபைக்கு வரும் பெண்ணின் நடத்தை எத்தகைய இருக்க வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார். “அவர்கள் வெளிப்பற அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உட்பற அலங்காரத்தைப் பற்றி கரிசனையுடையவர்களாய் இருக்கும்படி கூறுகிறார். (D.L) எளிமையாகவும் அடக்கமாகவும், பண்பாகவும், பெண்களின் அலங்காரம் இருக்க வேண்டும். 9ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளவைகள் பாவமான செயல் முறைகள் அல்ல. மாறாக, அவை பெறுமதியின் அடையாளங்களாக கருதப்படுகையில் ஏற்றதாக்கி விடுகின்றன. “எபேசு பட்டண சபையில் இவைகள் ஆலய விபச்சாரிகளுடன் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கலாம். உலக நாகரீகம் தங்களுடைய நடை உடைகளில் செல்வாக்குச் செலுத்துவதைக் குறித்து கிறிஸ்தவ பெண்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். (D.G) “பெண்களின் உடை அவர்களுடைய மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதை பவுல் கண்டிருந்தார். வெளி்ப்படையான அலங்காரம் ஜெப சிந்தையுடனும் பக்தி வினையத்துடனும் இருப்பதேர்டு ஒததுப்போகாது. (D.G)

ஜெபக்கூட்டங்களுக்கு ஆண்கள் எவ்வாறு தங்கள் தயார்படுத்திக் கொண்டு வரவேண்டுமோ (வச. 8) அதேபோல பெண்களும் தங்கள சரியான நிலையிலேயே ஆயத்தப்படுத்திக் கொண்டு வரவேண்டும். “அவர்களும் தங்களுடைய பரிசுத்தத்திற்கு பக்திக்கும், ஏற்ற அடையாளங்களைக் காட்டுபவர்களாயிருக்க வேண்டும். (W.H) நாகரீக ஆடைகளை அணிவது பாவமல்ல. அலங்காரம் பண்ணுவது பாவமல்ல. ஆனால் அது பெண்மையின் அடக்கத்தையும், பண்பையும் உடைய ஆடையாக அலங்காரமாக இருக்க வேண்டும். “மற்றவருடைய அவதானத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் வண்ணம் அவர்களுடைய ஆடை அலங்காரங்கள் இருக்க கூடாது. (W.H) அவர்கள் நவீன ஆடைகளை அணியக்கூடாது என்பதில்லை. எவை ஒழுக்கநெறி பிறழ்வதாக, மதிபற்றதாக இருக்கின்றதோ, அவைகளையே அணியக்கூடாது. “ஆடையானது உள்ளான அழகை வெளிபப்படுத்துவதாய் இருக்க வேண்டும். பார்ப்பவர்கள் இவள் ஒரு கிறிஸ்தவ பெண் என்பதை அறிந்து கொள்ளக் கூடிய வண்ணம் இருக்க வேண்டும். (W.H) அலங்காரத்திற்காக அநாவசியமான முறையில் அதிகளவு பணத்தை செலவழிப்பது பிழை என்பதையும் பவுல் இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றார்..

உண்மையான அலங்காரம் வெளி்புற அலங்காரமல்ல. நாணம், தெளிந்தபுத்தி, நற்கிரியை, என்பவையே ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு உண்மையான அலங்காரம். (1 பேதுரு 3:3-4) அவளது ஆடை கிறிஸ்தவ குணாதிசயத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். (K.W) உலகம் வெளிப்புற அலெங்காரத்திற்கு அதிக பெறுமதியைக் கொடுக்கையில் கிறிஸ்தவ பெண்கள் உண்மையான பெறுமதி எது என்று கண்டு கொள்ள வேண்டும். (1 சாமு. ள16:7 ஒப்பிடுக.)

2:11-12 பெண்கள் சபையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார். (1 கொரி.. 14:34-35) “கிறிஸ்துவில் அவர்களுக்கு கிடைத்த விடுதலை, ஆண்களுக்கு மேலாக இருக்கக்கூடிய நிலையை அவர்களுக்கு கொடுத்து விடவில்லை. (D.G) “அமைதல்“ என்பது ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது என்று அர்த்தமல்ல. அப்படியாயின் பவுல் வேறொரு பதத்தையே உபயோகித்திருக்க வேண்டும். அவர்கள் சபை வழிபாடுகளை குழப்பும் வண்ணம், அல்லது இடையூறு செய்யும் வண்ணம் கதைக்கக்கூடாது. அதாவது அவர்கள் இடையில் குறுக்கிட்டு பேசக்கூடாது.

2:13 இல் ஸ்திரீகள் அமைதியாயிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதற்கான காரணத்தை விளக்குகிறார். இது தேவனுடைய சிருஷ்டிப்பு செயலை அடிப்படையாகக் கொண்டது. தேவன் முதலில் ஆதாமைப் படைத்து அதன் பிறகே ஏவாளைப் படைத்தார். அத்தோடு பெண்ணை ஆணுக்காகவும் அதாவது அவனுக்கு உதவியாகவும் (ஆதி 2:18-25) அவனுடைய மகிமையாகவுமே சிருஷ்டித்தார். (1 கொரி. 11:7-9) எனினும் ஒருவர் இல்லாமல் பூர்த்தியில்லை. (1 கொரி. 11:1) “தேவன் தம்முடைய ஞானத்தின்படி, மானிட வர்க்கத்தை ஆண்-பெண்ணாக சிருஷ்டித்து, அதில் ஆணை, வழிகாட்டியாகவும, பெண்ணை அவன் காட்டும் வழயில் செல்பவளாகவுமே சிருஷ்டித்துள்ளார்“. (W.H) எனவே, சபையில், ஆண் மக்களை வழிநடத்த வேண்டும் வழிபாட்டில் சிருஷ்டிப்பின் செயல்முறைக்கு முரணான விதத்தில், பெண் தன்  தன்மைக்கு எதிராக, ஆண் மீது அதிகாரம் செலுத்தி, அவனுக்கு உபதேசிக்க முயற்சிக்க கூடாது. “பெண்களின் இத்தகு அமைதலான தன்மை தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றதாயிருப்பதனால் (1 பேதுரு 3:4) மானிட வர்க்கத்திற்கு தேவன் ஏற்படுத்திய அமைப்பை புரிந்து, அதை ஏற்றுக் கொண்டு செயற்படல் வேண்டும். (D.L) ஆதாம் முதலில் சிருஷ்டிக்கப்பட்டமை ஆணுக்கு தலைமைத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணமாயமைந்துள்ளது. ஏவாள் அவனுக்கு துணையாக சிருஷ்டிக்கப்பட்டமையினால், அவள் அவனைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

2:14 பெண் தன் நிலையை மீற், ஆணை வழிநடத்திச் செல்லும்போது ஏற்படும் விளைவும், பெண்கள் சபையில் அமைதலாக இருந்து கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. அவர்கள் தலைமைத்துவத்தை ஏற்று ஆண்களுக்கு உபதேசிக்க முயற்சித்தால், ஆண்களையும் தவறான வழியில் இட்டு செல்வார்கள் என்பதை பவுல் இந்த வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகின்றார். பாவம் செய்தபோது ஏவாள் பின்பற்றும் செயலை விட்டுவிட்டு வழிநடத்தும் செயலை ஏற்றாள். “ஆதாம் அவளைப் பின்பற்றினான். அவள் பாவ வழியில் அவனை வழிநடத்தினாள்.(W.H). (அநேக கள்ளப் போதகக் குழுக்களில் பெண்ளின் தலைமைத்தும் இருப்பது இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது) “பெண் பெண்ணாகவே இருக்கட்டும். அவளுடைய பணிகளையே அவள் செய்யட்டும். ஆணுடைய பணிகளை அவள் செய்ய முயற்சிக்க வேண்டாம். அது அவளுக்கு தகுதியாயிராது. மீன் நீரிலேயே வாழ வேண்டும். அது நிலத்திற்கு வர முயற்சிக்க கூடாது. அதுபோல் பெண்களும் தேவன் தம்மை சிருஷ்டித்த நிலையிலேயே இருக்க வேண்டும். அவள் தன்னுடைய தனமைக்கு முரணான காரியங்களை செய்ய முயற்சிக்க கூடாது. (W.H)

ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள். ஆனால் ஆதாம் ஏவாளால் வசியப்படுத்தப்பட்டான். எனினும் பாவத்திற்கு ஆதாம் ஏவாளால் வசியப்படுத்தப்பட்டான். எனினும் பாவத்திற்கு ஆதாம் பொறுப்பற்றவன் என கூற முடியாது. (ஆதி. 3:7) (ரோம. 5:12) ஆதாம் ஏவாளைப் பின்பற்றினான். அதனால் அவனும் பாவத்தில் விழுந்தான்.

2:15 பெண் சபையில் போதிக்கும் பணியைச் செய்யாமல், வீட்டில் தன் பணிகளைச் செய்ய வேண்டும் என பவுல் கூறுகின்றார். அவள் தெளிந்த புத்தியுள்ளவளாகவும், விசுவாசமுள்ளவளாகவும், அன்புள்ளவளாகவும், பரிசுத்தமுள்ளவளாகவும், இருக்க வேண்டும். “பிள்ளைப் பேற்றினிலே இரட்சிக்கப்படுவாள்“ என்பது குடும்பத்தில் தன் பங்களிப்பை செய்வதன் மூலமாக, தேவன் தன்னை எதற்காக சிருஷ்டித்தாரோ, அந்நிலையில், இருப்பதனால் வாழ்வின் மெய்யான அர்த்தத்தைக் கண்டடைவாள் என்பதாகும் (W.H). இவ்வசனத்தில் இரட்சிப்பு நம ஆத்தும இரட்சிப்பல்ல. ஏனெனில் சபையில் இருக்கும் பெண் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவள். அத்தோடு இரட்சிப்புக்கு, அவள் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் நிலைத்திருப்பது அவசியமானதொன்றல்ல. குடும்பத்தில் ஒரு தாயாக  இருந்து தன் பணியை செய்யவதற்காகவே தேவன் பெண்ணைப் படைத்துள்ளார். இதினாலே அவள் உண்மையான நிறைவை, இரட்சிப்பைக் கண்டமைவாள். அவள் சபையிலுள்ளவர்களுக்கு உபதேசிப்பதன் மூலமாக அல்ல, தன் பிள்ளைகளுக்கு தேவ வார்த்தையை உபதேசிப்பதன் மூலமாக இந்த மனநிறைவை பெற வேண்டும் என்பதே பவுலின் விளக்கமாகும். (தீத்து 2:3-4 ; 2 தீமோ 1:5 ; 3:15 ; 1 தீமோ. 5:14)

References
DG - Donald Guthrie, The Pastoral Epistle: Tyndale New Testament Commentaries, Leicester :Inter - Varsity Press, 1988

DL - A. Duane Litfin, 1 & 2 Timothy: The Bible Knowledge Commentary, Wheaton: Victor Books, 1983

GF- Gordon D. Fee, 1 and 2 Timothy, Titus: New International Biblical Commentary, Wheaton: Peabody: Hendrickson Publisher, 1993

GK : George W. Knight III  The Pastoral Epistle: The New International Greek Testament Commentary. Carlisle: The Paternoster Press, 1992

GW – Geoffrey B Wilson,  The Pastoral Epistle: A Digest of Reformed Comment Edinburgh: The Benner of Truth Trust, 1982

JS – John R.W. Stott, The Message of 2 Timothy, Leicester: Inter-Varsity Press, 1973

PT – Philip H. Towner, 1-2 Timothy & Titus: The IVP New Testament Commentary, Downers Grove: Inter-Varsity Press, 1994

RE-Ralph Earle, 1,2 Timothy: The Expositor’s Bible Commentary:, Grad Rapids: Zondervan Publishing House, 1978

WB-William Barclay, The Letters to Timothy, Titus and Philemon: The Daily Study Bible, Edinburgh: Saint Andrew Press, 1990

WH- William Hendriksen, 1&2 Timothy &Titus, Edinburgh: The Banner of Truth Trust, 1976

WW- Warren W. Warren W. Wiersbe, Be Faithful. Wheaton: Victor Books, 1986 


(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் அவர்கள் எழுதிய தீமோத்தியு நிருபத்திற்கான விளக்கம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)