- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 13 January 2011

வேதாகம கால மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள்


நூல் : வேதாகமப் பிண்ணனி
கட்டுரையாசிரியர் : கலேப் ஸ்ரீ கர்ணகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி


இன்றைய உலகில் வாழும் வெவ்வேறுபட்ட மக்களிடையே வெவ்வேறு கலாசாரங்கள் நிலவுவதை காணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஜாதியினரும் குறிக்கப்பட்ட சமுதாய, கலாசார அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கைப் பின்னணி உடையவர்களாயுள்ளனர். அதேபோல் வேதாகம பூமியில் வாழ்ந்தவர்களிடையேயும் இவ்வாறான கலாசாரங்கள் நிலவியது. குறிப்பாக இஸ்ரவேல் மக்களிடையே வேறுபட்ட கலாசாரங்கள் காணப்பட்டன. வேதாகம பூமியில் வாழ்ந்த மக்களுடைய கலாசாரம், பழக்கவழக்கம் என்பவற்றை கற்பது எமக்கு வேதாகமத்தை விளங்கிக் கொள்ள உதவியாயிருக்கும். இக்கட்டுரையில் இஸ்ரவேல் மக்களுக்கிடையே காணப்பட்ட கலாசார பின்னணிகளை வேதாகம ஆதாரங்களுடன் நோக்குவோம். 

வேதாகம பூமியில் வாழ்ந்த மக்கள் ஆதியில் கூடாரவாசிகளாகக் காணப்பட்டனர். (ஆதி 4:20) தங்கள் மனைவி பிள்ளைகளுடன் கூடாரங்களிலேயே தங்கியிருப்பார்கள். பிரயாணத்தின்போதும் இடம் விட்டு இடம் மாறும்போதும் ஆங்காங்கே கூடாரம் போட்டுக் கொள்வது வழக்கம் (எண் 24:2, 2 சாமு 11:11) கட்டப்பட்ட வீடுகளிலும் குடியிருந்தார்கள். சில வீடுகள் ஒரு அறை கொண்டதாகவும் (1 இராஜா 17:18-19) சில ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் உள்ள வீடாகவும் காணப்பட்டது. (2 சாமு. 17:18, 19). வீட்டின் கூரை மெத்தையாகவும் சுற்றி சுவர் கைப்பிடி உள்ளதாகவும் காணப்பட்டது. (உபா 22: அறையில் யன்னல்களும் காணப்பட்டன. (ஏசா 9:10) இருட்டில் வெளிச்சத்திற்கு விளக்கு பயன்படுத்தினர். (மத் 5:15, ஏசா 42:3)

அவர்கள் அன்றாட உணவில் அப்பம் அதிகமாக காணப்பட்டது. (ஏசா 4:15-17) உணவை சமைப்பதற்கு மாட்டுச்சாணி வறட்டி (எசே. 4:15), காட்டுப்புல் (லூக் 12:28) முள்(பிர 7:6) நெருஞ்சில் (ஏசா 9:18) போன்றவை எரிப்பதற்கும் உபயோகிக்கப்பட்டன. மரத்தினால் வீட்டின் கூரையை செய்து (1 சாமு 9:26) மேலே சணல் தட்டைகளைப் பரப்பி கூரையின் கரையில் வைப்பார்கள். (மத் 24:17) வீட்டின் மேல் ஏறி இறக்கக் கூடியதாகவும், உள்ளே இறங்கக் கூடியதாகவும் நடுவில் வழியும் இருந்தது (மாற் 2:4)

இவர்களுடைய சாதாரண நாளாந்த உணவு அப்பம். அதோடு ஒலிவம் எண்ணெய், மந்தையில் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், பால்கட்டி (2 சாமு 17:28,29) மரக்கறி, இறைச்சி வகை போன்றவையும் காணப்பட்டன. (லேவி 23:14, 2 இராஜா 4:42) அடை ( 1 இராஜா 19:6) கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, திணை, கம்பு (எசே. 4:9) தேன் (2 சாமு 17:28) இன்னும் சில தானியங்களும் காணப்பட்டன. (ஆதி 25:33,34, நாகூம் 11:5, ஏசா 1:8, யோவா 4:6-10, 2 இராஜா 4:39, தானி 1:18, நியா 4:19, 5:25) குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட்டன. (ஏசா. 28:9) பசும்பால் மட்டுமல்ல ஆட்டுப்பாலையும் பயன்படுத்தினர். (உபா 32:14)

Tuesday 11 January 2011

மனிதனால் புரிந்திட முடியாதவை


ஆதிச்சபையின் இறையிலாளர்களில் முக்கியமானவரும், கிறிஸ்தவ சபைச் சரித்திரத்தில் இன்றுவரை நிலைத்து நிற்பவருமான ஒகஸ்டீன் (கி.பி. 354-430)என்பார் ஒருநாள் கிறிஸ்தவ இறையியலில் முழுமையானதும் தெளிவானதுமான விளக்கத்தை எவராலும் கொடுக்க முடியாத திரித்துவ உபதேசத்தைப் பற்றி மனக்குழப்பத்துடன் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்.

திரித்துவ உபதேசத்தைப் பற்றிச் சிந்தித்த வண்ணமாக்கச் சென்று கொண்டிருந்த ஒகஸ்டீன், கடற்கரை மணலில் ஒரு சிறு குழியைத் தோண்டி, அதைக் கடல் நீரால் நிரப்பிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார். அவனது செயல் ஒகஸ்டீனுக்கு வேடிக்கையானதாய் தென்பட்டமையால் சிறுவனே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?“ என்று கேட்டார்.
ஒகஸ்டீனின் கேள்விக்குப் பதிலளித்த அச்சிறுவன் “ஓ அதுவா! நான் கடலை இக்குழிக்குள் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்“ என்றான்.

சிறுவனின் பதில் ஒகஸ்டீனுக்கு பாரிய உண்மையை வெளிப்படுத்தியது. “திரித்துவ உபதேசம் மானிட அறிவால் கிரகித்து புரிந்து கொள்ள முற்படுவது, கடலை சிறு குழிக்குள் போட முற்படுவதற்குச் சமனானது. கடலைப் போல விசாலமான தெய்வீக விடயங்களை சிறிய மூளைக்குள் கொண்டுவர முயல்கின்றேனே” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
தேவனைப் பற்றிய மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விடயங்களுக்கு முழுமையான விளக்கங்களை நம்மால் கொடுக்க முடியாது. திரித்துவம், இயேசுவின் இருதன்மைகள், தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், பிசாசின் வீழ்ச்சி போன்ற சில முக்கிய விடயங்களுக்கு முழுமயான விளக்கங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம், நமது குறுகிய மூளையினால் அவற்றை புரிந்து கொள்ளமுடியாதிருப்பதேயாகும். இதனால், நாம் அறிந்து கொள்வதற்கு அவசியமான விடயங்களை மட்டுமே தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தேவன் வெளிப்படுத்தி உள்ளவற்றுக்கு மேலதிகமாக அறிந்து கொள்ள முற்படுவது அர்த்தமற்றது. ஏனென்றால், அது வெறும் ஊகங்களுக்கும் உபதேசக் குழப்பங்களுக்குமே வழிவகுக்கும். இவ்விடயத்தில் தேவன் நமக்குப் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்.

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)


(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய சில சம்பவங்களில் சில சத்தியங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்)

Monday 3 January 2011

உபத்திரவம் நல்லது

!
"முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ"" என்று புலம்பினார் யோபு (யோபு 6:6). சுவையில்லைதான், ஆனால் சத்துண்டு! பாடுகள் நம் நம்பிக்கையின் அளவைச் சுட்டிக்காட்டுகின்றன. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசுவைவிட்டு நாம் கண்களை விலக்கும்போது சிக்கலுக்குள்ளாகிறோம் (எபிரெயர் 12:1). மூழ்கத் துவங்கியதும் கதறுகிறோம். அப்போது நம்மிடம் ஆண்டவர் கேட்பது, "உங்கள் விசுவாசம் எங்கே?"" பாடுகளைச் சரியான விதத்தில் சகித்தால் விசுவாசம் வலுப்படும். உபத்திரவத்தின் உச்சக்கட்டத்தில்தான் யோபு, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்"என்று வீர முழக்கமிட்டார் (யோபு 18:15). 

கம்யூனிசச் சிறைகளில் பல ஆண்டுகள் சித்ரவதை அனுபவித்த ரிச்சர்டு உம்பிராண்டும் அவரது மனைவியார் சபீனாவும் தாங்கள் கற்றுக்கொண்டதை இவ்விதம் விளக்கினர்: """"சிறையில் நாங்கள் இறையியலைக் களைந்து இறைவனைக் கற்றுக்கொண்டோம்"" இதே பாணியில் மார்ட்டின் லூத்தரும், "உபத்திரவங்களுக்குள் வரும்வரை திருவசனத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை!"" என்றார்.

உபத்திரவங்கள் தேவ கிருபையின் முக்கித்துவத்தை அதிகமதிகமாய் நமக்கு உணர்த்துகின்றன. சகோதரர், அறிமுகமானோர், இனத்தார், நண்பர், வீட்டார், வேலைக்காரர், சிறுபிள்ளைகள் யாவரையும் ஆண்டவர் யோபுவுக்குத் தூரமாக்கினார். மனித உதவிகள் நீக்கப்படும்போதுதான் நாம் ஆண்டவரை மட்டும் நோக்குகிறோம். அவரும் தம்மைச் சில வேளைகளில் மறைத்துக் கொள்ளும்போது, முன், பின், வலது, இடது புறங்களில் அவரைக் காணாதபோது, "நாம் அறியோம், அவர் அறிவார்" என முழக்கமிடுவோம் (யோபு 23:8-10).

நாம் பாடுபடும்போது பிறரது வேதனைகளையும் உணர்வுகளையும் நன்கு உணர முடிகிறது (2 கொரிந்தியர் 1:4). உணர்வில்லாத ஆலோசனைக்காரரை "காரியத்துக்குதவாத வைத்தியர், அலட்டுண்டாக்கும் தேற்றரவாளர், வீணான ஆறுதல் சொல்வோர்"" என்றார் யோபு (யோபு 13:4; 16:2; 21:34). இந்நாட்களில் கம்ப்யூட்டர்கூடத்தான் ஆலோசனை தருகிறது! நமக்குத் தேவை "காயப்பட்ட வைத்தியர்களே!"

சிலுவையில் நொறுங்கிய இயேசு இன்று எவ்வளவாய் நம் புண்களுக்கு மருந்திடுகிறார்! அவர்போல் ஆறுதல் தருபவர் எவருமில்லையல்லவா? நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஆன்மீக வல்லமையும் பிரச்சினைகளின்போதுதான் துள்ளி எழுந்து செயல்படுகின்றன. பாம்பையும், வெறிநாயையும் பார்த்தால்தான் நாம் இத்தனை வேகமாக ஓடமுடியும் என்று நமக்கே தெரியும்! ஆழ்கடல் அனுபவம் நம்மை ஆழ்த்த அல்ல; ஆளாக்கவே! பாடுகளின் வேளைகள் வெளிப்பாடுகளின் வேளைகளே, வெறுமையான தீவு ஒன்றில் பொறுமையாய்ப் பாடனுபவித்தபோதுதான் வருங்காலத்தின் மகிமையான வெளிப்பாடுகள் யோவானுக்குக் கிடைத்தன (வெளிப்படுத்தல் 1:9)

எபிரேய உருவக மொழிகளை அறிந்து கொள்ளுதல் - 2

6. உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுங்கள். (மத் 10.14)


இயேசுக்கிறிஸ்து தனது சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது ”எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்” இது அக்காலப் பிண்ணனியில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். யூதர்கள் வழமையாக புறஜாதியருடைய பட்டணங்களுக்கூடாக பிரயாணம் செய்திருந்தால் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிவரும்போது தமது கால்களில் படிந்துள்ள தூசியை நகர எல்லையில் உதறிப் போடுவார்கள். யூதர்கள் புறஜாதியாரை அசுத்தமானவர்களாக கருதியமையால் அவர்கள் வாழும் இடங்களும் அசுத்தமானவையாக கருதினர். இனால் அவர்களின் பட்டணங்களினூடாக செல்லும்போது அப்பிரதேச மண்ணில் பட்ட தமது கால்களை அசுத்தமாகிவிட்டதாகக் கருதி தம்மை சுத்திகரிக்க இவ்வாறு செய்தனர். சில சந்தர்ப்பங்களில் தாம் அணிந்திருக்கும் ஆடைகளையும் உதறுவர். யூதர்கள் புறஜாதியினரை அசுத்தமானவர்களாகவும் இறை இராஜ்யத்திற்குப் புறம்பானவர்களாகவும் கருதினர். ஆனால் இயேசுவின் பார்வையில் நற்செய்தியினை நிராகரிப்பவர்களே அசுத்தமானவர்களாகவும், இறை இராஜ்யத்திற்குப் புறம்பானவர்களாகவும் இருந்தனர். இதன்மூலம் யூதர்கள் எப்படி புறஜாதியினரை நடத்தினார்களோ அதேவிதமாக நற்செய்தியினை நிராகரிப்பவர்களிடம் நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு இயேசுவின் அடுத்த வசனத்தின் அடிப்படையில் இது ஒரு தீர்க்கதரிசன அடையாளச் செயலாகவும் உள்ளது. அதாவது நற்செய்தியினை நிராகரிப்பவர்கள் மீது வரவிருக்கும் தண்டனையை அறிவிக்கும் ஒரு அடையாளச் செயலாக உள்ளது. .



7. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 4)



அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?(லூக் 11.11-12)
அடுப்பின் எரிபொருட்களாக காய்ந்த புல் (மத் 6.30) முட்செடிகள் (பிர 7.6) போன்றன பயன்படுத்தப்படும். இவ்வாறு அப்பஞ்சுடும் கல்லை சூடாக்கி அப்பத்தினை சுடும்போது அடுப்பின் சாம்பல், தூள்கள் காரணமாக அவை அப்பத்தின் மீது படிவதனால் அப்பம் நிறம்மாறி கூழாங்கல் வடிவத்திலேயே காணப்படும். அத்தோடு பலஸ்தீனாவிலுள்ள தேள்கள் வெண்மையாகவும் முட்டை வடிவத்திலேயும் சுருண்டு காணப்படும். இப்படியிருக்கும்போது பொல்லாதவர்களாகிய (அதி 6.5, சங். 51.5) மனிதர்களே தமது பிள்ளைகளை ஏமாற்றாது நல்ல ஈவுகளைக் கொடுக்கும்போது இறைவனை நோக்கி உண்மையாக வேண்டுதல் செய்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் மூலமான நன்மையான ஈவுகளை (மத் 7:11, லூக் 11:13 அவர் கொடுப்பது அதிக நிச்சயம் என்பதை மறுப்பதற்கில்லை



9. இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி. 3:8)4)



பாலஸ்தீன வீடுகளின் கதவுகள் காலையிலிருந்து மாலைவரை திறந்தவாறே காணப்படும். வீட்டில் இல்லாத பட்சத்திலும் இரவு வேளைகளில் மட்டுமே கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். வீட்டின் கதவு திறந்திருந்தால் வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும் நாம் சென்று அவர்களோடு உரையாடத் தடையில்லை என்பதும் நி்ச்சயமானதாகும். இதனூடாக நாம் அறிந்து கொள்வது யாதெனில் நாம் தேவனிடம் செல்வதற்கு அவரது வாசல் எப்போதுமே திறந்திருப்பது மட்டுமல்ல அவர் எவ்வேளையிலும் நம்மை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறார். எனவே நாம் தேவனை எப்போதும் சந்தித்து உரையாடலாம்.




10. ஒருவனும் கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைக்க மாட்டான் (மத் 9:16)4)



கோடித்துண்டானது ஒருமுறையாவது துவைக்கப்படாத புதிதான சேலைத் துணியைக் குறிக்கும். பழைய துணியிலுள்ள கிழியலை மறைப்பதற்காக புதிய துணியை இணைப்பர். அப்பழைய துணியினை துவைத்த பின் அதில் இணைத்த புதிய சேலைத் துணியானது சுருங்கும். அப்போது முன்பிருந்ததை விட அதிகமான கிழியல்கள் பழைய துணியில் உண்டாகும்.



கிறிஸ்து இதனை ஏன் கூறினாரென்பதை சற்று நோக்குவோம். ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு முன் உபவாசமிருக்க வேண்டும் என்பது பரிசேயரது போதனையாயிருந்தது. எனவேதான் யோவானது சீஷர் இயேசுவிடம் வந்து உம்முடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பது என்ன எனக் கேட்டார்கள். எனவே கிறிஸ்து பரிசேயரது போதனையை நிராகரித்து இரட்சிப்பிற்காக உபவாசமிருப்பதல்ல. மாறாக இரட்சிக்கப்பட்ட பின்பே உபவாசமிருக்க வேண்டும் (மத் 9:14)எனக் கூறுவதோடு பரிசேயரது போதனையையும் தனது போதனையையும் எவ்விதத்திலும் இணைக்கவோ இல்லது இணையாக கைக்கொள்ளவோ முடியாது என்ற கருத்துப்படக் கூறினார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. கிறிஸ்துவின் போதனையை மட்டுமே நாம் கைக்கொள்ள வேண்டும். அதன் மூலமே இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.



11. ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.(Luke 9:59)4)



இயேசுக்கிறிஸ்து ஒருவனைக் கண்டு தன்னைப் பின்பற்றி வரும்படி கூறியபோது ஒருவன் அவருக்கு கொடுத்த பதிலே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே அவன் தகப்பன் மரித்திருக்கவில்லை. அம்மனிதன் கூறிய சாட்டுப்போக்கிற்காகவே இக்கூற்று உள்ளது. வேலைக்கள்ளிக்குப் “பிள்ளை சாட்டு என்பது போல“ இதனையும் எடுத்துக் கொள்ளலாம்.




Reference:
1. இராபின்சன் ஞான. இஸ்ரவேலரின் வரலாறு இரண்டாம் பாகம் மதுரை – மதுரை கிறிஸ்தவ இறையியில் நூலோர்
குழு, 1965
2. வசந்தகுமார், எம்.எஸ், புனித வேதாகமத்தின் புனித வரலாறு. கண்டி, இலங்கை இலக்கிய சேவை, இலங்கை
வேதாகமக் கல்லூரி, 1996
3. செனஞானம், கா.தா, புதிய ஏற்பாட்டு அறிமுகம், மதுரை, கிறிஸ்தவ இறையில் நூலோர் குழு, 1996
4. டெனி, மெரில் சி. புதிய ஏற்பாட்டு அறிமுகம்(மொழிமாற்றம்) பேராதனை: இலங்கை வேதாகமக் கல்லூரி
வேதவியாக்கியான பிரிவு
5. Alexander, Pat The Lion Encyclopedia of the Bible, England : The Lion Publication, 1978
6. David. The Lion Hand Book to the Bible England : The Lion Publication, 1973
7. Gleason L. Archer, A Survey of Old Testament Introduction (Revise and Exampled) Chicago : Moody Press, 1994
8. Freeman, James M, Manners and Customs of the Bible. New Jersey. Logos International, 1972