நூல் : வேதாகமப் பிண்ணனி
கட்டுரையாசிரியர் : கலேப் ஸ்ரீ கர்ணகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி
இன்றைய உலகில் வாழும் வெவ்வேறுபட்ட மக்களிடையே வெவ்வேறு கலாசாரங்கள் நிலவுவதை காணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஜாதியினரும் குறிக்கப்பட்ட சமுதாய, கலாசார அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கைப் பின்னணி உடையவர்களாயுள்ளனர். அதேபோல் வேதாகம பூமியில் வாழ்ந்தவர்களிடையேயும் இவ்வாறான கலாசாரங்கள் நிலவியது. குறிப்பாக இஸ்ரவேல் மக்களிடையே வேறுபட்ட கலாசாரங்கள் காணப்பட்டன. வேதாகம பூமியில் வாழ்ந்த மக்களுடைய கலாசாரம், பழக்கவழக்கம் என்பவற்றை கற்பது எமக்கு வேதாகமத்தை விளங்கிக் கொள்ள உதவியாயிருக்கும். இக்கட்டுரையில் இஸ்ரவேல் மக்களுக்கிடையே காணப்பட்ட கலாசார பின்னணிகளை வேதாகம ஆதாரங்களுடன் நோக்குவோம்.
வேதாகம பூமியில் வாழ்ந்த மக்கள் ஆதியில் கூடாரவாசிகளாகக் காணப்பட்டனர். (ஆதி 4:20) தங்கள் மனைவி பிள்ளைகளுடன் கூடாரங்களிலேயே தங்கியிருப்பார்கள். பிரயாணத்தின்போதும் இடம் விட்டு இடம் மாறும்போதும் ஆங்காங்கே கூடாரம் போட்டுக் கொள்வது வழக்கம் (எண் 24:2, 2 சாமு 11:11) கட்டப்பட்ட வீடுகளிலும் குடியிருந்தார்கள். சில வீடுகள் ஒரு அறை கொண்டதாகவும் (1 இராஜா 17:18-19) சில ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் உள்ள வீடாகவும் காணப்பட்டது. (2 சாமு. 17:18, 19). வீட்டின் கூரை மெத்தையாகவும் சுற்றி சுவர் கைப்பிடி உள்ளதாகவும் காணப்பட்டது. (உபா 22: அறையில் யன்னல்களும் காணப்பட்டன. (ஏசா 9:10) இருட்டில் வெளிச்சத்திற்கு விளக்கு பயன்படுத்தினர். (மத் 5:15, ஏசா 42:3)
அவர்கள் அன்றாட உணவில் அப்பம் அதிகமாக காணப்பட்டது. (ஏசா 4:15-17) உணவை சமைப்பதற்கு மாட்டுச்சாணி வறட்டி (எசே. 4:15), காட்டுப்புல் (லூக் 12:28) முள்(பிர 7:6) நெருஞ்சில் (ஏசா 9:18) போன்றவை எரிப்பதற்கும் உபயோகிக்கப்பட்டன. மரத்தினால் வீட்டின் கூரையை செய்து (1 சாமு 9:26) மேலே சணல் தட்டைகளைப் பரப்பி கூரையின் கரையில் வைப்பார்கள். (மத் 24:17) வீட்டின் மேல் ஏறி இறக்கக் கூடியதாகவும், உள்ளே இறங்கக் கூடியதாகவும் நடுவில் வழியும் இருந்தது (மாற் 2:4)
இவர்களுடைய சாதாரண நாளாந்த உணவு அப்பம். அதோடு ஒலிவம் எண்ணெய், மந்தையில் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், பால்கட்டி (2 சாமு 17:28,29) மரக்கறி, இறைச்சி வகை போன்றவையும் காணப்பட்டன. (லேவி 23:14, 2 இராஜா 4:42) அடை ( 1 இராஜா 19:6) கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, திணை, கம்பு (எசே. 4:9) தேன் (2 சாமு 17:28) இன்னும் சில தானியங்களும் காணப்பட்டன. (ஆதி 25:33,34, நாகூம் 11:5, ஏசா 1:8, யோவா 4:6-10, 2 இராஜா 4:39, தானி 1:18, நியா 4:19, 5:25) குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட்டன. (ஏசா. 28:9) பசும்பால் மட்டுமல்ல ஆட்டுப்பாலையும் பயன்படுத்தினர். (உபா 32:14)