- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 30 December 2011

பாலியலின் வல்லமை


அறிமுகவுரை
எங்கள் சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையிலான உறவுகளில் அநேக சிக்கலான பிரச்சினைகளை காணக்கூடியதாக காலமாகவிருக்கிறது. திருமறை நியதிகளுக்கு இசைவாக எதிர்பாலாருடன் எவ்வாறு தொடர்புகளை வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறித்து குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்க முடியாத சமுதாயத்தின் போக்கை  இலகுவாக பின்பற்றுபவர்களாகிவிடுவார்கள். 

பாலியலின் வல்லமை

........மகி்ழ்ச்சியான திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஆண்கள் அநேகர் தமது பாலியல் தன்மையை குறைத்து கணிப்பிட்டதால் வேறு பெண்களுடன் மிகப் பெரிய தவறுகள் செய்ததை நான் அறிந்திருக்கிறேன்



நாம் ஒருபோதும் பாலியல் தன்மைக்கு இருக்கும் வல்லமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. உலகத்தில் உயிர்கள் தொடர்ந்து இருப்பதற்காக தேவனால் படைக்கப்படட ஒரு அற்புத வல்லமை இது. ஒரு ஆணின் பாலியல் தூண்டுகை விசேஷித்த வல்லமையுள்ளது. நீதிமொழிகள் 7ம் அதிகாரம், பாலியல் கவர்ச்சியின் காரணமாக பாலியல் பாவத்துக்குள் இழுப்புண்டு போகும் ஒருவன், ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது போல(நீதி. 7:22) போகிறான் என்று விளக்குகின்றது. தங்களது கணவன்மாரின் பாலியல் தன்மையைக் குறித்து மனைவிமார் அறியாமையுடன் இருப்பது குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். தங்கள் கணவன்மார் சோதனையில் விழுந்துவிடத்தக்க சூழ்நிலைகளிலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய இந்த மனைவிமார் அனுமதிக்கிறார்கள். வீட்டிலுள்ள இளம் பணிப்பெண்களுடன் தமது கணவன்மாரை அநேக நாட்களுக்கு தனியே விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் தேவபிள்ளைகள் என்பதால் அவர்களை நம்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகளையும் , தூண்டுதல்களையும் இது இல்லாமல் செய்யாது. ஏனெனில் இது அவர்களுக்குள் இருக்கும் தன்மையாகும். திருமணமான ஆண்கள் தமது மனைவியுடன் திருமணத்திற்குள் வலிமையான பாலியல் தூண்டுதல் உள்ளவர்களாக படைத்துள்ளார். ஆகவே திருமண பந்தத்துக்குள் பாலியலை அனுபவிக்கலாம். பாலியல் தூண்டுதல் தேவனுடைய கொடையெனில், தேவபக்தி அதனைக் குறைத்துவிடக்கூடாது. 


ஆகவே, ஒரு ஆண் பாலியல் காரியங்களை பரீட்சை பார்க்கத் துணியக்கூடாது. இது மிகவும் வல்லமையுள்ளதாய் இருப்பதால் இதைக் குறித்து அசட்டையாகவும் இருக்க முடியாது. திரும்பவும் நான் சொல்வது என்னவெனில். இந்தப் பகுதியில் “பின்னர் கவலைப்படுவதைவிட மு்ன்னர் கவனமாயிருத்தல்“ நல்லது. இதற்கான முக்கிய பங்களிப்பு மனைவிடமே உள்ளது. வேறொரு பெண்ணுடன் தன் கணவர் ஈடுபடும் காரியம் தனக்கு விருப்பமில்லையென்பதை எப்பொழுது சொல்லவேண்டும் என்று அவள் அறிந்திருக்க வேண்டும். கணவன் செய்யும் ஒரு காரியம் மனைவிக்கு பிடிக்கவில்லையெனில் அவள் அவனை குற்றம் சாட்டும்படியாக அதனைச் சொல்லக்கூடாது. சொன்னால் அவன் தன்னைத் தற்காக்கும் விதமாக நடந்துகொண்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்க ஏதுவாகி விடும். மகிழ்ச்சியான திருமண வாழ்வில் ஈடுபட்டிருந்த ஆண்கள் அநேகர் தமது பாலியல் தன்மையைக் குறைத்துக் கணி்ப்பிட்டதால் வேறு பெண்களுடன் பெரிய தவறுகளைச் செய்ததை நான் அறிந்திருக்கிறேன். 

சில கிழமைக்கு முன் எனக்குள் உண்டான ஒரு உண்மை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வேதாகமம், நாம் பாலியல் இன்பத்தை திருமணத்துக்குள்ளாக மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்று சொல்லுகிறது. ஆனால், சமுதாயமோ நாம் பாலியல் இன்பத்தை எப்பொழுது வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எம்மை அறியாமலேயே கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சிந்தனையினால் பாதிக்கப்பட்டுள்ளோம். 

உலகில் பாலியல் ரீதியாக மிகவும் கவர்ச்சியுள்ள ஆண்கள் பெண்கள் என்று பட்டியல் போடப்படுகின்றது. இந்த காரியத்திற்கான நியாய விளக்கம் என்னவெனில் இந்த அழகான மனிதர்களின் பாலியல் கவர்ச்சி முழு உலகத்திலுள்ளவர்களுக்கும் சந்தோஷம்படியாக கிடைக்கவேண்டு மென்பதாகும். அவர்களுடைய பால் தன்மையில் சந்தோஷப்பட எமக்கு உரிமையுண்டு என்று கருதப்படுகின்றது. எனவே, ஞாயிறு பத்திரிகைகள், சஞ்சிகைள் பாலியல் உணர்வுகளைத் தூண்டுத்தக்க விதத்திலான பெண்களின் படங்களைப் பிரசுரிக்கிறார்கள். ஆண்கள் அவற்றைப் பார்த்து திருப்பதியைப் பெற்றுக்கொள்வது எளிதாயிருக்கின்றது. 

நவீன ஆடைகளை வடிவமைப்பவர்கள் பெண்களின் உடலை கவர்ச்சிகரமானதாக்கி தமது வியாபாரத்தை முன்னேற்றுகிறார்கள். விளம்பரத்தின் வெற்றிக்கு பாலியல் பெரிதான செயல்விளைவைக் கொடுக்கின்றது என்பதை எமது நகரங்களில் காணப்டும் விளம்பரப் பலகைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பாடல்களின் வரிகளும், கதை, திரைப்படம் போன்றவற்றின் கருத்துக்களும் திருமணத்திற்கு அப்பாலான பாலுறவு சாதாரணமானதொன்று எனவும் சிலசமயம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அம்சம் எனவும் அர்த்தப்படும்படியாக அமைத்துள்ளன. பிலிப் ரயிக்கன் என்பவர் சில ஆராய்ச்சியின் அடிப்படையில், ஒரு சராசரி அமெரிக்கன் எல்லாவிதமான சந்திப்புக்களினூடாகவும் சிலேடை மொழியினூடாகவும் பாலியல் தொடர்பாக பத்தாயிரத்திற்குமதிகமான துணுக்குகளைக் காண்கிறான் என்று சொல்லுகிறார். மேலும், தொலைக்காட்சியில் காட்டப்படும் சோடிகளில் பத்தில் ஒருவருக்கு மேலாக திருமணத்திற்கப்பாலான பாலுறவைக் கொண்டவர்கள் என்றும் ரயிக்கன் கூறுகிறார். வேதாகமத்தின்படி இவை அனைத்தும் பாவங்கள். ஒரு பெண்ணை நாம் இச்சையுடன் பார்த்தாலே அது விபச்சாரம் என்று இயேசு சொல்கிறார். (மத். 5:28)


மிகவும் நெருங்கிப் பழகும் இருவர் தம் திருமணத்தைக் குறித்து சிந்திக்கும் முன்னரே ஒன்றாய் சேர்ந்து கணவன் மனைவி போல் வாழ்வது  இப்போது சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு பிரபலமான நடிகை பிரபல்யமான நடிகனொருவருடன் சேர்ந்து வாழச் சென்றுவிட்டாள் என்று கேள்விப்படும்போது நாம் அதனைக் குறித்து பெரிதுப்படுத்துவது கிடையாது. இவர்களே, வாழ்க்கையில் வெற்றியீட்டியவர்கள் என்று நமது வாலிபர்களால் கருதப்படுபவர்கள். ஆனாலும், வேதாகமத்தின்படி விபச்சாரம் எம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லும் (1 கொரி. 6:8-10) நரகமோ மிகவும் மோசமான இடம். இது மிகவும் பயங்கரமானதொன்று. ஒரு சுனாமியினால் ஆயிரக்கணக்கானோர் மடிந்து போவதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால் பிரபல்யமான மனிதர்கள் தம்மைத் தாமே  நரகத்திற்குள்ளானவர்களாக்கி, இன்னும்  அநேகரை அதே வழியில் செல்லத் தூண்டுவதை இட்டு எந்தவித சிந்தனையுமில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். 

எமது சிந்தனையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி வேதாகமம் சொல்வதில் எவ்வித விருப்பமில்லை. (எபே. 4:22-24, 1 தெச. 4:3-8, 2தீமோ 2:21-22, யாக். 4:6) நாம் தொடர்ந்து அருவருப்பின் அசுத்தங்களுக்கு முகங்கொடுக்கிறோம். ஆனால், அது எமக்கு அசுத்தமாக தெரிவதில்லை. அதுமட்டுமல்ல, அசுத்தமானது கணக்கெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்ற மனப்பாங்கிற்கு சென்றுவிட்டோம். இப்படியான ஒரு சூழலில் சோதனைளில் விழுந்து விடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாயுள்ளன. விபரச்சாரத்திற்கு எம்மை இட்டுச் செல்லும் வழுக்கலான பாதையில் நாம் முதலாவது அடியை எடுத்து வைத்துள்ளோம். இன்றைய உலகில் வாழும் மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான தவறான வாதமாகிய. பாலியல் இன்பத்தை பொருத்தனையுடனான அன்பு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்ற தற்கால கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இப்படியான இறையியல் கொள்கை மாற்றம் எமது சிந்தனையில் ஏற்பட்ட பின்னர் உக்கிரமான சோதனையை எம்மால் மேற்கொள்ள முடியாது. எம்மைச் சுற்றிலும் எப்பொழுதும் காணப்படும் அசுத்தங்கள் எமது சிந்தனைக்குள் போய்விடாமலிருக்க எம்மைச் சுத்தப்படுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பிப்பது எவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது. 


எதிர்பாலரைத் தொடுவது நாம் கவனமாயிருக்க வேண்டிய இன்னுமொரு அம்சமாகும். எதிர்பாலரைக் கட்டித் தழுவுவது இன்றைய நாட்களில் சபையில் சாதாரணமாகிவிட்டது. சில கலாசாரங்களில் இது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாய் இருக்கலாம். ஆனால். இது சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் போகலாம். இப்படி நடந்த சம்பவங்கள் அநேகம் உள்ளன. ஜெரி ஜென்கின்ஸ் என்பவர் நாம் யாரைக் கட்டி அணைக்கிறோம் என்பதனைக் குறித்துக் கவனமாயிருக்க வேண்டுமென்றும்., அதனை நாம் செய்யும்போது எம்மைச் சூழ மற்றவர்கள் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார். 

நாம் தவிர்க்க வேண்டிய மற்றுமொரு காரியம் நீண்ட கட்டித் தழுவல் ஆகும். அன்புக்குரிய தழுவலானது, மிகக் குறைந்த நேரத்தில் பாலியல் தொடர்பானதாக மாறிவிடலாம். நீங்கள் இப்படியான நீண்ட தழுவலினூடாக ஒருவரை ஆறுதல்படுத்தலாம். ஆனால் அதிலுள்ள ஆபத்துக்கள் அதிகமானது சோகத்திலுள்ள ஒருவருக்குத் தேவைப்படும் கடைசிக் காரியம், தான் மிகவும் விரும்பும் நபரிடமிருந்து வரும் குழப்பகரமான பாலியல் ரீதியான உறவாகும்.

ஜெபிக்கும்போது ஒருவரின் தலையில் கைகளை வைப்பது இந்நாட்களில் சாதாரணமானமொன்றாகும். இந்தப் பழக்கம் இலங்கையில் சில குழப்பங்களை ஏற்படுத்தியிருப்பதனால், நான் இதனை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஒருவருக்காக ஜெபிக்கும்போது அவரை எங்கே தொடுகிறோம் என்பதைக் குறி்த்து கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாலைச் சேர்ந்த ஒருவரது விடயத்தில் அவரது தலையை மாத்திரமே நான் தொடுவேன். அதுவும் நான் அவருடன் தனியாக இருந்தால் அதனைச் செய்ய மாட்டேன். ஆனால் இலங்கையிலுள்ள சில கிறிஸ்தவ தலைவர்கள் பொருத்தமற்ற இடங்களில் கைகளை வைத்து ஜெபித்து கிறிஸ்துவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளனர். 

பாலியலின் வல்லமை காரணமாக நாம் இந்தப் பகுதியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இலங்கையிலுள்ள மிகவும் சிறந்த கிறிஸ்தவத் தலைவர்களில் ஒருவரான கலாநிதி கோல்டன் விக்ரமரட்ன அவர்கள், உலகளாவிய ரீதியில் பெந்தகோஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தவரும் எண்பது வயதைக் கடந்த முதிர்ந்த தலைவருமான டேவிட் பிலோசிஸ் என்பரைச் சந்தித்த அனுபவத்தைச் சொல்கிறார். எப்பொழுது ஒரு மனிதன் தன் பாலியல் சோதனையிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கருதலாம் என்று கலாநிதி கோல்டன் அவர்கள் டேவிட் அவரிகளிடம் கேட்டாராம். அதற்கு அந்த வயோதிப கிறிஸ்தவ வீரன் “என்னைக் கேட்கவேண்டாம். இந்ததக் கேள்விக்குப் பதிலளிக்க நான் மிகவும் இளமையானவன்“ என்று பதிலளித்தாராம். 

இவ்வாக்கமானது கலாநிதி அஜித் பெர்ணான்டோ (Director, Youth for Christ(Sri Lanka)) அவர்கள் எழுதிய “உணர்வு பூர்வமான நடத்தை : முன்யோசனையின்றி ஏற்படக்கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி?“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு  Youth for Christ Publication தமிழில் மொழிபெயர்த்தவர் கலாநிதி அன்பழகன் அரியதுரை)

Saturday 24 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா? (4)(இறுதிப் பகுதி)

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க பகுதி 1, பகுதி 2  பகுதி 3 அழுத்துங்கள்


கன்னிப் பிறப்பு உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வாதிடுவது போல, மாற்குவும் யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி தங்களுடைய நற்செய்தி நூல்களில் குறிப்பிடாதது, இயேசுவின் கன்னிப் பிறப்பு நம்பகமானதல்ல என்பதற்கான சான்று அல்ல. இவர்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி மட்டுமல்ல. அவருடைய பாலிய பருவத்தைப் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லையே. இதை வைத்துக் கொண்டு, இயேசுவுக்கு பாலிய பருவம் என்றொன்று இருக்கவில்லை என்று கூறமுடியுமா? எனவே இவர்கள் இருவரும் (மாற்குவும் யோவானும்) இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாதது, மத்தேயுவும் லூக்காவும் எழுதியுள்ளது போல இயேசுவின் பிறப்பு நிகழவில்லை என்பதற்கான ஆதாரமாகிவிடாது. மேலும், பேதுருவி்ன பிரசங்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவின் சுவிஷேசம் பேதுருவின் பிரசஙகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவி்ன் சுவிசேஷம். பேதுருவின் பிரசங்கத்தில் கன்னிப்பிறப்பு இடம் பெறாமைக்கான காரணம், றொகர்ஸ் சுட்டிக்காட்டியதுபோல, “மரியாள் அக்காலத்தில் உயிரோடிருந்தமையும், இயேசுவின் பிறப்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தமையுமேயாகும்.“ எனினும் மக்களுடைய வாயிலிருந்துகூட இயேசுவை யோசேப்பின் மகன் என கேட்க விரும்பாத மாற்கு, மக்களுடைய கருத்தை எழுதும்போது இயேசுவை “மரியாளின் குமாரன்“ (மாற். 6:3) என குறிப்பிட்டுள்ளமை, மாற்கு இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தார் என்பதையே புலப்படுத்துகின்றது. 

மாற்குவைப் போலவே யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி எழுதவில்லை. காரணம் மற்றைய மூன்று நற்செய்தி நூல்களும் எழுதப்பட்ட பின்பே யோவான் தன்னுடைய நூலை எழுதினார். .இதனால் மக்கள் அறிந்திருந்த விடயங்களை மறுபடியுமாக எழுதுவதை அவர் தவிர்த்துள்ளார். மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பைப் பற்றி தேவையான அனைத்துயும் ஏற்கனவே எழுதியிருந்தமையினால் யோவான் அவற்றை மறுபடியுமாக தன்னுடைய நூலில் சேர்த்துக் கொள்ளவில்லை. றொகர்ஸ் இதைப் பற்றி விளக்கும்போது “மக்கள் அறிந்தவற்றை மறுபடியுமாக எழுதுவது அவசியமற்றது. மற்றைய நற்செய்தி நூல்களில் இடம்பெறாதவைகளை எழுதிய யோவான் அவைகளில் உள்ளவற்றை மறுத்துரைக்கவுமில்லை. மட்டுல்ல. அக்காலத்தில் மக்கள் கன்னிப்பிறப்பு ஏற்றுக் கொண்டிருந்தமையால் அதைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கவில்லை“ என்று அறியத் தந்துள்ளார். எனினும் ஆதியிலிருந்தே தேவனோடு இருந்த வார்த்தை (1:1) மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். (1:14) என இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிவிக்கும் யோவான் இயற்கைக்கும் அப்பாற்பட்ட முறையில் இயேசு உலகிற்கு வந்ததை பல்வேறுப்பட்ட முறைகளில் வர்ணித்துள்ளார். ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியது போல “பரலோகத்திலிருந்து வருகிறவர் (3:31) வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம் (6:51) தேவனால் அனுப்பப்பட்டவர்(3:34) போன்ற சொற்பிரயோகங்கள் அவருடைய பிறப்பு சாதாரணமானதல்ல என்பதையே அறியத்தருகின்றன.“ மேலும், “இயேசு சிலுவையிலறையப்பட்டதிலிருந்து, மரியாள், கடைசிவரை யோவானுடைய பாரமரிப்பில் இருந்துள்ளமையால் (யோவான 19:26-27) யோவான் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறியாதிருந்தான் என வாதிடுவது அர்த்தமற்றது“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

யோவானைப் போலவே அப்போஸ்தனாகிய பவுலும் இயேசுவின் இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பை வர்ணித்துள்ளார். “.இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்( 1 கொரி. 15:47) தாவீதின் சந்ததியில் பிறந்தவர் (ரோமர் 1:5) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 தீமோ. 3:16) என இயேசுவைப் பற்றி எழுதியவர், அவருடைய கன்னிப் பிறப்பைக் குறிப்பிட, “காலம் நிறைவேறின போது ஸ்திரியினிடத்திற் பிறந்தவர் (கலா. 4:5) என அறியத் தந்துள்ளார். நற்செய்தி நூலாசிரியர் லூக்காவின் நண்பான இருந்த பவுல், லூக்காவின் மூலமாக இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி அறிந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அனைவருமே இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் இதைப் பற்றி அதிகம் எழுதாதபோதிலும் அவரக்ள் எழுதியுள்ளவைகள் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கு போதுமான ஆதாரங்களாக உள்ளன. அனைவருடைய குறிப்புகளிலும் காணப்படும் ஒற்றுமை, இவ்வுபதேசத்தைப் பற்றி சந்தேகப்படுவது அவசியமற்றதும் அர்த்தமற்றதுமான செயல் என்பதையே அறியத தருவதாயுள்ளது. 

கன்னிபிறப்பு உபதேசம் நம்பகமானது என்பதற்கு, புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் குறிப்புகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றுதலாக இது இருப்பதும் மேலதிகமானதொரு ஆதாரமாக அமைகின்றது. மேசியா இவ்வுலகிற்கு எவ்வாறு வருவார் என பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் முன்னறவித்திருந்தனவோ, அதேவிதமாக இயேசு மனிதனாக இவ்வுலகுகக்கு வந்துள்ளதை புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். இயேசுவின் மானிட பிறப்பைப் பற்றிய முதல் தீர்க்கதரிசனம் ஆதியாகமம் 3:15 இல் உள்ளது. இதில் இயேசுகிறிஸ்து “ஸ்திரியின் வித்தாக“ குறிப்பிடப்பட்டுள்ளார். ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக்காட்டியது போல, “இயேசுகிறிஸது ஸ்திரியின் வித்தாக இவ்வுலகிற்கு வந்தாரேயன்றி, பொதுவாக இனப்பெருக்க முறையின்படியான ஆணின் வித்தின் மூலமாக அல்ல“ அதேபோல மேசியாவின் பிறப்பைப் பற்றிய இன்னுமொரு தீர்க்கதரிசனப் பகுதியான மீகா 5:2-3 இலும் பெத்லகேமில் பிறக்கும் இஸ்ரவேலை ஆளும் பிரபுவினுடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது, ஆனாலும் பிரசிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும் அவளை ஒப்புக்கொடுப்பார்“ என காணலாம். இவ்வசனத்தில் ஜோன் பெவென்கர்க் சுட்டிக் காட்டியது போல “பிரசவிக்கிறவள் மரியாளைக் குறிக்கிறது“ என்பது உண்மையே. இதனால் தான் பவுலும் இயேசுவை ஸ்திரியிடத்தில் பிறந்தவர் (கலா. 4:5) என குறிப்பிட்டுள்ளார். 

தீரக்கதரிசன நிறைவேறுதல் கன்னிப் பிறப்பு உபதேசத்தை எவராலும் மறுக்க முடியாது. ஸ்திரியின் வித்தாக முன்னறிவிக்கப்பட்ட அவர் (ஆதி. 3:15) கன்னிப்பெண் மூலமாக பிறப்பார் எனும் தீர்க்கதரிசனத்தின்படி (ஏசா 7:14) ஸ்திரியினிடத்தில் பிறந்தார்(கலா. 4:5) கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என அறியத்தரும் மத்தேயு “தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (1:22) என கூட்டிக்காட்டிவிட்டு கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவாள் என எசாயா 7:14 இல் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தைக் குறிப்பி்ட்டுள்ளார். (1:23) கன்னிப்பெண் கர்ப்பவதியாளவாள் என கூறப்பட்டது, பரிசுத்தாவியினால் கர்ப்பவதியாகி இயேசுவைப் பெறுவதில் நிறைவேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் ஏசாயா உண்மையிலேயே கன்னிப் பெண்ணைப் பற்றி குறிப்பிட்டிருந்தால் “பெத்உல்லா(bethulah) எனும் எபிரேயப் பதத்தினையே உபயோகித்திருக்க வேண்டும். மத்தேயு கன்னிப்பெண்ணைக் குறிக்கும் “பார்தினொஸ் (Parthenos) எனும் கிரேக்க பதத்தை உபயோகித்தது பிழை. அவர் திருமண வயதையடைந்த இளம்பெண்ணைக் குறிக்கும் கிரேக்க பதமான “நியானிஸ்” சையே(neanis) உபயோகித்திருக்க வேண்டும் என வாதிடுவோரும் உண்டு.

கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏசாயா உபயோகித்த பதமான “அல்மா“வின் (almah) சரியான அர்த்தம் என்ன என்பத பற்றிய தர்க்கம் நிலவிருவது உண்மையே. எனினும் எபிரேய மொழிவல்லுநரும், இறையிலளாளரும் ஏற்பாடடு வேதப்பண்டிதருமான மறைந்த ஈ.ஜே.யங் என்பார் தெரிவித்ததுபோல ஏசாயா உபயோகித்த “அல்மா“ எனும் பதம், பழைய  ஏற்பாட்டிலோ அல்லது மற்றைய எபிரேய இலக்கியங்களிலோ திருமணமான பெண்ணைக் குறிக்க உபயோகிக்கபடவேயில்லை. மட்டுமல்ல, எப்போதும் கன்னிப்பெண்ணை மட்டுமே குறிக்கும் பதமும் எபிரேய மொழியில் இல்லை. அத்தோடு ஏசாயா 7:14 இல் உள்ள பதத்திற்கு இணையான ஆங்கில வார்த்தையும் இல்லை. இப்பதம் ஆங்கிலத்தில் demsel (இளம் பெண்) அல்லது maiden (சிறுமி) எனும் அர்ததங்களையே தரும். எனினும் இப்பதங்கள் திருமணமான பெண்களுக்குப் பொருத்தமற்றது. என்பதும் உண்மையே. “அல்மா“ எனும் பதம் திருமண வயதையடைந்த இளம் பெண்யையே குறிக்கின்றது என்றாலும் ஆதி 24:43, யாத். 2:6, சங். 68:25, நீதி. 30:19, உன். 1:3, 6:8 வசனங்களில் இப்பதம் திருமணமாகாத கன்னிப்பெண்களைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளமையால் ஏசாயா 7:14 இலும் இதே அர்த்த்ததுடனேயே உபயோகிக்க்பபட்டிருக்க வேண்டும். “பழைய ஏற்பாட்டில் இவ்விடங்களில் மட்டுமே “அல்மா“ எனும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது“ என கூறும் ஹென்றி மொரிஸ், “இப்பதத்தின் சரியான அர்த்தம் சர்ச்சைக்குரியதாகயிருந்தாலும், வேதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இடங்களில் கன்னிப் பெண்ணைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல சில இடங்களில் இதைத் தவிர வேறு அர்த்தங்கள் இல்லாததாகவும் உள்ளது என அறியத் தருகிறார். மேலும், வில்லியம் ஹென்றிக்சன் சுட்டிக்காட்டியது போல, “சில சமயங்களில் திருமணமான பெண்ணைக் குறிக்கவும், அதேசமயம் க்னனிப் பெண்ணைக் குறிக்கவும் உபயோகிக்கப்படும் எபிரேய பதமான “பெத்உல்லா“ ஏசாயா 7:14 குறிப்பிடப்படாதது, எப்போதும் கன்னிப் பெண்ணை மட்டுமே குறிக்கும் கிரேக்க பதமான “பார்தினொஸ்“ மத்தேயுவினால் உபயோகிக்கப்பட்டது. இயேசு க்னனிப் பெண்ணான மரியாளிடம் பிறந்தது உண்மை என்பதற்கான ஆதாரமாகின்றது. மட்டுமல்ல. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பழைய ஏற்பாட்டு முதன் முதலில் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க்பபட்ட போது இப்பணியை மேற்கொண்ட 70 மொழியில் வல்லுநர்களும் ஏசாயா 7:14 இலுள்ள “அல்மா“ கன்னிப் பெண் என்பதனால் அதை சரியான விதத்தில் “பார்த்தினொஸ்“ என மொழிபெயர்த்துள்ளனர். இதுவும் ஏசாயா கன்னிப் பெண் கர்ப்பவதியாவதைப் பற்றியே எழுதியுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்பகமானது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத அறிவியலாளர்கள், வேதத்தில் உள்ள கன்னிப்பிறப்பு புராணக் கதையொன்றின் தழுவல் என வாதிட்டு வருகின்றனர் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாம் பின்தங்கிய மூடக்கொள்கையுடைய காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலை நம்பமுடியாது என தர்க்கின்றனர். எனினும் இறையியல் அகராதி சுட்டிக்காட்டுவது போல், “இயேசுவின் கன்னிப் பிறப்புக்கு இணையான கதைகள் எதுவும் ஆதிகால புராணங்களில் இல்லை. என்பது உண்மையே. புராணங்களில் உள்ள கதைகள் தேவர்களுக்கும் மானிட பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளைப் பற்றி வர்ணித்தாலும் அப்பிள்ளைகள் பாதி மனிதனாகவும் பாதி தேவனாகவும் இல்லையென்றால் பாதி மனிதனாகவும் பாதி மிருகமாகவும் இருந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் இயேசு கிறிஸ்து இப்படிப்பட்டவராக இவ்வுலகத்தில் இருக்கவில்லை. அவர் முழுமையான  மனிதனாகவும் அதேசமயம் முழுமையான தேவனாகவும் இருந்தார். மட்டுமல்ல வே நூல் ஆசிரியர்கள் புராணக கதைகளை எழுதவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, புராணக் கதைகளை விட்டு விலகச் சொல்லி, மக்களுக்கு கட்டளையிட்டவர்கள், தங்களுடைய புத்தகங்களில் புராணங்களை எழுதினார்கள் என்று சொலவது அர்த்தமற்றது. “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோ. 4:7) என கட்டளையிட்ட பவுல் “
வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும்முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,(1 தீமோ. 1:3) ,இயேசுவின் கன்னிப்பிறப்பு புராணக்கதையாயிருந்தால் அதையும் விடடுவிலகச்சொல்லி கட்டளையிட்டிருந்திருப்பார் என்பதையே புலப்படுத்துகின்றது. ஆனால், தன்னுடைய நண்பனான லூக்கா இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி எழுதியவைகள் சரித்திரபூர்வமான உண்மையாயிருந்தமையினாலேயே இயேசுவை “ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்“ (கலா. 4:5) என்று குறிபபிட்டு, கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அது புராணமாயிருந்திருந்தால் அவர் நிச்சியம் அதை நம்ப வேண்டாம் என எழுதியிருப்பார். 

ஆதிச்சபை விசுவாசிகள் புராணத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு அவை உண்மையல்ல என்று அறிந்து, ஜீவிக்கும் மெய்யான தேவனை சேவித்தவர்கள். இயெசுவின் பிறப்பு புராணமாயிருந்திருந்தால் அவர்கள் அதை நம்பயிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் கன்னிப்பிறப்பை நம்பியவர்கள், இவர்களைப் ப்றறி பவுல் எழுதும்போது “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிப்பவர்கள் (1 தெச. 1:9-10) என குறிப்பிட்டுள்ளார். விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திருப்பியவர்கள்“ என கூறும்போது அம்மதங்களின் புராணக் கதைகள் அனைத்தையும் பொய்யென்று கருதியமையே ஜீவனுள்ள உண்மையான தேவனை நம்ப காரணமாயமைந்தது என்பதையே புலப்படுத்துகின்றது. எனவே, இயேசுவின் கன்னிப் பிறப்பு புராணமல்ல உண்மைச் சம்பவம் என்பதை அறிந்து ஏற்றுக் கொண்டவர்களே இவர்கள் என்பதில் எவ்வித சநதேகமுமில்லை. மேலும் ரேமண்ட் பிரவுண் என்பார் குறிப்பிட்டது போல “இயேசுவின் தாய்,ஈ சகோதரர், குறிப்பாக யாக்கோபு என்போரது பிரசன்னம் (அப். 1:14, 15:13, கலா. 1:19, 2:9) இயேசுவின் பிறப்பைப் பற்றிய புராணக்கதைகள் உருவாவதை நிச்சியம் தடுத்திருக்கும்“ மட்டுமல்ல சரித்திராசிரியரும் வைத்தியருமான லூக்கா “சகலவற்றையும் திருவிசாரித்தறிந்த தன்னுடைய நற்செய்தி நூலை எழுதிள்ளமையும்( 1:1-4) அவர் புராணக் கதையை எழுதியிருக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. இயேசுவின் கன்னிப்பிறப்பு உண்மைச் சம்பவம் எ்னபதனாலேயே ஆதிச்சபை இதை விசுவாசப் பிரமாணத்தில் சேர்த்துக் கொண்டது. இதைப் பற்றிய வேதாகமக் குறிப்புகளும் முற்றிலும் நம்பகமானவை. இயேசுவின் கன்னிப்பிறப்பு எவருடைய கற்பனையுமல்ல. மாறாக கற்பனைக்கும் எட்டாத அற்புத தேவன் தன் மைந்தனை இவ்வுலகுக்கு அனுப்பிய உண்மைச் சம்பவமாகும். 
.

(இ) அதன் அவசியம்




கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தையும் அதற்கான ஆதாரங்களையும் கடந்தமுறை பார்த்தோம். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்தானா? என நாம் வினவலாம். சிலர் இவ்வுபதேசம் முக்கியமானதொன்றல்ல. இதை நம்புவதும் நம்பாமலிருப்பதும் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. ஒருவன் இரட்சிப்படைவதற்கு இவ்வுபதேசத்தைப் பற்றிய அறிவு அவசியமற்றது. எனவே இதைப்பற்றி அதிகளவு அலட்டிக் கொள்ளக்கூடாது என கருதுகின்றனர். எனினும் இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் - அது அவசியமற்றது என வாதிடுபவர்கள், இவ்வுவதேசத்தைக் கற்பனைக் கதை என கருதுபவர்களே என்றால் அது மிகையாகாது. மட்டுமல்ல, லொறேன் பொயிட்னர் குறிப்பி்ட்டது போல, “இயேசுவின் கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவன், வேதத்திலுள்ள மற்றைய அற்புத சம்பவங்களையும் நம்பாதவனாகவே இருப்பான். “எனவே இவ்வுபதேசததைப் பற்றிய ஒரு மனிதனுடைய நம்பிக்கை மிக மிக முக்கியமானது. மேலும், இவ்வுபதேசம் கிறிஸ்துவைப் பற்றிய மற்றைய உபதேசங்களுடன் தொடர்புடையதாயிருப்பதனால் இதை அவசியமற்ற உபதேசம் என நம்பாமல் ஒதுக்கிவிட முடியாது, ஜேம்ஸ் ஓர் தெரிவித்தது போ, “கிறிஸ்துவைப் ப்றிய நாம் விசுவாசிப்பவைகளில் இருந்து, கன்னிப்பிறப்பை பற்றிய நம்பிக்கை பிரித்துவிட முடியாது“ என்பதை மறுப்பதற்கில்லை. முதலாவதாக, கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மையுடன் (Divinity) தொடர்புடையது, இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பது அவருடைய தேவத்துவத்தை மறுதலிப்பதாகும. இயேசு தேவனாயிருந்தமையால், சாதாரண பிறப்பு மூலம் அவர் இவ்வுலகத்திற்கு வந்திருக்க முடியாது. இதனாலேயே இயற்கைக்கம் அப்பாற்பட்ட கன்னிப்பிறப்பு அவசியமாகியது, “இயேசுவின் தேவத்துவத்தை மறந்துவிடுதவாயேயே கன்னிப்பிறப்பின் நிஜத்தையும் அவசியத்தையும் அநேகர் மறந்துவிடுகின்றனர்“ என லெறேன் பொயிட்னர் அறியத்தருகிறார். இயேசுகிறிஸ்து தேவனாக இருப்பதனால் அவருடைய கன்னிப்பிறப்பை பறறிய நம்பிக்கை நம்முடைய விசுவாசப்பிரமாணத்திற்கு அவசியமாயுள்ளது மட்டுமல்ல, கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பவன் அவருடைய தேவத்துவத்தையும் மறுதலிப்பதனால்ஈ யோவான் சுட்டிக் காட்டுவதுபோல அத்தகைய மனிதன் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவியை உடையவனாகவே இருப்பான். (1 யோவான் 4:1-3) கன்னிப்பிறப்பைப் பற்றிய நம்பிக்கை “மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை தேவன் என அறிக்கையிடுவதற்கான சான்றுகளுள் ஒன்றாய் அமைவதோடு, நாம் தேவனுடையவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. (4:2) எனவே, இவ்வுபதேசத்தை நம்புவதும் நம்பாததும் அற்பமான விடயமல்ல. நாம் தேவனுடைய ஆவியை உடையவர்களாக அல்லது அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாக எ்னபதைக் கண்டறிய, இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் ஒரு காரணமமைகிறது என்றால் அது மிகையாகாது. 

இரண்டாவதாக இயேசுவினுடைய பாவமற்ற தன்மைககும் (Sinless Nature) கன்னிப்பிறப்பு காரணமாகிறது. அவர் சாதாரணமான முறையில் பிறந்திருந்தால். பாவத்துடனேயே பிறந்திருப்பார். ஆனால் அவர் பரிசுத்தவியானவர் மூலமாக கன்னிப் பெண்ணிடத்தில் பிறந்தமையால் பாவமற்றவராக இருந்தார். அவருக்கு அன்பாயிருந்த சீடன் “அவரிடத்தில் பாவமில்லை. (1 யோவான் 3:5) என குறிப்பிட்டுள்ளார். அப்போஸ்தலனாகிய பேதுருவும் “அவர் பாவஞ் செய்யவில்லை. (1 பேதுரு 2:22) என கூறுகிறார். அவர் “பாவம் அறியாதவர்“ (2 கொரி. 5:21) என பவுலும் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், அவர் எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் (எபி.4:15) பரிசுத்தரும், குற்றமற்றவரும் மாசிலலாதவரும் பாவிகளுக்கு விலகினருமாயிக்கிறார். (2:26) இதனால் தான் “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? (யோவான் 8:46) என அவரே ஒருமுறை கேட்டார். 

தான் பாவமற்றவர் என்பதை இயேசு அறிந்திருந்தமையினாலேயே தன்னுடைய பாவமன்னிப்பிற்காக அவர் ஜெபிக்கவேயில்லை. மட்டுமல்ல நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு அதன்படி வாழ்நத இயேசு ஆலயத்திற்கு தவறாது சென்றாலும் கூட அவர் ஒருநாளும் எந்தவொரு பலியையும் செலு்த்தவேயில்லை. காரணம் பாவமற்ற அவர் பாவநிவாரணத்துக்காக பலி செலுத்த வேண்டியிருக்கவில்லை. இதையெல்லாம் ஏற்றுக்கொள்பவனால் கன்னிப்பிறப்பை நம்பாமல் இருக்கவே முடியாது. லொறேன் பொயிட்னர் சுட்டிக்காட்டியது போல, “மானிட ஆள்தத்துவத்தையல்ல, மானிட தன்மையையே இயேசு மரியாளிடத்திலிருந்து பெற்றமையால், அவரை பாவி என நம்மால் கூறமுடியாது. அவர் எந்த ஒரு மனிதனுடைய குமாரனுமல்ல, இதனால் அவர் பாவமற்றவராக இருந்தார். மரியாளிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது. தேவனுடைய குமரன் எனப்படுவார் (லூக். 7:35) என தேவதூதன் தெரிவித்தது போல அவர் பாவமற்றவராக இருந்தார். கன்னிபிறப்பை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இயேசு பாவமற்றவர் என்பதனால் கன்னிப்பிறப்பு அவசியமற்றதாகின்றது.“

மூன்றாவதாக கன்னிப்பிறப்பு உபதேசம், கிறிஸ்துவின் சிலுவைப்பலியுடன் தொடர்புடையதாக உள்ளது. மறைந்த பிரபல இறையியலாளர் பெஞ்சமின் வோர பீல்ட் குறிப்பிட்டது போல, “புதிய ஏற்பாட்டு மீ்ட்பின் உபதேசத்து்டனான தொடர்பிலேயே கன்னிபிறப்பு உபதேசத்தின் அவசியம் முழுமைபெற்று விளங்குகின்றது“. மீட்பானது, பாவத்திலிருந்து மீட்கப்படுவதாயிருப்பதனால் மக்களை பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர் பாவமற்றவராக இருக்க வேண்டும். எனவே, மீட்பர் சாதாரண முறையில் இவ்வுலகிற்கு வருவதில் எவ்வித பயனுமிருக்காது. காரணம் கன்னிப்பிறப்பு மட்டுமே பாவமற்றவராக மீட்பர் இவ்வுலகிற்கு வருவதற்கு மாரக்கமாயிருக்கிறது. பெஞ்சமின் வோர்பீல்ட் மேலும் இதைப்பற்றி எழுதும்போது “கிறிஸ்துவின் மீட்பின் செயல், அவருடைய இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பைச் சார்ந்துள்ளது“ என அறியத் தந்துள்ளார். 

கன்னிப்பிறப்பு உபதேசமானது. இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்துடனும் அவருடைய பாவமற்ற தன்மையுடனும், அவருடைய மீட்பின் செயலுடனும் சம்பந்தப்பட்டிருப்பதனால், இதை ஏறறுக்கொள்ளமலிருப்பது, இதனுடன் சம்பந்தமற்றவைகளையும் ஏற்றுக்கொள்ளாமலிபதபற்கு சமமானது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கன்னிப்பறிப்பு உபதேசத்தை நம்முடைய விசுவாசப் பிரமாணத்ததில் சேர்த்துக் கொண்டு அது, சரித்திரத்தல் நடைபெற்ற உண்மை சம்பவமாக விசுவசிப்பது நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு மிக மிக அவசியமானது. இதை ஒரு கற்பனை கதையாக கருதுவதும்- இது முக்கியமானதொன்றல்ல என எண்ணுவதும் அர்த்தமற்ற அறிவீனமான செயலாகும். தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த உபதேசம் அவசியமானதும், அடிப்படையானதும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 




Footnotes
1) Collected writing of John Murry vol. 2
2) The Virgin Birth of Christ by James Orr
3) Authentic Jesus, by John Stott
4) Thy word is Truth, by E.J.Young
5) The Virgin Birth of Christ, by Machen
6) The Virgin Birth by R.I.Humberd
7) The Plain man looks at the Apostle's Creed by William Barclay
8) Sermons on the Apostle's Creed, ed. by Hery J. Kulper
9) The Bible has the Answers by Henry Morris
10) Evidence that demands a Verict by John Mc Dowell
11) The Case for Miracles by Clements F. Rogers
12) Evangelical Dictionary of Theology ed. by Walter A. Elweli.
13) Christology and Criticism by B.B. Warfield
14) Christianity is Christ by Griffith Thomas
15) New Testament Commentary : Mathew, by William Hendriksen
16). The Person of Christ by Loraine Boe Hner

Wednesday 21 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா? (3)

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க பகுதி 1, பகுதி 2  அழுத்துங்கள்

மத்தேயுவும் லூக்காவும் முரண்பாடான சம்பவங்களை எழுதியுள்ளார்கள் என வாதிடுவது அர்த்தமற்றது. ஏனெனில் முரண்பாடுகளையல்ல, ஒன்றுமைகளையே நாம் அதிகளவில் இரண்டிலும் காணலாம். மறைந்த இறையியலாளர் ஜேம்ஸ் ஓர் என்பார் கன்னிப்பிறப்பைப் பற்றி தான் எழுதிய நூலில், இரண்டு குறிப்புகளுக்குமிடையேயுள்ள 12 ஒற்றுமைகளை கூட்டிக் காட்டியுள்ளார். 

(1) ஏரோது ராஜாவின் இறுதிநாட்களில் இயேசு பிறந்தார் மத். 2:1,13 , லூக் 1:5

(2) அவர் பரிசுத்த ஆவியானாலேயே கர்ப்பந்தரிக்கப்பட்டார். மத்.1:18,20 , லூக் 1:35

(3) அவருடைய தாயார் ஒரு கன்னிப் பெண்  மத்.1:18,25,23 லூக் 1:27,34

(4) யோசேப்புக்கு அவள் மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தாள் மத்.1:18 லூக் 1:27, 2:4

(5) யோசேப்பு தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவன் மத்.1:16,20 , லூக் 1:27, 2:4

(6) இயேசு பெத்தலகேமில் பிறந்தார். மத்.2:1 , லூக் 2:4-6

(7) தேவ அறிவுறுத்தலின்படி அவருக்கு இயேசு எனும் பெயர் கொடுக்கப்பட்டது. மத்.2:1 , லூக் 1:31

(8) அவர் இரட்சகர் என அழைக்கப்பட்டார். மத்.1:21 , லூக் 2:11

(9) மரியாள் கர்ப்பவதியாயிருந்தது யோசேப்புக்கு தெரிந்திருந்தது. மத்.1:18-20 , லூக் 2:4

(10) அவள் கர்ப்பவதி என்று அறிந்து அவளை யோசேப்பு ஏற்றுக் கொண்டான். மத். 1:20,24,25 , லூக் 2:4

(11) தேவதூதன் மூலம் தகவல்கள் கொடுக்கப்பட்டன. மத். 1:20 , லூக் 1 :27, 28 

(12) இயேசுவின் பிறப்பின் பின் யேசேப்பும் மரியாளும் நாசரேத்தில் குடியிருந்தனர். -மத். 2:23, லூக் 2:39. 

உண்மையில் இத்தனை ஒற்றுமைகளைக் கொண்ட இரு குறிப்புகளும் முரண்பாடுடையது, நம்பகமற்றது என வாதிடுவது நியாயமற்றதும் அர்த்தமற்றதும், அறிவீனமானதுமான செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. 

மத்தேயுவினதும், லூக்காவினதும் ஆதாரக் குறிப்புகளிடையே எவ்விதமான முரண்பாடும் இல்லை என்பது உண்மையினும் இருவர் குறிப்பிடும் வம்சவராற்று அட்டவணைகளையும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், ஒருசில வித்தியாசங்களையும் அவதானிக்கலாம் என்பதும் உண்மையே. எனினும் ஒரு வம்சவரலாறு நம்பகமற்றது, பிழையானது எனும் முடிவுக்கு வ்நதுவிடும் அளவுக்கு மற்றறையது வேறுபட்டுவிடவில்லை. பொதுவான ஒற்றுமையே நாம் இரண்டிலும் காணலாம். மத்தேயுவின் வரலாற்று அட்டவணையில் பெண்களின் பெயர்களையும் வரலாறானது பதினான்கு தலைமுறைகளைக் கொண்ட மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். ஆனால் லூக்காவினது, வழமையான வம்சவரலாற்று அட்டவணையை போலல்லாது, பின்நோக்கிச் செல்கின்றது. ஜேம்ஸ் ஓர் குறிப்பட்டது போல “இயேசுவை தாவீதின் ராஜ பரம்பரையில் வந்தவராக காட்டுவதே மத்தேயுவின் நோக்கமாயிருந்தது. (1:1) லூக்காவோ தாவீதுக்கும் அப்பால் சென்று, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை அறியத் தருகிறார். (3:38) எனினும் அவ்வம்சவரலாற்று அட்டவணைகள் மத்தேயுவினாலும், லூக்காவினாலும் உருவாக்கப்ட்டவை அல்ல. அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த வரலாற்று அட்டவணைகளே இருவராலும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்பது தேவ ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். இவை பொய்த் தகவல்களைத் தருகின்றன என்பதற்கான சரித்திரபூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. 

மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்சவரலாற்று அட்டவணைகள் நம்பகமானவை. ஆதாரபூர்வமான என்பது உண்மையோயினும் இரண்டையும் கருத்தாய் ஆராய்ந்து பார்க்கும்போது ஒருசில வித்தியாசங்களை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக, தாவீத்துக்குபின் வம்சவரலாற்றில் பாரியதோர் வித்தியாசம் காணப்படுகின்றது. தாவீதுக்குப் பின் வேறுபட்ட இரண்டு வம்சவரலாறுகளை நாம் அவதானி்க்கலாம். மத்தேயுவின் வம்சவரலாறு தாவீதின் குமாரனான சாலமோனுடைய பரம்பரையை பற்றி குறிப்பிடுகையில் (1:6) லூக்காவினுடையது, தாவீதின் மற்றுமொரு குமாரனான நாத்தானுடைய பரம்பரையை பற்றி அறியத் தருகிறது. (3:31) தாவீதுக்குப் பின் ஒருசில இடங்களில் மட்டுமே வம்சவரலாறுகள் ஒன்றையொன்று சந்திப்பதாயிலுள்ளன. மற்ற இடங்களில் எவ்வித தொடர்பும் இல்லாமலிருப்பது, இவை எந்த அளவுக்கு நமபகமானது என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாயிலுள்ளது என அநேகர் வாதிடுகின்றனர். எனினும் ஜேம்ஸ்ஓர் இதைப் பற்றி எழுதும்போது, இதில் முரண்பாட்டையல்ல, எவ்வாறு இதை விளக்குவது என்பதே நாம் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். எனினும் மத்தேயு குறிப்பிடுவது யோசேப்பின் வம்சவரலாறு, லூக்கா குறிப்பிடுவது மரியாளின் வம்சவரலாறு எனும் முடிவுககு வருவதில் எவ்வித தவறுமில்லை. காரணம் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உளளன“ என்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயு யோசேப்பைப் பற்றியும் லூக்கா மரியாளைப் பற்றியும் எழுதியுள்ளனர் என்பதும் இதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. 

மத்தேயு சாலமோனின் பரம்பரையில் வந்த யேசேப்பின் வம்ச வரலாற்றையும், லூக்கா நாத்தானின் பரம்பரையில் வந்த மரியாளின் வம்ச வரலாற்றையும் குறிப்பிபட்டாலும் இது இரணடு வித்தியாசமான பரம்பரை எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. காரணம் சாலமோனும் நாத்தானும் பத்தேசபாளிடத்தில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகள் எனவே யோசேப்பும் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும், மத்தேயும் லூக்காவும் குறிப்பிட்டடுள்ள வம்சவரலாறுகளில் உள்ள முக்கியமான ஒரு வித்தியாசமும் இதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாயுள்ளது. எனினும் மேலோட்டமாக வாசிக்கையில் நமக்கு குழப்பதையே இது ஏற்படுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. யோசேப்பு ஏலியின் குமாரன் (3:23) என லூக்கா கூறுகின்றார். ஆனால் மத்தேயுவோ அவர் யாக்கோபின் குமாரன் என குறிப்பிட்டுள்ளார். (1:16) இதனால் யோசேப்புக்கு இரண்டு தகப்பன்கள் இருந்தார்களா எனும் கேள்வி நம்முள்ளத்தில் எழுந்து, எதை நம்புவது எனும் குழப்பத்தை ஏற்படுததி விடுகிறது. எனினும் ஹென்ரி ஜே. கைப்பரினால் தொகுக்கப்பட்ட, அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசங்கங்களுள், ஜோன் பொலின் கர்க் என்பாருடைய கன்னிப் பிறப்பைப் பற்றிய பிரசங்கம் இச்சந்தேகததை நீக்கி, “யோசேப்பின் தகப்பன் யாக்கோபு. ஏலி அவனுடைய மாமனார் அதாவது மரியாளின் தகப்பன்“ என அறியத் தந்துள்ளது. மத்தேயுவைப் போல (1:6-16) லூக்கா யோசேப்பின் பரம்பரையைப் பற்றி எழுதாமல், மரியாளுடைய வம்ச வரலாற்றை அவளுடைய தகப்பனான ஏலியில் ஆரம்பித்து நாத்தானினூடாக தாவீதுடன் தொடர்புபடுத்தியுள்ளார். (3:23, 31) வம்ச வரலாறு வித்தியாசமாயுள்ளதற்கு இதுவே காரணமாகும். யோசேப்பைப் போலவே மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். 

மரியாள் தாவீதினுடைய பரம்பரையில் வந்தவள் என்பதை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்னவென நாம் வினவலாம். உண்மையில் மரியாளின் மூலமாகவவே இயேசு தாவீதின் சிங்காசனத்திற்கு உரியவரானார். அவர் யோசேப்பின் குமாரனாயிருந்திருந்தால் தாவீதினுடைய சிங்காசனததிற்கு உரிமை பாராட்டியிருக்க முடியாது, கிறிஸ்தவ மார்க்கத்தின் நம்பகமான தன்மைக்கு பல ஆதாரங்களை திரட்டியுள்ள ஜோன் மெக்டோவெல் இதைப் பற்றி விளக்கும்போது “தாவீதின் வம்சத்தில் வந்த எகொனியாவின் பரம்பரையைச் சேர்ந்தவனாக யோசேப்பு இருந்தமையால், இயேசு இவனது மகனாக இருந்திருந்தால் தாவீதின் சிங்காகனத்திற்கு உரியவராக இருந்திருக்க மாட்டார். காரணம் எரேமியாவின் தீர்க்கத்தரிசனப் புத்தகத்தில், இவனுடைய வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். (22:28-30) எகொனியா என மத்தேயு 1:11 இல் குறிப்பிடப்பட்டவனும் கோனியா என எரேமியா 22:28 இல் குறிப்பிடப்பட்டவனும் ஒருவனே. இவனுடைய பரம்பரையில் வந்தவனே யோசேப்பு (மத். 1:11-16) என சுட்டிக் காட்டியுள்ளார். ஆர்.ஐ. ஹம்பர்ட் எனபார், “யோசேப்பின் பிள்ளைகள் மீதும்  இச்சாபம் இருந்தது.  இயேசு யோசேப்புக்கு பிறந்திருந்தால் அவரும் இச்சாபத்திற்கு உட்பட்டிருப்பார்“ என தெரிவித்துள்ளார். 

யோசேப்பின் பரம்பரையின் மீதிருந்த தேவசாபத்தை கருத்திற் கொள்கையில், இயேசு யோசேப்பின் மகனாக இருந்திருந்தால், காபிரியேல் எனும் தூதன் மரியாளிடம் கூறியது போல “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது“ லூக்கா 1:32-33) என கூறியிருக்க முடியாது. எனவே, ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக் காட்டியதுபோல “மரியாளின் பரம்பரை சபிக்கப்பட்ட எகொனியாவினுடைய வம்சமாய் இல்லாமலிருப்பதனாலும்,“ ஜேம்ஸ் ஓர் தெரிவித்ததுபோல “மரியாளும் தாவீதின் வம்சத்தில் வந்தவள்“ என்பதனாலும்ஈ ஜோன் பொவென்கர்க் விளக்கியது போல, “மரியாளின் தகப்பனான ஏலியினுடைய வம்சம் நாத்தான் மூலமாக தாவீதுடன் சேர்வதனாலும், “மரியாளின் மூலமாகவே இயேசு தாவீதின் குமாரனாக, தாவீதின் அரியணைக்குரிய தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை மட்டுமல்ல மத்தேயுவும் லூக்காவும் இயேசு யோசேப்பின் குமாரன் அல்ல என்பதை சுட்டிக் காட்டத் தவறவில்லை. (மத். 1:16, 20, 25 லூக்கா 3:23) என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் இவையனைத்தும் கன்னிப்பிறப்பிற்கான ஆதாரங்களாக உள்ளன. 

இயேசு யோசேப்பின் பிள்ளை அல்ல; அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்த தேவனுடைய குமாரன் என மத்தேயுவும் லூக்காவும் தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளபோதும், மத். 13:55 இல், இயேசு “தச்சனுடைய குமாரன்“ என்றும் யோவான் 6:42 இலும் 1:45 இலும் “யோசேப்பின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இயேசு யோசேப்பின் குமாரன் என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா இவை என வாதிடுவோரும் நம் மத்தியில் உள்ளனர். எனினும் இவ்வசனங்களை ஆராய்ந்து பார்க்கும்போது இவை மக்களுடைய கருத்தேயின்றி, யோசேப்பின் குமாரன் இயேசு என்பதற்கான சான்றுகள் அல்ல என்பதை அறிந்திடலாம். அதாவது மக்கள் இயேசுவைப் பற்றி கருதியதையே வேதாகம நூலாசிரியர்கள் இவ்விடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இயேசு வளர்ந்த ஊரைச் சேர்ந்தவர்களே அவரை “தச்சனுடைய குமாரன் அல்லவா“ என கூறியதாக மத்தேயு 13:54-55 இல் காணலாம். அதேபோல் யோவான் 6:42 இலும் இயேசுவின் பிரச்ஙகத்தைக் கேட்டவர்களே “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா... அப்படியிருக்க நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேனென்று இவன் எப்படி சொல்கிறான். யோவான் 1:45 இல் பிலிப்பே இயேசுவை யோசேப்பின் குமாரன் என கூறுகின்றான். இதற்குக் காரணம் மரியாள் யோசேப்பின் சட்டரீதியான மனைவியாயிருந்தமையினால் மரியாளுடைய குமாரனாகிய இயேசுவின் சட்ட ரீதியான தகப்பனாக யோசேப்பு கருதப்பட்டான். இதனாலேயே “அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். என 3:23 இல் லூக்கா குறிப்பிட்டுள்ளார். 


“கர்ப்பவதியாயிருந்த மரியாளை தன் மனைவியாக யோசேப்பு ஏற்றுக் கொண்டமையினாலேயே இயேசுவை அவனுடைய குமாரனாக மக்கள் கருதினார்கள். சமுதாயததின் பார்வையில் அவர் யோசேப்பின் குமாரனாகவே இருந்தார்.“ என ஹம்பர்ட் எனபார் அறியத் தந்துள்ளார். “இயேசு சிறுவனாக இருந்தபோது யோசேப்பை அப்பா என்றே அழைத்திருப்பார்“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனததிற்கு கொண்டு வந்துள்ளார். இதனடிப்படையிலேயே யோசேப்பையும் மரியாளையும் இயேசுவின் தாய் தகப்பன்மார் என லூக்கா 2:27 இலும் 2:41 இலும் எழுதியுள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் 2:33 இலும் 2:43 இலும் “யோசேப்பும் அவருடைய தாயாரும்“ என  இருவரையும் வேறுபடுத்தி, இயேசு யோசேப்பின் குமாரனல்ல மரியாளின் குமாரன் சுட்டிக் காட்ட லூக்கா தவறவில்லை என்பதையும் நாம் கருத்திற் கொள்ள மறந்துவிடக் கூடாது, மாற்கு மக்களின் அபிப்பிராயத்தை எழுதும்போது மிகவும் கருத்துடன் யோசேப்பின் பெயரைக் குறிப்பிடாது விட்டுள்ளார். பன்னிரண்டு வயதுடையவராயிருக்கும்போதேஈ இயேசு எருசலேம் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்ததிருக்கவும் அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்கள் வினவவும் கண்ட யேசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:46-48) அச்சமயத்தில் மரியாள் இயேசுவிடம் “ உன் தகப்பனும் நானும் உன்னைத் தேடினோமே“ என்று கேட்டதற்கு (2:48) “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா“ என்று யோசேப்பு தன்னுடைய தகப்பன் அல்ல என்பதை வெளிப்படுத்தியதோடு தேவனே தன்னுடைய தகப்பன் என்று பலமுறை தெரிவித்துள்ளதையும் நற்செய்தி நூல்களில் நாம் காணலாம். 

மத்தேயுவும் லூக்காவும், கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களைத் தநதாலும் 52 அதிகாரங்களைக் கொண்ட (இரண்டும் சேர்ந்து) இவர்களுடைய நூலில் 2 அதிகாரங்கள் மட்டுமே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று புதிய ஏற்பாட்டின் மற்றைய பகுதிகள் எதுவுமே இது பற்றி கூறாதிருப்பதால் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ள போதிய சான்றுகள் இல்லையென்றும் சிலர் வாதிடுகின்றனர. மற்றையவர்கள் இயேசுவின் பிறப்பை பற்றிய உண்மையை அறியாதிருந்தமையினாலேயே இதைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. இல்லையென்றால் எழுதியிருப்பார்கள் என்றும் தர்கிக்கின்றனர். ஆனால் மற்றைய நூலாசிரியர்கள் கன்னிப் பிறப்பைப் பற்றி அறியாதிருந்ததினால் அல்ல மாறாக அவர்களுடைய நோக்கத்திற்கு இது அவசியமாய் இராதமையினாலும், மத்தேயுவும் லூக்காவும் போதியளவு எழுதியிருந்தமையினாலும் அக்கால மக்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தமையினாலுமே, தங்களுடைய நூல்களில் நேரடியாக இதைப் பற்றி எழுதவில்லை. எனினும் மறைமுகமாக பல இடங்களில் இயேசுவின் பூலோகப் பிறப்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மட்டுமல்ல இறையியில் அகராதி அறியத்தருவது போல், “மரியாளுடைய அந்தரக வாழ்வு அம்பலத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஆதிச்சபையில் கன்னி்ப் பிறப்பைப் பற்றி எவரும் அதிகமாக கதைக்கவில்லை“ என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மத்தேயுவினதும் லூக்காவினதும் குறிப்புகள், இவ்வுபதேசத்தை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. 
(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

Thursday 15 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா?(2)

இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுத்தவும்

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 1:16-25 இலும் லூக்கா 1:26-38 இலும் இவ்வுபதேசம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை, யோசேப்பு மரியாளை அறியாதிருந்தான்“ என கூறும் மத்தேயு (1:25) 'இருவரும் கூடிவரும் முன்பே மரியாள் பரிசுதத ஆவியினால் கர்ப்பவதியானாள்“ (1:18) என்று அறியத்தருகிறார். இச்சம்பவம் நடைபெற்றபோது மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதை லூக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். (1:26-38) “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் என கன்னிப் பெண்ணான மரியாளிடம் கூறிய தேவதூதன் (லூக். 1:35) தான் அறியாமலேயே அவள் கர்ப்பவதியாயிருப்பதனால் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்பிடம் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என அறிவித்தான் (மத். 1:20) 

இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அதாவது, கன்னிப் பெண்ணான மரியாள் கருத்தரித்து இயேசுவெனும் தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்ததைப் பற்றி மத்தேயுவும் லூககாவும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நம்பகமானவை என்பதி்ல் எதுவித சந்தேகங்களுமில்லை. இவை சரி்த்திர பூர்வமான ஆதாரக் குறிப்புகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் எரோது ராஜாவின் நாட்களில் நடைபெற்றதாக மத்தேயு அறியத்தருகிறார். (2:1) சீரிய நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியியாக இருந்த போது, முதலாம் குடிமதிப்பு எழுதப்பட்ட வேண்டுமென அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே இயேசு பிறந்தாரென லூக்கா மற்றுமொரு சரித்திர பூர்வமான ஆதாரத்தைத் தருகிறார். (2:1-6) சரித்திராசிரியராகவும், வைத்தியராகவும் இருந்த லூக்கா தான் முழுநிச்சியமாய் நம்புகின்ற சங்கதிகளை ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் தங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறி்த்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏவப்பட்டபடியினால் ஆதிமுதல் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து எழுதியுள்ளமை (1:1-4) அவருடைய நூல் நம்பகமான என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களை தந்தாலும் கூட, அவர்களுடைய குறிப்புகளில் ஒருசில் அம்சங்கள் சற்று தெளிவற்றது போல காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. னினும் அவை எவ்வகையிலேனும் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பொய்யாக்கிவிடவில்லை. இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமே, .இதை காரணம் காட்டி கன்னிப்பிறப்பு நம்பக்கூடியதொன்றல்ல என வாதிடுகி்ன்றனர். எனவே தெளிவற்றதுபோல தென்படும் பகுதிகளை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதில்களைக் கொடுப்பது இலகுவானதாயிருக்கும். 

மரியாள் கன்னிப் பெண்ணாக இருக்கும்போதே பரிசுத்தவாயினால் கர்ப்பவதியானாள் (1:18-20) யோசேப்புடன் எவ்வித தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை (1:25) என நேரடியாக குறி்ப்பிட்டிருந்தபோதிலும் இருவருக்கும் இடையிலான உறவுமுறை முன்னுக்குப் பின் முரணான விதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தென்படுகின்றது. 1:18 'யோசேப்பு மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்டப்டிருந்தவன்“ என அறியத் தருகையில், அடுத்தஅவனம் இதை மறுத்து, யோசேப்பு மரியாளின் புருஷன்“ (1:19) என கூறுவதோடு “மரியாள் யோசேப்பின் மனைவி“ என்றும் தெரிவி்ககின்றது. (1:20) மட்டுமல்ல. 1:19 இல் யேசேப்பு மரியாளை தள்ளிவிட (விவாகரத்து செய்ய) மனதாயிருந்தான் என்றும் காணக்கிறோம். மரியாள் கர்ப்பவதியாயிருக்கும்போது, அவளுக்கும் யோசேப்புக்கும் இடையிலிருந்த உறவுமுறை இரண்டுவிதமாக அதாவது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாகவும், திருமணம் முடித்த கணவன்-மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரியாள் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாளா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என வாதிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர். இயேசு யோசேப்புக்கு பிறந்த பிள்ளையாயிருக்கலாம் எனும் சந்தேகத்தை இது தோற்றுவிப்பதாக உள்ளது. என்று அவர்கள் கருதுகின்றனர். 

மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையிலான உறவுமுறை இரண்டுவிதமாக மத்தேயுவினால் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையேயானும் இதை வைத்துக் கொண்டு, இயேசு பிறக்கும்பரை மரியாள் கன்னிப் பெண்ணாயிருக்கவில்லை, இயேசு யோசேப்புக்குப் பிறந்த குமாரன் என வாதிட்டால், 18ம், 25ம் வசனங்களுக்கு எவ்விதான விளக்கங்களைக் கொடுக்க முடியும்? இவையிரண்டும் கனனிப்பிறப்பு உபதேசததை நேரடியாக போதிக்கின்றது. எனவே உறவுமுறை வித்தியாசமான முறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன கலாச்சாரத்தில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த திருமண வைபவ சடங்காச்சார முறைகளே இதற்கான காரணம் என மறைந்த வேத வியாக்கியானி வில்லியம் பாக்ளே அறியத்தருகிறார். “அவர்களது திருமண வைபவம் மூன்று படிமுறைகளைக் கொண்டிருந்தது. தம் பிள்ளைகள் சிறுவர் சிறுமியராயிருக்கும்பேது திருமணப் பொருத்தம் பார்த்து, இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்வது பெற்றோரின் வழக்கமாயிருந்தது, உரிய காலம்வரும்போது நிச்சயதார்த்தத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் இதன் பின் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்பட்டனர். கன்னிவிதவைகள் அக்காலத்தில் பலஸ்தீனாவில் இருக்க இதுவே காரணமாகும். நிச்சியதார்த்தமானது சட்டரீதியாக இருவரையும் இணைப்பதாயிருந்தமையினால், விவாகரத்தின் மூலமே இவ்விணைப்பை முறிக்கக் கூடியதாயிருந்தது. நிச்சியதார்த்தத்தை மேற்கொண்டவர்கள் ஒருவருடத்தின் பின்பே திருமணம் செய்து இல்லற வாழ்வை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்“ என தெரிவிக்கும் வில்லியம் பாக்ளே “மத்தேயு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிச்சியதார்த்தத்திற்குப் பின் நடைபெற்றவைகளாகும். இதனால்தான் மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டவளாகவும், அவனது மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாள். இதனாலேயே யோசேப்பு அவனது புருஷனாகவும், அவளை விவாகரத்து செய்ய சிந்தனையுள்ளனாகவும் இருந்தான் என மத்தேயு எழுதியுள்ளார்.” என கூறுகிறார். 

உண்மையில் நிச்சியதார்த்தத்தின் பின்பு மரியாள் கர்ப்பவதியாயிருப்பதை யோசேப்பு அறிந்திருப்பான். மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்பதனாலேயே அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (1:19) இச்சமயத்திலேயே, “மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்தாவியினால் உண்டானது“ என தேவதூதனால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1:20) மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான். (1:25) எனினும் அவர்கள் நிச்சியதார்த்தம் செய்துகொண்டிருந்தமையால், அக்கால கலாச்சாரத்தின்படி கணவன்-மனைவியாக இருவரும் சமுதாயத்தினால் கருதப்பட்டமையே உறவு முறைப்பற்றி இரண்டுவிதமாக மத்தேயு எழுத காரணம் என்பதில் சந்தேகமுமில்லை.

மத்தேயுவினுடைய குறிப்பில் இயேசு யோசேப்பின் குமாரன் இல்லை என்பதற்கான இன்னுமொரு ஆதாரத்தை அவர் குறிப்பிட்டுள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் நாம் காணலாம். 42 பரம்பரைகளைக் கொண்ட இவ்வட்டவணையில் “பெற்றான்“ எனும் பதம் ஒவ்வொரு பரம்பரைக்கும் அதாவது ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்பதை சுட்டிக்காட்ட உபயோகிக்ப்பட்டதை அவதானித்திடலாம். ஆனால் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் யோசேப்பு அவரைப் பெற்றான் என கூறவில்லை. மாறாக, “மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார். (1:16) என எழுதியுள்ளார். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் அல்ல என்பதை கூட்டிக் காட்டவே, இவ்விடத்தில் மட்டும் “பெற்றான்“ எனும் பதம் உபாயோகிக்கப்படவில்லை. மரியாளை இயேசுவின் தாயாக காட்டும் மத்தேயு யோசேப்பை அவருடைய தகப்பனாக காட்டவில்லை. பிறப்பைப் பொறுத்தவரையில் இயேசுவுக்கும் யோசேப்புக்குமிடையில் எவ்விதமான சம்பந்தமுமில்லை. தேவகுமாரனாகிய அவர் மரியாளின் குழந்தை, யோசேப்பின் பிள்ளையல்ல அவர், அவருடைய மாம்சமும், இரத்தமும் மரியாளிடமிருந்து பெறப்பட்டதுயன்றி, யேசேப்புக்கு இதில் எவ்விதமான பங்குமில்லை. ஏனெனில் அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்தவர்

கன்னிப் பிறப்பை பற்றிய மத்தேயுவினுடைய குறிப்பில் எவ்விதமான முரண்பாடும் எத்தகைய தெளிவின்மையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாலும் இதை லூக்காவின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டும் ஒருசில இடங்களில் வித்தியாசப்படுவது போல தென்படுவதை அவதானிக்கலாம். எனினும் இவை இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மத்தேயு எழுதாமல் விட்டதை லூக்கா எழுதியுள்ளாதே தவிர, மத்தேயு எழுதியற்றை முரண்படுத்தும் விதத்திலோ அல்லது பொய்யாக்கும் விதத்திலோ அவர் எதையும் எழுதவில்லை. இயேசுவினுடைய பிறப்பில் யோசேப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தேயு எழுதுகையில் லூக்கா, மரியாளுடைய வரலாற்றை எழுதியுள்ளார். இரண்டையும் ஒன்றாக்கும்போது முழுமையான சத்தியத்தை அறிந்துகொளள்க் கூடியதாய் உள்ளது.

(வளரும்) 
பகுதி 3 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

Friday 9 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா?


இக்கட்டுரை
  • கன்னிப் பிறப்பின் அவசியம்
  • கன்னிப்பிறப்பிற்கான சாத்தியபாடுகள்  
  • மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்ச அட்டவணைகளில் காணப்படும் முரண்பாட்டிற்கான விளக்கங்களையும் அலசுகிறது 




கிறிஸ்தவ மார்க்கத்தின் மூலஉபதேசங்களில் மாம்சமாகிய இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பும் ஒன்றாகும். ஆதிச் சபையினது விசுவாசப் பிரமாணங்கள் அனைத்திலும் இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்தவ சபைகளில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. சபைப் பிதாக்களும் (Church Fathers) தங்கள் எழுத்தாக்கங்களில் இவ்வுபதேசத்தின் சத்தியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வந்தனர். கன்னிப் பெண்ணான மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து, பாவமற்ற தெய்வீகக் குழந்தையாக இயேசு பிறந்தார் என்பதை மறுத்துரைக்கவோ, எதி்ர்த்துப் பேசவோ எவரும் துணியவில்லை. இவ்வுபதேசத்திற்கு முரணமாக பேசுவது , பரிசுத்தாவியானவருக்கு விரோதமான பாவமாகவும் கருதப்பட்டது. ஒருசில வேதப்புரட்டர்களும் இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமலிருந்தனர். 

இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் ப்றறிய தன்னுடைய 397 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலில் 43 பக்கங்களை 2ம் நூற்றாண்டில் இவ்வுதேசத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைப் பற்றி ஆராய்வதற்கு ஜே.ஜி. மெக்ஹேன் என்பார். இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கையாக கன்னிப் பிறப்பு உபதேசம் சகல சபைகளினாலும் கருதப்பட்டது.  என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. தத்துவங்கள், கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையினாலன்றி சரித்திர பூர்வமான பாரம்பரியங்களின் அடிப்படையில், எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.“ என அறியத் தந்துள்ளார். மற்றைய உபதேசங்களைப் போலல்லாது. கன்னிப்பிறப்பு உபதேசமானது அதிக சர்ச்சைகள் இன்றி கி.பி. 381 ல் நெறிப்படுத்தப்பட்ட நைசீய விசுவாசப் பிரமாணத்திலும் (Nicene Creed) கி.பி. 390 இன் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்திலும் (Apostle's Creed) கி.பி. 451 இல் சால்சிடோன் விசுவாசப் பிரமாணத்திலும் (Chacedon Creed) திருச்சபையின் பொதுவான நம்பிக்கைகளுள் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, இன்றுவரை திருச்சபையால் உபயோகிக்கப்பட்டும் வருகிறது. 1909 இற்கும் 1915 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படட மூலஉபதேசங்கள் (Fundamentals), “உண்மையான திருச்சபையின் நம்பிக்கைகளுள் கன்னிப்பிறப்பு உபதேசமும் இருக்க வேண்டும்“ என வலியுறுத்தியது. 

இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பானது, ஆதிகாலமுதலே திருச்சபையால் ஏகமானதாக எற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், அண்மைக்காலங்களில், இவ்வுபதேசத்தை முழுமையாகவும், சொல்லத்தத்தினடிப்படையிலும் (literally) நம்பாதவர்களாகவே அநேக இறையியலாளர்கள் (Theologians) இருக்கின்றனர். என்பதை அவர்களது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன. கன்னிப்பெண் கர்ப்பிணியாக இருக்க முடியாது என வாதிடும் அறிவியலாளர்கள் (Intellectuals) இயேசுகிறிஸ்துவின் பிறப்பிலுள்ள இயற்கைக்கும் அப்பாற்பட்ட “அற்புத தன்மையை“ ஏற்க மறுப்பவர்களாக,, இவ்வுபதேசம் கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனும் முடிவிற்கு வந்துவிட்டனர். சிலர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளையே இயேசு என எண்ணுகின்றனர். அநேக கிறிஸ்தவர்கள், உருவக மொழியின் (Figure of Speech) அடிப்படையிலேயே இவ்வுபதேசத்தை விளக்க வேண்டும் என வாதிடுகின்றனர். 

விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதனுடைய அறிவு அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளமையால். எதற்கும் காரணகாரியங்ளைக் கண்டறிந்து, தனது அறிவுக்கு ஏற்புடையதாய் இரு்பபவைகள் மட்டுமே உண்மை, மற்றையவை அனைத்து் கற்பனைக் கதைகள், மூடக்கொள்கைகள் எனும் முடிவுக்கு மனிதன் வந்துவிட்டமையே, கன்னிப்பிறப்பு உபதேசத்தை நம்பாமல் இருப்பதற்கான காரணமாகும். உண்மையில் இவவுதேசம் மானிட அறிவுக்கு முரணாகவும் எதிராகவுமே உள்ளது. காரண காரியங்களின் அடிப்படையிலோ அல்லது ஆராய்ச்சி பரிசோதனை என்பவைகளின் முடிவின்படியோ விளங்கிக்கொள்ளக்கூடிய உபதேசமல்ல. இது மாறாக, பொய்யுரையாத தேவனுடைய (தீத். 1:3) ஆவியினால் அருளப்பட்ட தேவவார்த்தைகளை (2 தீமோ. 3:16) விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சத்தியமாகும். எனினும் இவ்வுபதேசதம் புராணக்கதையல்ல. இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்புவது அறிவீனமான செயல் அல்ல. ஏனெனில் இது பின்தங்கிய மூடக்கொள்கைகளுடைய விஞ்ஞான அறிவற்ற காலத்து மனிதனுடைய கற்பனையல்ல. மாறாக மானிட சரித்தரத்தில், குறி்ப்பிட்ட காலத்தில் நடைபெற்ற மனிதனுடைய அறிவுக்கு எட்டாத உண்மைச் சம்பவமாகும். 

(அ) உபதேசத்தின் அர்த்தம்

கன்னிப்பிறப்பு உபதேசம் அநேகரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு போதனையாக, சில சமயங்களில் பிழையாக விளங்கிக் கொள்ளும் போதனையாக இருப்பதற்குக் காரணம், இதன் அர்த்தம் சரியான விதத்தில் வரையறுக்கப்படாமலிருப்பதேயாகும். கன்னிப்பிறப்பு எனும்போது, இயேசு பிறப்பு ஏதோ அசாதாரணமானதும், அசாத்தியமானதுமான முறையிலான பிறப்பு என அநேகர் எண்ணிக் குழம்புகின்றனர். உண்மையில், இயேசு பிறந்த விதம் அற்பதமானது என்பது இவ்வுபதேசத்தின் அர்த்தமல்ல. மறைந்த இறையிலாளர் ஜோன் மரே(John Murry) குறிப்பிட்டது போல, கன்னிப்பிறப்பொன்று கூறும்போது, மரியாளின் வயிற்றிலிருந்து குழந்தை வெளிவந்த விதம் அற்புதமானது என்றோ அல்லது மரியாளின் கருவறையில் குழந்தை வளர்ச்சியடைந்த முறை இயற்கைக்கும் அப்பாற்பட்டது, அசாதாரணமானது நாம் கருதுவதில்லை. ஏனெனில் மரியாள் குறிப்பிட்ட காலம்வரை குழந்தை இயேசுவை தன் வயிற்றில் சுமந்தாள். இயற்கையான முறையிலேயே அவளுக்கு பிரசவமும் ஏற்பட்டது.

கன்னிப்பிறப்பு உபதேசமானது, கன்னிப் பெண்ணான மரியாள் இயேசுவைக் கருத்தரித்த முறையே அசாதாரணமானது; இயற்கைக்கும் அப்பாற்பட்டது; அற்பதமானது என்று போதிக்கின்றது. ஜோன் மரே(John Murry) சுட்டிக்காட்டியது போல், “ஆண்விந்து மூலமாக மரியாள் கருத்தரிக்கவி்லை. மானிட தகப்பன் இன்றியே அவள் தாயானாள். இது சாதாரண இனவிருத்தி முறைக்கு முரணானது மட்டுமல்ல. சாத்தியமற்றதும் கூட. இதுவே அற்புதமான செயல். இதையே கன்னிப்பிறப்பு உபதேசம் (Doctrine Virgin Birth) வலியுறுத்துகிறது, மத்தேயு இதைப் பற்றி எழுதும்போது “இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.(1:18) என்று குறிப்பிட்டுள்ளார். 

பெண் கருத்தரிக்க வேண்டுமாயின், ஆணுடன் பாலியலுறவு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். இல்லாவிட்டால் இது நடைபெறாத காரியம் என்பதை அறிந்திருந்த மரியாள, தேவதூதனிடம்  “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ எனக் கேட்டதற்கு தூதன், பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்;... தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக் 1:30-37) என்றான். மானிட தகப்பினின்றியே “கன்னிப் பெண்ணான மரியாள் (லூக். 1:27) கர்ப்பவதியானதே இவ்வுபதேசம் கற்பிக்கும் சத்தியமாகும். எனினும் ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியதுபோல, “பரிசத்தவியினால் கர்ப்பந்தரித்த இயேசு பிறக்கையிலும், மரியாள் கன்னிப்பெண்ணாகவே இருந்தாள்“ என்பதையும் நாம் மறந்துவிடக்கூ்டாது. மத்தேயுவும் கூட “மரியாள்  தன் முதற்பேறான குமாரனைப் அவளுக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பு  அவளை அறியாதிருந்தான். (1:25) என இதை உறுதிப்படுத்துகிறார். (அறிதல் என்னும் பதத்திற்கு ஆதி 4:1 ஐ பார்க்கவும்)


(ஆ) உபதேசத்தின் ஆதாரம் 

கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்ட நாம், அதற்கான ஆதாரங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை மறுப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் தகுந்த பதில்களைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். மட்டுமல்ல இவ்வுபதேசத்தைப் பற்றி போதிய அறிவற்றவர்களுக்கும் ஏற்ற விளக்கங்களையும் கொடுக்க முடியும். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமான ஆதார விளக்கங்கள் எதற்கு, இயேசு கன்னி மரியாளிடத்தில் பிறந்தார் என்று அறிந்திருந்தால் போதும் சில சமயம் நாம் எண்ணலாம். ஆனால் பேதுருவின் கட்டளை இத்தகைய பரந்த அறிவு தேவையென்றே கூறுகிறது,  “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15) என நாம் அறிவுறுத்தப்பட்டுள்ளமையால் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பற்றி நம்மிடம் விசாரிப்பவர்கள் இச்சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் கொடுக்க நாம் தயாரியிருக்க வேண்டும். எனவே, இவ்வுபதேங்களுக்கான ஆதாரங்களை விபரமாக ஆராய்ந்து பார்ப்போம். (எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன என்பதை கருத்திற் கொண்டு வாசிக்கவும்)
(வளரும்)
பகுதி 2 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் எழுதிய கன்னிப்பிறப்பு கற்பனையா? - “சத்தியவசனம்” கார்த்திகை-மார்கழி 88, தை-மாசி 89 இதழிலிருந்து பெறப்பட்டதாகும்)

Sunday 4 December 2011

வேதாகமத்திற்கு வெளியில் ...(3)அறியப்படாத தேவன்(அப்போஸ்தலர் 17:23)


(உ) அறியப்படாத தேவன்(அப்போஸ்தலர் 17:23)



இயேசுகிறிஸ்து சகல மதங்களிலும் இருக்கிறார் என்னும் உபதேசத்திற்கு ஆதாரமாகப் பவுல் அத்தானே பட்டணத்தில் “அறியப்படாத தேவனைப்“ பற்றி குறிப்பிட்ட விடயமும் சுட்டிக் காட்டப்படுகின்றது. அத்தேனே பட்டணத்து மக்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பவுல், அப்போஸ்தலர் 17:23 இல் “எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக்  கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாததேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.“என்று குறிப்பிட்டுள்ளார். அத்தேனே பட்டணத்தார் வழிப்பட்ட அறியப்படாத தேவனே பவுல் அறிவித்து வந்த தெய்வம் என்பதே இவ்வசனத்தின் அர்த்தம் என்பது இன்று பொதுவாகக் கிறிஸதவர்கள் மத்தியில் இருக்கும் கருத்தாகும். ஏனெனில், “ நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்“ என்னும் வாக்கியம் இதை நேரடியாக அறியத் தருவது போலவே தென்படுகின்றது. இதனால் “பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எம்மால் கிரேக்கர்களின் அறியப்படாத தேவனைப் பற்றி மட்டுமல்ல இந்து மதத்தில் மறைந்திருக்கும் கிறிஸ்துவைப் பற்றியும் பேசலாம்(66) என்பது தற்கால கிறிஸ்தவ இறையியலாளர்களின் தர்க்கமாகும். எனினும்., பவுல் குறிப்பிடும் அறியப்படாத தெய்வம் அவர் அறிவித்து வந்த தெய்வம் அல்ல. ஏனென்றால் அத்தேனே பட்டயத்தில் கண்டது இது போன்று அறியப்படாத தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்கள் அக்காலத்தில் பல இடங்களில் இருந்துள்ளன. (68) அத்தோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலிபீடத்தைப் புதுப்பிக்கும்போதும், அது ஆரம்பத்தில் எத்தெய்வதற்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது என்பதை அறியமுடியாதபோது, அவையும் அறியப்படாத தெய்வங்களுக்கே அர்ப்பணிக்கப்பட்டன. (69). மேலும், கட்டிடங்களைக் கட்டும்போது பழைய கல்லறைகள் பாதிக்கப்பட்டால் மரித்தவரைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அவ்விடங்களிலும் இத்தகைய பலிபீடங்கள் கட்டப்பட்டன. (70) எனவே, அறியப்படாத தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்கள் ஆரம்ப காலத்தில் புறஜாதியாருடைய தெய்வங்களுக்கான பலிபீடங்களாக அல்லது மரித்த மனிதர்களுடைய பலிபீடங்களாக இருந்துள்ளனவே தவிர, அவை பவுல் அறிவித்து வந்த தேவனுடைய வழிபாட்டிடங்களாக இருக்கவில்லை.

அத்தேனே பட்டணத்தில் இருந்த பலிபீடங்கள் உருவான வரலாறும்அறியப்படாத தேவனுக்கு அர்பணிக்கப்பட்ட பலிபீடம் கிறிஸ்தவர்கள் வழிபடும் தெய்வத்தின் பலிபீடம் அல்ல என்பதை அறியத்தருகிறது. கி.மு. 6 நூற்றாண்டில் அத்தேனே பட்டணத்தில் கொடிய கொள்ளை நோய் பரவியபோது, அவர்களால் அதைத் தடுக்க முடியாதிருந்தது. இதனால். கிரேத்தா தீவில் வாழ்ந்த “எப்பிமென்டிடஸ்“ என்னும் தீரக்கதரிசியிடம் தங்களுக்கு உதவி செய்யும்படி மக்கள் கேட்டபோது, கருப்பும் வெள்ளையுமான செம்மறி ஆடுகளை அத்தேனே பட்டணத்திலிருந்த மார்ஸ் மேடையிலிருந்து (71) அனுப்பும்படியும் அவைகள் எவ்விடங்களில் படுத்துக் கொள்கின்னறனவோ அவ்விடங்களில் அப்பிரதேசத்து தெய்வங்களுக்கு (72) பலியிடும்படியும் எப்பிமென்டிடஸ் அறிவித்தான்.  கொள்ளை நோய் பரவுவது நிறுத்தப்பட்ட பின், பலியிடப்பட்ட இடங்களில் ஞபகார்த்த பலிபீடங்கள் கட்டப்பட்டன. இவற்றில் எந்த ஒரு தெய்வத்தின் பெயரும் குறிப்பிட்டப்பட்டவில்லை. அப்பலீப்பீடங்களே பிற்காலத்தில் “அறியப்படாத தெய்வங்களுக்கு“ என்னும் பெயரைப் பெற்றன. (73) எனவே, பவுல் குறிப்பிடும் அறியப்படாத தேவனுக்கு அர்ப்பணிக்க்பபட்டிருந்த பலிபீடம் அவர் அறிவித்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த பலிபீடம் அல்ல. “டொன் ரிச்சர்சன்“ என்னும் கிறிஸ்தவ மிஷனரி, அத்தேனே பட்டண பலிபீட வரலாற்றைத் தவறாக விளங்கிக் கொண்டு,  எப்பிமென்டிடஸ் என்பவன் மெய்யான தேவனுடைய தீரக்கதரிசி என்றும், அவன் அத்தேனே பட்டண மக்களுக்கு பிராயச்சித்த பலியைப் பற்றி போதித்தான் என்றும் தர்க்கித்து வந்தார். (74) இதனால் அத்தேனே பட்டண மக்கள் வழிபட்ட அறியப்படாத தேவன், பவுல் அறிவித்து வந்த மெய்யான தெய்வம் என்று பல கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், “அறியப்படாத தேவன், என்று ஒருமையில் ஒரு தெய்வத்தை மட்டும் குறிப்பிடும் விதத்தில் அக்காலத்தில் எந்த ஒரு இடத்திலும் பலிபீடம் இருந்தத்தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இத்தகைய பலிபீடங்கள் அனைத்தும் பல தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவைகளாகவே இருந்தன. (75) இவை தனிப்பட்ட ரீதியாக  எந்த ஒரு தெய்வத்திற்கும் அர்ப்பணித்துக் கட்டப்படவில்லை. ““இருக்கின்ற தெய்வங்களில் ஒன்றையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் தங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே இத்தகைய பலிபீடங்கள் கட்டப்பட்டன. (76) பவுல் அத்தேனேயில் கண்ட பலிபீடமும் பல தெய்வங்களுக்கு அர்பணிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடமே என்பதை மறுப்பதற்கில்லை. பவுல் ஒருமையில் “அறியப்படாத தேவன்“ என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அககாலத்தில் ஒவ்வொரு பலிபீடமும் அறியப்படாத பல தெய்வங்களுக்கே அர்பணிக்கப்பட்டிருந்தது(77) எனவே, பவுல் குறிப்பிடும் அறியப்படாத தேவனுக்கான பலிபீடத்தை அவர் அறிவிக்கும் தெய்வத்திற்கான பலிபீடமாக கருத முடியாது. 

பவுலின் கூற்றானது சிலர் தர்க்கிப்பது போல “அத்தேனே பட்டணத்தார் தேவனை அறியாத போதிலும் அவரையே வழிபட்டு வந்தனர். (78) எனும் அர்த்தமுடையது அல்ல . “பிறமதங்களில் இருந்து கிறிஸ்தவத்திற்கு வருபவர்களின் வழிபாடு, ஒரு புதிய தெய்வத்திற்கான வழிபாடாயிராமல், அவர்கள் ஏற்கனவே அறியாமையில் பிழையான முறையில் ஆராதி்த்து வந்த தெய்வத்தை சரியான முறையில் வழிபாடுவது (79) என்னும் சிலரது கருத்திற்கும் பவுலின் கூற்று எவ்விதத்திலும் ஆதரவு தருவதாயில்லை. ஏனென்றால் அத்தேனியர்களின் அறியப்படாத தெய்வத்திற்கும் பவுல் அறிவித்த மெய்யான தேவனுக்கும் எந்தவித தொடர்புமில்லை. (80) மூலமொழியில் “நீங்கள் அறியாமல் வழிபடுகின்ற அவரையே“ என்னும் சொற்பிரயோகத்தில் “அவரையே“ என்று மொழிபெயர்க்கபட்டுள்ள பதம் “ஒன்றன்பால் பதமாகவே உள்ளது. எனவே “அவர்“ என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வாக்கியம் மூலமொழியில் உள்ள விதமாக “நீங்கள் அறியாமல் வழிபடுகின்ற இதையே நான் உங்களுக்கு பிரசித்தம் பண்ணுகிறேன்“ என்று உள்ளது. (81) அதாவது “அத்தேனியர்கள் “எதை“ வழிபட்டார்கள் என்று பவுல் கூறுகிறாரே தவிர “யாரை“ வழிபட்டார்கள் என்று கூறவில்லை. அவர்கள் மெய்யான தேவனை வழிபடவில்லை“(82) என்பதையே இச்சொற்பிரயோகம் கூட்டிக்காட்டுகின்றது. 

மூலமொழியில் பவுலினுடைய கூற்றில் வழிபாட்டுக்கு அல்ல, மாறாக “அறியாமைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.“(83) அதாவது, அவர்களின் வழிபாடு அறியாமையின் வழிபாடு என்பதையே பவுல் சுட்டிக்காட்டுகின்றார்.அறியப்படாத தேவன்“ என்னும் சொற்பிரயோகம் அத்தேனியர்களின் அறியாமைக்கான அடையாளமாகவே இருந்தது. (84) அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டு வந்த போதும் மெய்யான தெய்வத்தை அறியாதவர்களாகவே இருந்தனர். (85) “தாம் வழிபடாமல் விட்டுவிட்ட வேறு தெய்வங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் தாம் வழிப்பட வேண்டும் இல்லையென்றால் அவற்றின் கோபத்திற்குப் பலியாகி விடுவோம் என்னும் பயத்துடன் வாழ்ந்து அத்தேனியர்கள், தாம் அறிந்திராத தெய்ங்களுக்கெல்லாம் பலிபீடங்கள் கட்டியிருந்தனர். (86) இத்தகைய மக்களுக்கு உண்மையான தெய்வத்தைப் பற்றி அறிவிப்பதற்காகப் பவுல், அவர்களது பலிபீடத்தைத் தனது பிரசங்கத்தை ஆரம்பிக்கும் ஒரு அறிமுக உரையாக உபயோகித்துள்ளார். இதற்காகவே பவுல் அறியப்படாத தேவனைப் பற்றி குறிப்பிட்டுள்ளாரே தவிர, அவர்களுடைய வழிபாடு  தான் அறிவிக்கும் தெய்வத்தை மகிமைப்படுத்தும் வழிபாடு என்னும் அர்த்தத்தில்  அவர் இவ்வாறு கூறவில்லை. அதாவது “அத்தேனே மக்கள் அநிந்திராத தேவனைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பதற்காக, அவர்கள் மத்தியில் இருந்த “அறியப்படாத தேவன்“ என்னும் வாசகத்தைப் பவுல் உபயோகித்துள்ளாரே தவிர, அவர்கள் அதுவரை காலமும் ஆராதித்துவந்த தெய்வத்தைப் பற்றி பவுல் அவர்களுக்கு அறிவிக்கவில்லை. (87) அத்தேனே பட்டணத்தார் உண்மையில்யே “பவுல் அறிவித்த மெய்யான தேவனையே வழிபட்டிருந்தால், மனந்திரும்பும்படி அவர் அவர்களுக்கு அறிவித்திருக்க மாட்டார் (அப். 17:30) . மெய்யான தேவனை வழிபடுவது மனந்திரும்ப வேண்டிய ஒரு பாவம் அல்ல என்பதனால், அத்தேனே பட்டணத்தார் மெய்யான தேவனை வழிபடவில்லை என்பதை எவ்விதத்திலும் மறுக்க முடியாதுள்ளது. 

அறியப்படாத தேவன் பலிபீடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, மெய்யான தேவனை வழிபடுகிறீர்கள் என்று பவுல் கூறவில்லை. மாறாக “நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளர்களென்று காண்கிறேன்“ என்றே குறிப்பிட்டுள்ளார். “தேவதாப பக்தி“ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “மார்க்கப்பற்று“ என்னும் அர்த்தமுடையது. இலகுதமிழ் மொழிபெயர்ப்பில் இச்சொற்பிரயோகம் “சமயபக்தி“ என்றும் திருவிவிலியத்தில் “சமயபக்தி“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (89) உண்மையில் அத்தேனே பட்டணத்தார், மார்க்க விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தார்களே தவிர அவர்கள் உண்மையான தெய்வத்தை அறிந்தவர்களாக இருக்கவில்லை. அக்கால கிரேக்கத்தில் அத்தேனே பட்டணத்திலேயே அதிகமான விக்கிரக வழிபாட்டிடங்கள் இருந்தன. “கிட்டத்தட்ட 30,000 இற்கும் அதிகமான விக்கிரகங்கள் அத்தேனேயில் இருந்ததாக ஆராயசசியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (90)உண்மையில், “அத்தேனே பட்டணத்திலிருந்த அறியப்படாத தெய்வத்திற்கான பலிபீடம் அம்மக்களின் வி்ககிரக வழிபாடாகவே இருந்தது. (91) அவர்கள் உண்மையான தெய்வத்தைப் பற்றி அறியாதவர்களாக இருந்தமையால் பவுல் அவர்களுக்கு தேவனைப் பற்றி விளக்கிக் கூறினார். (அப். 24:31) உண்மையில், தேவனைப் பற்றிய பவுலின் பிரசங்கம் அத்தேனே பட்டணத்தார் உண்மையான தெய்வத்தை அறியாதவர்களாகவே இருந்து்ள்ளதையே காட்டுகிறது

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்) 

Footnote and References
(63) Evangelical Alliance (UK) 'The Salvation of Gentiles : Implications for other Faiths; in Evangelical Review of Theology. p 39.

(64) இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தேவனை வழிபடமுடியும் என்பதே வேதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் ஒரேயொரு மத்தியஸ்தராக இயேசுகிறிஸ்வே இருக்கிறார். (1 தீமோ. 2:5) உண்மையில், இயேசுகிறிஸ்துவினுடைய சிலுவைப் பலியே மனிதர்கள் தேவனிடம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளமையினால் (எபே. 2:18, எபி. 10:19-22) இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே தேவனை வழிபட முடியும். 

(65) J. Baldwin, Malachi : Tyndale Old Testament Commentaries, p 230

(66) Raimundo Panikkar, The Unknown Christ of Hinduism, p 137

(67) Pausanias Description of Greece 1.1.4, 5.14.8, Quoted in William J. Larkin, Act : The New Testament Commentary, p 240-246

(68) Minucius Felix, Octavivus 6.2, Quoted in F.F.Bruce, Acts : The New International Commentary on the New Testament, p 335

(69) Ibid, p. 336 

(70) R.E. Wycherley, 'St. Paul at Athens' in Journal of Theological Studies, pp. 619-621

(71) அத்தேனேயில் பவுல் இவ்விடத்திலிருந்தே பிரசங்கம் பண்ணினார். 

(72) ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தெய்வம் பொறுப்பாக இருப்பதாகவே அக்கால மக்கள் நமபினார்கள். இதனால்தான் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனால் அற்புதமான முறையில் குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்த நாகமான் என்னும் சீரிய நாட்டு மனிதன், இஸ்ரவேல் நாட்டின் மண்ணில் இரண்டு பொதிகள் தரும்படி எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்டான் (2 ராஜா. 5:17) இஸ்ரவேல் நாட்டின் மண்ணைத் தன் நாட்டுக்குக் கொண்டுபோனால் இஸ்ரவேல் மககளின் தேவனைத் தன்னுடைய நாட்டிலும் வழிபடலாம் என்று அவன் எண்ணியதே இஸ்ரவேல் நாட்டின் மண்ணைக் கேட்டதற்கான காரணமாகும். (H.F. Vos, 1,2 Kings : Bible Commentary, p. 152; T.L. Constable, 2 Kings : the Bible Knowledge Commentary, p 548)

(73) D. Laertes, Lives of the Philosophers 1.110, Quoted in W. J. Larkin, Acts : The IVP New Testament Commentary, p 255.

(74) D. Richardson, Eternity in their Hearts, Ventura : Regal Books, 1984

(75) C.J.Hemer 'The Speeches of Acts, Part 2: The Areopagus Speech' in Tyndale Bulletin, pp. 239-259

(76) A.D. Clarke & B.W. Winter, One, God, one Lord in a World of Religious Pluralism, p. 138.

(77) Jerome, Commentary on Titus 1: 12 Quoted in F.F. Bruce, Acts:  The New Testament Commentary on the New Testament, p. 335

(78) E. Haenchen, The Acts of the Apostles, p. 521

(79) J.R. W. Stott, The Message of Acts, 285

(80) I.H. Marshall, Acts in Tyndale New Testament Commentaries, p. 286

(81) ஆங்கில வேதாகமத்திலும் பவுலின் கூற்று இவ்விதமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(82) J.B. Polhill, Acts : The New American Commentary, p 372.

(83) N.B. Stonehouse, Paul before the Areopagus and Other New Testament Studies, p. 19.

(84) A. Fernando, The Christian’s Attitude Toward World Religion, p. 41

(85) S.D. Toussaint, Act: The Bible Knowledge Commentary, p. 403.

(86) E.M.Blaiklock, Acts: An Introduction and Commentary, p. 140

(87) J.B. Polhil, Acts: The New American Commentary, p. 371

(88) W.J. Larkin, Act: The  IVP Testament Commentaries, p. 256

(89) ராஜரீகம் என்பாரது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பில் “நீங்கள் மதாச்சாரத்தைக் கடைபிடிப்பதில் சிறிதளவு தவறாதவர்கள்“ என்று இவ்வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(90) A.D. Clarke & B.W. Winter, One, God, one Lord in a World of Religious Pluralism, p. 138.

(91) Tertullian, adv. Marc 1.9 Quoted in E. Haenchen, The Act of the Apostles, p. 521


Tuesday 29 November 2011

ஒரு தாயின் புதிய தீர்மானங்கள்



  • இன்று முதல் குடும்ப ஜெபம் நடத்த தீர்மானித்திருக்கிறேன். எல்லாத் தடைகளையும் மேற்கொண்டு குடும்ப ஜெபம் நடத்த என்னால் இயன்றதைச் செய்வேன். தினமும் அரைமணி நேரம் குடும்பத்திற்காக மட்டும் ஜெபிக்கத் தீர்மானித்திருக்கிறேன். 

  • ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் கர்த்தரைத் துதிப்பேன். வாரயிறுதி நாட்களிலும் ஒவ்வொரு பிள்ளையோடும் தனித்தனியே கூடி ஜெபிப்பேன். அவர்கள் தினமும் வேதத்தை வாசிக்கவும், ஜெபிக்கவும் கட்டாயப்படுத்துவேன்

  • வேதாகம வார்த்தைகளை கற்பிப்பேன். அளவுக்கு மீறி மதத்தை திணித்து, அதை அவர்கள் வெறுக்காதபடிக்கு கவனமாயிருப்பேன். பிள்ளைகளை ஒழுங்காக ஆலயத்திற்கும் ஞாயிறு பள்ளிக்கும் அழைத்துச் செல்வேன். 

  • என் பிள்ளைகளுக்கு நான் ஒரு நல்ல முன்மாதிரியாயிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். நானே சாதிக்க முடியாததை அவர்களிடம் எதிர்பார்கக மாட்டேன். என் குறையை அவர்கள் சுட்டிக் காட்டும்போது நானாகவே அதைத் தாழ்மையோடு ஒத்துக் கொள்வேன். நான் தவறிழைக்கும்போது அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டேன். 

  • பிள்ளைகள் குறைபாடுகள், கல்வி, ஞானம், என்னிடம் நடந்துகொள்ளும்முறை யாவற்றுக்கும் அப்பாற்பட்டு அவர்களிடம் அன்புகாட்ட தீர்மானித்திருக்கிறேன். மற்றப் பிள்ளைகளோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியோ, கேலி செய்தோ, பிறர்முன் அவர்களை குற்றஞ்சாட்டியோ குறைகூறியோ எரிச்சல் மூட்ட மாட்டேன். 

  • என் சொல்லாலும் செயலாலும் அவர்கள் எனக்கு வேண்டுமென்பதை அவர்கள் உணரும்படி செய்வேன். ஒரு பிள்ளையை மற்றொரு பிள்ளைகளோடு ஒப்பிடமாட்டேன். எல்லாரையும் ஒன்றாகவே நடத்துவேன். அவர்களது உழைப்பு, முயற்சி, நன்னடத்தையைப் பாராட்டி பெருமைப்படுத்துவேன். 

  • பிரம்பைக் கையாடத் தீர்மானித்திருக்கிறேன். கீழ்படியும்வரை பிள்ளைகளைப் பயமுறுத்திக் கொண்டும் கத்திக் கொண்டும் இராமல் ஏற்றவேளையில் அடி கொடுப்பேன். அவர்களின் தவறை அவர்களாகவே உணரச்செய்வேன். முழுக் கீழ்ப்படிதலையும் பிள்ளைகளிடம் இனி எதிர்பார்ப்பேன். 

  • பாவம் செய்யும்போது தவறிழைக்கும்போது தண்டித்து அன்போடு திருத்துவேன். இருதயத்தில் கசப்பை சுமந்துகொண்டே திரிந்து நாள்முழுவதும் அதை வெளிப்படுத்த மாட்டேன். தண்டித்தபின் பழைய அன்பின் உறவைக் காட்டுவேன். 

  • பிள்ளைகளை முரட்டு்க கோபத்தில் நடத்தாமல், அன்பிலும், நல்ல நடத்தையினாலும், பாசத்தை வெளிப்படுத்துவேன். அம்பலத்தில் அவர்களைத் தண்டிக்காமலும் வார்த்தைக்கு வார்த்தை பதில் கொடுத்து அவர்களைக் கோபப்படுத்தாமலும் பொறுமையுடனும் உண்மையுடனும் கண்டிப்பேன். 

  • என் கண்வர் அவர்களைத் தண்டிக்கும்போதோ திருத்தும்போதோ குறுக்கிட்டுத் தடை செய்யக் கூடாதெனத் தீர்மானித்திருக்கிறேன். அவரது கண்டிப்பு தவறென்பதுபோல பின்னர் நடந்து கொள்ளாமல் பொறுமையுடன் பிள்ளைகளுக்கு அவர்கள் செய்த தவறினை விளக்குவேன். கணவரோடு எனக்கு மனவேறுபாடுகள் ஏதுமிருந்தால் அதைப் பிள்ளைகளிடம் வெளிப்படுத்த மாட்டேன். 

  • என் முன்மாதிரியைப் பிள்ளைகள் பின்பற்றும்படியாக கணவனுக்கு எல்லா அன்பும் மரியாதையும் பணிவும் கீழ்படிதலுடனும் காண்பிக்கத் தீரமானித்திருக்கிறேன். பிள்ளைகள் தங்கள் தகப்பனோடு நல்லறவுக்கொள்ள என்னாலான முயற்சிகளை எடுப்பேன். பிள்ளைகளிடம்  அளவுக்கு மீறிப் பரிவு காட்டி கணவன் மீது பொறாமைக்கொள்ள இடங் கொடுக்க மாட்டேன். 

  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கத் தீர்மானித்திருக்கிறேன். பி்ள்ளைகளோடு உட்கார்ந்து பேசி, விளையாடிப் பொழுதுபோக்குவதை நான் வீணென்று கருதமாட்டேன். அவர்கள் பாடாசலையிலிருந்து திரும்பும்போது நான் வீட்டிலிருப்பேன். அந்ததந்த நாளின் விபரங்களைப் பகிர்ந்து கொள்வேன்.

  • பிள்ளைகளின் பேச்சைக் கவனமாகக் கேட்பேன். என் மனநிலையினால் அவர்கள் பாதிக்கப்படாதபடி எப்பொழுதும் மகிழ்ச்சியோடும் பொறுமையோடும் காணப்படுவேன். மாதம் ஒருமுறையாவது நான் அவர்களை வெளியே அழைத்துச் செல்வேன். 

  • பிள்ளை படிக்கும் பாடசாலை ஆசிரியர்களோடு தொடர்புகொள்ளத் தீரமானி்த்திருக்கிறேன். ஆசிரியரின் குற்றச்சாட்டுக்களை அசட்டை செய்யாது அதைத் தீரவிசாரித்தறிந்து பிள்ளையைத் திருத்துவேன். அக்கம் பக்கத்தார் குற்றஞ்சாட்டும்போது எனது பி்ள்ளையின் பக்கமாக மட்டும் சாய்ந்து பேசாமல் உண்மை நிலையை ஒத்துக் கொள்வேன். 

  • பி்ள்ளைகளின் படிப்பில் நான் கவனஞ் செலுத்துவேன். பாலியல் சம்பந்தமான காரியங்களைக் கூடத் தயங்காமல் பேசி அவர்களின் சந்தேகங்களைப் போக்கிடச் செய்வேன். புத்தகங்களை பரிசீலனை செய்வேன். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதிலுரைப்பேன்

  • கூடுமான நாள்வரை என் குழந்தைகளுக்கு தாய்பாலூட்டத் தீர்மானித்திருக்கிறேன். உணவுக்காரியத்தில் “அது வேண்டாம்; இது வேண்டாம்“ என ஒதுங்காது வீட்டில் சமைப்பதை வீணாக்காது முறுமுறுக்காது முகமலர்ச்சியோடு உண்ணும்படி பழக்குவிப்பேன். வீட்டில் சரிவிகித உணவு திட்டத்தை மேற்கொள்வதோடு, நானே அவர்களுக்குப் பரிமாறுவேன்.

  • பி்ள்ளைகளின் காரியங்கள் யாவற்றையும் நானே அவர்களுக்குப் பதிலாகச் செய்து அவர்களின் வளர்ச்சியை தடுக்காதிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவையான விடுதலையையும் சுந்திரத்தையும் அளிப்பேன். 

  • பிள்ளைகளை எப்பொழுதும் பிடித்து வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் அதேசமயம் அவர்கள் நண்பர்கள், பிள்ளைகள் செல்லும் இடங்களைக் குறித்து நிர்விசாரமாயிருக்க மாட்டேன். நன்மையானதைத் தெரிந்து கொள்ள பழக்குவிப்பேன். தன் வேலையைத் தானே செய்யவும் வீட்டுவேலைகைளில் பங்கெடுக்கவும் பழகுவிப்பேன். 

  • பிள்ளைகள் கேட்டதெற்கெல்லாம் சரி சொல்லாமல் “இல்லை“ என்ற பதிலையும் மகிழ்ச்சியாய் ஏற்க பழக்குவிப்பேன். எனனுடைய பிள்ளைகளை எளிய வாழ்க்கைகத் தரத்தில் வளர்ப்பேன். 

(நன்றி சத்தியவசனம் January - March - 2008 ஆசிரியர் - டாக்டர் லில்லியன் ஸ்டான்லி)






Tuesday 22 November 2011

வேதாகமத்திற்கு வெளியில் ...(2) எபிரேயர் 1:1-2, யோவான் 1:9, யாத்திராகமம் 3:2-4, மல்கியா 1:11 விளக்கங்கள்


இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுததுங்கள்

(அ) பிதாக்களுடன் பேசிய தேவன் (எபிரேயர் 1:1-2)



“இயேசுகிறிஸ்து பிற மதங்களில் வேறு பெயர்களில் மறைந்திருக்கிறார்“ எனும் உபதேசம் வேதவசனங்களைத் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தவறான போதனையாகும்.(41) ஏனென்றால் எபிரேயர் 1:1 ஐ ஆதாரமாகக் கொண்டு இவர்கள் ஏனைய மத நூல்களும் இயேசுகிறிஸ்துவினாலே அருளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இவர்கள் எபிரேயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை கருத்திற் கொள்ளாமல், “பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் பிற மத பக்தர்களுடனும் பேசியுள்ளார்“ என்று வாதிடுகின்றனர். (42) இஸ்ரவேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்த தேவனே, பிறமத மக்களுடைய வாழ்விலும் செயல்பட்டு வந்தார் என்பதே இவர்களின் தர்க்கமாகும். (43)

நாம் ஏற்கனவே பார்த்தபடி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் வித்தியாசமான முறைகளில் மனிதர்களோடு தொடர்பு கொண்டு தம்மை பற்றி இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தார் என்பதே எபிரேயர் 1:1 நமக்கு அறியத்தரும் விடயமாகும். (44) இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எபிரேய நிருப ஆசிரியர் “நம்முடைய பிதாக்கள்“ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நிருபம் எபிரேயர்களான யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளது. (45) எனவே, அவர்களைப் பொறுத்தவரை “நம்முடைய பிதாக்கள் பழைய ஏற்பாட்டு பக்தர்களாவார்(46) எனவே, தேவன் பழைய ஏற்பாட்டு பக்தர்களோடு பேசியுள்ளதைப் பற்றி இவ்வசனததில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, உலக மதங்கள் அனைத்திலும் தேவ வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படவில்லை.

(ஆ) எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளி (யோவான் 1:9)

உலகின் சகல மதத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தங்களின் உபதேசங்களை எழுதினார்கள் என்னும் கருத்தை நிரூபிப்பதற்காக சிலவேத ஆராய்ச்சியாளர்கள் யோவான் 1:9 ஐயும் உபயோகிக்கின்றனர். இயேசுகிறிஸ்துவைப் பற்றி எழுதும் யோவான் இவ்வசனத்தில், உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.(யோவான் 1:9) என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்தை விளக்கும் சில வேத ஆராய்ச்சியார்கள், “ஏசாயா, பிளேட்டோ, புத்தர், கான்ஃபூசியஸ் போன்றவர்களும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தங்களின் போதனைகளை உலகிற்கு அறிவித்துள்ளனர்“ என்று கூறுகின்றனர் (47) உலகத்தில் பிறக்கின்ற சகல மனிதருக்கும் இயேசுகிறிஸ்து ஆன்மீக ஒளி கொடுக்கிறார் என்றே இவ்வசனம் கூறுவதாக இவர்கள் கருதுகின்றனர். (48) எனினும் இயேசுகிறிஸ்துவின் இச்செயல் பிற மதத் தத்துவங்களும் உபதேசங்களும் உருவாக்குவற்குக் காரணமாக இருந்ததாக யோவான் கூறவில்லை. (49) இயேசுகிறிஸ்து மக்களைப் பிரகாசிக்கப்பண்ணுவது, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுக்கு உணர்த்தும் செயலாகவே இருப்பதை யோவானின் சுவிசேஷம் அறியத்தருகிறது. (50)

ஒளியாகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்திருக்கின்றார். அவ்வொளியில் தங்கள் ஆவிக்குரிய நிலையைக் கண்டு, மனந்திரும்பி அவரை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படுகின்றார்கள். மற்றவர்கள் அவ்வொளியில் தங்கள் பாவ செயல்கள் வெளிப்படாமலிருப்பதற்காக அவரிடம் வராமலிருக்கிறார்கள் என்னும் உண்மையை யோவான் 3:18-21 அறியத்தருவதனால் (51) மக்களைப் பிரகாசிக்கப்பண்ணும் இயேசு கிறிஸ்துவின் செயலை, சகல மனிதரும் அவரால் ஆவிக்குரியபிரகாரம் நன்மையடையும் செயலாக விளக்க முடியாது.(52) மனிதர்கள் அனைவரும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக யோவான் தன்னுடைய சுவிஷேசத்தை எழுதினாலும் (யோவான் 20:31) (53) எல்லோரும் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார் (யோவான் 1:11)(54) எனவே “இயேசுகிறிஸ்துவின் ஒளி சகல மனிதர்களுக்கு கிடைத்தாலும் அது அவர்கள் அவ்வொளியை என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை இரு பகுதியாகப் பிரிக்கின்றது.(55) இயேசுகிறிஸ்துவை விசவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர். நிராகரிப்பவர்கள் ஆக்கினைக்குட்படுகின்றனர். (யோவான் 3:36)(56) எனவே, சகல மதத்திலுள்ளவர்களுக்கும் இயேசுகிறிஸ்துவினால் ஆன்மீக ஒளி கிடைப்பதாக யோவான் 1:9 ஐ விளக்க முடியாது. சகல மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒளியாக இயேசுகிறிஸ்து உள்ள போதிலும், அவ்வொளியில் தங்களின் உண்மையான பாவநிலைமையைக் கண்டு, அவரிடம் வருவார்கள் மட்டுமே அவரால் ஆவிக்குரிய பிரகாரம் நன்மையடைகிறவர்களாக இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. 

(இ) முட்செடியின் நடுவில் தரிசனமளித்தவர் (யாத்திராகமம் 3:2-4)

பிறமதங்களிலும், அவற்றின் தெயவச் சிலைகளுக்குள்ளும் இயேசுகிறிஸ்து இருக்கிறார் என்று தர்க்கிப்பவர்கள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக, தேவன் மோசேக்கு முட்செடியின் நடுவில தரிசனம் கொடுத்த சம்பவத்தை கூட்டிக்காட்டுவது வழமை. “தேவன் சகல இடங்களிலும் இருக்கின்றார் என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் மோசேக்கு முட்செடியில் தரிசனம் அளித்தார்“ என்று கூறும் இவர்கள், “தேவனுடைய பிரசன்னம் முட்செடியில் இருந்தது போலவே, இயேசுகிறிஸ்து சகல மதங்களிலும் கலாசாரத்திலும் இருக்கிறார்“ என்று தர்க்கிக்கின்றனர். (57) தேவன் முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்கு தரிசனமளித்தது உண்மை என்றாலும் (யாத். 3:2-4) அந்த “முட்செடிக்குள் தேவன் இருந்தார்“ என்று வேதாகமம் கூறவில்லை. அவர் “முட்செடிக்கு நடுவில்“ அக்கினி ஜூவாலையாகத் தரிசனமளித்தாகவே யாத்திராகமம் 3:2-4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேவன் ஓரிடத்தில் மக்களுக்குத் தரிசனம் கொடுத்தார் என்பதற்காக, பிறமதத்தவரின் சிலைகளுக்கள் எல்லாம் அவர் இருக்கின்றார் என்று கூறமுடியாது. எனினும், சில புதிய மொழிபெயர்ப்புக்களில், உபாகமம் 33:16 இல் “தேவன் முட்செடியில் வாழ்ந்ததாகக்“ குறிப்பிட்ப்பட்டுள்ளது. நாம் உபயோகிக்கும் வேதாகமத்தில் இவ்வாக்கியம் “முட்செடியில் எழுந்தருளினவர்“ என்று உள்ளது. (58) புதிய மொழிபெயர்ப்புகளிலுள்ள “வாழ்ந்தார்“ என்னும் பதம் மூலமொழியில் “நிரந்தரமாக இருந்ததைக்“ குறிக்கும் விதத்தில் அல்ல. அவர் இருந்ததன் நிச்சியத்தை அறியத்தரும் விதத்திலேயே உள்ளது. (59) எனினும் யாத்திரகாமம் 3:2-4 இல் குறிப்பிடப்பட்டுள்ளபோல தேவன் “முட்செடிக்க நடுவில்“ மோசேக்கு தரிசனமானார் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் முட்செடிக்குள் நிரந்தரமாக இருப்பதாக இவ்வசனம் கூறவில்லை. எனவே, இவ்வசனசத்தை ஆதாரமாகக் கொண்டு, தேவன், பிறமதச் சிலைகளுக்குள் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. (60)


(ஈ) எல்லா இடங்களிலும் என் நாமத்திற்கு தூபமும் காணிக்கையையும் செலுத்தப்படும் (மல்கியா 1:11)


பிறமத வழிபாடுகள் தேவனுக்கே ஏறெடுக்கப்படுகின்றன என்னும் தங்களின் தவறான கருத்தை நிரூபிப்பதற்காக சில வேதஆராய்ச்சியாளர்கள் மல்கியா 1:11ஐ உபயோகிக்கின்றனர். இவ்வசனத்தில் சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு. “உண்மையான உள்ளத்தோடு செய்யப்படுகின்ற ஆராதனை எந்த மதத்தில் செய்யப்ட்டாலும் அது தேவனுக்கே செய்யப்படுகின்றது. (62) இவர்கள் இவ்வசனத்திலுள்ள “மகத்துவமாயிருக்கும்“ “செலுத்தப்படும்“ என்னும் சொற்களை நிகழ்காலத்தில் உள்ளவைகளாக விளக்கி, மல்கியாவின் காலத்திலேயே வழிபாடுகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைப் பற்றியே இவ்வசனம் கூறுவதாகத் தர்க்கிக்கின்றனர். (63) ஆனால் புறஜாதியாருடைய வழிபாடுகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதற்கு வேதாகமத்தில் இதுவித ஆதாரங்களும் இல்லை. மல்கியாவின் புத்தகத்திலும் புறஜாதியாருடைய வழிபாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. (மல். 1:5, 2:13-16) மேலும் இவர்கள் கூறுகின்ற விதமாக, இவ்வசனத்தின் வினைச்சொற்கள் நிகழ்காலத்தில் இல்லை. உண்மையில், “எதிர்காலத்தில் சகல ஜாதியினரும் தேவனை சேவிப்பதைப் பற்றியே தேவன் இவ்வசனத்தில் முன்னறிவித்துள்ளார்.“(65) எனினும் இது புறஜாதி மக்கள் தங்களுடைய மதங்களில் செய்யும் வழிபாட்டை அல்ல, அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டு அவரை மகிமைப்படுத்தும் ஆராதனையைப் பற்றிய முன்னறிப்பிப்பாகவே உள்ளது. 

(வளரும்)

Footnote and References
(41) C. Wright 'The Unique Christ in the Plurality of Religions' in The Unique Christ in our Pluralist World, p 35

(42) R. Panikkar, The Unknown Christ of Hindusim, p 137

(43). K. Abraham, Prajapathi : The Cosmic Christ, p.30

(44) பக்கங்கள் 29-32 இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

(45) இந்நிருபத்தில் பழைய ஏற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிக அளவில் இருப்பதனால், இது அக்காலத்தில் பழைய ஏற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. “நிருபத்தின் விடயங்கள், இதன் முதல் வாசகர்கள் அக்கால யூத சிந்தனைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் நன்கு பரிச்சயமானவர்களாக இருந்துள்ளதை அறியத்தருகின்றது. (G.H. Guthrie, Hebrews: The NIV Applications Commentary, p. 19) புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் எபிரேய நிருபத்திலேயே அதிகளவு பழைய ஏற்பாட்டு வசனங்களும் கருத்துக்களும் உள்ளன. (G.H. Guthrie, 'The Old Testament in Hebrews' in Dictionary of the Later New Testament Quotations in Hebrews' in New Testament Studies, pp. 363-379) “எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம்“ எனும் தலைப்பு இந்நிருபத்திற்கு முதற்தடவையாக இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்டாலும், இது யூதக்கிறிஸதவர்களுக்கே எழுதப்பட்டது என்னும் ஆதிச் சபைப் பிதாக்களின் கருத்து சரியானதாகவே உள்ளது. (D.A. Hanger, Hebrews : New International Biblical Commentary, pp. 1-2)

(46) இவ்வசனத்தில் “பிதாக்கள்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் புதிய ஏற்பாட்டில் “முதற்பிதாக்களையே“ குறித்தாலும் (யோவான் 7:22, ரோ. 9:5) இவ்வசனத்தில் பழைய ஏற்பாட்டு பக்கதர்களைக் குறிப்பிடும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (L. Morris, Hebrews : The Expositor's Bible Commentary Volume 12, p. 12) புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள், உலகிலுள்ள மதங்களின் பக்தர்களை அல்ல, தங்களது மூதாதையார்களான இஸ்ரவேல் மக்களையே தங்களுடைய பிதாக்களாகக் கருதினார்கள். 

(47) W. Temple, Readings in St. John's Gospel Volume 1, p.10

(48) Ibid. p 10 இரண்டுவிதமான முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் “உலகத்தில் வந்து“ என்னும் சொற்பிரயோகம், “உலகத்தில் வருகி்ன்ற மனிதர்களைக்“ குறிக்கின்ற விதத்திலும், “உலகத்திற்கு மனிதராக வந்த இயேசுகிறிஸ்துவைக்“ குறிக்கின்ற விதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை ஆங்கில வேதாகமங்களில் நாம் அவதானி்கலாம். எனினும், ஒளியாகிய இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதைப் பற்றியே யோவான் இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதி அறியத் தருகிறது. (D.A. Carson, John : The Pillar New Testament Commentaries, pp. 121-122) 'இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வந்தமையால், சத்தியத்தின் வெளிச்சம் சகல மனிதருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது“ என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். (M.C Tenney, John : The Expositor's Bible Commentary Vol 9, p 31)

(49) இது சகல மனிதருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொதுவான வெளிப்படுத்தலைப் பற்றிய விபரணம் என்பது சில தேவஆராய்ச்சியாளர்களினது கருத்தாய் உள்ளது. (L.  Morris, John : New International Commentary on the New testament, p. 95; J. Calvin, St. John 1-10 : Calvin's New Testament Commentaries, p. 15)

(50) மூலமொழியில் உபயோகிக்கப்படடுள்ள “ஃபோத்தீஸ்ஸாய்“ (photizei) எனும் கிரேக்கப் பதம் “வெளிச்சம் கொடுத்தல்“ அல்லது “தென்பட அல்லது புலப்பட வைத்தல்“ என்னும் அர்த்தங்களையே கொண்டுள்ளது. எனவே, மானிட அறிவுக்கு ஒளியூட்டும் செயலாக யோவான் 1:9 ஐ விளக்க முடியாது. (D.A. Carson, John : The Pillar New Testament Commentary, p. 124; E.A. Blum : John : The Bible Knowledge Commentary New Testament, p 272)

(51) யோவான் 3:18-21  18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்' என்று குறிப்பிடப்பட்டள்ளது.


(52) G.M. Burge, John : The NIV Application Commentary, p 58

(53) யோவான் 20:30 இல் “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.“ என்று குறிப்பிட்டுள்ளார்

(54) யோவான் தன்னுடைய சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்திலேயே, அவர் (இயேசு) தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை“ என்பதை அறியத் தந்துள்ளார். (யோவான். 1:11) இயேசுகிறிஸ்து யூதவம்சத்தில் இவ்வலகத்திற்கு வந்தமையால் யூத ஜனங்களே இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்துவின் சொந்த ஜனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

(55) G.M. Burge, John : The NIV Application Commentary, p 58

(56) யோவான் 3:36 இல் “ குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் “ என்னும் உண்மையை அறியத்தருகிறது. இதனால்தான் 1 யோவான் 5:12 இல் “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

(57) J. Taylor, 'Primal Vision' cited in M. Goldsmith What About other Faiths, p. 125

(58) NIV மொழிபெயர்ப்பில்  இவ்வாக்கியம் 'dwelt in the bush; என்று இருப்பதனால், இதனை அடிப்படையாகக் கொண்ட புதிய இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வசனம் “எரிகின்ற புதரில் வாழ்ந்தார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோனஹன் மொழிபெயர்ப்பில் “முட்செடியில் தங்கியவர்“ என்றும், திருவிவிலியத்தில் “முற்புதரில் வீற்றிருந்தவர்“ என்றும் இவ்வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(59) E.S. Kalland, Deuteronomy: The Expositor's Bible Commentary Vol 3, p 227. இப்பதமே வனாந்திரப்பிரயாணத்தின்போது, இஸ்ரவேல் மக்கள் தங்கியிருந்த இடங்களில் அவர்களோடு சென்ற மேகஸ்தம்பம் தரித்து நின்றதைக் குறிக்கவும் உபயோகிக்கப்பட்டுள்ளது. (எண். 9:17-18) அச் சந்தர்ப்பங்களில் மேகஸ்தம்பம் நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாக குறுகிய காலத்திற்குத் தங்கியிருந்ததையே இப்பதம் குறிக்கின்றது. (Ibid, p227) எனவே, தேவன் நிரந்தரமாக முட்செடியில் தங்கியிருந்தார் என்று இவ்வசனத்தை மொழிபெயர்ப்பது தவறாகும். 

(60) அக்காலத்தில் உயிர்ந்தவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அவருக்கு முன்பாகத் தாழ்ந்தவர் பாதரட்சைகளைக் கழற்றிப் போடும் பழக்கம் இருந்ததினாலேயே, பாதரட்சைகளைக் கழற்றிப் போடும் பழக்கம் இருந்தமையினாலேயே, தேவன் மோசேயிடம் பாதரட்சைகளைக் கழற்றும்படி யாத்திராகமம் 3:5 இல் கூறினார். (F.B. Huey, Exodus : Bible Study Commentary, p28) மேலும், தேவன் அச்சமயம் முட்செடியின் நடுவில் தரிசனமளித்தமையினாலேயே அவ்விடம் பரிசுத்த பூமி என்று சொல்லப்பட்டதே தவிர அது நிரந்தர பரிசுத்த பூமியாக இருக்கவில்லை. (R.A. Cole, Exodus : Tyndate Old Testament Commentaries, p 65) மேலும், அப்பிரதேசத்தின் உஷ்ணம் காரணமாக செடிகள் தீப்பிற்றி எரிவது சாதாரணமான சம்பவமானாலும்ஈ தேவன் மோசேக்குத் தரிசனமளித்தபோது, அக்கினி முட்செடியை எரிக்காதது அற்புதமான செயலாகவே உள்ளது. (H.L. Ellison, Exodus : The Daily Study Bible, p 16)

(61) W.Neil, Malachi : The Interpreters Dictionary of the Bible Volume 3, p 232

(62) ரோமன் கத்தோலிக்க வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தைத் தங்களின் ஆலயத்தில் நடைபெறும் பூஜையைப் பற்றிய தீர்க்கதரிசனமானகக் கருதுகின்றனர். (J. Packard, Malachi : Lange's Commentary on the Minor Prophets, p 4) இது, மேசிய யுகத்தில் செலுத்தப்படும் சடங்காச்சாரப் பலியைப் பற்றிய முன்னறிப்பு என்பதே இவர்களது விளக்கமாகும். (E.F. Sutcliffe, 'Malachy's Prophecy of the Eucharistic Sacrifice' in Irish Ecclesiastical Record pp. 502-513) சிதறிப்போயிருந்த யூதர்களின் வழிபாட்டைப் பற்றிய முன்னறிவிப்பாகவும் இவ்வசனம் சிலரால் விளக்கப்படுகின்றது. நியாயப்பிரமாணத்தை படிப்பதே, இவ்வசனங்களில் தூபமும் காணிக்கையும் செலுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே இவர்களின் கருத்தாகும். (J.Swetnam, 'Malachi 1:11 : An Interpretation' in Catholic Biblical Quarterly. pp 200-209) சில வேத ஆராய்ச்சியாளர்கள், யூதர்களுடைய மாய்மாலான வழிபாட்டை விட புறஜாதியாருடைய வழிபாடுகள் தம்முடைய பார்வையில் சுத்தமானவைகளாக இருப்பதாகவே இவ்வசனத்தில் தேவன் குறிப்பிட்டுள்ளதாககக் கருதுகின்றனர். அக்கால யூதர்களுடைய வழிபாட்டைக் கண்டிப்பதற்காகவே தேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதே இவர்கள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும். (J. Blau The Missionary Nature of the Church, 142;R.L.Smith, Micah-Malachi: Word Biblical Commentary Volume 32, pp314-315) ஆனால் இவ்விளக்கங்கள் திருப்பதிகரமானதாக இல்லை.

(63) Evangelical Alliance (U.K) 'The Salvation of Gentiles : Implications for Other Faiths' i Evangelical Review of Theology p 39

(64) இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே, தேவனை வழிபடமுடியும் என்பதே தேவதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் ஒரேயொரு மத்தியஸ்தராக இயேசுகிறிஸ்துவே இருக்கிறார். (1 தீமோ. 2:5) உண்மையில் இயேசுகிறிஸ்துவினுடைய பலியே மனிதர்கள் தேவனிடம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளமையினால் (எபே. 2:18, எபி. 10:19-22) இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே மனிதர்களினால் தேவனை வழிபட முடியும். 

(65) J. Baldwin, Malachi : Tyndale Old Testament Commentaries, p. 230