- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 26 December 2012

நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், ….. ,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.(மத்தேயு 10:5-6)



இயேசு கிறிஸ்து தன் சீடர்களை இறை பணிக்காக அனுப்பும் போது “நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.“ என்று கட்டளையிட்டார். (மத். 10:5-6) இயேசு உலக இரட்சகராக வந்த போதிலும் அவர் தனது இறைப்பணியை இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் வரையறை செய்யும் விதத்தில் புறஜாதியார் பட்டணங்களுக்குப் போகவேண்டாம் என சீடர்களுக்குக் கட்டளையிட்டமை அநேகருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இயேசுவும் கூட மத்தேயு 15.24 தன் பணியையும் இஸ்ரேலுக்கு மாத்திரம் வரையறை செய்துள்ளார். இதனால் சிலர் இவை இயேசு கிறிஸ்துவின் கூற்றுகள் அல்ல எனும் கருத்துடையவர்களாகவும் உள்ளனர். புறஜாதியினர் இரட்சிப்படைதை விரும்பாத யூத கிறிஸ்தவர் இவ்வாக்கியங்கள இயேசு கிறிஸ்துவின் கூற்றாக வேதத்தில் புகுத்தியுள்ளர்(1) என்பதே இவ்வசனங்களுக்கு கொடுக்கும் விளக்கமாகும். மேலும் இவ்வறிவுறுத்தல் மத்தேயுவின் சுவிஷேசத்தில் மட்டுமே இடம் பெறுவதால், யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூலில் இயேசுவின் மூலம் மக்களுக்கு கிட்டும் இரட்சிப்பு யூதர்களுக்கு மட்டும் உரியதாகவே காட்டப்பட்டுள்ளது என்றும் சில இறையியலாளர்கள் தர்க்கிக்கின்றனர். இதனால் புத்தகத்தின் இறுதியில் உள்ள சகல மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் எனும் இயேசுவின் கட்டளை மத்தேயுவின் எழுதப்பட்டவை அல்ல என்றும் அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்றும் இவர்கள் கருதுகின்றனர். (2)

இயேசுவின் கூற்றானது மானிட இரட்சிப்பைப் பற்றிய தேவனுடைய திட்டத்தின் காலக்கிரம முறையின்படி விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும். (3) சுவிஷேசமானது முதலில் யூதருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். இரட்சிப்பு யூதர்களின் வழியாக வந்துள்ளமையால்(யோவான். 4:22) முதலில் யூதர்களுக்கு அதைப் பற்றிய சுவிஷேச செய்தி அறிவிக்கப்பட்ட பின்பே புறஜாதியாருக்கு அறிவிக்கப்பட வேண்டியிருந்தது. (ரோமர் 1.16, 2.9-10) மத்தேயு 10ம் அதிகாரத்தில் இயேசு முதல் தடவையாகத் தன் சீடரைப் புறஜாதிப் பட்டணங்களுக்குப் போக வேண்டாம் என கட்டளையிட்டுள்ளார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளமையால் இயேசு தன் சீடர்களை முதலில் யூதர்களிடமே அனுப்பியுள்ளார். எனினும் பிற்காலத்தில் அவர் சகல இன மக்களுக்கும் சுவிஷேசத்தை அறிவிக்கும்படி கட்டளையிட்டார்(மத். 28.19-20) இவ்வித ஒழுங்கு முறையையே பிற்காலத்தில் ஆதிச் சபையினரும் அப்போஸ்தர்களும் பின்பற்றியுள்ளதை அப்போஸ்தலர்களுடைய நடபடிகளின் புத்தகத்தில் நாம் அவதானிக்கலாம். (அப். 1:8, 13:5, 44-48, 14:1) 

மத்தேயுவின் சுவிஷேசம் யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டது என்பது உண்மையாயினும் (4) இயேசுவின் சுவிஷேசம் யூதர்களுக்கு மட்டுமேயானது என மத்தேயு கூறவில்லை. சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஒரு யூத இனவாதியாக சித்தரித்துள்ள போதிலும்(5) அவரது சுவிஷேசத்தில் ஆரம்பத்திலிருந்து புறஜாதியாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இயேசுவை யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மெசியாகவாக காண்பிக்கும் மத்தேயு, அவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் என்று கூறவில்லை. நான்கு புறஜாதிப் பெண்களை இயேசுவின் வம்ச வரலாற்றில் உள்ளடக்கியுள்ள மத்தேயு, புறஜாதியரான சாஸ்திரிகள் அவரைத் தரிசிக்க வருவதையும் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். (மத். 1 :1-17, 2 :1-11) மேலும், இயேசு புறஜாதியாருடைய விசுவாசத்தைப் பாராட்டும் சம்பவங்களும் மத்தேயுவின் சுவிஷேசத்தில் உள்ளன.  (மத். 8 :10, 15 :28) சுவிஷேசம் சகல ஜாதியினருக்கும் அறிவிக்கப்படும் \என்பதும் (மத். 24 :14, 26 :13) புறஜாதியாரும் தேவனுடைய இராட்சியத்திற்குள் வருவார்கள் என்பதும் (மத். 8 :11, 21 :43) மத்தேயுவின் நூலில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் இறுதிக் கட்டளை சகல இன மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது. (மத். 28 :19-20)

இயேசு சகல இன மக்களினதும் இரட்சகராக வந்த போதிலும் அவர் யூதராக யூத மண்ணுக்கே வந்தார். “தேவனுடைய இரட்சிப்பின் செய்தியை உலகிற்கு அறிவிக்கும் மக்களாக  யூதர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். (ஆதி. 12 :3. ஏசா 60 :3) இதனால் இரட்சிப்பின் செய்தி முதலில் யூதர்களுக்கே அறிவிக்கப்பட்டது.(6) இயேசு யூத ஜனங்களை “காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்“ எனக் குறிப்பிட்டுள்ளார். (மத். 10 :6) இச்சொற்பிரயோகம் சிலர் தர்க்கிப்பது போல “இஸ்ரவேல் மக்களில் ஒரு பகுதியினரை மட்டும் குறிக்கும் விபரணம்“(7) அல்ல. ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் இச்சொற்பிரயோகம் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் குறிக்கும் விபரணமாகவே இருந்தது. இயேசுவும் இத்தகைய அர்த்தத்துடனே இச்சொற்பிரயோகத்தை உபயோகித்திருக்க வேண்டும். மேலும் “இஸ்ரவேலரின் வீடு எனும் சொற்பிரயோகம் யாக்கோபின் சந்ததியினர் அனைவரையும் குறிக்கும் விபரமாக இருப்பதும்“ (8) இதை உறுதிப்படுத்துகின்றது. இஸ்ரவேல் மக்கள் மேய்பனில்லாத ஆடுகளாக (மத். 9 :6) தொலைந்து போயிருந்தனர். (எரே. 50 :6, எசே. 34 :11,16) அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தி தேவனிடம் கொண்டு வருவதற்காக இயேசு முதலில் தன் சீடர்களை அவர்களிடம் அனுப்பினார். தேவனுடைய திட்டத்தில் யூதர்களுக்கு சிறப்பான இடம் இருந்தமையால் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.(9)


குறிப்புகள்      

(1) F.W. Beare, The Gospel According to Matthew, St. Francisco : Harper & Row, 1981, pp. 241-242.

(2) Adoff von Harnack, The Mission and Expansion of Christianity in the First Three Centuries, New York: Harper & Brothers, 1962, p.40.

(3) John P. Meier, Law and History in Matthew’s Gospel. Rome:BIP 1976, p. 27-30

(4) இயேசுவை பழைய ஏற்பாட்டு வாக்கியங்களின் நிறைவேறுதலாக வந்துள்ள மேசியாவாக மத்தேயு சித்தரித்துள்ளார். இயேசுவின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடும் மத்தேயு தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்டது நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது என பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளார். “மத்தேயுவில் மட்டும் 50 இற்கும் அதிகமான பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன. (Robert H. Mounce, New International Biblical Commentary : Mathew. P 3-4) ஏனைய சுவிஷேசங்களில் இந்த அளவு அதிகமான பழைய ஏற்பாட்டு குறிப்புகள் இல்லை. மேலும், லூக்காவைப் போல்லாது மத்தேயுவில் இயேசுவின் வம்ச வரலாறு அட்டவணை யூதர்களின் தப்பான ஆபிரகாமில் ஆரம்பிக்கின்றது. (மத். 1:1) இயேசுவை யூதர்களின் வம்சத்தில் வந்த தாவீதின் குமரனாக மத்தேயு சித்தரித்துள்ளார்.   “முதலாம் நூற்றாண்டில் இப்பெயரானது தாவீதின் வம்சத்தில் வந்தவர்களை மட்டுமல்ல தாவீதின் சிங்காசனத்தை மறுபடியும் யூதர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வரும் மேசியாவின் பெயராகவும் இருந்தது.” (Leon Morris, New Testament Theology p. 126) ஒன்பது தடவைகள் இயேசுவிற்கு இப்பெயரை உபயோகிக்கும் மத்தேயு (மாற்குவிலும் லூக்காவிலும் இப்பெயர் முறையே மூன்று தடவைகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது) அவரை யூதர்களின் மேசியாவாகக் காண்பித்துள்ளார். மேலும் அரமிக் வார்த்தைகளை மொழி பெயர்க்காமல் மத்தேயு அவற்றை அரமிக் வார்த்தையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதும் (5:22, 27:6) யூதக் கலாச்சாரப் பழக்க வழக்கங்களுக்கு விளக்கங்கள் கொடுக்காமலிருப்பதும் (மத். 15:2 ஐ மாற். 7:3-4 உடன் ஒப்பிடவும்) தேவனுடைய ராச்சியம் என்பதற்குப் பதிலாக யூதர்கள் உபயோகித்த பரலோக ராட்சியம் எனும் சொற்பிரயோகத்தை உபயோகித்துள்ளமையும், இயேசுவின் போதனைகளில் யூதர்களோடு தொடர்புள்ள பல விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதும் (மத். 6:16-18, 12:1-14, 24:20, 5:23-24, 17:24-27) மத்தேயுவின் சுவிஷேசம் யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. (R.T. France, Tyndale New Testament Commentaries: Mathew p. 17-18) 

(5) சிலர் மத்தேயு “மதம் மாறிய யூத மதப் போதகர் எனக் குறிப்பிடுகையில் (Pointed out in David J. Bosch, Transforming Mission p 59-60), ஏனையவர்கள் மத்தேயு தனக்கு கிடைத்த இயேசு பற்றிய விடயங்களை யூத மயப்படுத்தியுள்ளதாக கருதுகின்றனர். (Schuyler Brown, ‘The Two-Fold Presentation of the Mission in Matthew’s Gospel’ in Studia Theologica Vol 31[1977], p 21-32) மறுபுறத்தில் இயேசு யூதர்களைக் கடிந்து கொள்ளும் சம்பவங்களை சுட்டிக் காட்டும் வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தேயு யூதர்களுக்கு எதிரானதும் புறஜாதியினருக்கு சார்பானதுமான சுவிஷேசம் என்றும் கருதுவதோடு மத்தேயுவை ஒரு புறஜாதியானவாகவும் சித்தரித்துள்ளனர். (K.W. Clark, The Gentile Bias and Other Essays Leiden : Brill. 1980 p4)

(6) Louis A. Barbieri : The Bible Knowledge Commentary : Matthew, p. 41-42

(7) Krister Stendhal, The School of St. Mathew and its use of the Old Testament. Philadelphia: Fortress, 1968

(8) Leon Morris, The Gospel According to Mathew p. 246

(9) William Barclay, The Daily Study Bible : Mathew 1-10 p. 363 

இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 
















Thursday 13 December 2012

பாலியல் : கவனமாயிருக்க வேண்டியதொரு பகுதி




……..நீங்கள் எதிர்பாலாருடன் சேர்ந்த ஒருவரைக் குறித்து மிதமான உணர்வைக் கொண்டிருக்கையில் …….. இந்த நபருடனான உங்களது உறவைக் குறித்து நீங்கள் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும்.

கிறிஸ்தவன் தனது வாழ்வில் ஓர் உறவுக்குள்ளோ அல்லது நிதானக் குறைவால் ஏற்படும் உறவுக்குள்ளோ, முன்னதாகவே திட்டமிட்டுப் போவது மிகவும் அரிதாகவே காணப்படும். அநேகமான நேரங்களில் பின்பற்ற வேண்டிய பொதுவான விதிமுறைகளைக் குறித்தது கவனக் குறைவாக இருத்தலே, அவர்கள் இப்படியான உறவுக்குள்ளே சறுக்கிச் செல்வற்கு காரணமாகின்றது. அவர்கள்  அந்நியொன்னியமான காரியங்களைக் குறித்து  அதிகமான  அளவாளாதிருப்பார்கள். அல்லது தனிமையில் அநேக நேரங்களைச் செலவிட்டிருப்பார்கள். வேறொருவரால் கொடுத்திருக்க கூடிய உதவியை அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்திருப்பார்கள். அல்லது தனது துணை வீட்டில் இல்லாத வேளையில் குறிப்பட்ட நபரை வீட்டில் அதிக காலம் வைத்திருந்திருப்பார்கள். எம்மைப் பாவத்தில் வீழ்த்த்தக்க சூழ்நிலைகளி லிருந்து தப்புவதற்கு நாமாகவே அவதானமாய் தப்ப வேண்டிய வேளைகளும் உண்டு. யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பின் வஸ்திரத்தைப் பிடித்து என்னோடு சயனி என்று சொன்ன வேளையிலே, அவன் இதனையே செய்தான். மாறாக, எல்லையே மீறாமல், நின்று, அவளோடு கதைப்பேன் என்று யோசேப்பு தீர்மானிக்கவில்லை. அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியில் ஓடிப்போனான். (ஆதி. 39.12) பவுல் தீமோத்தேயுவிடம் பாலியலுக்குரிய இச்சைகளுக்கு விலக்கியோடும்படி ஆலோசனை வழங்கினார். (2 தீமோஃ 2.22)

வாழ்க்கையிலே மிகவும் நிச்சயமற்ற காரியங்களில் ஒன்று பெண்ணை நாடிய ஒரு ஆணின் வழியென்று வேதாகமம் சொல்கிறது. (நீதி. 30.18-19) அதாவது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய பகுதி இதுவாகும். ஏனெனில் இந்த இடத்தில் நாம் எளிதில் பாவத்தில் விழுந்து விடலாம். (நீதி. 2.16-19, 5:1-23, 7:4-27) ஒரு காரியம் அசுத்தமானதாக இருக்கும்போது அது அசுத்தமானது என்று எம்மையே நம்ப வைத்து ஏமாற்றிவிடக் கூடியது மனிதனது இதயம். இதனால், எமது வாழ்க்கையில் ஆபத்தானதொரு காரியம் நிகழக்கூடும் என்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளாமல் இருக்க கூடும். ஆனால்,  அதனை எடுத்துச்  சொல்வதில் அவர்களுக்குப் பயம் இருக்கலாம். அல்லது அவர்கள் அதனை சந்தேகப்படாமல், அவர்கள் காணும் நிகழ்வை அசுத்தமானதாகவும் எண்ண மாட்டார்கள். 

நீங்கள் எதிர்பாலைச் சேர்ந்த ஒருவரைக் குறித்து பிடித்தமான உணர்வைக் கொண்டிருக்கையில் நீங்களோ அல்லது அவரோ திருமணமாகாதவராய் இருந்தால், இந்த நபருடனான உங்களது உறவைக் குறித்து நீங்கள் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும். இது பாலியல் ரீதியான உணர்வாய் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது அவரை சந்திக்க வேண்டுமென்கின்ற உணர்வு, அல்லது அவருடன் அடிக்க கதைக்க வேண்டும் அல்லது அவரை அடிக்கடி பாரக்க வேண்டும் அல்லது அவருக்கு எப்பொழுதும் உதவி செய்ய வேண்டும் என்றதான உணர்வுகளாயிருக்கலாம். எதிர்பாலைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்படக்கூடிய இப்படியான உணர்வுகள் நீங்கள் தேவ ஊழியம் செய்யும்போது கூட ஏற்படும். ஏனெனில் நீங்கள் மிகவும் அழகான ஒரு காரியத்தை இணைந்து செய்கிறீர்கள். அது மிகவும் அழகானதும் சுத்தமானதுமாக ஆரம்பிக்கலாம். ஆனால் அது ஒரு ஆபத்தானதாக மாறிவிடலாம். 

நான் கிறிஸ்துவுக்காக இளைஞரில் பணியாற்றுகின்றேன். வாலிபருக்கான ஊழியங்களிலே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சினை என்னெவெனில் இளம் பெண்பிள்ளைகள் தங்களது ஆண் வாலிபத் தலைவர்மீது அளவில்லா மதிப்பு வைத்திருப்பதன் காரணமாக, அவர்களையும் அறியாமலே அந்த வாலிப தலைவர் மீது ஓர் நெருக்கமான ஈர்ப்பை வளர்த்துக் கொள்வார்கள். சாத்தானானவன் இப்படியான சந்தர்ப்பங்களை உடனடியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கைகளை சின்னாப்பின்னப்படுத்த முயலுவான். திருமாணமான ஆண் ஊழியர்கள் குறிப்பாக அவர்களுடைய மனைவிமார் அவர்களது ஊழியங்களிலே அதிகம் இசைவாக இல்லாத நிலைமைகளில், இப்படியான சூழ்நிலைகளில் விழுந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாயிருக்கும். 

எமது பழைய ஆண் நண்பர்களையும் பெண் நண்பிகளையும் குறித்து எமது உள்ளத்திலுள்ள இனிமையான உணர்வுகள் எமது இதயத்திலிருந்து விட்டுப்போகும் என்று நான் எண்ணவில்லை. சில வேளைகளில் இந்த உணர்வுகள் சச்சரவான சூழ்நிலைகளில் வெளிப்படுத்தப்படலாம். இதுவும் ஒரு வகையான இனிமையான உணர்வு என்ற காரணத்தால் அது விரைவில் காதலுணர்வாக மாறிவிடலாம். நீங்கள், குறிப்பிட்ட நபரை அநேக ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரைக் கண்டவுடன் வித்தியாசமான உணர்வுகள் வெளிப்பட்டு, அதைக் கட்டுப்படுத்தவும்  கடினமாகலாம். ஒரு காலத்தில் சாதாரண உணர்வு ரீதியான பந்தத்தை விட அதிகமான பிணைப்பை வைத்திருந்த எதிர்பாலாரை இப்போது சந்திக்கும்போது, நாம் இந்த ஆபத்துக்களைக் குறித்து அவதானமாயிருந்து கவனமாய் நடந்து கொள்ள வேண்டும். 

ஜெரி ஜெக்கின்ஸ் என்பர் எமது திருமணங்களை எப்படிக் காத்துக் கொள்வது என்பதனைக் குறித்து எழுதியுள்ள ‘HEDGES’ (புதர்வேலி) என்ற புத்தகத்தில் எமது திருமணங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வளர்க்க வேண்டிய புதர்வேலிகளைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். இப்படியானதொரு புதர்வேலியைக் குறித்து அவர் இப்படிச் சொல்கின்றார். “நான் வேடிக்கையாகவேனும் கிளர்ச்சியூட்டும் அல்லது பகிடிக் காதல் தொடர்பான சம்பாஷனைகளைத் தவிர்த்துக் கொள்வேன். “அவர் தொடர்ந்து சொல்லும்போது, இதற்கான காரணம் வார்த்தைகளின் வல்லமையை நாம் நம்புவதாலும் தமக்குக் கிடைக்கும் பாராடுதலுக்கும் மக்கள் சார்பான முறையில் மறுஉத்தரவு கொடுப்பதுமே என்கிறார் “பயனற்ற பகிடியான காதல் உறவுகள் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவரும்“ ஏனெனில் அடுத்தவர் அதிக கவனத்தை எதிர்பார்க்கின்றவராகவும் கவனம் தேவைப்படுகின்றவராகவும் இருக்கலாம். ஒருவரை அதிகமாகப் பாதிக்கக் கூடியது “நீங்கள் அழகானதொரு உடையை அணிந்திருக்கின்றீர்கள்“ என்று சொல்வதற்குப் பதிலாக, எம்மை அறியாமலேயே “இன்று நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளீர்கள்“ என்று புத்தியீனமாக நாம் சொல்லக்கூடும் என்று ஜென்கின்ஸ் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

“நாங்கள் இருவரும் எவ்வளவு பொருத்தமானவர்கள். நீங்கள் என்னைத் திருமணம் செய்திருக்க வேண்டும்“. அல்லது “எனது மனைவியைச் சந்திக்க முன்னர் உங்களைச் சந்தித்திருந்தால் உங்களையே நான் திருமணம் செய்திருப்பேன்“ போன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை.அத்துடன், அது எமது துணையைக் கேவலப்படுத்துவதாகும். ஆனாலும் கிறிஸ்தவர்கள் இப்படியான கூற்றுக்கள் சொல்லப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களை நான் அறிவேன். 

இந்த விடயத்தில் எமது துணையிடமோ அல்லது நமக்கு வரப்போகும் துணையிடமோ பகிர்ந்துகொள்ள முடியாத எதனையும் துணை தவிர்ந்த வேறொரு எதிர்பாலான ஒருவரோடு செய்யவோ, கதைக்கவோ கூடாது என்பது என்பது நாம் பின்பற்ற வேண்டிய நல்லதொரு காரியமாகும். கலாநிதி ஜேய் கெஸ்லர் அவர்கள், தனது திருமணமான மகள் தனக்குக் கூறிய ஒரு விடயத்தை எழுதியுள்ளார். “என்னுடைய கணவர் ஓரிரவு மட்டும் ஒரு பெண்ணுடன் எதேச்சையாக பாலுலறவில் ஈடுபட்டார் என்று கேள்விப்படும்போது மனப்பாதிப்புக்குள்ளாவதைவிட ஒரு பெண்ணுடன் ஆழமான நட்பை வைத்திருந்து அவர் என்னிடம் பகிரமுடியாத அல்லது பகிர்ந்து கொள்ளாத காரியங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனக் கேள்விப்படுவதால் அதிக பாதிப்புக்குள்ளாவேன்.“ என்றாள். இந்தக் குறிப்பின் மூலம் கலாநிதி கெஸ்லரோ அல்லது நானோ இப்படியான ஓரிரவு பாலுறவுக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், இங்கே, தனது கணவன் தன்னிடம் மட்டுமே செல்ல வேண்டிய காரியங்களை, பகிர்ந்து கொள்ளும்படியாக வேறொரு பெண் தனது கணவனின் இதயத்தைக் கவர்ந்துள்ளாள் என்பது தன்னை மிகவும் அதிகமாய் பாதிக்கும் என்ற அவளுடைய கூற்றே இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். 


இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்




Wednesday 12 December 2012

பூமியின் மேல் … சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். (மத்தேயு 10:34)


இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அவர் உலகிற்கு அறிவிக்க வந்த செய்தியையே முரண்படுத்தும் கடினமான வாக்கியமாகப் பலரால் கருதப்படுவது, அவர் தான் பூமியின் மேல் பட்டயத்தை அனுப்ப வந்தேன் எனத் தெரிவித்தமையாகும். இயேசு சமாதானப் பிரபுவாகவும் (ஏசா. 9.6)(1) சமாதானக் காரணராகவும் (எபே. 2:14) இருப்பதோடு, அவர் உலகிற்கு அறிவிக்கும் செய்தி சமாதானத்தைப் பற்றியதாகவே உள்ளது. (எபே. 2.17, மத். 10.13) மேலும் அவர் தனது சமாதானத்தை நமக்குத் தருவதாகவும் வாக்களித்துள்ளார். (யோவான் 14:27) இதனால் இயேசுவின் சீடர்கள் அவர் உலகிற்கு சமாதானத்தையே கொண்டு வந்துள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களுடைய நம்பிக்கையை தகர்த்தெறியும் விதத்தில் “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.(மத். 10:34) எனக் கூறியமை கிறிஸ்தவர்களாகிய நம்மால் புரிந்துக் கொள்வதற்கு கடினமான வார்த்தைகளாகவே உள்ளன.
 
உண்மையில் இயேசு உலகிற்குக் கொண்டு வந்த சமாதானம் எத்தகையது என்பதை நாம் அறிந்திருந்தால் அவரது இக்கூற்றை முரண்பாடானதாகக் கருத மாட்டோம். “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்“ என இயேசு கூறுவதிலிருந்து அவரது சீடர்கள் “அவர் சமாதானத்தையே கொண்டு வந்துள்ளார்“ என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் என்பதை அறியத் தருகின்றது. இயேசுவின் காலத்தைய யூதர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணி அனுப்பப்படும் இரட்சகரை(2) எதிர்பார்த்துக் கொண்டிருந்த்தோடு, அவர் தம்மை ரோம இராட்சியத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து தமக்கு சமாதானமிக்க இராட்சியத்தைப் பெற்றுத் தருவார் என்றும் நம்பினர். (3) “மேசியாவின் வருகை உலகளாவிய சமாதானத்தைக் கொண்டு வரும்“ என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது.(4). எனினும் இயேசு இத்தகைய நோக்கதோடு வராதமையால்(5) தன்னை சமாதானத்தைக் கொண்டு வருபவராக எண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இயேசு கொண்டு வந்த சமாதானம் ஆவிக்குரியதாக இருந்தது வேதத்தில் சமாதானம் என   மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் சண்டைகளற்ற சகஜ நிலையைக் குறிக்கும் பதம் அல்ல. மாறாக இது ஒப்புரவாக்கப்படும் செயலையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது இயேசு மக்களைத் தேவனோடு ஒப்புரவாக்குகின்றவராய் செயல்படுகின்றார். இது பாவத்தினால் பிரிந்திருந்த தேவனையும் மனிதனையும் ஒப்புரவாக்கி தேவனுக்கும் மனிதருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. இதை அவர் சிலுவையில் மக்களுடைய பாவங்களை பரிகரித்ததன் மூலம் செய்துள்ளார். (6). இயேசு இத்தகைய சமாதானத்தைப் பற்றியல்ல. அதாவது அக்கால யூதர்களும் தனது சீடர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விதமான சமாதானத்தை தருவதற்காக தான் வரவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
 
யூதர்களின் எதிர்பார்த்த விதமான அரசியல் ரீதியான சமாதானத்தைக் கொண்டு வராத இயேசு தான் பட்டயத்தையே அனுப்ப வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் பட்டயம்“ எனும் வார்த்தை இங்கு சொல்லர்த்தமாக உபயோகிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உண்மையில் இயேசு ரோம இராட்சியத்தோடு போராடுவதற்காக இவ்வுலகிற்கு வரவில்லை. சில வேத ஆராய்ச்சியாளர்கள் லூக்கா 12.49 இல் இயேசு குறிப்பிட்ட விடயமே, அதாவது பூமியின் மேல் அக்கினியை போட வந்தேன்“ என்னும் அவரது கூற்று மத்தேயுவில் பட்டயத்தை அனுப்ப வந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளதாக கருதுகின்றனர். (7) எனினும் அக்கினியை போட வந்தேன் எனும் கூற்று நியாயத்தீர்ப்பைப் பற்றிய குறிப்பாக இருப்பதனாலும்(8) இயேசுவின் இக்கூற்று லூக்கா 12.51 குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஷ
 
உண்மையில் “பட்டயம்“ எனும் வார்த்தை என்ன அர்த்தத்துடன் இயேசுவால் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதையும் லூக்கா 12.51 இன் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. லூக்காவில் பட்டயம் என்பதற்குப் பதிலாக “பிரிவினை“ என்னும் வார்த்தை உள்ளது. எனினும் இயேசுவின் கூற்றின் ஆரம்ப வரிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. “நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன்“ என லூக்கா 12.51 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்தேயுவில் “பட்டயத்தை அனுப்ப வந்தேன்“ எனக் கூறிய இயேசு அதைப் பற்றி விளக்கும்போது “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.“ (மத். 10.35) “பட்டயம்“ என்னும் வார்த்தையை அவர் பிரிவினையைக் குறிக்கும் ஒரு உருவகமாகவே உபயோகித்துள்ளார்(9) என்பதை அறியத் தருகின்றது. இதிலிருந்து இயேசு அனுப்பும் பட்டயம் “குடும்ப அங்கத்தினர்களுக்கிடையிலான பிரிவினை என்பது தெரிகின்றது. (10)
 
இயேசு “பட்டயத்தை அனுப்ப“ (மத். 10.34) அதாவது பிரிவினையை உண்டாக்க“ (லூக்கா. 12.51) வந்ததாக்க் குறிப்பிட்டுள்ளமையினால், அவரது வருகை எவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ள விதமாக்க் குடுமப் அங்கத்தினரிடையே பிரிவினையையும் பகையையும் ஏற்படுத்தும் என்பதும் இன்று அநேகர் கேட்கும் கேள்வியாகவுள்ளது. உண்மையில் இயேசுவின் சுவிஷேசத்திற்கும் மக்கள் அளிக்கும் உத்தரவாத்தை அடிப்படையாக்க் கொண்டே குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்படுகின்றன. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போதும் ஒரேவிதமான முறையில் இயேசுவை ஏற்றுக் கொள்வதில்லை. “அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு அளிக்கும் உத்தரவாதம் வித்தியாசப்படுவதனால், அதை அடிப்படையாக்க் கொண்டு அவர்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்படுகின்றன(11) உண்மையில் ஒரு குடும்பத்திலேயே இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களும் நிராகரிப்பவர்களும் இருப்பதனால் அவர்களிடையே பிரிவினைகள் ஏற்படுகின்றன. (12) இதைப் பற்றியே இயேசு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புகள்.
(1) ஏசாயா 9:6 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீரக்கதரிசனமாகும்.

(2) இவரே மேசியா என அழைக்கப்பட்டார். மேசியா என்பது எபிரேயப் பெயராகும். இதனது அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும். கிரேக்கத்தில் இத்தகைய கருத்தைத் தரும் பதம் “கிறிஸ்டோஸ்“ என்பதாகும். இது தமிழில் கிறிஸ்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவே தேவனால் அபிஷேசிக்கப்பட்டு அனுப்பட்டவர் என்பதனாலேயே இயேசு என்னும் அவரது பெயரோடு கிறிஸ்து என்னும் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

(3) Donald Gulthire. New Testament Thelogy. P. 237 மத்தேயு 8:4 இற்கான விளக்கத்தையும் பாரக்கவும்.

(4) Robert H. Mounce, New International Biblical Commentary : Mathew. P. 98

(5) இதனாலேயே என்னுடைய இராட்சியம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்று இயேசு தெரிவித்தார்.

(6) எபேசியர் 2ம் அதிகாரத்தில் பவுல் இதைப் பற்றி விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

(7) Mathew Black, “Uncomfortable Words’ in The Expository Times. Vol XXXI[1969-1970], p. 118

(8) லூக்கா 12:49 இன் விளக்கத்திற்கு இந்நூலின்…… பக்கத்தைப் பாரக்கவும்

(9) Leon Morris, The Gospel According to Mathew p. 266

(10) லூக்காவின் சுவிஷேசத்தில் “52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். (லூக்கா 12:52-53)

(11) Donald A. Hagner, Word Biblical Commentary: Matthew, p. 292

(12) R. T. France, Tyndale New Testament  Commentary: Matthew,p 188
 
இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 
 

Saturday 1 December 2012

கர்த்தர் வெறுக்கும் காயீனின் வழி


வேதப் பகுதி: ஆதியாகமம் 4:1
    
உலகின் ‘முதல் கொலைகாரனான'  காயீனின் வாழ்வு, கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்றக் கூடாத ஒரு வழியாகப் புதிய ஏற்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்’ (1யோவா.3:12), என்று அறிவுறுத்தும் புதிய ஏற்பாடு, தேவனை மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள் செல்லும் வழியாகக் காயீனின் வழி உள்ளதாகக் கூறுகிறது (யூதா.11). 

(1). அது அவிசுவாசத்தின் வழி (ஆதி.4:1)    
கிறிஸ்தவம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். காயீனின் வழி விசுவாசமுள்ளதாக இருக்கவில்லை. அவன் அவிசுவாசத்துடன் தேவனிடம் வந்தமையால் தேவன் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.    

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி அல்லது ‘காணப்படாத வைகளின் நிச்சயம்’  ஆகும் (எபி.11:1). விசுவாசத்தைக் குறிப்பிடும் ‘பிஸ்டிஸ்’  (pistis) என்னும் கிரேக்கப்பதம், ‘அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை’  என்னும் அர்த்தமுடையது. கண்களினால் காணாததையும், வேதாகமம் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு உறுதியாக நம்புவதே விசுவாசமாகும் (எபி.11:6). காயீனின் வழி இத்தகைய விசுவாசமுடையதாக இருக்கவில்லை.  

தேவனுக்கு காணிக்கை செலுத்தும்போது ஆபேல் தன்னுடைய மந்தையில் ‘முதற் பிறந்தவைகளில் கொழுமையானவைகளைத்’ தெரிவுசெய்ததை (ஆதி.4:4) வேதாகமம் அவனுடைய ‘விசுவாசச் செயல்’ என்று கூறுகிறது (எபி.11:4). ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருந்த காலத்திலும், அதன் பின்பும், தேவனை வழிபடுகிறவர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், காயீன் பிறந்தபொழுது, ‘கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்“ (ஆதி.4:1) என்னும் ஏவாளுடைய கூற்று அர்த்தமற்றதாகவே இருக்கும். எனவே, காயீனும் ஆபேலும், தங்களுடைய பெற்றோரிடமிருந்தே தேவனுக்கு காணிக்கை செலுத்தி அவரை வழிபடும் முறையை அறிந்திருக்கவேண்டும். ஆதாம் கூறியவற்றை ஆபேல் விசுவாசித்துள்ளான். ஆனால் காயீனோ, கடமைக்காகத் தேவனுக்கு காணிக்கை செலுத்தியுள்ளான்.   

ஆபேல் விசுவாசத்துடன் காணிக்கை செலுத்தியமையால், அவன் நீதிமான் என்று தேவனால் நற்சாட்சி பெற்றான் (எபி.11:4). ஆதாமின் மூலமாகத் தேவ னைப் பற்றி அறிந்துகொண்ட காரியங்களை ஆபேல் விசுவாசித்து அதன்படி செயற்பட்டமையால், அவன் தேவனுடைய பார்வையில் நீதிமானாக இருந்தான். வேதாகமப் போதனையின்படி, தேவனைப் பற்றி அறிந்து கொள்வதை, அல்லது தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதே அவருடைய பார்வையில் நீதிமானாக இருப்பதற்கான வழியாக உள்ளது (ஆதி.12:5-6, ரோ.4:1-25).      

கிறிஸ்தவர்களாகிய நாம் காயீனின் அவிசுவாச வழியில் செல்கிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனைப் பற்றி வேதாகமம் கூறும் காரியங்கள் உண்மை என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நாமும் ஆபேலைப் போல தேவனுடைய பார்வையில் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.     

காயீனுடைய காணிக்கை “இரத்தம் சிந்தும் பலியா“  இராதமையினாலேயே தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், காயீனும் ஆபேலும் தங்களுடைய பாவங்களுக்குப் பலி செலுத்தியதாக ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு காணிக்கை செலுத்தினார்கள் என்றே இவ்வதிகாரம் கூறுகிறது (ஆதி.4:3-4). ஷகாணிக்கை| என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “மின்ஹா“(minha) என்னும் எபிரேயப் பதம் தேவனைக் கனப்படுத்துவதற்காக அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பதையே குறிக்கின்றது. இரத்தப் பலியைக் குறிப்பிடும் “ஸீபாஃ“(zebah) என்னும் எபிரேயப் பதம் இவ்வதிகாரத்தில்  உபயோகிக்கப்படவில்லை. எபிரேயர் 11:4ல், ஆபேலினுடைய காணிக்கையைப் “பலி“ என்று குறிப்பிட்டுள்ளது தவறாகும். இங்கு “தைசியா“(thysia)என்னும் கிரேக்கப் பதம் இரத்தப் பலியைக் குறிப்பிடும் சொல் அல்ல. இரத்தமற்ற காணிக்கைகளைத் தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறுவது வேதாகமப் போதனையை முரண்படுத்தும் கருத்தாகவே உள்ளது (யாத்.23:16, உபா.26:2-4). காயீன் இரத்தப் பலியையே செலுத்தியிருந்தாலும் தேவன் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால், தேவன் தமக்கு கொடுக்கப்படும் காணிக்கைப் பொருளையோ, அல்லது அது கொடுக்கப்படும் சடங்காசார செயல்முறைகளையோ அல்ல, மாறாக அதைக் கொடுப்பவனுடைய உள்ளத்தின் நிலைமை எப்படி இருக்கின்றது என்பதையே பார்க்கிறவராக இருக்கின்றார் (ஆமோ.5:21-24, ஓசி.6:6, ஏசா.1:11-17, மீகா.6:6-8, எரே.7:19-20, லூக்.21:1-4). 


(2) அந்தகார ஆதியாகமம் 4:5ஆ
காயீனுடைய வழி அவிசுவாசத்தின் வழியாக மட்டுமல்ல, அது அந்தகார வழியாகவும் இருந்தது. அவிசுவாசியாக இருந்த காயீன் மனந்திரும்பி வெளிச் சத்திற்கு வர மனமற்றவனாக இருளிலேயே இருந்தான். மனிதர்கள் மனந்திரும்பி தம்மிடம் வருவதற்குத் தேவன் பல சந்தர்ப்பங்களை அவர்களுக்கு கொடுக்கிறவராக இருக்கின்றார். தேவன் காயீனுடைய காணிக்கையை நிராகரித்த போதிலும், அவனுடைய உள்ளத்தின் நிலைமை மாற்றமடைவதற்காக அவனோடு பேசினார்.  

தேவன் தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதது காயீனுக்கு நியாய 
மானதாகத் தென்படவில்லை. தேவன் என்ன காரணத்திற்காகத் தன்னுடைய 
காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவன் ஆராய்ந்து பார்க் காமல், தேவனுடைய செயல் நியாயமற்றது என்னும் எண்ணத்தில் இருந்தான். 

இவ்வசனங்களில் “எரிச்சல்“  என்பது மூலமொழியின்படி “கோபம்“ என்றே இருக்க வேண்டும். காயீன் தேவன்மீதும் தன் சகோதரன் மீதும் கடும் கோபத்துடன் இருந்தான். அந்தகாரத்தில் இருந்த காயீனின்  உள்ளத்தின் நிலையை மாற்றமடைந்த அவனுடைய முகபாவம் வெளிப்படுத்தியது. 

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, தேவன் எவ்வாறு அவர்களைத் தேடி 
வந்தாரோ, அதேவிதமாக கோபத்தோடு இருந்த காயீனையும் தேவன் தேடி வந்தார். தேவன் காயீனிடம் கேட்ட கேள்விகள், அவன் எதற்காகக் கோபமாக இருக்கிறான் என்பதை அறியாத நிலையில் கேட்கப்பட்டவைகள் அல்ல. மாறாக, காயீன் தான் இருக்கும் நிலையை அறிந்துகொள்வதற்காகவே தேவன் அவனிடம் நீ ஏன் கோபமாயிருக்கிறாய்? உன் முகம் மாற்றமடைந்ததற்கான காரணம் என்ன என்று அவனிடம் கேட்டார். காயீன் தான் எதற்காகக் கோபமாயிருக்கின்றேன் என்பதை ஆராய்ந்து பார்த்து, தன்னுடைய கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப் பார்ப்பதற்காகத் தேவன் அவன் கோபமா யிருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.     

தேவனுடைய கூற்று 7ம் வசனத்தில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. இதற்குக் காரணம், மூலமொழியில் இவ்வசனம் தெளிவற்றதாக இருப்பதோடு, பிற்காலத்தில் திருத்தப்பட்டும் உள்ளது. எனினும், “நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ“  என்னும் வாக்கியத்தில் “நன்மை செய்தால்“ என்பது “சரியானதைச் செய்தால்“ என்றும், “மேன்மையில்லையோ“ என்பது நீ “ஏற்றுக் கொள்ளப்படுவாய்“ அல்லது “மன்னிக்கப்படுவாய்“  என்றும் அர்த்தமுடையது. அதாவது, அவன் மனமாற்றம் அடைந்தவனாக சரியான நோக்கத்துடன் இன்னுமொரு காணிக்கையைச் செலுத்தினால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றே தேவன் அவனிடம் கூறியுள்ளார்.  

காயீன் தன்னுடைய மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்“  என்கிறார் தேவன். “பாவம் இரைக்காகக் காத்திருக்கும் பயங்கரமான ஒரு மிருகமாக இங்கு உவமிக்கப்பட்டுள்ளது. 7ஆம் வசனத்தின் கடைசி இரண்டு வாக்கியங்களிலும் “அவன்“ என்பது “அது“ என்றும் “அவனை“  என்பது  “அதை“ என்றும் இருக்க வேண்டும். அதாவது “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்“. அதன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அதை ஆண்டுகொள்வாய் என்பதே சரியான  மொழிபெயர்ப்பாகும். பாவம் காயீனைத் தன்னிடமாய் வைத்திருக்க விரும்பும். ஆனால் அவன் அதை மேற் கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும். பாவம் செய்யும் ஆசை காயீனை ஆட்கொள்ளலாம். அதை அவன் மேற்கொள்ள வேண்டும்.      

(இ) அன்பற்ற வழி (ஆதி.4:8). 

அந்தகாரத்திலிருந்த காயீன் வெளிச்சத்திற்கு வராதிருந்தமையால், அவனுடைய வழி அன்பற்றதாக இருந்தது. தன் சகோதரன்மீது கோபம் கொண்ட காயீனின் உள்ளத்தில் பகை காணப்பட்டது. உள்ளத்திலிருக்கும் பகை கொலைக்கு சமமானது என்று வேதம் கூறுகிறது (மத்.5:21-22, 1யோவா.3:15). காயீனின் அன்பற்ற வழி இது உண்மை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தன் சகோதரன் மீது கோபப்பட்ட காயீன் அவனைக் கொலை செய்தான் (ஆதி.4:8). இத்தகைய காயீனின் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதம் கூறுகிறது (1யோவா.3:12). 

(கட்டுரையாசிரியர் Dr.M.S. வசந்தகுமார் (தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம்)



Friday 23 November 2012

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்


  1. உலகளாவிய ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான்?
  2. 6ம் அதிகாரத்தில் உள்ள தேவனின் கூற்று 7ம் அதிகாரத்தில் உள்ளவற்றை முரண்படுத்துகின்றதா?
  3. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு வாழ்ந்த நோவா எப்படி உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான்?
  4. இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் கொண்டு போகப்பட்டனவா?
  5. சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா?
  6. நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன?

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்

ஆதியாகமப் புத்தகத்தில் ஒன்றையொன்று முரண்படுத்தும் விபரணங்களாக பலரால்சுட்டிக் காட்டப்படும் பகுதிகளில் ஒன்று உலகளாவிய ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான் என்பதைப் பற்றியதாகும். ஆதி. 6:19-20 இல் தேவன் நோவாவிடம் உயிரனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைக் கொண்டு போகும்படி கட்டளையிடுகின்றார். ஆனால் அடுத்த அதிகாரத்தில் அதாவது ஆதி. 7:2-3 ஒவ்வொன்றிலும் ஏழு சோடிகளைக் கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார். இதனால் தேவன் 6ம் அதிகாரத்தில் கூறியவற்றை 7ம் அதிகாரத்திலுள்ள கூற்று முரண்படுத்துவதாக உள்ளது. இம்முரண்பாட்டைச்சுட்டிக் காட்டுபவர்கள் இவ்விரு அதிகாரங்களும் இரு வேறுபட்ட மரபினரின் குறிப்புகளிலிருந்து  பெறப்பட்ட வித்தியாசமான கதைகள் எனக் கூறுவதோடு பிற்காலத்தில் வெவ்வேறு ஆவணக் குறிப்புகளிலிருந்தும் ஆதியாகமப் புத்தகத்தை தொகுத்தெழுதியவர் “அம்முரண்பாட்டைக் கவனிக்கத் தவறியமையால் இருவேறுபட்ட மரபினரதும் குறிப்புகளையும் ஒன்றாக சேர்த்து எழுதிவிட்டார்“ என விளக்குகின்றனர். 

ஆதியாகமம் நால்வகையான வித்தியாசமான மரபினரின் குறிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதே நவீன வேத விமர்சனக் கல்வியின் தாற்பாரியமாகும்.எனினும் இது ஆதியாகம்ம் எழுதப்பட்டுள்ள முறைபற்றிய சில வேதஆராய்ச்சியாளர்களின் ஒரு ஊகமே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. எனவே ஆதியாகமம் 6ம் 7ம் அதிகாரங்கள் இருவேறுபட்ட வித்தியாசமான மரபுக்கதைகளின் பிற்காலச் சேர்க்கை என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இரு அதிகாரங்களும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன. 6ம் அதிகாரத்தில் தேவன் உலகிலுள்ள சகல உயிரினங்களிலும் ஜலப்பிரளய அழிவுக்குத் தப்புவதற்காக  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்துகின்றார். (ஆதி. 6:19-20) நோவா தேவகட்டளைப்படி சகலவற்றையும் செய்து முடித்தபின் (ஆதி 6:22) தேவன் மறுபடியுமாக நோவாவிற்கு சில அறிவுறுத்தல்களைக் கொடுக்கிறார். ஆரம்பத்தில் சகல உயிரினங்களிலும் ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடியை கொண்டு போகச் சொன்ன தேவன் இப்போது சுத்தமான மிருகங்கள் பறவைகளில் மட்டும் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள் கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார். (ஆதி. 7.2-3) “இக்கட்டளையானது 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படாத மேலதிகமான ஒரு அறிவுறுத்தலாகும்.“ இம்மேலதிக அறிவுறுத்தலுக்கான காரணம் இவ்விடத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும் ஜலப்பிரளயத்தின் பின்னால் அதனை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. ஜலப்பிரளயத்தின் பின் பேழையிலிருந்து வெளியே வந்த நோவா தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காக பலி செலுத்தினான். அவன் சுத்தமான மிருகங்கள் பறவைகள் சிலவற்றைப் பலியாகச் செலுத்தினான் என்பதை ஆதி 8:20 அறியத் தருகின்றது. இதிலிருந்து பலிகளுக்காகவே தேவன் சுத்தமான மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது. உண்மையில், “சுத்தமான உயிரினங்களில் மேலதிகமான மிருகங்கள் இல்லாமலிருந்தால் பலி செலுத்தப்பட்டபின் அவை இல்லாமல் போயிருக்கும்“. எனவே உயிரினத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்திய தேவன் நோவாவுக்குப் பலி செலுத்தும் மிருகங்கள் பறவைகள் அவசியப்படும் என்பதை அறிந்தவராக சுத்தமானவற்றில் மேலதிக எவ்வேழு சோடிகளைக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டுள்ளார். 

பலி செலுத்துவதற்காகவே சுத்தமான மிருகங்கள் பறவைகளில் மேலதிகமாக எவ்வேழு சோடிகள் பேழைக்குள் கொண்டு போகப்பட்டது உண்மையாயினும் உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்னும் விளக்கம் மோசேயின் நியாயப்பிரமாணத்திலேயே அறிவிக்கப்பட்டமையால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு வாழ்ந்த நோவா எப்படி உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான் எனும் கேள்வி நம்முள் எழுவது இயற்கையே. எனினும் மோசேயின் நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் முன்பே சுத்தமான சுத்தமான அசுத்தமான மிருகங்கள் எவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மோசேயின் நியாப்பிரமாணம் உணவாகக் கூடிய சுத்தமான அசுத்தமான உயிரினங்கள் எவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். (பொதுவாக) குறிப்பிட்ட சமூகத்தினரால் சுத்தமாக கருதப்பட்டவை மட்டுமே அச்சமூகத்தினரால் தெய்வங்களுக்குப் பலியாகச் செலுத்தப்பட்டன. அதேசமயம் “சுத்தமானவை அசுத்தமானவை எவை எனபதை வரையறை செய்யும் முறையும் சமுதாயத்திற்கு சமுதாயம் வித்தியாசப்பட்டது. எனவே நோவாவும் தான் வாழ்ந்த சமுதாயத்தில் சுத்தமானவை என கருதப்பட்ட மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு சோடிகளை பலி செலுத்துவதற்காகப் பேழைக்குள் கொண்டு சென்றுள்ளான் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

நோவாவினால் செய்யப்பட்ட பேழைக்குள் கொண்டு போகப்பட்ட உயிரினங்கள் பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் கொண்டு போகப்பட்டனவா? இல்லையென்றால் பெரிய உருவங்களுடைய உயிரினங்கள் பேழைக்குள் கொண்டுப் போகப்படவில்லையா? என்பதாகும். எனினும் தேவன் சகல உயிரினங்களையுமே பேழைக்குள் கொண்டு போகும்படி கட்டளையிட்டார். (ஆதி. 6:18-19) நோவாவும் தேவன் தனக்கு கட்டளையிட்டப்படியெல்லாம் செய்துள்ளதை ஆதி. 6:22 அறியத் தருகின்றது. எனவே உலகிலுள்ள சகல உயிரினங்களையும் பேழைக்குள் கொண்டு போயிருப்பான் என்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. அப்படியானால் சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா? எனும் கேள்வி எமக்குள் எழலாம். ஆதி. 6:15-16 இல் தேவன் கொடுத்திருந்த அறிவுறுத்தல்களின் படி “பேழையானது 450 அடிகள் நீளமும் 75 அடிகள் அகலமும் 45 அடிகள் உயரமும் உள்ளது. இதில் 3 தட்டுக்கள் இருந்தன. நம் தமிழ் வேதாகமத்தில் இவ்விபரம் முற்காலத்தைய முழஅளவுகளிலேயே உள்ளன. (ஆதி. 6:15) எனவே மூன்று தட்டுக்களினதும் பரப்பளவு 101 250 அடிகளாகும். இன்று 40,000 வகையான உயிரினங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவ்வளவு உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் இருப்பதற்கு போதுதமான இடம் இருந்தமைக்குக்குக் காரணம் “பெரும்பாலான உயிரினங்கள் இளம் சோடிகளாகப் பேழைக்கு கொண்டு போகப்பட்டமையேயாகும்“.

நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் இருந்தன எனக் கூறும்போது அவை ஒன்றோடொன்று சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன எவ்வாறு எனும் கேள்வி நம்முள் எழுவது இயற்கையே. எனினும் ஆதி 9:2 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற் கொள்ளும்போது  உலகளாவிய ஜலப்பிரளயம் வரைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையே இருந்த உறவுமுறையானது ஜலப்பிரளயத்திற்கு பின் மாற்றமடைந்துள்ளதை அறிந்திடலாம். ஆரம்பகாலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் ஆளுகை செய்பவனாக மனிதன் இருந்தான். (ஆதி1:28) இதனால் அக்காலத்தில் உயிரினங்கள் மனிதனுக்கு கீழ்பட்டவையாக இருந்தன. இதனாலேயே நோவாவினால் சகல உயிரினங்களையும் பேழைக்குள் கொண்டு போவதில் சிரமங்கள் இருக்கவில்லை. ஆனால் ஜலப்பிரளயத்திற்குப் பின் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்குமிடையிலான உறவுமுறை மாற்றப்பட்டது. தேவன்  இதைப்பற்றி நோவாவுக்கு அறிவுறுத்தும்போது “உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்“ (ஆதி. 9:2) என்றார். இப்பயமும் அச்சமும் மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகையின் விளைவாகவே உள்ளது. இது மானிட வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்றாகும். ஜலப்பிரளயத்தின் பின் மிருகங்கள் மனிதருக்கு அபாயகரமானவைகளாயின. மனிதரைப் பற்றிய ஒருவித பயம் அவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டன. மேலும் ஆரம்பத்தில் சகல உயிரினங்களும் தாவர உண்ணியாகவே இருந்தன. (ஆதி. 1:29-30) ஆனால் ஜலப்பிரளயத்தின் பின்னர் மாமிசம் உணவாக அனுமதிக்கப்பட்டது. (ஆதி. 1:29-30) இதனால் உணவுக்காக உயிரினங்கள் கொல்லப்படுவதும் சாதாரண செயலாகிவிட்டது. எனவே. ஜலப்பிரளயத்துக்குப் பின்னர் மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவு முறையும் உயிரினங்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவு முறையும் அதுவரை காலமும் இருந்ததைப் போலல்லாது இன்றிருப்பதைப் போன்று மாற்றமடைந்தது. ஆனால் அதற்கு முன் உயிரினங்களுக்கிடையில் பகையும் பயமும் இல்லாதிருந்தமையால் சகல உயிரினங்களும் மனிதனும் பேழைக்குள் ஒன்றாக இருக்கக் கூடியதாயிருந்தது.   

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய ஆதியாகமம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி)

Monday 12 November 2012

தழும்புள்ள கை


விவிலியம், அவனுக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சமும் கிடையாது.

ஈராண்டுகள் மனைவியுடன் வாழ்ந்தான். அதற்குள் தன் அருமை மனைவியை இழந்தான்;  அவனது அருமைப் புதல்வனும் மரித்துப் போனான்; துயரத்தில் மூழ்கினான்; கடவுளை இகழ்ந்தான்; கடந்த பத்து ஆண்டுகளாக அவன் ஆலயம் போனதே கிடையாது.

பெக்கிப் பாட்டியின் வீடு ஓரிரவு தீப்பிடித்து எரிந்தது. மிகவும் சிரமப்பட்டு பெக்கியைக் காப்பாற்றினர். திடீரென மாடியில் ஒரு அழுகுரல் யாவரையும் கலங்க வைத்தது. ஆம். அது குழந்தை டிக்கி. பெக்கின் பேரன்; தாய் தந்தையற்ற அநாதை. தீயை அணைக்கும் சந்தடியில், தூங்கிக் கொண்டிருந்த டிக்கியை யாவரும் மறந்து விட்டனர். சூழும் நெருப்பு டிக்கியை எழுப்பியது. அவன் கதறினான்.

எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை, மாடிக்குச் செல்லும் படிக்கட்டு எரிந்துவிட்டது. டிக்கி கைவிடப்பட்டான்.

கூட்டத்தின் மத்தியில் வில்லியமும் நின்று கொண்டிருந்தான். குழந்தைக்காக பரிதவித்தான். எப்படியாவது டிக்கிக்கு விரைவில் உதவத் தீர்மானித்தான்.

மாடியில் இருந்து கீழே இறங்கும் இரும்புக் குழாய் ஒன்று அவன் கண்ணில் பட, ஒரே தாவில் தாவி குழாயைப் பிடித்து ஏறினான்.. வாரியெடுத்தான் டிக்கியை; வலது கரம் டிக்கையை அரவணைக்க, இடது கையால் குழாயைப் பிடித்து வழுவி கீழே வந்து சேர்ந்தான். சேர்ந்த சில நிமிடங்களில் குழாயும் மாடியும் சரிந்தன.

டிக்கிக்கு எவ்வித காயமும் சேதமும் இல்லை. ஆனாலும் வில்லியத்திற்கோ, இரும்புக் குழாய் மிகவும் சூடேறியிருந்தால் இடது கை ஆழமாக வெந்துப் போய் இருந்தது.நாளடைவில் காயம் ஆறியபோதிலும், ஆழமான தழும்பு நிலைத்து விட்டது.

இந்த அதிர்ச்சியில் பெக்கிப் பாட்டி சீக்கிரத்தில் மரித்துப் போனாள். டிக்கியைக் கவனிக்க எவருமில்லை. அது குறித்து மூப்பர்கள் கூடி ஆலோசித்தனர்.

டிக்கியை வளர்க்கும் பொறுப்பை ஏற்க இருவர் முன்வந்தனர். கண்ணியமுள்ள ஜேம்ஸ் ஆறுதலளிப்பான் என்று முன்வந்தனர்.

இருவரையும் மூப்பர்கள் பாராட்டினர். உயிரைக் காத்த வில்லியத்துக்கே அதிக உரிமை என்பதை யாவரும் உணர்ந்த போதிலும் வில்லியத்தின் நாத்திகக் கொள்கையால் டிக்கியின் ஆன்மா நட்டமடையுமே என்று வருந்தினர்.

அவர்களால் ஒரு முடிவுக்குக் வரக்கூட முடியவில்லை. இறுதியாக, “நீங்கள் ஏன் இக்குழந்தையை வளர்க்க விரும்புகிறீர்கள்?“ என்று அவர்களாலேயே விளக்கம் கேட்கத் தீர்மானித்தனர்.

ஜேம்ஸ் எழும்பி, “ஒரே மகனை இழந்தோம். வெற்றிடத்தை நிரப்ப டிக்கியை விரும்புகின்றோம். குழந்தையை வளர்க்க ஒரு தாய் வேண்டுமே! வில்லியம் தனியாள் தானே! என் மனைவி குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பாள். கர்த்தருக்கு பயப்படுகின்ற பயத்திலும் அவனை வளர்ப்பாள்.“ என்றார்.

அவருக்குப் பிறகு வில்லியம் முன்னால் வந்தான். ஆனால் அவன் ஏதும் பேசவில்லை. தன் இடது கையின் கட்டுகளை அகற்றினான். ஆழமான தழும்புகளை யாவரும் காணத்தக்கதாக கையை உயர்த்திக் காட்டினான். அமையாய் நின்றான்.

ஒரே அமைதி. கண்கள் கலங்கின. முடிவில் வோட்டு எடுக்கப்பட்டது. வில்லியத்திற்கே அதிக வாக்குகள். அதுவே நீதியான முடிவு என்று யாவரும் மகிழ்ந்தனர். தழும்புள்ள கைகளை விட சிறந்த தகுதியில்லை என்பதை யாவரும் உணர்ந்தனர்.

வில்லியத்தின் வாழ்வில் ஒரு புதுத் திருப்பம், மறுமலர்ச்சி, ஆர்வத்தோடும் கரிசனையோடும் டிக்கியை வளர்ந்தான். தாயும் தந்தையுமாக விளங்கினான்.

டிக்கியும் வில்லியத்தை மிகவும் நேசித்தான். சிறந்த பாலனாக வளர்த்தான். வில்லியத்தின் கதைகளை ஆவலோடும் உணர்ச்சியோடும் கேட்பான். தழும்புள்ள கையை மீண்டும் மீண்டும் முத்தம் செய்வான். “என்னைக் காப்பாற்றிய கை“ என்று அன்பு வார்த்தைகளைப் பொழிவான்.

“அப்பா, ஜேம்ஸ் என்னைக் கொண்டுபோக வருவாரோ“ என்று பயத்துடன் கேட்பான். “வரமாட்டார் மகனே நீ என்னுடையவன்“ என்பான் வில்லியம்.

ஒருநாள் டிக்கியை ஒரு பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றான் வில்லியம். அறையொன்றில் அழகான அநேகப் படங்கள், ஒவ்வொன்றையும் டிக்கிக்கு விளக்கிக் காட்டினான் வில்லியம்.

கடைசியில் ஒரு படம். கீழ் “உன் விரலை இங்கே நீட்டி, என் கைககளைப் பார்.“ என்று எழுதியிருந்தது. டிக்கி அதனை வாசித்தான். மேலும் அறிய விரும்பினான்.

டிக்கி : இந்த கதையை விளங்குங்கள் அப்பா

வில்லி : இந்தக் கதை வேண்டாம் மகனே

டிக்கி : ஏனப்பா வேண்டாம்.

வில்லி : அந்தக் கதையை நான் நம்பவில்லை

டிக்கி : அந்த ஜேக்கதையும்தான் நீங்கள் நம்பவில்லை என்று கூறுகின்றீர்கள். ஆனாலும் சொன்னீர்களே! இதையும் சொல்லுங்கள் அப்பா.

வேறு சாக்குப் போக்குச் சொல்ல முடியாததால், வில்லியம் அந்தக் கதையைச் சொன்னான். தோமாவின் கதையில் தன்னையும், இயேசுவின் இடத்தில் தன் தந்தையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தான் டிக்கி. மிகவும் பொருத்தம் என்று உணர்ந்தான்.    

டிக்கி : உங்களையும் என்னையும் போலவே இருக்கிறதே அப்பா

வில்லி :.இருக்கலாம்
 

டிக்கி : இயேசு துக்கத்தோடு சொல்வது போல் தோன்றுகின்றதே! தோமா நம்பாததால் அப்படியோ!
 

வில்லி : மௌனமாய் இருந்தான்

டிக்கி : நாமும் நம்பாது இருந்திருந்தால் உங்களுக்கு கவலையாக இருந்திருக்கும் அல்லவா?

வில்லி :ஆம் மகனே.

டிக்கி : நானும் தோமாவைப் போல் இருந்திருந்தால், ஜேம்ஸ் என்னைக் கொண்டு போயிருப்பாரோ

வில்லி :இல்லை மகனே! நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் உன்னைக் காப்பாற்றியது நான் தானே!

டிக்கி : அப்பா நான் உங்களை நம்புகிறேன்; உங்களைத் துக்கப்படுத்தவே மாட்டேன்.

மீண்டும் அந்த கதையை சொல்ல வைத்தான் டிக்கி. வில்லியத்தின் சிந்தனைகள் அவனையே குற்றப்படுத்தின. நிம்மதியற்ற நிலையில் நித்திரைக்குச் சென்றான்.  

இரவில் ஓர் கனவு : ஒரு தழும்புள்ள கரத்தை ஒருவர் வில்லியத்திடம் நீட்டுகிறார். “உன் விரலை நீட்டி, என் கைகளைப் பார்“ என்று சொல்கிறார்.

காலையில் டிக்கியின் அன்பான முத்தங்கள் டிக்கியை எழுப்பின. இரவின் கனவுகளும் முந்தின பகலின் உரையாடல்களும் அவனது கடின உள்ளதைக் கலைத்துவிட்டன.

தாமதமின்றி, தனக்காக காயப்பட்ட இயேசுவின் கரங்களில் தன்னை ஒப்புவித்தான். உலகம் தரக்கூடாத சமாதானத்தைப் பெற்றான்.

“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா. 535)

நன்றி  நல்ல சமாரியன்

 

Tuesday 6 November 2012

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை (மத். 16:28)


  
இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் அதிக சர்ச்சைக்குரியதாகவும் நமக்கு அதிக குழப்பதை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் வாக்கியங்களில் ஒன்று அவருடைய ராட்சியத்தின் வருகையைப் பற்றிய அறிவிப்போடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு கூற்றாகும்.. இயேசு கிறிஸ்து தான் ராட்சியத்தில் வருவதைப் பற்றி குறிப்பிட்டபோது (மத். 16:27) இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவரை அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தையே இக்கூற்று ஏற்படுத்துகின்றது. .இக்கூற்றுக்கு முன்னுள்ள வசனங்களை வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து அச்சமயம் தன் சீடர்களுடன்    வார்த்தைககளைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்கள் அனைவரும் முதலாம் நூற்றாண்டிலேயே மரித்து விட்டனர். ஆனால் இயேசுவின் வருகையோ இன்னும் சம்பவிக்கவில்லை. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் அதாவது அவர் ராட்சியத்தில் வரும் வரை சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் எனும் அறிவிப்பு பொய்யானதாக உள்ளதாக சிலர் கருதுகின்றனர் 

இயேசுவின் இக்கூற்று இன்று பொதுவாக, அவரது மறுவருகை பற்றிய அறிப்பாகவே கருதப்படுகின்றது. இயேசுவின் மறுவருகை வரை அவருடைய சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்றே ஆதி சபையினர் இக்கூற்றை விளங்கிக் கொண்டிருந்தனர். (1) இயேசுவின் மறுவருகை விரைவில் அதாவது சீடர்கள் மறுவருகை விரைவில் அதாவது சீடர்கள் மரிப்பதற்கு முன் நடைபெற்று விடும் எனும் நம்பிக்கையுடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சில வேத ஆராய்ச்சியாளர்கள் தர்க்கிக்கின்றர்.(2) எனினும், இயேசுவின் மறுவருகைக்கும் முன்பே சீடர்கள் மரித்து விட்டதினால், அவர் தன் மறுவருகையைப் பற்றியே இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுவதற்கில்லை. “இயேசு தன் மறுவருகையின் காலத்தை அறியாதிருப்பதாக தெரிவித்துள்ளமையால் (மத். 24:36) தான் அறியாத அக்காலம் வரை தன் சீடர்டகளில் சிலர் மரியாமலிப்பார்கள் என்று அவர் கூறியிருக்க மாட்டார்(3)

இன்று பெரும்பாலான வேத ஆராய்சியாளர்கள் இயேசுவின் இக்கூற்றை கி.பி. 70ல் நடைபெற்ற எருசலேம் நகரத்தின் அழிவைப் பற்றிய முன்னறிப்பாகவே கருதுகின்றனர். மத்தேயு 16:27 இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியே கூறுகின்ற போதிலும் அதற்கடுத்த வசனமான சர்ச்சைக்குரிய இயேசுவின் இக்கூற்றும் அவரது மறுவருகையைப் பற்றியே கூறுகின்றது என எண்ணுவது தவறாகும்.(4) எனக் கூறும் இவர்கள் ராட்சியத்தின் வருகையானது ஆசீர்வாதத்தை மட்டுமல்ல நியாயத்தீர்ப்பையும் கொண்டு வருகின்றது அதேசமயம் கி.பி. 70 இல் எருசலேமின் மீது வந்த அழிவு, யூதஜனங்கள் மேசியாவை நிராகரித்தமைக்கான அவர்கள் மீது வந்த தேவதண்டனையாக இருப்பதனால் இச்சம்பவம் மனுஷகுமாரன் வல்லமையோடு தேவராட்சியத்தில் வந்த ஒரு சம்பவமாகவே உள்ளது. (5) என விளக்குகின்றனர். மத்தேயு 24ம் அதிகாரத்தில் எருசலேம் அழிவும் உலக முடிவிலேற்படும் அழிவும் ஒன்றாகச் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது போலவே மத்தேயு 16:27-28 லும் இரண்டும் ஒரே நேரத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளன. (6) என்றும் இக்கருத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

இயேசு கிறிஸ்து கி.பி. 70ல் எருசலேம் நகருக்கு ஏற்பட்ட அழிவையே தான் ராட்சியத்தில் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று இன்று பல தேவ ஆராச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும்  இயேசுகிறிஸ்து ராட்சியத்தில் வருவதானது எவ்வாறு இச்சம்பவத்தைக் குறிக்கின்றது என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் திருப்திகரமானதாக இல்லை. உண்மையில், “எருசலேம் நகரின் அழிவை மனுஷகுமாரன் தம்முடைய ராட்சியத்தில் வருவது எனும் சொற்பிரயோகம் சரியான விதத்தில் விளக்குவதாயில்லை. அத்தோடு கி.பி. 70ல் இயேசு தன் இராட்சியத்தில் வந்ததிற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. (7) மேலும், இயேசு கிறிஸ்துவின் கூற்றில் “இங்கே நிற்பவர்களில் சிலர்“ என்னும் சொற்பிரயோகம் அவர் விசுவாசிகளுக்காக வருவதைப் பற்றிய விவரணமாகவே உள்ளது. எனவே இதை அவவிசுவாசிகளை நியாயந்தீரக்க வருவது பற்றிய முன்னறிவிப்பாக கருத முடியாதுள்ளது. (8)

இயேசு கிறிஸ்து இக்கூற்று லூக்காவிலும் மாற்குவிலும் சற்று வித்தியாசமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன்  என மத்தேயுவில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் லூக்காவில் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும்முன்’ லூக்காவில் “தேவனுடைய ராஜ்யத்தை காணும்முன் என்றும் (லூக். 9.27) மாற்குவில் தேவனுடைய ராஜ்யம் பலத்துடன் வருவதைக் காணும்முன் என்றும் (மாற். 9.1) குறிப்பிடப்பட்டுள்ளது. (9) எனினும் தேவனுடைய ராஜ்யம் வருவதும் மனுஷகுமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருவதும் ஒரே விடயத்தையே குறிக்கின்றன. (10) தேவனுடைய ராட்சியமே மத்தேயுவின் சுவிஷேசத்தில் மனுஷகுமாரனின் ராட்சியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசு இரண்டு சொற்பிரயோகங்களையும் இரு வேறுபட்ட இராட்சியங்களாக குறிப்பிடவில்லை. மனுஷகுமாரனாகிய இயேசுவே தேவனுடைய இராட்சியத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார்(11) இயேசுவினுடைய பிரசங்கங்களில் தேவனுடைய ராட்சியம் (மத்தேயுவில் பரலோக ராட்சியம்) முக்கியமானதும் அடிப்படையானதுமான செய்தியாய் இருந்தது. (மாற். 1:14, லூக். 4:43, 8:1, அப். 1:3) எனினும் தேவனுடைய ராட்சியம் பூகோளரீதியாக ஒரு இடத்தில் இருக்கும் ராட்சியம் அல்ல. மாறாக இது தேவனுடைய ஆளுகையை குறிக்கின்றது.(12) ராட்சியம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “பசிலெயா“ (basileia) எனும் கிரேக்கப் பதம், ஆளுகை, ஆட்சி, ராஜரீகம் எனும் அர்த்தங்களையே கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டிலும், இதன் எபிரேய இணைச் சொல்லான “மல்குத்“ (malkuth) இவ்வர்த்தத்தையே தருகிறது. எனவே தேவனுடைய ராட்சியம் என்பது இயேசு இவ்வுலகில் ஆரம்பிக்க வந்த தேவனுடைய ஆளுகையையே குறிக்கிறது. இயேசு தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்தபோது தேவனுடைய ராட்சியம் சமீபித்திருக்கிறது என்றும் (மாற். 1.14-15) உங்களிடத்தில் வந்திருக்கிறது என்றும் (லூக். 11.20) குறிப்பிட்டார். இயேசுவின் வருகையோடு தேவனுடைய ராட்சியம் இவ்வுலகிற்கு வந்துவிட்டபோதிலும் (13) “அவருடைய ஊழிய காலத்தில் இவ்வரையறைக்கு உட்பட்டதாகவே இருந்தது. இதனால் ராட்சியம் வல்லமையோடு வரவிருப்பதைப் பற்றி முன்னறிவித்ததோடு அதைக் காணுமுன் தன் சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்றும் முன்னறிவித்துள்ளார். (14)

தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வருவது எதைக் குறிக்கிறது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இயேசுவின் உயிர்த்தெழுதலிலேயே இது நடைபெற்றதாக கருதுகின்றன. “இயேசுவின் மரணம்வரை ராட்சியத்திற்கு இருந்தவரையறை அவரது உயிர்த்தெழுதலில் நீக்கப்பட்டு அது வல்லமையோடு வெளிப்பட்டது.(15) என்பதே இவர்களது விளக்கமாகும். இதற்கு ஆதாரமாக ரோமர் 1:3-4 சுட்டிக் காட்டப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவர் தேவனுடைய குமாரன் என்பதை பலமாய் ரூபித்துள்ளதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனால், “உயிர்தெழுதல் தேவனுடைய ராட்சியத்தை வல்லமையாய் வெளிப்படுத்தியுள்ளது.(16) என்றும், ‘தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்ததை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலேயே காணக்கூடியதாக உள்ளது.(17) என்றும் கூறுகின்றனர் எனினும் சிலர் பெந்தகோஸ்தே நாளிலேயே தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்ததாக தர்க்கிக்கின்றனர். “.இயேசுவின் ஊழிய காலத்தை விட அந்நாளில் தேவ வல்லமை அதிகமாக வெளிப்பட்டதை அவதானிக்க கூடியதாக உள்ளது.(18) என்று இவர்கள் கருதுகின்றனர். அதேசமயம் பெந்தகோஸ்தே நாளின் பின்பே கிறிஸ்தவம் உலகெங்கும் பரவத் தொடங்கியமையால் “சபையிலே தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்தது“(19) என்பது வேறு சிலரது தரக்கமாக உள்ளது. ஒருசில வேத ஆராய்ச்சியாளர்கள் இவையனைத்தையும் ஒன்றாக்கி, தேவனுடைய இராட்சியம் குறிப்பிட்ட தனியொரு சம்பவத்தில் அல்ல மாறாக பல சம்பவங்களின் மூலமாக வந்தாக கருதுகின்றனர்.(20)

தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்த சந்தர்ப்பங்களாக தேவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதல், பெந்தகோஸ்தே தின சம்பவங்கள், மற்றும் சபையின் வளர்ச்சி  போன்றவை இயேசுகிறிஸ்து குறிப்பிட்ட விதமாக அவருடைய சீடர்களில் சிலர் மட்டுமே கண்ட சம்பவங்களாக இல்லை. யூதாஸ் ஸ்கரியோத்தைத் தவிர இயேசுவின் சீடர்கள் அனைவரும் இவற்றை கண்டமையினால், இவற்றில் எந்த ஒரு சம்பவத்தையும் இயேசு குறிப்பிட்டிருக்க முடியாது. உண்மையில் லூக்கா எழுதின சுவிசேஷத்திலேயே இயேசுகிறிஸ்துவின் இக்கூற்றை விளங்கிக் கொள்வதற்கான குறிப்பு உள்ளது. லூக்கா இயேசுவின் கூற்றை அவரது மறுரூபமாகுதலோடு தொடர்புபடுத்தியுள்ளார். இயேசு இவ்வார்த்தைகளை சொல்லி ஏறக்குறைய எட்டு நாளான பின்பு அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபுவையும் கூட்டிக் கொண்டு தன்னுடைய மகிமையைக் காண்பித்தாக லூக்கா குறிப்பிட்டுள்ளார். (லூக். 9:27-29) இச்சம்பவத்திலேயே மனுஷகுமாரன் தன்னுடைய ராட்சியத்தில் வல்லமையோடு வந்ததை இயேசு குறிப்பிட்டுள்ள விதமாக அவர்களுடைய சீடர்களில் சிலர் அதாவது மூவர் மட்டுமே கண்டனர். மேலும் மூன்று சுவிஷேசங்களிலும் இயேசுவின் இக்கூற்றினைத் தொடர்ந்து அவர் மறுரூபமாகிய சம்பவமே சித்திரிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, மறுரூபமாதலின் அனுபவத்தைப் பற்றி பேதுரு பிற்காலங்களில் குறிப்பிடும்போது, அதை இயேசுவின் மகத்துவத்தையும் வல்லமையையும் வருகையையும் வெளிப்படுத்திய ஒரு சம்பவமாக வர்ணித்துள்ளார். (2 பேதுரு 1.16-18) “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மரணத்தை ருசிபார்ப்பதில்லை“ எனும் வார்த்தைகள் “ஒரு கிழமைக்குள்(21) நடைபெறப் போகும் சம்பவத்தைக் குறிப்பிட உபயோகிப்பது பொருத்தமாக இல்லை(22) என்பது மட்டுமே இக்கருத்திற்கு எதிராக சுட்டிக் காட்டப்படும் ஒரேயொரு காரணமாகும். எனினும், இயேசுவின் இக்கூற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களில் (23) இது ஒன்று மட்டுமே இயேசுவின் வார்த்தைகளுக்கான சரியான விபரணமாயுள்ளது. இயேசு மறுரூபமாகியது தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வருவதை அவரது மூன்று சீடர்களுக்கு முன்னடையாளமாக காண்பித்த சம்பவமாக இருப்பதனால், தன் சீடர்களில் சிலர் மட்டும் மரணத்தின் முன் காணும் சம்பவமாக இயேசு இதனையே குறிப்பிட்டிருக்க வேண்டும். 

Foot note and References 
(1) Craig A. Evens. Luke in International Biblical Commentary, Massachusetts: Hendrickson Publishers, 1993 p. 153, யோவான் 21:21-23லும் இதேவிதமான நிலையை நாம் அவதானிக்கலாம். 

(2) E. Schweizer, The Good News According to Luke, Atlant:John Knox, 1984, p. 158

(3) R.C.H. Lenski, The Interpretation of St. Mathew’s Gospel., Minneapolis: Augsburg Publishing House, 1964, p.158

(4) libd, 649

(5) Donald A Hagner, Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p. 487

(6) lbid 487

(7) Norman Geisler&Thomas Howe, When Critics Ask, Wheaton: Victor Books, 1992, p. 350

(8) lbid, p. 350

(9) இயேசுகிறிஸ்துவின் கூற்று இவ்விதம் வித்தியாசமான முறைகளில் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.  ஒன்று இயேசு ஒரே விடயத்தைப் பற்றி பல இடங்களில் கூறியமையால் அது வித்தியாசமான வார்த்தகளில செவிமடுத்தோருக்கு விளங்கக்கூடிய விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட கூற்றைப் பொறுத்தவரை இவ்விளக்கம் பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் மூன்று சுவிஷேசப் புத்தகங்களிலும் இது சொல்லப்பட்ட சம்பவம் ஒன்றாகவே உள்ளது. இதனால் இயேசு இவ்விடயத்தைப் பற்றி பல இடங்களில் அறிவித்துள்ளார் எனக் கூறமுடியாது. இரண்டாவதாக இயேசு அரமிக் மொழியிலேயே பேசியமையால் அவர் அம்மொழியில் கூறியவற்றை சுவிசேஷ ஆசிரியர்கள் எழுதும்போது கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தே எழுதினர். இத்தகைய மொழிபெயர்ப்பே ஒரு கூற்று வித்தியாசமான முறைகளில் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணமாகும். 

(10) D.A. Carson, Matthew in The Expositor’s Bible Commentary, Grand Rapids:Zondervan Publishing House, 1984, p.380

(11) F.F. Bruce, The Hard Saying of Jesus, London: Hodder & Stoughton, 1995, p. 154

(12) இதனால்தான், இவ்விராட்சியம் ஏற்கனவே இருந்த ஒரு இராட்சியமாகவும் (மத். 8:11, லூக். 13:28) தன் காலத்தில் இருக்கும் இராட்சியமாகவும் (லூக். 17:20-21, மத். 12:28) குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அது இனிமேல் வரவிருக்கும் இராட்சியமாகவும் இயேசுவால் விளக்கப்பட்டுள்ளது. (மத். 6:10)

(13) தேவனுடைய ராட்சியம் என்பது அவருடைய ஆளுகையாக இருப்பதோடு இயேசு அறிவிக்கும் சுவிஷேசத்தை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்வதன் மூலம் மக்கள் அவ்ராட்சியத்தின் குடிமக்களாகின்றனர். 

(14) F.F. Bruce, The Hard Sayings of Jesus p. 153

(15) lbid. P. 154

(16) Robert H. Mounce, Matthew in New International Biblical Commentary, Massachusetts: Hendrickson Publishers, 1993, p. 165

(17) Craig A. Evans, Luke in New International Biblical commentary, p. 149

(18) F.F. Bruce, The Hard Sayings of Jesus p. 154

(19) H.B. Green, Matthew in New Clarendon Bible Commentary, New York: Oxford press, 1975, p. 154

(20) D.A. Carson, Mathew in Expositor’s Bible Commentary. P. 382

(21) லூக்கா “ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப் பின்பு“ என்று குறிப்பிட்டுள்ள போதிலும் (லூக். 9:28) மாற்கு சரியாக ஆறு நாட்களின் பின் என்பதை அறியத் தந்திருக்கிறார். (மாற். 9:2)

(22) Donald A Hagner: Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p486

(23) இயேசு மறுரூபமாதல் உயிர்த்தெழுதல், பரமேறுதல், பெந்தகோஸ்தே, கிறிஸ்தவத்தின் பரம்பல், சுவிஷேசத்தின் உள்ளான வளர்ச்சி, எருசலேம் அழிவு, இரண்டாம் வருகை என்பன இவ்வசனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களாகும். (Alfred Plummer, A Critical and Exegetical Commentary on the Gospel According to Luke, Edinburgh 1928pp. 249-250)

(இவ்வாக்கமான சத்தியவசனம் 2000 சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டதாகும்)
ஆசிரியர்  Dr. M.S. வசந்தகுமார் )