- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 17 September 2014

வேதமும் விளக்கமும் 1 இராஜாக்கள் 1:31-32 - ஒரு கோத்திரம் யார்? அது என்னவாயிற்று?

61.   1 இராஜாக்கள் 1:31-32 இல் உள்ளபடி 10 கோத்திரங்கள் இஸ்ரவேல் ராஜ்யமாகவும் ஒரு கோத்திரம் யூதா ராஜ்யமாகவும் மாறியது. மீதம் ஒரு கோத்திரம் யார்? அது என்னவாயிற்று? யார் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது(நவமணி ஆபேல், இந்தியா)
 தென்ராஜ்யத்தில் யூதா, பென்யமீன் எனும் இரு கோத்திரங்களும் இருந்தன. இவ்விரு கோத்திரங்களும் பொதுவாக ஒரு கோத்திரமாக கருதப்பட்டமையினாலேயே 1 இராஜாக்கள் 1:31-32 ஒரு கோத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

31. யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
32. ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

Sunday 14 September 2014

வேதமும் விளக்கமும்-நம்மால் சரியாக அறிய முடியாத தேவநீதியையும் தேவராஜ்யத்தையும் எப்படித் தேடுவது?

60. மத்தேயு 6:33 இற்கான விளக்கம் தேவை. நம்மால் சரியாக அறிந்துக் கொள்ள முடியாத தேவநீதியையும் தேவராஜ்யத்தையும் எப்படித் தேடுவது? (செல்வி, சிவன்குடியேற்று, இந்தியா) 
யூத மக்கள் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் நீதிமான்களாக வாழலாம் என எண்ணினர். எனினும் தேவனுக்கு முன்பாக நீதிமானாக நிற்பதற்கு இத்தகைய மனித நீதி போதுமானதாக இருக்கவில்லை. இதனால், தேவனுடைய நீதி மனிதனுக்கு அவசியப்பட்டது. இத்தேவநீதியானது இயேசுகிறிஸ்துவினால் மனிதனுக்குக் கொடுக்கப்படும் நீதியாகும். ஒரு மனிதன் இயேசுகிறிஸ்துவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு அவரைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்கையில், இயேசுகிறிஸ்து அவனுடைய பாவங்களை அவனிலிருந்து எடுத்துப் போட்டு, அவனுக்கு தன்னுடைய நீதியைக் கொடுக்கின்றார். இதுவே தேவநீதி. கிரியைகளின் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவன் இலவசமாய் அருளும் நீதியைத் தேடும்படியே மத்தேயு 6:33இல் அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.தேவனுடைய ராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையாகும். ராஜ்யம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “பசீலியா“ எனும் பதம் அரசாட்சி, ஆளுகை, ராஜரீகம் எனும் அர்த்தங்களைக் கொண்ட பதமாகும். இது அரசாட்சி செய்யும் இடத்தையல்ல வெறும் ஆட்சியையே குறிக்கின்றது. இது குறிப்பிட்ட ஒரு இடத்தின் ராஜ்சியத்தை அல்ல மாறாக எவ்விடத்திலுமுள்ள தேவனுடைய ஆளுகையை வர்ணிக்கும் பதமாக உள்ளது. ஒருவன் தேவனுடைய ஆளுகையின் கீழ் இருக்கும்போது அவன் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கின்றான். எனவே தேவனுடைய ராஜ்யத்தை தேடுவதென்பது அவருடைய ஆளுகையின் கீழானவாழ்வை நாடுவதாகும். அதாவது ராஜாவாகிய அவரது சித்தம் யாதென்பதை அறிந்து அதன்படி வாழ்வதாகும். 

Tuesday 9 September 2014

வேதமும் விளக்கமும் மத்தேயு 5.43 அன்புள்ள தேவன் சத்துருவை பகைக்கும்படி எப்படிக் கட்டளையிடலாம்?

59. மத்தேயு 5.43 இல் உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். என்று இயேசுகிறிஸ்து கூறுகின்றார். அன்புள்ள தேவன் சத்துருவை பகைக்கும்படி எப்படிக் கட்டளையிடலாம்? (ஆர். டேவிட், கண்டி, இலங்கை)
 
இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டு வசனத்தையல்ல மாறாக, பழைய ஏற்பாட்டுக்கு அக்கால யூதமதப் போதகர்களும் வேதபாரகர்களும் கொடுத்த விளக்கத்தையே குறிப்பிடுகின்றார். சத்துருவை பகைக்கும்படி பழைய ஏற்பாட்டில் எதுவித கட்டளையும் இல்லை. சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் எதிரிகள் மீதான வெறுப்பும் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் வெளிப்படுவதை நாம் அவதானிக்கலாம். எனினும் இவை சங்கீதக்காரனின் மன உணர்வுகளே தவிர, கர்த்தரின் கட்டளைகள் அல்ல. யூதமதப் போதகர்கள் இத்தககு பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்கும் பொழுது எதிரிகளைப் பகைக்குபடி கூறினர். அக்கால யூதர்கள் புறஜாதியார் மீது பகைமையையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இதனால் அவர்களது போதனை அவர்களது பகைமையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் வண்ணம் சத்துருக்களைப் பகைக்கும்படி அறிவுறுத்தல்களைக் கொடுத்தது. இயேசுகிறிஸ்து இத்தகைய யூதமப் போதரக்களின் கட்டளையையே மத். 5:43 இல் குறிப்பிட்டுள்ளார். புதிய ஏற்பாட்டைப் போலவே பழைய ஏற்பாட்டிலும் சத்துருவை நேசிக்கும்படியான கட்டளைகளே உள்ளன. லேவியராகமம் 19:33-34 இல் “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக” என்று கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும் யாத்திராகம்ம் 23:4-5 இல் சத்துருவிற்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வசனங்களில் “உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக. என்று சொல்லப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 25:21 இல் சத்துருவை நேசிக்கும்படி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. இதிலிருந்து சத்துருவை பகைப்பாயாக என்பது தேவ கட்டளையல்ல என்பது தெளிவாகின்றது. அவ்வாறு செய்யாமல் சத்துருவை நேசிக்கும்படி மத்தேயு 5:44 இல் கூறுகின்றார். 
 
 மத்தேயு 5:44 
 44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.