- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 27 July 2011

என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55)

(என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55) இவ்வசனத்தினை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்கர்களும் சில கிறிஸ்தவ பிரிவினரும் இயேசு திருவிருந்தை ஏற்படுத்தியுள்ளார்; அதனை நினைவு கூறவேண்டும் எனும் கருத்துடையவர்களாய் இருப்பதோடு, அதனை திருபலியிலும் / ஆராதனைகளிலும் கடைபிடிக்கிறார்கள். இவ்வசனம் நமக்கு உண்மையில் என்ன போதிக்கிறது. இயேசு திருவிருந்தை ஏற்படுத்தினாரா? இக்கட்டுரை அதனை விளக்குகின்றது)

இயேசு ஐந்து அப்பங்களையும இண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின்னர், அவர் தம்மை ஜீவ அப்பமாக வெளிப்படுத்தினார் (யோவா 6:1-35) (1) மக்கள் சரீர உணவான அப்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவர் ஆவிக்குரிய அப்பத்தைப் பற்றி விளக்கிக் கூறியதோடு 'என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது'  என்று யோவான் 6:55 இல் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் இது “கடினமான உபதேசம்“ என்று கூறியதோடு (யோவான் 6:60) “இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான்" என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள் (யோவான் 6:52) அன்று யூதர்கள் மத்தியில் உருவான வாக்குவாதம் இன்றைய கிறிஸ்தவ உலகிலும் உள்ளது. இயேசுக்கிறிஸ்துவன் வார்த்தைகள் அதாவது, “தமது மாம்சம் மாம்சம் மெய்யான போஜனம் என்றும் தமது இரத்தம் மெய்யான பானம்“ என்றும் அவர் கூறும்போது, அவர் என்ன அர்த்ததோடு இவ்வாறு சொன்னார் என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சிரமமாயிருப்பதனால். இது பற்றி வித்தியாசமான கருத்துக்கள் இன்றைய கிறிஸ்தவ உலகில் உருவாகியுள்ளன. 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் யோவான் ஆறாம் அதிகாரத்திலுள்ள இயேசுக்கிறிஸ்துவின் பிரசங்கத்தைத் “திருவிருந்து பற்றிய அருளுரையா கவே“ கருதுகின்றனர்.(2) இதன்படி இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைப் பானம் பணணுவதும் திருவிருந்தைப் பற்றிய அறிவுறுத்தலாக விளக்கப்படுகின்றன. இதனால் “யோவான் 6ம் அதிகாரத்தில் 51 முதல் 58 வரையிலான வசனங்கள் திருவிருந்தின் வார்த்தைகளாகவே உள்ளன. (3) என்றும் கூறப்படுகின்றன.  இயேசுக் கிறிஸ்துவின் கடைசி .இராப்போஜனத்தைப் பற்றி யோவான் குறிப்பிடாத மையால் (4) அதைப் பற்றிய இயேசுக்கிறிஸ்துவின் அருளுரைகளை யோவான் 6ம் அதிகாரத்தில் எழுதியுள்ளார் என்று அநேகர் கருதுகின்றனர்.  இன்று பிரபலமாயிருக்கும் இவ்விளக்கம் சபை சரித்திரத்தின் ஆரம்பகாலத்தில் முக்கியத்துவம் பெறாத ஓர் விளக்கமாக இருந்துள்ளதோடு (5) ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால், “இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சத்தைப் புசி்த்தல்“, “இரத்தத்தைப் பானம் பண்ணுதல்“ என்னும் சொற்பிரயோகங்கள் திருவிருந்தை நினைவூட்டுகின்ற வார்த்தைகளாக உள்ள போதிலும் அதாவது, திருவிருந்தின்போது உபயோகிக்கப்படுகின்றவைகளாக உள்ள போதிலும், யோவான் ஆறாம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே விளக்கியுள்ளார் என்று கூறுவதற்கில்லை. “இயேசுக்கிறிஸ்துவின் உபதேசம் திருவிருந்தைப் பற்றியது“ என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இவ்வதிகாரத்தில் இல்லை. (6)

இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே யோவான் ஆறாம் அதிகாரத்தில் விளக்குகிறார் என்று கூறுபவர்களில் சிலர். ஒருவன் இரட்சிப்படைவதற்குத் திருவிருந்து அவசியமானது என்றும் தர்க்கிக்கின்றனர். (7). ஏனென்றால் 53ம் வசனத்தில் “நீங்கள் மனுகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் மாமிசத்தை புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதன் மூலம் ஒருவனுக்கு ஜீவன் கிடைப்பதனால், திருவிருந்து இத்தகைய ஜீவனைக் கொடுக்கின்றது. என்னும் முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனர். இதனால்., “திருவிருந்தின்போது ஜீவனளிக்கும் கிறிஸ்துவின் ஆவி பெறப்படுவதனால் இரட்சிப்புக்கு திருவிருந்து அவசியமானது. (8) என்று கூறும் வேத ஆராய்ச்சியாளர்கள் “இவ்வுலக வாழ்வுக்கும் இனி வரவிருக்கும் உலகிற்கான வாழ்வுக்கும் அவசியமான ஜீவன் திருவிருந்தின் “அப்பம்“ பானம்“ என்பவற்றின் மூலம் ஒருவனுக்குள் செல்கிறது. (9) என்றும் விளக்குகின்றனர். எனினும் திருவிருந்தின் மூலம் இரட்சிப்பு கிடைக்கும் என்பதற்கு வேதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாததால் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாக உள்ளது. 

யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இயேசுக்கிறிஸ்து எருசலேமில் திருவிருந்து முறையை ஏற்படுத்தியபோது ஆற்றிய பிரசங்கம் அல்ல. அவர் திருவிருந்தை உருவாக்குவதற்கும் ஒரு வருடத்திற்கும் முன்பே இவ்வாறு கூறியுள்ளார். (10) உண்மையில், கலிலேயாவில் தமது அற்புதத்தை கண்டமையால் அடுத்த நாளும் தங்களுக்கு உணவு கிடைக்கும என்னும் எண்ணத்தோடு வந்தவர்களுக்கு (யோவான் 6:26) இயேசுக்கிறிஸ்து கூறியவைகளே யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் திருவிருந்து பற்றிய ஆழமான ஆவிக்குரிய விடயத்தைப் புரிந்து கொள்ளும் அல்லது ஏற்றுக் கொளளும் மனநிலையில் இருந்தவர்கள் அல்ல.இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் கப்பர்நகூமிலுள்ள ஜெபாலயத்தில் வைத்து கூறப்பட்டவை என்று 59ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை இது எருசலேமில் திருவிருந்தை உருவாக்கியபோது அது பற்றி கொடுக்கப்பட்ட விளக்கம் அல்ல என்பதை அறியத் தருகிறது. இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்களில் அநேகர் அவரது உபதேசம் கடினமானது என்று கூறி அவரை வி்ட்டுச் சென்று விட்டனர். (யோவான். 6:60) (11) எனவே இத்தகைய மக்களுக்கு இயேசுக்கிறிஸ்து பற்றிய உபதேசத்தை விளக்கினார் என்று கூறுவது அர்த்தமற்றது. (12)

யோவான் 6ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே விளக்கியுள்ளார் என்று கருதினால் திருவிருந்தின் மூலம் நித்திய ஜீவன் கிடைக்கும் என்னும் தவறான உபதேசத்தேயே உருவாக்கும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் என்றே 53ம் 54ம் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் திருவிருந்து ஒரு மனிதனில் இத்தகைய விளைவை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், ஏற்கனவே ஜீவனைப் பெற்றவர்களே “தமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயான ஐக்கியத்திற்கு அடையாளமாக திருவிருந்தில் பங்கேற்கின்றன (13) மேலும், ஜீவனானது இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகக் கிடைப்பது என்பதை இவ்வதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து பல தடவை சுட்டிக் காட்டியுள்ளார். (யோவான் 6:35, 40, 47) இதிலிருந்து இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதும், அவரது மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதும் மனிதனில் ஒரே விளைவையே ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்கிறோம். உண்மையில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியல்ல ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றியே யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது வார்த்தைகள் “அக்கால யூதக் கலாசாரத்தின் சொற்பிரயோகங்களாகவே உள்ளன (14) அதாவது “புசித்தல் குடித்தல்” என்னும் சொற்பிரயோகம் “ஒருவனுக்குள் எடுத்தல்“ என்னும் அர்த்தத்துடன் அக்காலத்தில் உபயோக்கப்பட்ட ஒரு மொழிவழக்காகும். (15) உபதேசங்களை அல்லது போதனைகளை ஒருவன் தனக்குள் எடுப்பதற்கும் யூதர்கள் இவ்வித சொற்பிரயோகத்தையே அக்காலத்தில் உபயோகித்துள்ளனர். (16) இத்தைகைய அர்த்தத்தில் வேதத்திலும் தேவனுடைய வார்த்தையை புசிக்கும்படியான அறிவுறுத்தல்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் (எரே. 15:16, எசே. 3:1-3, வெளி. 10:9-10) 

இயேசுக்கிறிஸ்துவும் இத்தகைய அர்த்ததுடனேயே தம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உட்கொள்வதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனவே, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து அவரை எமக்குள் எடு்ப்பதே இங்கு அவரது மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைப் பானம் பண்ணுவதுமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இயேசுக்கிறிஸ்துவை நம் உள்ளான வாழ்விற்குள் கொண்டு வருவதே நமக்கு ஆவிக்குரிய ஜீவனைக் கொடுக்கும் செயலாகவுள்ளது. இதைத்தான் இயேசுக்கிறிஸ்து “ என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு“ என்று யோவான் 6:54 இல் குறிப்பிட்டுள்ளார். யோவான் சுவிசேஷத்தின் ஏனைய பகுதிகளில் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிக்கும் விடயமே இங்கு இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சத்தைப் புசிப்பதாகவும் இரத்தத்தைப் பானம் பண்ணுவதாகவும்“ உள்ளது. மேலும் இவ்வதிகாரத்தில் “புசித்தல்“ குடித்தல்“ என்னும் பதங்கள் மூலமொழியில் “ஒருதரம் மட்டும் செய்யும் செயலைக் குறிக்கும் விதத்திலேயே உள்ளது. (17) அதாவது “இயேசுக்கிறிஸ்துவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் ஒருதரம் உட்கொள்வதனால் கிடைக்கும் விளைவே 53ம் 54ம் வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது. (18) எனவே, இதை பலதடவைகள் நாம் பங்கேற்கும் திருவிருந்தாகக் கருதமுடியாது. மேலும், பதிய ஏற்பாட்டில் “இயேசுக்கிறிஸ்துவின் மாம்சம்“ என்னும் சொற்பிரயோகம் திருவிருந்தைக் குறிக்கும் பதம் அல்ல. “இயேசுக்கிறிஸ்துவின் சரீரம்“ என்னும் சொற்பிரயோகம் திருவிருந்தில் உபயோகிக்கப்பட்டுள்ளதும் (19) “மாம்சம்“ என்னும் பதத்தை உபயோகித்துள்ள யோவான் 6ம் அதிகாரம் திருவிருந்தைப் பற்றியல்ல என்பதற்கான ஆதாரமாயுள்ளது. (20)


யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜீவஅப்பம் பற்றிய அருளுரை இயேசுக்கிறிஸ்து உலக மக்களுக்காகத் தம்மையே பலியாகக் கொடுப்பதைப் பற்றியும் அவரை விசுவாசித்து அவரை நமக்குள் எடுத்துக் கொள்ளப்படுவதனால் நமக்குக் கிடைக்கும் ஆவிக்குரிய வாழ்வைப் பற்றியுமே விளக்குகிறது. ஜீவ அப்பமாகத் தம்மை உருவகிக்கும் இயேசுக்கிறிஸ்து 51ம் வசனத்தில், “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே“ என்று குறி்ப்பிடப்பட்டுள்ளார். இது அவரது மரணத்தையே குறிக்கிறது. ஏனென்றால் அவர் சிலுவையிலேயே உலக மக்களின் ஜீவனு்ககாகத் தம்மையே பலியாக கொடுத்தார். இதனைத் தொடர்ந்துவரும் வசனங்களில் தம் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதன் மூலம் நித்திய ஜீவன் கிடைப்பது பற்றியும் இயேசுக்கிறிஸ்து விள்ககியுள்ளார். இதில் உபயோகிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் திருவிருந்தைப் பற்றியது போல் இருந்தாலும் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியல்ல. ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றியே இங்கு விளக்கியுள்ளார். அவரைப் புசிப்பதன் மூலம், அதாவது அவரை நமக்குள் எடுப்பதன் மூலம் நமக்கு ஆவிக்குரிய வாழ்வு கிடைக்கிறது என்பதையே அவர் அறியத் தருகிறார். 

Footnote & References 
(1) “ஜீவ அப்பம் நானே“ என்னும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்கான விளக்கத்திற்கு ஆசிரியரின் “இயேசுக்கிறிஸ்து யார்? எனும் நூலினைப் பாரக்கவும். 

(2) O. Cullmann, Early Christian Worship, P 93

(3) W. Barclay, Jesus As They Saw Him, p 261

(4) திருவிருந்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் புறஜாதியார் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக யோவான் இதைப் பற்றி குறிப்பிடவில்லை. (J Jeremias, The Eucharistic Words of Jesus p 73) என்பது சிலரது கருத்தாய் உள்ளது. எனினும், முதல் மூன்று சுவிஷேச புத்தகங்களிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமையால் கடைசி இராப்போஜனத்தின்போது நடந்த, அது சமயம் ஏனைய சுவிஷேசங்களில் குறிப்பிடாத விடயங்களை யோவான் 13ம் அதிகாரத்தில் எழுதியுள்ளார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமாக உள்ளது. 

(5) M.F.Wiles, The Spiritual Gospel : The Interpretation of the Four Gospel in the Early Church. p52. ஆதிச்சபை பிதாக்கள் யோவான் 6ம் அதிகாரத்தைத் திருவிருந்து போதனையாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும் இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் உள்ள போதிலும் ஒரு சில சபைப் பிதாக்கள் மட்டுமே இத்தகைய கருத்துடையவர்களாக இருந்தார்கள் எனனும் உண்மையை அநேகர் அறியாதிருக்கின்றனர். இயேசுக்கிறிஸ்துவே ஜீவ அப்பம் என்பதை ஏற்றுக் கொண்டிருந்த சபைப் பிதாக்கள், ஜீவ அப்பமாகிய அவர் மாம்சமாகி இவ்வுலகிற்கு வந்த நமக்காக மரித்தார் என்றே விசுவாசித்தார்கள். (D. Waterland, A. Review of the Doctrine of the Eucharist. p. 123)

(6) J. Marsh, The Gospel of St. John, p 281

(7) A. Richardson, An Introduction to the Theology of the New Testament p 377

(8) Ibid, p 327

(9) W. Barclay, Jesus As They Saw Him, p 261

(10) யோவான் 6ம் அதிகாரச் சம்பவம் பாஸ்கா பண்டிகையின் காலத்திலேயே நடைபெற்றுள்ள போதிலும் அவ்வருட பாஸ்காவின் போதல்ல. அதற்கு அடுத்த வருடத்திலேயே திருவிருந்து உருவாக்கப்பட்டது. 

(11) இவர்கள் மோசேயின் காலத்தில் 40 வருடங்களாக இஸ்ரவேல் மக்களுக்கு வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்பட்டதையே பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தனர். (யோவான் 6:31) உண்மையில் இவர்களுடைய பார்வையில் மோசே இயேசுக்கிறிஸ்துவை விட பெரியவராக இருந்தார். ஏனென்றால் மோசே 40 வருடங்களாக மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுத்துள்ளார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ ஒருநேரச் சாப்பாட்டை மட்டுமே கொடுத்திருந்தார். எனவே, அவர்களுக்கு இயேசுக்கிறிஸ்து செய்த அற்புதம், அதாவது ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது பெரிய காரியமாக தென்படவில்லை. இத்தகைய மனநிலையில் இருந்தவர்கள் ஒரு வருடத்திற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திருவிருந்தைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்னும் எதிர்ப்பார்ப்பில் இயேசுக்கிறிஸ்து அவர்களுக்கு அதைப்பற்றி விளக்கினார் எனறு கூறுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. உண்மையில் “மேசியாவாக வருபவர் மோசேயைப் போல வானத்திலிருந்து மன்னாவை மறுபடியும் கொண்டுவருவார் என்று அக்கால மக்கள் எதிர்பார்த்தனர். இதுவே அவர் மேசியா என்பதற்கான அடையாளமாக இருக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. (G.H. Macgregor, The Gospel of John, pp 142-143)

(12) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 312

(13) P.Enns, The Moody Hand Book of Theology, p 362 

(14) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 312

(15) H. Odeberg, The Fourth Gospel, p 239

(16) தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அப்பமாகவும், அதன் வார்த்தைகளை ஒருவன் தனக்குள் எடுப்பதை புசித்தலாகவும் யூத மதப் போதகர்கள் குறிப்பிட்டுள்ளனர். (L. Morris, Jesus is the Christ : Studies in the Thelogy of John, P 30)

(17) அதாவது மூலமொழியில் aorists tense இல் உள்ளது

(18) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 335

(19) ஆதிசபையில் இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சம்“ என்னும் சொற்பிரயோகம் அவர் மனிதராக வந்ததைக் குறிக்கவே பொதுவாக உபயோகிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவிருந்தில் இயேசுக்கிறிஸ்துவின் “சரீரம்“ என்னும் வார்த்தைகளையே உபயோகித்துள்ளனர். (L. Morris. Expository Reflections on the Gospel of John, p. 238)

(20) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 333



இவ்வாக்கமானது 
நூல் தலைப்பு :- கர்த்தரின் வார்த்தையில் கடின வரிகள்,  நூலாசிரியர் :- சகோ. எம்.எஸ்.வசந்தகுமார், வெளியீடு :- இலங்கை வேதாகமக் கல்லூரி 
பெறப்பட்டதாகும்




Monday 25 July 2011

பிரசங்கிகளுக்கு சி.எச். ஸ்பர்ஜன் ஐயரின் அறிவுரை பிரசங்கத்தின் நோக்கம்


பிரசங்கம் கருத்தாழம் உடையனவாயிருக்க வேண்டும். நாம் பிரசங்கிக்க நிற்பது பொழுது போக்கிற்காக அல்ல. முக்கியமான சத்தியங்களை அறிவிப்பதற்கே. 

வார்த்தை அலங்காரத்தையல்ல. மனிதர் தங்கள் இருதயத்தை கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து அவர் விரும்புகின்ற பரிசுத்தத்தை அடைந்து கொள்வதையே நாட வேண்டும். 

சபையார் போதகருக்காக அல்ல. போதகரே சபையாருக்காக ஊழியம் செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். ஆதலால் அவர்களுடைய நன்மைக்காகவும் பிரயோஜனத்திற்காகவும் அவர் தம்மைத் தாமே செலவிட வேண்டும். 

வேத சாஸ்திர தர்க்க காலத்தில் சாஸ்திர நிபுணர் என்று முடிசூட்டப்படவதிலும் இயேசுக்கிறிஸ்துவின் முகத்தில் விளங்கிய வேதவெளிச்சத்தைத் திறந்து காட்டி ஓர் ஆத்துமாவை நரகக் குழியினின்று தப்புவிப்பதே அதிக மகிமையான வேலை ஆகையால் கிறிஸ்து நிறைந்த ஊழியம் பாக்கியமானது.

வேதசத்தியங்களை தகுதியின்படி போதிக்காவிட்டால் சபைகளில் வேளாவேளைகளில் தோன்றுகின்ற நல் எழுப்புதல்கள் விறகில்லாத நெருப்பைப் போல சீக்கிரம் அணைந்துபோகும். திவ்விய சத்தியங்களை ஜனங்களின் உள்ளததில் படாமலிருப்பதே அநேகர் தவறிப்போவதற்கான காரணம்  என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் என்று தேவன் எபி. 8:10 இல் சொல்லுவது போல் பிரசங்கிமார் செய்வார்களானால் தற்போது நடமாடுகின்ற தீயப் பழக்கவழக்கங்கள் ஏற்படாது. கிறிஸ்தவர்களுக்குள் உண்டாகும் மதபேதங்களைத் தடுக்கத்தக்க ஒரு பெரிய கருவி சத்தியத்தின் தெளிவான போதனையே. 

பிரசங்கத்தின் கருப்பொருள்
வேதப்புத்தகம் பிரசங்கியின் வல்லமைக்குப் பெரிய ஆயுதமாய் இருக்கிறது. ஆவியானவர் வார்த்தையோடு மாத்திரமல்ல. வார்த்தைகளுக்குள்ளும் இருக்கிறார். 

பிரசங்கியார் எதைக் குறித்து சொல்லாமென்று திகையாமல் வேத வசனத்தையே திரும்பத் திரும்ப வாசித்து வாக்கியம் வாக்கியமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு வாக்கியத்தைத் தெரிந்து கொண்டு அதிலேயே முழு மனதையும் செலுத்த வேண்டும். பிரசங்கிக்க வேண்டிய வாக்கியம் அந்த வசனத்தில் அல்லது அதிகாரத்தி்ல் கிடையாதுவிட்டாலும் பரிசுத்த விஷயங்களில் மனதைச் செலுத்தும் சரியான வார்த்தை எப்படியும் அகப்படும். 

பிரசங்கியானவன் வேதவாக்கியங்களை நன்றாய் அறிந்தவனாயிருக்க வேண்டும். பிரசங்கி வேதவசனத்தின் ஊழிக்காரனாயிருக்கிறான். ஆகையால் வேதம் அவன் வேலைக்கு மிகப் பெரிய ஆயத்தமாகும். வேதாகமம் தான் அவனது பாடப்புத்தகம். அது பிரசங்க வாக்கியங்களைத் தேடிப் பிடிக்கும் இடமாய் மாத்திமல்ல. பிரங்ககளுக்கெல்லாம் அடிப்படையுமாயிருக்கிறது. பிரசங்கி போதிக்க வெண்டிய பொருள் தேவனுடைய வசனமே. அப்படியிருக்க போதகன் வேத அறிவில் தேறினவனாயிருக்க வில்லையானால் அவன் எப்படி போதிக்கக் கூடும்?

பிரசங்கத்தில் அடங்கிய போதனை வேத வசனத்திற்கு இசைவாயிருக்க வேண்டும். பிரசங்கத்திற்கென்று தெரிந்துகொண்ட வாக்கியத்தில் பரிசுத்த ஆவியானவர் கருதிய பொருள் இன்னதென்று கண்டுபிடித்து அதில் எமது சிந்தனையைச் செலுத்துவோமானால் நமது பிரசங்கம் எப்பொழுதும் ஒன்றுபோலிராமல் விதவிதமாய் தோன்றும். பரிசுத்த ஆவியின் வார்த்தைகளையே எடுத்து பொருள் விளங்க பிரசங்கமாக செய்வது சபையாருக்கு அதிக பிரயோஜனமும் ஏற்றதுமாயிருக்கும். இப்படி மறைந்திருக்கும் பொருளை எடுத்துக்கூறும் பிரசங்கத்தின் போதனை ஆத்துமாவுக்கு ஆன்மீக ஆதாரமும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதோனுமாகக் கேட்போரின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற் கேதுவாயிருக்கும். 

பிரசங்கத்தின் ஒழுங்கு
பிரசங்கத்திற்கு ஒழுங்கு முறை முக்கிய  இலக்கணம் ஆகும். நன்றாய் ஒழுங்கு செய்யப்பட்ட பிரசங்கத்தை ஒரு கோபுர மாளிகைக்கு ஒப்பிடலாம். அப்படியானால் படிப்பினைகள் அடியிலும் உபதேசம் உச்சியிலும் அல்ல. உதாரணங்கள் அஸ்திபாரத்திலும் சித்தாந்தங்கள் தலைப்பிலும் அல்ல. முக்கியமான உபதேசங்கள் பிரசங்கத்தின் துவக்கத்திலும் முக்கியமல்லாத போதனைகள் முடிவிலுமல்ல. பிரசங்கத்தின் பொருளும் சாரமும் கிரமம் கிரமமாய் உயர்ந்து எழும்ப வேண்டும். கேட்போரின் மனதை ஒர் சத்தியத்திலிருந்து இன்னோர் சத்தியத்திற்கு வழிநடத்தி அதனதன் பொருள் அதனதன் இடத்தில் என்கிற சூத்திரம் பிரசங்கத்திலும் அனுசரிக்கப்பட வேண்டியது. 

யாதொரு ஒழுங்கு முறையும் இலக்கும் இல்லாமல் விவரிக்கத் தொடங்கினால் எல்லாம் குழம்பிப் போகும். பிரசங்கி இந்தப் பயிற்சியை கைவிட்டால் ஒழுங்கும் ஸ்திரமுமாய் பேசும் திராணியை விரைவில் பறிகொடுப்பான். அதனால் பிரசங்கம் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவுகின்ற வெறும் வசனிப்பாய் மாறிபோகும். கடைசியாக சில காரியங்களைப் புத்திமதியாய் மட்டும் சொல்லக்கூடிய வாயாடி ஆவான். இவ்விதப் பேச்சைப் போல் சாரமற்றதாய்ப் பேசுவது வேறென்றுமில்லை. 

அ. முகவுரை
முகவுரையானது ஜனங்கள் பொருளைக் கவனித்துக் கேட்க அவர்களை ஆயத்தப்படுவத்துவதற்கு அவசியம். கேட்போரின் கவனத்தை வசப்படுத்துவதே அதன் நோக்கம் முகவுரை சுருக்கமாயிருக்க வேண்டும். 

ஆ. பிசங்கத்தில் தவிர்க்க வேண்டியது.  
பிரசங்கத்தை அநேக விஷயங்களை நிரப்புவதும் நல்லதல்ல. எல்லா சத்தியங்களையும் ஒரே பிரசங்கத்தில் அமைக்க கருத வேண்டாம்

நமக்கு இஷ்டமான சில கொள்கைகளுக்கும் ஆதாரம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடல்ல. வேத புத்தகத்தில் போதிக்கபபட்டிருக்கின்ற உபதேசம் என்னவென்று அறிந்து அவைகளையே பிரசிங்கிக்க வேண்டும். 

ஒவ்வொரு உபதேசமும் அதனதன் உண்மையுடன் காட்டப்பட வேண்டும். ஏனெனி்ல் வேதபுத்தகததின் ஒவ்வொரு பாகமும் பிரயோஜனமுள்ளது. நாம் ஒரு சில சத்தியங்களை மட்டும் பிரசங்கித்தால் போதாது. 

அதிக முக்கியமில்லாத உபதேசங்களை மிகவும் முக்கியமானவைகள் போல் பிரசங்கிப்பது பெரிய குற்றம். நமது பிரசங்கங்களுக்கெல்லாம் நடுநாயகமாய் இருக்க வேண்டிய போதனை பரத்திலிருந்து வந்த இரட்சண்ய நற்செய்தியே.

முடிவுரை
பிரசங்கப் பொருளை அவர்களுடைய நிலைமைக்குக் ஒப்பிட்டு பரிசோதிப்பதும் நற்கிரியைக்கு எழுப்பிவிடுவதும் முடிவுரையின் காரியம். ஆகையால் அது மிகுந்த உக்கத்தோடும் வாஞச்சையோடும் கூறப்பட வேண்டும். பிரசங்கத்தின் உரையெல்லாம் முடிவுரையில் ஒன்றாய்க் சுட்டிக்காண்பிக்க வேண்டும். கேட்பாரின் இருதயத்தை அரசக்கும் தருணம் இதுவே. பிரசங்கத்தினால் ஒருவனுடைய சித்தத்தை வசப்படுத்தி அவனில் நற்பலனைப் பிறப்பிக்கும் சமயம் ஒன்று உண்டு என்பது உண்மையானால் அது முடிவுரையிலேதான்.  முடிவுரை பிரசங்கத்தில் முந்திய பாகத்திலிருந்து இயல்பாய்ப் புறப்பட்டு வைராக்கிய வாஞ்சையும் அனலும் பொருந்தியதாய் இருக்க வேண்டும். 

சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் முடிவுரை இருதயத்தை வசப்படுத்தத்த்ககதும் தைரியத்தையும் நம்பிக்கையையும் பிறப்பிக்கத்தக்கதுமாய் இருப்தாக சபையாரின் நிலைமைக்கு அவசியமானது இன்னதென்று பிரங்கி நன்றாய் ஆராய்ந்து மனதில் நிர்ணயம் பண்ணிக்கொண்டபின் அதற்க வலம் இடம் சாயாமல் அவர்களுக்கு நல்லுணர்வு உண்டாக்கத்தக்க விதமாய்ப் பேச வேண்டும். 

முடிவுரை குணப்பட்டவர்களுக்கும் குணப்படாதவர்களுக்குமான இருவகுப்பினரையும் சுட்டுகிறதாய் இருக்க வேண்டுமோவென்று கேட்டால் அதுவும் பிரசங்கப் பொருளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டியது. 

வேதத்தின் முக்கிய சத்தியங்களோ கருக்கான பட்டங்களுக்குச் சமானம். ஆகையால் மனசாட்சியையும் இருதயத்தையும் அசைக்கத்தக்க சத்தியங்களை பிரதானமாய் எடுத்துப் பிரங்கிப்போமாக. நாம் கிறிஸ்துவைக் குறித்து எப்பொழுதும் பிரசங்கிக்க வேண்டுமாக! முழுச்சுவிஷேசம் அவரே!. உலகத்திற்கு அதன் இரட்சகரைக் குறித்தும், அவரிடத்திற்குப் போகும் வழியைக் குறித்தும் அறிவிப்பதே நமது தலையாயப் பணி. 



Thursday 21 July 2011

மனிதனை மாற்றும் வேதாகமம்



ஆபிரிக்க நாடொன்றில் அடர்ந்த காட்டினூடாகச் சென்று கொண்டிருந்த நாத்திகன் ஒருவன், வேதாமத்தை வாஞ்சையுடன் வாசித்துக் கொண்டிருந்த வயோதிபரொருவரைக் கண்டான். வயோதிபருடைய செயல் நாத்திகனுககு ஏளனமானதாகத் தென்பட்டமையால், “இந்த இருபதாம் நூற்றாண்டில் யாராவது வேதாகமத்தை வாசிப்பார்களா?“ என்று அவரிடம் கேட்டான். 

நாத்திகனுடைய ஏளனமான கேள்விக்குப் பதிலளித்த வயோதிபர், அருகிலிருந்த கல்லொன்றையும், பானையொன்றையும் சுட்டிக் காட்டியவாறே “ இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்திராவிட்டால், இந்தப் புத்தகத்தின் இயேசு கிறிஸ்து என்னை மாற்றியிராவிட்டால், இந்தக் கல்லினால் உன்னை அடிததுக் கொன்று இந்தப் பானையில் உன்னைப் போட்டுச் சமைத்து அருமையான ஒரு விருந்தாக்கியிருப்பேன்“ என்று கூறினான். 

வேதாகம வசனங்கள் ஜீவனும் வல்லமையும் உடையவை. (எபி. 4:12) என்பதற்கு இச்சம்பவம் சிறந்த விபரணமாய் உள்ளது. அவை நரமாமிசப் பட்சினியையும் நல்லவனாய் மாற்றியுள்ளது. வேதவசனங்கள் ஜீவனுள்ள தேவனுடைய வசனங்களாய் இருப்பதனால் (யோவான் 6:63, 2 தீமோ. 3:16) அதற்கு மனிதர்களை மாற்றக்கூடிய வல்லமை இருக்கிறது. அது பயங்கரமான பாவிகளையும் பரிசுத்தவானாக மாற்றுகிறது. 

ஜப்பான் நாட்டு சிறையில் “டெக்கிசி இஷி“ எனும் பெயருடைய கைதியொருவன் இருந்தான். பயங்கரமான குற்றவாளியான இவன் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள ஈரவிரக்கமற்ற மூர்க்கமான மனிதனாவான். 

ஒருநாள் கனடா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் டொகிசி இஷி இருந்த சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர். டொகிசி இஷி அவர்களை மூரக்க வெறியுடன் பார்த்தானே தவிர, அவர்கள் தன்னுடன் எதைப் பற்றியும் பேசுவதற்கு அவன் அனுமதிக்கவில்லை. இதனால் அப்பெண்கள் வேதாகமத்தைச் சிறைக் கூட்டுக்குள் வைத்து விட்டுச் சென்றனர். 

இரவில் டொகிசி இஷி வேதாகமத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றி அவன் வாசித்தவைகள் அவனது மனதை மாற்றியது. அடுத்த நாள் காலை சிறைக்காவலர்கள் அவனிருந்த இடத்திற்கு வந்தபோது ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். வழமையாக மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் டொகிசி இஷினுடைய முகம் அன்று புதுப் பொலிவுடனும் சாந்ததுடனும் இருந்தது. ஆம். வேதாகம வார்த்தைகள் அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. 

(நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Wednesday 20 July 2011

மனவேதனையை மாற்றிடும் மன்றாடல்


கிறிஸ்தவ வாழ்க்கையானது பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் ஊடாகச் செல்லும் ஒரு வாழ்வாக இருந்தாலும், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதலையும் மனச் சமாதானத்தையும் தருகின்றவராக இருக்கின்றார். (2 கொரி. 1:4; யோவான் 14:27). நாம் நம்முடைய உள்ளத்தின் வேதனைகளை அனைத்தையும் ஜெபத்தில் தேவனிடம் தெரிவிக்கும்போது நமக்கு மன ஆறுதலும் சமாதானமும் கிடைக்கின்றது. (பிலிப்பியர் 4:6-7)

13வது சங்கீதமானது இதனை அனுபவரீதியாக காண்பிக்கின்றது. இச்சங்கீதத்திலே மனக் கவலையுடன் இருந்த தாவீது (சங். 13:1-2) தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடுகின்றான். (சங்கீதம் 13:3-4). இது அவனுடைய உள்ளத்தில பெரியதோர் மாறுதலை ஏற்படுத்தியது. மனக்கவலையுடன் இருந்த அவன் மன ஆறுதல் அடைந்தவனாக, தேவன் தன்னை விடுவிப்பார் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் தேவனை மகிமைப்படுத்திப் பாடுகின்றான். (சங். 13:5-6) ஜெபம் மனிதனின் உள்ளத்தின் நிலையை மாற்றுகின்ற என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. 

1. தாவீதின் மனக்கவலை (சங். 13:1-2)
தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்னும் எண்ணத்தோடு தாவீது இருந்தான். தேவன் அவனை இஸ்ரவேலின் அரசனாக்குவதாக வாக்களித்திருந்தாலும், அவன் இன்னும் அரசனாக முடிசூட்டப்படவில்லை. சவுல் தாவீதைக் கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பியிருந்தான். தாவீது உயிருக்குப் பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்திருந்தான். இதனால், தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்னும் எண்ணம் தாவீதுக்கு ஏற்பட்டது. 

13.:1 “முகத்தை மறைத்தல்“ என்பது தேவனால் கைவிடப்பட்டதையும் தேவனுடைய சாபத்திற்குட்படுவதையும் குறிப்பிடுகின்றது. (சங்கீதம் 30:7; 44:24 ; 88:14) முகத்தைப் பிரகாசிக்கச் செய்வது ஆசீர்வாதத்தை எடுத்துக் காட்டுகின்றது. (எண். 6:25-26; சங்கீதம் 4:6; 31:16; 67:1,2; 80:3,7,19) தேவன் வாக்களித்த பாதுகாப்பு, கிருபை, சமாதானம் என்னும் ஆசீர்வாதங்கள் (எண். 6:25-26) எங்கே என்று தாவீது அங்கலாய்ப்பவராக இருந்தான்.  

தேவன் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய எதிரியின் கைகள் ஓங்கும்படி செய்வதினால் அவர் தன்னைக் கைவிட்டு விட்டார் என்றே தாவீது எண்ணினான். தான் நன்மை செய்தும் தேவன் தன் பக்கம் இராமல், தீமை தன்னுடைய எதிரியின் பக்கம் இருப்பதாக அவன் நினைத்தான். இத்தகைய நிலைமை எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பதே தாவீதின் கேள்வியாக இருந்தது. நெருக்கடியான சூழலில் இருந்து நாம் ஜெபித்தும் தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்காவிட்டால் அவர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். மனிதர்கள் நம்மைக் கைவிட்டு நாம் தனிமைப்படும்போதும், இத்தகைய உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. தேவன் தன்னை உதாசீனப்படுத்துவாகவும், அவர் தன்னை நிரந்தரமாக கைவிட்டுவிட்டார் என்றும் தாவீது நினைத்தார்.

13:2 தனிமைப்பட்ட நிலைமையில், எவ்வளவு காலத்திற்கு சவுலின் கைக்கு எப்படி தப்பலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டிருப்பது என்று கேட்கிறான். எதிரியை சமாளிப்பதற்குத் தாவீது பல்வேறு விதமான திட்டங்களைத் தீட்ட வேண்டியவனாக இருந்தான். எவ்வளவு காலத்திற்கு் தன் எதிரி தன்னை இவ்வாறு துரத்திக் கொண்ருப்பான் என்று தாவீது விரக்தியடைந்தான். 

தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்று தாவீது உணர்ந்ததற்கோ அவன் உயிருக்குப் பயந்து ஓடிப்போக வேண்டியிருந்ததற்கோ பாவம் காரணமாக இருக்கவில்லை. இச்சங்கீதத்தில், பாவத்தைப் பற்றியோ மனந்திரும்புதலைப் பற்றியோ எவ்வித குறிப்பும் இல்லை. மேலும் தேவன் தாவீதைக் கைவிடவில்லை. (எபி. 13:5, மத். 28:20; ஏசா. 43:2) தாவீதே தன்னுடைய நெருக்கடியான சூழ்நிலையில் இத்தகைய உணர்வுடன் இருந்தான். 

2. தாவீதின் மன்றாடல் (சங். 13:3,4) 
சவுலினுடைய மனிதர் எப்படியும் தன்னைக் கொன்று விடுவார்கள் என்னும் எண்ணத்துடன் இருந்த தாவீது (1 சாமு 27:1) தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினான். ஆபத்தான சூழ்நிலைகளில் ஆண்டவரை நேக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை என்பதை தாவீது அறிந்திருந்தமையால் அவன் மனித உதவியை நாடாமல், தன் உயிரைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினான். 

13:3 தேவன் தன்னைப் பார்க்காமல் தம்முடைய முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருப்பதாக எண்ணிய தாவீது (13:1) தன்னை நோக்கிப் பார்க்கும்படி தேவனிடம் மன்றாடுகின்றான். 

“எனக்குச் செவிகொடுத்தருளும்“ என்னும் கோரிக்கை, முதலிரு வசனங்களிலும் அதாவது “எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்திருப்பீர்?“ என்னும் கேள்விக்கு பதிலளிக்கும்படியான விண்ணப்பமாக உள்ளது. 

“கண்களைத் தெளிவாக்கும்“ துயரம் காரணமாக எதைப் பற்றியும் தெளிவாகப் பார்க்கவும் சிந்திக்கவும் முடியாதவனாக தாவீது இருந்தான். சரீரம் பலவீனப்படும்போது கண்கள் மங்குவதாகவும், சரீரம் பலமும் புத்துணர்ச்சியும் அடையும்போது கண்கள் தெளிவடைவதாகவும் கூறுவது எபிரேய மரபு. (1 சாமுவேல் 14:27,29); எஸ்றா 9:8) தாவீது சரீரப்பிரகாரமாக பலவீனமாகவும், வியாதிப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

13:4 - தன்னுடைய மரணம் தன் எதிரிக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதனால், அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது என்னும் எண்ணத்தில் தாவீது தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடினான். (சங்கீதம் 35:19-21; 38:16-17). இது சுயநலமான கோரிக்கை அல்ல. தேவனுடைய கனத்தைக் கருத்திற் கொண்டு ஏறெடுக்கப்பட்ட ஜெபமாகும். தேவனை நம்பி வாழும் மனிதனுக்கு ஏற்படும் தோல்வியை தேவநாமத்திற்கு ஏற்படும் கனவீனமாகத் தாவீது எண்ணினான். மோசேயும் இதே விதமாக ஜெபித்துள்ளார். (எண். 14:15-16)

3. தாவீதின் மனமகிழ்ச்சி (சங். 13:5-6) 
தன்னுடைய நிலைமையைத் தேவனிடம் தெரிவித்து தனனைக் காப்பாற்றும்படி ஜெபித்த தாவீது, அதுவரை காலமும் இருந்த மனக்குழப்பம் நீங்கியவனாக நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைந்தான். நம்முடைய மனப்பாரத்தை, பிரச்சினையைத் தேவனிடம் தெரிவிக்கும்போது, தேவன் நமக்கு மனஆறுதலையும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறவராக இருக்கின்றார். தேவன் தாவீதின் சூழ்நிலையை அல்ல, தாவீதின் உள்ளத்தின் நிலையை மாற்றினார். 

13:5 - கிருபை என்பது மூலமொழியில் அன்பு என்றே உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவன் தன்னை நேசிக்கிறார் என்பதைத் தாவீது அறிந்திருந்தான். தேவன் தன்னை நேசிப்பதனால் அவர் தன்னை நிச்சயம் சவுலின் மனிதர்களிடமிருந்து விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆரம்பத்தில் தேவன் தன்னை கைவிட்டுவிட்டார் என்று புலம்பிய அவன், தன்னுடைய மனக்குமறலைத் தேவனிடம் தெரிவித்த பின்னர் அவர் தன்னை நேசிக்கிறார்; தன்னை விடுவிப்பார் என்பதை அறிந்துகொண்டான். 
தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான். 4:8) தேவன் பவுலை நேசித்ததுபோல (ரோமர் 8:36-39) நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவன் தன்னைக் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடுகிறான். தேவன் செய்தவைகளை நினைவுகூருவது தேவன் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். 

ஆகவே தமது நிலைமையை் தேவனிடம் தெரிவிப்போம்!. அவரால் மட்டுமே நம்முடைய நெருக்கடியான சூழ்நிலைகளை மாற்ற முடியும் அந்த விசுவாசத்தோடு நாம் ஜெபங்களை ஏறெடுப்போமாக. 

(நன்றி சத்தியவசனம் - ஜூலை-ஆகஸ்ட் 2010 கட்டுரை ஆசிரியர் - எம்.எஸ். வசந்தகுமார்)

Monday 18 July 2011

தவறான உபதேசங்கள் - சரியான சிந்தனைகள்

இந்த அதிகாரம் நான் உங்களுக்கு அளிக்கும் ஒரு தனிப்பட்ட செய்தியாகும். மூன்று வகையான மக்களுக்காக இந்த செய்தி அளிக்கப்படுகின்றது.

1. தவறான வழிபாட்டு குழுக்கள் அல்லது தவறான கொள்கைக் கூட்டங்களின் அங்கத்தினர்களால் போதிக்கப்பட்டு, அவர்களது நிர்பந்தத்தினாலே ஏறக்குறைய அவர்களது போதனைகளைப் பின்பற்றத் தீர்மானித்து விட்டவர்கள். 

2. இப்படிப்பட்ட தவறான வழிபாட்டுக் குழுக்களின் வலையில் ஏற்கனவே சிக்கி, இப்பொழுது தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டோம். வஞ்சிக்கப்பட்டுப் போனோம் என்ற உணர்விற்கு வர ஆரம்பித்திருப்பவர்கள். 

3. இவ்விதமான தவறான வழிபாட்டுக் குழுக்களில் சிக்கிக் கொண்டவர்களை நண்பர்களாகவோ உறவினர்களாகவோ உடையவர்களாயிருந்து எப்படியாவது அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிக்க வழிவகைகளைத் தேடுபவர்கள். 

இவ்விதமான போலியான கொள்கைக்காரரின் கூட்டங்களுக்குள் நாம் கவர்ந்திழுக்கப்படுவதற்குச் சில காரணங்கள் உண்டு. இது எப்படி நடைபெறுகிறது. வேதத்தின் சத்தியத்தை ஒருகாலத்தில் அறிந்து, விசுவாசித்த பிறகும் நாம் இவ்விதமான விசுவாச பேதங்களில் சிக்கி கொள்வது எப்படி? இதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்

1. திருப்பதியற்ற திருச்சபை வாழ்க்கை 
நீங்கள் அங்கம் வகிக்கும் திருச்சபை ஒருவேளை வேதத்தின் கோட்பாடுகளின்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் குளிர்ந்து உயிரற்றதாக காணப்படலாம். ஆராதனைகள் ஏதோ கடன்முறைக்காகச் செய்யப்படுவது போல் நடத்தப்படலாம். திருச்சபையின் செயற்பாடுகளில் ஈடுபட உங்களுக்கு எவ்விதத் தருணமும் அளிக்கப்படாமல் இருக்கலாம். ஆவிக்குரிய ஆகாரத்திற்காக தேவனுடைய வார்த்தைக்காக நீங்கள் ஏங்குகிறீர்கள். - ஆனால் உங்களுக்கு கிடைப்பதோ வெறும் தவிடுதான். அல்லது ஒருவேளை உங்கள் போதகர் நவீன இறையியல் கொள்கைகளில் நாட்டமுள்ளவராயிருந்து, வேதம் தேவனால் கொடுக்கப்பட்ட அவருடைய வார்த்தை என்பதை மறுத்து, தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்குப் பதிலாக தமது சுயஉரைகளை நிகழ்த்துபவராக இருக்கலாம். நாளடைவில் இதெல்லாம் உங்களுக்குச் “சலித்துப் போகிறது“ ஆலயத்திற்குப் போவதால் ஒரு பயனுமில்லை என்ற முடிவுக்கு வருகிறீர்கள். இந்த மாதிரி வேளைகளில் தான் யாரை வஞ்சிக்கலாம் என்று வகை தேடிச் சுற்றித்திரிகிற தவறான கொள்கைக்காரர்களுக்கு வளமான நிலமாகி. வசமாக மாட்டிக் கொள்கிறீர்கள். 

2. சுயம் 
ஒருவேளை திருச்சபையெல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது. ஆனால் உங்களுக்குள் தான் பிரச்சினை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஐக்கியத்திற்குள் கட்டுப்பாட்டு்டன் கீழ்பபடிந்து இருக்க விரும்பாமல் உங்களது ஒப்புக்கொடுக்கப்படாத சுயம் உங்களை ஆட்டிப் படைக்கலாம். அதேவேளையில், தவறான கொள்கை அல்லது வழிபாட்டுக் கூட்டத்தினருடன் நீங்கள் ஈடுபடுகையில் சாத்தான் (மறைமுகமாகத்தான்) அந்தச் சிறிய கூட்டத்தில் உங்களுக்குப் பேரும் புகழும் கொண்டு வரலாம். - நீங்கள் நாடுவதும் அந்தப் பேழையும் புகழையும் தானே!

3. ஆரோக்கியற்ற நாட்டம். 
வேதம் வெளிப்படுத்துகின்ற சத்தியத்தின் அதிகாரத்திற்குக் கீழ்படிய மறுக்கும் மனப்பான்மையோடு கூட, இதுவரையும் யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத புதிய புதிய கருத்துக்களையும் போதனைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்வமும் சேர்ந்து கொள்ளக் கூடும். இது தவறான ஆரோக்கியமற்ற நாட்டமாகும். கூடவே பெருமையின் ஆவியின் விளைவுமாகும். இது சகல விதமான போலிக் கொள்கைகளுக்கும் தன்னைத் திறந்து கொடுப்பதாகும். ஒருவேளை நீங்கள் இன்று இருக்கும் இந்தக் குழப்பமான நிலைக்குக் காரணமே இப்படிப்பட்ட நாட்டமாக இருக்கலாம். 

4. சந்திக்கப்படாத ஆவிக்குரிய தேவை
சில வேளைகளில் நமக்கு ஆழமான ஓர் ஆவிக்குரிய தேவை இருக்கலாம். அதை நாம் ஒத்துக்கொள்ளாதபடி தேவன் ஏற்படுத்தி வைத்துள்ள விசுவாசம் மற்றும் கீழ்படிதலின் பாதையில் அதை ஆண்டவரிடம் எடுத்துச் செல்லாதபடி இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரமிக்கப் பண்ணும் அனுபவங்கள் எனும் குறுக்குப் பாதைகள் ஏதும் அகப்படாதா என்று நாடித் தேடலாம். இது சாத்தானை மூலகர்த்தாவாகக் கொண்ட வேதத்திற்குப் புறம்பான அனுவங்களுக்கு நேராக தம்மை நடத்தி விடக்கூடும். நீங்கள் இவ்விதமான சூழலில் இப்பொழுது இருப்பீர்களென்றால், இயேசு “நீங்கள் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்“ என்று கூறினாரே. அந்த விடுதலை உங்களுக்கு அவசியம். 

5. பகுத்தறியப்படாத பாதிப்பு
ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் பற்றிக் கவலையேபடாத ஒருவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பெரிதும் பாராட்டும் பெரிதும் மதிக்கும் ஏதோ ஒரு தனிநபர் இந்தத் தவறான கொள்கைக்காரர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பதனாலே, அவர் உங்களையும் அதே வழியில் நடத்த நீங்கள் அனுமதித்திருக்கலாம் அவரால் கவரப்பட்டு, என்ன செய்கிறோம் இதன் விளைவுகள் என்னவென்றெல்லாம் நிதானித்து அறியாதபடி அவர் பின்னே சென்றுவிட்டு காலங்கடந்த பின்னர் நொந்து கொண்டிருக்கிறீர்கள்.

.இன்றைய உங்களது ஆவிக்குரிய குழப்பத்திற்கு மேற்கூறியவற்றில் எது காரணமாயிருந்தாலும் சரி, நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூற விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இதிலிருந்து நீங்கள் வெளிவர வழி உண்டு! இயேசு சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று சொன்னார். அவரை நீங்கள் உங்கள் முழு மனதோடும் தேடும்போது அவர் உங்களை நிச்சயமாகவே விடுவிக்க முடியும்.! விடுவிக்கவும் செய்வார். சாத்தானுடைய வஞ்சகத்தின் நிமிததினின்றும் உங்கள் வாழ்க்கையின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கத்தினின்றும் விடுபட்டு, ஆவிக்குரிய விடுதலையைப் பெறவும், அந்த வெற்றியைக் காத்துக் கொள்ளவு்ம் உதவும் சில எளிய வழிமுறைகளை இதோ தருகிறேன். ஒவ்வொன்றையும் படிக்க படிக்க அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேதாகமக் குறிப்பை எடுத்து வசனத்தை வாசித்து, அந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடி ஜெபியுங்கள். 

1. உங்களுடைய குழப்பத்தையும் ஆவிக்குரிய தேவையையும் ஒப்புக் கொள்ளுங்கள். (1 யோவான். 1:7)

2.கள்ளத் தீர்க்கத்தரிசிசளையும் அவர்களுடைய போதனைகளையும் உதறித் தள்ளி விடுங்கள்

3. உங்கள் கைவசமுள்ள எல்லா விசுவாச பேதங்கள் சம்பந்தமான இலக்கியங்களையும் எரித்து விடுங்கள். (அப். 19:17-20)

4. தேவனுடைய மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் நாடுங்கள் (1 யோவான் 1:9)

5. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் வழி நடத்தலுக்கும் உங்களை ஒப்புக் கொடுங்கள்

6. உங்களுடைய சுயகௌரவம், உங்கள் தனிப்பட்ட வாழ்வின் பேராசை இவற்றை ஆணடவருக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படுத்துங்கள். (கலா. 2:20)

7. உண்மை விசுவாசிகளுடன் ஐக்கியம் கொ்ண்டு வாழுங்கள். அவர்களோடு சேர்ந்து தேவனுடைய வசனத்தைப் படியுங்கள். (எபே. 3:14-21)

8. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் அவன் மீண்டும் உங்கள் மேல் ஆளுகை செலுத்த வழிதேடுவான்.  (யாக்கோபு 4:7)

9. ஆலய ஆராதனைகளில் ஒழுங்காக பங்கு பெறுங்கள். (எபி. 10:25)

10. கற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடனும் ஜெபத்துடனும் அனுதினமும் வேதத்தை படியுங்கள். அதன் முழுப் போதனையையும் கருத்திற் கொண்டு வசனத்தை வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனத்தை எடுத்துப் புரட்டாதபடி நமது “சொந்தக் கருத்துக்களை“ வசனங்களுக்குள் புகுத்தி வாசிக்காதபடி மனத் தாழ்மையுடன் படியுங்கள். மற்றவர்களை விட நான் மேலானவன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய கருத்துக்களை நடாதிருங்கள். “தேவனுக்கு முன்பாக உத்தமானக் காணப்பட வேண்டும் என்பதென்றே வேதத்தைப் படிக்கையில் உங்கள் முழு நோக்கமாக இருக்கட்டும். 

(இவ்வாக்கமானது கலாநிதி தியோட்டர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதிய கொள்கைக் குழப்பங்கள் – கடைசிகால அடையாளங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – திருமறைப் போதனை ஊழியங்கள்)



Friday 15 July 2011

பாவத்துக்கு மட்டுமே பயப்பட்டவர்


ஆதிச்சபைப் பிதாக்களில் ஒருவரான ஜோன் கிறிஸ்சொஸ்தம் (கி.பி. 349-407) ஆரம்பத்தில் அந்தியோக்கிய சபையின் குருவானவரா கவும், பின்னர் கொன்ஸ்டன்டிநோபிள் சபையின் பிஷப்பாகவும் பணியாற்றிய பிரபலமான பிரசங்கியாவார். இவரது இறைப்பணி காரணமாக கிரேக்க கிறிஸ்தவவர்களின் வளரச்சி அதிகரி்த்து வந்த காலத்தில், இவரை ரோம அரசு கைது செய்தது. 

 ஜோன் கிறிஸ்சொஸ்தமுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற அரசன் ஆலோசகரிகளிடம் கேட்டபோது அவர்கள் “அவன் பாவத்திற்கு மட்டுமே பயப்படுவான். எனவே அவனை பாவம் செய்ய வையும்“ என்ற கூறினார்கள். 

ஆரம்பத்தில் அரசன் ஜோன் கிறிஸ்சொஸ்தமை இருட்டறை ஒன்றில் சிறைவைக்கவே தீர்மானித்தான். ஆனால் அவனது ஆலோசகர்களோ “அங்கு அவன் சந்தோஷமாகவே இருப்பான். ஏனென்றால் அவன் இருட்டறையின் தனிமையில் தேவனுடைய இரக்கங்களை தியானிப்பவனாக இருப்பான்“ என்றனர். 

 ஜோன் கிறிஸ்சொஸ்ம்மை சிறையிலிடுவது அர்த்தமற்றது என்பதை அறிந்து கொண்ட அரசன் “அப்படியானால் அவனக்கு மரண தண்டனை கொடுப்போம்“ என்றான். ஆனால் அவனது ஆலோசகர்களோ “மரணமும் அவனுக்கு சந்தோஷமாகவே இருக்கும். ஏனென்றால் மரணத்தின் பின, நான் கர்த்தரோடு இருப்பேன் என்று அவன் கூறியுள்ளான்“ எனத் தெரிவித்தனர். 

சிறைத்தண்டனையும் மரணதண்டனையும் ஜோன் கிறிஸ்சொஸ்தமுக்கு வேதனையளிப்பவையல்ல என்பதை அறிந்து கொண்ட ரோம அரசன் “அப்படியானால் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.” என்று கேட்டபோதே அவனது ஆலோசகர்கள் “அவனைப் பாவம் செய்ய வையும். ஏனென்றால் பாவத்திற்கு மட்டுமே பயப்படுவான். எனவே, அவனுக்கு வேதனை ஏற்படுத்த அதுவே சிறந்த வழி“ எனக் கூறினர். 

 ஜோன் கிறிஸ்சொஸ்தம்மை பற்றி அரசனின் ஆலோசகர்கள் அறிந்திருந்த விடயங்கள் அவரது பரிசுத்த வாழ்வுக்கான பகிரங்க சாட்சியாகவே உள்ளன. அவர் பாவம் செய்வதற்கு மட்டுமே பயப்படுவார். அவரைப் பாவம் செய்ய வைத்தால் மட்டுமே அவருக்கு வேதனையை ஏற்படுத்தலாம் என அவர்கள் கூறியதிலிருந்து. அவர் பாவத்தைப் பற்றி எத்தகைய உணர்வுடையவராய் இருந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது. இதைப்போலவே கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் பாவத்திற்கு மட்டும் பயப்படுபவர்களாக இருக்க வேண்டியது அவசியம். 

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Wednesday 13 July 2011

பாவி என்னும் கண்டுபிடிப்பு


நவீன மருத்துவத்தின் தந்தையாகப் புகழப்படும் சேர். ஜேம்ஸ் சிம்சன் என்பார் 1847ம் ஆண்டு, அறுவைச் சிகிச்சையின் போது நோயாளிக்கு வேதனையுணர்வு ஏற்படாதிருக்கும் “குளொஃரோபோம்“ எனும் மருந்தைக் கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவத்துறையின் வளர்ச்சியில் பெரும் திருப்புமுனையாக உள்ளது. 

குளொஃரோபோம் மருந்தைதக் கண்டுபிடித்த சில வருடங்களின் பின்னர் சேர். ஜேம்ஸ் சிம்சன், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் அவரிடம், “உங்களுடைய கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் பெறுமதியானதாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? என்று கேட்டான். 

சேர். ஜேம்ஸ் சிம்சன் அக்கேள்விக்கு குளோரோஃபோர்ம் என்றே பதிலளிப்பார் என்ற எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அவர் 'நான் பாவி என்பதையும், இயேசுக்கிறிஸ்து என்னுடைய இரட்சகர் என்பதையும் நான் கண்டுபிடித்ததையே என்னுடைய கண்டுபிடிப்புகளில் அனைத்திலும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்“ என்றார்

கணிதமேதையும் அண்டவெளி ஆராய்ச்சிளாளரும் பிரபல விஞ்ஞானியுமான கொப்பர்நிக்கஸ் என்பார் மரிக்கும் தருவாயில், தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக அல்ல, மாறாக இரட்சகரின் உதவி தேவைப்படும் ஒரு பாவியாகவே கண்டார். அவருடைய அறிவுத்தலின்படி அவரது கல்லறையில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது. “பவுலுக்கு காட்டப்பட்டது போன்ற இரக்கம் எனக்கு காட்டப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல், பேதுருவிற்குக் கிடைத்தது போன்ற ஒரு கிருபை எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. ஆனால் நீர் அந்தக் கள்ளனுக்கு கொடுத்த மன்னிப்பை எனக்கும் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்“

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் மேதைகளும் கூட தாங்கள் பாவிகள் என்பதையும் தம்மை இரட்சிப்பவர் இயேசுக்கிறிஸ்து என்பதையும் உணர்ந்துள்ளனர். இத்தகைய உணர்வு மனிதர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் அப்போது அவர்கள் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பையும் பரலோக வாழ்வின் மகிமையையும் பெற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் பாவிகளாக உள்ளனர். (ரோமர் 3:23) அவர்களை இரட்சிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (1 தீமோ. 1:15) உண்மையில், நாமும் கண்டுபிடிக்க வேண்டிய உண்மையாக இது உள்ளது. 

(நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Monday 11 July 2011

துர்உபதேசங்களின் தன்மைகள் பகுதி 2

பகுதி 1 வாசிக்க இங்கு அழுத்துங்கள்


9.  மூலஉபதேசங்களை மாற்றுதல்
வேதாகமம் கூறியுள்ள உபதேசங்கள் அடிக்கடி மாறக்கூடிய உபதேசங்கள் அல்ல. அது என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரே தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் துர்உபதேசக் கூட்டத்தோரோ தங்கள் செய்திகளையும் வியாக்கியானங்களையும்,  உபதேசங்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் எவரும் மக்களை ஒரே நோக்கத்தற்காக வழி நடத்துவது கிடையாது மறுவாழ்க்கையின் நிச்சியம் இவர்கள் எல்லாரிடத்திலும் ஒரே விதமாக இல்லை. இவர்கள் ஒரு வெளிப்பாட்டிலிருந்து இன்னொரு வெளிப்பாட்டிற்கு அடிக்கடி தாவும வழக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். 

யெகோவா சாட்சிகள் கூடடத்தார் ஆண்டவர் இயேசுவின் பகிரங்க வருகை 1874 இல் இருக்குமென அறிவித்தார்கள். அறிவித்தபடி நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன் இக்கூட்டாத்தார் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இப்பொழுதோ அதை நிறுத்திவிட்டார்கள். முன்பெல்லாம் இக்கூட்டத்தாருக்கு பரலோகம் செல்லும் நம்பிக்கையிருந்தது. இப்பொழுதோ 1,44,000 பேர் மட்டுமே கிறிஸ்துவோடு செல்லுவார்கள் என்று கூறுகின்றனர். 

ஒரே கொள்கையும் ஒரே உபதேசமும் இப்படிப்பட்ட கூட்டத்தைச் சார்ந்த எவருக்கும் இல்லை. தலைவர்கள் மாறும்போது போதனைகளும் இவர்கள் காலத்திற்கேற்றவாறு தங்களையும் தங்கள் கொள்கைகளையும் மாற்றிக் கொளளக் கூடியவர்களாயிருக்கின்றனர். 

மோர்மன் சபையாரும் வெகு சாதாரணமாய் தங்கள் செய்தியை மாற்றிக் கொள்ளுகிறவர்கள். ஒரு செய்தியை அறிவிப்பார்கள். சில நாட்களுக்குப் பின் தாங்கள் அறிவித்தவைகளேயே மாற்றிக் கூறுவார்கள். அல்லது கைவிடுவார்கள். ஆகவே இவர்களும் இவர்களைப் பின்பற்றுவோரும் நிகழ்காலத்து விசுவாசமோ எதிர்காலத்து நம்பிக்கையோ இல்லாமல் காற்றில் அடிப்பட்டு அலையும் மேகம் போல் புறப்பட்ட இடம் தெரியாமலும் போய்ச் சேரும் இடம் அறியாமலும் இருக்கின்றனர். 

10. வலுவான தலைமைத்துவம்
துர்உபதேசக் இயக்கங்களின் ஸ்தாபகர்களும் அதனை முன்னின்று நடத்தும் தலைவர்களும் தங்களைப் பிரசித்தி பெற்ற தேவனுடைய அறிவிப்பார்களென்றும் தேவனுக்கும் மனிதருக்குமிடையே தோன்றிய அவதாரமென்றும் மக்களை நம்பவைக்கின்றனர். இவர்கள் தேவனுக்கு விசேஷித்தவர்களாகவும் தேவ வெளிப்பாடு பெற்றவர்களாகவும் இம்மக்களால் கருதப்படுகின்றனர். இவ்வியக்க தலைவர்கள் பல்வேறு திறமைகளில் கைத்தேர்ந்தவர்கள். 

இந்தத் தலைவர்கள் கூறும் அனைத்தையும் அவர்களுக்குக் கீழிருக்கும் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்.இவர்களில் சிலர் தங்களையே மேசியாகவும் வெளிக்காட்டிக் கொள்வதால் வசதிபடைத்த மக்களும் இவர்களைப் பின்தொடர முன்வருகிறார்கள். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church), அகில உலக வழி (The way Intrnational) உலகளாவிய தேவசபை (World Wide Church of God) போன்ற இயக்கங்களின் தலைவர்கள் இதற்கு உதாரணம். 

தலைவர்கள் தங்களின் வழி நடப்போருக்கு தங்களின் நம்பிக்கைகளையும் தங்களின் உபதேசங்களையும் வியாக்கியானங்களையும் சொல்லி அவர்களை அதன்படி நடக்க வைக்கிறார்கள். வேதத்தை தங்களுக்கேற்றற்போல படித்து அதற்கு சுயமாக விளக்கங்களையும் எழுதுகின்றனர். ஒருவேளை தங்கள் தலைவர் ஏதோ ஒன்றில் தவறிப் போய் விட்டாரானால் அதற்கும ஒரு நல்ல காரணம் காட்டி தலைவரின் தவறுகளை மூடி மறைத்து விடுகிறார்கள். 

இவ்விதத் தலைவர்களின் வீட்டிலும் அலுவலகங்களிலும் நடக்கும் காரியங்கள் வெளிஉலகிற்குத் தெரிவதில்லை. மிகப்பெரிய திடங்களெல்லாம் இரகசியமாகவே நடக்கும். இவர்களில் சிலர் அடிக்கடி தாங்கள் கூடும் இடங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை சுலபமாக இவர்கள் தங்கள் இரகசியங்களை வெளியிடுவதில்லை. இரகசிய திட்டங்களுக்குப் பின்னே அக்கூட்டத்தின் பணியாளர்கள் செயல்படுகிறார்கள். கடவுளின் பிள்ளைகள் (Childern of God) இயக்கம் இதற்கு ஓர் உதாரணம்


11. கிரியையினால் இரட்சிப்பு
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்கிறது தேவனுடைய வார்த்தை. ஆனால் எல்லா துர்உபதேசக் கூட்டங்களுமே இந்த வசனத்தை மறைத்து இவ்வசனத்தோடு ஏதாவது கூட்டியோ குறைத்தோ தவறுதலாகப் போதித்து வருகின்றன. 

“கிருபையினால் இரட்சிப்பு“ என்ற சத்தியத்தை இவர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை. கிரியைகள் செய்வதே இரட்சிப்பு யாரையாவது பின்பற்றுதலே இரட்சிப்பு. ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே இரட்சிப்பு. சுவிசேஷத்திற்கும் நியாயப்பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவதே இரட்சிப்பு என்றெல்லாம் சத்தியத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். 

ஹெர்பட் W. ஆம்ஸ்ராங் (Founder of the World Wide Church of God) என்பவர் “இரட்சிப்பு என்பது ஒரு தொடர் செயல்முறை. ஆனால் எந்தச் செயலும் செய்யாமல் இயேசுவை மட்டுமே ஏற்றுக் கொண்டால் போதுமானதொன்று இந்த உலகத்தின் தேவனானவன் உங்களையெல்லாம் வஞ்சித்து உங்கள் கண்களைக் குருடாக்கப் பார்க்கிறான். ... ஆனால் இதுவரை யாருமே இரட்சிக்கப்படவில்லையென்று வேதம் சொல்லுகிறது.” என்று தன் உபதேசத்தில் கூறுகிறார் (Herbert W. Armstrong, Why were you Born? p.11)

இரட்சிப்பு எதற்காகவென்றால் சரியான மனித வாழ்க்கை வாழவும் உரிமையோடும் செழிப்போடும் இந்த பூமியில் வாழ்வதற்காகவுமே.... உண்மையான, சரியான மதிப்புள்ள மனித வாழ்க்கை இப்போதும் இப்பூமியில் நமக்கு காத்திருக்கின்றது. என்று யெகோவா சாட்சிகள் கூட்டத்தார் கூறுகின்றனர். (Let God be True, 1952, p 114-116)

இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால், விசுவாசத்தால் மட்டுமே இரட்சிப்பு வருகின்றதென்பதை மறுக்கின்ற எவருமே இரட்சிக்கப்படாதவர் என்பதே பொருள். இரட்சிக்கப்படாதவர் எவருமே நரகம் செல்வர் என்பதே வேத போதனை. இயேசுவை மறுப்போர் அவரின் இரட்சிப்பை மறுப்போர். பரலோகத்தை இழப்பர் என்பது உறுதி. 

12. கள்ளத் தீர்க்கதரிசனம். 
கள்ள உபதேச இயக்கங்களில் அதிகப்படியாக இடம் பெறுவது பொய் தீர்க்கதரிசனமே . இந்த இயக்கங்களின் தலைவர்கள் தங்களை தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாகவும் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றவர்களாகவும் சொல்லிக் கொள்கின்றனர். இவர்கள் உலகத்தில் நடக்கப் போகின்ற காரியங்களை முன்னறிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் முன்னறிவிக்கின்ற ஒன்றும் நடந்ததாகவே தெரியவில்லை. எந்த ஒரு தீர்க்கதரிசனமும் சொல்லியபடியே நடக்கவில்லையேல் அது பொய்த் தீர்க்கதரிசனம் தானே?

Charles T. Russell என்பவர் யெகோவா சாட்சிகள் கூட்டத்தின் ஸ்தாபகரும் முதல் தலைவருமாவார். இவர் தன்னை தேவனுடைய தீர்க்கதரிசயாக அழைத்துக் கொண்டார். அவரை தேவவெளிப்பாடு பெற்ற தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவர் பின்னால் சென்றனர். சார்ல்ஸ் ரசல் 1914 ம் ஆண்டு உலகம் முடிந்து விடும் என்று முன்னறிவித்தார். ஆனால் சொன்னவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. உலகமோ அப்படியே இருக்கிறது. 

இப்படி அவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் நி்றைவேறுவதில்லை. இயேசுவின் இரண்டாம் வருகையை நாள், மாதம், வருடத்தோடு உரைத்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. உலகத்தின் முடிவையும் கூறுகிறார்கள். அப்படியும் நடப்பதில்லை. காரணம் இவர்கள் தங்கள் சொந்த ஏவுதலினால் வேதத்திற்குப் புறம்மாக தீரக்கதரிசனம் உரைத்தவர்கள். இவர்கள் கூறுவது நடவாதபடியால் இவர்களைக் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்றே அழைக்க வேண்டியிருக்கிறது. 

13. வளமான பொருளாதாரம்
எந்த ஒரு துர்உபதேசக் கூட்டத்திற்கும் பணம் ஒரு பிரச்சினை அல்ல. போதுமான அல்லது தேவைக்கு மிஞ்சிய பணம் அவர்களுக்கிருக்கிறது. இவர்கள் பணத்தை வைத்து ஜனத்தைப் பிடிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த இயக்கங்கள் தங்கள் அங்கத்தினர்களை பணம் கொடுக்கும்படி கேட்பதால் எல்லோரும் தாராளமாக கொடுக்கின்றனர். தங்களுடைய சேமிப்புகளையும் வீடுகளையும் சொத்துக்களையும் இயக்கத்திற்கும் கொடுப்பதற்கும் அங்கத்தினர்கள் உள்ளனர். 

இயக்கத்திற்குப் பணத்தையும் பொருளையும் கொடுப்பவர்கள் தேவனுடைய ஊழியத்திற்காக கொடுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இயக்கங்களின் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் நல்ல வசதியான சுபகோ வாழ்க்கையே வாழ்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வீடும், வாகனமும், இதரச் செலவுகளுக்குப் பணமும் கொடுக்கப்படுகின்றது. சிலருக்கு உணவு, உடை, உறைவிடம் கூட இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது. 

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கின்றது. போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகந்த ஆதாயம் என்ற வேதம் சொல்கிற. ஆனால் .இவ்வித இயக்கங்களுக்குப் பண ஆசையும் பொருளாசையும், சுகபோகப்பிரியமும், வீண்ஆடம்பரமும் அதிகம். இந்தப் பூலோக வாழ்வை சிற்றின்பத்துடன் மற்ற உலக இன்பத்தோடும் அனுபவிக்கப் பணம் இவர்களுக்கு உதவுகின்றது. பலர் பணத்தின் மேல் ஆசை வைத்து பல இன்பங்களையும் வசதிகளையும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இவ்வியக்கங்களுடன் இணைகின்றனர். பணமில்லா ஏழைகளும் பணத்திற்காக இவ்வியக்கங்களில் சிக்கிவிடுவது பரிதாபத்திற்குரியது. 

இவ்வித துர்உபதேசக் கூட்டத்தாரின் சொல்லும் செயலும் விசுவாச வாழ்விற்கு முரண்பாடாகவே இருக்கின்றன. இவர்கள் கூறும் புது சத்தியம் தவறான வியாக்கியானம் ஆகியவை ஆத்துமாக்களை பாதிக்கின்றது.

நல்ல ஆவிக்குரிய திருச்சபைகளை இவர்கள் புறக்கணிப்பதால் தவறான கோட்பாட்டிற்கும் போதனைக்கும் தங்கள் மக்களை வழிநடத்தி செல்கின்றனர். பாவத்தையும் பணத்தையும் சார்ந்து கொள்வதால் விசுவாசத்தை அப்பியாசிக்க முடியாது வாழ்கின்றனர். இவர்களின் கனிகளைக் கொண்டே இவர்களின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம். 

Thursday 7 July 2011

துர்உபதேசங்களின் தன்மைகள்


தேவசத்தியத்தை தலைகீழாக மாற்றும் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.  அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மற்ற உலக நாடுகளிலிருந்தும் வேகமாய் பரவிவரும் துர்வசனக் கூட்டங்களை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ளாது போனால் ஆபத்து பயங்கரமாக இருக்கும். இக்கடைசி நாட்களில் சபை மக்கள் தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு விழிப்பாயிருப்பது திருச்சபைக்கு மிக நல்லது. 

துர்உபதேச இயக்கங்கள் மத அடிப்படை இயக்கங்கள். அதிலும் கிறிஸ்தவர்களோ சம்பந்தப்பட்டு வேதத்திற்கும் தேவ நியமங்களுக்கும் எதிராய்பேசும் இயக்கங்கள். வேதத்தை தவறாகக் கூறி கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைக் குழப்புவதால் விசுவாசிகள் இவற்றுக்கு விலக வேண்டியது அவசியமாகின்றது “வேறு சுவிசேஷத்தை“ சொல்லும் இவர்களின் தன்மைகள் எவைகள்? இந்தப் புகழ்வாய்ந்த போலி இயக்கங்களின் வெளிப்பாடுகள் எவைகள்? என்பதை விபரமாய் அறிந்து கொள்வது நலமாகும். 

வேறே சுவிசேஷம் (Different Gospel)
துர்வசனக் கூட்டத்தார் பொதுவாகவே அடிப்படை வசனத்திலிருந்து விலகி வேதத்தை பிரசங்கிப்பவர்கள். இவர்களின் செய்திகளில் “வேறே சுவிஷேசம் காணப்படுகின்றது. இதைப் பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது கூறியிருக்கிறார். 

“உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலா. 1: 6-8)

பவுல் கலாத்தியருக்கு எழுதின கடிதம் கி.பி. 55 இற்கும் 56 இற்கும் இடையேயுள்ள ஆண்டுகளில் எழுதப்பட்டது. அப்படியானால் முதல் நூற்றாண்டின் மையப்பகுதியிலேயே வேறொரு சுவிசேஷம் சபைக்குள் வந்துவிட்டது. அப்போஸ்தலரால் சொல்லப்பட்ட சுவிசேஷமேயன்றி வேறே சுவிசேஷம் இல்லை. அப்படி ஒரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து சொன்னாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்கிறார் பவுல். 

துர்உபதேசக்கூட்டம் மக்களைக் களங்கப்படுத்தி அவர்கள் மனதைக் கெடுத்தும் குழப்பியும் தங்கள் பக்கம் இழுக்கும்போது கிருபையை விட்டு விலகுகிறவர்கள் அந்தக் கூட்டங்களோடு சேர்ந்து விடுகின்றனர். எனவே பவுல் “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.“ (அப். 20;29-30) அவர்கள் சீஷரகளை இழுத்துக் கொள்ள மாறுபாடானவைகளை போதிப்பார்கள். என்ன போதிப்பார்கள் வேறே சுவிசேஷத்தைப் போதிப்பார்கள். 

சுவிசேஷம் என்பது எது? தேவகுமாரனான இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, அவரது அற்புதமான ஊழியம், அவரது சிலுவை மரணம் அவரின் உண்மையான உயிர்தெழுதல், அவரின் இரண்டாம் வருகை அவரோடு பரலோகத்தில் நித்தியவாழ்வு இவைகள் அனைத்தும் அடங்கியதே சுவிசேஷம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வேறே சுவிசேஷம் என்பது என்ன? சரியான சுவிசேஷத்தில் வரும் மூல உபதேசங்களை மாற்றி, திரி்த்து வேறுபடுத்தி இயேசுவோடு சம்பந்தப்படுத்திக் கூறுவதே வேறே சுவிசேஷம்.


இன்றும் உலகில் கன்னிப்பிறப்பை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களும் உயிர்தெழுதலை விசுவசியாத கல்விமான்களும் இருக்கிறார்கள் இவர்களெல்லாம் அந்த வேறே சுவிசேஷேத்திற்கு செவி சாய்ப்பவர்கள். கன்னிப்பிறப்பே சுவிசேஷேத்தின் வேர். இதையும் அடியோடு மறுதலிப்பவர்கள். வேறே சுவிசேஷக்  கூட்டத்தார். அவர்களின் துர்உபதேச இயக்கங்களும். இதை வெகுவாய் மறுதலிக்கின்றன.  

2. வேறே இயேசு (Different Jesus)
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய .இரண்டாம் கடிதத்தில் இவைகளைத் தெளிவாக்குகின்றார்.“எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப்  பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.“ (2 (கொரி. 11.4)

பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில், நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசு, நீங்கள் பெற்றிராத வேறே ஆவி, நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வெறொரு சுவிசேஷம் என்று எழுதியிருக்கிறார். வேறே இயேசு, வேறே ஆவி, வேறே சுவிசேஷம் ஆகிய இம்மூன்றும் துர்உபதேசக் கூட்டத்தினரால் போதிக்கப்படுபவை. 

வேறே இயேசு என்றால் வேதம் கூறும் இயேவை வேதத்தின்படி கூறாது வேறுவிதமாய் கூறுவதாகும். இயேசு வந்த நோக்கம் முழுவதையும் மாற்றி வேறுவிதமாய் போதிப்பதாகும். இயேசு செய்த ஊழியத்தை வேறு விதமாய் சித்தரிப்பதாகும். 

யெகோவா சாட்சி கூட்டத்தார் (Jehovah's Witnesses) இயேசு தேவனுடைய நித்திய குமாரனல்ல. அவர் தேவனுடைய முதல் சிருஷ்டி பிரதான தூதனான  மிகாவேலைப் போல் இயேசுவும் ஒருவர் என்கிறனர்
மோமர்மன் சபையார் (Mormon Church) இயேசுவை தெய்வீகமானவராக ஏற்றுக் கொள்வதில்லை. பல கடவுள்களி்ல் இருவரும் ஒருவர் வானலோகத் தகப்பனுக்கும் வானலோகத் தாய்க்கும் பாலுறவு முறையில் உற்பவித்துப் பிறந்த ஆவியின் முதல் குழந்தை (First Sprit Child) இயேசு லுசிபருக்கு ஆவியின் சகோதரன் (Sprit Brother of Lucifer) என்கிறனர். 

இப்படி இயேசுவை வேறுவிதங்களில் சித்தரித்து அவரை முழுவதும் மாறுபட்ட இயேசுவாக கூறுவது இவர்களின் கொள்கைகளாகும். பொதுவாக அனைத்து துர்உபதேசக் இயக்கங்களிலும் இவ்விதக் கொள்கைகள் இருக்கின்றன. அவை இயக்கங்களுக்கு இயக்கம் வேறுபட்டும் இருக்கின்றன. 

3. வேறே ஆவி. (Different Spirit)
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 2 தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.“ என்று யோவான் தனது முதல் நிருபத்தில் மூல அறிவிப்பைக் கூறியிருக்கின்றார். ( 1 யோவான் 4:1-3)

இயேசுவை அறிக்கை பண்ணாத வேறே ஆவிகள் உலகத்தில் கிரியை செய்கின்றன. அவைகள் அந்திக் கிறிஸ்துவின் ஆவிகள் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வித ஆவிகள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகி்ன்றன. அந்திக்கிறிஸ்துவும் அந்த ஆவியையே பெற்று இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுவான். 

சபைக்கு இருக்கும் ஐந்து வகை ஊழியங்களும் தேவ ஆவியின் அழைப்பைப் பொறுத்தே அமைகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. கள்ளத் தீரக்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளப் போதகர்கள், கள்ள சுவிசேஷகர்கள் (வேறே சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்கள்) ஆகிய இவர்கள் அனைவரும் சபைக்கு எதிரான தவறான ஊழியர்கள் மட்டுமல்ல, தவறான ஆவியையுடைய பொய் ஊழியர்களும் கூட.

4. புதிய சத்தியம்  (New Truth)
அனைத்து கள்ள உபதேசக் இயக்கங்களும் தங்களுக்குப் புது வெளிப்பாட்டைக் கடவுள் கொடுத்தார் என்றே கூறுகின்றன. புது அந்த உபதேச செய்திகளை தேவனிடமிருந்தும் பிரசித்திப் பெற்ற தேவமனிதர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர் என்றும் சொல்லுகின்றனர். ஆனால் அந்தச் செய்திகள் மிகவும் மாறுபாடானதாகவும் சந்தேகப் படக்கூடியதாகவும் சிந்தித்துப் பார்த்தால் நாம் கிரகிக்க் கூடாத அளவு விகற்பமானதாகவும் இருக்கின்றன. 

சன் மங் மூன் (Sun Myung Moon) என்பவர் மூனிஸ் (Moonies) எனும் இயக்கத்தின் ஸ்தாபகர் “கிறிஸ்துவும் கிறிஸ்துவின் கூட்டத்தைச் சாரந்தவர்களும் தங்களுடைய சேவைகளை முற்றும் முடிய செய்யாது பாதியிலே விட்டுச் சென்று விட்டார்கள். இயேசு விட்டுச் சென்ற சேவை செய்து முடிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மூன் கூறினார். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church) என்னும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் இதற்கு முன் வெளிப்படுத்தாத உண்மைகளையும், ஆழ்ந்த சத்தியங்களையும் போதகர் மூன் வெளிப்படுத்தினார் என்று கூறுகின்றனர். 

இயேசுவின் இருதயத்தையும் இயேசுவின் வேதனையும் இயேசுவின் நம்பிக்கையையும் எங்களால் மாத்திரமே அறிந்து புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். (Rev. Moon, The Way of the World, Holy Sprit) (Ass'n for the Unification of World Christianity Vol VIII, No 4, April 1976)

கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாய் கிறிஸ்தவம் எவ்விதத் தெளிவும் வெளிப்பாடுமின்றிக் கிடந்த்து.. ஆனால் கடவுள் ஜூனியர் ஜேசப் ஸ்மித்துக்கு (Joseph Smith Jr.) கொடுத்த “புதிய சத்தியத்தால்“ சுவிசேஷம் இதுவரை இழந்துபோனதையெல்லாம் தக்க வைத்துக் கொண்டது. இன்றோ ஐக்கியப்படுத்தும் சபைக்கு தேவனிடமிருந்து தொடர்ச்சியாக பதிய தெய்வீக வெளிப்பாட்டைக் கொடுக்கும் ஜீவனுள்ள தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு புதிய “சத்தியங்களை“ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று மோர்மன் சபையார் (Mormon Churcch) கூறுகிறார்கள். 

இவ்வித இயக்கங்கள் எல்லாம் வேத அடிப்படையும் ஒழுங்கும் கிரமுமின்றி, அவ்வப்போது புதிய சத்தியங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அவர்களது சொந்தக் கருத்துக்களும் சுய வெளிப்பாடுகளும், வசன ஆதாரமற்று பிரசங்கிக்கப்படுகின்றன. கற்பனையான வெளிப்பாடுகளை வசனத்தோடு ஒப்பிட்டு தங்கள் இயக்கக் கொள்கைகளாக இவர்கள் வெளியிடுகிறார்கள்.

5. தவறான வியாக்கியானம் (Wrong Interpreation)
சில துர்உபதேச இயக்கங்கள் வேதத்திலிருந்து பல புதிய வியாக்கியானங்களைக் கொடுகின்றன. ஆவிக்குரிய வட்டாரத்தினர் ஒத்துக் கொள்ள முடியாத, தேவ மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வசனத்தை வியாக்கியானம் செய்கின்றனர். அவர்கள் சொல்லுவதே உறுதியானதும், .இறுதியானதுமாக  நினைத்து, சத்தியத்தின் கருத்துக்களை புறம்பே தள்ளுகின்றனர். 

ஆவிக்குரிய திருச்சபைகளும் ஆவிக்குரிய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சபைகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் மூல உபதேசங்களை இக்கூட்டத்தினர் தவறென காண்கிறார்கள். தேவ வசனத்தை மற்றவர்களெல்லாம் தவறாகப் படித்து புரிந்த கொண்டதையும் இவர்கள் மாத்திரமே சரியாய் படித்து போதிப்பதாயும் உரைக்கின்றனர். 

ஹெர்பட் ஆம்ஸ்ட்ராங் (Herbert W. Armstrong) என்பவர் “இன்றைய பிரபலமான முக்கிய சபைகள் போதிப்பதும் செயல்படுவதும் எதுவுமே வேதஅடிப்படையானதல்ல. இவர்கள் எதையோ படித்து சபைகளையோ போதனை செய்து கொண்டிருக்கிறார்கள்“. என்று கூறுகிறார். *The Auto Biography of Herbert W. Armstrong. Pasadena, Ambassador College Press 1967, 0.264, 298) சாதாரணமாக வேத அடிப்படைக் கருத்துக்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பதால் இவர்கள் துர்உபதேசக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று அறிந்த கொள்ள முடியும். குறிப்பாக சில இறையியல் கல்லூரிப் பாடங்களும் இதற்கு உதவி செய்கின்றன. இவ்விதக் கள்ள ஊழியர்கள் தேவ விசுவாசத்தைக் கெடுக்க  முயற்சி செய்யும் ஊழியத்தைச் செய்து வருகின்றனர். 

6. திருச்சபைகளைப் புறக்கணித்தல்
துர்உபதேச இயக்கங்கள் சமநிலையுள்ள பாரம்பரிய திருச்சபைகளையும் ஆவிக்குரிய திருச்சபைகளையும் அறவே வெறுக்கின்றன. நமது ஆலய ஆராதனை ஒழுங்கு முறைகளையும் குற்றஞ்சாட்டுகின்றன. மறுபிறப்பு. ஞானஸ்நானம் ஆவியின் நிறைவு, தொழுகை, வரங்கள் இவைகள் முக்கியமற்றவை எனக்கூறி அப்புறப்படுதுகின்றனர். பாரம்பரிய திருச்சபைகளையும் அவர்களது கூட்டத்தினர் வெறுக்கின்றனர். 

ஆவிக்குரிய திருச்சபைகள் அனைத்தும் தேவ திட்டத்தோடும் அங்கீகாரத்தோடும் நடக்கின்றன. எந்தத் திருச்சபையும் ஆவியானவரின் அங்கீகாரம், தேவமக்களின் அனுமதி ஆகிய இரண்டையும் பெறும்போது சரியான சபைக்குரிய இடத்தைப் பெறுகின்றது. 

துர்உபதேசக் கூட்டத்தினர் இப்படிப்பட்ட எந்த சபையையும் ஏற்க மறுக்கின்றார்கள். காரணம் சொல்லும் புதுமையான மாறுபாடான உபதேசத்திற்கு நமது சபைகள் இசைவதில்லை. அவர்களின் கருத்துக்களைப் பறம்பே தள்ளி சபை மக்களைப் பாதுகாப்பதால் சரியான சபைகள் மீது இக்கூட்டத்தினர் கோபமும் பொறாமையும் கொள்கின்றனர். 

தேவனை  ஆராதித்து தொழுகை நடத்துதலை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் இவர்கள் நடத்தும் தொழுகை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. தொழுகையில் நல்ல பாடல்களையோ தேவனை மகிழ்விக்கும் கீதங்களையோ சேர்ப்பதில்லை. ஆராதனையில் இவர்களுக்கு வேத செய்தியைக் கொடுக்கும் நபர் நல்ல பரிசுத்தவனாக இருக்கமாட்டார். சிலரது ஆராதனையில் அப்பம் பிட்கும் கர்த்தருடைய பந்தி என்பது கிடையாது, ஆவியின் நிறைவு, அந்நிய பாஷை பேசுதல, ஆவிக்குரிய வரங்களின் கிரியைகள் ஆகியவற்றை துர்உபதேசக் கூட்டத்தினர் ஒருபோதும் மதிப்பதில்லை. 

எனவே இப்படிப்பட்ட நியமங்களைக் கடைப்பிடிக்கும் சபைகளைப் பார்த்து இவர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சபைகளுக்கு விரோதமாய் செயல்படுகிறார்கள். சபையின் ஆட்களை வஞ்சித்து தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளகிறார்கள். எதைச் செய்தாலும் திரித்துவ சபைகளுக்கு எதிராகவே செய்கின்றார்கள். அதே நேரத்தில் இவர்களின் ஆராதனைகள் பெரும்பாலும் அந்தரங்கமான இடங்களிலேயே நடத்தப்படுகின்றன. அங்கத்தினரைத் தவிர மற்றவர்களை அத்தனை எளிதில் இவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை. 

7. இரட்டைப் பேச்சு
சில துர்உபதேசக் கூட்ங்களில் இரட்டைப் பேச்சுக் நிறைந்திருக்கின்றன. அவர்கள் நம்மோடு பேசுவது ஒன்று. ஆனால் மனதில் வைத்துக் கொண்டிருக்கும் கருத்து வேறொன்று. இரட்டைச் செய்திகளும் இரட்டைக்  கருத்துக்களும் ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றன. உண்மையான சத்தியத்தில், ஆழ்ந்த சரியான நம்பிக்கையுள்ளவர்கள் போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் விசுவாத்தின் எவ்வித அடிப்படை அம்சமும் உள்ளத்தில் இருப்பதில்லை. 

தங்களை நல்ல கிறிஸ்தவர்களாய்க் காட்டிக் கொண்டு மக்களுக்கு முன்விசுவாசிகள் போல் நடிக்கிறார்கள். மக்கள் அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்கள் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்துக்களையும் தவறான விசுவாச நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது. 

மோர்மன் சபையினர் இதற்கு ஒரு உதாரணம்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசுகிறிஸ்துசபை (The Church if Jesus Christ of Latter-day Saints) தனது செய்தி ஒன்றில் “அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை நாங்கள் விசவாசிக்கிறோம்“ என்று எழுதியிருந்தார்கள். இந்த அறிக்கையைப் படிக்கம் மக்கள். இது கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கு்ம் திருச்சபைகளில் ஒன்று என நினைக்கத் தோன்றும் ஆனால் உண்மையென்னவென்றால் அவர்கள் சொல்லும் செய்திகளின் மறுபக்கம் விசவாசத் துரோகம் அடங்கியிருக்கிறது. 

இவ்வித இயக்கங்களின் உறுப்பினர்கள் தங்களையும் கிறிஸ்தவர்கள் என அழைத்துகு் கொள்ளத் தயங்குவதில்லை. கிறிஸ்தவர்கள் போல் பேசிப் பழகி கடைசியில் தாங்கள் சார்ந்து வாழும் உத்தேச இயக்கங்களோடு மற்றவர்களையு் இணைத்து விடுகிறார்கள். 

8. தேவ தன்மைகளை மறுத்தல்
பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னம மூன்று பேரும் ஒருவரே.இவர்கள் தனித்தனி காலக்கட்டங்களில் செயல்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டுக் காலம் பிதாவின் காலம். புதிய ஏற்பாட்டுக் காலம் இயேசு கிறிஸ்துவின் காலம். நாம் வாழ்நது கொண்டிருக்கு இந்தக் காலமோ ஆவியானவரின் காலம். ஆனால் இம்மூவரும் ஒருவரே என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல இவ்வியக்கத்தார் நம்புவதில்லை தேவனது இந்த திரித்துவ தெய்வத் தன்மைகளை அடியோடு மறுக்கின்றனர். யெகோவா சாட்சிகள் தேவனுடைய வார்த்தையில் திரித்துவத்திற்கான எவ்வித ஆதாரங்களுமில்லை என்கின்றனர். (Charles Russell, Studies in the Scriptures, V, Brooklyn, Indernational Bible Students 1912, p54)

கிறிஸ்தவம் தோன்றின காலத்தில் கடவுள் மூன்று விதங்களில் செயல்படுகிறார் என்ற கருத்து இருந்த்து. ஆனால் இதே கருத்து கிறிஸ்தவம் தோன்றிய நாட்களில் இருந்த பழம்  பெரும் மதங்களிலும் இருந்த. அந்த மதங்கள் கடவுள் மூன்று தன்மைகளிலிருந்தும் அதற்கு மேலும் செயல்படுகிறார் என்ற கூறின. பாவிலோனியர் இவ்வித மூன்றில் ஒன்று (Three in one) எனும் தன்மையைக் கொண்ட கடவுளை வழிபட்டனர். அந்நாட்களில் தான் இக்கொள்கை நவீன விசுவாசிகளின் சின்னமாகிவிட்டது.“ என்று உலகளாவிய வழி (The Way international) எனும் கூட்டத்தார். திரித்துவத்தைக் குறித்து கூறுகின்றனர். Jesus Christ is not God, Wierwile, New Knowville, Ohio)

(வளரும்)

(இவ்வாக்கமானது சகோ. அன்ரு பிரபுக்குமார் அவர்கள் எழுதிய துர்உபதேசங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

Monday 4 July 2011

மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம் (3)

மந்திரம் மாயவித்தை பகுதி 1 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்
மந்திரம் மாயவித்தை பகுதி 1 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

இப்பகுதி எழுதப்படுவதன் நோக்கம் மந்திர வித்தைகளை கற்பிப்பதற்கல்ல மாறாக சாத்தான் எத்தகைய விதமாக இதன் மூலம் கிரியைகளை நடப்பிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.  கிறிஸ்தவர்கள் பலரும் சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே அவற்றையும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது. இத்துர்கிரியைகளை நடப்பிக்கும் மக்களுக்கு மத்தியில் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு அநேகமாக இக்குறிப்பு உதவிகள் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்


ஏவல் பில்லி சூனியம்
ஏவல் என்று சொன்னால் ஆவிகளை மனிதர்கள் மேல் ஏவிவிடுகின்றதாகும்.காட்டேரி என்ற நாமத்தையுடைய ஆவியை சமாதானத்தோடு வாழ்கின்ற ஒரு குடும்பத்தில் ஏவி விட்டால் குடும்பத்தில் சமாதானம் சீர்குலைந்து விடும். காட்டேரி குடும்பத்தில் புகுந்து அதை சின்னா பின்னாமாக்கி விடும். காளி என்ற நாமத்தையுடைய ஆவிக்கு பல அவதாரங்கள் உண்டு. அக்கினி காளியை ஒருவருக்குள் ஏவினால் அவர் அக்கினியில் விழுவார். அல்லது தீ மூட்டிக் கொண்டு மரிப்பார். அக்கினி ஆவி பிடித்தவர்கள் யாரையும் தீ வைத்து அழிக்கத் தயங்க மாட்டார்கள். உதிரக்காளி என்ற நாமமுடைய ஆவியை ஒரு பெண்ணுக்குள் ஏவி விட்டால் பெண உதிரப்போக்கினால் உபாதை அடைவாள். அசுத்த ஆவி அந்த பெண்ணை விட்டு விலகும் வரையும் உபாதைப்படுவாள். முனி என்ற நாமமுடைய ஆவியை ஒரு ஆணுக்குள் ஏவி விட்டால் அவர் இரவு  நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்கோ அல்லது கற்குகைகளுக்கோ சென்று விடுவார். சில வேளைகளில் அவர் இறந்து விடவும் கூடும். மிருகத்தை ஒருவர் மீது ஏவி விட்டால் அந்த மிருகம் அவரை சேதப்படுத்தும். ஏவல் என்பது இவைகள் போன்றவையாகும். 

பில்லி சூனியங்களின் வகைகள்
1. கால் அடி மண்
பில்லி சூனியம் என்பது இரண்டும் ஒன்றாகும். யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டுமானால் சூனியம் செய்வார்கள். குறிப்பிட்ட ஒருவருடைய கால் அடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அவருடைய பெயருக்கு மந்திரம் செய்து அவருடைய வீடடு கூரையின் மேல் வீசி விட்டால் குறிப்பிட்ட அந்த வீட்டார் இரவில் நித்திரை செய்ய முடியாது. வீட்டின் மீது கல்விழுவது போன்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். அத்தோடு காலில் எரிவு புண் ஏற்படுத்தல், சில சமயம் கால் விழங்காமல் போவதும் உண்டு

2. சுடுகாட்டு சாம்பல்
தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டுச் சாம்பலை எடுத்து அதில் சக்கரங்கள் போட்டு சூனியம் செய்ய வேண்டியவர்களின் பெயர்களை அதில் அடைத்து, மந்திர உச்சாடனம் செய்து குறிப்பிட்டவர்களின் வீட்டில் போட்டு விட்டால் அங்கு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டோ, குத்திக் கொண்டோ பிரிந்து விடுவார்கள். அவ்வீட்டில் குடியிருக்க முடியாதவாறு வெட்டுப்பலி, குத்துப்பலி உருவாகி விடும். இதை உணவில் கலந்து கொடுத்தால் நோய்கள் உருவாகும். 

3. முட்டை
ஒரு மு்டையை வைத்து மந்திர பூஜை செய்து குறிப்பிட்டவரின் வீட்டிலோ அல்லது வீட்டு வாசலிலோ உடைத்து விட்டால் அஙகு பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் பலவிதமான மோசங்கள் உண்டாகும். 

4. ஏந்திரம்
செப்புத் தகட்டில் பெயர் பதித்து மந்திர உச்சாடனம் செய்து ஏந்திரத்தை எரியும் அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டு வந்தால் பெயருடையவரின் சரீரங்களில் எரிவு உண்டாகி வேதனை அடைவர். 

5. சுண்ணாம்பு
சிறிது சுண்ணாம்பை ஒரு சிறிய போத்தலில் அடைத்து இரவில் யாருக்கும் தெரியாமல் முச்சந்தியில் வைத்து அதிகாலையில் யாரும் அறியாதபடி அதை கொண்டு வந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயர்களின்படி மந்திரம் செய்து வீட்டிலோ சுவர்களிலோ அல்லது வேறு எதிலாவதோ பூசிவிட்டால் இரண்டு குடும்பங்களுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகும். 


6. தேசிக்காய்
சில தேசிக்காய்களை (எலுமிச்சைப்பழம்) கொண்டு வந்து அதில் பெயர்களை வைத்து மந்திரம் செய்து வீடுகளில் போட்டு விட்டால் அல்லது வீடுகளில் புதைத்து விட்டால் பிரச்சினைகள் குழப்பங்கள் உருவாகும். 

7. பொம்மை
சந்தனக் கட்டையில் ஒர் பொம்மை செய்து சரியாக அங்கங்கள் பதித்து சிகப்பு, கருப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்கரித்து, எதிரியின் பெயரை பொம்மைக்கு வைத்து, மந்திர பூஜை செய்து, பத்திரமாக வைத்துக்கொண்டு அதன் சரீரத்தில் சிறிய ஊசியால் குத்தினால் எதிரிக்கு அந்தந்த இடங்களில் ஊசி குத்தப்படும். எந்தெந்த அவயவங்களில் குத்துகின்றோமோ அந்த அவயவங்கள் வேதனை கொடுக்கும். இந்த பொம்மையை மாவிலும் செய்யலாம். 

ஆண்பெண் வசிய விளக்கம் சாதாரண தரம்
வசியமாக்க வேண்டிவரின் உடை ஒன்றில் அவருடைய பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து அதை தினமும்  விளக்குக்கு அருகில் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பலிக்கும். 

1. தலைமுடி 
வசியமாக்க வேண்டியவரின் தலை முடியினைப் பூஜையில் வைத்து துளசிக் செடியின் வேரைப் பிடுங்கி தலைமுடியை அதில் சுருட்டி காலை, மாலை, மந்திர, வசியம் செய்ய வேண்டும். 7 நாட்கள் செய்தால் பலிக்கும்

2. ஐந்து வகை எண்ணெய்
ஐந்து வகையான எண்ணெயை எடுத்து போத்தலில்  அல்லது ஒரு குப்பியில் கலந்து அதை வசியமாக்க வேண்டியவர்களின் பெயருக்கு வசிய மந்திரம் செய்ய வேண்டும். பிறகு இந்த எண்ணெயை ஓர் சுரையில் போட்டு அல்லது இடுப்பில் கட்டி கொள்ள வேண்டும் 21 நாட்களில் பலிக்கும். 

3. ஐந்து வகையான வேர்
ஐந்து வகையான வேர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பல் எடுத்து அதை பூஜை தட்டில் பெண், ஆண் வசிய சக்கரத்தை சாம்பலில் வரைந்து வசியமாக்க வேண்டியவரின் பெயரை அதில் எழுதி, வசிய மந்திர பூஜை செய்து சாம்பலில் சிறியதை சுரையில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அலலது நெற்றியில் பூசிக் கொள்ளலாம். சிறிது சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவியும் விடலாம். 7 நாள் செய்தால் பலிக்கும். 

4. சிறுநீர்
குப்பைமேனி செடியை பிடுங்கி கொண்டு வந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரில் போட்டு மூன்று நாள் சென்ற பின் அதன் வேரை துண்டித்து மந்திரப் பூஜையில் வைத்து உச்சாடனம் செய்து சுரையில் போட்டு, கழுத்தில் கட்டிக் கொண்டால் அல்லது இடுப்பில் கட்டிக் கொண்டால் பலிக்கும். 

5. தலைப்பனை ஓலை
வசியமாகக் வேண்டியவர்களின் வீட்டிலிருந்து 7 உப்புக்கற்களை எடுத்துக் கொண்டு வந்து தலைப்பனை  ஓலையில் சக்கரம் வரைந்து அதில் பெயர் எழுதி, மந்திர பூஜையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்து தாலிப்பனை ஓலையை வசியமாக்க வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் புதைக்க வேண்டும். 7 உப்பக்கற்களை வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டு விட வேண்டும். இவ்விதமாக பாவித்தால் பலிக்கும்.

மந்திரம் செய்யும் முறை 
மந்திரங்கள் செய்வதற்கு முதலாவது கும்பம் பாவிக்க வேண்டும். ஒரு செம்பு அல்லது குடத்தை நன்றாக சுத்தம் செய்து அதில் நீர் நிரப்பி, மா இலைகள் வைத்து, கற்பூரம் கொழுத்தி ஆவிகளின் மந்திரங்களை சொல்லி ஆவிகைள அழைக்க வேண்டும். பிறகு ஒரு தேசிக்காய் எடுத்து அதற்கு உருவம் அமைத்து, பூக்களால் அலங்கரித்து, பூஜைக்கான பொருள்களை வைத்து, மந்திர பூழை செய்ய வேண்டும். இலையில் அரிசி வைத்து அதில் கும்பத்தை வைக்க வேண்டும். 

பூஜை பொருட்கள் இரு வகை
1. பால், பொங்கல், பழவகை, கடலை, அவல், தாம்பூலம் பூக்கள்
2. கோழி, சாராயம், முட்டை, பூக்கள், சுருட்டு, எண்ணெய், கலந்த தீனிவகை

யார் மந்திரம் செய்யலாம்?
மந்திரம் செய்பவர் நன்றாக மந்திரங்களை கற்றிருக்க வேண்டும். கற்றுக்கொடுத்த ஆசானிடமிருந்து குரு அபிஷேகம் பெற்றிக்க வேண்டும். குரு அபிஷேகம் பெறாமல் மந்திரங்கள் செய்தால் அது பலிக்காது. மந்திரங்கள் செய்யும்போது மந்திரச் சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டும். பூஜை பொருட்களையும் சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மந்திரம் பலிக்காது. சிலவேளை மந்திரக்காரருக்கே ஆபத்து வரும். 

மந்திரம் செயய தகுதியான ஸ்தானங்கள்
1. ஆற்றங்கரையில் பூஜைப்பொருட்களை வைத்து ஆற்று நீரில் இருந்து மந்திரம் செய்யலாம்
2. அமைதியான இடம், ஆலயம், அல்லது சுடுகாடு போன்ற இடங்களிலிருந்து செய்யலாம். ஆள் நடமாட்டமில்லாத காடுகளிலிருந்தும் செய்யலாம். 

அச்சரங்கள் சில (ஏந்திரங்கள்)
மந்திரங்கள் செய்யும்போது செம்புத் தகட்டில் அச்சரம் எழுதி அதில் மந்திர பதித்து செய்து கொள்பவர்களின் பெயர்களையும் அதில் பதித்து பூஜை ஆரம்பிக்க வேண்டும். 


ஜோசியம் பற்றிய சில தகவல்கள்
பொதுவாக ஜோசியத்தை நம்பாதவர்கள் யாரும் கிடையாது. அனைவருமே ஜோசியத்தை நமபுகிறவர்களும் கிரகத்திற்கு பயப்படுகின்றவர்களுமே இருப்பார்கள். ஜனங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது தம்முடைய கிரகநிலை சரியில்லை என்றே கருதுவார்கள். இதன் காரணமாக தன் கஷ்டத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக ஒரு ஜோசியரை நாடி தன்னுடைய கிரக நிலையை அறிந்த அதற்கேற்ற பரிகாரம் செய்வதுண்டு 

பன்னிரண்டு ராசிகளும் அதற்குரிய நட்சத்திரங்களும்
1. மேடம்  - அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் கால்

2. இடபம்  - கார்த்திகை, 2ம், 3ம் கால்
ரோகினி, மிருகசீடம், 1ம் 2ம் 3ம் கால். 

3. மிதுனம் - மிருக சீடம், 3ம், 4ம் கால், திருவாதிரை
புனர்பூசம், 1ம், 2ம், 3ம் கால்

4.   கடகம் - புனர்பூசம், 4ம் கால், ஆயிலியம்

5. சிம்மம் - மகம், பூரம், உத்தரம் 1ம் கால்

6. கன்னி - உத்தரம் 2ம் 4ம் கால் அத்தம், சித்திரை

7. துலாம் - சித்திரை 3ம் 4ம் கால், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம்

8. விருச்சிகம் - விசாகம் 4ம் கால் அனுஸம் கேட்டை

9. தனுசு - மூலம்,  பூராட்டம், உத்தராட்ம், 1ம் கால்

10. மகரம் - உத்தராட்டம் 2ம்,ஈ 3ம் 4ம் கால் திருவோணம் அவிட்டம் 1ம், 2ம் கால்

11. கும்பம் - அவிட்டம், 3ம் 4ம் கால், சத்யம் பூரட்டாதி 1ம் 2ம் 3ம் கால்

12. மீனம் பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி, ரேவதி

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி உண்டு. அதற்கேற்ற நட்சத்திரங்களும் உண்டு. பூமியில் ஒருவர் பிறக்கின்றபோது அந்த நேரம் எந்த நட்சத்திரம் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்தின்படி ராசியை கண்டுபிடிக்க வேண்டும். நேரம் வினாடியை சரியாக கணித்தே ராசியை கண்டுபிடிக்கலாம்.

கிரகங்கள் 9
(1) சூரியன் (2) சந்திரன் (3) செவ்வாய் (4) புதன் (5) குரு
(6) சுக்கிரன் (7) சனி (8) இராகு (9) கேது

ஒவ்வொரு வருடமும் இந்த 9 கிரகங்களும் 12 ராசிகளையும் சுற்றி வருகின்றன. ராசிக்காரர் ஒருவருடைய 10வது ஸ்தானத்தில் சனி, கிரகம் அல்லது ராகு கேது அமைந்தால் ராசிக்காருக்கு கெட்ட காலம் என கணிக்கப்படும். சுக்கிரன். சூரியன், புதன் இம்மூவரும் ஒரே ஸ்தானத்தில் அமைந்தால் ராசிக்காரனுக்கு சுபீட்சகரமானதாக இருக்கும். 10வது ஸ்தானத்தில் சந்திரன் ஆட்சி பெற்றால் ராசிக்காரின் கருமங்கள் தடையின்றி முடியும் என்பதாக கணிக்கப்படும். சனி, வியாழன், வீட்டில் இருக்க வியாழன் சனியை நேரடியாக பார்வையிட்டால் ராசிக்காரருக்கு துன்பங்கள், தொல்லைகள் அதிகமாக ஏற்படுவதாக கணிக்கப்படும். 5ம் ஸ்தானத்தில் ராகு அமைந்து 3ம் ஸ்தானத்தில் சனி இருந்து ராகுவை நேரடியாகப் பார்வை செய்தால் ராசிக்காருககு துன்பங்களும் தொல்லைகளும் தேவனைகளும் உருவாகும். குரு 2ம் ஸ்தானத்திலும் சனி 9ம் ஸ்தானத்திலும் ராகு 12லும் கேது 6 இலும் அமைந்தால் ராசிக்காரருக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. சனி விலகிவிட்டது எனக் கணிக்க்கப்படும். 10வது ஸ்தானத்தில் ஆட்சி புரிந்தால் ராசிக்காரருக்கு நல்லதல்ல


நேரங்கள் பற்றிய சில தகவல்கள்
(1) இராகு காலம் - இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(2) அந்தப்பிரகண்டன் காலம் -  இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(3) குலிகண்டன் காலம் -  இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(4) யமன் கண்டன் காலம் -  இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(5) சுப காலம் -  இதில்  மாத்திரம் சுப கரும காரியங்கள் நடப்பிக்கலாம். 

ஜோசியம் பற்றிய உண்மை  விளக்கங்கள்
ஜோசியம் என்பது சரியாகக் கணிப்பிடுகின்ற ஒன்றல்ல. சரியான வினாடியை வைத்து ராசிபலன் கண்டுபிடிப்பது யாராலும முடியாததொன்றாகும. ஜனங்கள் ஜோசியத்தை நம்பி அதை எழுதுதற்காக ஜோசியரை நாடிச் செல்கின்றபடியால் ஜோசியரும் அவர்கள் கொண்டுவரும் நேரத்தின்படி கணித்து ஜாதகத்தை எழுதிக் கொடுப்பார். அவர் ஜாதக் குறிப்பு எழுதும்போது ஏதாவதொரு குறையையும் அதில் போட்டு இவருக்கு கிரகம் சரியில்லை. நேரம் சரியில்லை என்று ஏதாவதொன்றை எழுதி, அவருக்கு சாந்தி கழிக்க வேண்டும் கிரகம் சரியில்லை என்று எழுதிவிடுவார். இதை கேள்விபடும் மனிதன் கிரகம் கழிக்க வேண்டும் சாந்தி கழிக்க வேண்டும் ஜோசியர் சொல்லும் எல்லாப் பொருட்களையும் சேகரித்துக் கொண்டு பணத்தோடு ஜோசியரிடம் போவான். அங்கே நடக்கிறது என்னவென்றால் ஜோசியர் பொய்யை எழுதி ஜனங்களிடம் பணத்தை பிடுங்க முயற்சி செய்கிறார். 

இதை அறியாத மனிதனோ கிரகத்திற்கு பயந்து தானாகவே பணத்தை கொண்டுபோய் கொடுத்து விட்டு வருகிறான். ஜோசியம் எனபது உண்மையானதொன்றல்ல. அது வெறும் பொய்யான காரியமாகும். ஒருவன் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் அவனுக்கு எந்த கிரகமும் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. காரணம் ஜோசியம் பிசாசினால் உண்டாகி அவனின் வழிநடத்துதலுடன் எழுதப்படுகின்ற ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு எந்தவொரு தோஷமும் கிடையாது. இதுவே உண்மை

மந்திரங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள்
1. பணச்செலவு
2. நேர விரயம்
3. ஏமாற்றம்
4. தோல்வி
5. நோய்கள்
6. சமாதனம் சீர்குலைவு
7. பயம்
8. சண்டைகள், வெட்டுப்பழி, குத்துப்பழிகள் ஏற்படுதல்
9. கொலைகள், கொள்ளைகள்
10. மரணம். 

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)