- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 30 September 2013

பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி ......அவனே எனக்குச் சகோதரனும்..தாயுமாய்..(மத்தேயு 12:50)

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்(மத்தேயு 12:50)

இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அதிக சர்ச்சைக்குரியதாகவும், வித்தியாசமான முறைகளில் விளக்கப்பட்டு வருவதுமான வாக்கியம், அவர் தம் தாயையும் சகோதர்களையும் பற்றி கூறிய விடயமாகும். இயேசுவின் தாயாரும் அவரது சகோதரரும் அவரோடு பேசுவதற்காக, அவர் மக்களுக்கு போதகம் பண்ணிக் கொண்டிருந்த வீட்டுக்கு வெளியில் காத்திருக்கையில்(1) அவர் அவர்களோடு எதுவும் பேசாமல், அவர்கள் வந்திருப்பதைப் பற்றி தன்னிடம் கூறியவனிடம் “என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று கேட்டதோடு, தன்னுடைய சீடர்களே தனக்கு தாயும் சகோதரர்களாயும் இருப்பதாகத் தெரிவித்து, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறார்கள் என்றார்(மத். 12:46-50) இயேசுவின் வார்த்தைகள் தன் தாய்க்கும் சகோதர சகோதரிகளுக்கும் அவர் மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, அவரது கூற்றும் அநேகரால் புரிந்து கொள்ள முடியாதொன்றாகவே உள்ளது. 

உண்மையில், இயேசு தன் குடும்ப அங்கத்தினரை மரியாதைக் குறைவாக நடத்தினார் எனக் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரது குடும்ப அங்கத்தினர்கள் அவர் மேசியா என்பதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. (யோவான். 7:5)(2) மாற்குவின் சுவிஷேசம் தன்னோடு பேச வந்த தன் குடும்ப அங்கத்தினர்களை இயேசு சந்திக்க விரும்பாதற்கான காரணத்தை அறியத் தருகின்றது. இயேசு வியாதியஸ்தரைக் குணப்படுத்தி தேவராட்சியத்தைப் பற்றி பிரசங்கித்து வந்தமையால் திரளான மக்கள் அவரைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால், அவர் பிசாசுகளைத் துரத்தியபோது, அவர் பிசாசுக்களின் தலைவனைக் கொண்டு பிசாசுக்களைத் துரத்துகின்றார் என்று அவரது செயல் விமர்சிக்கப்பட்டது. (மத். 22-24) இயேசுவின் நடவடிக்கைகளைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதாவது அவரது தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும்(3) அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்து அவரைத் தம்மோடு வீட்டுக்குக் கொண்டு போவதற்காகவே அவர் இருந்த வீட்டுக்கு வந்தனர்(மாற்கு 3:21)(4).இதனாலேயே தன்னைத் தேடி வந்த தாயையும் சகோதரர்களையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. 

இயேசு தன் குடும்ப உறவுகளைத் துறந்தவராக தேவனுடைய சித்தத்தின்படி செய்கின்றவனே தனக்கு தாயும் சகோதரனுமாயிருக்கிறான் எனக் கூறியது அவர் தன் தாயையும் சகோதர்ர்களையும் மதிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் அல்ல. உண்மையில் அவர் தேவனுடைய குமானாய் இருந்தமையால், தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுவதே அவரது கடமையாய் இருந்தது. (லூக். 2:49). அவர் இவ்வுலகிற்கு ஒரு மனிதராக வந்தமையினால் அவருக்கு குடும்ப உறவுகள் இருந்தன. அவர் தன்னுடைய இறை பணியை ஆரம்பிக்கும் வரை தன் குடும்ப உறவுகளுக்கு உட்பட்டவராக வாழ்ந்த போதிலும்(லூக். 2:51) தன்னுடைய ஊழிய காலத்தில் அவர் குடும்ப உறவுக்கு வெளியில் வந்து தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுவதே அவரது கடமையாய் இருந்தது, (லூக். 2:49) அவர் இவ்வுலகிற்கு ஒரு மனிதராக வந்தமையினாலேயே அவருக்கு குடும்ப உறவுகள் இருந்தன. அவர் தன்னுடைய இறைபணியை ஆரம்பிக்கும்வரை தன் குடும்ப உறவுகளுக்கு உட்பட்டவராக வாழ்ந்த போதிலும் (லூக். 2:51) தன்னுடைய ஊழிய காலத்தில் அவர் குடும்ப உறவுக்கு வெளியில் வந்து தேவனுடைய சித்தத்தின்படி செயல்பட்டார் இதனால்தான் தன்னுடைய ஊழியக் காலத்தில் மற்ற பெண்களைப் போலவே தன் தாயையும் “பெண்ணே“ என்று அழைத்தார். (யோவான் 2:4)(3) இயேசுவைப் பொறுத்தவரை “தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுபவர்களே அவரது உறவினர்களாய் இருந்தனர். (6) 

இயேசுவின் கூற்றானது அதாவது தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுபவர்களே தனது தாயும் சகோதரரும் என அவர் கூறியமை, அவருக்கும் அவரது குடும்ப அங்கத்தினருக்கும் இடையிலான உறவு எத்தகையது எனும் சர்ச்சையையும் கிறிஸ்தவ உலகில் தோற்றுவித்துள்ளது. அதாவது புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சகோதர்கள் சகோதரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உண்மையிலேயே அவரது சொந்த சகோதர்களா? இல்லையென்றால் இயேசு குறிப்பிடுவது போல ஆவிக்குரிய ரீதியிலான உறவில் இருப்பவர்களா? எனும் கேள்வி நீண்டகாலமாகவே கிறிஸ்தவ உலகில் இருந்து வந்துள்ளது. இயேசு தன் சொந்த சகோதரரை சகோதராக ஏற்றுக் கொள்ளாதமையால், அவர்கள் அவரது உண்மையான சகோதர்ரகள் அல்ல என அநேகர் எண்ணுகின்றனர். அதாவது அவர்கள் இயேசுவின் தாயான மரியாளுக்குப் பிறந்த அவரது சகோதர்கள் அல்ல என்பதே இவர்களது தர்க்கமாகும். புதிய ஏற்பாட்டில் இயேவின் சகோதர்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் “அவரது உடன் பிறவாத சகோதர்கள்“(7) எனக் கூறும் இவர்கள் “யோசேப்புக்கும் அவனது முதல் மனைவிக்கும் பிறந்தவர்களே“(8) அவருடைய சகோதர்கள் எனக் கருதுகின்றனர். ஆனால், மரியாள் யோசேப்பின் இரண்டாவது மனைவி என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. மேலும், இயேசுவின் சகோதர்கள். யோசேப்பின் முதல் மனைவியின் பிள்ளைகள் என்றால் இயேசு அல்ல, மாறாக “அவருடைய மூத்த சகோதரனே தாவீதின் சிங்கானத்திற்கு உரியவனாக இருந்திருப்பான்“(9) ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுவே தாவீதின் சிங்காசனத்திற்கு உரியவராக இருப்பதனால், அவரே யோசேப்பின் மூத்த மகன் என்பது தெளிவாகின்றது. 

இயேசுவின் சகோதர்கள் அவருக்கும் மூத்தவர்கள் என்றால், இயேசு பன்னிரு வயதில் எருசலேம் தேவலாயத்திற்குச் சென்றபோது அவரது சகோதர்களும் அவருடன் சென்றிருந்ததாக வேண்டும். ஏனென்றால் “யூத ஆண் பிள்ளைகள் பன்னிரண்டாவது வயதிலிருந்து நியாயப்பிரமாணத்தின் மக்களாகக் கருதப்பட்டனர். அதன் பின்னர், அவர்கள் ஆக்க குறைந்தது வருடத்தில் ஒரு தடவையாவது எருசலேம் தேவலாயத்திற்கு செல்ல வேண்டும் என்பது யூதமார்க்கத்துச் சட்டாயிருந்தது“(10) நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பும் மரியாளும் வருடந்தோறும் பாஸ்கா பண்டிகைக்கு(11) எருசலேமுக்குப் போய் வருவதைத் தம் வழக்கமாய்க் கொண்டிருந்தனர். (லூக். 2:41) இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அக்காலத்தைய யூதமார்க்க சட்டத்தின்படி அவரையும் தம்மோடு எருசலேமுக்குக் கூட்டிச் சென்றனர். (லூக். 2:42) பன்னிரண்டு வயதுக்குப் பிறகு யூதப் பெற்றோர்கள் ஆண்டுதோறும் பண்டிகைக்குத் தம் பிள்ளைகளை எருசரேமுக்குக் கூட்டிக் கொண்டு போவதனால், இயேசுவின் சகோதரர்கள் அவருக்கு மூத்தவர்களாக இருந்திருந்தால், பக்திமிக்க தம்பதியினரான யோசேப்பும் மரியாளும் அவர்களையும் அச்சமயம் எருசலேமுக்குக் கூட்டிக் கொண்டு போயிருப்பார்கள். ஆனால், அவர்கள் எருசலேமுக்குச் சென்றது பற்றி லூக்காவில் எவ்வித குறிப்புகளும் இல்லை. இதிலிருந்து இயேசுவின் சகோதர்கள் அவரை விட வயது குறைந்தவர்களாகவே இருந்துள்ளது தெளிவாகின்றது. 

உண்மையில், இயேசுவிற்குப் பிறகு மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருக்கவில்லை. அவள் கடைசி வரைக்கும் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் எனும் இறையியல் உபதேசமே(12) இயேசுவின் சகோதரர்களை மரியாளின் பிள்ளைகள் அல்ல எனக் கூறுவதற்கான காரணமாயுள்ளது. எனினும் இது புதிய ஏற்பாட்டு உபதேசத்தை முரண்படுத்துவதாயுள்ளது. இயேசுவின் சகோதரர்களை அவரது உடன்பிறவா சகோதர்கள் என விளக்க முடியாது. சகோதரன் எனும் பதம் உடன் பிறவாதவர்களையும் குறிக்க புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது உண்மையென்றாலும் இயேசுவின் சகோதரரும் சகோதரிகளும் மற்றவர்களில் இருந்த வேறுபடுத்தப்பட்டவர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர். (அப். 1:13-14, கலா. 1:19) ‘சுவிசேஷப் புத்தகங்களில் அவர்கள் மரியாளுடன் சேர்த்தே குறிப்பிடப்பட்டுள்ளமையும் அவர்கள் அவளது பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்துகின்றத.(13) மேலும், மரியாள் கடைசிவரைக்கும் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதற்கும் புதிய ஏற்பாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை. மத்தேயு 1:25 இல் “மரியாள் தன் முதற்பேறான குமாரனாகிய இயேசுவைப் பெறும் வரைக்கும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான்“ என்றே கூறுகின்றது. “அறிதல்” எனும் சொற்பிரயோகம் பாலுறவுக்கான இன்சொல்லணியாகும்” “இயேசு பிறக்கும்வரை அவர்கள் பாலுறவில் ஈடுபடவில்லை என்பதை இவ்வசனம் அறியத்தருகின்றது.(15) எனினும் “அதன் பிறகும் அவர்கள் அவ்விதமே பாலுறவைத் தவிர்த்து வந்தனர் என இவ்வசனம் எவ்விதத்திலும் கூறவில்லை. (16) அதன் பின்னர் அவர்களுக்குப் பிறந்தவர்களே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சகோதரர்கள் என்றும் சகோதரிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

இயேசுவுக்கு உடன் பிறந்த சகோதரர்களும் உடன் பிறந்த சகோதரரரும் சகோதரிகளும் இருந்த போதிலும், அவர் தன்னைப் போல தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுபவர்களையே தன்னுடைய சகோதர்களாகவும் சகோதரிகளாகவும் கருதினார். அவருக்கு மானிட உறவுகளைவிட தேவனுடய சித்தமே முக்கியமானதாயிருந்தது. எனவே, அவரைத் தெய்வமாகக் கொண்டுள்ள நாமும் அவரைப் போலவே தேவசித்தத்தின்படி செயல்படுபவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.


குறிப்புகள்
(1) மாற்குவின் சுவிஷேசத்திலேயே இயேசு ஒரு வீட்டுக்குள் இருப்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (மாற்கு 3:20,31)

(2) இயேசு மரணத்திலிருந்து உயிர்தெழுந்த பின்பே அவரது குடும்பத்தினர் அவரை விசுவசித்தனர். (அப். 14) மரித்த இயேசு தன்னை உயிரோடிருக்கிறவராக அவர்களுக்குக் காண்பித்தமையே அவர்களது விசுவாசத்திற்குக் காரணமாயிருந்த்து, (அப்போஸ்தலர் 15:7 இல் குறிப்பிடப்பட்டிருப்பது  இயேசுவின் சகோதரன் யாக்கோபு)

(3) இயேசுவின் சட்ட ரீதியான தகப்பனான யோசேப்பைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததிலிருந்து அவர் இதற்கும் முன்பே மரித்திருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம். (Donald A. Hagner, Word Biblical commentary, Mathew, p. 359)

(4) அக்காலத்தில் அநேகர் இயேசுவை இவ்விதமாக விமர்சித்துள்ளனர்)

(5) இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு 2:3 இற்கான விளக்கத்தைப் பார்க்கவும்

(6) D.A. Carson, The Expositor’s Bible commentary : Mathew p. 299

(7) Karl Keating, Catholicism and Fundamentalism. San Francisco : Ignatius Press, 1988. P. 283

(8) John McHugh, The Mother of Jesus in the New Testament. Garden City Doubleday, 1975, p. 200-201

(9) D.A. Carson, The Expositor’s Bible Commentary Mathew, p. 299

(10) William Barclay : The Daily Study Bible : The Gospel of Luke. P 29 யூத நூலான மிஷ்னாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்விடயம் அதாவது பன்னிரு வயதிலிருந்து யூத ஆண்களுக்கு கொடுக்கப்படும் மார்க்க கல்வி பற்றிய அறிவுறுத்தல்கள் (Niddah: 5:6 Megilla 4:6, Abot 5:12) இயேசுவின் காலத்திலும் இருந்துள்ளன. (Darrell L. Bock, The IVP New Testament Commentary: Luke p. 62) யாத்திராகமம் 23:14-17, 34:22-23, உபாகமம் 16:16 போன்ற வசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, வருடத்தில் மூன்று தடவைகள் முக்கியமான பண்டிகைகளுக்கு தேவாலயத்திற்குப் போகும்படி புதிய ஏற்பாட்டுக்கால யூத மார்க்கம் வற்புறுத்தவில்லை. தூர இடங்களில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை, அல்லது ஆயுளில் ஒரு தடவையாவது எருசலேம் தேவாலயத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியது, (Everett Ferguson Backgrounds of Early Christianity p. 521)

(11) இது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனால் விடுவிக்கப்பட்டதை நினைவுகூருவதற்காக ஆசரிக்கப்படும் பண்டிகையாகும்

(12) இத்தகைய உபதேசம் படிப்படியாக கிறிஸ்தவ சபைக்குள் புகுத்தப்பட்ட தேவ ஆதாரமற்ற விளக்கமாகும். கி.பி. 451ல் சால்சிடோன் எனுமிடத்தில் கூடிய சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் மரியாளுக்குத் “தெய்வத்தை சுமப்பவள்“ அல்லது “தேவ தாய்“ என அர்த்தம் தரும் “தியோடொகொஸ்“ (theotokos) எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. (John H. Leith, ed. Creeds of the church, Richmond: John Knox Press. 1973, p. 36) அதன் பின்னர் கி.பி. 553ல் கூடிய இரண்டாவது சால்சிடோன் ஆலோசனைச் சங்கம் மரியாளுக்கு எப்போதும் கன்னி என்ற அடைமொழியை சேர்த்தது. (Elliot Miller & Kenneth R. Samples, The Cult of the Virgin: Catholic Mariology and the Apparitions of Mary: Grand Rapids: Baker Book House, 1994, p24) அதன் பின்னர் மரியாள் “பாவமற்றவளாக இருந்தாள்“ எனும் கருத்து உருவாகத் தொடங்கியது. எனினும் நான்காம் நூற்றாண்டிலேயே “மரியாள் பாவமற்றவள்“ எனும் உபதேசம் சிலரால் போதிக்கப்பட்டது. (Earmon R. Carroll, ‘Mary in the Documents if the Magisterium’ in Mariology Vol 1 ed. Juniper B. Carol, Milwaukee: Bruce Publishing Company, 1955, p. 14-15) ஆனால். பிற்காலத்திலேயே இது சபையின் உபதேசமாகியது. (lbid p. 17) 1854 இல் போப்பாண்டவர் 9வது பயஸ் என்பார் இதை சபையின் உபதேசமாகப் பிரகடனப்படுத்தும்வரை இது பற்றிய சர்ச்சை சபையில் இருந்தது. (E. Miller & K.R. Samples. The Cult of the Virgin p. 31-32) அதன் பின்னர் மரியாள் மரணத்தின் பின்பு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்றதாகவும் 1864இல் போப்பாண்டவர் 9வது பயஸ் அறிவித்தார்(Earmon R. Carroll ‘Mary in the Documents of the Magisterium’ p. 28) மேலும், காலத்திற்குக் காலம், மரியாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தது பற்றிய கதைகளும் ரோம சபையில் முன்வைக்கப்பட்டுள்ளன. (E. Miller & K.R. Samples, The Cult of the Virgin. P. 88-99) மரியாளைப் பற்றிய ரோம சபையின் இத்தகைய உபதேசங்களுக்கு எதிராக வேதாகமம் மரியாளையும் மற்றவர்களைப் போலவே பாவியான ஒரு பெண்ணாகவே சித்தரித்துள்ளது. அவள் தேவனைத் தன்னுடைய இரட்சகராகவே குறிப்பிட்டுள்ளாள். (லூக். 1:47) பெந்தகோஸ்தே நாளில் மற்றவர்களைப் போல மரியாளும் பரிசுத்தாவியானவருக்காக காத்திருந்து மன்றாடினாள். (அப். 1:14)

(13) E. Miller & K.R. Samples, The Cults of the Virgin p. 27

(14) A. Greek-English Lexicon of the New Testament and other early Christian Literature ஆதியாகமம் 4:1 ல் இதை நாம் அவதானிக்கலாம்

(15) Leon Morris, The Gospel According to Mathew, p. 32

(16) Herbert M. Carson, The Faith of the Vatican p. 114

நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - Dr.M.S. வசந்தகுமார்.  
     
    

    




Tuesday 17 September 2013

திருமறையை விளக்கும் முறை-அத்தியாயம் 4-சூழ்நிலையும் நோக்கமும்(1)

விதி 3 ஆசிரியர் நூலை எழுதிய சூழ்நிலையையும் நோக்கத்தையும் ஆராய்ந்தறிந்து அதற்கேற்ப வேதத்தை விளக்க வேண்டும்

அதாவது வேதாகமத்தின் ஒரு நூலை அல்லது நிருபத்தை எழுதியவர் யார், அவர், யாருக்காக, எப்படிப்பட் சூழ்நிலையில் எந்த நோக்கத்துடன் அதனை எழுதினார் என்ற விபரங்களை நாம் ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராய்ந்தறியும் பொழுதுதான் நாம் விளக்கஞ் செய்யும் வசனத்தின் முழுக்கருத்தையும் ஆழ்ந்த கருத்தையும் அறிய முடியும். ஆனால் வேதாகமத்தில் உள்ள ஒரு சில நூல்களைப் பற்றி நாம் எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் இத்தகைய வினாக்கள் அனைத்திற்கும் விடை காண முடியாது. எடுத்துக்காட்டாக எபிரேயருக்கு எழுதின திருமுகம் யாரால் எழுதப்பட்டது என்று திட்டமாய் கூறமுடியவில்லை. இது யாருக்காக எழுதப்பட்டது என்பதும் தெரியவில்லை. பாலஸ்தீனாவில் வாழ்ந்த எபிரயேக் கிறிஸ்தவர்களுக்கா அல்லது பிறநாடுகளில் வாழ்ந்த எபிரேயக் கிறிஸ்தவர்களுக்காகவா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் இந்நிருபம் எழுதக் காரணமாயிருந்தவர்களின் சூழ்நிலைகள், சோதனைகள் இவற்றை நூலின் வாயிலாக ஊகித்தறிய முடிகிறது. 


1. நூலை எழுதியோரும் எழுதக் காரணமாயிருந்தோரும்

(அ) பவுல் அடியார் எழுதிய நிருபங்கள்

1& 2 தெசலோனிக்கேயர் : பவுல் முதன் முதலில் எழுதிய கடிதங்கள்  இவை இரண்டாம் முறையாகப் பயணத்தை மேற்கொண்டபோது கொரிந்து பட்டணத்தில் எழுதப்பட்டு கி.பி. 50 ஆம் ஆண்டில் தெசலோனிக்கே சபைக்கு அனுப்பப்பட்டவை. 

1 & 2 கொரிந்தியர் : பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழியப் பயணம் செய்தபோது முதல் நிருபத்தை எபேசு பட்டணத்திலிருந்தும் (கி.பி. 56ஆம் ஆண்டு) இரண்டாம் நிருபத்தை பிலிப்பி பட்டணத்திலிருந்தும் (கி.பி. 56 அல்லது 57) எழுதினார். 

கலாத்தியருக்கும் ரோமருக்கும் எழுதிய நிருபங்கள். பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழிய பயணம் செய்தபோது கொரிந்து பட்டணத்தில் கி.பி. 57 ஆம் ஆண்டு எழுதினார். கலாத்தியருக்குச் சுருக்கமாக எழுதிய செய்தி ரோமருக்குச் சற்று விரிவாக எழுதப்பட்டது. 

சிறைகூட நிருபங்கள் :
எபேசியருக்கு, கொலேசேயருக்கு, பிலிப்பியருக்கு எழுதிய நிருபங்கள் பவுல் ரோமாபுரி சிறைகூடத்தில் இருந்தபோது (கி.பி 61-63) எழுதப்பட்டவை. 

கலாத்தியருக்கு எழுதியவற்றைப் பவுல் முறைப்படுத்தி விரிவாய் ரோமருக்கு எழுதிய வண்ணம் கொலோசேயருக்கு எழுதியவற்றைச் சற்று விரிவாக எபேசியருக்கு எழுதலானார். 

பிலேமோன் கொலோசே பட்டணத்துச் சபையைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் கொலோசெயருக்கு எழுதிய நிருபமும் பிலமோனுக்கு எழுதிய நிருபமும் பிலமோனின் அடிமை ஒநேசிமு எனபவன் மூலம் அனுப்பட்டன. (கொலே. 4:9)

போதகருக்கு எழுதிய நிருபங்கள். (Pastoral Epistles)
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதமும் தீத்துவுக்கு எழுதிய கடிதமும் பவுலின் முதல் சிறையிருப்புக்கும் இரண்டாம் சிறையிருப்புக்கும் இடையே (கி.பி. 65) எழுதப்பட்டன.


(ஆ) நான்கு அருட்செய்தி நூல்கள்

மத்தேயு – பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குள்ள தொடர்பைக் காட்டும் நோக்கத்துடன் யூதர்களுக்கென எழுதப்பட்டது. மலைப்பிரசங்கம் (5-7 அதிகாரங்கள்) போன்ற நீண்ட அருள் உரைகள் நிறைய உள்ளன. 

மாற்கு – இயேசுவின் அற்புத செயல்களை விபரித்துக் கூறும் நோக்கத்துடன் ரோமருக்கென எழுதப்பட்டது. 

லூக்கா – இயேசுவின் உவமைகளை அதிகமாக்க் கூறி கனம்மிக்க தெயோப்பிலு என்பவருக்காகவும் கிரேக்க இனத்திற்காகவும் எழுதப்பட்டது. முதல் மூன்று அருட்செய்தி நூல்களிலும் பொருள் ஒற்றுமை அதிகமுண்டு. 

யோவான் – இதற்கும் முதல் மூன்று அருட்செய்தி நூல்களுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. இந்நூலில் உவமைகளே இடம்பெறவில்லை. பேரடையாளங்கள்(Great Signs) எனப்படும் எட்டு அற்புதங்களும் அருளுரையும் உண்டு. இது திருச்சபைக்கென்று எழுப்பட்டது. 

மத்தேயு இயேசுவை அரசராக வர்ணிக்கின்றார். மாற்கு இயேசுவை உத்தம பணியாளராகக் காட்டுகிறார். லூக்கா இயேசுவை சிறந்த மனிதராகக் காட்டுகின்றார். யோவான் இயேசுவை ஒரே பேறான தேவகுமாரனாகக் காட்டுகின்றார்


(இ) சங்கீதங்கள்

சில சங்கீதங்கள் எழுதப்பட்ட சூழ்நிலை அவற்றின் தொடக்கத்தில் கூறப்பட்டிருக்கிறன. சங்கீதங்கள் 3,18,34,51,52,54,57,142 ஐ பார்க்கவும். 90ம் சங்கீதம் மோசேயின் மூலம் இயற்றப்பட்டது. திருவிழாவிற்கெனப் பயணம் செய்யும் இஸ்ரவேல் மக்கள் பாடிய பாடல்கள், மலைகளிடையே கட்டப்பட்ட எருசலேமிற்குச் செல்லும்போது இப்புனித நடை பாடல்களைப் பாடிக் கொண்டே ஏறிச் செல்வது மக்கள் வழக்கம். 


2. நூலை எழுதிய நோக்கம் 

(அ) நீதி மொழிகளின் நோக்கம்

“இவைகளால் ஞானம், போதகம், புத்திமதி விவேகம், நீதி, நியாயம், நிதானம், என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். நீதி. 1:2,3

'உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி ….22:19

சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், ஆலோசனையையும் ஞானத்தையும்பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 22:20,21


(ஆ) லூக்கா அருட்செய்தி நூலின் நோக்கம்

மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, ......... உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய .. ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. 1:1-4


(இ) யோவான் அருட்செய்தி நூலின் நோக்கம்

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. 20:31


(ஈ) யோவான் எழுதிய முதல் நிருபத்தின் நோக்கம்

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 5:13

நற்செய்தி நூல்களின் நோக்கம் – மக்கள் இரட்சிப்பு அடைவது நிருபத்தின் நோக்கம் – விசுவாசிகள் இரட்சிப்பின் நிச்சியத்தை அடைவது


(உ) பழைய ஏற்பாட்டின் நோக்கம் 

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். ரோமர் 15:4

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (1 கொரி. 10:11)


(ஊ) வேதாகமத்தின் முழு நோக்கம்

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; …….. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோ. 3:16,17)

(வளரும்)

Monday 9 September 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 3- முன் பின் கவனிக்க(2)

4. முன்பின்னுள்ள வாக்கியங்களைக் கவனிக்காமல் விளக்கவுரை அளிப்பதால் ஏற்படும் தவறுக்கு எடுத்துக்காட்டுகள். 

(அ) “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். (யோசுவா 24:15) 
பலர் இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இயேசுவையே தெரிந்து கொள்ள மக்களை அழைக்கின்றனர். ஆனால் யோசுவாவின் கருத்து வேறு. கர்த்தரைச் சேவிக்க உங்களுக்கு மனமில்லை போலும். அப்படியானால் யாரைச் சேவிப்பீர்கள்? பாட்டன் பூட்டன்மார் வழிபட்ட சிலைகளையோ? அல்லது கானான் நாட்டுக் குடிகள் வழிபட்ட சிலைகளையோ? என்று யோசுவா பரியாசமாகப் பேசுகிறார். நீங்கள் எல்லாம் வல்ல இறைவனாகிய கடவுளைச் சேவிக்க மறுத்தால் வெறும் சிலைகள்தான் உங்கள் தெய்வமாகும். இந்தச் சிலையோ, அந்தச் சிலையோ இப்படிச் சிலைகளைத் தான் நீங்கள் தெரிந்துகோள்ள வேண்டும். அப்போது உங்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கும். கர்த்தரைச் சேவிக்க உங்களால் முடியாது. இவைகள்தான் இக்கேள்வியின் மெய்ப்பொருளாகும். 

(ஆ) “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றான். அப்பொழுது அவர் நீ போய் இந்த ஜனங்களை நோக்கி….. சொல்” ஏசா. 6:8,9
இந்த வசனத்தின் மூலம் எத்தனை ஏராளமான நற்செய்தி ஊழிய அறைகூவல்கள்!! எத்தனையோ நற்செய்திப் பணியாளர்கள் இவ்வசனத்தால் அழைப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் 9ம் வசனத்திலிருக்கும் “நோக்கி” என்ற சொல்லுக்கு “சொல்” என்ற சொல்லுக்கும் பொருளைக் கவனிக்காமல் விட்டுவிலகுவது நியாயமா? ஏசாயா கூறவேண்டியது நற்செய்தியா? துர்செய்தியா? ஆசீர்வாதமா? சாபமா? (மத். 13:10-17ஐயும் அப். 28:25-28 ஐயும் பார்க்க)
பரம்பரையாக நாம் கேட்டுவரும் கருத்துக்கள் முழுவதும் தவறு என்பது என் கருத்தன்று. ஆனால் செய்தி அளிக்கும் பணியாளர்கள் எல்லோரும் தாங்கள் விளங்கஞ் செய்யும் வேத வசனத்தைத் திரித்துக் கூறாமல், தீர  சிந்தித்து. முன்பின்னுள்ள தொடர் வாக்கியங்களையும் கவனித்து, சரியான முறையில் தங்கள் செய்திகளை ஆயத்தஞ் செய்தல் வேண்டும் என்பதே என் கருத்து. நமது சொந்தக் கருத்துக்களைக் கூறாமல் தேவாதி தேவனுடைய அருட் செய்தியை நேர்மையாய் விளக்கஞ் செய்வதன்றோ நமது பணி.



5. பிறை அடைப்பு குறியினுள் போடப்பட்டிருக்கும் செய்திகள். 
       (Parenthetical passages that could be put within brackets)

(அ) சில சுருக்கமான வேறொன்று விரிக்கிற (Digression) வாக்கியங்கள். 
I. யோசுவா 6:1 எரிகோ பட்டணத்தின் நிலைமையை எடுத்துக் காட்ட சேர்க்கப்பட்ட ஒரு வசனம் “யோசுவா அப்படியே செய்தான்” (வச. 5:15) “கர்த்தர் யோசுவாவை நோக்கி ; இதோ” ….(6:2) என்று தொடர்ச்சியாக வாசிக்கலாம்.

II. தானியேல் 2:4 “அப்பொழுது கல்தேயர் (அரமேய அல்லது சீரிய மொழியில்) ராஜாவிடம் ….” இந்த வசனத்திலிருந்து 7:8 வரை தானியேல் எபிரேய மொழியில் எழுதாமல் அரமேய மொழியில் எழுதியிருக்கின்றார் என்பதைக் குறிப்பதற்காக இந்த மூன்று வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. தானியேல் 8:1 முதல் ஆகமம் முடியும்வரை மீண்டும் எபிரேய மொழியில் எழுதியிருக்கின்றார். 

III. யோவான் முதலாம் அதிகாரத்தில் மூன்று சுருக்கமான விளக்கவுரைகள் உண்டு. மூன்றும் பிறை அடைப்புக்குறிகளுள் போடப்பட வேண்டியவை. 1:38 “ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாகும்”. 1:41,42ஐயும் பார்க்க. 


(ஆ) சில நீண்ட வேறொன்று விரிக்கின்ற பகுதிகள் :
சில ஆசிரியர்கள் (சிறப்பாக பவுல் அடியார்) தாங்கள் சொல்லிக் கொண்டு வருகின்ற பொருளை இடையில் விட்டுவிட்டு வேறு பொருள்பற்றி எழுதிய பின் முன்பு விடப்பட்ட பொருளைப் பற்றி தொடர்ந்து எழுதுவர். குறிப்பாக.. 
I. 2 கொரி 2:13 இல் தீத்துவைக் காணவேண்டுமென்று விரும்பித் துரோவாவை விட்டு மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப் போனார் பவுல். தீத்துவைக் கண்டதனால் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் நான்கு அதிகாரங்களையும் ஒன்பது வசனங்களையும் மிக எழுப்புதலாக எழுதிய (பவுல் ஒரு எழுத்தாளர் மூலம் தம் நிருபங்களை எழுதினார்) பின் 7:6 ஆம் வசனத்தில் தாம் மறந்துபோன தீத்துவை மறுபடியும் நினைத்து தாம் விட்டுவிட்ட வரலாற்றை மீண்டும் தொடர்ந்து குறிப்பிடுகின்றார். ஆகவே 2:14 முதல் 7:4 வரையுள்ள இந்த நீண்ட பகுதி பிறை அடைப்புக்குறிக்குள் போடப்பட வேண்டியது என்று சொல்லலாம். அதற்காக இடைப்பறவரல் முக்கியமானவையல்ல என்பது பொருளன்று

II. எபேசியர் 3:1 இதனிமித்தம்
                             (3:2 - 3:13)
எபேசியர் 3:14 இதனிமித்தம்
                               அல்லது
எபேசியர் 3:1 கைதான பவுலாகிய நான்
                                 (3:2 - 3:21)
எபேசியர் ஆண்டவருக்குள் கைதியான நான்


III. ரோமர் 5:12 முற்றுப்பெறாத வாக்கியம் “இப்படியாக ….பாவமும் …மரணமும்  பிரவேசித்தது போலவும்” எல்லா மனிதரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் –இதுவுமாயிற்று (ப.தி, பு.தி) என்ற சொல் மூலத்தில் இல்லை. பவுல் சில மறைபொருட்களை விளக்க ஐந்து வசனங்களை 5:13-17 வேறொன்று விரிக்கின்ற பகுதியை எழுதியபின் 2ஆம் வசனத்தில் முடிக்காத காரியத்தை மீண்டும் 18இல் எழுத அதை நல்ல முறையில் முடித்து விடுகின்றார். ரோமன் கத்தோலிக்க திருப்புதல் “ஒரே மனிதனால் பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லோரும் பாவஞ்செய்தமையால் எல்லா மனிதருக்குள்ளும் சாவு பரவியது போலவும்.... ஏனெனில்” என்று கூறுவது சரியே..



6. சில இடங்களில் இருவர் அல்லது மூவர் ஒருவரோடொருவர் உரையாடுகின்ற உரையாடல் நடை நமக்கு இடர்பாட்டைத் தரலாம்
(அ) ஆபகூக் என்ற ஆகமத்தில் தீர்க்கதரிசியும் தேவனும் ஒருவரோடொவர் உரையாடுகின்றனர். 
தீர்க்கதரிசி                                      தேவன்
ஆப. 1:1-4 நீர் கேளாமலிருக்கிறீரே                         1:5-11
ஆப. 1:12-2:1 நீர் மௌனமாயிருக்கின்றதென்ன                 2:2-4

(ஆ) ரோமர் நிருபத்தில் வாக்குவாதத்தில் திறமையுள்ள வேதபாரகன் ஒருவனுக்கு நிருபாசிரியருக்கும் விவாதம் நடப்பது ஆங்காங்கு காணப்படுகின்றது. தடை செய்கின்றவர் கீழ்காணும் கேள்விகளைக் கேட்கின்றர்

ரோமர் 3:1 : அப்படியானால் மற்றவர்களை விட யூதனுக்கு கிடைத்த நன்மை 
                       என்ன? விருத்தசேதனத்தால் பயன் என்ன?
பதில்         :  சுருக்கமாக 3:2 இலும் சற்று விரிவாக 9:4,5 இலும் கூறப்பட்டுள்ளது. 

ரோமர் 3:3 : அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை 
                         அவமாக்குமா?
பதில்            : 4ஆம் வசனத்தில் காணப்படுகின்றது. 

ரோமர் 3:5 :   தேவன் அநீதராயிருக்கின்றார் என்று சொல்லலாமா?
பதில்         :    ஒருகாலுமில்லை. (3:6)

ரோமர் 3:8 :     நன்மை வரும்படி தீமை செய்யலாமா?
பதில்         :     மேற்சொல்லிய நான்கு வினாக்களுக்குள் முதல் மூன்று 
                          கேள்விகளுக்கு விரிவான விடை 9ஆம் அதிகாரத்தில் 
                           அளிக்கப்பட்டுள்ளது. 

ரோமர் 6:1  : அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெறும்படி பாவத்தில் 
                        நிலைத்திருப்போம் என்போமா? 
பதில்             :  கூடாதே

ரோமர் 7:7 : அப்படியானால் நான் என்ன சொல்வது நீச் சட்டமும் பாவமும் 
                       ஒன்றுதானா? 
பதில்          :  ஒருகாலும் இல்லை

ரோமர் 9:6 : தேவ வசனம் அவமாய்ப் போயிறா?
பதில்             அப்படிச் சொல்லக் கூடாது

ரோமர் 9:14 :  கடவுளிடம் அநீதி உண்டா?
பதில்             :  ஒருகாலுமில்லை. 


7. இன்னும் ஒரு இடங்களில் நிருபாசிரியர் தன்னிடம் ஏற்கனவே வந்துள்ள கடிதத்தின் சில வார்த்தைகளையும் தன்னுடைய விரோதிகள் தன்னைப் பற்றித் தீதாய் சொல்லிய சில வசைமொழிகளையும் மேற்கோளாக்க் கூறுகின்றார்.
(அ) 1 கொரி. 6:12, 10:23 ப.தி “எல்லாற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு”. R.C.V- “எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு”. 1 கொரி 6:13 “உணவு வயிற்றுக்கென்றே உள்ளது. வயிறு உணவுக்கென்றே உள்ளது” என்கிறீர்கள். (R.C.V)
இது கொரிந்தியர் பயன்படுத்திய ஒரு பழமொழி உடலைச் சார்ந்தது. ஒழுக்கச் சார்பற்றது என்று பொருள்படும். ஆகவே விபச்சாரமும் வேசித்தனமும் கூட குற்றமன்று என்பர். உடல் தேவையை நிறைவு செய்யும் ஒரு வாய்ப்பு  என்று கூறுவர். கொரிந்தியரின் தவறான கருத்துக்குப் பலமான மறுப்பு கூறுகின்றார் பவுல்

(ஆ) 1 கொரி. 8:1 “நம் எல்லோருக்கும் அறிவண்டு என்கிறீர்கள். (R.C.V)

(இ) 2 கொரி. 10:1 ப.தி. “தூரத்திலிருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாய் இருக்கிறேன். என்றா சொல்கிறீர்கள்
R.C.V – உங்களோடு இல்லாதபோது கண்டிப்பாய் இருக்கிறேன் என்றா சொல்கிறீர்கள். 
R.C.V – பவுலினுடைய கடிதங்கள் கடுமையானவை. அழுத்தம் மிக்கவை. ஆனால் அவரை நேரில் பார்த்த சிலர் “தோற்றமுமில்ல பேச்சுத் திறனுமில்லை.” என்று கூறியதாக உள்ளது. 

(ஈ) 2 கொரி. 12:16 “தந்திரத்தால் உங்களைப் பிடித்தேனாம். “இது சரியாக காணப்படுகின்றது. இது போலவே அநேக வசனங்களை மிகவும் தெளிவான முறையில் தூத்துக்குடி R.C. கழகத்தினர் மொழிபெயர்ப்பு செய்துள்ளது மிகவும் பாரட்டத்தக்கது. 


இரண்டாம் விதி நமக்கு கற்றுத் தருவது
முன்பின்னுள்ள வசனங்களைக் கவனித்தே வசனத்தை விளக்க வேண்டும். 

Tuesday 3 September 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 3- முன் பின் கவனிக்க(1)



விதி 2 முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்தே வசனத்தை விளக்கச் செய்தல் வேண்டும். 

இந்த விதியைக் கடைபிடிக்காத காரணத்தால் அநேக தவறான கருதுக்களும் கொள்கைகளும் பரவியிருக்கின்றன. நகைப்பிற்கேது வான சில விளக்கவுரைகளை நாம் பிரசங்க பீடங்களில் கூறப்பட்டு வருகின்றன. 

உதாரணமாக திறமை வாய்ந்த போதகர் “பாளையம்” என்ற வார்த்தையின் பேரில் பிரசங்கத்தை ஆயத்தஞ் செய்ய விரும்பி ஒத்தவாக்கிய அகராதியில் “பாளையம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தார். அகராதியில் இருந்த ஏராளமான வசனங்களுள் பிரசங்கமளிப்பதற்குப் பொருத்தமாயிருப்பதாக தான் நினைத்த பத்து வசனங்களைத் தேர்ந்தெடுத்து (யாத்திரகாமம் முதல் வெளிப்படுத்தல் முடிய) செய்தி அளித்தார். அவ்வசனங்களில் யாத். 32:17, 18 யைப் பற்றி பேசுகையில் கிறிஸ்தவ பாளையத்தில் பாடல்தொனி கேட்க வேண்டும் என்றார். ஆனால் முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைப் பார்த்தால் அந்தப் பாடல் கண்டிக்கப்படத்தக்க அவலட்சணமான பாடலின் இரைச்சலாயிருந்தாகத் தெரிகின்றது. இந்த மாதிரிப் பாடல் கிறிஸ்தவ பாளையாமாகிய திருச்சபையில்கேட்கப்பட வேண்டுமா? பின்னும் உபாகமம் 23:14 'உன் தேவனாகிய கர்த்தர்…. உன் பாளையத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கிறார்.” என்ற வசனத்தையும் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முன்னுள்ள 13ம் வசனத்தை அவர் விளக்கஞ் செய்யாமல் விட்டுவிட்டார். நாம் வேதவசனத்தின் கருத்தைத் திரித்துக் கூறுவது குற்றமாகும். மேற்கூறியவாறு ஒத்த வாக்கிய அகராதியைப் பயன்படுத்துவது தவறான கருத்துக்களை நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் குற்றத்திற்கு ஏதுவாகும். 




1. ஓரே சொல்லுக்கு முன் பின்னுள்ள வசனங்களுக்குகேற்ப வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக விசுவாசம், மாம்சம் இரட்சிப்பு என்ற சொற்களைக் குறித்து ஆராய்வோம். 


(அ) விசுவாசம் : இந்தச் சொல்லுக்குக் குறைந்தது நான்கு பொருள் கூறலாம்
I. விசுவாசம் – நற்செய்தி கலா. 1:23; 1 தீமோ 3:9 4:1 

II. விசுவாசம் – நல் மனச்சாட்சி ரோமர் 14:23
”விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே – ப.தி ; பு.தி. அல்லது உறுதியான மனநிலையோடு (நல்லெண்ணத்தோடு) செய்யாதது பாவமாகும்” (R.C.V)

III. தெய்வீக உண்மைகளைப் பற்றும் தன்மை எபி. 11:6 இந்தக் கருத்தில் விசுவாசம் தன்னம்பிக்கைக்கு ஒத்ததாயிருக்கின்றது. 

IV. பாவ மன்னிப்பு, பரிசுத்தம் இவைகளுக்கு ஆதாரமான கிறிஸ்துவையும், அவருடைய பிராயச்சித்தத்தையும் (atonement) மனப்பூர்வமாய் பற்றும் தன்மையே ரோ 3:28 இல் பார்க்கிறோம். இதுவே இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் பவுல் அப்போஸ்தலன் இந்தக் கருத்தை மனதில் கொண்டு அடிக்கடி இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார். 

(ஆ) மாம்சம்.: இந்தச் சொல்லுக்கு குறைந்த்து மூன்று பொருள் உண்டு. 
I. சாதாரண கரத்து : யோவான் 1:14, ரோமர் 1:5, 9:3 மனிதத் தன்மை மாமிசம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. பாவம் என்பதைப் பற்றிய எண்ணமேயில்லை. 

II. பாவத்தால் தீட்டுப்பட்டுப்போன மாம்சம் அல்லது மனிதத் தன்மை. ரோமர் 8:5, எபே. 2:3

III. மாம்சம். – சடங்கு கலா. 3:3, 6:12, பிலி. 3:3

(இ) இரட்சிப்பு : என்ற சொல்லுக்கு குறைந்தது ஐந்து பொருள் உண்டு. 
I. இரட்சிப்பு – சரீர அல்லது நாட்டுப் பாதுகாப்பு. யாத். 14:13, நியா. 2:16, 3:9,15 அப். 7:25
இந்த இரட்சிப்பு … ஆன்மீக இரட்சிப்புக்கு நிழலாட்டமாயுள்ள ஒரு முன்னடையாளமாயிருக்கலாம்

II. இரட்சிப்பு – உடல் நலம் யாக். 5:15 விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் (ப.தி)

III. இரட்சிப்பு – இப்பொழுது அனுபவித்து வருகின்ற மீட்பு எபே. 2:8, லூக் 1:77

IV. இரட்சிப்பு – வருங்காலத்தில் வெளிப்படப்போகின்ற மீட்பு ரோமர் 13:11; 1 பேதுரு 1:5

V. இரட்சிப்பு – நற்செய்தி எபி. 2:4



2. முன்பின்னுள்ள வாக்கியங்கள் ஒரு சொல்லின் கருத்தை மட்டுப்படுத்தக் கூடும்.

(அ) “என் நீதியின்படி என்னை விசாரியும்” சங். 7:8, 18:20
தான் முழுவதும் நீதிமான் என்பது தாவீதின் கருத்தன்று. ஆனால் “கூஷ்” தன்பேரில் சாட்டின குற்றத்தில் தான் தாவீது கூறுகிறார். யோபும் இதேகருத்துடன் அடிக்கடித் தன்னை நீதிமான் என்று அழைக்கின்றார். 

(ஆ) இவன் செய்த பாவமுமல்ல…” (யோவான். 9:3)
இவனும் இவன் பெற்றோரும் எந்தப் பாவத்தையும் செய்த்தில்லை என்பது இதன் கருத்தன்று. இவனுடைய குருட்டு நிலைமைக்கு இவன் பெற்றோரோ அல்லது இவனது முன்னோரோ காரணம் அல்ல என்று ஆண்டவர் கூறுகின்றார். 

(இ) “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக். 5:15)
பிணியாளியைக் குணக்மாக்கும் என்பது பொருள் ரோமன் கத்தோலிக்க பாதிரியின் அவஸ்தை பூசைக்கோ (Extreme Unction) அல்லது தெய்வீக சுகமளிக்கும் மாபெரும் நற்செய்திக் கூட்டங்களுக்கோ இங்கு ஆதாரமில்லை என்பதைக் கவனிக்கவும். 

(ஈ) “பெண்ணைத் தொடாமலிப்பது நல்லது (1 கொரி. 7:1)
திருமணம் செய்யாதிருப்பது நல்லது என்பது கருத்தன்று. (திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக என்று எபி. 13:4 கூறுகின்றது) அக்காலத்தில் நிலவிய பயங்கர சூழ்நிலையினிமித்தம் திருமணம் செய்யாதிருப்பது நலமாயிருக்கும் என்று பவுல் எண்ணியிருக்கலாம். 
திருமணம் செய்யாத வாலிபர்கள் பெண்ணைத் தொடமலிருப்பது நல்லது என்ற பொருளும் இவ்வசனத்தில் காணக்கூடும். திருமணமான பின் கணவன் தன் மனைவியைத் தொடாமலிருப்பது குற்றமாகலாம். (1 கொரி. 7:3-5)


3. வஞ்சிப்புகழ்ச்சி அல்லது பரியாச முறையில் சொல்லப்படும் கூற்றுக்களைச் சொல்லுக்குச் சொல் பொருள் செய்யாமல் உடக்கருத்தைக் கவனிக்க வேண்டும் 

(அ) பிலேயாம் தான் போகவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தபின் தேவனின் அனுமதியைப் பெறும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு செய்த்தின் விளைவாக கடவுள் “போ” என்று அனுமதி அளித்தார். (எண். 22:20) ஆனால் பிலேயாம் செல்வது கடவுளுக்குச் சித்தமில்லை என்பது தெளிவு. (எண். 22: 22) 

(ஆ) “போம், உமக்கு வாய்க்கும்” (1 இரா. 22:15) தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளைப் பரியாசமாகப் பேசியதாக அரசரே அவனுடைய தொனியினாலோ முகத் தோற்றத்தினாலோ தெரிந்துகொண்டார். மிகாயாவின் உண்மையான கருத்து 17ஆம் வசனத்திலுள்ளது. 

(வளரும்)