- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 2 June 2011

அந்த நாளை குமாரனும் அறியார்


நூல் : யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
நூலாசிரியர்: சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(இயேசுவின் தெய்வீக் தன்மைகளை மறுப்பதற்கு வேதப்புரட்டர்களால் அதிகமாக பாவிக்கப்படும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். வியாக்கியனப்படுத்துவதற்கு அதிக சிரமான வசனங்களில் இதுவும் ஒன்றாகும். .இக்கட்டுரையில் ஆசிரியர் இது குறித்து ஆராய்ந்துள்ளார்)

இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் அவர் தம் மறுவருகையின் காலம் எப்போது என்று தமக்குத் தெரியாது என்று கூறியதாகும். “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.“ (மாற். 13:32) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் , தம் வருகையின் காலத்தை அறியாதிருந்த இயேசுகிறிஸ்து சகலமும் அறிந்தவரல்ல என்றும், இதனால் அவர் தேவனாய் இருக்க முடியாது என்றும் யொகோவா சாட்சிகள் கூறுகின்றனர் (24) உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகுதலை (யோவான் 1:14) சரியான விதத்தில் அறிந்து கொள்ளாத வரையில், அவரது இக்கூற்று யெகோவா சாட்சிகளின் தர்க்கத்தை உண்மை என்று நிரூபிப்பது போலவே தென்படும்.(25) நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து  மாமிசமாகுதல்  தெய்வீகத் தன்மைகளைத் துறப்பதையல்ல, மாறாக மானிடத் தன்மைகளை சேர்ப்பதாகவே இருந்தது. (26) ஆரம்பத்தில் தெய்வத்தன்மையுடையவராயிருந்த இயேசுக்கிறிஸ்து  மனிதராகிய போது மானிடத் தன்மைகளையும் சேர்த்துக் கொண்டார். எனவே அதன் பின்னர் இரு தன்மைகளையும் கொண்டவராகவே இருந்தார். எனினும், தேவத் தன்மைகளுடன் இருந்தவர் மானிடத் தன்மைகளை சேர்த்துக் கொண்டபோது அவர் தேவத் தன்மைகளை மானிடத் தன்மையின் வரையறைக்குள் அடக்கி வைத்திருந்தார். இதனால் தேவத்தன்மையான சகலவற்றையும் அறியும் அறிவை மானித் தன்மையான சகலவற்றையும் அறியாதிருக்கும் தன்மைக்குள் அடக்கி வைத்திருந்தார். சகலவற்றையும் அறியும் ஆற்றல் மிக்க தேவத்தன்மை உடையவராய் அவர் இருந்தும் சில விடயங்களை அறியாதிருந்தமைக்கு (27) குறிப்பாக தனது மறுவருகையின் காலத்தை அறியாதிருந்தமைக்கு இதுவே காரணமாகும். அறியாமை மானித் தன்மையின் முக்கியமான ஒரு அம்சமாய் இருப்பதனால், உண்மையான மானிடத் தன்மையைத் தம்மோடு சேர்த்துக் கொண்ட இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் சில விடயங்களை அறியாதவராகவே இருந்தார். 

இயேசுக்கிறிஸ்து மானிடத் தன்மையின் வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதர்களைப் போலவே சில விடயங்களை அறியாதிருந்தபோதும் சில சந்தர்ப்பங்களில், மனிதர்களால் எவ்விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத விடயங்களை அறிந்திருந்தமைப் பற்றியும் சுவிஷேசப் புத்தகங்களில் நாம் வாசிக்கலாம். அவர் மனிதர்களுடைய உள்ளங்களில் இருப்பதையும் அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை விபரங்களையும் எதிர்கால சம்பவங்களையும் அறிந்திருந்தார். (29) இதற்குக் காரணம் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்தின்படியான பணியைச் செய்வதற்காக இவ்வுலகுக்கு  வந்தமையால் , அப்பணியைச் செய்வதற்கு வேண்டிய அளவு தெய்வீக அறிவு அவருக்குகு இருந்தது. ஆனால், அவர் தாம் செய்ய வந்த பணியோடு  தொடர்பில்லாத விடயங்களைப் பொறுத்தவரை, மானிடத் தன்மையின் வரையறை காரணமாக அவற்றை அறியாதவராகவே இருந்தார். (30)

இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்தில் மானிட வரையறைக்கு உட்பட்டிருந்தமையால் “தமது தெய்வீகத் தன்மைகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தார்.(31) எனினும் இவ்வரையறை தெய்வீகத் தனமைகளை அவரிலிருந்து அகற்றிவிடவில்லை. தெய்வீகத் தன்மையின் செயற்பாடுகள் மானிடத் தன்மையால் மட்டுப்படுத்தப் பட்டிருந்த்து. (32) யெகோவாவின் சாட்சிகள் இயேசுக் கிறிஸ்துவின் “மாமிசமாகுதலை“ அதாவது, தெய்வீகத் தன்மைகளோடு அவர் மானிடத்  தன்மைகளையும் கருத்திற் கொள்ளாததினால் அவரது மானித் தன்மை தெய்வீகத் தன்மையில் ஏற்படுத்திய வரையறைகளை அறியாதவர்களாக, இத்தகைய வரையறைக்கு உட்பட்ட காலத்தில் அவர் கூறிய சில கூற்றுக்களை அடிப்படையாகக் வைத்து, அவரது தேவத்துவத்தை மறுதலித்து வருகின்றனர். இயேசுக்கிறிஸ்து மானிட வரையறைக்கு உட்பட்டிருந்த காலத்திலும் தேவத் தன்மை உடையவராகவே இருந்தார் என்பதை கொலோசெயர் 2:9 அறியத் தருகிறது. (33)

Footnote & Reference 
(24) Anonymous, Should you Believe in the Trinity p. 19   
(25) இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே மிக கடினமானதாகும். 
(26) சுவிஷேசப் பத்தகங்களில் இயேசுக்கிறிஸ்து பல சந்தர்ப்பங்களில் மற்றவர்களிடம் கேள்வி கேட்டு விடயங்களைத் தெரிந்து கொண்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இது ஒரு ஆசிரியர் தன் மாணவர்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக்க் கேள்வி கேட்பதைப் போன்ற செயல் அல்ல. உண்மையிலேயே அவர் அறியாதிருந்த விடயங்களைத் தெரிநது கொள்வதற்காகவே இது பற்றி மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளார். (L. Morris The Lord form the Heaven p 44,46)
(28) L. Morris The Lord form the Heaven p 44- 50
(29) மத்தேயு 9-4, 21:2-4, மாற்கு 2:8, லூக்கா 6:8, 9:47, யோவான் 1:47-48, 2:24-25, 4:16-19, 4”:29, 6:64, 18:4
(30) ) L. Morris The Lord form the Heaven p 48
(31). R.C. Lenski, The Interpretation of St. Mark’s Gospel, pp590-591
(32) M.J. Erickson, Christian Theology p 735
(33) தேவனுடைய திரித்துவத்தப் போலவே இயேசுக்கிறிஸ்துவினுடைய இரு தன்மைகளையும் நம்முடைய குறுகிய அறிவினால் முழுமையாக்க்க் கிரகிக்க முடியாது. இயேசுக்கிறிஸ்து முழுமையான தேவனாகவும், முழுமையபான மனிதராகவும் இருந்தார் என்றே வேதம் கூறுகிறது. இவ்விரு தன்மைகளும் இயேசுக்கிறிஸ்துவில் ஒரேசமயத்தில் எவ்வாறு முழுமையாக இருந்தன என்பது நமது அறிவிற்கு எட்டாத விடயமாயினும் இதுவே வேதம் வெளிப்படுத்தும் சத்தியமாய் உள்ளது. 




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment