- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 27 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத்.-2 -இலக்கணம் இன்றியமையாததே(3)

5. பெயர் வழக்கங்கள்

(அ) பல அரசர்களுக்கு ஒரே பெயர் இருந்தது. 

I. பார்வோன் : ஆபிரகாம் காலம் முதல் தானியேலின் காலம் வரை எகிப்து
        நாட்டின் அரசர்களுக்கெல்லாம் பார்வோன் என்ற பெயர் வழங்கியது. 

II. பித்தொலொமி : பேரரசன் அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின் மூன்று
        நூற்றாண்டுகளாக எகிப்து நாட்டின் அரசர்களுக்கு பித்தொலொமி என்ற
        பெயர் வழங்கப்பட்டது. 

III. அபிமெலேக்கு : பெலிஸ்திய அரசர்களுடைய பொதுப் பெயர் 
        (ஆதி. 20:2 ; 26:1; சங். 34 தலைப்பு)

IV. பெனாதாத் : சீரியா நாட்டின் அரசர்களுடைய பொதுப் பெயர் 
        (1 இராஜா 20:1, 2 இராஜா 8:7; 13:24)

V. ஏரோது : புதிய ஏற்பாட்டில் நான்கு அரசர்களுக்கு ஏரோது என்ற பெயர்
        வழங்கப்பட்டது. 


(ஆ) சிலருக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.

I. மேசேயின் மாமனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாகத் தெரிகின்றது.
        எத்திரோ(யாத். 3:1) ஓபாப். (நியா 4:11)

II. லேவி. (மாற். 2:14) (மத்தேயு 9:9; 10:3)

III. திதிமு எனப்பட்ட தோமா(யோவான் 11:16; 20:24;21:2) திதிமு என்பது
       இரட்டைப் பிள்ளைகளைக் குறிக்கும்.
நான்காம் சுவிஷேசத்தில் மட்டும்
      திதிமு என்ற பெயர் வழங்கப்படுகின்றது. 

IV. சவுல் (அப். 7:58 முதல் அப். 13:9 முடிய)
        பவுல் (அப். 13:9 முதல் இறுதி வரை)

V. சீலா (அப். 18:5 சில்வானு (2 கொரி. 1:19)


(இ) ஒரே பெயர் கொண்ட இருவர்

I. யாக்கோபு யோவானுடைய சகோதரன் பன்னிருவரில் ஒருவன் (மத். 10:2)
        சிரச்சேதம் பண்ணப்பட்டவன். (அப். 12:2)
       யாக்கோபு இயேசுவின் சகோதரன் (மத். 13:55; கலா. 1:19) எருசலேம் சபை
       மூப்பர் (அப். 15:13) நிருபத்தை எழுதியவர் (யாக். 1:1)

II. பிலிப்பு பன்னிருவரில் ஒருவன் (மத். 10:3)
        பிலிப்பு எழுவரில் ஒருவன் (அப். 6:5; 21:8) நற்செய்திப் பணி செய்தவன் 
         (அப். 8:5; 21:8)


(ஈ) வெவ்வேறு இடங்களுக்கு ஒரே பெயர்

I. செசரியா – பிலிப்பு செசரியா மத். 16:13
கலிலேயா கடலுக்கு வடக்கே, யோர்த்தான் நதிக்கு கிழக்கே, எர்மோன் மலைக்குத் தெற்கே, செசரியா துறைமுகம் அப். 10:1; 12:19;23:23 முதலியன கடலோரமாயுள்ளது. சமாரியா நாட்டிலுள்ளது. 

தமிழ் வேதாகமப் புத்தகத்தில் மூன்றாவது தேசப்படத்தில் (பலஸ்தீனா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்) இவ்விரண்டு செசரியா பட்டணங்களும் தெளிவாக்க் காட்டப்பட்டிருக்கின்றன.)

II. அந்தியோக்கியா- சீரியா நாட்டு அந்தியோக்கியா (அப். 11:20,26: 13:1) தமஸ்குவுக்கும் தீரு சீதோனுக்கும் வடக்கே சீப்புரு தீவுக்கும் கிழக்கே உள்ளது. 

இது நான்காவது பாடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். கலாத்தியா என்ற நாட்டின் பெயருக்குப் பக்கமாகவும் “க” என்ற எழுத்துக்கும் “ல” என்ற எழுத்துக்கும் நடுவாகவும் போட்டிருக்கிற புள்ளிதான் பிசீதியா நாட்டு அந்தியோகியா


(உ) ஒரே இடத்திற்கு மூன்று பெயர்கள் 

I. எகிப்து நாடு
       காம் (சங். 78:51; 105:23) என்றும் ராகப் (சங். 87:4; 89:10;  ஏசாயா 51:9)  என்றும்
       அழைக்கப்பட்டது. ஏசாயா 30:7 இல் சும்மாயிருப்பது இறை மக்களுக்கப்
       பெலன் என்று பொருள்படுமா? அல்லது உதவி செய்ய விரைவாய்
       வரவேண்டிய எகிப்தியர் வராமல் சும்மாயிருப்பார்கள் (சும்மாயிருக்கும
       ராகாப்) என்று பொருள்படுமா?(புதிய திருப்புதலைப் பார்க்கவும்)

II. எருசலேம் 
       சீயோன் (சங். 137:1 என்றும் தாவீது வாசம் பண்ணின அரியேல் (ஏசாயா 29:1)
       என்றும் அழைக்கப்பட்டது.

III. சீனாய்மலை
        ஓரேப் (சங். 106:19) என்றும் அழைக்கப்பட்டது.

IV. கலிலேயா கடல்
       திபேரியா கடல்(யோவான் 21:1) என்றும் கின்னரேத் கடல் (எண். 34:11)
      என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 

V. சாக்கடல் (Dead Sea)
      இந்தப் பெயர் வேதத்தில் இல்லை. மாறாகச் சமபூமயின் கடல் (2 இரா. 14:25)
       என்றும் கீழ்க் கடல் (எசேக். 34:3,12) என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. 

VI. மத்திய தரைக்கடல்
        மத்திய தரைக்கடல் என்ற பெயர் வேதத்தில் இல்லை. வேத்த்தில்
      பெலிஸ்தரின் சமுத்திரம் (யாத். 23:31) என்றும் கடைசி சமுத்திரம் (உபா.                  11:24;34:2; யோவேல் 2:20) என்றும் பெருங்கடல் (எண். 34:6,7) என்றும்                           வழங்கப்பட்டுள்ளது. 


முதல் விதி நமக்கு கற்றுத் தருவது
இலக்கண விதிகளின்படி வசனத்திலுள்ள சொற்களின் சாதாரணப் பொருளை நாம் முதலாவது கண்டறிய வேண்டும். 


(அத்தியாயம் 2 முற்றிற்று)
(வளரும்)

Monday 19 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத். 2 இலக்கணம் இன்றியமையாததே(2)

4. மொழிமரபுகள்

ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் பொருளை விளங்கிக் கொள்ளச் சிலவேளைகளில் அம்மொழி மரபுகளையும் கவனிக்க வேண்டும். எபிரேய மொழியின் சில மரபு வழக்குகளை ஆங்கில வேதாகமத்திலும் தமிழ் வேதாகமத்திலும் காணலாம். குறிப்பாகப் புதிய திருப்புதலைப் பார்க்கவும். 

(i)  ஏதோ ஒரு முக்கிய பண்புடையவனை அந்தப் பண்பின் மகன் என்ற ழைப்பது ஒரு மொழி வழக்கு. 

1 சாமுவேல் 2:12 “பேலியாளின் மகள்”– ப.தி

“ஏலியின் குமாரர் போக்கிரிகளாயிலுந்தார்கள்         – பு.தி

பேலியாள் ஒரு பிசாசின் பெயர் – பேலியாள்             – Worthless

லூக்கா 10:6 சமாதான பாத்திரன்                                  - ப.தி

சமாதான சீலன்                                          - பு.தி

சமாதானத்தின் மகன்                                          - பு.தி அடிக்குறிப்பு

எபேசியர் 2:3 கோபாக்கினையின் பிள்ளைகள்            – ப.பு. திருப்புதல்கள்

சினத்திற்கு ஆளாயிருந்தோம்                                   - R.C.V

எபேசியர் 5:6 கீழ்படியாமையின் பிள்ளைகள்                - ப.தி

கீழ்படியாதவர்கள்                                          - பு.தி

கீழ்படியாத மக்கள்
                                        - R.C.V
எபேசியர் 5:8 வெளிச்சத்தின் பிள்ளைகள்                      – ப.தி, பு.தி

ஒளியின் மக்கள்
- R.C.V 


(ii) நேசிக்கின்றது” “வெறுக்கின்றது” என்ற சொற்கள் ஒன்றை அல்லது ஒருவனை இன்னொன்றை விட அல்லது இன்னொருவனை விட அதிகமாய் தெரிந்து கொள்ளுதலைக் குறிக்கும். 

லூக்கா 14:26  என்னிடத்தில் வருகிறவன், தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.“ என்பது செமிட்டிக் மரபுபடி தாய், தந்தையைவிட இயேசுவை அதிகம் தெரிந்துகொள்ளாவிட்டால் (R.C.V அடிக்குறிப்பு) என்பது அர்த்தம். 
ரோமர் 9:13 யாக்கோபின்மேல் அன்புகூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன். இந்த வாக்கியத்திற்கு எபிரேய மொழியின் தனித் தன்மைக்கேற்ற பொருள். ஏசாவிடம் அன்பைவிட யாக்கோபிடம் அதிக அன்பு காட்டுகிறேன் என்பதாகும். (R.C.V. அடிக்குறிப்பு)

அதாவது, ஏசாவுக்கு உலக நன்மைகளை அளித்தேன். யாக்கோபுக்குப் பரம நன்மைகளை அளித்தேன் என்று பொருள்படும். (மத். 10:37, யோவான் 12:25, மல்கியா 1:2,3, ஆதி. 29:31, உபா. 21:15) 


III. சில இடங்களில் அல்ல என்ற பதத்திற்கு மாத்திரமல்ல என்று பொருள்படும். 
உதாரணமாக நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்(ஆதி 45:8)யோசேப்பின் அண்ணன்மார் தங்களுடைய தப்பியை விற்று எகிப்துக்கு அனுப்பிய குற்றவாளிகளாயிருந்தார்கள். என்பதில் ஐயமில்லை. இந்த வாக்கியத்தின் உண்மையான கருத்து என்னவெனில் “நீங்கள் (விரோதங்கொண்டு தீய நோக்கத்துடன்) மாத்திரமல்ல, தேவனே(நல்ல நோக்கங்கொண்டு) உங்களைத் தடுத்தாட் கொண்டு என்னை அனுப்பினார்.

நாங்கள் எம்மாத்திரம் உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது (யாத். 16:8) சபையின் தலைவர்களாகிய எங்களுக்கு விரோதமாக மாத்திரமல்ல. சிறப்பாக எங்களை அபிஷேகித்த ஆண்டவருக்கு விரோதமாகத்தான் கலகஞ் செய்தீர்கள் என்பது கருத்தாகும். 

 என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல(என்னை மாத்திரமல்ல), என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் (மாற்கு 9:37) இயேசுவை ஏற்றுக் கொள்வது அவரை அனுப்பின பிதாவையும் ஏற்றுக் கொள்வதாகும். சிறு பிள்ளைகளையும் (மாற்கு 9:36,37) பலவீனமுள்ளவர்களையும் (ரோமர் 14:1) ஏற்றுக் கொண்டு சேர்த்துக் கொள்வது இயேசுவை ஏற்றுக் கொள்வதாகும். 
அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல(மனுஷரை மாத்திரம் அல்ல), .... தேவனையே அசட்டைபண்ணுகிறான்.(1 தெச. 4:8)

IV. சில இடங்களில் பெற்றோரின் பெயர்கள் சந்ததியாருக்கு வழங்கப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக யாக்கோபு என்றும் இஸ்ரவேல் என்றும் ஈசாக்கின் இளைய மகனுக்கு மட்டுமன்று, அந்தக் குடும்பத் தலைவனின் பரம்பரையினர் அனைவருக்குமே பெயர்களாயின.(சங். 14:7; 46:7; 2 இரா 18:17,18) தேவனால் யாக்கோபுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பெயர் இன்றைக்கு யூதக்குலம் வாழ்ந்து வருகின்ற இஸ்ரவேல் நாட்டுக்குப் பெயராயிற்று. 


V. பேரப் பிள்ளைகளை மகன் என்றும் குமாரன் என்றும் சொல்வதுண்டு.
ஆதியாகமம் 46:2 ராகேல் யாக்கோபுக்கு பெற்ற குமாரர் இரண்டுபேர் மட்டுமே (யோசேப்பு, பென்யமீன்) இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் பன்னிரெண்டுபேர். ஆகவே ராகேல் வழியாய் யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் பதினாலு பேர் (ஆதி. 46:19-20) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சவுலின் மகனாகிய மேவிபோசேத்து மேவிபோசேத்மு சவுலுக்கல்ல. சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்தவன். (2 சாமு. 4:4; 9 ஆம் அதிகாரத்தைப் பார்க்க)


VI. சில இடங்களில் பாட்டன் தந்தை என்றழைக்கப்பட்டுள்ளதையும் பார்க்கிறோம். 
தானியேல் 5:18 உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சர் பெல்ஷாத்சாரின் தந்தையல்ல. பாட்டனாராகும். நபோனிதாஸ் (Nabonidas) நேபுகாத்நேச்சரின் மகளை மணந்து அரசானான். தன்னுடன் அரசில் பங்கு கொள்ளும்படி தன் மகன் பெல்ஷாத்சாருக்கு அரச பட்டமளித்தான். இருவருக்கும் கூட்டு பொறுப்பு இருந்தால் பெல்ஷாத்சார் தானியேலுக்கு மூன்றாம் பதவியைப் பரிசாக அளிப்பதாக வாக்களித்தார். தன் தந்தை முதல் பதவியையும் தான் இரண்டாம் பதவியையும் வகித்தமையால் தானியேலுக்கு இரண்டாம் பதவியை அளிக்க முடியவில்லை


VII. சில எண்களுக்கு சொல்லுக்கு செல் (சரியான) கருத்து கூறுவது தவறாயிருக்கலாம். உதாரணமாக “பத்து“ என்றால் சில இடங்களில் “பல என்று பொருள்படும். ஆதி. 24:55; 31:7; தானி. 1:20. “ஏழு” என்றும் “எழுபது” என்றும் கூறுவது சில இடங்களில் முழுமையைக் குறிக்கலாம். சங். 119:164; நீதி. 26:16,25. 'ஆயிரம்' என்ற எண் நீண்ட காலத்தைக் குறிக்கும். (வெளி. 20:4,5)





Wednesday 14 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத்தியாயம் 2- இலக்கணம் இன்றியமையாததே.


திருமறையைச் சரியாய் விளங்கிக் கொள்ளவும் பிறருக்கு விளக்கிக் காட்டவும் நான்கு அடிப்டை விதிகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று முந்திய அத்தியாயத்தில் கண்டோம். அவற்றில் முதலாவது விதியைப் பற்றி இங்கே சற்று விரிவாக்க காண்போம். 


விதி 1- இலக்கணவிதிகளின்படி வேதத்தை விளக்கம் செய்ய வேண்டும்

1. அதிகார வசனப் பகுப்பு

நம்முடைய வேதாகமத்தில் காணப்படும் அதிகார, வசனப் பிரிவுகள் வேததை வாசிக்கவும் ஆராயவும் நமக்குப் பேருதவியாயிருக்கின்றன. ஆயினும் மூலநூலில் இத்தகைய பிரிவுகள் கிடையாது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இராபர்ட் ஸ்டீபன்ஸ் இந்தப் பாகுபாடுகள் சரியான முறையில் அமையவில்லை.
  1. II இராஜாக்கள் 7ஆம் அதிகாரத்தின் பொருள் 6:24 ஆரம்பமாகின்றது.
  2. ஏசாயா 53ஆம் அதிகாரத்தின் பெருள் 52:13 இல் ஆரம்பமாகின்றது.
  3. யோசுவா 5:13-15 ஐ 6ஆம் அதிகாரத்துடன் சேர்த்து வாசிக்கவும் 6:1 ஒருவேளை பிறை அடைப்புக் குறிக்குள் (Brackets)போடப்பட்டிருக்க வேண்டும்
  4. யாத்திராகமம் 5:23ஐ வசனத்துடன் நின்று விடாமல் 6:1-13ஐத் தொடர்ந்து வாசித்தல் நலம்
  5. 2 கொரிந்தியர் 7:1 ஆம் வசனம் 6ஆம் அதிகாரத்தின் கடைசி வசனமாக இருக்க வேண்டும்.
  6. கொலோசேயர் 4:1ஆம் வசனம் 3 6ஆம் அதிகாரத்தின் கடைசி வசனமாக இருக்க வேண்டும்.
  7. யோவான் 8:1 ஆம் வசனம் 7ஆம் அதிகாரத்தின் கடைசி வசனம்.
  8. ஏசாயா 4:1 ஆம் வசனம் 3ஆம் அதிகாரத்தின் கடைசி வசனம்.



2. நிறுத்தற் குறிகள் 

  1. சங்கீதம் 12:1  இல் கேள்விக்குறி தேவையா?பழைய திருப்புலையும் புதிய திருப்புதலையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
  2. யோவான் 12:27 என்னை இரட்சியும்  என்று சொல்வேனோ(ப.தி) அல்லது என்னை இரட்சியும் ஆனாலும் (பு.தி)
  3. ஏசாயா 45:11 “.....கேளுங்கள்… கட்டளையிடுங்கள்“ கர்த்தர் ஊக்கத்துடன் ஜெபிக்கும்படி ஏவுகிறார் என்பது வியாக்கியானம்.


    ஆனால் முன்பின்னுள்ள வசங்களை நாம் பார்க்கும்போது கேட்கிறதுக்கும் நீங்கள் யார்? கட்டளையிடுகிறதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் என்றும் பொருள்படும் “வருங்காரியங்களைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறீர்களே! என் பிள்ளைகளைப் பற்றி… எனக்கு கட்டளையிடுவீர்களே! என்ற புதிய மொழிபெயர்ப்பு சரியாகஇருக்கலாம்.
  4. யோவான் 7:37-38 ஜீவனுள்ள நதிகள் விசுவாசியின் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடுமா? அல்லது இயேசுவின் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடுமா? 39ம் வசனம் பழைய விளக்கத்திற்கு ஆதரவு அளிக்கின்றதாகத் தெரிகின்றது. ஆனால் பழைய ஏற்பாட்டில் அதற்கேற்ற வேதவாக்கியமில்லாத காரணத்தால் ஒரு சிலர் நிறுத்தக் குறிகளைச் சற்று மாற்றி இரண்டாம் விளக்கம் கூறுவர். ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு இந்த இரண்டாம் விளக்கத்திற்கு ஆதரவாக. 

37ம் வசனத்தில் ”யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்! என்றும்  38ம் வசனத்தில் மறைநூல் கூறுவதுபோல மறைநூல் கூறுவதுபோல், ‘‘அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.“ என்று கூறுகின்றது. (சக. 14:8, எசே. 47:13)

ஆனால் நிறுத்தற் குறிகளை நம் விருப்பப்படி மாற்றியமைப்பது சரியல்ல. ஒரு சிலர் தவறான உபதேசங்களைக் நிலை நாட்ட இவ்விதம் செய்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witness) லூக்கா 23:43 இல் ஒரு கால் புள்ளியைப் பெயர்த்து “ இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” என்பதற்கு மாறாக. “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்“  என்று வேத உண்மையை திருத்திப் போதிக்கிறார்கள். 

இங்கிலாந்து நாட்டில் புகழ்பெற்ற போதகர் ஒருவர் யோவான் 9:3 இல் “அது இவன் செய்த பாவமுமல்ல, இவன் பெற்றோர்  செய்த பாவமுமல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டாக… நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்“ என்று வசனத்தை மாற்றி அமைத்தார். கடவுளின் கிரியைகள் இவனிடம் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.“ என்ற கருத்து அந்தப் போதகருக்குப் பிடிக்காததால்   தம் விருப்பம் போல நிறுத்தற் குறிகளை மாற்றியது தவறு. தமிழ் வேதாகமத்தில் சரியான கருத்தையே காட்டும் வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


3. வினைச்சொற்கள்

  1. யோவான் 5:39, 40 ஐ வாசிக்கவும் பழைய திருப்புதலில் “வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்” என்ற வினைச்சொல் ஏவல் வடிவத்தில் உள்ளது. புதிய திருப்புதலில் “வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்” என்று உள்ளது. எது சரி? கிரேக்க மொழியில் இவ்வினைச்சொல்லுக்கு எப்படிப் பொருள் கூறலாம்? எனவே இதன் பொருளை முன் பின்னுள்ள வாக்கியங்களை ஆதாரமாக்க் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆண்டவர் யூதத் திருமறை அறிஞர்களுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.  அவ்வேத பாரகர்கள் பழைய ஏற்பாடு முழுவதையும் நுட்பமாக கற்றுத் தேறியவர்கள். பல பகுதிளை மனப்பாடமாக கற்றிருந்தவர்கள். இவர்களிடம் “ஆராய்ந்து பாருங்கள்” என்று இயேசு கூறியது எண்ணுவது பொருந்தாது. ஆனால் அதிகமாக ஆராய்ச்சி செய்தும் திருமறை சுட்டிக்காட்டும் மேசியா இவர்தான் என்று அவ்வேதபாரகர்கள் உணராதிருந்த காரணத்தினால் அவர்கள் இயேசுவிடம் வரவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே, புதிய திருப்புதலின்படி வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்(ஆயினும் என்னிடம் வர உங்களுக்கு மனதில்லை) என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்கக் கூடும்

  2. ரோமர் 5:1’ “சமாதானம் பெற்றிருக்கிறோம்” என்ற பழைய திருப்புதல் சரியா அல்லது சமாதானமுடையவர்களாக நிலைத்திருப்போமாக” என்ற புதிய திருப்புதல் சரியா? மூலமொழியின் சில சுவடிகளில் (Ectomen) எகோமென் என்ற பாடம் உண்டு. “ஒ” அல்லது ”ஓ” அவ்வளவுதான்.

    முன்பின்னுள்ள பகுதிகளைக் கவனிக்குங்கால் பழைய திருப்புதல்தான் சரி என்பது புகழ்பெற்ற பேராயர் ஹண்ட்லி மோல் (Bishop Handley Moule) என்பவரின் முடிவு.
  3. 1 யோவான் 3:9 “கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ் செய்வதில்லை…” என்று கூறுகின்றது.

    அவன் பாவத்தில் வாழமுடியாது. (R.C.V) என்பதே உண்மையான கருத்து. அவன் சிலவேளைகளில் பாவத்தில் விழலாம். (1 யோவான் 1:7,8; 5:16,17) ஆனால் அவன் பாவநிலையில் தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டான்.
  4. 1 யோவான் 1:7 “சுத்திகரிக்கின்றது என்பது நிகழ்காலத்தையும் தொடர்ச்சியையும் குறிக்கும் வினைச்சொல். ஆகவே இயேசுவின் இரத்தம் எவ்விதப் பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக் கொண்டேயிருக்கின்றது. (Keep in cleansing us) என்று பொருள்படும். 


(வளரும்)

Wednesday 7 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத்தியாயம் - 1 அடிப்படை உண்மைகள்

அத்தியாயம் - 1


அடிப்படை உண்மைகள்



ஓர் உத்தம கிறிஸ்தவன் ஊழியன் மறைநூல் அறிஞானக இருத்தல் அவசியம். அவன் தன் கருவுலத்தினின்று புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கின்ற வீட்டுத் தலைவனுக்கு ஒப்பாவான். (மத். 13:52) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இண்டிலுமுள்ள கருத்து நுணுக்கங்களை அவன் ஆராய்ந்தறிந்து அவற்றை தனக்கு உரிமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி பிறருக்கும் எடுத்துச் சொல்வான். எனவே, வேதத்தை விளக்கம் செய்யும் முறையானது என்பது பற்றிய ஆராய்ச்சி கிறிஸ்துவின் அடியார்க்கு இன்றியமையாததாகும். ஆயினும் இவ்வாராய்ச்சியினைத் தொடங்கும் முன்னர் நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் உண்டு.


1. இவ்வாராச்சியின் முக்கியத்துவம்

(அ) வேதாகமம் முழுவதும் தேவனுடைய வார்த்தை ஆகவே அதைப் புரிந்து கொள்ள நாம் சிரத்தை எடுப்பதோடு தகுந்த முயற்சியும் செய்ய வேண்டும். “கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது, அதை மனித வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாமல் தேவ வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்” (1 தெச. 2:13)

(ஆ) வேதாகமம் நமக்கு அருளப்பட்டிருக்கும் ஒரு தேவ தூதாகும். நமக்கென்று இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு கடிதமாகும். எனவே, இக்கடிதத்தில் தேவாதி தேவன் நமக்குக் கூறும் செய்தி என்னவென்று நாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். தேவன் எழுதுவித்த கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமன்றோ!

(இ) தேவ வார்த்தையாகிய வேதாகமத்தில் அடங்கியுள்ள உண்மைகளைப் பிறருக்கு விளக்கிக் கூறவேண்டியது தூதுவராகிய நமது கடமை. எழுத்தறிவற்ற மக்களுக்கு ஒரு கடிதத்தை படித்துக் காட்டும்போது அதன் உண்மையான கருத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் மிகக்வனமான வாசித்து விளக்குவது போலவே வேதாகமத்தை நாம் நுட்பமாக ஆராய்ந்து மக்களுக்கு விளக்கம் செய்தல் வேண்டும். தேவ தூதுடன் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது. நமது சொந்த கற்பனையின் படி தெய்வீக உண்மையை மிகைப்படுத்தவும் அழகுற வர்ணிக்கவும் கூடாது.

2. இவ்வாராய்ச்சியின் இடர்பாடுகள்

(அ) தேவனுடைய வார்த்தையை அற்ப மக்களாகிய நாம் உடனுக்குடன் விளங்கிக் கொள்வது இயலாததாகும். “உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:9) என்று ஆண்டவர் கூறுகின்றார். வேதாகமத்தில் பல்வேறு கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போல் தோன்றலாம்.

(ஆ) திருமறை தெய்வீக அதிகாரமுள்ள நூல் என்றும்“ கொள்கை சம்பந்தமான வாக்குவாதத்தில் அதுவே உரைக்கல் என்றும் நாம் ஒப்புக் கொண்டாலும் இன்னும் நாம் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டுக்குள் வந்து சேரவில்லை. கள்ள உபதேசத்தைப் பரப்பும் பிரிவினர் கூட வேதாகமத்தை ஆதாரமாக வைத்தே தங்கள் கொள்கைகளைப் பரப்புகின்றனர். எனவே வேதத்தை விளக்குவதற்கேதுவான சரியான விதிமுறைகளையும் விதிகளையும் நாம் கடைபிடித்தால் இந்தத் தவறுகளிலிருந்து நாமும் தப்பலாம். நம்முடன் பிற கிறிஸ்தவர்களையும் தப்புவிக்கலாம்.

(இ) அறுப்பத்தாறு நூற்களடங்கிய வேதாகமம் பல்வேறு இடங்களில் (யூதேயா, பாபிலோன், அரபுநாடு, ரோமாபுரி) வெவ்வேறு காலங்களில் (கி.மு. 1500 கி.பி. 100 வரை) எழுதப்பட்டமையால், இந்நூற்களின் ஆக்கியோன், இடம், காலம் போன்ற விபரங்களைக் குறித்த சர்ச்சைகள் எழலாம். (பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி எபிரேயு மொழியிலும், சிலபகுதிகள் அரேமிய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டமையினால் இம்மொழிகளின் இலக்கணமுறை, மற்றும் ஒப்பனை உருவகச் சொற்கள் ஆகியவற்றை குறித்த சிக்கல்களும் எழும்பக் கூடும்)


3. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான பண்புகள்

வேதத்தை சரியான முறையில் விளங்கி, பிறருக்கு விளக்கம் செய்யத் தேவையான பண்புகள் மூன்றாகும்.

(அ) ஜெப சிந்தையோடு கூடிய சுறுசுறுப்பு

(ஆ) சிரமத்தை பாராமல் உழைக்கும் தன்மை.

(இ) இடைவிடாமல் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் 

ஆகியவைகளே

ஜெப வாழ்க்கை இல்லாத வேத ஆராய்ச்சி பயனற்றது. நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவித்திராத கருத்துக்களைச் சுய அறிவினால் போதிப்பதும் பயனற்றதே. வாழ்க்கை முழுவதும் வேதத்தைப் படித்து ஆராய்ச்சி செய்யும் கிறிஸ்தவனே நற்போதனாயிருக்க முடியும். “நன்றாய் ஜெபிக்கிறவன் நல்ல வேத அறிவாளியாவான். ஏனெனில் ஜெபிக்கிறவன் வேதத்தைக் கருத்துடன் படிக்கவும் செய்வான்“ என்கிறார் ஒருவர். 


வேதத்தை ஆராயும் முயற்சியில் சிறந்த பலனை அடையக்கூடியவன் யார்?

I. ஆவிக்குரிய மனிதன் மறுபடியும் பிறந்த மனிதன் (யோவான் 3:3, 1 கொரி. 2:14) 

II. சாந்தமுள்ள மனிதன் (சங். 25:9)

III. கீழ்படிதல் உள்ள மனிதன் (யோவான். 7:17)

IV. ஜெபம் செய்கிற மனிதன் (சங். 119:18 ; யாக். 1:5)


4. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான நூல்களும் துணைநூல்களும்

(அ) வெகுகாலம் நிலைத்திருக்கக்கூடிய ஒத்த வாக்கிய வேதாகமம்

(ஆ) புதிய திருப்புதலையும் வாங்கி வாசிப்பது நன்று. புதிய மொழிபெயர்ப்பு ஆராய்ச்சிக்கு இன்றியமையாத துணை நூலாகும்.

(இ) திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்டது. (95/96 இல்)

(ஈ) உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்த தமிழ் இலக்கியக் கழகம் 1970 இல் வெளியிட்ட புதிய ஏற்பாடு ஓரளவுக்கு பயனுள்ளதாகும். கத்தோலிக்க அறிஞர்கள் முதல் முறையாக்க் கிரேக்க மூலநூலிலிருந்து உயர்ந்த தமிழ்நடையில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள இப்புதிய ஏற்பாட்டைச் சற்று கவனத்துடன்தான் பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு பெரும்பாலும் சிறப்பாக அமைந்திருப்பினும் சில பிழைகளும் உண்டு. அடிக்குறிப்புகள் பயனுள்ளவையாயிருப்பினும் ரோமன் கத்தோலிக்க கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் இந்த அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

(உ) ஆங்கில வேதாகமத்தைப் படிப்பவர்கள் 1611 இல் வெளியான பழைய திருப்புதலுடன் (King James Authorised) ஒரு புதிய திருப்புதலையும் பயன்படுத்தலாம். புதிய மொழிபெயர்ப்புகளில் New International Version மிகவும் சிறந்தாகும்.

(ஊ) வேத அகராதி (Bible Dictionary) ஒன்றும் ஒத்த வாக்கிய அகராதி (Bible Concordance) ஒன்றும் இருப்பின் மிக உதவியாக இருக்கும்

(எ) வேத விளக்க நூல்கள் (Bible Commentaries)

மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கிடைக்காவிடினும் சோர்ந்து போகத் தேவையில்லை. உங்களிடம் உள்ளவற்றையே ஜெப சிந்தையுடன் பயன்படுத்தலாம்.

5. வேதத்தை விளக்கும் முயற்சியில் கட்டாயமாக்க் கடைப்பிடிக்க வேணடிய நான்கு அடிப்படை விதிகள்

(அ) இலக்கண விதிகளுடன் வேதத்தை விளக்கம் செய்தல் வேண்டும். சொற்பொருளைச் சரியாய் விளக்குதல் அவசியம். (Interpret with a proper regard for grammatical usage and the plain meaning of words)

(ஆ) முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்து அவற்றின் பொருளுக்கு ஏற்ற முறையில் வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the immediate context)

(இ) நாம் விளக்கும் வசனம் வேதாகமத்தின் எந்தப் புத்தகத்தில் உள்ளதோ அந்தப் புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவ்வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the character and purpose of the book in which your text is found)

(ஈ) வேதாகமத்தின் முழு கருத்துக்கும் இசைந்தவாறு வசனத்தை விளக்க வேண்டும். எனவே வசனங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். Interpret with due regard to teaching of the Bible. Scripture is its own commentary compare scripture with scripture.)

(அத்தியாயம் 1 முற்றிற்று)
(வளரும்)