- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 29 September 2011

ஜெபத்தின் தவறான உபயோகம்



ஆலயமொன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆராதனையில் சிறுவனொருவன் கருத்துடன் ஜெபித்துக் கொண்டிருந்ததைக் குருவானவர் கண்டார். சற்று நேரம் அவனை அவதானித்துப் பார்த்த குருவானவர், அவன் “டோக்கியோ“ “டோக்கியோ“ சொல்லிக் கொண்டிருந்ததை செவிமடுத்தார். 

ஆராதனை முடிந்த பினனர் குருவானவர் அந்தச் சிறுவனிடம் சென்று “மகனே நீ பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்கக் சந்தோஷமாயிருந்தது. ஆனால், நீ டோக்கியோ டோக்கியோ என்னும் பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததன் காரணம் என்ன?“ என்று கேட்டார். 

குருவானவரின் கேள்விக்குப் பதிலளித்த சிறுவன், “குருவானவரே நான் இப்போதுதான் எனது பாடசாலையின் புவியியல் பாடப் பரீட்சையை எழுதிவிட்டு வந்துள்ளேன். எனவே, டோக்கியோவை பிரான்ஸ் நாட்டின் தலைநகராக்கும்படி ஜெபித்துக் கொண்டிருந்தேன்“ என்று கூறினான். 

மானிட ஜெபத்திற்கு உத்தரவாதமளிக்கும் தேவன், அற்புதமான காரியங்களைச் செய்வது உண்மையாயினும், அவர் நம் தவறுகளை ஜெபத்தில் திருத்துவார் எனக் கருதுவது தவறாகும். அதாவது நாம் ஒரு பிழையை செய்து விடடு அப்பிழையை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக ஜெபிப்பது தவறாகும். 

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். (1 யோவான் 5:14) என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 





Sunday 25 September 2011

நட்பின் படிகள்




ஒவ்வொரு கற்களின் மீதும் மெதுவாக அடிவைத்து கவனமாக ஒரு ஆற்றினை கடந்த அனுபவம் உங்களுக்குண்டா? ஒரு சிறுவனாக நான் இதைச் செயதுள்ளேன். சில நேரங்களில் இது மிகவும் இலகுவானது. ஆனால் அநேக தடவைகளில், கற்களின் இடைவெளி தூரமாக இருக்கு்போது, அல்லது ஆற்றினைக் கடக்க முடியாதபடி தண்ணீர் வெள்ளமாக வழிந்தோடும் போது அந்த ஆற்றினைக் க்டப்பது மிகவும் கடினமானது. 

அத்தகைய தருணங்களில், ஒரு ஆற்றின் நடுவே நான் தத்தளிக்த்துக் கொண்டிருக்கும்போது, எங்கே செல்வது என வழிதெரியாமல் ஒரு சிறிய கல்லின் நடுவே தடுமாறிக் கொண்டிருக்கும்போது வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பு மிக்கவர்கள் நண்பர்களே என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். 

பாருங்கள். ஒரு சிறந்த பாதையை தெரிவு செய்யும்படி நண்பர்கள் நமக்கு தைரியத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நாம் நிலைதடுமாறாது நிற்பதற்கும் நண்பர்களே எமது கைகளைப் பற்றிப் பிடித்து எம்மை நிலைநிறுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஆற்றினைக் கடந்து முடிக்கும்வரை நானும் எனது நண்பனுக்கு அவ்வாறே உதவிகளைச் செய்யக் கூடியவனாக இருப்பேன். 

உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் நண்பர்களைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானது, உங்கள் நலனுக்காக பாடுபடுபவர்களும், நீங்கள் நெறிதவறி நடக்கும்போது நல்வழிப்படுத்துபவர்களாகவும் நண்பர்கள் இருக்கும்பொழுதுதான் கால்கள் தடுமாறாமல் வாழ்க்கையெனும் ஆற்றினை கடந்து செல்லக்கூடியதாக இருக்கும். 

ஞானமாக நண்பர்களைத் தெரிவு செய்யுங்கள்
நான் வளரும்போது, வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டுமானால், சிறப்பான நண்பர்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டு கொண்டேன். ஆகவே இக்கட்டுரையின் ஊடாக, சிறந்த நண்பர்களை வைத்திருப்பதற்கு தேவையான நட்பின் நான்கு முக்கிய படிகற்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

முதலாவது நான் கூறவிரும்பும் காரியமானது, சிறந்த நண்பர்களைக் கொண்டிருக்க வேண்டுமானால், சிறப்பான நண்பராக நீ மாற வேண்டும். வேதாகமம் கூறுகின்றபடி, நீதிமொழிகள் 18:24 இல் “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு“. ஆகவே, இந்த அளவுகோலின் அடிப்படையில் உங்கள் நண்பர்களை நோக்கிப் பார்க்கும் அதேவேளையில் அவர்களுக்கு நீங்கள் யார் என்பதைக் குறித்தும் நினைவில் வைத்திருங்கள். 

நல்ல நண்பர்கள் எல்லா நேரத்திலும் நேசிப்பார்கள்
1 பேதுரு 4:8 இல் “ அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்“ ஒருவர் செய்கின்ற காரியத்தை வைத்து அவர் உங்களுடன் நண்பராகவோ உங்களை நேசிக்கவோ முடியாது. நண்பர் இல்லாத நேரத்திலும் அவரை நேசிக்கக்கூடியவராகவே நல்ல நண்பர்கள் இருப்பார்கள். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தபோதிலும் உண்மையான நண்பர்கள் எப்பொழுதும் எல்லா நேரத்திலும் நேசிக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள். 

நல்ல நண்பர்கள் எப்பொழுதும் உற்சாகப்படுத்துவார்கள் 
ஒரு சிலருக்கு எதிலாகிலும் அதிர்ஷ்டம் அடித்தவுடன் அவர்களைச் சூழ அநேக “நண்பர்கள்“ மொய்த்து விடுவார்கள் அதற்கு முன்னர் அவர்கள் நண்பர்களாக பழகியிருந்திருக்கவே மாட்டார்கள். இதனைத்தான் நீதிமொழிகள் 19 : 6 ஆம் வசனம் கூறுகிறது. “பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்“ எனினும் நல்ல நண்பர்கள் தங்கள் நண்பர்களால் இலாபம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பழகமாட்டார்கள். அவர்கள் உங்களுடைய நட்பினை எதிர்பார்ப்பதற்குக் காரணம், ஏதேனும் இலாபம் பெறும் நோக்கமாக இருக்குமாயின், அல்லது ஏதேனும் தீய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இருக்குமாயின் அவர்கள் ஒருபோதும் நல்ல நணர்களாக இருக்க முடியாது. ஆகவே, உங்கள் நட்பினை பெறுவதற்காக பிறர் காத்திருக்கும்படி நடந்து கொள்ளாமல், நட்பு தேவைப்படும் ஒரு சிலரை உங்களுடைய சிறந்த நண்பர்களாகத் தெரிந்தெடுத்துக் கொளளுங்கள். ஏதேனும் ஒரு வழிமுறையில் அவர்களுக்குச் சேவை செய்ய முற்படுங்கள். சுயநலத்துடனான வாஞ்சையிலும் பேராசையிலும் பார்க்க, சுயநலமற்ற சேவை மனப்பான்மையுள்ளவராக மற்றவர்களால் நல்ல நண்பராக தேர்ந்தெடுக்கப்படத்தக்கவராக உங்களை மாற்றிக் கொள்ளுஙகள். 

நல்ல நண்பர்கள் நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 27:6 கூறுகிறது  “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்“ ஒரு சிறந்த நண்பனாக இருக்க விரும்புகின்றவன் தன்னுடைய சிநேகிதனுடைய வாழ்க்கையில் தேவையிலலாமல் தலையிட மாட்டான். நண்பத்துவத்தின் சிறந்த தன்மையானது ஒருவருக்கொருவர் நேர்மையுள்ளவர்களாக இருப்பதேயாகும். இதைச்செய்வதற்கு உரிய எல்லா முயற்சிகளையும் எடுப்பவனே சிறந்த நண்பனாக இருக்க முடியும். ஒரு தலைசிறந்த மருத்துவர் தனது நோயாளியைக் குணமாக்கும்படியாக வருத்தம் தந்தாலும் உரிய மருத்துவச் சிகிச்சையை செய்வார். அவ்வாறே சிறந்த நண்பரும் தன்னுடைய நண்பரின் நலனுக்காக வேதனையான அணுகுமுறையையும் கையாளுவார். 

நல்ல நண்பர்கள் சிறப்பானதை நம்புவார்கள்
உங்கள் நண்பர்களைக் குறித்து எதிர்மறையான தீயக் காரியத்தை நீங்கள் கேள்விபடுவீர்களாயின், நீங்கள் சொல்லவேண்டிய முதலாவது காரியம். “அது உண்மையாக இருக்க முடியாது“ என்பதே. உண்மை இன்னதென்பதை அறியும்வரை நல்ல நணபன் ஒருபோதும் தீய எதிர்மறையான காரியத்தை நம்பப்போவதில்லை. 1 கொரிந்தியர் 13: 6 ம் வசனம் கூறுகிறது “அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்“ 

நல்ல நண்பர்களைத் தெரிந்தெடு
இக்கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு அநேக சிறந்த நல்ல நண்பர்கள் இல்லாவிட்டாலும், இன்றே உங்களுக்கென நண்பர்களைச் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்! நீங்கள் அறிந்துள்ள நபர்களைக் குறித்து சிந்தியுங்கள். அவர்களில் யாருடனாவது நீங்கள் அறிந்துள்ள நபர்களைக் குறித்து சிந்தியுங்கள். அவர்களில் யாருடனாவது நீங்கள் நண்பர்களாக இருக்கக்கூடுமா? அவர்களை போய்ச் சந்தியுங்கள். இதைச் செய்யும்போது, சகோதரனைக் காட்டிலும் நெருக்கமாக உங்களைச் சிநேகிப்பவர்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள். உங்கள் நட்பு வட்டாரத்தைச் சுருக்காதீர்கள். 

நீங்கள் பற்றிப் பிடித்திருக்கத்தக்க நல்ல நண்பர் இயேசு ஒருவரே. சிறந்த நட்புக்கான முன உதாரணம் அவர் ஒருவரே. அந்த மேலான நட்பினை நீங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


(நன்றி சத்தியவசனம் - September - November 2011, கட்டுரையாசிரியர் வுட்ரோ குரோல்)











Wednesday 21 September 2011

சங்கீதங்களின் கலைச்சொற்கள் (2)

இதன் முதலாம் பாகத்தை வாசிக்க இங்கு அழுத்துங்கள்.

சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )





(ஊ) ஆரோகணம் 

சங்கீதப் புத்தகத்தில் 120 முதல் 134 வரையிலான சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்கள் என்னும் தலைப்புடன் உள்ளன. இச்சங்கீதங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் தனியான ஒரு புத்தகமாகவும் ஆரோகண சங்கீதம் என்னும் தலைப்பு ஆரம்பத்தில் முழுப்புத்தகத்திற்கும் பொதுவான தலைப்பாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் பிற்காலத்தில் இச்சங்கீதங்கள் ஏனைய சங்கீதங்களுடன் சேர்க்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு சங்கீதத்திற்கும் தனித்தனியாக இத்தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (18)

ஆரோகண சங்கீதங்கள் ஆரம்பத்தில் ஒன்றாகத் தொகுக்கப்படதற்கான காரணம் யாது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சிலர் இச்சங்கீதங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இச்சங்கீதங்களில் “படிமுறையிலான சமதன்மை' (Step-like Parallelism) காணப்படுவதை கருத்திற் கொண்டே இச்சங்கீதங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஆரோகண சங்கீதம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே இவர்களின் தர்க்கமாகும். இச்சங்கீதங்களில், ஒரு வரியில் உள்ள வார்த்தையை எதிரொலிக்கும் விதத்தில் இன்னுமொரு வார்த்தை அடுத்த வரியில் உள்ளதாகவும், அதை எதிரொலிக்கும் இன்னுமொரு வார்த்தை மூன்றாவது வரியில் இருப்பதாகவும் கூறும் இவர்கள், இவ்விதமாக ஒரு படிமுறையின் அடி்பபடையில் இச்சங்கீதங்களின் வரிகள் அனைத்தும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்தகைய ஒழுங்குமுறையைக் கருத்திற் கொண்டே 15 சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சகல சஙகீதங்களிலும் இல்லை. அத்தோடு, இத்தகைய ஒழுங்கு முறையை நாம் வேறு சங்கீதங்களிலும் அவதானிக்கலாம். 

சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை “மேன்மைப்படுத்துதல்“ என்னும் அர்த்தத்தில் மொழிபெயர்த்து, இச்சங்கீதங்கள், தேவனை மேன்மைப்படுத்திப் புகழும் பாடல்களாக இருப்பதனாலேயே தனியான ஒரு தொகுப்பாக உள்ளதாகக் கூறுகின்றனர். (19) ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்படிருக்கும் பாடல்களில் 15 சங்கீதங்களும், தேவனை மகிமைப்படுத்தும் பாடல்களாக இல்லை. இவற்றில வேறு விடயங்களும் இருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது. உண்மையில் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்படுள்ள பதம் “ஏறுதல்“ என்னும் அர்த்தமுடையது. அதாவது இசையில் “சுரவரிசையில் ஏறுவதைக்“ குறிக்கும் பதமே உபயோகிக்கப்பட்டள்ளது. பூகோள ரீதியாக எருசலேம் நகரம் உயரமான இடத்தில் இருப்பதனால், அந்நகரத்திற்கு வேறிடங்களிலிருந்து வருகின்றவர்கள் தாழ்வான இடத்திலிருந்து ஏறிவர வேண்டியதாயிருந்தது. இதனால் சில வேத ஆராய்ச்சியளர்கள், “ஏறுதல்“ என்பதை அடிப்படையாகக் கொண்டு, யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தங்களுடைய சொந்த நாட்டுக“கு வரும்போது பாடிய பாடல்களாக இவற்றை கருதுகின்றனர். ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சில சங்கீதங்கள் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போவதற்கு முற்பட்ட காலத்தைய சம்பவங்களோடு தொடர்புற்றிருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

யூதர்களுடைய பாரம்பரிய மதநூலான மிஷ்னா இச்சங்கீதங்களை எருசலேம் தேவாலயத்தோடு தொடர்படுத்தியுள்ளது. எருசலேம் தேவாலயத்தில பெண்களின் பிரகாரத்தில் இருந்து இஸ்ரவேலரின் பிரகாரத்திற்குச் செல்வதற்குப் 15 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இந்தப் படிக்கற்களின் ஏற்றத்தையே ஆரோகணச் சங்கீதங்கள் குறிப்பதாகக் கருதும் மிஷ்னா இச்சங்கீதங்கள் இப்பதினைந்து படிக்கட்டுக்களிலிருந்தும் கூடாரப் பண்டிகையின் முதல்நாள் லேவியர்களினால் பாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (20) ஆரோகணச் சங்கீதங்களை எண்ணாகமம் 6:24-26 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரோனின் ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்தும் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இவ்வாசீர்வாதங்கள் ஆலயத்தின் முன் வாசலில் இருக்கும் படிகளிலிருந்து சொல்லப்பட்டதாக கருதுகின்றனர். (21) எனினும், ஆரோகணச் சங்கீதங்களில் 124ம், 126ம், 131ம் சங்கீதங்கள் எவ்விதத்திலும் ஆரோனுடைய ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்த முடியாத வசனங்களையே கொண்டிருப்பதனால் இவ்விளக்கமும் திருப்தியற்றதாகவே உள்ளது. 

ஆரோகண சங்கீதங்களில் 132ம் சங்கீதத்தைத் தவிரந்த ஏனையவைகள் அனைத்தும் சிறிய பாடல்களாகும். இவை அனைத்தும் சீயோனை (எருசலேமைப்) பற்றிய சிந்தையுடன் எழுதப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். 15 ஆரோகண சங்கீதங்களில் 125, 126, 128, 129, 132, 133, 134 என்னும் 7 சங்கீதங்களில் சீயோனைப் பற்றிய குறிப்பு உள்ளது. 122ம் சங்கீதத்தில் எருசலேம் என்ற பெயர் உள்ளது. சங்கீதங்கள் 121, 123, 124 என்பவற்றில் சீயோனுடைய தொடர்புடைய சொற்பிரயோகங்கள் உள்ளன. 130ம், 131ம் சங்கீதங்கள் எருசலேமிலுள்ள தேவனை வழிபடும் மக்களுக்கான அழைப்பைக் கொண்டுள்ளன. 127ம் சங்கீதங்கீதத்தில் “வீடு“ “நகரம்” என்னும் இரு பதங்களும் பிற்காலச் சேர்க்கையாகக் கருதப்படுகின்றது. இவற்றுக்க்குப் பதிலாக ஆரம்பத்தில் ”ஆலயம்“, எருசலேம் என்னும் பதங்களே இருந்தாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து இச்சங்கீதங்கள் அனைத்தும் சீயோனைப (எருசலேமைப்) பற்றிய பாடல்களாக இருப்பதை அறிந்து கொள்கின்றோம் (22)

ஆரோகண சங்கீதங்கள் சீயோனைப் பற்றிய சங்கீதங்களாக இருப்பதனால் இவை, பண்டிகைகளுக்காக (23) தூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வரும் யூதர்கள், வழியில் எருசலேமையும் தேவனையும் பற்றிய சிந்தித்தவர்களாகப் பாடும் சங்கீதங்களாக உள்ளன. (24) சில வேத ஆராய்ச்சியாளர்கள், பண்டிகைக்காக வரும் பக்தர்கள் ஊர்வலமாக எருசலேம் தேவாலயத்திற்கு ஏறிவரும்போது பாடும் பாடல்களாக இவற்றைக் கருகின்றனர். (25) பாடல்களுடனான இத்தகைய ஒரு ஊர்வலம் பற்றி ஏசாயா 30:29 குறிப்பிடப்பட்டுள்ளது. (26) எனவே, ஆரோகண சங்கீதங்கள் பண்டிகைக்காக வரும் பக்தர்கள் பாடும் பாடல்களாகவே இருந்துள்ளதை மறுப்பதற்கில்லை. 

Footnote and Reference 
(18) மூலமொழியில் 121ம் சங்கீதத்தின் இலக்கண ரீதியாக இருக்கும் வித்தியாசமே வேத ஆராய்ச்சியாளர்களின் இத்தகைய கருத்திற்கான காரணமாகும்.  (L.C. Allen, Psalms 101-150 : Word Biblical Commentary Volume 21, pp. 146, 219)

(19) M. Dahood, Psalms : Anchor Bible Commentary Volume III, P. 195

(20) Mishnah, Middoth. 2:5, Sukka. 5.4.

(21) L.J.Lirbreich, 'Songs of Ascents &  the Priestly Blessings'' pp 33-36

(22) L.C. Allen, Psalms 101-150 : Word Biblical Commentary, p 220

(23) யூத நூலின்படி,அவர்கள் கிழமைதோறும் ஓய்வுநாளையும் மாதந்தோறும் பௌர்ணமியையும்ஈ வருடந்தோறும் பஸ்கா பண்டிகையையு்ம், பெந்தகோஸ்தே பண்டிகையையும், கூடாரப் பண்டிகையையும் ஆசரிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். அக்காலத்தில், எருசலேமை விட்டுத் தூர இடங்களில் வாழந்த யூதர்கள், வருடத்திற்கு ஒரு தடவை பண்டிகையை ஆசரிப்பதற்காக எருசலேமுக்கு வருவதைத் தங்கள் பழக்கமாகக் கொண்டிருந்தனர். (E.Feruson, Backgrounds of Early Christianity p. 521)

(24) L.C. Allen, Psalms 101-150 : Word  Biblical Commentary, p. 220)

(25) S. Mowinckel, The Psalms in Israel’s Worship Volume 11, p. 208

(26) C.C. Keet, A Study of the Psalms of the Ascents, p. 16.


Sunday 18 September 2011

சங்கீதங்களின் கலைச்சொற்கள்



(சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )



எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு, கி.மு 2ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டபோது, சங்கீதப் புத்தகத்தில் உள்ள இசையோடு சம்பந்தப்பட்ட பல சொற்கள் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்படாமல், அவற்றின் எபிரேய உச்சரிப்பு முறை கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனால், பிற்கால மொழிபெயர்ப்புகளிலும் இச்சொற்கள் மொழிபெயர்க்கப்படாமல், எபிரேய உச்சரிப்பு முறையிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 586 இல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன யூதர்கள் அங்கிருந்த காலத்தில் (70 வருடங்கள்) தங்களுடைய மொழியான எபிரேயத்தை மறந்து, பாபிலோனில் பேசப்பட்ட “அரமிக்“ என்னும் மொழியையே தங்களுடைய பேச்சுமொழியாகக் கொண்டிருந்தனர். இதனால் கிரேக்கத்திற்கு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்தவர்கள், எபிரேய மொழியில் இசையோடு சம்பந்தப்ப்ட்ட சொற்களின் சரியான அர்த்த்தை அறியாதவர்களாக அவற்றை எபிரேய உச்சரிப்புக்கு ஏற்றவிதத்தில் கிரேக்கத்தில் எழுதியுள்ளனர். இதனால், பிற்காலத்தில் வேதாகமகால எபிரேய மொழியைக் கற்று தேர்ந்தவர்களின் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே எபிரேய மொழியிலான இக்கலைச்சொற்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. 


(அ) சேலா (selah)

சங்கீதப்புத்தக்தில் 39 சங்கீதங்களில் 71 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ள இசையோடு சம்பந்தப்பட்ட ஒரு எபிரேயப் பதம் சேலா (selah) என்பதாகும். (1) சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் இடம்பெறும் இப்பதம், ஏனைய கலைச் சொற்களைப்போல சங்கீதங்களின் தலைப்புக்களில் சேர்க்கப்படவில்லை. சங்கீதங்களின் வசனங்களுக்கு இடையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  இப்பதம் '“இசையை மாற்றுவதற்கான ஒரு குறியீடாக“ அல்லது “இடையில் மீட்டப்படும் இசை“ பற்றிய குறிப்பாக உள்ளது. மேலும், பாடப்படும் சங்கீதத்தின் வசனத்திற்கு அல்லது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அதை மறுபடியும் பாடும்படி அறிவிக்கும் குறியீடாகவும் இது இருந்துள்ளது. (2)

“சேலா என்னும் பதம் “உயர்த்துதல்“ என்று அர்த்தம் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளது. இதன்படி, சேலா என்பது உரத்த சத்தத்துடன் இசையை மீட்டும்படியான குறியீடாக உள்ளது(3). சில வேத ஆராய்ச்சியாளர்கள், இப்பதம் “குனிதல்“ என்று அர்த்தந்தரும் அரமிக் மொழிப் பதத்துடன் தொடர்புற்றுள்ளதாக கருதுகின்றனர். இவர்கள் “மிஷ்னா“ என்னும் யூதர்களுடைய மதநூலில் அன்றாட பலிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டே இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர் (4) அன்றாட பலிகள் செலுத்தப்படும்போது சங்கீதங்கள் பாடப்படுவதோடு, பாடல் நிறுதப்படும் இடங்களில் எக்காளம் ஊதப்படும் அச்சந்தரப்பத்தில் ஆலயத்தில் கூடியிருக்கும் மக்கள் முகங்குப்புற தரையில் குனிந்து தேவனை வழிபடுவார்கள். இத்தகைய அறிவிப்பைக் குறிக்கும் குறியீடாக “சேலா“ இருப்பதாக சில தேவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும் (5) இசையை மாற்றும்படியான அல்லது இசையின் சத்தத்தை அதிகரிக்கும்படியான ஒரு இசைக் குறியீடாகவே “சேலா“ என்னும் பதம் சங்கீதப் புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. (6)


(ஆ) இகாயோன் (Hihhaion)

சங்கீதம் 9:16 இல் “சேலா“ என்னும் இசைக் குறியீட்டுக்கு முன் “இகாயோன்“ (Hihhaion) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சங்கீதம் 19:14 லும் 92:2 இலும் “தியானம்“ என்னும் அர்த்தத்துடன் இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டு சங்கீதத்தின் வசனத்தில் உள்ளது. இதிலிருந்து, இப்பதம் இசைக் குறியீடாக உபயோகிக்ப்படும்போது “தியானத்திற்கு ஏற்ற இசையை மீட்டும்படியான அறிவுறுத்தலாக“ இருப்பதாகக் கருதப்படுகின்றது. (7) எனினும், இச்சங்கீதங்களில் இப்பதம் உண்மையிலேயே இசைக்குறியீடாக உள்ளதா அல்லது சங்கீதத்தின் ஒரு வார்த்தையாக உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியாமல் உள்ளது.


(இ) சிகாயோன் 

ஏழாம் சங்கீதத்தின் தலைப்பில் “சிகாயோன் என்னும் சங்கீதம்“ என்னும் வார்த்தைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக ஆபகூக் 1:1இல் “ஆபக்கூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன் பாடின வி்ண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன்“ என்னும் பதம் “தவறுசெய்தல்“ அல்லது “அலைந்து திரிதல்“ என்று அர்ந்தந் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், சிகாயோன் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் 7ம் சங்கீதமும் ஆபகூக் 3ம் அதிகாரமும் பாவமன்னிப்பிற்காக மன்றாடும் சங்கீதமாக இராதமையினால் உணர்ச்சிகள் அலைமோதும் விதத்தில் பாடப்படும் பாடல்களைப் பற்றிய குறிப்பாக சிகாயோன் இருப்பதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (8). அக்கால அரேபிய மற்றும் அசீரிய பாடல்களிலும் இவ்விதமாக மனஉணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பாடல்கள் இருப்பதை இதற்கான ஆதாரமாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (9)


(ஈ) மிக்தாம்

சங்கீதப் புத்தகத்தில் 56 முதல் 60 வரையிலான சங்கீதங்கள் “மிக்தாம் என்னும் சங்கீதம்“ என்று அவற்றின் தலைப்புகள் அறியத் தருகின்றன. ஆங்கிலத்தில் “ஜேம்ஸ் அரசனுடைய மொழிபெயர்ப்பை“(10) அடிப்படையாகக் கொண்டு 16ம் சங்கீதத்தின் தலைப்பில் மிக்தாம் என்பதோடு “பொற்பணதிக்கீதம்“ என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது (11) ஆனால், மிக்தாம் என்னும் பதம் மூலமொழியில் “பொன்“ (தங்கம்) என்னும் பதத்துடன் அல்ல “மூடுதல்“ என்று அர்த்தந் தரும் அங்காடிய மொழிப்பதத்திலிருந்தே உருவாகியுள்ளது(12). இதனால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் இச்சங்கீதங்களை பாவத்திற்கான பிராய்ச்சித்தப் பலியோடு சம்பந்தப்பட்ட பாடல்களாக கருதுகின்றனர். (13). ஏனென்றால் அக்காலத்தில் பாவத்திற்கான பலி செலுத்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதைக் குறிப்பிட “பாவங்கள் மூடப்படுதல்“ என்னும் சொற்பிரயோகத்தையே உபயோகி்த்து வந்தனர் (14) ஆனால் மிக்தாம் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவைகள், பாவத்தைப் பற்றியவையாக இராமல், சங்கீதக்காரன் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் துயரத்துடன் இருப்பதைப் பற்றிய விவரணங்களைக் கொண்டிருப்பதனால் இவை “உதடுகள் மூடப்பட்ட நிலையில்“ தாவீது மௌனமாகப் பாடிய படல்களாகக் கருதப்படுகிறது. (15) எனவே, “மித்தாம் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ள சங்கீதங்கள் “மௌனமான ஜெபங்களாகவே“ உள்ளன (16) ஜெபங்கள் உரத்த சத்தமாக மட்டுமல்ல மௌனமாகவும் ஏறெடுக்கப்பட்ட முடியும் என்பதை இச்சங்கீதங்கள் அறியத் தருகின்றன. 



(உ) மஸ்கீல் 

சங்கீதப் புத்தகத்தில் 12 சங்கீதங்கள் (அதாவது 32, 42, 44, 52, 53, 55, 74, 78, 88, 89, 142 எனும் சங்கீதங்கள்)  “மஸ்கீல் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ளன. “மஸ்கீல்“ என்னும் பதம் “ஞானவானாக்கு“ அல்லது “புத்திசாலி“ அல்லது திறமையுடனிருத்தல்“ என்னும் அர்த்தங்களைக் கொண்ட பதத்திலிருந்து உருவாகியுள்ளது. (17) இதனால் மஸ்கீல் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில சங்கீதங்களின் தலைப்பில் “மஸ்கில் என்னும் போதக சங்கீதம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் “ஞான சங்கீதங்களே“ (18) எபிரேய மொழியில் மஸ்கீல் என்னும் சங்கீதம் என்னும் தலைப்பைக் கொண்டுள்ளது. 

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)


Footnote and Reference 

(1) சங்கீதங்கள் 3, 4, 7, 9, 20, 21, 24, 32, 39, 44, 46, 47, 48, 49, 50, 52, 54, 55, 57, 59, 60, 61, 62, 66, 67, 68, 75, 76, 77, 81, 82, 83, 84, 85, 87, 88, 89, 140, 143 இலும் ஆபகூக் 3ம் அதிகாரத்தில் 3 தடவைகளும் இப்பதம் உள்ளது.

(2) J.H. Walton, W.H. Matthews & M.W. Chavalas, The IVP Bible Background commentary - Old Testament, pp. 517-518

(3) D. Kidner, Psalms 1-72 : Tyndale OT Commentaries, pp 36-37

(4) B.D. Eerdmans, The Hebrew of Psalms, pp. 85, 89

(5) S. Mowinckel, The Psalms in Israel’s Worship Volume 11, p. 211

(6) சில யூதப்பாரம்பரியங்களும் வேதாகமத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த “ஜெரோம்“ என்பவரும், சேலா என்பதை ஆசீர்வாத உரை சொல்லப்படுவதற்கான அல்லது பல்லவி பாடப்படுவதற்கான குறியீடாகக் கருதியுள்ள போதிலும், இத்தகைய விள்க்கத்திற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. (P.C. Craigie, Psalms 1-50 : Word Biblical Commentary Volume 19, 76-77)

(7) D. Kidner, Psalms 1-72 : Tyndale Old Testament commentaries, p 37

(8) A.F. Kirkpatric  Psalms : The Cambridge Bible, p xx

(9) B.D. Eerdmans, The Hebrew Book of Psalms, pp. 85, 89

(10) இம்மொழிப்பெயர்ப்பை பற்றிய விபரங்களுக்கு ஆசிரியரின் புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு” என்னும் நூலின் 8ம் அத்தியாயத்தைப் பார்க்கவும் .

11) சில யூத மதப் போதகர்களும் “மித்தாம்“ என்னும் பதம் தங்கத்தைக் குறிக்கும் பதத்திலிருந்து உருவாகியுள்ளதாகக் கருதியுள்ளனர். ஆனால், இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை (P.C. Craigie, Psalms 1-50 : Word Biblical Commentary Volume 19, 154)

(12) D. Kidner, Psalms 1-72 : Tyndale OT Commentaries, p 38

(13) S. Mowinckel, The Psalms in Irrael's Worship Volume II, P 209

(14) சங்கீதம் 32:1 இதனை நாம் அவதானிக்கலாம்

(15)  B.D. Eerdmans, The Hebrew Book of Psalms, p. 75

(16) சில வேத ஆராய்ச்சியாளர்கள் மிக்தாம் என்னும் பதத்தை “எழுதப்பட்டவை“ என்று மொழிபெயர்ப்பதே சரியானது என்று கருதுகின்றனர். இதன்படி, சங்கீதக்காரன் தனத நெருக்கடியான சூழ்நிலைகளில் தனது மன்றாடலை சங்கீதமாக எழுதி வைத்துள்ளனான் என்று கருதப்படுகிறது. . (P.C. Craigie, Psalms 1-50 : Word Biblical Commentary Volume 19, 154 ; H.J. Kraus, Psalms 1-59 : A Commentary, pp 24-25 ) எனினும் சங்கீதக்காரன் உரத்த சத்தமாக தனது மன்றாடுதலை ஏறெடுக்க முடியாமல், மௌனமாக ஏறெடுத்துள்ளான் என்பதை மறுப்பதற்கில்லை. மிக்தாம் என்னும் தலைப்புடனான சங்கீதங்கள் ஆரம்பத்தில் தனியான ஒரு புத்தகமாக இருந்ததாகவும் இவை மிகவும் பழமையானவை என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (C.A. Briggs & E.G. Briggs, Pslms : The International Critical Commentary Volume 1, p. IX)

(17) D. Kidner, Psalms 1-72 : Tyndale Old Testament commentaries, p 38

(18) இத்தகைய சங்கீதங்கள் பற்றி இந்நூலின் 9ம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது

(18) மூலமொழியில் 121ம் சங்கீதத்தின் இலக்கண ரீதியாக இருக்கும் வித்தியாசமே வேத ஆராய்ச்சியாளர்களின் இத்தகைய கருத்திற்கான காரணமாகும்.  (L.C. Allen, Psalms 101-150 : Word Biblical Commentary Volume 21, pp. 146, 219)




(இவ்வாக்கமானது Dr. M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய சங்கீதங்களின் சத்தியங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கலலூரி)

Thursday 15 September 2011

மரிக்கும் வரையிலான பணி



இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான அந்திரேயா மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டுவருவதையே தன் கடமையாகக் கருத்திச் செயற்பட்டு வந்தவராவார். வேதாகமத்தில் அவரை நாம் சந்திக்கும் இடங்களில் எலலாம் அவர் மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துக் கொண்டு வருவதை நாம் அவதானிக்கலாம் (யோவான் 1:40-42, 6:8-9, 12:20-22) இயேசு கிறிஸ்து பரமேறிய பின்னர் சின்ன ஆசியாவின் பல பகுதிகளிலும் அந்திரேயா அவரைப் பற்றி அறிவித்துள்ளார். 

அந்திரேயா கிரேக்கத்தின் பெட்ராயி எனுமிடத்தில் இருக்கையில், தேசாதிபதி வழிபடும் விக்கிரகங்களுக்கு எதிராகப் பிரசங்கித்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அநதிரேயாவோ தேசாதிபதியின் கட்டளைக்குப் பயப்படாமல் தொடர்ந்தும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வந்தார். இதனால் ஒரே அளவான நீளமுடைய இரு மரத்துண்டுகளினால் செய்யப்பட்ட சிலுவையில் அந்திரேயாவைத் தொங்கவிடும்படி தேசாதிபதி கட்டளையிட்டான். 

அந்திரேயாரவைக் கட்டித் தொங்கவிட்ட சிலுவையின் இருமுனைகள் நிலத்தில் பொருத்தப்பட்டிருந்தன. அத்தோடு, அந்திரேயாவின் மரண வேதனையை அதிகரிக்கும் நோக்குடன் அவரை நன்றாக அடித்து கயிற்றினால் சிலுவையில் கட்டித் தொங்கவிட்டனர். இவ்வாறு மூன்று நாட்கள் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்திரேயா, கடுமையான வேதனையை அனுபவித்தாலும், உற்சாகத்துடன், தன்னை சுற்றிலும் குழுமியிருந்த மககளுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். 

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்திரேயாவின் வார்த்தைகளைக் கேட்டுப் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் சிலர் தேசாதிபதியிடம் சென்று அந்திரேயாவை சிலுவையிலிருந்து எடுத்து விடும்படி வேண்டிக் கொண்டனர். தேசாதிபதியும் கடைசியில் அந்திரேயாவின் கட்டுக்களை அவிழ்த்துவிடும்படி கட்டளையிட்டான். ஆனால், கடைசிக் கட்டு அவிழ்க்கப்படும்போது அந்திரேயாவின் சரீரம் மரித்த நிலையில் கீழே விழுந்தது. 

அந்திரேயாவைப் போல கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் கடைசி மூச்சு இருக்கும்வரை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது. 

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Wednesday 7 September 2011

தேவாலயத்திற்கு போகும்போது




குறிப்பிட்ட நேரத்துக்கு முன் ஆலயத்திற்கு வந்து, ஆராதனை ஆரம்பமாகும்வரை அமைதியாக மௌனமாக சில நிமிடம் ஜெபத்தில் செலவிடும்போது ஒரு புது ஆறுதல் சந்தோஷம் தோன்றும். 

வீட்டை விட்டு புறப்படும்போது ஒரு சிறு ஜெபம் செய்துவிட்டு புறப்படு. வழியில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்

பிரசங்கிக்கும் நபர்களை எதிர்பார்த்து ஆராதனைக்குப் போகாதிருங்கள் பிரசங்கம் ஒரு மனிதனை மாற்ற முடியாது. எந்த பிரசங்கியாலும் உங்களை ஆறுதல்படுத்தவோ மாற்றவோ முடியாது. உங்களை கர்த்தரின் வசனமே மாற்றும். அதற்காகத்தான் ஆயத்தத்துடன் ஜெபித்துவிட்டுப் போக வேண்டும். 

ஆலயததிற்கு போகும்போது கவர்ச்சிகரமான அல்லது புதிய ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள். நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும்போது மிகத் தூய்மையானதும், தோற்றத்தில் இங்கிதமானதுமான உடைகளை உடுத்திச் செல்வதே நன்று!

ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் உட்கார வேண்டும் என்று ஆசைப்படாதிருங்கள்! ஆசனம் இருக்கும் இடத்தில் உட்காரப் பழகிக்கொள்ள வேண்டும். நீங்கள் வழமையாக உட்காரும் இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவர்களை அந்த ஆசனத்திலிருந்து எழுப்பிவிட்டு உட்காரும் முரட்டுத்தனமான பழக்கம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். 

தாமதித்து வந்தால், ஜெபம் செய்து கொண்டிருக்கும்போது உள்ளே நுழைய முற்படக்கூடாது. ஜெபம் முடிந்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். 

சபைக்கு ஸ்தோத்திர காணிக்கை அல்லது எந்த காணிக்கை கொடுத்தாலும் உங்கள் பெயரை வெளியில் செல்ல அனுமதிக்காதிருங்கள் அப்படிச் சொல்லப்படுமானால் காணிக்கையின் ஆசீர்வாதத்தை நீங்கள் இழந்துபோவீர்கள். ஆனால், கொடுத்த காணிக்கை சபை கணக்கில் வரவு வந்துள்ளதா என்பதை நீங்கள் கவனிக்கத் தவற வேண்டாம். அது யாரையும் சோதனைக்குட்படுத்தப் பண்ணாமல் காப்பாற்றும். 

ஆராதனை முடிந்தவுடன் உறவினர், நண்பர்களை மட்டும் சந்தித்து உரையாடாமல் சபைக்கு புதிதாக யாராவது வந்தால் அவர்களுடனும் பேசுங்கள்

ஆராதனை முடிந்தவுடன் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் சபைப் போதகரை சந்தித்து அன்போடு சுகம் விசாரித்து செல்லுங்கள். இதைதான் அந்நியோனியம் (அப். 2:42) என்று கூறுவது. 

காணிக்கை போடும்போது கர்த்தருக்காக தாராளமாகக் கொடுக்கப் பழகுங்கள். அத்துடன் நன்றியோடு காணிக்கை செலுத்துங்கள். 

கூடியவரை உங்கள் பக்கத்து வீட்டார், நண்பர்கள், யாரையாவது கூடவே கூட்டிக்கொண்டுச் செல்ல பிரயாசைப்படுங்கள்.  

உங்கள் சபையைவிட்டு வேறுசபைக்கு மாற ஆசைபடாதிருங்கள். ஒருவேளை உங்கள் சபையில் சரியான ஆத்தும ஆகாரம் இல்லாமல் இருக்குமானால் ஆராதனை முடிந்த பிற்கு ஆகாரம் கிடைக்கும் இடத்திற்குச் செல்வதில் தவறில்லை. உங்கள் ஆத்துமா பலம்பெற ஆகாரம் மிக அவசியம். என் சபையில் ஆகாரம் இல்லை. அதனால்தான் நான் பின்வாங்கினேன் என்று நியாயத்தீர்ப்பில் காரணங்களைக் காட்ட கர்த்தர் அனுமதிக்க மாட்டார். உங்கள் ஆத்துமாவிற்கு நீங்கள்தான் பொறுப்பு. தன் கூட்டில் ஆகாரம் இல்லாத எறும்பு வெளியில் சென்று ஆகாரம் சேகரித்துவரும் ஒழுங்கை கவனித்து இருப்பீர்களே!  ஆகாரம் கிடைத்த இடத்தில் அநத எறும்பு தங்கிவிடாமல் ஆகாரமில்லாத தன் கூட்டில் உள்ளவர்களுக்கு அதை பகிர்ந்து கொடுக்கும் வகையில்தான் தன் இடம்தேடி வரும் அழகைப்பார். அந்த மனப்பாரம் உங்களுக்குள்ளும் வர வேண்டும். 

(நன்றி - நியூஸ் லெட்டர்)

Monday 5 September 2011

சின்னத் திரையின் தாக்கங்களை தாக்குப்பிடிப்பது எப்படி?



தொலைக்காட்சி மூலம் நல்ல காரியங்களையும் அதேசமயம் தவறான சீர்கேடான காரியங்களையும் நாம் அறிந்துகொள்கிறோம். அதன் பலாபலன்களைத் தீர்மானிப்பது நமது கையில்தான் உள்ளது.

இயேசுவானவர் வனாந்தரத்தில் பிசாசின் சூழ்ச்சியான மூன்று சோதனைகளினால் சோதிக்கப்பட்டார். முதலாவது சோதனை சகல ஞானமும் அறிவும் நிறைந்த அவருடைய அறிவாற்றலையும், இரண்டாவது சோதனை, ஆண்டவருடைய மனவலிமையையும் சார்ந்திருந்தது. அறிவு சம்பந்தப்பட்ட காரியத்திலும் அவருடைய மனவலிமை திறனைச் சார்ந்த காரியத்திலும் இயேசுவை வீழ்த்த நினைத்து தோற்றுப்போன பிசாசு, கடைசியாக கற்பனை வளம் மூலம் இயேசுவை சோதித்தான். உலகத்தின் அத்தனை அழகையும் அவருக்கு இமைப்பொழுதில் காண்பித்து என்னை வணங்கினால் இந்த உலகையே உமக்குப் பரிசாக அளிப்பேன் என்று, எத்தனை அழகாய்க் கூறினான் தெரியுமா? சோதனையின் நாடித்துடிப்பு இதில்தான் வெளிப்படுகிறது. 


ஒருவன் என்னுடைய சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடுமானால் அவன் என்னையே சிறைபிடித்துவிட்டான் என்று பொருள். கற்பனைத் திறனானது, மனிதனின் அறிவுத்திறனையும் மன வலிமையையும் ஒதுக்கிவிட்டு பலவித சிந்தனைகளால் மனிதனை அலைக்கழித்து சிறைப்படுத்தி ஆட்சிசெய்கிறது. எனவே இசையும் தொலைக்காட்சியும் எளிதாக மனித உள்ளங்களை ஆக்கிரமித்து அவற்றைத் தங்கள் ஆட்சிப் பீடமாக மாற்றி விடுகின்றன. 


“கண்வழியாக அல்ல. கண்காணும் காட்சிகள் மூலமாய் நாம் அதிகம் சோதிக்கப்படுகிறோம்“ என்று வில்லியம் பிளேக் கூறுகிறார். புகைப்படக்கருவி காட்சிகளை விழுங்கி படமாக்குகிறது. பின்பு அது தான் படமாக்கிய காரியங்களை (அதாவது போரைப் பற்றிய சூடான காட்சிகள், தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்புகள், ஆபாசத்தை அள்ளித்தூவும் திரை வசனங்கள், கதாநாயகன், கதாநாயகிகளின் காதல் லீலைகள், சொகுசான வாழ்க்கை, அழகான கார். குளிர்சாதனப் பெட்டி என இவற்றை மிகத் தேவையானதாக விளம்பரப்படுத்தும் காட்சிகள் ஆகியவை) துர்இச்சைக்கும் பொருளாசைக்கும் சொகுசான வாழ்வுக்கு் நேராக ஓட நம்மைத் தூண்டுகிறது. இதைப் பார்க்கும்பொழுது, காட்சிகளாக காண்பவைதான் மனிதனுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்

“தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் செல்வதற்கு கூட என் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டேன்“ என தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த உலசேர் சூசன் தன்னு்டய 92ம் பிறந்தநாளில் கூறினார். அது ஒருபுறம் இருக்க, தொலைக்காட்சியின் பலவீனத்தை விபரித்துக் கூறும்பொழுது சைமன்வியல் என்பவர் தொலைக்காட்சி பிரபல்யம் அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு கூறினார். “எப்போதுமே நல்ல காரியங்களை கற்பனை ஏற்றிக் கூறும்பொழுது அது சுவாரசியமற்றதாகவே தோன்றும். ஆனால் கற்பனையாக உருவாக்கப்பட்ட கெட்ட காரியங்கள் எப்போதும் கவர்ச்சிமிக்கதாயும் பலரை தன்வசம் கவர்ந்து ஈர்க்கும் தன்மையுடையதாயும் இருக்கும்“ என குறிப்பிடுகிறார்.


தொலைக்காட்சியின் தீமைதான் என்ன?
தொலைக்காட்சி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சியற்ற மந்தநிலைக்குத் தள்ளுகிறது. தினமும் வாடிக்கையாக தொலைக்காட்சிக் காண்போரின் நியாயமான மன எழுச்சிகளைத் தணியச் செய்து கருணையற்றவராககுகிறது. இதனால், எவ்வளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறாரோ அவ்வளவுக்கு அதிகம் அவர் உணர்ச்சியற்றவராகிறார். கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றப்படும் குளிர்ந்த தண்ணீரில் விடப்பட்ட தவளை மரிக்கும்வரை உணர்வற்றதாக பழகி விடுவதுபோல் தினம் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்க்கும்பொழுது மனிதனும் சமுதாயத்தில் நிகழும் அவலநிலையை ஓயாமல் பார்த்து உணர்ச்சியற்ற பிண்டமாக மாறிவிடுகிறான். 


தொலைக்காட்சி ஒருவர் ஆழ்ந்த கவனிக்க வேண்டிய காரியங்களில் கவனம் செலுத்தாதபடி தடுத்து விடுகிறது. விறுவிறுப்பான காட்சிகளையும் கார்ட்டூன் படங்களையும் சதா பார்க்கும் ஒரு குழந்தைக்கு, தன் பள்ளிப்பாடங்கள் கசக்கும். ஆசிரியர் கற்றுத் தரும் முறை, தான் காணும் காட்சியைப் போல கவர்ச்சியாக இல்லை என எண்ணத் தோன்றும். எனவே பாடத்தை கவனிப்பது சலிப்பு நிறைந்த ஒன்றாகவே தோன்றும். விறுவிறுப்பான திரைப்படக்காட்சிக்கு இணையாக நமது குழந்தைகள் வாலிபர்களுக்கு அவர்கள் சிந்தனையை சென்றடையும் வண்ணம் நல்ல செய்திகளை கூற முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

தொலைக்காட்சி கதாநாயகனையும் கதாநாயகிகளும் உடலை மெருகேற்றி காட்சியளிக்கும் விளம்பர மாதிரிகளையும் உருவாக்குகிறது. இத்தகைய நபர்களினால் இளம் தலைமுறையினர் அதிகம் கவரப்பட்டு அவர்களது அடிசசுவடுகளைப் பின்பற்றத் துணிகின்றனர். அவர்களைப் போல மாற இவர்களும் செய்படுகின்றனர். இதனால் இளைஞர் மத்தியில் சிற்றின்பத்தை புகழையும் குறியாகக் கொண்ட வறட்டுக் கொள்கைவாதிகள் நாள்தோறும் உருவாகி பெருகி வருகின்றனர். மேலும், ஏட்டுச் சுரைக்காய்கூட கறிக்கு உதவும் என்ற நிலையை உருவாக்க தொலைக்காட்சிப் பெட்டிகள் முயலுகின்றன.. தொலைக்காட்சியில் அனுபவம் இல்லாத மனிதர்களும் தங்களது பிரபல்யத்தினால் சில அனுபவங்களையும் ஆழ்ந்த கருத்துக்களையும் மக்களுக்கு சொல்லிடத் துணிகின்றனர். 

அத்துடன், தொலைக்காட்சி நல் நடத்தை இல்லாமை, சோம்பேறித்தனமான வாழ்வு, மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற பலவித பக்கவிளைவுகளை மனிதன் சந்திக்கின்றான். இருட்டறையில் உட்கார்ந்து பலவண்ண ஒளியூட்டும் இச்சதுர பெட்டிமுன் கிடக்கும் மானிடரின் அவல நிலைமை மாறிட மனரீதியான தீர்வுகளை நாம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 

நல்லதையும் கெட்டதையும் பகுத்தறியும் தன்மை உடைய நாம் தொலைக்காட்சி மூலம் விளையும் நன்மை, தீமைகளை பகுத்தறிவது மிக முக்கியமானதாகு்ம். தனிநபராகவும். குடும்பமாகவும் தொலைக்காட்சியின் நன்மை, தீமைகளைக் கலந்து ஆலோசித்து சில விதிமுறைகளை கட்டுப்பாடுகளை நமத குடும்பங்களில் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

1) உணவருந்தும் நேரத்தில் தொலைக்காட்சி காணாதீர்கள். உணவருந்தும் நேரம் குடும்பத்தின் உறவுகளை பலப்படுத்தும் சிறந்த நேரம். அது சம்பாஷனைக்குரிய நேரம். 

2) தீவிரவாதத்தைப் பற்றிய முழு விபரங்களையும் சண்டைக்காட்சிகளையும் காண்பது கிறிஸ்தவ குடும்பங்களுக்குத் தகாது. ஏனெனில் அது கலக குணத்திற்கே வித்திடும். 

3) காலங்கள் கர்த்தரின் வெகுமதி. பொன்னான நேரத்தை தொலைகாட்சி பெட்டியின் முன்னாலேயே கழித்துவிடாமல் நல்ல காரியங்களுக்கு ஞானமாய் பயன்படுத்துவோம்

4) குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளை நாம் உன்னிப்பாக கவனிப்பது நல்லது, அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவர்களுக்கு உண்மையிலேயே பயன் உள்ளதா என்பதை அவர்கள் மூலமாகவே கண்டறிய வேண்டும். 

5) குழந்தைகள் தொலைக்காட்சிப் பார்ப்பதை குருட்டுததனமாக தடைசெய்யாமல், அதேநேரத்தில் அவர்கள் கவனத்தை வேறொரு பொழுது போக்கிலோ அல்லது வேறு நல்ல காரியத்திலோ திசைதிருப்ப நாம் முயற்சி செய்ய வேண்டும். 

6) தொலைக்காட்சிகளை விட புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டும். அதனால் வளமான ஞானத்தையும் நல்ல பழக்கங்களையும் ஆழமான கற்பனை வளத்தையும் நாம் அறுவடை செய்திட முடியும். 

7) தனி ஜெப நேரங்களையோ குழு ஜெபநேரத்தையோ தொலைக்காட்சியின் காட்சிகள் திருடிவிட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தேவனுக்குரிய நேரத்தை தேவனுக்கு கொடுப்பத்தில் எப்பொழுதும் கண்டிப்பாகவே இருங்கள். 

8) ந்ம்முடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் கர்த்தருடைய வார்த்தைகளால் நிரப்பும்போது கெட்ட காரியங்கள் நம்முடைய சிந்தனையை விட்டு தானே அக்ன்றுவிடுவதை யாவரும் மறுக்க இயலாது. முறையாகக் கடைபிடிக்கும் கிறிஸ்தவ காலை தியான நேரங்கள் ஆண்டவருடைய சிந்தனைகளையும் சாயலையும் நம்மில் பிரதிபலிக்க உதவும்.

9) தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் கடிதங்கள் எழுதி தரமான நிகழ்சசிகளை ஒளிபரப்பிட அடிக்கடி குரல் எழுப்புங்கள். தகாதவைகளை ஒளிபரப்புவதாக அறிய வந்தால் கண்டனம் செய்து எழுதுங்கள். 

நன்றி : சத்தியவசனம் - Oct-Dec 2006
(Riseup & Build) - ரவி சக்கரியாஸ்