- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 27 April 2014

வேதமும் விளக்கமும் லூக் 9:5 இன் விளக்கம் என்ன?

இயேசுகிறிஸ்து லூக்கா 9ம் அதிகாரத்தில் தன் பன்னிரு சீடர்களையும் ஊழியத்திற்காக அனுப்பும்போது 5ம் வசனத்தில் “உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்று சொன்னமைக்கான காரணம் என்ன? (ஆர் டேவிட். கொழும்பு 10)
 
அக்கால யூதர்கள் புறஜாதி மக்களது பட்டணத்திற்கு சென்று வந்தால், அவர்கள் அப்பட்டணத்தை விட்டு வெளியேறும்போது தம் காலில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுவது வழமை. இச்செயல் அவர்கள் புறஜாதியாருடனான உறவை முறித்துக் கொணடு தமது ஊருக்கு வருவதற்கான அடையாளச் செயலாகக் கருதப்பட்டது. லூக்கா 9ஆம் அதிகாரத்திலுள்ள இதே சம்பவம் மத்தேயு 10ம் அதிகாரத்திலும் எழுதப்பட்டுள்ளது(5-6). மத்தேயு சுவிஷேசத்தின் மூலம், இயேசுகிறிஸ்து தன் சீடர்களை யூதர்களுடைய பட்டணங்களுக்கே அனுப்புகிறார் என்பதை அறிகின்றோம். அக்கால யூதர்கள் புறஜாதியினரை தேவனுடைய ராட்சியத்திற்குப் புறம்பானவர்களாகவே கருதினர். ஆனால் இயேசுகிறிஸ்து தன்னுடைய செய்தியை விசுவாசிக்காதவர்களையே தேவனுடைய ராட்சியத்திற்கு புறம்பானவர்களாக கருதினார். இதனால், தன் சீடர்களது செய்தியை விசுவாசிக்காமலும் அவர்களை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கும் யூதர்களை அவர்கள் புறஜாதியாரை எவ்வாறு நடத்தினார்களோ அதேவிதமாக நடத்தும்படியே அறிவுறுத்துகின்றார்.யூதர்களுடைய பட்டணங்களை விட்டு வெளியேறும் சீடர்கள் தம் காலில் படிந்த தூசியை உதறும் செயலானது அப்பட்டணத்து யூதர்களும் புறஜாதியினரைப் போலவே தேவனுடைய ராட்சியத்திற்குப் புறம்பானவர்கள் என்பதை அறிவிக்கும் அடையாளச் செயலாக இருந்தது. 
 
 
மத்தேயு 10:5-6 
 
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 
 
மேலதிக விளங்கங்களுக்கு இந்த தொடுப்பினை பாருங்கள்

Wednesday 23 April 2014

வேதமும் விளக்கமும்- சில தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளில் தேவன் என்ற வார்த்தைக்குப் பதிலாக இறைவன் அல்லது கடவுள் எனும் வாரத்தையை உபயோகித்துள்ளனர் இது சரியானதுதானா?

சில தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளில் தேவன் என்ற வார்த்தைக்குப் பதிலாக இறைவன் அல்லது கடவுள் எனும் வாரத்தையை உபயோகித்துள்ளனர் இது சரியானதுதானா?(எம்.றொபர்ட், கண்டி, இலங்கை)
 
இது சரியானதா தவறானதா என்பதை அறிந்து கொள்வதற்கு நாம் தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை ஓரளவிற்காகவது அறிந்திருக்க வேண்டும். 1714 ஆம் ஆண்டு சீகன்பால்க் என்பவரினால் தமிழ் வேதாகமம் முதல் தடவையாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டபோது, கடவுளுக்கு “சருவேசுரன்” எனும் பதத்தையே அவர் உபயோகித்திருந்தார். இதற்கு காரணம் அக்காலத்தில் இந்தியாவில் பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் “சருவேசுரன்” எனும் பதத்தை உபயோகித்து வந்தமையாகும். அதன்பிறகு 1772 இல் வெளிவந்த பெப்ரீஷீயஸ் என்பார் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்தில் சருவேசுரன் என்பதற்குப் பதிலாக பராபரன் பதம் உபயோகிக்கப்பட்டது.
 
பராபரன் என்பது அக்காலத்தில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவ சமய புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது. இவர் பராபரக் கண்ணிகள் என்ற 389 பாடல்களைப் பாடியவராவார். இப்பாடல்களில் இந்து சமயக் கருத்துக்கள் அதிகம் புகுத்தப்படவில்லை. எனினும், இவை பக்திரசம் மிகுந்த பாடல்களாகும். இப்பாடல்கள் ஒவ்வொன்றும் பராபரமே என முற்றுப் பெற்றன. இப்பதம் இந்து சமய தெய்வமான சிவபெருமானுடன் அதிகமாகச் சேர்த்து உபயோகிக்கப்படாமையால் கடவுளைக் குறிக்க பொதுவான பெயராக இருக்கக் கூடியது என தரங்கம்பாடியிலிருந்த ஏர்னஸ்ட் வோல்டர் எனும் மிஷனரி கண்டு கொண்டார். இதனால்  தரங்கம்பாடியிலிருந்த மிஷனரிகள் கடவுளைக் குறிக்க பராபரன் எனும் பதத்தையே உபயோகித்தனர். மேலும், அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரியான கொன்ன்ஸ்டன்டைன் பெஸ்கி என்பார் சீகன்பால்கின் வேதாகமமொழிபெயர்ப்பு தரம் குறைவானது என ஏளனம் செய்தமையால் தங்களை ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் உபயோகித்த “சருவேசுரன்” எனும் பதத்தை விடுத்து, பராபரன் எனும் பதத்தை உபயோகித்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. 
 
பெ்ரீஷின் மொழிபெயர்ப்பை ரேனியஸ் என்பார் திருத்தி வெளியிட்டபோது (1827 இல் சுவிசேஷ புத்தகங்களும், அப்போஸ்தலர் நடபடிகளும் 1833 இல் புதிய ஏற்பாடு முழுவதும்) அவர் பராபரன் எனும் பதத்தையே பொதுவாக உபயோகித்திருந்த போதிலும், சில இடங்களில் தேவன் எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். எனினும் 1846 இல் யாழ்ப்பாணத்தில் சைவசமயப் புவலர் ஆறுமுகநாவலரது உதவியோடு பேர்சிவெல் என்பார் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்திலேயே, பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பில் பராபரன் எனும் பதம் இடம் பெற்ற இடங்களிலெல்லாம் தேவன் எனும் பதம் உபயோகிக்கப்பட்டது. இவ் யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சென்னை வேதாகமச் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதமையால், ஹென்றி பவர் என்பாரது தலைமையில் மறுபடியுமாக ஒரு புதிய தமிழ்மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டது. இக்குழுவினர் 1863 இல் புதிய ஏற்பாட்டையும் 1868 இல் பழைய ஏற்பாட்டையும் வெளியிட்டனர். பின்னர் யாழ்ப்பாணத்து மிஷனரிகளின் ஆலோசனையின்படி அம்மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டது. இதனால், அதிலும் தேவன் எனும் பதம் உபயோகிக்கப்படலாயிற்று தேவன் எனும்  பதம் அக்காலத்தில் இந்து சமயத்தில் உள்ள 33கோடி தேவர்களையும் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில் அத்தேவர்களில் ஏதாவது ஒரு தேவனைக் குறிக்கும்.எனினும் இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்கு தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவில்லைமுழு முதற் கடவுளுக்கு் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று இன்று கருதப்படுகின்றது. ஆறுமுகநாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. 
 
இதனால் தேவன் என கிறிஸ்தவர்களது கடவுளை அழைப்பது சரியல்ல என்று கருதப்பட்டு இன்று சிலமொழிபெயர்ப்புகளில் இறைவன் அல்லது கடவுள் எனும் பதங்கள் உபயோகிக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவன் எனும் பதத்தினை மாற்றக் கூடாது எனும் கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். (தமிழ் வேதகமத்தின் மொழிபெயர்ப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆசிரியரின் “புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு” எனும் நூலினைப் பார்க்கவும்) 

Sunday 20 April 2014

வேதமும் விளக்கமும் - மாற்கு 11:25 - ஏன் நின்று ஜெபம் பண்ண வேண்டும்?

 மாற்கு 11:25 இல் நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஏன் நின்று ஜெபம் பண்ண வேண்டும்? (ஆர் ரேவதி, கொழும்பு)
 
யூதர்கள் வழமையாக நின்று கொண்டே ஜெபம் பண்ணுவார்கள். இதனால்தான் ஜெபத்தைப் பற்றி போதிக்கும்போது நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். யூதர்கள் மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது மட்டுமே முழங்காலில் இருந்து ஜெபிப்பதைத் தாம் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மற்றைய நேரங்களில் நின்று கொண்டு வானத்தை அன்னார்ந்து பார்த்த்த வண்ணம் தம் இருகைககளையும் உயர்த்தியே ஜெபம் பண்ணுவார்கள். 




மாற்கு 11:25 
நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். 
 
மேலதிக விபரங்களுக்கு இந்த தொடுப்பையும் பாருங்கள்
 










Thursday 17 April 2014

வேதமும் விளக்கமும் Good Friday எவ்வாறு நல்லது ஆகும்?

இயேசுகிறிஸ்து மரணடைந்த பெரிய வெள்ளிக்கிழமையை Good Friday என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். அது எவ்வாறு நல்லது ஆகும். (திருமதி ராணி டைட்டஸ், குஜராத், இந்தியா)

இயேசுகிறிஸ்துவின் மரணம் மனிதர்களுடைய பார்வையில் தீமையானதாக இருந்தாலும் அது உண்மையில் நல்லதொரு செயலாகவே இருக்கின்றது. ஏனென்றால் இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாகவே பாவிகளுக்கு இரட்சிப்பு கிடைக்கின்றது. அவர் சிலுவையில் மரித்தபோது மனிதர்களாகிய நம்முடைய பாவங்கள் அனைத்தையம் சுமந்து தீர்த்து நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்துள்ளார். இதனால் அவரது மரணத்தின் மூலம் நமக்கு நன்மையே கிடைத்துள்ளது. இதனால்தான் அவர் மரித்த தினத்தை ஆங்கிலத்தில் Good Friday என்று கூறுகின்றனர். 

Wednesday 9 April 2014

வேதமும் விளக்கமும்-பிரசங்கி 1:9-11, 3:15 வசனங்களின் விளக்கம் என்ன?

பிரசங்கி 1:9-113:15 வசனங்களின் விளக்கம் என்ன? (ஆர். கோயில்பிள்ளை, ஆழ்வார்தோப்பு, இந்தியா)
 
சூரியனுக்கு கீழ் எல்லாம் மாயையானது எனக் கூறும் பிரசங்கி முதலாம் அதிகாரம் 1 முதல் 11 வசனங்களில் இவ்வுலகத்தை அவதானித்துப் பார்த்து எல்லாம் மாயையானது என்று கூறுகின்றார். 4 முதல் 7 வரை உலகம்மாற்றமடையாமல் ஒரேவிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்றார். 8 முதல்  10 வரையிலான வசனங்களில் இவ்வுலகம் மனதுக்கு திருப்திதராததொன்றாய் இருப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். மனித மனம் புதியவைகளை நாடுகிறது. ஆனால் உலகில் புதியவைகள் நாடும் மனிதமனம் திருப்தியடையாமல் இருக்கின்றது. இதையே 9ஆம் 10 வசனங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது” என்கிறார். 
 
உண்மையில் பிரசங்கி முதல் அதிகாரத்தின் 11 வசனங்களிலும் தான் வாழும் உலகில் புதியவை ஒன்றுமில்லை என்றே கூறுகின்றார். ஏற்கனவே இருந்தவைகளே இப்போதும் இருக்கின்றன. அவையே இனிமேலும் இருக்கும் இதனால் புதியவைகளை நாடும் மனம் திருப்தியடையாதுள்ளது என்பதே இவ்வசனங்களில் பிரசங்கி அறியத்தரும் உண்மையாகும். 4ம் வசனம் முதல் 7ம் வசம் வரை எதுவும் மாற்றமடையவில்லை என்று கூறிய பிரசங்கி 8 முதல் 10 வரையிலான வசனங்களில் இதனால் மனித மனம் திருப்பதியடையாமல் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். 4ம் வசனத்தில் மனிதர்கள் வந்து போய்க் கொண்டிருந்தும் உலகம் அப்டியே இருப்பதையும் 5ம் வசனத்தில் சூரியன் உதிப்பது அஸ்தமிப்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் செயலாக இருப்பதையும் 6ம் வசனத்தில் காற்று ஒரு சுற்று வட்டத்தில் வீசிக் கொண்டிருப்பதையும் 7ம் வசனத்தில் நீரின் சுற்றுவட்டத்தையும் குறிப்பிடும் பிரங்கி, உலகில் இவை எப்போதும் போலத் தொடர்ந்தும் ஒரே மாதிரியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் உலகம் மாற்றமடையாமல் இருக்கின்றது என்று கூறுகின்றார். இதனால், புதியவைகளை நாடும் மனித மனம் திருப்தியடையாமல் இருக்கின்றது என்று 8ம் வவனத்தில் கூறும் பிரசங்கி 9ம் 10ம் வசனங்களில் மாற்றமடையாதிருக்கும் உலகில் நூதனமானது அதாவது முன்பில்லாத புதியதொன்றும் இல்லை என்று கூறுகின்றார். இவ்விடயமே பிரசங்கி 3:15 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பிரசங்கி முதலாம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் சூரியனுக்குக் கீழே வாழ்வு மாயையாயிருப்பதற்கான இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைய மக்கள் கடந்த காலத்தை மறந்து விடுவது போல, வருங்கால சந்ததியினர் இப்போதிருப்பவைகளை மறந்து விடுவர் என்று பிரசங்கி கூறுகின்றார். இவ்வசனத்தில் ஞாபகம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் ஞாபகத்தில் வைத்திருந்து அதற்கேற்றபடி செயல்படுவதாகும். உண்மையில் கடந்தகால ஏற்பட்ட பிழைகளையும் தவறுகளையும் நாம் தவிர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் கடந்த காலத்தைப் பற்றிய அறிவு நிகழ்காலநிலைக்கான காரணத்தையும் அறியத் தரும். ஆனால் உலகம் கடந்த காலத்தை ஞாபகத்தில் வைத்திராதமையால், அதிலிருந்து எவ்வித பாடத்தையும் கற்க முடியாதுள்ளது. இதனால் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருப்பதாக பிரங்கி கூறுகின்றார். 
 
 
பிரசங்கி 1:9-11 
9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

11. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
 
பிரசங்கி  3:15 
முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். 
 

Sunday 6 April 2014

:வேதமும் விளக்கமும்-சீத்தீம் எனுமிடத்தில் மரித்தவர்கள் எத்தனை பேர்? 24,000(எண்.25:9) 23,0000 1 கொரி10:8)

 இஸ்ரவேல் மக்கள் சீத்தீம் எனுமிடத்தில் இருக்கையில்  மோவாப்பிய பெண்களோடு வேசித்தனம் பண்ணியமையால் ஏற்பட்ட வாதையில் 24,000 பேர் மரித்தாக எண்ணாகமம் 25:9 கூறுகின்றது. ஆனால் 1 கொரிந்தியர் 10:8 இல் அவ்வாதையில் மரித்தவர்கள் 23,0000 பேர் என்று சொல்லப்பட்டுள்ளதே இது ஏன்? (ஆர்.ரோஸ்மேரி, கொழும்பு) 
1 கொரிந்தியர் 10:8 இல் ஒரே நாளில் 23,000 பேர் மரித்தாகவே பவுல் கூறுகின்றார். அதாவது அவ்வாசதையில் ஒரு நாளில் மரித்தவர்கள் 23,000 ஆனால்எண்ணாகமம் 25:9  இல் அந்நாளுக்குப் பின்னர் மரித்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தமாக வாதையில் 24,000 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிகமாக இந்த 1000 பேரில் கர்த்தருடைய கட்டளைப்படி தூக்கிலிடப்பட்டவர்களும் அடங்குவர். (எண். 25:4)
 
 
எண்ணாகமம் 25:8-9  
8. இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.

9. அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர் 
 
1 கொரிந்தியர் 10:8
8. அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
 
1 கொரிந்தியர் 25:4 
4. கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார். 

Wednesday 2 April 2014

வேதமும் விளக்கமும்- எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தினர் 70(ஆதி 46:27)75(அப். 7:14) பேரா?

ஆதியாகமம் 46:27 இல் எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தினர் 70 பேர் என்றும் அதேவிடயம் அப்போஸ்தலர் 7:14 இல் எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தினர் 75 பேர் என்றும் உள்ளதே. இந்த வித்தியாசத்திற்கான காரணம் என்ன? (எஸ். போவாஸ் ரவிச்சந்திரன், குடவாசல், இந்தியா)
 பழைய ஏற்பாட்டில் ஆதி 46:26 யாத். 1:5 உபா. 10:22 போன்ற வசனங்களில் எகிப்திற்குச் சென்ற யாக்கோபின் குடும்பத்தினர் 70 பேர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு, கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது எண்ணாகமம் 26:29-36 ஐ அடிப்படையாகக் கொண்டு ஆதியாகமம் 46:20 இல் யோசேப்பின் குமாரர்களில் 5 பிள்ளைகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. புதிய ஏற்பாட்டுக்கால கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பையே உபயோகித்தமையால் அப்போஸ்தலர் 7:14 இல் 75 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் யாத். 1:15 உபா. 10:22 இலும் 75 பேர் என்றே உள்ளது.  


ஆதியாகமம் 
26. யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப் பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்.

27. யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.
 
அப்போஸ்தலர் 7:14
14. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
 
 யாத். 1:5 
யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர். 
 
 உபா. 10:22 
22. உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார். 
 
 
 எண்ணாகமம் 26:29-36 
29. மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,

30. கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும்,

31. அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,

32. செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.

33. ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

34. இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.

35. எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,

36. சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே. 
 
 ஆதியாகமம் 46:20
20. யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.