- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 28 May 2014

வேதமும் விளக்கமும்-வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சேக்கல் எத்தனை ராத்தல்?

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சேக்கல் என்பது தற்கால நிறையளவில் கிட்டத்தட்ட எத்தனை ராத்தல்? (ஜோசப், சுவிட்சர்லாந்து)

கி.மு. 7ஆம் நூற்றாண்டில் நாணயம் தயாரிக்கும்முறை உருவாகும் வரை பணமாக உபயோகிக்கப்பட்ட உலோகங்கள் அவற்றின் நிறையை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடப்பட்டன. ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம்ஸ் அல்லது 0.4 அவுன்ஸ் நிறையுடையது.

Sunday 25 May 2014

வேதமும் விளக்கமும் - பேதுரு தலைகீழாக சிலுவையில் மரித்தது உண்மையா? பைபிளில் இது பற்றி ஏன் இல்லை?

அப்போஸ்தலானாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்ததாக கூறுகிறார்கள். இது உண்மையா? அப்படியாயின் இதுபற்றி ஏன் வேதாகமத்தில் குறிப்பிடப்பிடப்படவில்லை? (கென்னடி, சார்ள்ஸ் டேவிட், பூனா-19, இந்தியா)





வேதாகமத்தில் சீடர்களுடைய வாழ்வில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் குறிப்பிடப்பட்டவில்லை. இதனால் பேதுருவின் மரணம் பற்றி வேதாகமத்தில் நாம் வாசிப்பதில்லை. ஆயினும், முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திர மற்றும் பாரம்பரியக் குறிப்புகள் மூலம் பேதுருவின் மரணம் பற்றி நம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது. அதன்படி பேதுரு கி.பி. 64ஆண்டு இரத்த சாட்சியாக மரித்தார். இயேசுகிறிஸ்துப் போல மரிக்கத் தான் தகுதியற்றவர் என்பதை உணர்ந்தவராக பேதுரு தன்னைத் தலைகீழாக சிலுவையில் அறையும்படி கேட்டுக் கொண்டமையால் அவரை அவ்விதமாக சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.
 

Monday 19 May 2014

வேதமும் விளக்கமும்-இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் என்ன?

42. இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் என்ன? (ஆர். டேவிட். கண்டி, இலங்கை)
 
 
 
யோவான் ஸ்நானகன் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தையே கொடுத்தான். இயேசுகிறிஸ்து பாவமற்றவராக இருந்தமையால், மற்றவர்களைப் போல அவர் பாவங்களிலிருந்து மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கவில்லை. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மற்றவர்களைப் போல பாவஅறிக்கை செய்யவில்லை. இதனால், பாவங்களிலிருந்து மனந்திருப்பியவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தை இயேசுகிறிஸ்து பெற்றமைக்கான காரணம் என்ன என நாம் வினவலாம். இயேசுகிறிஸ்து  மக்களுடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக வந்தார். இப்பணி அவருடைய ஞானஸ்நானத்தின்போதே ஆரம்பமானது. இயேசுகிறிஸ்து யாருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக வந்தாரோ அவர்களோடு தன்னை அடையாளங் காண்பிப்பதற்காக அவதாவது பாவிகளை பிரதிநிதிப்படுத்துவதற்காக, யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். எந்தப் பாவத்திலிருந்தும் மனந்திரும்பவேண்டியிராத இயேசுகிறிஸ்து, தான் யாருடைய பாவங்களை சுமந்து தீரக்க் வந்தாரோ அவர்களோடு தன்னை அடையாளங் காணப்பதற்காகவே ஞானஸ்நானம் பெற்றார். 
 
இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறவந்தபோது ஆரம்பத்தில் அவருக்கு ’ஞானஸ்நானம் கொடுக்க யோவான் மறுத்தான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ “இப்பொழுது இடம் கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கின்றது என்று சொன்ன பின்பே யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். எல்லா நீதியையும் என இயேசுகிறிஸ்து கூறுவது அவரது பூலோக ஊழியத்துக்கான முழுமையான திட்டமாகும். தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகுக்கு வந்தார். இதனால் அவர் தேவனுடைய நியமங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியவராக இருந்தார். இதில் ஒரு அம்சம் அவர் பாவிகளோடு தன்னை அடையாளங்காணுதலாகும். இதை அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் செய்துள்ளார். பாவிகள் பெற வேண்டிய ஞானஸ்நானத்தைப் பெற்று தன்னை அவர்களோடு இயேசுகிறிஸ்து அடையாளங் கண்டார். ஞானஸ்நானத்தில் ஆரம்பமான இந்த அடையாளங் காணுதல் சிலுவை மரணத்தில் அதன் உச்ச நிலையை அடைந்தது. 

Thursday 15 May 2014

வேதமும் விளக்கமும்-மகதலேனா மரியாளும் பெத்தானியா மரியாளும் ஒரு பெண்ணா?

மகதலேனா மரியாளும் பெத்தானியா மரியாளும் ஒரு பெண்ணா இல்லையென்றால் இருவரும் வேறு வேறு பெண்களா? (திருமதி பியூலா ஸ்ரீனிவாசன், மதுரை-01, இந்தியா)

புதிய ஏற்பாட்டில் மரியாள் எனும் பெயருடைய 7 பெண்களைப் பற்றி நாம் வாசிக்கலாம். இவர்களில் இருவரே மகதலேனா மரியாளும் பெத்தானியா மரியாளுமாவார்கள். மகதலேனா மரியாள் கலிலேயாக் கடலுக்கருகில் இருந்த “மக்தால்“ எனும் ஊரைச் சேர்ந்தவளாயிருந்தமையினாலேயே அவள் மகதலேனா மரியாள் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாள். ஆனால் பெத்தனியா மரியாள் எருசலேமுக்கருகில் இருந்த பெத்தானியா எனும் ஊரைச் சேர்ந்தவள் எனவே இருவரும் ஒருவரல்ல.

Sunday 11 May 2014

வேதமும் விளக்கமும்- இயேசு காவியம்-கவிஞர் கண்ணதாசன் நியாயத்தீர்ப்பு நாளில் அங்கீககரிக்கப்படுவார்களா?

றைந்த கவிஞர் கண்ணதாசன் தான் எழுதிய இறவாக்காவியம் - இயேசு காவியம் என்று கூறியுள்ளார். இவரே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொகுப்பையும் எழுதியுள்ளார். நியாயத்தீர்ப்பு நாளில் இவர் போன்றோர் கிறிஸ்துவினால் அங்கீககரிக்கப்படுவார்களா? (சாம் சுரேஸ், ராஜநாயகம், மட்டக்களப்பு, இலங்கை)
 

இயேசுகிறிஸ்துவினால் அங்கீகரிக்கப்படுவதற்கு நாம் அவரை  நாம் தனிப்பட்ட ரீதியாக விசுவாசித்து நம்முடைய இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்துவாலன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12 கூறுகின்றது. இரட்சிக்கப்படுவதற்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே விசுவாசிக்க வேண்டும் என்பதை அப். 16:31 அறியத் தருகின்றது. இவைப் போன்ற வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன. எனவே, ஒருவர் இயேசுகிறிஸ்துப் பற்றி எழுதியமையால் அவர் இரட்சிக்கப்பட்டு நியாயத் தீர்ப்பு நாளில் இயேசுகிறிஸ்துவின் பக்கம் இருப்பார் எனக் கூறமுடியாது. கவிஞர் கண்ணதாசன் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து தனிப்பட்ட ரீதியாக இரட்சிக்கப்பட்டாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அவர் எல்லா மதங்களும் ஒன்றெனக் கருதியவர். கடைசி நேரத்தில் யாராவது ஒருவர் புத்தரைப் பற்றி காவியம் எழுதும்படி சொல்லியிருந்தால் அவர் புத்தரைப் பற்றியும் எழுதியிருப்பார். இயேசுகிறிஸ்துப் பற்றி எழுதுவது நியாயத்தீர்ப்பின் போது அவர் பக்கம் இருப்பதற்கான காரணமாயமைந்து விடாது.

Wednesday 7 May 2014

வேதமும் விளக்கமும்- அப்.19:35 -எபேசு மகாதேவியாகிய தியானாள் வானத்திலிருந்து விழுந்த சிலை..உண்மையா?

அப்போஸ்தலர் 19:35 இல் பூர்வ எபேசு பட்டணத்தில் மகாதேவியாகிய தியானாள் வானத்திலிருந்து விழுந்த சிலை என்று எழுதப்பட்டுள்ளது. இது உண்மையா? (ஏ.பஸ்தியான், ஓமந்தை, இலங்கை)

தியானாளின் ஆலயம் தியானாளின் ஆலயம் புராதன உலகின் ஏழு அதியங்களில் ஒன்றாகப் புகழப்படுகின்றது. அக்கால எபேசிய மக்கள் தியானாளின் சிலை வானத்திலிருந்து விழுந்தது என நம்பினர். இதுஅவர்களது நம்பிக்கையே தவிர உண்மையில் நடைபெற்ற சம்பவம் அல்ல.

 அப்போஸ்தலர் 19:35
35. பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?

Sunday 4 May 2014

வேதமும் விளக்கமும்- மாற்கு 4:30-32 கடுகு செடி எப்படி பெரிய கிளை கொண்ட மரம் ஆகும்?

38. மாற்கு 4:30-32 இல் கடுகு விதை பெரிய மரமாகி ஆகாயத்துப் பறவைகளும் அதன் கீழ் வந்து தங்கும் என்று சொல்லப்படுகின்றது ஆனால் கடுகு செடி பெரிதாக வருவதில்லை. அத்தோடு குறிப்பிட்ட நாட்களுக்குப் மரி்த்துவிடும் ஆகாயத்துப் பறவைகள் தங்கக் கூடிய கிளைகளை விடுவதில்லை. சிறிய கிளைகளே கடுகு செடியில் இருக்கும். ஆனால் வேதத்தில் கடுகு செடி பெரிய மரம் என்றும் ஆகாயத்துப் பறவைகள் தங்கக்கூடிய மரம் என்றும் சொல்லப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? (எம்.ஜே.ஜோசப், ஹெந்தலை, இலங்கை)

கடுகு செடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலஸ்தீன பகுதிகளில் வளரும் கடுகுச் செடிகள் நம் நாட்டில் வளரும் கடுகுச் செடிகள் போன்று வளர்பவை அல்ல. அவை 10 முதல் 15 வரைகள் உயரமாக வளரக் கூடியவை. எனவே, இயேசுகிறிஸ்து கடுகுச் செடியைப் பற்றி கூறியவை அனைத்தும் உண்மையானவையே. 
மாற்கு 4:30-3230. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;

32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். 

Thursday 1 May 2014

வேதமும் விளக்கமும்- லூக்.10:7இயேசு ஊழியத்திற்கு அனுப்பும்போது சீடர்களிடம் ஏன் வீட்டிற்கு வீடு போகாதிருங்கள் என்று கூறினார்?

லூக்கா 10ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து 70 பேரை ஊழியத்திற்கு அனுப்பும்போது 7ஆம் வசனத்தில் அவர்களை வீட்டிற்கு வீடு போகாதிருங்கள் என்று ஏன் கூறினார்? (திருமதி. எல்.ராமநாதன், பதுளை, இலங்கை)
 
இயேசுகிறிஸ்து லூக்கா 9ம் அதிகாரத்தில் பன்னிரு சீடர்களை ஊழியத்திற்காக அனுப்பும்போதும் அவர்கள் ஒரு பட்டத்திற்குச் சென்றால் அங்கு இருக்கும் நாட்களில் அவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு வீட்டிலேயே இருக்கும்படி கூறினார். அதேவிதமாக 10ஆம் அதிகாரத்திலும் 70 பேரை அனுப்பும்போது கூறுகின்றார். இயேசுகிறிஸ்துவினால் அனுப்பபடுகின்றவர்கள் ஒரு பட்டத்திற்குச் சென்று தேவனுடைய செய்தியை அறிவித்தபின் அடுத்த பட்டணத்திற்குச் செல்ல வேண்டும். அவர்கள் ஒரு பட்டணத்தில் எல்லோருடைய வீடுகளுக்கும் விஜயம் செய்து கொண்டிருந்தால், ஒரு பட்டத்தில்அதிக நாட்கள்இருக்க வேண்டிவரும். இதனால்அவர்கள் வேறு பட்டணங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படும். அவர்களது பணி அவசரமானதொன்றாய் இருந்தமையினால் அவர்கள் ஒரு பட்ணத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்து அப்பட்டணத்தில் தாம் செய்ய வேண்டிய பணி முடிவடைந்ததுடன் அடுத்தப பட்டணத்திற்கு செல்ல வேண்டும். இதனாலேயே வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் என்று சொன்னார். 
 
 லூக்கா 10:7
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.