- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 27 January 2012

திருமணமானவர்களுக்கான சில வழிகாட்டல் குறிப்புகள்- (2)

 இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுத்தவும்



12. வேதாகமத்தின்படி தேவன் பாலுறவை நான்கு காரணங்களுக்காகப் படைத்திருக்கின்றார். முதலாவது, உலகத்திற்கு இதனூடாகவே குழந்தைகள் வருகின்றன. (ஆதி. 1:28, 9:1) இவ்விடயம் ஆறாம் நாள் படைக்கப்பட்ட காரியங்களில் மிகவும் நன்றாயிருந்தவற்றுள் அடங்குகிறது. (ஆதி. 1:31) இரண்டாவதாக இருவராக இருந்தவர்கள் திருமணத்தினூடாக ஒன்றாகும்போது ஆழமான, நெருக்கமான உறவு இருவருக்கிடையில் ஏற்பட்ட பாலுறவு உதவி செய்கின்றது. (ஆதி. 2:24, 1 கொரி 6:15-16) மூன்றாவதாக, தம்பதிகள் ஒவ்வொருவருடைய சரீரத்திலிருந்தும் திருப்பதியைப் பெற்றுக் கொள்ளும்போது இன்பத்தைத் தருகின்ற காரணியாக பாலுறவு அமைகின்றது. (நீதி 5:18, உன்னதப்பாட்டு) நான்காவதாக, அது தேவனுடனான எமது உறவை சித்திரிக்கப் பயன்படுகின்றது. (உதாரணம் ஓசியா) ம்பதிகள் பாலுறவை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தேவன் அதைப் படைத்த நோக்கத்தின் முழுமையை அவர்கள் அனுபவிக்கத்தக்க சுயாதீனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

13. பவுல் படிப்பிக்கி்ன்ற விதமாக அடிக்கடி பாலுறவில் ஈடுபட நிச்சியத்துக் கொள்ளுங்கள். தம்பதிகள் அடிக்கடி பாலுறவில் ஈடுபடாவிட்டால் சாத்தான் அந்த நிலைமையைப் பயன்படுத்தி பாவம் செய்யத் தூண்டுவான் என்று பவுல் குறிப்பிடுகின்றார். (1 கொரி. 7:5) தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலங்கள் பாலுறவில் ஈடுபடமுடியவில்லையெனில் சாத்தானைக் கடிந்து கொண்டு, திருமணத்திற்கப்பால் பாலுறவில் ஈடுபட உங்களுக்கு உரித்துண்டு என்ற எண்ணத்திற்கு ஒருபோதும் இடமளிக்காதிருங்கள்.

14. தங்கள் மனைவிமார் தமக்குத் தேவையான நேரத்தில் பாலுறவில் ஈடுபட மறுப்பது ஆண்களின் சுயமதிப்பை உடைப்பதாய் இருக்கும். கணவனது பாலியல் ரீதியான நடவடிக்கைகளைத் தள்ளிவிடுதல் அவர்களது சுயமதிப்பை உடைப்பதாகவும், சாத்தான் தன் சய இஷ்டத்திற்குப் பயன்படுத்த உதவலாம் என்பதையும் மனைவிமார் அறிந்திருப்பது முக்கியமானது. அதுபோலவே இணக்கம் தெரிவிக்காத ஒரு மனைவிமீது கணவன் பலாத்காரம் செய்யவும் கூடாது. தேவனுடைய உதவியுடன் தனது சுயமதிப்பிற்கு ஏற்பட்ட தாக்த்தினை தாங்கிக் கொண்டு, மனைவி இணக்கம் தெரிவிக்காத காரணத்தை விளங்கிக் கொள்ள முயலவேண்டும். மனைவி பாலுறவில் ஈடுபட விரும்பும்போது கணவன் விரும்பாமல் இருப்பாராயினும இந்தக் காரியங்கள் பொருந்தும்.

15. நீங்கள் ஆலோசனை சொல்பவர்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் முக்கிய நபர் உங்கள் துணைதான் என்பதனை வெளி்ப்படுத்துங்கள். அவர்களுக்கு சௌகரியமான குடும்ப வாழ்க்கைக்குரிய மாதிரிகள் தேவையாயுள்ளது. நீங்கள் உங்கள் துணை உங்களது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபரல்ல என்ற செய்தியை அவர்களுக்கு கொடுத்திருப்பீர்கள் என்றால், நீங்கள் அவர்களுக்குப் பிழையான ஒரு மாதிரியைக் காண்பிப்பதுடன், கிறிஸ்தவதைப் பிழையான விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று விளங்கும்.

16. குடும்ப வாழ்க்கையைக் குறித்து நிலவும் பிழையான அபிப்பிராயங்கள் காரணமாக உங்கள் துணைக்கு நீங்கள் அதிக நேரத்தைக் கொடுப்பது கிறிஸ்துவிடம் உங்களுக்கு அர்ப்பணிப்புக் கிடையாது என்பதனை வெளிப்படுத்துவதாக சிலர் கருதலாம். மற்றப் பணிகளிலும் நீங்கள் மிகவும் கருத்தாக பணியாற்றுவதை உங்கள் சக ஊழியர்கள் கண்டார்களெனில், உங்கள் துணைக்கு அதிக நேரம் செலவிடுவதைக் குறித்து அவர்கள் பெரிதுப்படுத்த மாட்டார்கள் என உறுதியாகச் சொல்வேன்.

17. கிறிஸ்துவுக்காக இளைஞர்கள் இயக்கத்திலுள்ள வாலிபர்கள் கிறிஸ்தவ தத்துவங்களை நடைமுறைப்படுத்தாத, கிறிஸ்தவரல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சத்தியங்கள் படிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில் அவர்கள் திருமணமான பின்னர் தமது பெற்றோர் நடந்து கொண்ட விதமாகவே நடந்துகொள்வார்கள். உதாரணமாக, தன்னுடைய தாயை தகப்பன் அடிப்பதைக் கண்ட ஒருவன், கோபமடையும்போது மனைவியைக் அடிக்ககூடும். எனினும் இது கிறிஸ்தவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. வேதாகமத்தின் படிப்பினைகளின்படியான குடும்பங்களைக் குறித்துக் கற்றுக்கொடுத்த பின்னர், நீங்கள் ஊழியத்திலும் குடும்பத்திலும் கடினமாக உழைப்பதைக் காணக்கின்ற அவர்கள் நீங்கள் செய்வது சரியென்பதை இறுதியில் ஏற்றுக்கொள்வார்கள. தலைவர்கள் கடினமாக உழைக்காமல், வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இருக்கும்போது மற்றவர்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

18. குடும்பத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும், எமக்குக் கிடைக்கும் மற்றைய பொறுப்புகளுக்கும் ஒப்புடையவர்களாய் இருப்பது எளிதான காரியமல்ல. எம்மில் அநேகருடைய சிலுவை ஒரு சமிநிலையான வாழ்க்கையாகும். உங்கள் குடும்பத்தைதக் கவனித்துக் கொண்டு உங்கள் வேலையில் அல்லது படிப்பில் ஈடுபட்டுக்கொண்டு, தேவனுடைய ஊழியத்தையும் செய்வது மிகவும் களைப்பை உண்டுபண்ணுவதாய் இருக்கலாம். ஆனால், வேதாகமம் களைப்படைவதை ஒரு பாவம் என்று ஒருபோதும் சொல்வதில்லை.

19. மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கான முக்கிய திறவுகோல் ஓய்வுநாள் தத்துவமாகும். வேதாகமத்தின்படி கிழமையில் ஒரு நாள் ஓய்வு எடுக்காமல் விடுவது பாவமாகும். இது “நமக்கல்ல தேவனே பணியாற்றுவார்.“ என்ற சத்தியத்தை உணராத காரணத்தால் வெளிவரும் அமைதியின்மையின் அறிகுறியாகும். தேவனின் கட்டளைகளை நாம் பின்பற்றும்போது நமது நலமான வாழ்க்கைக்குத்  தேவையானவற்றை அவர் சந்திப்பார் என்பதை நாம் நம்புவதில்லை. இதுவே, ஒருநாளை ஓய்வுக்காக வைக்காமல் விடுதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆதாமினதும் ஏவாளினதும் பாவம் இதுவாகவே இருந்தது.

20. எமது ஓய்வுநாள் முழுமையாக தேவனுக்கும் குடும்பத்திற்கும் கொடுக்கப்படலாம். வீட்டில் நேரம் செலவிடாமல் அதிகமாய் வேலை செய்பவர்கள் வேலைத் தளத்தில் உறவுகளை எற்படுத்திக் கொள்வார்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சராசரி வைத்தியர்களும், கிறிஸ்தவப் பணியாளர்களும் பிழையான உறவகளை அதிகமாக வைத்துக்கொள்வதற்கு இது ஒர் காரணமாகலாம். ஒவ்வொரு ஆரோக்கியமான திருமணமும், கணவனும் மனைவியும் ஒருவரிலொருவர் மகிழ்ந்து கொள்ளு்ம்படியான விசேஷித்த நேரங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே உன்னதபாடு போன்ற புத்தகங்களில் தரப்பட்டுள்ள மாதிரியாகும். நான் ஒருமுறை எனது மனைவியுடன் ஒரு ஐஸ்கிறீம் நிலையத்திற்குச் சென்றபோது, நாங்கள் இருவரும் ஒரு பிழையான உறவை வைத்திருப்பவர்கள்போல் எம்மை மற்றவர்கள் பார்த்தது எனக்கு ஞாபகம் வருகிறது. வயதான திருமணமான இருவர் தமக்குள்ளே மகிழ்ந்திருக்க நேரம் ஒதுக்குவதைக் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை எமது வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் எமது மனைவி அல்லது கணவனே தவிர, பிள்ளைகள் அல்ல என்பதை எமது பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அர்ப்பணித்துக்கொண்ட பெற்றோரைக் கொண்டிருப்பது, பிள்ளைகளுக்கு பெரிதான பாதுகாப்பையும் சிறந்ததொரு மாதிரியையும் கொடுக்கின்றதாய் அமையும்.

21. வெளிஉறவுகள் இன்பமான அனுவங்களாக தென்படலாம். வீட்டில் துணையுடன் இல்லாத அளவுக்கு மற்ற மனிதருட்ன சந்தோஷமாய் இருப்பதாக மனிதர் தங்களைத் தாமே நம்ப வைக்கலாம். வீட்டில் சந்தோஷம் இல்லையென்பது வெளியே உறவை வைத்துக்கொள்ள ஒரு காரணமாய் இருக்கமுடியாது. ஆனாலும் எமது குடும்ப வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமெனில், எமது வீடுகள் சந்தோஷத்தின் உறைவிடமாயிருக்குமெனில், கடினமான உழைப்பின் பின்னர் நாம் விரும்பி வரும் இடமாக வீடு இருப்பின், இந்த இன்பமான அனுபவங்களை ஒரு பிழையான உறவின்மூலம் இழந்துவிடும் ஆபத்தைச் சந்திக்க நாம் துணியமாட்டோம்

22. குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சம் மகிழ்ச்சி, பழைய ஏற்பாட்டில் உள்ள யூதர்கள் குடும்பம் மகிழ்ச்சிக்கென தங்களுடைய வாழ்க்கையில் அநேக காரியங்களை இணைத்திருந்தார்கள். அதற்கு உதாரணம் சாப்பாட்டுவேளை (உபா. 14:26) வேதாகம் கோட்பாட்டில் வெற்றிகளையும் ஆசீர்வாதங்களையும் கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான கொண்டாட்டங்களை உள்ளடக்கிய வேதாமக விழாக்கள் இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. எனவே, உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கு நல்ல காரியம் ஒன்று நடந்தால் எல்லோருமாகச் சேர்ந்து அதனைக் கொண்டாடுங்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவர் படிப்பில், வெற்றியீட்டினால் அல்லது வேறு துறையில் ஏதாவது வெற்றியீட்டினால், குடும்பமாக வெளியில் உணவருந்தவோ ஐஸ்கிரீம் சாப்பிடவோ நாம் போவதுண்டு். (வளமான சமுதாயங்களில் இருப்பதைப் போன்று இலங்கையில் இப்படியான வழக்கங்கள் சாதாரணமான வழக்கங்கள் அல்ல)

23. நமக்குத் திருமணமான பின்பு எமது வேடிககை விநோத காரியங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அநேக சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால், நீங்கள் விரும்பும் ஒரு விநோதத்தை உங்கள் குடும்பத்தார் விரும்பாத காரணத்தால் அதை நீங்கள் விட்டுவிட நேரலாம். எனக்கு விளையாட்டு மிகவும் பிரியமானதொன்று. நான் வாலிப நாட்களில் விளையாடிய றக்பி பந்தாட்டமே எனக்குப் பிடித்தமான விளையாட்டு. ஆனால் எனது மனைவிக்கு இந்த விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய பிள்ளைகளுக்கும் இந்த விளையாட்டில் அவ்வளவாய் விருப்பமில்லை. அவர்கள் எல்லோரும் கிரிக்கட்டையே விரும்புகிறார்கள். எனவே, நாம் குடும்பமாய் பாரக்கவேண்டிய விளையாட்டு கிரிக்கட்டேயன்றி றக்பி அல்ல என்று தீர்மானித்தேன்.

24. விநோதங்கள் நிறைந்த குடும்பம் வெளி உறவுகள் ஏற்படுவதைக் குறைப்பது மட்டுமல்ல. சுத்தமான விநோதமானது நமது பிள்ளைகளின் நண்பர்கள் ஈடுபடும் அசுத்தமான விநோதங்கள் விட சந்தோஷமானவை என்பதனை பிள்ளைகள் உணரச் செய்யும். இது பாவமான விநோதங்களில் ஈடுபட பிள்ளைகளுக்கு ஏற்படும் சோதனைகளின் பலத்தை வெகுவாக குறைத்து விடும்.


25. குடும்ப வாழ்க்கை தேவன் நமக்கு தந்துள்ள அழகான கொடையாகும். மிகவும் கவனமாக ஒருவரையொருவர் அன்புசெய்து, பாதுகாத்து, அநேக ஆண்டுகளாக நமது உறவை வளர்த்துக்கொண்ட ஒரு தம்பதியினரின் சந்தோஷத்தோடு ஒப்பீடு செய்ய உலகத்தில் மிகவும் சொற்பமான வேறு சந்தோஷங்களே உள்ளன. இப்படியான தம்பதியினருக்கு பாலுறவு மிகவும் மதிப்பான காரணமாயிருப்பதுடன் ஆண்டுகள் கழிந்து  போகையில் அதன் மூலம் வரும் இன்பம் இன்னும் ஆழமாகும். அநேக கிறிஸ்தவத் தம்பதிகள் தமது திருமணத்தைக் தற்காத்து வளர்க்காத காரணத்தால் இந்த சந்தோஷத்தை இழந்திருப்பது எவ்வளவு கவலைக்குரிய காரியமாகும். இந்த நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு இன்னும் காலம் செல்லவில்லை. நீங்கள் திருமணமானவரராகில் உங்களுடைய குடும்ப வாழ்க்கையினூடாக பெறப்படும் மகிழ்ச்சியை உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிதான குறிக்குள்ளாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்ய உத்தேசித்திருந்தால். திருமணத்துக்குள்ளாகப் போகும்போது உங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் காப்பீர்கள் எனவும் அதை வளர்க்கத் தேவையான எல்லாவற்றையும் செய்வீர்கள் எனவும் உறுதியான தீர்மானத்தோடு போங்கள்.

26. நான் சொல்லுகிற காரியங்களின் முக்கியத்துவத்தை மீளவும் உறுதிப்படுத்தத தேவனுடைய உன்னதமான ஊழியக்காரர்கள் இருவரின் வார்த்தைகளை இங்கு குறிப்பிடுகிறேன். ஜோர்ஜ் முல்லர் சொன்னார். “நான் எனது அன்புக்குரிய மனைவியை, நாங்கள் வசித்த பிறிஸ்டல் நகரில் தற்சமயமாக சந்தித்த வேளைகளைக் குறித்து சந்தோஷப்படாமல் இருந்த சந்தர்ப்பங்களே இல்லை. “மார்ட்டின் லூதர் சொன்னார் “ஒரு நல்ல திருமணத்தை விட அன்பான, தோழமையான, கவர்ச்சிமிக்க உறவோ, கூட்டுறவோ உடனிருப்போ கிடையாது, நாம் துணையுடன் இப்படியான உறவையே தேடவேண்டும்.

Thursday 19 January 2012

திருமணமானவர்களுக்கான சில வழிகாட்டல் குறிப்புகள்



உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான நபர் உங்கள் துணைதான் என்பதை, அவர் அறிந்திருக்கிறார் என்பதை உறுதி செய்யுங்கள்.... தினமும் அன்பைக் கட்டியெழுப்புவதும், உறுதிசெய்வதுமாக உங்கள் நேரங்களை தரமுள்ளதாக்குங்கள். 

ஒரு சந்தோஷமற்ற திருமணம், பிழையான உறவை வைத்துக் கொள்வதற்கான சாட்டாக இருக்க முடியாது. ஆனாலும், சந்தோஷமான திருமணம் இப்படியான உறவகளைத் தவிர்க்க நிச்சியமாய் உதவும். எனவே, தேவனுடனான எமது உறவை வளர்த்துக் கொள்ளும் பணிக்கு அடுத்தாக. எமது துணையுடன் உள்ள எமது உறவை வளர்த்துக் கொள்ளும் பணியை எமது முக்கியமான திட்டமாகக் கொண்டிருக்க வேண்டும். வேதாகமம் குறிப்பிடும் இருவர் ஒருவராகுதல் (மத். 19:6) தானாகவே நடக்கின்ற ஒரு காரியம் அல்ல. அதற்கு கடினமான உழைப்பு அவசியமாகும்.

எமது துணையுடன் ஒன்றாவதற்கு நாம் எமது முயற்சிகளையும் சத்திகளையும் செலவிடவேண்டும். நாம் இந்தப் பணியைச் செய்ய ஆழ்ந்த அர்ப்பணிப்பும், மற்றைய காரியங்களை விட்டுவிட்டு இதற்கென்று நேரத்தைச் செலவிடுவதற்கான விருப்பமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சிலவேளைகளில், அவசரமான தேவைகளைச் சந்திப்பதில் நாம் உறுதியாயிருப்பதால் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள் எமது நாளாந்த நடவடிக்கையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது. இவ்வாறு தள்ளி வைக்கப்படும் காரியங்களில், நமது துணையுடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

உங்கள் துணையுடன் உள்ள உறவை வளர்த்துக் கொள்ள சில வழிகாட்டல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான நபர் உங்கள் துணைதான் என்பதை அவர்/அவள் அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் உறுதி  செய்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பணிகளைச் செய்கின்ற மருத்துவர், கிறிஸ்தவத் தலைவர்களைக் குறித்து அவர்களது துணைவர்கள் சொல்லுவது என்னவெனில், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தவிர்ந்த மற்ற மற்றை அனைவரையும் கவனிக்கிறார்கள் என்பதாகும். எம்முடைய துணைகளுக்கு ஒரு பிரச்சினை இருப்பின் அல்லது அவர்கள் சந்தோஷமற்று இருப்பின் அதனை மிகவும் முக்கியமான காரியமாக கருத்திற் கொண்டு, நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்பதை எமது துணைகள் அறிந்திருக்க வேண்டும். ஹெர்மஸ் எனப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுகால சபைத் தந்தை இப்படியாக சொன்னார். “உங்கள் கற்பைக் காத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்கள் மனைவியை நினைத்துக்கொண்டீர்களானால் நீங்கள் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டீர்கள். “பிள்ளைகளுடைய வளர்ச்சிக்கு ஒரு ஆரோக்கியமான சூழல் ஏற்படவேண்டுமானால், தங்களுடைய பெற்றோர் தமக்குள் ஆழமான அன்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பிள்ளைகள் அறிந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். இன்னொருவர் கூறியதுபோல “ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம். அவர்களுடைய தாயை நேசிப்பதாகும்“

2. உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் எமது துணையே எம்மால் அதிகம் விரும்பப்படுபவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வெளிப்படையான சரீரப்பிரகமான வெளிப்படுத்தல்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த திருமண ஆலோசகரான எச்.நோர்மன் ரைட் இவ்வாறாகச் சொல்லுகிறார் “உங்கள் துணையுடன் இருக்கும் முதல் நான்கு நிமிடங்களை (காலை, மாலை, மற்ற வேளைகள்) உங்கள் இடைவிடா அன்பையும், அதை உறுதிப்படுத்துவரையும் காட்டும் தரமான நேரங்களாகக் கட்டியெழுப்புங்கள். ஒரு நாளில் ஒரு முறையோ இரண்டு முறையோ எமது துணை எமக்கு முக்கியமானவரும், எம்மால் அன்பு செய்யப்படுபவரும் என்பதனை நாம் உறுதிப்படுத்தும்படி காரியங்களைச் செய்ய வேண்டும். ஒரு அரவணைப்பு, முத்தம், எமது துணையை கண்டவுடன் இன்பமான சில வார்த்தைகள் என்பன நாம் செய்யக்கூடிய சில காரியங்கள். கணவனும் மனைவியும் இரவில் ஒன்றாக உறங்குவது மிக முக்கியம் என்று நான் எண்ணுகிறேன். சிலர் குழந்தைகளை தமக்கிடையில் படுக்க வைப்பார்கள். அல்லது பெற்றோரில் ஒருவர் பிள்ளைகளுடன் இருக்கவேண்டும் என்பதால் இரண்டு பேரும் வேறு அறைகளி்ல் நித்திரை கொள்வார்கள். இவ்வாறான காரியங்கள் திருமணத்திற்கு பிரயோசனமற்ற அர்த்தங்களைக் கொடுப்பதாக நான் கருதுகிறேன். அதாவது புறம்மான தோழமை முக்கியமானதொன்றல்ல என்பதே என் கருத்து

3. நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நாட்களாக ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபடவில்லையெனில் மற்றைய காரியங்களுக்கு ஒதுக்கும் நேரங்களை புறமபே தள்ளி வைத்துவிட்டு, விரைவாய் அப்படியான ஒரு உரையாடலுக்கு நேரம் ஒதுக்குங்கள். நீண்ட உரையாடல் இல்லாத திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது, திருமணத்தின் முன் உரையாடலுக்கு அதிக நேரம் கொடுக்கும் தம்பதியினர் திருமணத்திற்குப் பின்னர் உரையாடலுக்கென்று நேரம் ஒதுக்குவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். உங்கள் துணையின்மேல் நீங்கள் வைத்திருக்கும் உண்மைத்துவத்திற்கு நீண்ட உரையாடல்கள் அடிக்கடி நிகழவேண்டியது இன்றியமையாத தாகும்.

4. நான் பிரயாணத்திலிருக்கையில் எப்படியும் எனது மனைவியுடன் ஒவ்வொரு நாளும் தொடர்புகொள்ள முயல்வேன். இன்றைய நாட்களில் கையடக்கத்தொலைபேசி மூலமாக மிகவும் குறைந்த செலவில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியுமாதலால், நான் வெளிநாட்டில் இருக்கும்போது ஒவ்வொருநாளும் இதனைப் பாவித்து நாம் உரையாடிக் கொள்வோம். இப்படியான உரையாடல்கள், நாம் எப்பொழுதும் எமது துணையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், அவர்களே எமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மனிதர்கள் என்பதையும் வெளிப்படுத்தும். இவை நாம் உதாசீனப்படுததக்கூடாத விடயங்கள். ஏனெனில், எமது திருமணத்தை முறிக்கத்தக்க அநேக காரியங்கள் எமது வாழ்வில் குறுக்கிட இடமுண்டு்.

5. ஜெபமானது சீமெந்தைப்போல தம்பதிகளையும் குடும்பங்களையும் கட்டி இணைக்கின்றது. அது கூடவே, குடும்பத்திற்கு வல்லமையையும் கிருபையையும் தருகின்றது. ஒன்றாகச் சேர்ந்த ஜெபிப்பதைத் தவிர்த்துக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் என்பதனை நான் கண்டுள்ளேன். அநேக தம்பதியினர் ஒன்றாக ஜெபிக்காமல் இருக்கும் வழக்கத்திற்கு பழகி விட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே, ஒன்றாக ஜெபிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டும். ஜெபிப்பது ஒரு ஒழுங்கான வழிமுறையாக மாறவேண்டும். குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது ஜெபிக்க வேண்டும். உதாரணமாக, பிறந்தநாள், பரீட்சை, விளையாட்டு நிகழ்வுகள், வியாதி போன்றவை. உங்கள் மனைவி கிரமமாக ஆலோசனை பணியாற்றச செல்லும்போதோ அல்லது உங்கள் கணவன் அலுவலகத்தில் ஒரு பிரச்சினையை எதிர்நோக்கும்போதோ ஜெபியுங்கள். இவை யாவும் தேவனைத் தலைமையாகக் கொண்ட வாழ்க்கையிலே நாமும் பங்களாளிகள் என்பதற்கு ஆதரவு கொடுப்பதாய் அமையும்.

6. உலகில் ஆராய்சிகளுக்கும், வேதவசனமும், பெண்கள் அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்றன. உன்னதப்பாட்டு இதற்கு நல்ல உதாரணமாயிருக்கிறது. எனவே, ஒரு கணவன் தன் மனைவிக்கு , அவள் உணரத்தக்க விதத்தில் அடிக்கடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் முன்னர் குறிப்பிட்டப்படி அணைத்தல், முத்தமிடல் போன்ற சரீரப்பிரகமான வெளிப்பாடுகளும், அன்பை வெளிப்படு்த்துவதும், மனைவியின் அழகை வர்ணிப்பதுமான வார்த்தைகளும் மகிழ்ச்சியான திருமணத்திற்கு முக்கியமானவை. சில கணவன்மார்கள் பாலுறவில் ஈடுபடும்போது மாத்திரமே சரீரப்பிரகாரமான அன்பை வெளிப்படுத்துவார்கள். இது மனைவியையும் அவளது உடலையும குறித்தான உண்மையான அன்பையல்ல, மாறாக கணவனது சுயநல நோக்கத்தையும் வெளிப்படுத்தும். தன்னுடைய கணவனுக்கு கவர்சிகரமாக இருக்கும்படி மனைவியும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

7. ஆராய்ச்சியும் வேதவசனமும் (உன்னதப்பாடு) ஆண்களுடைய உருவமைப்பு, அவர்கள் அடிக்கடி உறுதிப்படத்தப்பவேண்டிய தன்மையைக் கொண்டது எனச் சொல்லுகிறது. அவர்கள் தங்கள் மனைவிமாரால் பாராட்டப்படுபவர்களாயும் போற்றப்படுபவர்களாயும் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒரு கணவனில் பாராட்டப்படவேண்டிய விடயங்கள் எப்பொழுதும் இருக்கும். கவலைக்குரிய காரியம் என்னவெனில, சில மனைவிமார் கணவரில் காணப்படும் குறைகளையே எடுத்துச் சொல்வார்களேயன்றி அவர்களில் காணப்படும் நலமான காரியங்களை குறிப்பிடுவதே கிடையாது. நீதிமொழிகள் 27:15-16 இல், சண்டைக்கார மனைவி. மழை நாளில் தொடர்சியான ஒழுக்கைப் போலிருக்கிறாள். அவளை அடக்க முயல்வது காற்றை அடகக முயல்வது போலும். கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலும் இருக்கும் (புதிய தமிழ் வேதாகமம்) வீட்டில் மனைவியின் குற்றச்சாட்டுதல்களால் காயப்பட்டுள்ள, கேவலப்பட்டுள்ள கணவன், அலுவலகத்தில் தன்னைப் பாராட்டுகின்ற, போற்றுகின்ற ஒரு பெண்ணிடம் விழுந்துவிடக்கூடும்.  

8. தம்பதிகள் ஒருவரையொருவர் புகழ்ந்துரைப்பதில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்பது திருமணம் ஒன்றின் பொதுவான விதிமுறையாகும். (நீதிமொழிகள் 31:10-31 ஐக் கவனிக்க) தனது துணையின் ஆள்தத்துவத்தில் காணப்படும் பிரத்தியேகமான தன்மையைப் பாராட்டும்போது, தனது துணை தன்னை விளங்கிக் கொண்டுள்ளார் என்ற உணர்வு அவர்களிடையேயான உறவை ஆழமாக்க உதவும். புகழ்ச்சி மகிழ்ச்சியைப் பூரணமாக்கும். மகிழ்ச்சி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போதே முழுமையடைகிறது. தேவன் தம்மைப் போற்றும்படி சொல்வதற்கான காரணம் இதுவே என நம்புகிறேன். எனவே உங்களது துணையை ஒவ்வொரு நாளும் பாராட்ட நிச்சயித்துக் கொள்ளுங்கள். பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ எழுத்தாளரான சார்ளி செட், தனது இருபத்தைந்தாவது திருமண நாளன்று புல்லர் இறையில் கல்லூரி ஆலயத்தில் பேச நான் கேட்டேன். அப்போது, இருபத்தைந்து ஆண்டுகளாக நான் தன் மனைவியை ஒவ்வொரு நாளும் பாராட்டியதாகவும், ஒவ்வொரு கிழமையும் அவளைப் பாராட்டும்படி புதியதோர் காரியத்தைக் கண்டுகொண்டதாகவும் அவர் சொன்னார்.

9. தம்முடைய துணைகளைக் குறித்து சந்தேகங்கொண்டு இதனால் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில், ஒவ்வொரு நாளும் தமது துணையை சந்தேகங்களுடன் எதிர்கொள்வதைத் தவிர்த்து, தொடர்ச்சியாக தமது நேசத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தி, அவர்கள் எவ்வளவாய் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை வெளிப்படுத்துங்கள் என்பதாகும். எப்பொழுதும் குற்றஞ்சாட்டுவதன் மூலம் எமது துணைகளின் சுயகௌரவத்தை அழித்துவிடுவது எவ்வளவு இலகுவான காரியம். இது பிழையான உறவை ஏற்படுத்துவதற்கான சாட்டு அல்ல. ஆனாலும் வீட்டிலே ஒதுக்குதலை எதிர்கொள்ளும் ஒருவர் , தன்னைப் பாராட்டி அந்தப் பாராட்டுதலை வெளிப்படுத்தும் ஒரு எதிர்பாலாரோடு உறவினை ஏற்படுத்திக் கொள்வது மிகச் சுலபமாக நடந்துவிடக்கூடிய ஒரு காரியமாகும். தேவன் குடும்பத்தை ஏற்படுத்தியதன் நோக்கம், கலவரமான உலகிலிரந்து வரும் ஒருவர் தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்பதையும், அதற்கான உறுதிப்படுத்தல்களையும் பெற்றுக்கொள்வதற்காகவேயாகும். நாம் அதனை ஒரு குற்றஞ்சாட்டும் நீதிமன்றமாக மாற்றிவிடக்கூடாது.

10. உங்கள் துணையுடன் சேர்ந்து காரியங்களைச் செய்ய எத்தனியுங்கள். இது சிலருக்கு இயலாத காரியமாய் இருக்கலாம். ஆனால், இதுவே செய்யவேண்டிய சிறந்த காரியம். உங்கள் துணை உங்களுடன் ஊழியத்தில் ஈடுபடவில்லையெனில் நீங்கள் வேறு பிரதான பணிகளில் ஈடுபடுகிறீர்களெனில், உங்கள் பணிகளில் நடக்கிற காரியங்களை விளக்க நேரம் செலவிடுங்கள். அவனோ அவளோ முழுமையாக உங்கள் தொழிலுக்கு அந்நியராய் இருப்பின் அவருக்கு விளக்கம் சொல்வது கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கவேண்டுமெனில் அந்தக் கடினமான பணி செய்யப்பட்டே ஆக வேண்டும்.

11. திருமணமானவர்கள் அநேகமான நேரங்களில் பாலுறவைக் குறித்து வேதத்திற்கு புறம்பான சிந்தனையைக் கொண்டிருப்பதனால் அவர்கள் மத்தியில் திருப்தியற்ற பாலுறவு காணப்படுகின்றது. சிலர் பாலுறவிலுள்ள ஆபத்துக்களைப் பற்றி மட்டுமே உரையாடி அதிலுள்ள அழகைப் பற்றி உரையாடத மிகவும் சமய ரீதியான பின்னணியில் வளர்க்கப்படுகிறார்கள். இதனால் பாலுறவைக் குறித்ததான அவர்களது சிந்தனை தவறாகின்றது. இப்படி இருப்பதால், அவர்கள் அதனை சுந்தோஷமாக அனுபவிக்கத்தக்க சுயாதீனம் இருப்பதில்லை. சிலர் கிறிஸ்தவர்களாவதற்கு முன்பதாக பாலியல் ரீதியான பாவங்களுக்கு உட்பட்டிருந்த காரணத்தால் அவர்கள் பாலுறவை பரிசுத்தமாதாயும் நலமானதாயும் பார்க்கமாட்டார்கள். சிலர் சிறுபிள்ளைகளாயிருந்த வேளையில் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யபட்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு பாலுறவு வெறுப்பூட்டுகிறதாய் இருக்கிறது. தெற்காசியாவில் இப்படியான நிலைமைகள் மிகவும் அதிகமாய் இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும். சிலர் பாலுறவைக் குறித்து பிழையான இடங்களில் பிழையாக கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்டது பாலுறவைக் குறித்ததான வேதாகம படிப்பினையல்ல. இந்த நிலைமை, கிறிஸ்தவ பெற்றோரும், சபைகளும் பாலுறவைக் குறித்ததான சரியான வேதாகம போதனையைக் கிறிஸ்தவர்களுக்குக் கற்றுத்தருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

இவ்வாக்கமானது கலாநிதி அஜித் பெர்ணான்டோ (Director, Youth for Christ(Sri Lanka)) அவர்கள் எழுதிய “உணர்வு பூர்வமான நடத்தை : முன்யோசனையின்றி ஏற்படக்கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி?“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு  Youth for Christ Publication தமிழில் மொழிபெயர்த்தவர் கலாநிதி அன்பழகன் அரியதுரை)

Thursday 12 January 2012

இழக்கக்கூடாத புத்தகம்



ஸ்டேன்லி என்பார் ஆபிரிக்கா கண்டத்தினூடாக ஒரு பிரயாணத்தை மேற்கொள்ளும்போது 180 இறாத்தல் நிறையுடைய 73 புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். 300 மைல்கள் பிரயாணம் செய்தபின்னர், தனது புத்தகப் பொதிகளைச் சுமந்து வந்தவர்களின் தேகநிலை காரணமாகப் புத்தகங்களை வீசிவிட வேண்டியிருந்தது.

ஸ்டேன்லியின் பிரயாணத்தின்போது அவரது புத்தகங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே சென்றது. கடைசியில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது அவருடைய வேதப்புத்தகம். அதை அவர் இழக்கத் தயாராக இருக்கவில்லை. அவர் தனது பிரயாணத்தின்போது மூன்று தடவைகள் அவ்வேதப் புத்தகத்தை முழுமையாக வாசித்துள்ளார். 

உண்மையில், நாம் வாழ்வில் எதை இழந்தாலும் நமது வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஒரு தடவை லண்டனிலுள்ள பிரபலமான பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், முக்கியமான நூறு பேருக்கு வினாத்தாள் ஒன்றை அனுப்பினார். அதில் நீங்கள் மூன்று வருட காலம் சிறைத்தணடனை அனுபவிக்க வேண்டி வரும் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூன்று புத்தகங்களை மட்டுமே உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். நீங்கள் எந்தப் பத்தகங்களை எடுத்துச் செல்வீர்கள்? முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை நிரற்படுத்துக.“ என்று கேட்கப்பட்டிருந்தது.

பத்திரிகை ஆசிரியருக்குப் பதிலளித்தவர்களின் 98 பேர் முதலில் வேதாகமத்தின் பெயரையே எழுதியிருந்தனர். இவர்கள் ஒரு சிலர் மட்டுமே மார்க்க விடயங்களில் ஆர்வம் மிக்கவர்கள். பெரும்பாலானவர்கள் நாத்திகர்களும், கடவுளைப்பற்றிய சிந்தனையற்றவர்களுமாவார். அப்படியிருந்தும் அவர்கள், தாம் வேதப்புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். வேதப்புத்தகம் மட்டுமே நெருக்கடியான சூழ்நிலைகளில் உற்ற நண்பனாயிருக்கும். எனவே நாம் ஒருபோதும் வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவி்டக்கூடாது. 

 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங். 19:7) 

நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்