- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 25 June 2012

என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது (யோவான் 5:31)


இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களில் அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்  வாக்கியம். “அவர்  தமது சாட்சி  மெய்யாயிராது“  என்று கூறியமையாகும். இயேசுகிறிஸ்துவே  சத்தியமாக  இருப்பதனால்,  அவர் தமது சாட்சி மெய்யாயிராது என்று கூறியது உண்மையிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியாத கடினமான ஒரு கூற்றாகவே உள்ளது. “என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது“ என்று யோவான் 5:31 இல் இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரது சாட்சி பொய்யானதா என்னும் அதிர்ச்சிமிகு கேள்வியே எம்முள் எழுகிறது. உண்மையில், இயேசுகிறிஸ்துவின் கூற்றை அக்கால யூதக்கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு புரிந்து கொண்டால் அவரது கூற்றைநாம் தவறாக விளங்கிக் கொள்ள மாட்டோம்.

யூதர்களுடைய கலாசாரத்தில் ஒருவனுடைய சுயசாட்சியை எவரும் உண்மையானதாக ஏற்றுக் கொள்வதில்லை. “அதை ஒரு சாட்சியாகவே கருத மாட்டார்கள்(1) இதனால்தான் இயேசு கிறிஸ்துதம்மைப் பற்றிய விடயங்களைக் கூறியபோது பரிசேயர்கள் “உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடையசாட்சி உண்மையானதல்ல என்றார்கள்“ (யோவான் 8:13) எனினும் இயேசு கிறிஸ்துவின் இக்கூற்றானது அவருடைய சாட்சி பொய்யானது எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. “என் சாட்சி மெய்யாயிராது“ எனும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் “அவருடைய சாட்சி யூத சமுதாயத்தில் மெய்யானதாயிராது எனும்அர்த்தமுடையது(2) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, ஒருவனுடைய கூற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு இன்னுமொருவனுடைய சாட்சியும் அவசியமாயிருந்தது. (உபா. 19:15) யூதர்கள் ஒருவனுடைய சுயசாட்சியை மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளாதமையால், தம்மைப்பற்றித் தாம் கொடுக்கும் சுயசாட்சி யூதர்களுக்கு மெய்யானதாயிராது என்பதையே இவ்வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அறியத் தருகிறார். தம்மைப் பற்றி தாம் கொடுக்கும் சாட்சி உண்மையானது என்பதை யோவான் 8:14 இல் இயேசு கிறிஸ்து சுட்டிக் காட்டினாலும் 5ம் அதிகாரத்தில் தாம் கொடுக்கும் மெய்யான சாட்சி, யூத சமுதாயத்தில் மெய்யானதாயிராது என்பதையே அறியத் தருகிறார்.

யூத சமுதாயத்தில் உண்மைக்கு இரு சாட்சிகள் தேவைப்பட்டமை யினாலேயே, இயேசு கிறிஸ்து ஊழியத்திற்குத் தம் சீடர்களை யூதப் பட்டணங்களுக்கு அனுப்பும்போது அவர்களை  தனியாக அனுப்பாமல் இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். (லூக். 10.1) சுவிசேஷம் மெய்யான நற்செய்தியாக இருந்தாலும், அதை ஒருவன் மட்டும் சொல்லும்போது யூதர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, இரண்டு பேரை அனுப்புவது அவசியமாயிருந்தது. இயேசு கிறிஸ்துவும் யூதர்களுடன் பேசும்போது தம்மைப் பற்றி பிதாவும் சாட்சி கொடுக்கிறார் என்று அடுத்து வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். (யோவான் 5.31) இயேசு கிறிஸ்துவினுடைய சுயசாட்சி மெய்யானதாக இருந்தபோதிலும் யூதசமுதாயத்தில் அது மெய்யானதாக அது கருதப்படவில்லை. இதனால் தம்மைப் பற்றி பிதாவும்சாட்சி கொடுப்பதை சுட்டிக்காட்டுகிறார். யோவான். 8:17-18 அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“இரண்டு பேருடையசாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத் திலும் எழுதியிருக்கிறதே .நான் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிற வனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறார்“ பிதா வானத்திலிருந்து பேசியதன் மூலம் மட்டுமல்ல (யோவான் 12.28, மாற்கு 1.11) இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு செயலிலும்அவர் யார் என்பதைப் பற்றி சாட்சி கொடுப்பவராக இருந்தார்.

Footnote and References
(1)    F.F. Bruce, The Gospel of John. P. 134

(2)    L. Morris, John : The New International Commentary on the New Testament

(3) இயேசுகிறிஸ்து பிதாவின் சாட்சியைப் பற்றியல்ல. யோவான் ஸ்நானகனுடைய சாட்சியைப் பற்றியே யோவான் 5:32 இல் குறிப்பிட்டுள்ளதாக  சிலர் கருதுகின்ற போதிலும் (J. Marsh, Gospel of St. John, p. 268) 33 முதல் 37 வரையிலான வசனங்கள், அவர் யோவானுடைய சாட்சியைப் பற்றியல்ல, பிதாவினுடைய சாட்சியைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார்  என்பதை அறியத் தருகின்றன.

(இவ்வாக்கமானது. Dr. M.S. வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)

Wednesday 20 June 2012

மக்களை இரட்சிக்கும் வார்த்தை

1894 இல் ஆங்கிலக் கப்பலொன்றிலிருந்து ஒருவரது வேதாகமம் தவறிக் கடலில் விழுந்தது. அவ்வேதாகமத்தின் கதை அத்தோடு முடிந்து விட்டதாகவே கப்பலிலிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், அது ஜப்பானிய மீனவனுடைய வலையில் அகப்பட்டது.

ஜப்பானிய மீனவன் தன் வலையில் அகப்பட்ட வேதாகமத்தை துறைமுக அதிகாரிடம் கொடுத்தான். அவ்வுதாகமத்தைப் பார்வையிட்ட துறைமுக அதிகாரிக்கு அது சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 



துறைமுக அதிகாரியும் அதன் பிரதி ஒன்றைத் தன்னிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். சீன வேதாகமத்த வாசித்த அந்த அதிகாரி இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டதோடு, அதைத் தன் நண்பனுக்கும் சகோதரனுக்கும் காண்பித்தான். அவர்களும் சீன வேதாகமத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டனர். அநேகரை இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் கொண்டு வந்தனர்.

கிறிஸ்தவ வேதாகமானது கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே ஒருவனை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை கொண்டிருப்பதனால் (2 தீமோ. 3:15) வேதாகமத்தை வாசிப்பவர்கள் இயேசுகிறிஸ்துவண்டை வந்து இரட்சிக்கப்படுகின்றார்கள். எனவே, மக்கள் இரட்சிக்க்பபடுவதற்கு வேதாகம வார்த்தைகளையே நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 

( சில சம்பவங்களில் சில சத்தியங்கள், )



Thursday 14 June 2012

பிரியமான வைத்தியர்

19 வயதான ஐடா ஸ்கடர் அவர்கள், 1890ம் ஆண்டு தென் இந்தியாவில் மிஷனரியாகப் பணிபுரிந்த தன் பெற்றோரைச் சந்திக்க போயிருந்த போது, மூன்று பேர் (ஒருவர் பிராமணர், ஒருவர் முஸ்லீம், ஒருவர் இந்து) தனித்தனியே அவரிடம் வந்து தஙகள் இளம் வயதான மனைவிகளின் உயிரைக் காப்பாற்றும்படிக்க கேட்டனர். மருத்துவ அறிவற்ற ஐடாவால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. மருத்துவ மிஷனரியாக இருந்த தனது தந்தையை அழைக்க முற்பட்டாள். ஒரு ஆண் வைத்தியர் தங்கள் மனைவிற்கு பிள்ளைப்பேறு பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. பிராமணன் “ என் மனைவியின் முகத்தை இன்னொரு மனிதன் பார்ப்பதை விட அவள் மரிப்பதே மேல்“ என்றான்.

மறுநாள் இந்த மூன்று பெண்களும் மரித்துவிட்டார்கள் என்பதை அறிந்த ஐடா, குழப்பமுற்றவளாய் அவர்களுக்கு உதவ முடியவில்லையே எனக் கலங்கியவளாக தன் பெற்றோரிடம் “நான் அமெரிக்காவிற்குப் போய் ஒரு டாக்டராகப் படித்து இங்கு வந்த இந்தியப் பெண்களுக்கு உதவப் போகிறேன்“ என்றாள். சொன்னபடியே ஐடா ஒரு வைத்தியராகப் பட்டம் பெற்று தனது தந்தையின் கீழ் வைத்தியத்தில் ஈடுபட்டாள்.

ஐடாவின் வாஞ்சையை அறி்ந்த மிஷன் இயக்கம் வேலூரில் அவளது தகப்பன் வேலை செய்த இடத்தில் ஒரு வைத்தியசாலையை அமைக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். 1984 இல் ஐடா உரிய பணத்தைத் திரட்டிக் கொண்டு வேலூர் நோக்கிப் புறப்பட்டாள். ஆரம்பத்தில் மக்கள் ஐடா மேல் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறியது. தந்தை மரித்த பின்பு சிறிய டிஸ்பென்சரியை ஆரம்பித்தவர், 1902 இல் வேலூர் மருத்துவமனையை ஆரம்பித்தார். முதல் வருடத்திலேயே 21 பெரிய சத்திரசிகிச்சைகளையும், 420 சிறிய சத்திர சிகிச்சைகளையும் செய்து, 12,359 நோயாளர்களுக்கு வைத்தியமும் செய்தார். 1924 இல் 200 ஏக்கர் நிலத்தில் தனது வைத்தியசாலையை மீள்நிர்மாணம் செய்ததுடன், மருத்துவதுறையில் மக்களுக்குப் பயிற்சியும் கொடுத்தார். இன்று வேலூர் மருத்துவனை ஒரு பிரதான வைத்தியசாலையாகத் திகழ்கின்றது.

லூக்காவும் ஒரு வைத்தியன். உங்களில் சிலரையும் தேவன் இவ்விதமான ஊழியத்திற்கு அழைக்கலாம். உங்கள் படிப்பு, தகைமைகள், திறமைகளை தேவனுக்குப் பயன்படுத்துங்கள். பணத்திற்காக வாழ்வை வீணாக்கி விடாதீர்கள். நீங்களும் வைத்திய, ஆசிரிய துறைகளில் இருப்பீர்களேயானால், வசதி இல்லாத பின்தங்கிய இடங்களில் வாழும் மக்களுக்கு அதனைப் பயன்படுத்துங்கள்.


பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(கொலோ 4:14)

நன்றி அனுதினமும் தேவனுடன், June - Sept 2012 (சத்தியவசன தியான நூல்)