- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 6 November 2012

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை (மத். 16:28)


  
இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் அதிக சர்ச்சைக்குரியதாகவும் நமக்கு அதிக குழப்பதை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் வாக்கியங்களில் ஒன்று அவருடைய ராட்சியத்தின் வருகையைப் பற்றிய அறிவிப்போடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு கூற்றாகும்.. இயேசு கிறிஸ்து தான் ராட்சியத்தில் வருவதைப் பற்றி குறிப்பிட்டபோது (மத். 16:27) இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவரை அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தையே இக்கூற்று ஏற்படுத்துகின்றது. .இக்கூற்றுக்கு முன்னுள்ள வசனங்களை வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து அச்சமயம் தன் சீடர்களுடன்    வார்த்தைககளைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்கள் அனைவரும் முதலாம் நூற்றாண்டிலேயே மரித்து விட்டனர். ஆனால் இயேசுவின் வருகையோ இன்னும் சம்பவிக்கவில்லை. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் அதாவது அவர் ராட்சியத்தில் வரும் வரை சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் எனும் அறிவிப்பு பொய்யானதாக உள்ளதாக சிலர் கருதுகின்றனர் 

இயேசுவின் இக்கூற்று இன்று பொதுவாக, அவரது மறுவருகை பற்றிய அறிப்பாகவே கருதப்படுகின்றது. இயேசுவின் மறுவருகை வரை அவருடைய சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்றே ஆதி சபையினர் இக்கூற்றை விளங்கிக் கொண்டிருந்தனர். (1) இயேசுவின் மறுவருகை விரைவில் அதாவது சீடர்கள் மறுவருகை விரைவில் அதாவது சீடர்கள் மரிப்பதற்கு முன் நடைபெற்று விடும் எனும் நம்பிக்கையுடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சில வேத ஆராய்ச்சியாளர்கள் தர்க்கிக்கின்றர்.(2) எனினும், இயேசுவின் மறுவருகைக்கும் முன்பே சீடர்கள் மரித்து விட்டதினால், அவர் தன் மறுவருகையைப் பற்றியே இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுவதற்கில்லை. “இயேசு தன் மறுவருகையின் காலத்தை அறியாதிருப்பதாக தெரிவித்துள்ளமையால் (மத். 24:36) தான் அறியாத அக்காலம் வரை தன் சீடர்டகளில் சிலர் மரியாமலிப்பார்கள் என்று அவர் கூறியிருக்க மாட்டார்(3)

இன்று பெரும்பாலான வேத ஆராய்சியாளர்கள் இயேசுவின் இக்கூற்றை கி.பி. 70ல் நடைபெற்ற எருசலேம் நகரத்தின் அழிவைப் பற்றிய முன்னறிப்பாகவே கருதுகின்றனர். மத்தேயு 16:27 இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியே கூறுகின்ற போதிலும் அதற்கடுத்த வசனமான சர்ச்சைக்குரிய இயேசுவின் இக்கூற்றும் அவரது மறுவருகையைப் பற்றியே கூறுகின்றது என எண்ணுவது தவறாகும்.(4) எனக் கூறும் இவர்கள் ராட்சியத்தின் வருகையானது ஆசீர்வாதத்தை மட்டுமல்ல நியாயத்தீர்ப்பையும் கொண்டு வருகின்றது அதேசமயம் கி.பி. 70 இல் எருசலேமின் மீது வந்த அழிவு, யூதஜனங்கள் மேசியாவை நிராகரித்தமைக்கான அவர்கள் மீது வந்த தேவதண்டனையாக இருப்பதனால் இச்சம்பவம் மனுஷகுமாரன் வல்லமையோடு தேவராட்சியத்தில் வந்த ஒரு சம்பவமாகவே உள்ளது. (5) என விளக்குகின்றனர். மத்தேயு 24ம் அதிகாரத்தில் எருசலேம் அழிவும் உலக முடிவிலேற்படும் அழிவும் ஒன்றாகச் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது போலவே மத்தேயு 16:27-28 லும் இரண்டும் ஒரே நேரத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளன. (6) என்றும் இக்கருத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

இயேசு கிறிஸ்து கி.பி. 70ல் எருசலேம் நகருக்கு ஏற்பட்ட அழிவையே தான் ராட்சியத்தில் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று இன்று பல தேவ ஆராச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும்  இயேசுகிறிஸ்து ராட்சியத்தில் வருவதானது எவ்வாறு இச்சம்பவத்தைக் குறிக்கின்றது என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் திருப்திகரமானதாக இல்லை. உண்மையில், “எருசலேம் நகரின் அழிவை மனுஷகுமாரன் தம்முடைய ராட்சியத்தில் வருவது எனும் சொற்பிரயோகம் சரியான விதத்தில் விளக்குவதாயில்லை. அத்தோடு கி.பி. 70ல் இயேசு தன் இராட்சியத்தில் வந்ததிற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. (7) மேலும், இயேசு கிறிஸ்துவின் கூற்றில் “இங்கே நிற்பவர்களில் சிலர்“ என்னும் சொற்பிரயோகம் அவர் விசுவாசிகளுக்காக வருவதைப் பற்றிய விவரணமாகவே உள்ளது. எனவே இதை அவவிசுவாசிகளை நியாயந்தீரக்க வருவது பற்றிய முன்னறிவிப்பாக கருத முடியாதுள்ளது. (8)

இயேசு கிறிஸ்து இக்கூற்று லூக்காவிலும் மாற்குவிலும் சற்று வித்தியாசமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன்  என மத்தேயுவில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் லூக்காவில் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும்முன்’ லூக்காவில் “தேவனுடைய ராஜ்யத்தை காணும்முன் என்றும் (லூக். 9.27) மாற்குவில் தேவனுடைய ராஜ்யம் பலத்துடன் வருவதைக் காணும்முன் என்றும் (மாற். 9.1) குறிப்பிடப்பட்டுள்ளது. (9) எனினும் தேவனுடைய ராஜ்யம் வருவதும் மனுஷகுமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருவதும் ஒரே விடயத்தையே குறிக்கின்றன. (10) தேவனுடைய ராட்சியமே மத்தேயுவின் சுவிஷேசத்தில் மனுஷகுமாரனின் ராட்சியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசு இரண்டு சொற்பிரயோகங்களையும் இரு வேறுபட்ட இராட்சியங்களாக குறிப்பிடவில்லை. மனுஷகுமாரனாகிய இயேசுவே தேவனுடைய இராட்சியத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார்(11) இயேசுவினுடைய பிரசங்கங்களில் தேவனுடைய ராட்சியம் (மத்தேயுவில் பரலோக ராட்சியம்) முக்கியமானதும் அடிப்படையானதுமான செய்தியாய் இருந்தது. (மாற். 1:14, லூக். 4:43, 8:1, அப். 1:3) எனினும் தேவனுடைய ராட்சியம் பூகோளரீதியாக ஒரு இடத்தில் இருக்கும் ராட்சியம் அல்ல. மாறாக இது தேவனுடைய ஆளுகையை குறிக்கின்றது.(12) ராட்சியம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “பசிலெயா“ (basileia) எனும் கிரேக்கப் பதம், ஆளுகை, ஆட்சி, ராஜரீகம் எனும் அர்த்தங்களையே கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டிலும், இதன் எபிரேய இணைச் சொல்லான “மல்குத்“ (malkuth) இவ்வர்த்தத்தையே தருகிறது. எனவே தேவனுடைய ராட்சியம் என்பது இயேசு இவ்வுலகில் ஆரம்பிக்க வந்த தேவனுடைய ஆளுகையையே குறிக்கிறது. இயேசு தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்தபோது தேவனுடைய ராட்சியம் சமீபித்திருக்கிறது என்றும் (மாற். 1.14-15) உங்களிடத்தில் வந்திருக்கிறது என்றும் (லூக். 11.20) குறிப்பிட்டார். இயேசுவின் வருகையோடு தேவனுடைய ராட்சியம் இவ்வுலகிற்கு வந்துவிட்டபோதிலும் (13) “அவருடைய ஊழிய காலத்தில் இவ்வரையறைக்கு உட்பட்டதாகவே இருந்தது. இதனால் ராட்சியம் வல்லமையோடு வரவிருப்பதைப் பற்றி முன்னறிவித்ததோடு அதைக் காணுமுன் தன் சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்றும் முன்னறிவித்துள்ளார். (14)

தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வருவது எதைக் குறிக்கிறது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இயேசுவின் உயிர்த்தெழுதலிலேயே இது நடைபெற்றதாக கருதுகின்றன. “இயேசுவின் மரணம்வரை ராட்சியத்திற்கு இருந்தவரையறை அவரது உயிர்த்தெழுதலில் நீக்கப்பட்டு அது வல்லமையோடு வெளிப்பட்டது.(15) என்பதே இவர்களது விளக்கமாகும். இதற்கு ஆதாரமாக ரோமர் 1:3-4 சுட்டிக் காட்டப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவர் தேவனுடைய குமாரன் என்பதை பலமாய் ரூபித்துள்ளதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனால், “உயிர்தெழுதல் தேவனுடைய ராட்சியத்தை வல்லமையாய் வெளிப்படுத்தியுள்ளது.(16) என்றும், ‘தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்ததை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலேயே காணக்கூடியதாக உள்ளது.(17) என்றும் கூறுகின்றனர் எனினும் சிலர் பெந்தகோஸ்தே நாளிலேயே தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்ததாக தர்க்கிக்கின்றனர். “.இயேசுவின் ஊழிய காலத்தை விட அந்நாளில் தேவ வல்லமை அதிகமாக வெளிப்பட்டதை அவதானிக்க கூடியதாக உள்ளது.(18) என்று இவர்கள் கருதுகின்றனர். அதேசமயம் பெந்தகோஸ்தே நாளின் பின்பே கிறிஸ்தவம் உலகெங்கும் பரவத் தொடங்கியமையால் “சபையிலே தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்தது“(19) என்பது வேறு சிலரது தரக்கமாக உள்ளது. ஒருசில வேத ஆராய்ச்சியாளர்கள் இவையனைத்தையும் ஒன்றாக்கி, தேவனுடைய இராட்சியம் குறிப்பிட்ட தனியொரு சம்பவத்தில் அல்ல மாறாக பல சம்பவங்களின் மூலமாக வந்தாக கருதுகின்றனர்.(20)

தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்த சந்தர்ப்பங்களாக தேவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதல், பெந்தகோஸ்தே தின சம்பவங்கள், மற்றும் சபையின் வளர்ச்சி  போன்றவை இயேசுகிறிஸ்து குறிப்பிட்ட விதமாக அவருடைய சீடர்களில் சிலர் மட்டுமே கண்ட சம்பவங்களாக இல்லை. யூதாஸ் ஸ்கரியோத்தைத் தவிர இயேசுவின் சீடர்கள் அனைவரும் இவற்றை கண்டமையினால், இவற்றில் எந்த ஒரு சம்பவத்தையும் இயேசு குறிப்பிட்டிருக்க முடியாது. உண்மையில் லூக்கா எழுதின சுவிசேஷத்திலேயே இயேசுகிறிஸ்துவின் இக்கூற்றை விளங்கிக் கொள்வதற்கான குறிப்பு உள்ளது. லூக்கா இயேசுவின் கூற்றை அவரது மறுரூபமாகுதலோடு தொடர்புபடுத்தியுள்ளார். இயேசு இவ்வார்த்தைகளை சொல்லி ஏறக்குறைய எட்டு நாளான பின்பு அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபுவையும் கூட்டிக் கொண்டு தன்னுடைய மகிமையைக் காண்பித்தாக லூக்கா குறிப்பிட்டுள்ளார். (லூக். 9:27-29) இச்சம்பவத்திலேயே மனுஷகுமாரன் தன்னுடைய ராட்சியத்தில் வல்லமையோடு வந்ததை இயேசு குறிப்பிட்டுள்ள விதமாக அவர்களுடைய சீடர்களில் சிலர் அதாவது மூவர் மட்டுமே கண்டனர். மேலும் மூன்று சுவிஷேசங்களிலும் இயேசுவின் இக்கூற்றினைத் தொடர்ந்து அவர் மறுரூபமாகிய சம்பவமே சித்திரிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, மறுரூபமாதலின் அனுபவத்தைப் பற்றி பேதுரு பிற்காலங்களில் குறிப்பிடும்போது, அதை இயேசுவின் மகத்துவத்தையும் வல்லமையையும் வருகையையும் வெளிப்படுத்திய ஒரு சம்பவமாக வர்ணித்துள்ளார். (2 பேதுரு 1.16-18) “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மரணத்தை ருசிபார்ப்பதில்லை“ எனும் வார்த்தைகள் “ஒரு கிழமைக்குள்(21) நடைபெறப் போகும் சம்பவத்தைக் குறிப்பிட உபயோகிப்பது பொருத்தமாக இல்லை(22) என்பது மட்டுமே இக்கருத்திற்கு எதிராக சுட்டிக் காட்டப்படும் ஒரேயொரு காரணமாகும். எனினும், இயேசுவின் இக்கூற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களில் (23) இது ஒன்று மட்டுமே இயேசுவின் வார்த்தைகளுக்கான சரியான விபரணமாயுள்ளது. இயேசு மறுரூபமாகியது தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வருவதை அவரது மூன்று சீடர்களுக்கு முன்னடையாளமாக காண்பித்த சம்பவமாக இருப்பதனால், தன் சீடர்களில் சிலர் மட்டும் மரணத்தின் முன் காணும் சம்பவமாக இயேசு இதனையே குறிப்பிட்டிருக்க வேண்டும். 

Foot note and References 
(1) Craig A. Evens. Luke in International Biblical Commentary, Massachusetts: Hendrickson Publishers, 1993 p. 153, யோவான் 21:21-23லும் இதேவிதமான நிலையை நாம் அவதானிக்கலாம். 

(2) E. Schweizer, The Good News According to Luke, Atlant:John Knox, 1984, p. 158

(3) R.C.H. Lenski, The Interpretation of St. Mathew’s Gospel., Minneapolis: Augsburg Publishing House, 1964, p.158

(4) libd, 649

(5) Donald A Hagner, Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p. 487

(6) lbid 487

(7) Norman Geisler&Thomas Howe, When Critics Ask, Wheaton: Victor Books, 1992, p. 350

(8) lbid, p. 350

(9) இயேசுகிறிஸ்துவின் கூற்று இவ்விதம் வித்தியாசமான முறைகளில் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.  ஒன்று இயேசு ஒரே விடயத்தைப் பற்றி பல இடங்களில் கூறியமையால் அது வித்தியாசமான வார்த்தகளில செவிமடுத்தோருக்கு விளங்கக்கூடிய விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட கூற்றைப் பொறுத்தவரை இவ்விளக்கம் பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் மூன்று சுவிஷேசப் புத்தகங்களிலும் இது சொல்லப்பட்ட சம்பவம் ஒன்றாகவே உள்ளது. இதனால் இயேசு இவ்விடயத்தைப் பற்றி பல இடங்களில் அறிவித்துள்ளார் எனக் கூறமுடியாது. இரண்டாவதாக இயேசு அரமிக் மொழியிலேயே பேசியமையால் அவர் அம்மொழியில் கூறியவற்றை சுவிசேஷ ஆசிரியர்கள் எழுதும்போது கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தே எழுதினர். இத்தகைய மொழிபெயர்ப்பே ஒரு கூற்று வித்தியாசமான முறைகளில் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணமாகும். 

(10) D.A. Carson, Matthew in The Expositor’s Bible Commentary, Grand Rapids:Zondervan Publishing House, 1984, p.380

(11) F.F. Bruce, The Hard Saying of Jesus, London: Hodder & Stoughton, 1995, p. 154

(12) இதனால்தான், இவ்விராட்சியம் ஏற்கனவே இருந்த ஒரு இராட்சியமாகவும் (மத். 8:11, லூக். 13:28) தன் காலத்தில் இருக்கும் இராட்சியமாகவும் (லூக். 17:20-21, மத். 12:28) குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அது இனிமேல் வரவிருக்கும் இராட்சியமாகவும் இயேசுவால் விளக்கப்பட்டுள்ளது. (மத். 6:10)

(13) தேவனுடைய ராட்சியம் என்பது அவருடைய ஆளுகையாக இருப்பதோடு இயேசு அறிவிக்கும் சுவிஷேசத்தை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்வதன் மூலம் மக்கள் அவ்ராட்சியத்தின் குடிமக்களாகின்றனர். 

(14) F.F. Bruce, The Hard Sayings of Jesus p. 153

(15) lbid. P. 154

(16) Robert H. Mounce, Matthew in New International Biblical Commentary, Massachusetts: Hendrickson Publishers, 1993, p. 165

(17) Craig A. Evans, Luke in New International Biblical commentary, p. 149

(18) F.F. Bruce, The Hard Sayings of Jesus p. 154

(19) H.B. Green, Matthew in New Clarendon Bible Commentary, New York: Oxford press, 1975, p. 154

(20) D.A. Carson, Mathew in Expositor’s Bible Commentary. P. 382

(21) லூக்கா “ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப் பின்பு“ என்று குறிப்பிட்டுள்ள போதிலும் (லூக். 9:28) மாற்கு சரியாக ஆறு நாட்களின் பின் என்பதை அறியத் தந்திருக்கிறார். (மாற். 9:2)

(22) Donald A Hagner: Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p486

(23) இயேசு மறுரூபமாதல் உயிர்த்தெழுதல், பரமேறுதல், பெந்தகோஸ்தே, கிறிஸ்தவத்தின் பரம்பல், சுவிஷேசத்தின் உள்ளான வளர்ச்சி, எருசலேம் அழிவு, இரண்டாம் வருகை என்பன இவ்வசனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களாகும். (Alfred Plummer, A Critical and Exegetical Commentary on the Gospel According to Luke, Edinburgh 1928pp. 249-250)

(இவ்வாக்கமான சத்தியவசனம் 2000 சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டதாகும்)
ஆசிரியர்  Dr. M.S. வசந்தகுமார் )
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment