- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 23 November 2012

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்


  1. உலகளாவிய ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான்?
  2. 6ம் அதிகாரத்தில் உள்ள தேவனின் கூற்று 7ம் அதிகாரத்தில் உள்ளவற்றை முரண்படுத்துகின்றதா?
  3. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு வாழ்ந்த நோவா எப்படி உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான்?
  4. இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் கொண்டு போகப்பட்டனவா?
  5. சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா?
  6. நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன?

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்

ஆதியாகமப் புத்தகத்தில் ஒன்றையொன்று முரண்படுத்தும் விபரணங்களாக பலரால்சுட்டிக் காட்டப்படும் பகுதிகளில் ஒன்று உலகளாவிய ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான் என்பதைப் பற்றியதாகும். ஆதி. 6:19-20 இல் தேவன் நோவாவிடம் உயிரனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைக் கொண்டு போகும்படி கட்டளையிடுகின்றார். ஆனால் அடுத்த அதிகாரத்தில் அதாவது ஆதி. 7:2-3 ஒவ்வொன்றிலும் ஏழு சோடிகளைக் கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார். இதனால் தேவன் 6ம் அதிகாரத்தில் கூறியவற்றை 7ம் அதிகாரத்திலுள்ள கூற்று முரண்படுத்துவதாக உள்ளது. இம்முரண்பாட்டைச்சுட்டிக் காட்டுபவர்கள் இவ்விரு அதிகாரங்களும் இரு வேறுபட்ட மரபினரின் குறிப்புகளிலிருந்து  பெறப்பட்ட வித்தியாசமான கதைகள் எனக் கூறுவதோடு பிற்காலத்தில் வெவ்வேறு ஆவணக் குறிப்புகளிலிருந்தும் ஆதியாகமப் புத்தகத்தை தொகுத்தெழுதியவர் “அம்முரண்பாட்டைக் கவனிக்கத் தவறியமையால் இருவேறுபட்ட மரபினரதும் குறிப்புகளையும் ஒன்றாக சேர்த்து எழுதிவிட்டார்“ என விளக்குகின்றனர். 

ஆதியாகமம் நால்வகையான வித்தியாசமான மரபினரின் குறிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதே நவீன வேத விமர்சனக் கல்வியின் தாற்பாரியமாகும்.எனினும் இது ஆதியாகம்ம் எழுதப்பட்டுள்ள முறைபற்றிய சில வேதஆராய்ச்சியாளர்களின் ஒரு ஊகமே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. எனவே ஆதியாகமம் 6ம் 7ம் அதிகாரங்கள் இருவேறுபட்ட வித்தியாசமான மரபுக்கதைகளின் பிற்காலச் சேர்க்கை என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இரு அதிகாரங்களும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன. 6ம் அதிகாரத்தில் தேவன் உலகிலுள்ள சகல உயிரினங்களிலும் ஜலப்பிரளய அழிவுக்குத் தப்புவதற்காக  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்துகின்றார். (ஆதி. 6:19-20) நோவா தேவகட்டளைப்படி சகலவற்றையும் செய்து முடித்தபின் (ஆதி 6:22) தேவன் மறுபடியுமாக நோவாவிற்கு சில அறிவுறுத்தல்களைக் கொடுக்கிறார். ஆரம்பத்தில் சகல உயிரினங்களிலும் ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடியை கொண்டு போகச் சொன்ன தேவன் இப்போது சுத்தமான மிருகங்கள் பறவைகளில் மட்டும் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள் கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார். (ஆதி. 7.2-3) “இக்கட்டளையானது 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படாத மேலதிகமான ஒரு அறிவுறுத்தலாகும்.“ இம்மேலதிக அறிவுறுத்தலுக்கான காரணம் இவ்விடத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும் ஜலப்பிரளயத்தின் பின்னால் அதனை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. ஜலப்பிரளயத்தின் பின் பேழையிலிருந்து வெளியே வந்த நோவா தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காக பலி செலுத்தினான். அவன் சுத்தமான மிருகங்கள் பறவைகள் சிலவற்றைப் பலியாகச் செலுத்தினான் என்பதை ஆதி 8:20 அறியத் தருகின்றது. இதிலிருந்து பலிகளுக்காகவே தேவன் சுத்தமான மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது. உண்மையில், “சுத்தமான உயிரினங்களில் மேலதிகமான மிருகங்கள் இல்லாமலிருந்தால் பலி செலுத்தப்பட்டபின் அவை இல்லாமல் போயிருக்கும்“. எனவே உயிரினத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்திய தேவன் நோவாவுக்குப் பலி செலுத்தும் மிருகங்கள் பறவைகள் அவசியப்படும் என்பதை அறிந்தவராக சுத்தமானவற்றில் மேலதிக எவ்வேழு சோடிகளைக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டுள்ளார். 

பலி செலுத்துவதற்காகவே சுத்தமான மிருகங்கள் பறவைகளில் மேலதிகமாக எவ்வேழு சோடிகள் பேழைக்குள் கொண்டு போகப்பட்டது உண்மையாயினும் உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்னும் விளக்கம் மோசேயின் நியாயப்பிரமாணத்திலேயே அறிவிக்கப்பட்டமையால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு வாழ்ந்த நோவா எப்படி உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான் எனும் கேள்வி நம்முள் எழுவது இயற்கையே. எனினும் மோசேயின் நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் முன்பே சுத்தமான சுத்தமான அசுத்தமான மிருகங்கள் எவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மோசேயின் நியாப்பிரமாணம் உணவாகக் கூடிய சுத்தமான அசுத்தமான உயிரினங்கள் எவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். (பொதுவாக) குறிப்பிட்ட சமூகத்தினரால் சுத்தமாக கருதப்பட்டவை மட்டுமே அச்சமூகத்தினரால் தெய்வங்களுக்குப் பலியாகச் செலுத்தப்பட்டன. அதேசமயம் “சுத்தமானவை அசுத்தமானவை எவை எனபதை வரையறை செய்யும் முறையும் சமுதாயத்திற்கு சமுதாயம் வித்தியாசப்பட்டது. எனவே நோவாவும் தான் வாழ்ந்த சமுதாயத்தில் சுத்தமானவை என கருதப்பட்ட மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு சோடிகளை பலி செலுத்துவதற்காகப் பேழைக்குள் கொண்டு சென்றுள்ளான் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

நோவாவினால் செய்யப்பட்ட பேழைக்குள் கொண்டு போகப்பட்ட உயிரினங்கள் பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் கொண்டு போகப்பட்டனவா? இல்லையென்றால் பெரிய உருவங்களுடைய உயிரினங்கள் பேழைக்குள் கொண்டுப் போகப்படவில்லையா? என்பதாகும். எனினும் தேவன் சகல உயிரினங்களையுமே பேழைக்குள் கொண்டு போகும்படி கட்டளையிட்டார். (ஆதி. 6:18-19) நோவாவும் தேவன் தனக்கு கட்டளையிட்டப்படியெல்லாம் செய்துள்ளதை ஆதி. 6:22 அறியத் தருகின்றது. எனவே உலகிலுள்ள சகல உயிரினங்களையும் பேழைக்குள் கொண்டு போயிருப்பான் என்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. அப்படியானால் சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா? எனும் கேள்வி எமக்குள் எழலாம். ஆதி. 6:15-16 இல் தேவன் கொடுத்திருந்த அறிவுறுத்தல்களின் படி “பேழையானது 450 அடிகள் நீளமும் 75 அடிகள் அகலமும் 45 அடிகள் உயரமும் உள்ளது. இதில் 3 தட்டுக்கள் இருந்தன. நம் தமிழ் வேதாகமத்தில் இவ்விபரம் முற்காலத்தைய முழஅளவுகளிலேயே உள்ளன. (ஆதி. 6:15) எனவே மூன்று தட்டுக்களினதும் பரப்பளவு 101 250 அடிகளாகும். இன்று 40,000 வகையான உயிரினங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவ்வளவு உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் இருப்பதற்கு போதுதமான இடம் இருந்தமைக்குக்குக் காரணம் “பெரும்பாலான உயிரினங்கள் இளம் சோடிகளாகப் பேழைக்கு கொண்டு போகப்பட்டமையேயாகும்“.

நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் இருந்தன எனக் கூறும்போது அவை ஒன்றோடொன்று சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன எவ்வாறு எனும் கேள்வி நம்முள் எழுவது இயற்கையே. எனினும் ஆதி 9:2 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற் கொள்ளும்போது  உலகளாவிய ஜலப்பிரளயம் வரைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையே இருந்த உறவுமுறையானது ஜலப்பிரளயத்திற்கு பின் மாற்றமடைந்துள்ளதை அறிந்திடலாம். ஆரம்பகாலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் ஆளுகை செய்பவனாக மனிதன் இருந்தான். (ஆதி1:28) இதனால் அக்காலத்தில் உயிரினங்கள் மனிதனுக்கு கீழ்பட்டவையாக இருந்தன. இதனாலேயே நோவாவினால் சகல உயிரினங்களையும் பேழைக்குள் கொண்டு போவதில் சிரமங்கள் இருக்கவில்லை. ஆனால் ஜலப்பிரளயத்திற்குப் பின் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்குமிடையிலான உறவுமுறை மாற்றப்பட்டது. தேவன்  இதைப்பற்றி நோவாவுக்கு அறிவுறுத்தும்போது “உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்“ (ஆதி. 9:2) என்றார். இப்பயமும் அச்சமும் மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகையின் விளைவாகவே உள்ளது. இது மானிட வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்றாகும். ஜலப்பிரளயத்தின் பின் மிருகங்கள் மனிதருக்கு அபாயகரமானவைகளாயின. மனிதரைப் பற்றிய ஒருவித பயம் அவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டன. மேலும் ஆரம்பத்தில் சகல உயிரினங்களும் தாவர உண்ணியாகவே இருந்தன. (ஆதி. 1:29-30) ஆனால் ஜலப்பிரளயத்தின் பின்னர் மாமிசம் உணவாக அனுமதிக்கப்பட்டது. (ஆதி. 1:29-30) இதனால் உணவுக்காக உயிரினங்கள் கொல்லப்படுவதும் சாதாரண செயலாகிவிட்டது. எனவே. ஜலப்பிரளயத்துக்குப் பின்னர் மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவு முறையும் உயிரினங்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவு முறையும் அதுவரை காலமும் இருந்ததைப் போலல்லாது இன்றிருப்பதைப் போன்று மாற்றமடைந்தது. ஆனால் அதற்கு முன் உயிரினங்களுக்கிடையில் பகையும் பயமும் இல்லாதிருந்தமையால் சகல உயிரினங்களும் மனிதனும் பேழைக்குள் ஒன்றாக இருக்கக் கூடியதாயிருந்தது.   

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய ஆதியாகமம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. நல்ல தகவல்

    இயேசுவின் வார்த்தைகள்

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரரே. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    ReplyDelete