- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 20 April 2011

Arius vs Athanasius திரித்துவ வரலாறு

 
COUNCIL_OF_NICEA. new
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒரு தெய்வக் கொள்கையுடையோராய் (Monotheistic) இருந்தமையினால் கிறிஸ்தவ சபைக்குள்ளும் இக்கருத்தின் முக்கியத்துவத்தினை கொண்டு வந்தனர். இதன் காரணமாக தேவனின் பன்மை நிலையை முற்றிலும் மறுதலிப்பவர்களாகவும் குமாரனினதும், தூயஆவியினதும் தேவத்துவத்தை சரியான விதத்தில் ஏற்ற்றுக் கொள்ளாதவர்களாகவுமே இருந்தனர்
ஆதிச்சபை பிதாக்கள் திரித்துவத்தைப் பற்றிய சரியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. சிலர் ஆள்தன்மையற்றிருந்த தெய்வீக வார்த்தை (Logos) சிருஷ்டிப்பின்போதே ஆள்தத்துவமுடைய நபராகியது என்று கருதினர். வேறு சிலர் குமரன் ஆள்தத்துவம் உடையவராகவும், பிதாவைப் போலவே நித்தியராகவும் தெய்வீகத் தன்மையுடையவராய் இருந்தார் என கருதிய போதிலும் பிதாவைவிட சற்று தாழ்மையானவராகவே அவரைக் கருதினர். அக்கால கட்டத்தில் தூயஆவியனவரைப் பற்றிய எண்ணம் இறையியல் கருத்துப் பரிமாறல்களில் இடம்பெறவில்லை. தூயஆவியானவர் விசுவாசிகளின் இருதயத்தில் இரட்சிப்பு சம்பந்தமாக கிரியை செய்பவர் என்று மட்டுமே கருதினர். சிலர் தூயாவியை பிதாவுக்கு மட்டுமல்ல குமாரனுக்கும் கூட தாழ்வானதொன்றாகவே கருதினர்.
“மூவொருமை“ எனும் பொருளுடைய திரித்துவம் எனும் சொல்லை இறையியலில் புகுத்தி திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்த ஓரளவு முயன்றவ Tertullian என்பவர். கூட திரித்துவ உபதேசத்தை சரியான முறையில் விளக்கவில்லை. இவரே முதன் முதலில் தேவனில் மூன்று ஆள்த்த்துவங்கள் உள்ளதென்றும் அவர்களின் ஐக்கியத்தைப் பற்றியும் வாதிட்டவர்
Tertullian உடைய காலத்தில் Monarchianism எனும் உபதேசம் தேவனின் ஒருமைத் தன்மையை வலியுறுத்தியதோடு குமாரனுக்கும் உண்மையான தேவத்துவத்தை கொடுத்த்து. எனினும் மூவொருமை என அர்த்தந்தரும் திரித்துவத்தின் உண்மையான கருத்தை இவ்வுபதேசம் மறுதலிப்பதாயிருந்தது. Tertullian உம் Hippolytus ம் இவ்வுபதேசத்தை பிழையென நிருபித்தனர். இவர்கள் மேலைத்தேய சபைகளில் இப்பிழையான உபதேசம் பரவுவதைத் தடுத்தனர். Origen என்பார் கீழைத்தேய சபைகளில் இவ்வுபதேசத்திற்கெதிராக வாதட்டார். இவர்கள் அப்போஸ்லருடைய விசுவாசப் பிரமாணத்தில் குறிப்பிட்டபடி திரித்துவ உபதேசத்தைப் போதித்தனர்.
Origen உடைய திரித்துவ உபதேசம் திருப்திகரமானதொன்றாகயில்லை. பிதாவும் குமாரனும் தேவத்தன்மை பொருந்திய சமமானவர்கள் என்பதை அவர் சரியாக விளக்கவில்லை. எனினும் நித்திய பரம்பரை (Eternal Generation) எனும் கருத்தினடிப்படையில் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவை முதன் முதலில் விளக்கியவர் இவரே. (Divine Essence) பிதாவைவிட குமாரன் தாழ்வானவர் என்பதையே அவர் நித்திய ஜனனம் என்பதன் மூலம் விளக்கினார். இரண்டாந்தர தெய்வீக உயிர் அணுவையே பிதா குமாரனுக்கு கொடுத்தார். இதனால் குமாரன் ஒர கடவுள் (a God) என கூறப்படலாமே தவிர கடவுள் (The God) என கூறமுடியாது அவர் சில சமயங்களில் குமாரனை இரண்டாம் கடவுள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே Origen இன் உபதேசத்தின் மிகப்பெரிய பிழையாகவும் பிற்கால கள்ளப்போதகமான ஏரியனிஸம் தோன்ற காரணமாயமைந்த்து. மேலும் தூயஆவி குமாரனிலும் தாழ்வானதாக கருதியது மட்டுமல்ல குமாரனால் சிருஷ்டிக்கப்பட்டதொன்றாகவும் கருதினர்.

திருத்துவ உபதேசத்தைப் பற்றிய மிகப்பெரிய தர்க்கம் கி.பி. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த Arius உடன் சம்பந்தப்பட்டது. ஏரியஸ் என்ற குரு கி.பி.310ஆம் ஆண்டளவில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர் இவர் ஒரு தெய்வ கொள்கையை (Monotheism) ஆதரித்தவராதலால் தேவத்துவம் ஒரு நித்திய ஆளில் தான் அடங்கியிருக்கிறது என்று வாதிட்டார். தேவனோடிருந்த வார்த்தை (Logos) தெய்வீக வல்லமையே (Divine energy) என தெரிவித்தார். இவ்வல்லமையே கடைசியில் மாம்சமாகியது என போதித்தார். இவரது கருத்துப்படி குமாரனுக்கு ஆரம்பம் ஒன்றுண்டு. அவர் பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டவர் என்று ஏரியஸ் கூறினாலும் அதன் அர்த்தம் குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதேயாகும். குமாரன் உலக சிருஷ்டிப்புக்கு முன் ஒன்றுமில்லாததிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர் (Created out nothing) எனவே அவர் நித்தியராகவும் தெய்வீகத் தன்மை உடையவராகவும் இருக்க முடியாது என வாதிட்டார். கிறிஸ்து இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தும் நடுநிலையானவர் மட்டுமே எனவும் எடுத்துரைத்தார் மேலும், அவர் திரித்துவத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை முன்வைத்தார் அவரின் மறை எதிர்ப்புக் கருத்துக்களின்படி திரித்துவம் அறிவுசார் கொள்கை மட்டுமே.
 
Athanasius and arius new
குமாரனே முதலாவதாக சிருஷ்டிக்கபட்ட மிகப்பெரிய வஸ்து (being) அவர் சிருஷ்டிக்கப்பட்டதன் காரணம் இவரினூடாக உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்காகவே. எனவே அவர் மாற்றமடைபவர். (Mutable) எனவே இவருடைய புண்ணியங்களை தேவன் முன்னறிந்தமையால் (foreseen Merits) தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு எதிர்கால மகிமையின் அடிப்படையில் தேவனுடைய குமாரன் என்ற அழைக்கப்படுகின்றார். அவர் குமாரனாக சுவீகரிக்கப்பட்டமையால் (adopted) வணக்கத்திற்குரியவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிதாவை விட குமாரன் தாழ்வானவர் என்பது போல் தென்படும் வேதவசனங்களை ஏரியஸ் தன்னுடைய உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகித்தார். (நீதி 8:22, மத் 28:18, மாற் 13:32, லூக் 18:19,யோவான் 5:19, 14:28, 1 கொரி 15:28)

ஏரியஸ் இக்கருத்தை ஒவ்வொரு இடங்களிலும் போதித்தாரே ஒழிய அதை அவர் எழுத்தாக்கம் செய்யவில்லை. இருப்பினும் பிற்காலத்தில் இவை நூல் வடிவம் பெற்றதோடு அவற்றில் மிஞ்சியிருப்பது தலேய்ய (Thaleia) என்ற பெயரில் அறிமுகமாகும் பாடல்களின் சில பகுதிகள் மட்டுமே. மகனின் நீதியின் நிமித்தம் இறைமகன் என்ற பெயர் அவருக்கு அளிக்கப்பட்டது எனவும், அவர் திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயினும் தந்தையைப் போல் முடிவில்லாதவர் அல்லர் எனவும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் கிறிஸ்தவ விசுவாச உண்மைகளை சீர்குலைக்கச் செய்தது. கிறிஸ்துவின் இறைத்துவம் மறுக்கப்பட்டால் அவர் உலகிற்குப் பெற்றுக்கொடுத்த விடுதலை அர்த்தமற்றுப் போய்விடும். எனவே, தொடக்கத்திலிருந்தே அலெக்சாந்திரிய ஆயர் தூய சிறில் ஏரியசின் கொள்கைகளைப் பேதகங்கள் எனக்கூறி மறுத்து வந்தார் எனினும், நிக்கமேடியாவின் ஆயரான எயுசேபியுசின் உதவியோடு இப்பேதகம் மேலைத்தேயங்களில் பரவியது.

இவர் குமாரனுடைய உண்மையான தெய்வத்துவத்தையும் நித்திய ஜனனத்தையும் (Eternal Generation) வலியுறுத்தியவர். எனினும் அலெக்சாந்திரியாவின் Archdeacon Athanasius என்பவரே ஏரியஸின் கொள்கைகளின் எதிரியாகத் திகழ்ந்தார். இவர் உறுதியான எதற்கும் வளைந்து கொடுக்காத, சத்தியத்திற்காக போராடிய இறையியலாளர்.
கி.பி. 295இல் அலெக்சாந்திரியாவில் பிறந்த இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாவர் முதலில் கிறிஸ்தவக் கல்வி கிடைக்காதபோதும் சிறுவயதிலிருந்தே துறவற வாழ்வில் பற்றுக் கொண்டிருந்தார் எனினும் கற்ற அறிவுள்ள ஒருவராக இருந்தமையால் கி.பி. 325இல் அலெக்சாந்திரியாவின் ஆயரின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இப்பதவியில் இருந்தமையால் நிசேயா திருச்சங்கத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இத் திருச்சங்கத்தில் ஆரிய பேதகத்துக்கு எதிராக இவரால் பேசுவதற்கு முடிந்தது. இவருடைய வாழ்க்கையில் அதிக காலத்தை ஆரிய பேதகத்துக்குக்கு எதிராகப் போராடியதால் அத்தனாசிஸ் பற்றிக் கூறுகையில் ஆரிய பேதகத்தை மறக்க முடியாது. கி.பி. 328இல் அலெக்சாந்திரியாவின் ஆயருக்குப் பின் அத்தனாசிஸ் புதிய ஆயராக நியமனம் பெற்றார். பொதுநிலையின், துறவறத்தோர் என இருபாலாரும் விரும்பியதால் அத்தனாசிஸ் எகிப்து, லிபியா உள்ளடக்கப்பட்ட பரந்த மாகாணத்துக்கு பேராயராக நியமனம் பெற்றார் அன்று தொடக்கம் ஏழு வருடங்கள் தனது பிரதேசத்தில் பயணம் செய்து மக்களைத் தைரியப்படுத்திப் பாரிய பணியாற்றினார். அடிப்படைவாதிகளின் பயமுறுத்தலிலிருந்து பிரதேசத்தைக் காப்பாற்றுவதே அவரது ஒரே நோக்கமாயிருந்தது.
„துறவற மடங்களில் வாழ்ந்த காலத்தில் இவர் விசேட செயலில் ஈடுபட்டார். அதாவது, அனேக நூல்களை எழுதி திருச்சபைக்கு வழங்கினார். இவை மிகவும் எளிய கட்டுரைகளாகும். இவற்றில் அனேகமாக ஏரியஸின் தத்துவத்திற்கு எதிராக எழுதப்பட்டவையாகும். இந்நூல்களில் திருவிவிலியத்துக்கு எழுதப்பட்ட அரும்பத விளக்க நூல் (அரும்பத விளக்கம்) எஞ்சியிருந்தது. திருவிவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 27 நூல்களை உள்ளடங்கியதாக முதன்முதலில் வெளியிட்டவர; புனித அத்தனாசிஸ் ஆவார். இவருடைய நூல்களின் விசேட தன்மையானது, எப்பொழுதும் உட்பொருளுடன் முன்வைப்பதாகும். இவர் திருவிவிலியத்தை கிறிஸ்துவை மையமாகக் கொண்ட தொனிப்பொருளில் அறிமுகப்படுத்துகிறார்

கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுவது தேவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதை மறுதலிப்பதாக உள்ளது என வாதிட்டார். இவர் தேவத்துவத்தின் ஒருமைத்துவத்தை வலியுறுத்திய அதேசமயம் அதன் மூவொருமை (Tri-unity) திரித்துவதிற்கு எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் தனது இறையியல் கருத்தை வெளியிட்டார். பிதாவும், குமாரனும் தெய்வீக தன்மையுடையவர்கள் எனினும் தேவனில் பிரிவுகளோ அல்லது வேறுபாடுகளோ இல்லை இதனால் இரண்டாம் கடவுள் (Theos Devteros) என்று குமாரனைக் குறிப்பிடுவது தவறு எனத் தெரிவித்தார். தேவனுடைய ஒருமைத் தன்மையை முக்கியப்படுத்திய அதேவேளையில் அவர்களில் மூன்று நபர்கள் (Three hypostases) இருப்பதையும் கண்டுகொண்டார். குமாரன் சிருஷ்டிக்கப்பட்ட ஆரம்ப்மொன்றையுடையவர் என்பதை ஏற்றுக்கொள்ளாத அவர் குமாரனும் ஆரம்பங்களற்ற நித்தியமானவர் என தெரிவித்தார். குமாரன் எதையும் சார்ந்திராதவரும், தாமாகவே இருப்பவரும் என போதித்தார். மூன்று ஆள்கள் அல்லது ஆள்தத்துவங்கள் தேவனில் இருப்பதென்பது எவ்வித்த்திலும் தேவனில் பிரிவுகள் இருப்பதாக கருதப்படக் கூடாதென வாதிட்ட அவர் மூன்று கடவுள்கள் தேவத்துவத்தில் இல்லை என்று வாதிட்டார். மூவரும் சாரத்தில் (Essence) ஒன்றானவர்கள் என அவர் கூறினார். அத்தனாசிஸின் இறையியல் அடிப்படையான நம்பிக்கையே திரித்துவத்தின் உபதேசத்திற்காக போராட அவரை ஏவியது. தேவனுடனான உறவை அல்லது ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதே இரட்சிப்பின் அத்திவாரம் என அவர் நம்பினார். எனவே எந்தவொரு உயிரினமும் அல்ல. தேவனால் மட்டுமே நமக்கு இந்த உறவை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என விசுவாசித்தார். எனவே கிறிஸ்து தேவனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என கருதிய அவர், குமாரனுக்கு முழுமையான வேதத்துவத்தை கொடுக்காத ஏரியசின் கொள்கைகளை எதிர்த்தார்.

ஏரியஸ் இற்கும் அத்தனாசின் குழுவினருக்குமிடையே வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Caesarea எனுமிடத்தைச் சேர்ந்த Evsetive எனும் சபை சரித்திர ஆசிரியரின் தலைமையில் மூன்றாவது குழுவொன்று இரண்டிற்கும் நடுவில் வந்தது. அக்குழுவிவே பெரும்பான்மையினரைக் கொண்டிருந்தது. இது Origenist Portly என்று அழைக்கப்பட்டது. காரணம் Origen உடைய நியதிகளில் இக்குழு ஊக்கப்படுத்தப்பட்டிருந்தது.
(வளரும்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment