- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 15 April 2011

இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(இயேசுவை சிருஷடிக்கப்பட்டவராக காட்டுவதற்கும் அவர் தேவன் இல்லை என மறுப்பதற்கும் யெகோவா சாட்சிகளினால் சுட்டிக் காட்டப்படும் விடயங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் (தமிழ்) ஏப்ரல்-ஜூன் 2010 இதழிலும் இவ்விபரம் காணப்படுகின்றது இக்கட்டுரையாசிரியர் இதற்கு அப்பாலும் சென்று இது உண்மையானது தானா என வேத வசனங்களுடன் ஆராய்ந்துள்ளார்)


தேவனால் முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகக் காண்பிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் வேதவசனம் தானியேல் 10:13 ஆகும். இவ்வசனத்தில் “மிகாவேல்“ எனும் தேவதூதன் “பிரதான அதிபதிகளில் ஒருவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனத்தையும் தானியேல் 10:21, 12:1 ஐயும் ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்து மனிதனாக வருவற்கு முன்பு. அவர் பிரதான தூதன் மிகாவேலாக இருந்ததாகக் கூறுகின்றனர். தானியேல் 12:1 இல் மிகாவேல் எழும்புவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் 1914 இல் இயேசுக்கிறிஸ்து பரலோக சிங்காகனத்தில் ராஜாவாக முடிசூட்டப்படதைப் பற்றியது(80) என்று கருதும் யெகோவாவின் சாட்சிகள் இவ்வசனத்தில் “எழும்புதல்“ எனும் பதததை.“அதிகாரத்தைக் கைப்பற்றி ராஜாவாய் அரசாளுதல்“ என்று விளக்குகின்றனர். (81)

தானியேல் 10:13 இல் மிகாவேல் “அதிபதிகளில் ஒருவன்“ என்றே குறிப்பிடப்பட்டுள்ளான் எனவே, மிகாவேலைப் போன்று இன்னும் பல தூதர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. ஆனால் தானியேல் 10.21 இல் “உங்கள் அதிபதி“ என்றும் 12:1 இல் “பெரிய அதிபதி“ என்றும் மிகாவேல் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் 1தெசலோனிக்கேயர் 4:16 இல் “பிரதான தூதன்“ எனும் பதம் சுட்டுச் சொல்லுடன் ஒருமையில் இருப்பதனாலும் மிகாவேல் என்பவன் மட்டுமே பிரதான தூதன் என்று யெகாவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (82) ஆனால் தெசலேனிக்கேயர் 4:16 இல் சுட்டுச்சொல்லும் ஒருமையும் ஒரேயொரு பிரதான தூதன் மட்டுமே இருக்கிறான் என்பற்கான ஆதாரம் அல்ல. பிரதான தேவதூதர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்லுவதற்காகவே இவ்விரு இலக்கணக் குறிப்புகளும் உள்ளன. (83) தானியேலின் புத்தகத்தில் முதல் தடவை மிகாவேல் “அதிப்திகளில் ஒருவன்“ என்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளமையால் (தானி 10:13) அதன்பின்னர் அவனைப் பற்றிக் கூறும்போது, பிரதான தூதர்கள் பலர் இருப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மிகாவேலைப போன்று ஏழு பிரதான தூதர்கள் இருக்கிறார்கள் என்பதே அக்காலத்தைய யூதர்களது நம்பிக்கையாக இருந்த்து(84) எனவே மிகாவேல் தனித்துவமானவனாக இல்லை. ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ தனித்துவமானவராக என்று யோவான் 3:16 கூறுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, இவ்வசனத்தில் “ஒரேபேறான குமாரன்“ என்பதற்கு மூலமொழியில் தனித்துவமானதுமான தன்மையை சுட்டிக் காட்டுகிறது. (85) அதாவது “பலரில் ஒருவர் என்பதல்ல, ஒரேயொருவர்“ என்பது இதன் அர்த்தமாகும். மேலும், இயேசுக்கிறிஸ்து வேதத்தில் “பிரதான அதிபதி“ என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் யெகோவாவின் சாட்சிகளின் விளக்கம் தவறானது என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. இயேசுக்கிறிஸ்து பிரதான அதிபதியாக அல்ல, முழுமையான அதிகாரமும் ஆளுகையும் கொண்ட “ராஜாதிவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கிறார். (வெளி. 19:16)

உண்மையில் இயேசுக்கிறிஸ்துவை தேவதூதன் என்று கூறுவது முழுமையான வேதப்புரட்டாகும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து தேவதூதர்களை விட மேலானவர் என்பது வேதாகமத்தின் தெளிவான போதனையாக உள்ளது. எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் முதலாம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் 18ம் வசனம் வரை தேவதூதர்களைவிட இயேசுக்கிறிஸ்து மேலானவர் எனும் சத்தியம் விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியானது, இயேசுக்கிறிஸ்து இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.“ என்று ஆரம்பமாகின்றது. (எபி. 1.4) இயேசுக்கிறிஸ்து தேவதூதரை விட மேலானவர்(86) என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது. (87) மேலும் இவ்வசனத்தில் “நாமம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பெயர், பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், நபர் என்று பலவித அர்த்தங்க்ளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் தேவனைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்ட இப்பதம் பிற்காலத்தில் யூத கிறிஸ்தவர்களால் இயேசுக்கிறிஸ்துவினுடைய பெயராகக் கருதப்பட்டது. (88) எனவே 1:4 இல் இயேசுக்கிறிஸ்து “விசேஷித்த நாம்முடையவராய்“ இருக்கிறார் எனும்போது அவர் தேவனாய் இருக்கிறார் எனும் அர்த்த்த்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (89) “இயேசுக்கிறிஸ்து தேவதூதரைவிட மேலான அந்தஸ்தும், அதிகாமும், ஆளுமையும் உடையவராய் இருப்பதையே இவ்வசனங்கள் அறியத் தருகின்றன. (90) எனவே அவரைத் தூதன் என்ற கூறுவது மிகப் பெரிய தவறாகவே உள்ளது.

இயேசுக்கிறிஸ்துவைத் தம் குமாரன் என்று கூறிய தேவதூதரை இவ்வாறு அழைக்கவில்லை என்றும் (எபி 1:5) அவர்கள் தேவனுடைய ஊழியக்கார்ர்களாகவே இருக்கிறார்கள் என்றும் (எபி. 1:7) எபிரேயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுக்கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருப்பதனாலும், தூதர்களைத் தேவன் தம் குமாரன் என்று அழைக்காதமையினாலும் மிகாவேல் எனும் தேவதூதன் இயேசுக்கிறிஸ்து அல்ல என்பது தெளிவாகின்றது. (91) மிகாவேல் தேவதூதனே இயேசுக்கிறிஸ்து என்றால் இவ்விரு வசனங்களிலும் தேவன் கூறியவை பொய்யாகவே இருக்க வேண்டும். மேலும், தேவதூதர்கள் யாவரும் தம் குமாரனை வழிபட வேண்டும். என்று தேவன் கட்டளையிட்டதாகவும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (எபி. 1:6) வேதாகமத்தில் தேவனை வழிபடுவதற்கு உபயோகிக்கப்பட்ட பதமே இவ்வசனத்தில் தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதைப் பற்றிய தேவகட்டளையிலும் உள்ளது. தேவதூதர்கள் மட்டுமல்ல பிசாசுக்களும இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக விழுந்து அவர் தேவனுடைய குமரன் என்று அறிக்கையிட்டன. (மாற். 3:11) தேவன் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவராய் இருப்பதனால் (மத். 4:10) தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதானது அவர் தேவதூதர்களைவிட மேலானவராய இருப்பது மட்டுமல்ல “அவர் தேவனாய் இருப்பதையும் அறியத் தருகிறது. (92) மேலும், பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்காரும் சிலாக்கியம் இயேசுக்கிறிஸ்துவுக்கு கிடைத்த்து போல தேவதூதர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் எபிரேயர் நிருப ஆசிரியர் சுட்டிக் காட்டுவதும் (எபி. 1:13) தேவதூதர்களை விட இயேசுக்கிறிஸ்து மேலானவராய் இருப்பதற்கான ஆதாரயமாய் உள்ளது. மலும், தேவதூதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பதும் (கொலோ. 1.16)(93) தேதூதர்களைவிடவும் மேலான நிலையில் அவர் இருப்பதை அறியத் தருகிறது.

மிகாவேலும் இயேசுக்கிறிஸ்துவும் ஒருவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் 1 தெசலோனிக்கேயர் 4:16 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், இயேசுக்கிறிஸ்துவின் சத்தமே இவ்வசனத்தில் பிரதான தூதனுடைய சத்தமாக வர்ணிக்கப்பட்டுள்ளது(97) கூறுகின்றனர். எனினும் 2 தெசலேனிக்கியேர் 1:8 இன்படி இயேசுக்கிறிஸ்து தமது மறுவருகையில், வல்லமையின் தூதர்களோடு வருவதனால், பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்ற 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் குறிப்பிடப்பட்டிருப்பது அவரோடு பிரதான தூதன் மிகாவேலும் வருவான் என்பதையே அறியத்தருகின்றது. எனவே இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தூதன் எனக் கூறுவது தவறாகும்.

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பு மட்டுமல்ல மரித்து உயிர்தெழுந்த பின்பும் மிகாவேல் எனும் தேவதூதனாகவே இருக்கிறார் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். மாம்சத்தில் மரித்த இயேசுக்கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்பதே இவர்களது போதனையாகும. (98) எனவே “உயிர்த்தெழுதலின் பின்னர் அவர் சரீரமற்ற ஆவியாகவே இருந்தார் (99) என்று போதிக்கும் யெகோவாவின் சாட்சிகள் “மனிதர்களை மீட்பதற்காக்கத் தம் சரீரத்தை மீட்கும் பொருளாக்க் கொடுத்த இயேசுக்கிறிஸ்து மறுபடியும் தன் சரீரத்தை எடுத்துக் கொள்ளவில்லை (100) என்றும் அவரால் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்த்து எனவும் விளக்குகின்றனர்(101) மேலும் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது சரீரம் தேவனால் அழிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறுகின்றனர். (102) உயிர்த்தெழுந்த பின்னர் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாமல் ஆவியாக மட்டுமே இருக்கின்றார்“ எனும் தங்களது வேதப்புரட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வேதவசனம் 1 பேதுரு 3:18 ஆகும். (103) இவ்வசனத்தின் இறுதிப்பகுதியில் “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவ்வசனம் யெகோவாவின் சாட்சிகள் தர்கிப்பது போல இயேசுக்கிறிஸ்து சரீரமற்ற ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்று கூறவில்லை. மூலமொழியில் இவ்வாக்கியத்தின் இலக்கண அமைப்பு முறையை அடிப்படையாக்க் கொண்டு “ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ (104) என்றும் ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார்(105) என்றும் இருவிதமாக மொழிபெயர்க்கலாம். எனினும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல் “சரீரம் இல்லாமல் வெறும் ஆவியாக உயிர்ப்பிக்கப்பட்டார்(106) என்று இவ்வசனத்தை எவ்வித்த்திலும் மொழிபெயர்க்க முடியாது.
இயேசுக்கிறிஸ்து ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார் என்று கூறும்போது அவர் சரீரமற்ற நிலையில் ஆவியாக இருந்தார் என்பது அர்த்தமல்ல. உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்து தமது சரீரத்தை இழந்தவராக அல்ல, மாறாக மகிமையடைந்த சரீரத்துடனேயே உயிர்தெழுந்தார் தம்மை ஒரு ஆவி என்று நினைத்துப் பயந்த சீடரிடம் “நான் தான் என்ற அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள் என்னைத் தொட்டுப் பாருங்கள் நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்கு காண்பித்தார். (லூக். 24:37-40) உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவே தாம் ஆவியல்ல என்றும் தமக்கு மாம்சமும் எலும்பும் இருப்பதாகவும் அறியத்தந்துள்ளமையால் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கம் உண்மைக்கு மாறான விளக்கமாகவே உள்ளது.

உண்மையில் கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழிந்து போகவில்லை. “அவருடைய மாம்சம் அழிந்து போகாது என்று தீர்க்கதரிசிகளினால் முன்னறிவிக்கப்பட்டது போலவே அவர் சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்தார் என்பதை அப்போஸ்தலர் 2:31 அறியத் தருகின்றது (107) இயேசுக்கிறிஸ்துவும் தமது சரீரம் மூன்று நாளைக்குப் பின் உயிர்த்தெழும என்பதை முன்னறிவித்திருந்தார் (யோவா. 2:19-22) (108) சரீரப்பிரகாரமாக உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் மகிமையடைந்த நிலையில் இருந்தமையால் அவர் சடுதியாகத் தோன்றி மறையக்கூடியவராகவும் பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் வந்து போகக்கூடியவராகவும் இருந்தார்(லூக். 24:31, 24:36) உயிர்த்தெழுந்த பின்பு அவர் சரீரத்தில் இருந்ததை அவரது சீடர்கள் தொட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது (மத். 28:9, லூக் 24:39, யோவா. 20:17) இயேசுக்கிறிஸ்து மரிக்கும்போது அவரது சரீரத்தில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் உயிர்த்தெழுந்த பின்பும் இருந்தன. (யோவா 20:25-27)(109).. எனவே உயிர்த்தெழுந்த பின்னர் அவர் சரீரமில்லாமல் ஆவியாக இருந்தார் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இயேசுக்கிறிஸ்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்த்தை மறுதலிக்க யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் இன்னுமொரு வேதப்பகுதி 1 கொரிந்தியர் 15:44-50 ஆகும். 44ம் வசனத்தில் “ஜென்ம சரீரம் விதைக்கப்படும் ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். எனும் வாக்கியத்தை சுட்டிக் காட்டும் இவர்கள் இயேசுக்கிறிஸ்து ஆவியாவே உயர்த்தெழுந்தார் என்று கூறுகின்றனர். மேலும் 50ம் வசனத்தில் “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜியத்தை சுதந்தரிக்க மாட்டாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாத நிலையில் ஆவியாகவே உயிர்தெழுந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் (110) உண்மையில் யெகோவாவின் சாட்சிகள் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள விடயத்திதைக் கருத்திற் கொள்ளாதவர்களாக தங்களது உபதேசத்துக்கு ஆதாரமாக இவ்வதிகாரம் இருப்பதாக எண்ணுகின்றனர். கொரிந்து சபையில் மரித்தோரின் உயிர்த்தெழுதலை மறுதலித்த ஒரு குழுவினர் இருந்தனர். (111) இதனால் மரித்தோர் சரீரப்பிரகாரமாக உயிர்தெழுவார்கள் என்பதையும் (1 கொரி. 15:12-23) உயிர்தெழுதலில் தற்போதைய மாமிசசரீரம் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்பதை ( 1 கொரி. 15.35-50) பவுல் விபரமாக விள்க்கியுள்ளார். உயிர்த்தெழுதலில் மாம்ச சரீரம் “ஆவிக்குரிய சரீரமாக“ இருக்கும். என்று இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சரீரம் இல்லாமல் ஆவி மட்டும் இருக்கும் என்று கூறவில்லை (1 கொரி. 15:44-46) உண்மையில் நாம் இப்போது இருக்கும் சரீரத்தில் அல்ல மாறாக மகிமையடைந்த ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்தில் இருப்போம் என்பதையே “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை“ எனும் வாக்கியத்தின் மூலம் பவுல் அறியத் தந்துள்ளார்.

உயிர்தெழுதல் சரீரமற்ற ஆவியில் வருவது என்று 1 கொரி. 15ம் அதிகாரத்தின் எந்த ஒரு வசனத்திலும் குறிப்பிடப்பட்வில்லை. உயிர்த்தெழுந்த நிலையில் நமக்கு ஆவிக்குரிய சரீரம் இருக்கும் என்றே இவ்வதிகாரம் அறியத் தருகிறது. (1 கொரி. 15:44) பவுலினுடைய நிருபங்களில் “சரீரம்“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்படப்டுள்ள பதம் (somma) (113) மாம்சபிரகாரமான சரீரத்தையே குறிக்கின்றது. பவுல் இவ்வர்த்தத்திலேயே எல்லா இடங்களிலும் இப்பதத்தை உபயோகித்துள்ளார். (114) எனவே 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலின் பின்னர் உள்ள ஆவிக்குரிய சரீரம் தற்போது தமக்கிருக்கும் மாம்சரீரத்தின் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்றே பவுல் அறியத்தந்துள்ளார். இவ்விதமாகவே, உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரமும் மகிமையடைந்த நிலையில் இருந்ததாக வேதம் கூறுகிறது.

Footnote and References 
(80) Anonymous, Your will be Done Earth, pp 310, 313
(81) Ibid p 311

(82) Anonymous, Aid to Bible Understanding, p 1152 ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக உபயோகிக்கப்படுவதே சுட்டுச் சொல்லாகும். “அந்த“, இந்த“ எனும் பதங்கள் தமிழ்மொழியில் உள்ள சுட்டுச் சொற்களாகும். வேதாகமத்தின் மூலமொழிகளில் வசனங்களின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு இவை பெரிதும் உதவுகின்றது.

(83) F. Dickason, Angles : Elect and Evil p68

(84) அவர்களது பெயர்கள் யுராயல் (Uriel), ரஃபாயல் (Raphael) ராகூல் (Raguel) , மிகாவேல் (Michael), சாரியஸ் (Sariel), காபிரியல் (Gabriel), ரெமியேல்(Remiel), (தொபித். 12.15) 4எஸ்றா 20.1-7) இல் Remiel எனும் பிரதான தூதனின் பெயரே Jeremiel என்று உள்ளது. (F.F. Bruce, 1&2 Thessalonians : Word Biblical Commentary Vol 45, p 100) இப்பிரதான தேவதூதர்களே வெளிப்படுத்தல் 8.2 இல் தேவனுக்கு முன்பாக நிற்கின்ற ஏழு தூதர்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் காபிரியல் மிகாவேல் என்போரின் நம் வேதாகமத்தில் உள்ளன.

(86) இவ்வசனத்தில் “மேலானவர்“ எனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் க்ரீசன் (Kreisson) புதிய ஏற்பாட்டில் 19 தடவைகள் இடம்பெற்றாலும் எபிரேயர் நிருபத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நிருபத்தின் மையக் கருத்தை அறியத் தரும் பதமாயுள்ளது. (1:4, 6:9, 7:7, 7:19, 7:22, 8:6, 9:23, 11:16, 11:35, 11:40, 12:24, 10:34)

(87) இவ்வசனத்தில் “சுதந்தரித்துக் கொண்டார்.““மேன்மையுள்ளவரானார்“ எனும் சொற்பிரயோகங்கள் இயேசுக்கிறிஸ்து தம்மிடம் இல்லா ஒன்றைப் பெற்றுக் கொண்டார் எனும் அர்த்தம் உடையது அல்ல எபிரேயர் நிருப ஆசிரியர், மனிதராக இவ்வுலகிற்கு வந்த இயேசுக்கிறிஸ்து மானிட வாழ்வின் பின் எத்தகைய நிலையை அடைந்தார் என்பதையே இப்பகுதியில் சுட்டிக் காட்டுகிறார் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இதற்கு முன் உள்ள வசனத்தில் இயேசுக்கிறிஸ்து மானிட பாவத்துக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டதிலிருந்து இதை நாம் அறிந்து கொள்கிறோம். (L. Morris, Hebrew : Expositor’s Commentary, p 15) இயேசுக்கிறிஸ்து மானிட வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதராக வந்த போது “தேவதூதரை விட சிறியவராக்கப்பட்டு (எபி. 2:9) மானிட பாவத்தைப் பரிகரிப்பதற்காகச் செய்யவேண்யவற்றை (எபி. 2.17) செய்து முடித்தபின்னர் அவர் தேவதூதரை விட உயர்வான நிலைக்குச் சென்றுள்ளார் என்பதை அறியத் தருவதற்காகவே எழுதப்பட்டுள்ளது.

(88) அப்போஸ்தலர் 3:16, 4:7, 4:10, 16:18, 19:13 எபேசியர் 1:20, பிலிப்பியர் 2:9-11 போன்ற வசனங்களில் “நாமம்“ என்பது இயேசுக்கிறிஸ்துவைக் குறிக்கும் பதமாய் இருப்பதைக் காணலாம்.

(89) R. Longenecker, The Christology of Early Jewish Christianity, pp 41-46

(90) G.H. Guthrie, Hebrews : The NIV Application Commentary, p. 50

(91) R.Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p 178

(92) G.H. Guthrie, Hebrews : The NIV Application Commentary, p. 69

(93) கொலோசேயர் 1:16 இல் “சிங்காசனங்கள்“, “கர்த்த்த்துவங்கள், துரைத்தனங்கள், அதிகாரங்கள்“ என்பவை தூதர்களையே குறிக்கின்றன. அக்கால யூத இலக்கியங்களில் இச்சொற்பிரயோகங்கள் தூதர்களைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டுள்ளன. (2 ஏனோக்கு 20:1, ஜூபிலி 2:2) புதிய ஏற்பாட்டில் ரோமர் 8:38, 1 கொரிந்தியர் 15:24, எபேசியர் 1:20, 6:12, 1 பேதுரு 3:22 இலும் இத்தகைய விபரணத்தை நாம் அவதானிக்கலாம்

(97) Anonymous, Aid to Bible Understanding, p1152

(98) Anonymous, Let God be True, p40

(99) Ibid. p 41

(100) Anonymous, Let your Name be Sanctified, p. 266

(101) Anonymous, You can Live Forever in Paradise on Earth, p 143

(102) Anonymous : Things in which it is Impossible for God to Lie, p. 354. The Watchtower, 1 August 1975, p 479

(103) Anonymous, Rezoning with the Scriptures, p 334

(104) ஆங்கிலத்தில் New International Version மற்றும் Authorized Version மொழிபெயர்ப்புகளில் இவ்விதமாகவே இவ்வாக்கியம் உள்ளது.

(105) பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு மொழிபெயர்ப்பதே சிறந்த்து என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். (W.Grudem, 1 Peter : Tyndale New Testament Commentaries, p 156; A.Blum 1,2 Peter : Expositor’s Bible Commentary Vol 12, p 242) இதன்படி மாம்சபிரகாரமான வாழ்வில் மரித்து, ஆவிக்குரிய நிலைக்கு உயிர்த்தெழுந்தார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும். J,R. Michaels, 1 Peter : Word Biblical Commentary Vol 49, pp203-205), அதாவது மானிட வரையறைகளுக்கு உட்பட்டவராக இருக்கும்போது மரித்த இயேசுக்கிறிஸ்து இவ்வரையறையைக் கடந்து ஆவிக்குரிய நிலையில் உயிர்த்தெழுந்தார்

(106) Anonymous, Let God be True, p 272

(107) சங்கீதம் 16:10 இல் முன்னறிவிக்கப்பட்ட இவ்விடயம் இவ்வசனத்திலும் அப்போஸ்தலர் 13 இயேசுக்கிறிஸ்து35 இலும் இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழியாது என்பதைச் சுட்டி காட்ட உபயோகிக்கப்பட்டுள்ளது.

(108) யோவான் 2ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள் மூன்று நாளைக்குள்ளெ இதை எழுப்புவேன்“ என்று கூறினார். இது அவர தமது சரீரத்தைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனம் என்பதை 21ம், 22ம் வசனங்கள் அறியத் தருகின்றன.

(109) இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்த்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, மரிக்கும்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களைக் தான் பார்க்க வேண்டும் என்று தோமா கூறியபோது, இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயேசுக்கிறிஸ்து தம்முடைய கைகளை அவனுக்குக் காண்பித்தார்

(110) Anonymous : Aid to Bible Understanding p1395: Anonymous : Your Will be Done on Earth, p. 50.

(111) M.L. Sodards, 1 Corinthians : New International Biblical Commentary pp 314-317 ; C. Blomberg, 1 1 Corinthians : The NIV Application Commentary, p 295

(112) L.Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentary, p 227

(113) சோமா (somma) எனும் கிரேக்க பதம்

(114) R. Gundry, Soma in Biblical Theology, p 168

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment