- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 8 December 2010

மனிதனிலிருக்கும் தேவஆவி (ஆதி 6.3)

நூற்தலைப்பு ஆதியாகமம்
ஆசிரியர் : சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை)
வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி


(ஆதி 6.3 அடிப்படையாகக் கொண்டு மனிதனின் ஆயுட்காலம் 120 என கூறுவது ஏற்படையதுதானா? 120 வயதைத் தாண்டியும் மனிதர்கள் இவ்வுலகதில் வாழ்ந்து வருகின்றனர். அப்படியால் அவ்வசனத்தின் உண்மையான அர்த்தம் என்ன? இக்கட்டுரை அதனை விளக்குகின்றது)

ஜலப்பிரளயத்தினால் உலககை அழிப்பதற்கு முன்பதாக தேவன் “என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். (ஆதி 6.3) தேவனுடைய இக்கூற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைச் சரியாக புரிந்து கொள்ளமுடியாதவாறு இவ்வசனமானது பலவிதமான முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அர்த்தவிளக்கம் செய்யப்பட்டும் வந்துள்ளது. உண்மையில் இவ்வசனத்தில் இருவிதமான சிக்கல்கள் உள்ளன. இவை அவ்வசனத்தின் இரு பகுதிகளிலும் சரியான அர்த்தம் பற்றியதாகும். முதலாவது ”என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை” எனும் வாக்கியத்தின் அர்த்தம் பற்றிய சிக்கல். இரண்டாவது மனிதன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் எனும் தேவனின் அறிவித்தல். தேவனுடைய கூற்றின் இவ்விரு விடயங்களின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள அவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்ப்போம்.

ஆதியாகமம் 6ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களை அர்த்தவிளக்கம் செய்யும்போது அவை ஜலப்பிரளயத்தினால் தேவன் அழிப்பதற்கு முன்பானவை என்பதை நாம் மறுக்கலாகாது. தேவன் உலகை ஜலப்பிரளயத்தினால் அழிப்பதற்கு முன்பே என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; என்று கூறியுள்ளார். எனினும் இவ்வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சர்ச்சைக்குரியனவாய் மாறியுள்ளன. எனவே இவ்வாக்கியத்தின் மூலம் தேவன் கூறும் விடயத்தை அறிந்து கொள்வதற்கு அதன் ஒவ்வொரு வார்த்தையும் எதைக் குறிக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாக்கியத்திலுள்ள முதல் வார்த்தை “என் ஆவி“ எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பலர் கருதுகின்றனர். எனினும் “என் ஆவி“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ருஆ“ எனும் எபிரேயப் பதம் “ஆவி, காற்று, சுவாசம்“ எனும் அர்த்தங்களையுடையது. அதேசமயம் இப்பதம் ஆவியைக் குறிக்கும் இடங்களில் அது ஒன்றில் பரிசுத்த பரித்த ஆவியைக் குறிக்கும்“ பழைய ஏற்பாட்டில் இப்பதம் 388 தடவைகள் உள்ளபோதும் இவற்றில் 97 தடவைகள் மட்டுமே பரிசுத்த ஆவியானவருக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. 84 தடவைகள் மானிட ஆவியைப் இப்பதம் குறிக்கின்றது. ஆதியாகமம் 6:3 இல் ஆவி என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக் கூறினால் ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட காலத்தில் எல்லா மனிதர்களுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருந்துள்ளார் எனும் தவறான ஒரு விளக்கத்திற்கு வழிவகுக்கும் (இவ்வாக்கியத்தின் இறுதி வார்த்தையான போராடுவதில்லை எனும் வார்த்தையின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளும்போது இவ்வுண்மை நமக்குப் புலப்படும்) எனவே ஆதியாகமம் 6:3 இல் “ஆவி என்பது மானிட ஆவியையே குறிக்கின்றது. அதாவது “மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஆவியாகும்(02). மானிட ஆவியைத் தேவன் “என் ஆவி“ என்று கூறுவது நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தேவன் மனிதனைச் சிருஷ்டித்த முறையைக் கருத்திற்கொள்ளும்போது இத்தகைய ஒரு குழப்பம் ஏற்பாடாது.

தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனது சரீரத்தை மண்ணினால் உருவாக்கி அதை உயிருள்ளதாக்குவதற்காகத் தன் ஜீவசுவாசத்தை அவனுக்குக் கொடுத்தார். (ஆதி 2.7) தேவனுடைய ஜீவ சுவாசமே மண்ணாயிருந்த மனிதனை உயிருள்ளவனாக்கியது. “தேவன் மனிதனுக்கு கொடுத்த ஜீவசுவாசமே அவனை உயிரோடு வைத்திருக்கும் ஜீவ ஆவியாகும். (3). இந்த ஆவியைப் பற்றியே தேவன் ஆதி 6.3 இல் “என் ஆவி“ எனக்குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விபரணத்தை எசேக்கியேல் 37.14 இலும் அவதானிக்கலாம். மரித்தவர்களை உயிர்ப்பிப்பதைப் பற்றித் தேவன் அவ்வசனத்தில் கூறும்போது “என் ஆவியை உங்களுக்குள்ளே வைப்பேன் நீங்கள் உயிரடைவீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்திலும் தேவன் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியல்ல மாறாக மனிதனை உயிருள்ளவனாக்குவதற்காக அவனுக்கு அவர் கொடுக்கும் ஜீவ ஆவியைப் பற்றியே கூறுகிறார். மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஜீவஆவியானது தேவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஆவியாக இருப்பதனாலேயே தேவன் அதை “என் ஆவி“ எனக் கூறுவதற்கான காரணமாகும்.

ஆதி. 6:3 இல் மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஆவியையே தேவன் “என் ஆவி“ என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அவ்வார்த்தை இடம்பெறும் வாக்கியத்தின் இறுதி வார்த்தையின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்வது அவசியம். எனினும் “போராடுவதில்லை“ எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “யாடொன்“ எனும் எபிரேயப் பதத்தின் சரியான அர்த்தம் என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருப்பதனால் அவர்கள் இவ்எபிரேயப் பதத்தினை வித்தியாசமான முறைகளில் மொழிபெயர்த்துள்ளனர். சிலர் இப்பதத்தின் அர்த்தம் தாழ்வடைதல் எனக்கூறுகின்றனர். இதன்படி “என்ஆவி எப்போதும் மனிதனிடம் அபகீர்த்தியடையாது“(05) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் மானிட பாவம் தேவனை இழிவுபடுத்தும் எனக் கூறும் இவ்விளக்கம் தவறானதாகவே உள்ளது. (06) இதனால் சிலர் இவ்வாக்கியத்தின் கடைசிவார்த்தையைத் தனிப்பட்ட பிரதியீடு எனும் அர்த்தத்தில் “என் ஆவி எப்போதும் மனிதனுக்கு பதில் அளித்துக்கொண்டிருக்காது(07) என மொழிபெயர்த்துள்ளனர். அதாவது இனிமேல் மனிதர்கள் தாங்களே பாவங்களின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் இவ்வசனத்தில் அறிவிப்பதாக இவ்விளக்கம் கருதுகிறது. எனினும் “ஆரம்பத்திலிருந்தே மனிதனின் பாவங்களுக்கு அவனே பொறுப்பாளியாக இருந்து வந்துள்ளமையால் அதுவரை காலமும் மனிதனுக்குப் பதிலாக தேவஆவி அவனுடைய பாவங்களுக்கான பொறுப்பை ஏற்று தேவனுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தது எனும் விளக்கம் அர்த்தம் அற்றதாகவே உள்ளது. (06). ஆதி. 6:3 இன் முதல் வாக்கியத்தின் இறுதி வார்த்தையை சிலர் வல்லமை என்றும் மொழிபெயர்த்துள்ளனர். (08) இதன்படி இவ்வாக்கியம் “என் ஆவி எப்போதும் மனிதனுக்கு வல்லமையளிப்பதில்லை“ எனும் அர்த்தமுடையது. எனினும் ஜலப்பிரளய அழிவு மனிதனில் இருக்கும் தேவஆவியின் வல்லமையை எவ்வாறு குறைக்கும் என்பதற்கு இவ்விளக்கத்தினால் எவ்வித பதிலும் கொடுக்கமுடியாதுள்ளமையினால் இவ்விளக்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

நாம் தமிழ் வேதாகமத்தில் இவ்வாக்கியம் என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் போராடுவதில்லை எனும் வார்த்தை பழைய கிரேக்க மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட வார்த்தையாகும். நம் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில் அதிகாரபூர்வமானதாகக் கருதப்பட்ட ஆங்கில வேதாகமத்தின் தமிழாக்கமே இதுவாகும். இதன்படி தேவன் இனிமேல் மனிதனுடைய பாவத்திற்கு எதிராகப் பேசி அவனோடு தர்கித்துக்கொண்டிருக்க மாட்டார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும். (02). அதாவது மனிதனுடைய பாவத்திற்கு எதிராகப் பேசுவதன் மூலமாக அதுவரைகாலமும் மனிதனோடு போராடி வந்தவர் இனிமேல் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாகும். இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கமாக தென்படுகின்ற போதிலும் இதுவும் ஏனைய விளக்கங்களைப் போலவே இவ்வாக்கியத்திலுள்ள ஆவியை பரிசுத்த ஆவியாகவே கருதுகின்றது. இதனால் இவ்விளக்கமும் சரியானதொன்றாக இல்லை.

அண்மைக்காலத்தில் எபிரேய மொழியிலாளர்கள் மூலமொழியில் இவ்வாக்கியத்தின் கடைசி வாரத்தையின் சரியான அர்த்தம் “இருப்பதில்லை“ என்பதை அறியத்தந்துள்ளனர். தற்போது ஆங்கில உலகில் உபயோகிக்கப்பட்டு வரும் புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு வேதாகமம் “இவ்வர்த்தத்துடனும் இவ்வார்த்தை மொழிபெயர்க்கப்படலாம்(09) என்பதை அறியத்தருகின்றது. “செப்துவஜின்ட்“ என அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் ஆரம்பகால அரபிக், லத்தீன், சிரிய மொழிபெயர்ப்புகளிலும் இவ்வர்த்தத்துடனே இவ்வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (02). மொழியியல் ரீதியாக இவ்வர்த்தமே சரியானது என்று சுட்டிக் காட்டுகின்றனர். (03). இவ்வாக்கியத்தின் ஆரம்ப வார்த்தையான “என் ஆவி“ என்பது மனிதனை உயிரோடு வைத்திருப்பதற்காகத் தேவன் அவனுக்கு கொடுத்துள்ள ஜீவ ஆவியாக இருப்பதனால் வாக்கியத்தின் இறுதி வார்த்தை “இருக்காது“ என்று மொழிபெயர்க்கப்பட்டாலே வாக்கியம் அர்த்தமுள்ளதாக இருக்கும். அதாவது ஜலப்பிரளயத்தினால் உலகை அழிக்கத் தீர்மானித்த தேவன் என் ஆவி மனிதனில் என்றென்றைக்கும் இருக்காது என்று கூறுகின்றார். மரணத்தின்போது ஜீவ ஆவி மனிதனை விட்டு செல்கின்றது. (லூக் 16.19-31) ஜலப்பிரளயத்தினால் மக்கள் மரிக்கப்போவதனால் அவர்களை உயிரோடே வைத்திருப்பதற்காகத் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஜீவஆவி எப்போதும் அவர்களில் இருக்காது என்றே தேவன் அறியத்தருகின்றார். “தேவன் தன் ஆவியை மனிதர்களிலிருந்து எடுப்பதன் மூலமாக அவர்களது வாழ்வு முடிவடைந்து விடுவது பற்றியே இவ்வாக்கியம் கூறுகிறது.

ஆதி 6.3 இன் ஆரம்பவாக்கியத்தின் இறுதி வார்த்தை “இருப்பதில்லை“ எனும் அர்த்தமுடையது. “என் ஆவி என்றென்றைக்கும் மனிதனில் இருப்பதில்லை“ எனக்கூறும் தேவன் அவன் இருக்கப்போவது நூற்றிருபது வருஷம் என்றார். அதாவது இன்னும் 120 வருடங்கள் மட்டுமே மனிதனுக்குத் தான் கொடுத்த ஜீவ ஆவி மனிதனில் இருக்கும் என்றே தேவன் அறிவித்துள்ளார். ஆதியாகமம் 6ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள் தேவன் ஜலப்பிரளயத்தினால் உலகை அழிக்கத் தீர்மானித்துள்ளதைப் பற்றியே அறியத்தருகின்றன. (ஆதி 6.1-8). அதேசமயம் தேவன் உலகை அழிக்கத் தீர்மானித்து 120 வருடங்களின் பின்பே உலகம் அழிந்தது. எனவே அவன் இருக்கப்போவது 120 வருடங்கள் தானே எனும் தேவ அறிவிப்பானது இன்னும் 120 வருடங்கள் மட்டுமே மனிதனை உயிரோடு வைத்திருக்கும் தேவனருளிய ஜீவஆவி அவனில் இருக்கும் என்பதை அறியத் தருகிறது.


அப்படியிருந்தும் சில கிறிஸ்தவர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக்கொண்டு “தேவன் மானிட ஆயுட் காலத்தை 120 வருடங்களாக வரையறை செய்துள்ளார். எனக் கருதுகின்றனர். அதாவது உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் 120 வருடங்கள் உயிர்வாழ்வான் என சிலர் போதிக்கின்றனர். ஆனால் ஆதியாகமப் புத்தகத்தில் இதற்குப் பின்னரும் பலர் 120 வருடங்களுக்கும் அதிகமாக வாழ்ந்துள்ளமையால் (ஆதி 11:10-26). ஆதி 6:3 இலுள்ள தேவ அறிவிப்பை மானிட ஆயுட் கால வரையறையாகக் கருதமுடியாது. அது தேவன் உலகை அழிப்பதாக அறிவித்ததற்கும் உலகை அழித்தற்கும் இடைப்பட்ட காலமாகும்(02). அந்த 120 வருடங்களே 1 பேதுரு 3.20 இல் பூர்வகாலத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த காலம்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கத் தீர்மானித்த தேவன், ஆதியாகமம் 6:3 இல் மனிதன் இருக்கப்போவது 120 வருடங்கள் என்பதனால் என் ஆவி என்றைக்கும் மனிதனில் இருப்பதில்லை எனக் கூறியுள்ளார்
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment