- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 19 November 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 8- முன்னடையாளங்கள்


பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட்டிருக்கும் மனிதர்கள், பண்டிகைகள், பணிகள், நிகழ்ச்சிகள், பொருட்கள் ஆகிய இவைகளுள் சில முன்னடையாளங்களாக இருக்கின்றன. (Types) இவைகள் புதிய ஏற்பாட்டு மெய்ப்பொருளை நிழலாட்டமாக காட்டுகின்றன. 

1. முன்னடையாளமான மனிதர்கள்

(அ) ஆதாம் – மனித இனத்திற்குத் தலைமையானவன். கிறிஸ்து (இரண்டாம் ஆதாம்) மீட்கப்பட்ட மக்களுக்குத் தலைமையானவர். (ரோமர். 5:14; 1 கொரி. 15:22, 45)

(ஆ) யோசேப்பு – தன் சகோதர்களால் பகைக்கப்பட்டவன். பின்னால் தம் இனத்திற்கும் நாட்டிற்கும் அதிகாரியானான். (அப். 7:9-13) அது போல கிறிஸ்து யூத இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (யோவான். 1:11) என்றாலும் அவர் யூதருக்கும் உலக மக்கள் அனைருக்கும் இரட்சகரானார்.

(இ) மோசே – இயேசுவைப் போன்ற ஒரு தீரக்கதரிசி. இயேசுவைப் போன்ற ஒரு தலைவனாகவும், மீட்பனாகவும் ஏற்படுத்தப்பட்டான் (உபா. 18:15-18; அப். 3:22,23 7:35) 

(ஈ)ஆரோன்– பிரதான ஆசாரியராகிய இயேசுவிற்கு  முன்னடையாளமானவன்

(உ) மெல்கிசேதேக்கு – என்றென்றைக்கும் உயிரோடிருக்கின்ற பிரதான ஆசாரியரான இயேசுவிற்கு முன்னடையாளமானவர். (எபி. 7:15) அரசரும் ஆசாரியருமாகிய இயேசுவிற்கு முன்னடையாளமானர்

(ஊ) யோசுவா – மோசே செய்ய இயலாத ஒரு வேலையைச் செய்து இறை மக்களை கானான் நாட்டில் குடியேற்றினார். அதுபோல் நியாயப்பிரமாணம் செய்ய முடியாத ஒன்றை (ரோமர் 8:3, யோவான் 1:17) இயேசு செய்து முடித்து நம்மைப் பரம கானானிற்குள் குடியேற்ற தகுதியுடைவராக்கினார்)

(எ) தாவீது அரசன் – தம்மைச் சூழ்ந்திருந்த எல்லாப் பகைவர்களையும் வென்ற தாவீது மிகச் சிறந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன்னடையாளம் – (1 கொரி. 15:25, வெளி. 19:11-19)

(ஏ) சாலமோன் – சமாதானப் பிரபுவாகிய இயேசுவிற்கு முன்னடையாளம். தேவாலயத்தைக் கட்டின சாலமோன் திருச்சபையைப் பரிசுத்த ஆலயமாகக் கட்டுகின்ற இயேசுவிற்கு முன்னடையாளம். (மத். 16:18, எபே. 2:20-22)

கவனிக்க- மேற்சொல்லப்பட்ட மனிதர்கள் ஒரு சிலவற்றில் மட்டுமே இயேசுவிற்கு முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளும் இயேசுவிற்கு முன்னடையாளமானவைகள் எனக் கருதுவது தவறாகும். ஆதாம் மனித இனத்திற்கு தலைவனாயிருந்தபடியால் அந்த அளவில் அவன் இயேசுவைக் காட்டின முன்னடையாளமாயிருந்தான். ஆனால் விளக்கப்பட்ட கனியைப் புசித்தபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. 

மோசே மிகச் சிறந்த தீரக்கதரிசியும் இறைமக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பண்ணினவருமாயிருந்தபடியால் இவைகளில் அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருந்தான். பதற்றமாய் பேசியபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. ஆகவே முன்னடையாளங்களை விளக்கஞ் செய்யும்போது ஒரு சில செயல்களில் மட்டும் ஒற்றுமையைக் காணலாம். எல்லாற்றிலும் ஒற்றுமையைக் காண முற்பட்டால் சரியான உண்மையை விட்டு விலகிவிடுவோம். அத்துடன் இம்முறையை நாம் அளவிற்கு மீற கையாண்டால் பழைய ஏற்பாட்டின் மையக் கருத்துக்களையும் வரலாற்றுத் தன்மைகளையும் காணத் தவறிவிடுவோம். 


2. முன்னடையாளமான பண்டிகைகள்

(அ) ஓய்வுநாள் – விசுவாசத்தினால் வரும் இரட்சிப்பென்னும் இளைப்பாறுதலுக்கும் முடிவில்லா வாழ்விற்கும் அடையாளமாயிருக்கும். 
பாஸ்கா பண்டிகை- மீட்பிற்கு அடையாளமாகும்

(இ) பழைய ஏற்பாட்டுப் பலிகள் – வரப்போகின்ற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் இருக்கின்றன. (எபி. 10:1)


3. பணிகள்

பழைய ஏற்பாட்டு காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மூவகைப் பணியாட்கள் இருந்தனர். தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகிய இம் மூன்று பணியாட்களும் இயேசுவின் மூவகையான வேலைகளைக் காட்டுகின்றன. ஆகவே கிறிஸ்து

(அ) தீர்க்கதரிசி, போதகர், ஆசிரியர்

(ஆ) ஆசாரியர், மீட்பர், பரிந்துரைப்பவர்

(இ) அரசர், ஆண்டவர்

நாம் நற்செய்திப் பணியாற்றும்போது கிறிஸ்துவின் மூன்று பணிகளையும் சரிசமமாய் எடுத்துக் கூற வேண்டும். புதுவிசுவாசிகள் அவரை இரட்சகராக மாத்திரம் ஏற்றுக் கொள்வது போதாது. அவரை ஆசரியராகவும், அரசராகவும் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


4. நிகழ்ச்சிகள்

(அ) வெண்கலப் பாம்பு- கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பை நோக்கி பார்த்தவர்கள் பிழைத்ததுபோல சிலுவை மரத்தில் உயர்த்தப்பட்ட இயேசுவைப் நோக்கிப் பார்ப்பவர்கள் யாவரும் பிழைப்பார்கள். (ஏசா. 45:22, யோவான் 3:14,15)

(ஆ) இஸ்ரவேல் எகிப்தைவிட்டு புறப்பட்டு வனாந்திரவழியாகப் பயணஞ்செய்தபோது மன்னா உணவாக்க் கிடைத்தது முதல் பாறையிலிருந்து சுரந்த தண்ணீரை அருந்தி கானான் நாட்டில் வந்து சேர்ந்ததுவரை நிகழ்ந்த பல செயல்கள் மீட்கப்பட்ட திருச்சபையின் மோட்சப் பயணத்திற்கு முன்னடையாளமான ஒரு வரலாறாகும். (1 கொரி. 10:1-1)


5. பொருட்கள்

ஆசரிப்புக் கூடாரத்தின் சின்னஞ் சிறு வளையங்கள் கொக்கிகள் முளைகள் ஆகிய ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் கூறுவதைவிட அதன் முக்கியமான கருத்தினை உணர்ந்து கொள்வதே நன்று. “முதலாம் கூடாரம் நிற்குமளவு பரித்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவி தெரியப்படுத்தியிருக்கின்றார். (எபி. 9:8) யாரும் அதன் அருகில் செல்லக்கூடாது என்பது எச்சரிக்கையாகும். திரைச்சீலை போன்ற கிறிஸ்துவின் மாம்சம் கிழிக்கப்பட்டபேது தேவலாயத்தின் சீலையும் இரண்டாக்க் கிழிந்த்து. யாரும் நெருங்கக் கூடாது என்பதற்கு மாறாக, எவரும் அருகில் வரலாம். என்பவே நற்செய்தியின் கருத்தாகும். ”தூயகம் நுழைய அவருடைய இரத்ததின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு. உண்மையுள்ள உள்ளத்தோடும் உள்ளத்தோடும் முழு விசுவாச உறுதியோடும் நாம் அவரை அணுகிச் செல்வோமாக. (எபி. 10:19-22)

(அத்தியாயம் 8 முற்றிற்று)
(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment