- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 15 November 2011

வேதாகமத்திற்கு வெளியில் சிறப்பான வெளிப்படுத்தல் இருக்கிறதா?


தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல், பரிசுத்த வேதாகமத்தின் மூலமே மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக சங்கீதக்காரன் 19ம் சங்கீதத்தில் எழுதியுள்ள போதிலும், இன்று பல கிறிஸ்தவர்கள் வேதாகமத்திற்கு வெளியிலும தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல் இருப்பதாகக் கருதுகின்றனர். ஒரு தேவனே பலதரப்பட்ட மதநூல்களிலும் இருக்கின்றார்(19) என்று கூறும் இவர்கள், “உலகின் சகல நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் அவருடைய மதநூல்களில் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தேவவெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (20) என்று வாதிடுகின்றனர். மேலும், சிறப்பான வெளிப்படு்த்தல் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ள மையால், (21)இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களிலும் அவற்றைப் பின்பற்றுபவர்களிலும் இருக்கிறார் என்பதும் இவர்களின் கருத்தாய் உள்ளது (22) உண்மையில், இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களில் மறைந்தும் அறியப்படாமலும் இருக்கிறார்(23) என்பதே இவர்களின் உபதேசமாகும். இதனால்  இயேசுகிறிஸ்து பிறமதத்தினரினை அவர்களின் மதங்களிலேயே சந்தித்து, அம்மதச் ங்காக்சாரங்கள் மூலமாகவே அவர்களை இரட்சிக்கின்றார் என்றும் இவர்கள் கருதுகின்றனர். (24) இவர்களைப் பொறுத்தவரை உலகமதங்கள்இரட்சிப்பின் சாதாரண வழியாகவும்“, கிறிஸ்தவம் அதற்கானசிறப்பான வழியாகவும்உள்ளது. (25) இதனால், இயேசுகிறிஸ்துவின் மூலம் ஏனைய மதங்களில் இரட்சிக்கப்படுவதாக இவர்கள் கூறும் மக்களைஅறியப்படாத கிறிஸ்தவர்கள்என்று அழைக்கின்றனர். (26) எனினும். இவர்களின் கருத்துக்களும் இவற்றை உறுதிப்படுத்துவதாக இவர்கள் உபயோகிக்கும் தர்க்கங்களும் உண்மையென்றால், “ஒவ்வொரு மதமும் கிறிஸ்தவத்தின் அறயப்படாத மதமாகவே இருக்க வேண்டும்“(27) ஏனென்றால், இக்கருத்தின்படி, கிறிஸ்தவர்களுக்குநசரேத்தில் வாழ்ந்த இயேசுகிறிஸ்துவேஇரட்சிப்பின் காரணராக இருக்கிறார். (28) எனினும் இத்தகைய உபதேசங்களுக்கு வேதாகமத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.

இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களில் இருக்கிறார் என்று தர்க்கிப்பவர்கள் கிறிஸதவத்திற்கு முன்னுரையாக யூதமதம் இருப்பது போலவே, உலகின் ஏனைய மதங்களும் இருக்கின்றன. (29) என்றும் கூறுகின்றனர். “ஒவ்வொரு நாடும் கலாசாரமும், மக்கள் குழுவும, தங்களுக்கென்று பிரத்தியேகமானதும் தனிப்பட்ட ரீதியானதுமான இரட்சிப்பின் சரித்திரத்தைக் கொண்டுள்ளன“ (30) என்று கூறும் இவர்கள், பிறமதங்களின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவம் இருப்பதாக கருதுகின்றனர் (31) ஆனால், உலக மதங்கள் ஒவ்வொன்றும் வித்தயாசமான தன்மையையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதனால் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. “சகல மதங்களும் அடிப்படையில் ஒரே விதமானது அல்ல. அவை ஆராயும் விடயங்கள், கேட்க்கும் கேள்விகளும் ஒரே மாதிரியானவை அல்ல“(32) எனவே, கிறிஸ்தவத்திற்கும் ஏனைய உலக மதங்களுக்கும் இடையில், மானிட இரட்சிப்போடு சம்பந்தப்பட்ட தொடர்புகள் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்ற ர்க்கமாகும் (33)

தேவனுடைய செயற்பாடுகள், இஸ்ரவேலுக்கும் கிறிஸ்தவத்திற்கும் அப்பாலும், முழு உலகத்திலும் நடைபெறுகின்றன என்பது உண்மை என்றாலும் (34) இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களில் மறைந்திருந்து செயற்படுகிறார் என்று வேதாகமத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. வேதாகமத்தைப் பொறுத்தவரை உலக மதங்கள் தேவனுடைய வெளிப்படுத்தலை மக்கள் நிராகரித்ததன் விளைவாக உருவானவைகளாகவே ள்ள. நாம் ஏற்கனவே பார்த்தபடி, தேவன் உலகிலுள்ள சகல மனிதர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தியுள்ள போதிலும் (35) வேதாகமம் இதைப் பற்றி கூறும்போது,  அவர்கள் தேவ வெளிப்படுத்தலை நிராகரித்து, தங்களின் அறிவுக்கு ஏற்ற விதத்தில் வழிபாட்டு முறைகளை உருவாக்கிக் கொண்டனர். தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.  21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், (ரோமர் 1:19-25). என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “புறஜாதி மதங்கள் தேவனுடைய வெளிப்படுத்தலை நிராகரித்ததன் விளைவாக இருப்பதாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன. (36) மிகவும் உயர்வான புறமதத் தத்துவங்களும் உண்மையான தேவனை அறியாதவைகளாகவே இருக்கின்றன. (37) இயேசுகிறிஸ்து எங்கும் இருப்பதாக வேதாகமம் அறிவித்துள்ளதுண்மை என்றாலும், அவர் தம்முடைய நாமத்தில், கூடுகின்ற மக்கள் மத்தியில் இருக்கிறாரே தவிர (மத். 18:20, 28:19) பிறமதங்களிலும அவற்றின் தெய்வச் சிலைகளிலும், அவற்றைப் பின்பற்றுபவர்களிலும்  இருக்கிறார் என்பது வேதாகம சத்தியத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது (38) மேலும் வேதாகமம் விக்கிர வழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதால் (யாத். 20:3-5, 1 யோவான் 5:21) (39) பிற மத தெய்வச் சிலைகளுக்குள் இயேசு கிறிஸ்து மறைந்திருக்கின்றார் என்றும், அச்சிலைகளுக்குள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்கின்றது என்றும் கூறுவது வேதாகமத்திற்கு முரணான ர் உபதேசமாகவெ உள்ளது. வேதாகமத்தைப் பொறுத்தவரை, பிறமதத் தெய்வச் சிலைகள் தேவனையோ, இயேசுகிறிஸ்துவையோ பிரதிநிதித்துவம் வகிப்பவைகள் அல்ல. (1 கொரி. 10:20) (40) எனவே, அவற்றில் இயேசுகிறிஸ்து இருக்கிறார். என்று கூறுவதும், பிறமதங்களின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவம் இருக்கின்றது என்று தர்க்கிப்பது பாரியதோர் தவறாகும்.

புராதன உலக மதங்களின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவம் இருக்கிறதுஎன்றும்இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார்என்றும் தர்க்கிப்பவர்கள்,சில வேத வசனங்களைத் தவறான விதத்தில் வியாக்கியானம் செய்வதன் மூலமே தங்களின் உபதேசத்தை உருவாக்கியுள்ளனர். பெரும்பாலானவர்கள் இவ்வேதவசனங்களின் சரியான அர்த்தத்தை அறியாதவர்களாக இருக்கி்னறமையால், (அல்லது அறிந்தும் அவற்றைத் தங்களது உபதேசத்திற்கு ஏற்றவிதத்தில் மாற்றியுள்ளமையால்) சகல மதங்களிலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தல்களும் அவரது  இரட்சிப்பின் செயலும் இருப்பதாக நம்புகின்றனர். எனவே, இவ்வேத வசனங்களின் சரியான அர்தத்தை அறிந்து கொண்டால் மட்டுமே மனுக்குலத்ததிற்கான தேவனுடைய வெளிப்படுத்தலைப் பற்றி வேதாகமம் அறியத் தரும் சத்தியத்தைச் சரியான விதத்தில் புரிந்து கொள்ள முடியும். எனவே, பிறமதங்களிலும் தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல் இருப்பதாகத் தர்க்கிப்பவர்கள் உபயோகிக்கும் வேத வசனங்களை ஆராயந்து பார்ப்போம்.

(வளரும்)
இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கு அழுத்துங்கள். 

(இவ்வாக்கமானது Dr. வசந்தகுமார் எழுதிய மனிதகுலத்துக்கான மகத்தான வெளிப்படுத்தல்கள் : 19 சங்கீதத்திற்கான விளக்கவுரை“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

Footnote and References
(19) S.Chellappa, Is Christianity Necessary? p 118

(20) J.Padinjarekara, Gospel for India in Indian Cups p. 13


(21) பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் தேவவெளிப்படுத்தல்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே மக்களுக்கு கொடுக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டுக் கால தீர்க்கதரிசிகளினூடாகப் பேசியவர் இயேசுகிறிஸ்துவே என்பதே 1 பேதுரு 1:11 அறியத் தருகிறது. இவ்வசனத்தில் தங்களிலுள்ள (தீர்க்கதரிசிகள் 1:10 ஒப்பிடுக) “கிறிஸ்துவின் ஆவியானவர்எனும் சொற்பிரயோகம், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகளில் வாசம் செய்தவர் இயேசுகிறிஸ்துவே என்பதை அறியத் தருகிறது. இவ்வசனத்தில்கிறிஸ்துவின் ஆவியானவர்எனும் சொற்பிரயோகம் பரிசுத்த ஆவியானவரையே குறிக்கின்றது என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்ற போதிலு்ம் (W.Gruderm, 1 Peter : Tyndale New Testament Commentaries, p 69 ; E.A. Blum, 1 & 2 Peter : The Expositor's Bible Commentary Volume 12, p223) இது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும் விபரம் அல்ல. “இது கிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பு அவர் இருந்த நிலையைக் குறிக்கும் விபரணமாகவே உள்ளது. (N.Hillyer 1&2 Peter, Jude : New International Biblical Commentary, p. 42) எனவே, இயேசுகிறிஸ்துவே இவ்வசனத்தில் தெய்வீக ஆவியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். (J.N. SD. Kelly, 1 Peter & Jude : Black's New Testament Commentaries, p 60) என்பதை மறுப்பதற்கில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு வனாந்திரப் பிரயாணத்தில் சென்ற இயேசுகிறிஸ்துவே (1 கொரி. 10:4) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்களுக்குத் தேவனாகத் தரிசனம் கொடுத்தவர் என்பதை யோவான் 12:37-41) அறியத் தருகிறது. பல சந்தர்ப்பங்களில்கர்த்தருடைய தூதுவனானவர்என்னும் பெயரில் பழைய ஏற்பாட்டில் மக்களுக்கு தரிசனம் அளித்தவர் இயேசுகிறிஸ்துவே. (இதைப் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு ஆசிரியரின்யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலில் 141 முதல் 143 வரையிலான பக்கங்களைப் பார்க்கவும்) “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) தேவன் மனிதரில் ஒருவரும் கண்டிராதவராக, காணக்சுடாதவருமாய் இருக்கின்றமையால் (1 தீமோ. 6:16) இயேசுகிறிஸ்து அவரை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதனாலேயே இயேசுகிறிஸ்துவே பழைய ஏற்பாட்டுக்காலத்திலும், தீர்க்கதரிசிகளில் வாசமாயிருந்து அவர்களுக்கூடாகத் தேவ வெளிப்படுத்தல்களைக் கொடுத்துள்ளார். யோவான் 12ம் அதிகாரத்தில் 36 முதல் 41 வரையான வசனங்களை வாசிக்கும்போது, ஏசாயா 6ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசிக்குத் தரிசனம் கொடுத்தவர் இயேசுகிறிஸ்துவே என்பதை அறிந்திடலாம்)

(22) Cited in M. Goldsmith, What About Other Faiths? P. 121

(23) R. Panikkar, The Unknown Christ of Hinduism, p 137

(24)  R. Panikkar, The Unknown Christ of Hinduism, p 54

(25) H. Kung, 'The World Religions in God’s Plan of Salvation; in Christian Revelation and World Religions in God's Plan of Salvations; in Christian Revelation and World Religions pp 52-53

(26) K. Rahner, 'Christianity and Non-Christian Religions' in Christianity and other Religions, pp 75-77 ஆங்கிலத்தில் இத்தகைய கிறிஸ்தவர்களுக்கு 'Anonymous Christians' என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் என்று மக்களால் அறியப்படாதவர்களாகவே இருக்கின்றனர் எனும் அர்த்தத்திலேயே இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

(27) S.Sumithra ;Conversion : To Cosmic Christ? in Evangelical Review of Theology. p 389

(28) D.A. Carson, The Gagging of God p. 328

(29) C.E. Braaten, ;The Uniqueness and University of Jesus Christ' in Mission Trends 5: Faith to Faith p 87

(30) M.Nazir-Ali, 'Culture, Conversation and Conversion : Some Priorities in Contemporary Mission' in AD 2000 and Beyond p 36

(31) E.L. Allen, Christianity Among Religions, p 70

(32) L. Newbigin, The Open Secret pp 139-140

(33) கிறிஸ்தவத்தைப் போலவே, ஏனைய மதங்களிலும் ஒழுக்கம் சம்பந்தமான அறநெறிக் கோட்பாடுகள் உள்ள போதிலும் மானிட இரட்சிப்பைப் பற்றிய கிறிஸ்தவப் போதனைக்கு இணைய போதனைகள் உலகில் வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லை. மானிட பாவத்திற்கான பிராய்சித்தப் பலி தெய்வத்தினால் செருத்தப்படுவதைப் பற்றி வேறுமதங்களிலும் இருப்பதாகச் சிலர் கருதுகின்ற போதிலும் , இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பலிக்கு இணையான பலியைப் பற்றி உலகின் வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லை. (M.S. Vasnthakumar 'Expounding Christ from Non-Christian Texts; in Dharma Deepika, p 5-20)

(34) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் புறஜாதி ராட்சியங்களுக்கும் வெற்றியைக் கொடுத்துள்ளார். (2 ராஜா 5:1) அவர் தமமுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் பறஜாதி அரசர்களையும் உபயோகித்துள்ளார் (ஏசா 44:28, 45:1-7) புறஜாதியருக்கு நாடுகளைக் கொடுத்துள்ளார். (உபா. 2:5, 2:19, 2:21-22) எனினும், தேவன் அவர்களுக்கு தமது இரட்சிப்பின் செய்தியை அருளியுள்ளதாக வேதாகமம் கூறவில்லை. தேவன் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டே அக்காலத்தில் அவர் புறஜாதியாரை இரட்சிக்கிறவராக இருந்தனர். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் மக்களே ஜாதிகளுக்கு ஒளியாக, மறற ஜாதியினர் அனைவரும் தேவனண்டை வரும் ஊடகமாகச் செயற்பட்டனர். இதனால்தான் மக்களுக்குத் தேவன் தரிசனங்களைக் கொடுத்த போதிலும், தேவனுடைய ஜனங்களே அவற்றுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தனர். (தானி 3:3-4, ஆதி. 41)

(35) முதலாம் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

(36) R.C. Sproul, Reason to Believe, p 55

(37) D.L. Bock, 'Athenians Who Have Never Heard' in Through No Fault of Their Own? 118 1 கொரி். 1:18-25 ல் சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 19 அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. 20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?  21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. 22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். 23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். 24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

(38) புத்தர், காந்தி, லெனின், கார்ல் மார்க்ஸ் போன்ற மனிதர்களிலும் இயேசுகிறிஸ்துவே இருந்து செயல்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர் இவர்களை இயேசுகிறிஸ்துவின் அவதாரங்களாகக் கருதுபவர்களும் இருக்கின்றனர். (Cited in Goldsmith What About Other Faiths? p. 121) எனினும் இத்தகைய கருத்துக்கள் வேத ஆதாரம் அற்ற தவறான உபதேசங்களாகும். இயேசுகிறிஸ்து இவர்களுக்கு ஊடாகச் செயற்பட்டிருந்தால், இவர்கள் அனைவரும் இயேசுகிறிஸ்துவைத் தங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், இவர்களில் எவரும் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதமையினால் இவர்களில் இயேசுகிறிஸ்து இருந்தார் என்று எவ்விதத்திலும் கூற முடியாது.

(39) “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிற வைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; (யாத். 20:3-5) என்று கூறும் வேதாகமம் பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.(1 யோவான் 5:21) என்று அறிவுறுத்துகிறது.

(40) 1 கொரிந்தியர் 10:20 ல்அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உபாகமம் 32:17 இலும் சங்கீதம் 106:37 இலும் பிறமதத் தெய்வச் சிலைகளைப் பற்றிய இவ்வுண்மையை அறியத்தருகின்றது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் சங்கீதம் 96:5 இல்விக்கரகங்கள்என்பதற்குப் பதிலாக பேய்கள் என்ற பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது. “இஸ்ரவேல் மக்டகள் ஒரு தெய்வநம்பிக்கையுடைய மதத்தினராக இருந்தமையால், பிறமதங்களின் தெய்வச் சிலைகளை, அவர்கள் தெய்வங்களைப் பிரதிநிதித்துவம் வகிப்பவைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை “ (G.D. Fee, 1 Corinthians : The New International Commentary on the Testament, p. 472) அவைகள் தீய ஆவியைப் பிரதிநிதித்துவம் வகிப்பவைகளாகவே இருந்தன. (L. Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentaries, pp 144, 145)














 


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment