- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 22 November 2011

வேதாகமத்திற்கு வெளியில் ...(2) எபிரேயர் 1:1-2, யோவான் 1:9, யாத்திராகமம் 3:2-4, மல்கியா 1:11 விளக்கங்கள்


இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுததுங்கள்

(அ) பிதாக்களுடன் பேசிய தேவன் (எபிரேயர் 1:1-2)



“இயேசுகிறிஸ்து பிற மதங்களில் வேறு பெயர்களில் மறைந்திருக்கிறார்“ எனும் உபதேசம் வேதவசனங்களைத் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தவறான போதனையாகும்.(41) ஏனென்றால் எபிரேயர் 1:1 ஐ ஆதாரமாகக் கொண்டு இவர்கள் ஏனைய மத நூல்களும் இயேசுகிறிஸ்துவினாலே அருளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இவர்கள் எபிரேயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை கருத்திற் கொள்ளாமல், “பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் பிற மத பக்தர்களுடனும் பேசியுள்ளார்“ என்று வாதிடுகின்றனர். (42) இஸ்ரவேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்த தேவனே, பிறமத மக்களுடைய வாழ்விலும் செயல்பட்டு வந்தார் என்பதே இவர்களின் தர்க்கமாகும். (43)

நாம் ஏற்கனவே பார்த்தபடி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் வித்தியாசமான முறைகளில் மனிதர்களோடு தொடர்பு கொண்டு தம்மை பற்றி இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தார் என்பதே எபிரேயர் 1:1 நமக்கு அறியத்தரும் விடயமாகும். (44) இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எபிரேய நிருப ஆசிரியர் “நம்முடைய பிதாக்கள்“ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நிருபம் எபிரேயர்களான யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளது. (45) எனவே, அவர்களைப் பொறுத்தவரை “நம்முடைய பிதாக்கள் பழைய ஏற்பாட்டு பக்தர்களாவார்(46) எனவே, தேவன் பழைய ஏற்பாட்டு பக்தர்களோடு பேசியுள்ளதைப் பற்றி இவ்வசனததில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, உலக மதங்கள் அனைத்திலும் தேவ வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படவில்லை.

(ஆ) எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளி (யோவான் 1:9)

உலகின் சகல மதத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தங்களின் உபதேசங்களை எழுதினார்கள் என்னும் கருத்தை நிரூபிப்பதற்காக சிலவேத ஆராய்ச்சியாளர்கள் யோவான் 1:9 ஐயும் உபயோகிக்கின்றனர். இயேசுகிறிஸ்துவைப் பற்றி எழுதும் யோவான் இவ்வசனத்தில், உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.(யோவான் 1:9) என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்தை விளக்கும் சில வேத ஆராய்ச்சியார்கள், “ஏசாயா, பிளேட்டோ, புத்தர், கான்ஃபூசியஸ் போன்றவர்களும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தங்களின் போதனைகளை உலகிற்கு அறிவித்துள்ளனர்“ என்று கூறுகின்றனர் (47) உலகத்தில் பிறக்கின்ற சகல மனிதருக்கும் இயேசுகிறிஸ்து ஆன்மீக ஒளி கொடுக்கிறார் என்றே இவ்வசனம் கூறுவதாக இவர்கள் கருதுகின்றனர். (48) எனினும் இயேசுகிறிஸ்துவின் இச்செயல் பிற மதத் தத்துவங்களும் உபதேசங்களும் உருவாக்குவற்குக் காரணமாக இருந்ததாக யோவான் கூறவில்லை. (49) இயேசுகிறிஸ்து மக்களைப் பிரகாசிக்கப்பண்ணுவது, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுக்கு உணர்த்தும் செயலாகவே இருப்பதை யோவானின் சுவிசேஷம் அறியத்தருகிறது. (50)

ஒளியாகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்திருக்கின்றார். அவ்வொளியில் தங்கள் ஆவிக்குரிய நிலையைக் கண்டு, மனந்திரும்பி அவரை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படுகின்றார்கள். மற்றவர்கள் அவ்வொளியில் தங்கள் பாவ செயல்கள் வெளிப்படாமலிருப்பதற்காக அவரிடம் வராமலிருக்கிறார்கள் என்னும் உண்மையை யோவான் 3:18-21 அறியத்தருவதனால் (51) மக்களைப் பிரகாசிக்கப்பண்ணும் இயேசு கிறிஸ்துவின் செயலை, சகல மனிதரும் அவரால் ஆவிக்குரியபிரகாரம் நன்மையடையும் செயலாக விளக்க முடியாது.(52) மனிதர்கள் அனைவரும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக யோவான் தன்னுடைய சுவிஷேசத்தை எழுதினாலும் (யோவான் 20:31) (53) எல்லோரும் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார் (யோவான் 1:11)(54) எனவே “இயேசுகிறிஸ்துவின் ஒளி சகல மனிதர்களுக்கு கிடைத்தாலும் அது அவர்கள் அவ்வொளியை என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை இரு பகுதியாகப் பிரிக்கின்றது.(55) இயேசுகிறிஸ்துவை விசவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர். நிராகரிப்பவர்கள் ஆக்கினைக்குட்படுகின்றனர். (யோவான் 3:36)(56) எனவே, சகல மதத்திலுள்ளவர்களுக்கும் இயேசுகிறிஸ்துவினால் ஆன்மீக ஒளி கிடைப்பதாக யோவான் 1:9 ஐ விளக்க முடியாது. சகல மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒளியாக இயேசுகிறிஸ்து உள்ள போதிலும், அவ்வொளியில் தங்களின் உண்மையான பாவநிலைமையைக் கண்டு, அவரிடம் வருவார்கள் மட்டுமே அவரால் ஆவிக்குரிய பிரகாரம் நன்மையடைகிறவர்களாக இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. 

(இ) முட்செடியின் நடுவில் தரிசனமளித்தவர் (யாத்திராகமம் 3:2-4)

பிறமதங்களிலும், அவற்றின் தெயவச் சிலைகளுக்குள்ளும் இயேசுகிறிஸ்து இருக்கிறார் என்று தர்க்கிப்பவர்கள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக, தேவன் மோசேக்கு முட்செடியின் நடுவில தரிசனம் கொடுத்த சம்பவத்தை கூட்டிக்காட்டுவது வழமை. “தேவன் சகல இடங்களிலும் இருக்கின்றார் என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் மோசேக்கு முட்செடியில் தரிசனம் அளித்தார்“ என்று கூறும் இவர்கள், “தேவனுடைய பிரசன்னம் முட்செடியில் இருந்தது போலவே, இயேசுகிறிஸ்து சகல மதங்களிலும் கலாசாரத்திலும் இருக்கிறார்“ என்று தர்க்கிக்கின்றனர். (57) தேவன் முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்கு தரிசனமளித்தது உண்மை என்றாலும் (யாத். 3:2-4) அந்த “முட்செடிக்குள் தேவன் இருந்தார்“ என்று வேதாகமம் கூறவில்லை. அவர் “முட்செடிக்கு நடுவில்“ அக்கினி ஜூவாலையாகத் தரிசனமளித்தாகவே யாத்திராகமம் 3:2-4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேவன் ஓரிடத்தில் மக்களுக்குத் தரிசனம் கொடுத்தார் என்பதற்காக, பிறமதத்தவரின் சிலைகளுக்கள் எல்லாம் அவர் இருக்கின்றார் என்று கூறமுடியாது. எனினும், சில புதிய மொழிபெயர்ப்புக்களில், உபாகமம் 33:16 இல் “தேவன் முட்செடியில் வாழ்ந்ததாகக்“ குறிப்பிட்ப்பட்டுள்ளது. நாம் உபயோகிக்கும் வேதாகமத்தில் இவ்வாக்கியம் “முட்செடியில் எழுந்தருளினவர்“ என்று உள்ளது. (58) புதிய மொழிபெயர்ப்புகளிலுள்ள “வாழ்ந்தார்“ என்னும் பதம் மூலமொழியில் “நிரந்தரமாக இருந்ததைக்“ குறிக்கும் விதத்தில் அல்ல. அவர் இருந்ததன் நிச்சியத்தை அறியத்தரும் விதத்திலேயே உள்ளது. (59) எனினும் யாத்திரகாமம் 3:2-4 இல் குறிப்பிடப்பட்டுள்ளபோல தேவன் “முட்செடிக்க நடுவில்“ மோசேக்கு தரிசனமானார் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் முட்செடிக்குள் நிரந்தரமாக இருப்பதாக இவ்வசனம் கூறவில்லை. எனவே, இவ்வசனசத்தை ஆதாரமாகக் கொண்டு, தேவன், பிறமதச் சிலைகளுக்குள் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. (60)


(ஈ) எல்லா இடங்களிலும் என் நாமத்திற்கு தூபமும் காணிக்கையையும் செலுத்தப்படும் (மல்கியா 1:11)


பிறமத வழிபாடுகள் தேவனுக்கே ஏறெடுக்கப்படுகின்றன என்னும் தங்களின் தவறான கருத்தை நிரூபிப்பதற்காக சில வேதஆராய்ச்சியாளர்கள் மல்கியா 1:11ஐ உபயோகிக்கின்றனர். இவ்வசனத்தில் சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு. “உண்மையான உள்ளத்தோடு செய்யப்படுகின்ற ஆராதனை எந்த மதத்தில் செய்யப்ட்டாலும் அது தேவனுக்கே செய்யப்படுகின்றது. (62) இவர்கள் இவ்வசனத்திலுள்ள “மகத்துவமாயிருக்கும்“ “செலுத்தப்படும்“ என்னும் சொற்களை நிகழ்காலத்தில் உள்ளவைகளாக விளக்கி, மல்கியாவின் காலத்திலேயே வழிபாடுகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைப் பற்றியே இவ்வசனம் கூறுவதாகத் தர்க்கிக்கின்றனர். (63) ஆனால் புறஜாதியாருடைய வழிபாடுகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதற்கு வேதாகமத்தில் இதுவித ஆதாரங்களும் இல்லை. மல்கியாவின் புத்தகத்திலும் புறஜாதியாருடைய வழிபாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. (மல். 1:5, 2:13-16) மேலும் இவர்கள் கூறுகின்ற விதமாக, இவ்வசனத்தின் வினைச்சொற்கள் நிகழ்காலத்தில் இல்லை. உண்மையில், “எதிர்காலத்தில் சகல ஜாதியினரும் தேவனை சேவிப்பதைப் பற்றியே தேவன் இவ்வசனத்தில் முன்னறிவித்துள்ளார்.“(65) எனினும் இது புறஜாதி மக்கள் தங்களுடைய மதங்களில் செய்யும் வழிபாட்டை அல்ல, அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டு அவரை மகிமைப்படுத்தும் ஆராதனையைப் பற்றிய முன்னறிப்பிப்பாகவே உள்ளது. 

(வளரும்)

Footnote and References
(41) C. Wright 'The Unique Christ in the Plurality of Religions' in The Unique Christ in our Pluralist World, p 35

(42) R. Panikkar, The Unknown Christ of Hindusim, p 137

(43). K. Abraham, Prajapathi : The Cosmic Christ, p.30

(44) பக்கங்கள் 29-32 இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

(45) இந்நிருபத்தில் பழைய ஏற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிக அளவில் இருப்பதனால், இது அக்காலத்தில் பழைய ஏற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. “நிருபத்தின் விடயங்கள், இதன் முதல் வாசகர்கள் அக்கால யூத சிந்தனைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் நன்கு பரிச்சயமானவர்களாக இருந்துள்ளதை அறியத்தருகின்றது. (G.H. Guthrie, Hebrews: The NIV Applications Commentary, p. 19) புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் எபிரேய நிருபத்திலேயே அதிகளவு பழைய ஏற்பாட்டு வசனங்களும் கருத்துக்களும் உள்ளன. (G.H. Guthrie, 'The Old Testament in Hebrews' in Dictionary of the Later New Testament Quotations in Hebrews' in New Testament Studies, pp. 363-379) “எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம்“ எனும் தலைப்பு இந்நிருபத்திற்கு முதற்தடவையாக இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்டாலும், இது யூதக்கிறிஸதவர்களுக்கே எழுதப்பட்டது என்னும் ஆதிச் சபைப் பிதாக்களின் கருத்து சரியானதாகவே உள்ளது. (D.A. Hanger, Hebrews : New International Biblical Commentary, pp. 1-2)

(46) இவ்வசனத்தில் “பிதாக்கள்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் புதிய ஏற்பாட்டில் “முதற்பிதாக்களையே“ குறித்தாலும் (யோவான் 7:22, ரோ. 9:5) இவ்வசனத்தில் பழைய ஏற்பாட்டு பக்கதர்களைக் குறிப்பிடும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (L. Morris, Hebrews : The Expositor's Bible Commentary Volume 12, p. 12) புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள், உலகிலுள்ள மதங்களின் பக்தர்களை அல்ல, தங்களது மூதாதையார்களான இஸ்ரவேல் மக்களையே தங்களுடைய பிதாக்களாகக் கருதினார்கள். 

(47) W. Temple, Readings in St. John's Gospel Volume 1, p.10

(48) Ibid. p 10 இரண்டுவிதமான முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் “உலகத்தில் வந்து“ என்னும் சொற்பிரயோகம், “உலகத்தில் வருகி்ன்ற மனிதர்களைக்“ குறிக்கின்ற விதத்திலும், “உலகத்திற்கு மனிதராக வந்த இயேசுகிறிஸ்துவைக்“ குறிக்கின்ற விதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை ஆங்கில வேதாகமங்களில் நாம் அவதானி்கலாம். எனினும், ஒளியாகிய இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதைப் பற்றியே யோவான் இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதி அறியத் தருகிறது. (D.A. Carson, John : The Pillar New Testament Commentaries, pp. 121-122) 'இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வந்தமையால், சத்தியத்தின் வெளிச்சம் சகல மனிதருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது“ என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். (M.C Tenney, John : The Expositor's Bible Commentary Vol 9, p 31)

(49) இது சகல மனிதருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொதுவான வெளிப்படுத்தலைப் பற்றிய விபரணம் என்பது சில தேவஆராய்ச்சியாளர்களினது கருத்தாய் உள்ளது. (L.  Morris, John : New International Commentary on the New testament, p. 95; J. Calvin, St. John 1-10 : Calvin's New Testament Commentaries, p. 15)

(50) மூலமொழியில் உபயோகிக்கப்படடுள்ள “ஃபோத்தீஸ்ஸாய்“ (photizei) எனும் கிரேக்கப் பதம் “வெளிச்சம் கொடுத்தல்“ அல்லது “தென்பட அல்லது புலப்பட வைத்தல்“ என்னும் அர்த்தங்களையே கொண்டுள்ளது. எனவே, மானிட அறிவுக்கு ஒளியூட்டும் செயலாக யோவான் 1:9 ஐ விளக்க முடியாது. (D.A. Carson, John : The Pillar New Testament Commentary, p. 124; E.A. Blum : John : The Bible Knowledge Commentary New Testament, p 272)

(51) யோவான் 3:18-21  18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்' என்று குறிப்பிடப்பட்டள்ளது.


(52) G.M. Burge, John : The NIV Application Commentary, p 58

(53) யோவான் 20:30 இல் “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.“ என்று குறிப்பிட்டுள்ளார்

(54) யோவான் தன்னுடைய சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்திலேயே, அவர் (இயேசு) தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை“ என்பதை அறியத் தந்துள்ளார். (யோவான். 1:11) இயேசுகிறிஸ்து யூதவம்சத்தில் இவ்வலகத்திற்கு வந்தமையால் யூத ஜனங்களே இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்துவின் சொந்த ஜனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

(55) G.M. Burge, John : The NIV Application Commentary, p 58

(56) யோவான் 3:36 இல் “ குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் “ என்னும் உண்மையை அறியத்தருகிறது. இதனால்தான் 1 யோவான் 5:12 இல் “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

(57) J. Taylor, 'Primal Vision' cited in M. Goldsmith What About other Faiths, p. 125

(58) NIV மொழிபெயர்ப்பில்  இவ்வாக்கியம் 'dwelt in the bush; என்று இருப்பதனால், இதனை அடிப்படையாகக் கொண்ட புதிய இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வசனம் “எரிகின்ற புதரில் வாழ்ந்தார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோனஹன் மொழிபெயர்ப்பில் “முட்செடியில் தங்கியவர்“ என்றும், திருவிவிலியத்தில் “முற்புதரில் வீற்றிருந்தவர்“ என்றும் இவ்வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(59) E.S. Kalland, Deuteronomy: The Expositor's Bible Commentary Vol 3, p 227. இப்பதமே வனாந்திரப்பிரயாணத்தின்போது, இஸ்ரவேல் மக்கள் தங்கியிருந்த இடங்களில் அவர்களோடு சென்ற மேகஸ்தம்பம் தரித்து நின்றதைக் குறிக்கவும் உபயோகிக்கப்பட்டுள்ளது. (எண். 9:17-18) அச் சந்தர்ப்பங்களில் மேகஸ்தம்பம் நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாக குறுகிய காலத்திற்குத் தங்கியிருந்ததையே இப்பதம் குறிக்கின்றது. (Ibid, p227) எனவே, தேவன் நிரந்தரமாக முட்செடியில் தங்கியிருந்தார் என்று இவ்வசனத்தை மொழிபெயர்ப்பது தவறாகும். 

(60) அக்காலத்தில் உயிர்ந்தவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அவருக்கு முன்பாகத் தாழ்ந்தவர் பாதரட்சைகளைக் கழற்றிப் போடும் பழக்கம் இருந்ததினாலேயே, பாதரட்சைகளைக் கழற்றிப் போடும் பழக்கம் இருந்தமையினாலேயே, தேவன் மோசேயிடம் பாதரட்சைகளைக் கழற்றும்படி யாத்திராகமம் 3:5 இல் கூறினார். (F.B. Huey, Exodus : Bible Study Commentary, p28) மேலும், தேவன் அச்சமயம் முட்செடியின் நடுவில் தரிசனமளித்தமையினாலேயே அவ்விடம் பரிசுத்த பூமி என்று சொல்லப்பட்டதே தவிர அது நிரந்தர பரிசுத்த பூமியாக இருக்கவில்லை. (R.A. Cole, Exodus : Tyndate Old Testament Commentaries, p 65) மேலும், அப்பிரதேசத்தின் உஷ்ணம் காரணமாக செடிகள் தீப்பிற்றி எரிவது சாதாரணமான சம்பவமானாலும்ஈ தேவன் மோசேக்குத் தரிசனமளித்தபோது, அக்கினி முட்செடியை எரிக்காதது அற்புதமான செயலாகவே உள்ளது. (H.L. Ellison, Exodus : The Daily Study Bible, p 16)

(61) W.Neil, Malachi : The Interpreters Dictionary of the Bible Volume 3, p 232

(62) ரோமன் கத்தோலிக்க வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தைத் தங்களின் ஆலயத்தில் நடைபெறும் பூஜையைப் பற்றிய தீர்க்கதரிசனமானகக் கருதுகின்றனர். (J. Packard, Malachi : Lange's Commentary on the Minor Prophets, p 4) இது, மேசிய யுகத்தில் செலுத்தப்படும் சடங்காச்சாரப் பலியைப் பற்றிய முன்னறிப்பு என்பதே இவர்களது விளக்கமாகும். (E.F. Sutcliffe, 'Malachy's Prophecy of the Eucharistic Sacrifice' in Irish Ecclesiastical Record pp. 502-513) சிதறிப்போயிருந்த யூதர்களின் வழிபாட்டைப் பற்றிய முன்னறிவிப்பாகவும் இவ்வசனம் சிலரால் விளக்கப்படுகின்றது. நியாயப்பிரமாணத்தை படிப்பதே, இவ்வசனங்களில் தூபமும் காணிக்கையும் செலுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே இவர்களின் கருத்தாகும். (J.Swetnam, 'Malachi 1:11 : An Interpretation' in Catholic Biblical Quarterly. pp 200-209) சில வேத ஆராய்ச்சியாளர்கள், யூதர்களுடைய மாய்மாலான வழிபாட்டை விட புறஜாதியாருடைய வழிபாடுகள் தம்முடைய பார்வையில் சுத்தமானவைகளாக இருப்பதாகவே இவ்வசனத்தில் தேவன் குறிப்பிட்டுள்ளதாககக் கருதுகின்றனர். அக்கால யூதர்களுடைய வழிபாட்டைக் கண்டிப்பதற்காகவே தேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதே இவர்கள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும். (J. Blau The Missionary Nature of the Church, 142;R.L.Smith, Micah-Malachi: Word Biblical Commentary Volume 32, pp314-315) ஆனால் இவ்விளக்கங்கள் திருப்பதிகரமானதாக இல்லை.

(63) Evangelical Alliance (U.K) 'The Salvation of Gentiles : Implications for Other Faiths' i Evangelical Review of Theology p 39

(64) இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே, தேவனை வழிபடமுடியும் என்பதே தேவதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் ஒரேயொரு மத்தியஸ்தராக இயேசுகிறிஸ்துவே இருக்கிறார். (1 தீமோ. 2:5) உண்மையில் இயேசுகிறிஸ்துவினுடைய பலியே மனிதர்கள் தேவனிடம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளமையினால் (எபே. 2:18, எபி. 10:19-22) இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே மனிதர்களினால் தேவனை வழிபட முடியும். 

(65) J. Baldwin, Malachi : Tyndale Old Testament Commentaries, p. 230

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment