- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 17 September 2013

திருமறையை விளக்கும் முறை-அத்தியாயம் 4-சூழ்நிலையும் நோக்கமும்(1)

விதி 3 ஆசிரியர் நூலை எழுதிய சூழ்நிலையையும் நோக்கத்தையும் ஆராய்ந்தறிந்து அதற்கேற்ப வேதத்தை விளக்க வேண்டும்

அதாவது வேதாகமத்தின் ஒரு நூலை அல்லது நிருபத்தை எழுதியவர் யார், அவர், யாருக்காக, எப்படிப்பட் சூழ்நிலையில் எந்த நோக்கத்துடன் அதனை எழுதினார் என்ற விபரங்களை நாம் ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராய்ந்தறியும் பொழுதுதான் நாம் விளக்கஞ் செய்யும் வசனத்தின் முழுக்கருத்தையும் ஆழ்ந்த கருத்தையும் அறிய முடியும். ஆனால் வேதாகமத்தில் உள்ள ஒரு சில நூல்களைப் பற்றி நாம் எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் இத்தகைய வினாக்கள் அனைத்திற்கும் விடை காண முடியாது. எடுத்துக்காட்டாக எபிரேயருக்கு எழுதின திருமுகம் யாரால் எழுதப்பட்டது என்று திட்டமாய் கூறமுடியவில்லை. இது யாருக்காக எழுதப்பட்டது என்பதும் தெரியவில்லை. பாலஸ்தீனாவில் வாழ்ந்த எபிரயேக் கிறிஸ்தவர்களுக்கா அல்லது பிறநாடுகளில் வாழ்ந்த எபிரேயக் கிறிஸ்தவர்களுக்காகவா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் இந்நிருபம் எழுதக் காரணமாயிருந்தவர்களின் சூழ்நிலைகள், சோதனைகள் இவற்றை நூலின் வாயிலாக ஊகித்தறிய முடிகிறது. 


1. நூலை எழுதியோரும் எழுதக் காரணமாயிருந்தோரும்

(அ) பவுல் அடியார் எழுதிய நிருபங்கள்

1& 2 தெசலோனிக்கேயர் : பவுல் முதன் முதலில் எழுதிய கடிதங்கள்  இவை இரண்டாம் முறையாகப் பயணத்தை மேற்கொண்டபோது கொரிந்து பட்டணத்தில் எழுதப்பட்டு கி.பி. 50 ஆம் ஆண்டில் தெசலோனிக்கே சபைக்கு அனுப்பப்பட்டவை. 

1 & 2 கொரிந்தியர் : பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழியப் பயணம் செய்தபோது முதல் நிருபத்தை எபேசு பட்டணத்திலிருந்தும் (கி.பி. 56ஆம் ஆண்டு) இரண்டாம் நிருபத்தை பிலிப்பி பட்டணத்திலிருந்தும் (கி.பி. 56 அல்லது 57) எழுதினார். 

கலாத்தியருக்கும் ரோமருக்கும் எழுதிய நிருபங்கள். பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழிய பயணம் செய்தபோது கொரிந்து பட்டணத்தில் கி.பி. 57 ஆம் ஆண்டு எழுதினார். கலாத்தியருக்குச் சுருக்கமாக எழுதிய செய்தி ரோமருக்குச் சற்று விரிவாக எழுதப்பட்டது. 

சிறைகூட நிருபங்கள் :
எபேசியருக்கு, கொலேசேயருக்கு, பிலிப்பியருக்கு எழுதிய நிருபங்கள் பவுல் ரோமாபுரி சிறைகூடத்தில் இருந்தபோது (கி.பி 61-63) எழுதப்பட்டவை. 

கலாத்தியருக்கு எழுதியவற்றைப் பவுல் முறைப்படுத்தி விரிவாய் ரோமருக்கு எழுதிய வண்ணம் கொலோசேயருக்கு எழுதியவற்றைச் சற்று விரிவாக எபேசியருக்கு எழுதலானார். 

பிலேமோன் கொலோசே பட்டணத்துச் சபையைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் கொலோசெயருக்கு எழுதிய நிருபமும் பிலமோனுக்கு எழுதிய நிருபமும் பிலமோனின் அடிமை ஒநேசிமு எனபவன் மூலம் அனுப்பட்டன. (கொலே. 4:9)

போதகருக்கு எழுதிய நிருபங்கள். (Pastoral Epistles)
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதமும் தீத்துவுக்கு எழுதிய கடிதமும் பவுலின் முதல் சிறையிருப்புக்கும் இரண்டாம் சிறையிருப்புக்கும் இடையே (கி.பி. 65) எழுதப்பட்டன.


(ஆ) நான்கு அருட்செய்தி நூல்கள்

மத்தேயு – பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குள்ள தொடர்பைக் காட்டும் நோக்கத்துடன் யூதர்களுக்கென எழுதப்பட்டது. மலைப்பிரசங்கம் (5-7 அதிகாரங்கள்) போன்ற நீண்ட அருள் உரைகள் நிறைய உள்ளன. 

மாற்கு – இயேசுவின் அற்புத செயல்களை விபரித்துக் கூறும் நோக்கத்துடன் ரோமருக்கென எழுதப்பட்டது. 

லூக்கா – இயேசுவின் உவமைகளை அதிகமாக்க் கூறி கனம்மிக்க தெயோப்பிலு என்பவருக்காகவும் கிரேக்க இனத்திற்காகவும் எழுதப்பட்டது. முதல் மூன்று அருட்செய்தி நூல்களிலும் பொருள் ஒற்றுமை அதிகமுண்டு. 

யோவான் – இதற்கும் முதல் மூன்று அருட்செய்தி நூல்களுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. இந்நூலில் உவமைகளே இடம்பெறவில்லை. பேரடையாளங்கள்(Great Signs) எனப்படும் எட்டு அற்புதங்களும் அருளுரையும் உண்டு. இது திருச்சபைக்கென்று எழுப்பட்டது. 

மத்தேயு இயேசுவை அரசராக வர்ணிக்கின்றார். மாற்கு இயேசுவை உத்தம பணியாளராகக் காட்டுகிறார். லூக்கா இயேசுவை சிறந்த மனிதராகக் காட்டுகின்றார். யோவான் இயேசுவை ஒரே பேறான தேவகுமாரனாகக் காட்டுகின்றார்


(இ) சங்கீதங்கள்

சில சங்கீதங்கள் எழுதப்பட்ட சூழ்நிலை அவற்றின் தொடக்கத்தில் கூறப்பட்டிருக்கிறன. சங்கீதங்கள் 3,18,34,51,52,54,57,142 ஐ பார்க்கவும். 90ம் சங்கீதம் மோசேயின் மூலம் இயற்றப்பட்டது. திருவிழாவிற்கெனப் பயணம் செய்யும் இஸ்ரவேல் மக்கள் பாடிய பாடல்கள், மலைகளிடையே கட்டப்பட்ட எருசலேமிற்குச் செல்லும்போது இப்புனித நடை பாடல்களைப் பாடிக் கொண்டே ஏறிச் செல்வது மக்கள் வழக்கம். 


2. நூலை எழுதிய நோக்கம் 

(அ) நீதி மொழிகளின் நோக்கம்

“இவைகளால் ஞானம், போதகம், புத்திமதி விவேகம், நீதி, நியாயம், நிதானம், என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். நீதி. 1:2,3

'உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி ….22:19

சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், ஆலோசனையையும் ஞானத்தையும்பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 22:20,21


(ஆ) லூக்கா அருட்செய்தி நூலின் நோக்கம்

மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, ......... உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய .. ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. 1:1-4


(இ) யோவான் அருட்செய்தி நூலின் நோக்கம்

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. 20:31


(ஈ) யோவான் எழுதிய முதல் நிருபத்தின் நோக்கம்

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 5:13

நற்செய்தி நூல்களின் நோக்கம் – மக்கள் இரட்சிப்பு அடைவது நிருபத்தின் நோக்கம் – விசுவாசிகள் இரட்சிப்பின் நிச்சியத்தை அடைவது


(உ) பழைய ஏற்பாட்டின் நோக்கம் 

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். ரோமர் 15:4

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (1 கொரி. 10:11)


(ஊ) வேதாகமத்தின் முழு நோக்கம்

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; …….. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோ. 3:16,17)

(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment