- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 8 May 2012

டைடானிக் - தவறிய பயணம்


டைடானிக் கப்பல் தெரியுமா? உங்களுக்கு? தெரியுமாவா? டைட்டானிக் சுப்பர் ஹிட் மூவியாச்சே தெரியாமலா? வருடங்கள் பல உருண்டோடினாலும் ஜெக் டவ்சன், ரோஸ் காதல் ஜோடியை மறக்க முடியுமா? ஆனால் அந்தக் காதல் கதை உண்மைக்கதையல்ல. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அபார மூளையில் உருவான கற்பனைக்கதை. ஆனால் உண்மையான டைடானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டில் பிரமாண்டமாய் கிளம்பியபோது கிளார்க் குடும்பதில் நடந்த உண்மை சம்பவத்தை யாராலுமே மறக்க முடியாது. அன்றைய நாளிதழ்கள் இந்த மறக்க முடியாத சம்பவத்தைத் தவறாமல் பதிவு செய்திருந்தது.

கிளார்க் தம்பதியினருக்கு ஒன்பது பிள்ளைகள். இங்கிலாந்தில் வசித்த இந்த குடும்பத்திருக்கு தங்கள் நாட்டில் இருந்த மற்றவர்களைப் போல அமெரிக்கா நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்பது அவர்களது நீண்டகால ஆசை. குடும்பமாக தினந்தோறும் Family Altar என்ற தங்களது குடும்ப ஜெபவேளையில் ஆண்டவரிடம் இந்த விண்ணப்பத்தை ஒவ்வொரு நாளும் சமர்ப்பித்தனர். அதற்கென்றே பணமும் சில வருடங்களாக சேர்க்க ஆரம்பித்தனர். 11 பேருக்கு டிக்கட் எடுக்க வேண்டுமல்லவா? நடுத்தர குடும்பம் என்ன செய்யும்?

அந்த நேரத்தில்தான் அந்த விளம்பரம் அவர்கள் கண்ணில் பட்டது. Titanic மூழ்கவே மூழ்காத கப்பல்! The Largest Sea Lines! உலகின் பிரமாண்டமான கப்பல்! - சகல ஆடம்பரங்களுடன் நீச்சல் குளம் உட்பட“

புது கப்பல், பிரமாண்டமானதாய், கேளிக்கைகள் நிறைந்ததாய், ஆடல், பாடல் ஆர்ப்பாட்டங்கள் எனப் பல சலூகைகள், கோடீஸ்வரன் செல்ல முதல் வகுப்பு, நடுத்தரத்திற்கு 2ம் வகுப்பு, ஏழைகள் செல்ல 3ம் வகுப்பு யாருக்குத்தான் கசக்கும்? விரைந்து சென்று முன்பதிவு செய்தார் கிளார்க். டிக்கட்டுகளையும் வாங்கிவிட்டனர். எல்லோருக்கும் ஒரே குஷி. அந்த நாள் எப்போது வரும், அவர்களுக்கு நாட்கள் மெல்லத்தான் நகர்ந்தன.

இதற்கிடையே தங்களது உற்றார் உறவினர், நண்பர்களின் பிரிவு உபசார விருந்துக்கள், மூட்டை முடிச்சுக்குள் பேக்கிங் என்று எல்லாமே. பிரிவோம் என்ற சோகமும் கப்பல் பயண சந்தோஷசமும் கலவையாய் உள்ளத்தை நிறைக்க இந்த சந்தோஷங்களுக்கு ஒரு சின்ன இடைவெளி. என்ன அது? ஆமாம். ஜூனியர் கிளார்க்கை நாய் கடித்து விட்டது. இந்த நாய்க கடி இடியாய் இவர்கள் தலையில் இறங்கியது.

ஒருவேளை வெறிநாய்க் கடியாக இருந்தால்? டாக்டர் அமைதியாக சொன்னார். “ஜூனியர் கிளார்க் வெளியே எங்கும் செல்லக் கூடாது; யாரும் அவரைப் பார்க்க உள்ளே வரவும் கூடாது; அவரைக் கடித்தது வெறிநாயாக இருந்தால்? Rabies உடனே பரவும்; எனவே ஒரு வாரம் தீவிர அவதானிப்பில் இருக்க வேண்டும்“ “ஐயகோ என் கடவுளே! ஒட்டுமொத்தமாக ஒலி்த்தன ஒன்பது குரல்களும்.

அம்மாவைத் தவிர, புயலுக்குப் பின் அமைதி மாதிரி கத்தி ஓய்ந்தபின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் சுருண்டனர். ஜூனியர் கிளார்க்குக்கு ஏற்பட்ட விபத்தால் முழு குடும்பத்தின் பயணமும் நிறுத்தப்பட்டது. ஜூனியர் கிளார்க் மட்டும் ஏப்ரல் 10, 1912 அன்று கனத்த மனதைச் சுமந்து கொண்டு துறைமுகம் சென்று பிரமாண்டமான டைடானிக் கப்பல், பயணிகள் ஆரவாரத்தோடு நகர்ந்து கொண்டிருந்ததை பார்த்து மற்றவர்களுக்கு கையசைத்து வாழ்த்துச் சொல்லி விட்டு வீடு திரும்பினார்.

மனதில் “ஐயகோ இந்தக் கப்பலில் நாங்கள் குடும்பமாய்ச் சென்றிருந்தால் எவ்ளளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால்.... அதிக சோகத்தோடும் கனத்த மனத்தோடும், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத அதிர்ச்சியான மனநிலையோடும், அவர் காணப்பட்டார். கலைந்துபோன கனவுகள், நிறைவேறாத ஆசைகள், சிதைந்த போன எண்ணங்கள் எதிர்பார்க்காத நிஜங்கள் என அவரது இதயம் மிகவும் கனத்தது.

ஏன் ஆண்டவரே இப்படிச் செய்தீர்? உமது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துத்தானே ஜெபித்தோம்? ஒவ்வொரு கட்டத்திலும் உமது வழிநடத்துதல்கள் இருந்ததே! கஷ்ட்டப்பட்டு பணம் சேர்த்தது. டைடானிக்கில் பல போட்டியாளர்களிடையே டிக்கட் கிடைத்தது. எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் நடத்தினீரே! கடைசியில் ஏன் இப்படி நடந்தது?

கேள்விக் கோர்வைகளுடன் கண்ணீர் கோர்வைகளும் சேர்ந்துகொள்ள மீளாத் துயரத்தில் ஜூனியர் கிளார்க் காணப்பட்டார். ஏன் ஆண்டவரே ஏன்? லாசர் மரி்த்து நான்கு நாள் தாமதித்து வந்த இயேசுவைப் போல, ஏன் என்ற கேள்விக்கு 4 நாட்களுக்கு பிறகு விடை வானொலியின் வாயிலாக கிடைத்தது.

ஆடம்பரமாய் அசைந்து சென்ற டைடானிக் கப்பல் ஏப்ரல் 15 அன்று அதிகாலையில் அட்லாண்டிக் கடலில் சென்றுகொண்டிருந்தபோது பனி மலையில் மோதியது. கப்பலின் ஒரு பகுதியில் ஒரு பெரிய ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் உள்ளே மளமளவென்று செல்ல இரண்டு மணிநேரத்தில் கப்பல் இரண்டாக உடைந்து மூழ்க ஆரம்பித்தது.

கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாத கப்பல் என்று முழக்கமிட்டு வெறும் 20 உயிர்காக்கும் படகுகளை மட்டுமே சுமந்து சென்ற பிரம்மாண்டமக் கப்பல் இப்பொழுது மூழ்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது.

2227 பேர் பயணித்த கப்பல் இரண்டாக உடைந்து மூழ்கியதில் 705 பேரைத் தவிர அனைவரும் மரித்துப் போயினர்.

இந்தத் துயர சம்பவம் நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்தாலும் உலக மக்கள் மனதில் நீங்காத ஒரு வடு. தப்பித்தோரில் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி காலத்தால் ஆற்றப்படாத காயங்களுடன் மரித்துள்ளனர். ஆனால் கிளார்க் குடும்பமோ முன்பு புரியாத, ஆனால் இப்பொழுது புரிந்து கொண்ட தேவனின் தெளிவான சித்தத்தை எண்ணி அவரை துதித்தது.

 “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.  பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.(ஏசாயா 55:8)

நம் கிட்டப் பார்வையில் நாம் எதிர்பார்க்கும் விதமாக காரியங்கள் நடக்காத போது தொய்ந்து ஆண்டவரை மறந்துபோய் சுலபமாக மறுதலித்து விடுகின்றோம். நாம் கேட்க மறுக்கின்ற காரியங்களிலும், மேலான ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கும்போதுதான் நம் சித்தத்தைவி்ட ஆண்டவரின் சித்தம் எத்தனை மகிமையானது என்பதை உணர்வோம். கடவுளின் சித்தத்தை எதிர்வுகூர்வார் யாருமில்லை.

(நன்றி ஆசீர்வாதம் சஞ்சிகை , மே 2001 ; கட்டுரையாசிரியர் : பிரிசில்லா போல்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment