- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Showing posts with label யோவான் சுவிஷேசம். Show all posts
Showing posts with label யோவான் சுவிஷேசம். Show all posts

Saturday, 22 October 2011

ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவான் 9:4)




இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களில் புரிந்து கொள்வதற்கு கடினமாயிருக்கும் இன்னுமொரு வசனம் யோவான் 9:4 குறிப்பிடப்பட்டடுள்ளது. இவ்வசனத்தில், “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; என்று தெரிவித்த இயேசுகிறிஸ்து “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.“ என்றும் முன்னறிவித்துள்ளார். (யோவான் 9:4) இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் “பகற்காலம்“ “இராக்காலம்“ என்னும் வார்த்தைகள் என்ன அர்த்தத்தோடு உபயோகித்துள்ளார் என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. எனினும், இவ்விரு வார்த்தைகளையும் இயேசுகிறிஸ்து சொல்லர்த்தமாக உபயோகித்துள்ளார் என்னும் விள்ககம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால் யோவானுடைய சுவிசேஷத்தில் இவ்விரு சொற்பிரயோகங்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உருவக விபரணங்களாக “மக்களின் ஆவிக்குரிய நிலையை அறியத்தரும் சொற்பதங்களாகவே உள்ளன(1) எனினும், சில சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் இவ்வித அர்த்தங்களுடன் இவ்வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதையும் நாம் அவதானிக்கலாம் (2)

“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; (3) என்று இயேசுகிறிஸ்து கூறும்போது, இவ்வுலகத்தில் பணிபுரிவற்காகத் தமக்கு நியமிக்கப்படப்டுள்ள காலத்தையே குறிப்பிட்டுள்ளார். “இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பணியாற்றிய காலம் அவருக்குப் பகற்காலமாய் இருந்தது (4) இவ்வசனத்தில் “நான்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் “நாம் என்றே உள்ளது (5) எனவே, இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களையும் சேர்த்து “நாங்கள் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்“ என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார் (6) பிறவிக் குருடனைக் கண்ட சீடர்கள், அவன் குருடனாகப் பிறப்பதற்கு யார் காரணம் என்று கேட்டபோதே இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறியமையால் (யோவான் 9:1-4) அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை விட்டுவிட்டு, தேவன் தங்களுக்கு கொடுத்துள்ள காலம் முடிவடைவதற்குள் அவர் தந்த பணியைச் செய்ய வேண்டும் என்பதையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேவனால் கொடுக்கப்பட்ட பணியைச் செய்யவேண்டியதன் அவசியத்தைச் சீடர்களுக்குச் சுட்டிக் காட்டுவதறகாக “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று  இயேசுகிறிஸ்து கூறினார். இதற்கு அடுத்த வசனத்தில் இயேசுகிறிஸ்து  தாம் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருப்பதாக தெரிவித்துள்ளார். (யோவான 9:5) “இயேசுகிறிஸ்து இவ்வுலகிலிருக்கும் காலமே பகற்காலம் என்றும் அவர் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் வருவது இராக்காலம்“(7) என்றும் சிலர் கருதுகின்றனர். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் இருக்கும் காலமே பகற்காலம் என்பது உண்மை என்றாலும், (8) வரவிருக்கும் இராக்காலத்தில் ஒருவராலும் கிரியை செய்ய முடியாது எனறும் இயேசுகிறிஸ்து கூறுவதனால், அவர் பரமேற்றிச் சென்ற பின்னர் அவரது சீடர்களினால் தேவனுடைய கிரியைகளைச் செய்ய முடியாதிருந்தது என்றும் நாம் கூறவேண்டும். ஆனால், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் அறியத்தருவது போல, இயேசுகிறிஸ்துவின் சீடர்கள், அவர் குறிப்பிட்ட விதமாக, அவரையும் விட பெரிய கிரியைகளைச் செய்துள்ளமையால் (யோவான் 14:12) ஒருவரும் கிரியை செய்ய முடியாத இராக்காலம், இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் உள்ள காலம் என்று கூற முடியாது. 

உண்மையில் ஒருவரும் கிரியை செய்ய முடியாத  இராக்காலம் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமே உள்ளது(9). எனவே, அதற்கும் முன்னர், தேவன் தமக்குக் கொடுத்த பணியைச் செய்ய வேண்டும் என்பதேயே இயேசுகிறிஸ்துவின்  இவ்வசனத்தில் தம் சீடர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார். இராக்காலம் முடிவடைய மறுபடியும் பகற்காலம் வருவது போலவே, இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின்னர் மறுபடியுமாகச் சீடர்கள் பரிசுத்த ஆவியானவருடைய உதவியுடன் உலகில் பணிபுரியக் கூடியதாக இருந்தாலும், தமது சிலுவை மரணத்திற்கு முன்னர் தாம் செய்ய வேண்டிய பணிணைச் செய்து முடிக்க வேண்டும் என்பதையே இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் தம் சீடர்களுக்கு அறிவித்துள்ளார். (10) மேலும், அடுத்த வசனத்தில் “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்“ (யோவான் 9:5) என்று இயேசுகிறிஸ்து குறிப்பிடப் பட்டுள்ளமையால், அவர் இவ்வுலகத்திலிருந்து சென்ற பின்னர் உலகிற்கு ஒளி இல்லாமல் போய்விட்டது என்று நாம் கருதலாகாது. அதன் பின்னர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களும், தற்காலத்தில் கிறிஸ்தவர்களும் அவருடைய ஒளியை பிரதிபலிப்பவர்களாக இவவுலகத்தில் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

Footnote and Reference
(1) G.L. Borchert, John 1-11 : The New American Commentary, p 170. அக்காலத்தைய இலக்கியங்களைப் போலவே, யோவானுடைய சுவிசேஷத்திலும் ஒளி நன்மையையும் ஆவிக்குரிய மெய்வாழ்வையும், இருள் தீமையையும் பாவத்தையும், சாத்தானின் ஆளுகையையும் உருவகிக்கும் விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன. 

(2) உதாரணத்திற்கு யோவான் 3ம் அதிகாரத்தில் “நிக்கொதேமு“ இயேசுகிறிஸ்துவிடம் “இராக்காலத்தில் வந்தான்“ என்று குறி்பபிடப்பட்டிருப்பது, இவன் இரவு நேரத்தில் வந்தததையே“ (F. F. Bruce, The Gospel of John, p. 81) அறியத்தந்தாலும் (யோவான் 7:50) அவன் ஆவிக்குரிய அந்தகாரத்திலிருந்து (ஒளியாகிய இயேசுகிறிஸ்துவிடம்) வந்தான் என்னும் அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. அக்காலத்தைய யூதமதப் போதகர்கள் இரவு நேரத்திலேயே நியாப்பிரமாணத்தை ஆராய்ந்து படித்து வந்தமையால், யூதமதப் போதகனான நிக்கொதுமுவும இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவ்வித இடையூறுகளுமின்றி கற்பதற்காக இரவு நேரத்தில் அவரிடம் வந்தான் (G.R. Besley-Murray, John : Word Biblical commentary Volume 36, p 47) என்பதும் அவன் மற்ற யூதர்களுகு்குப் பயந்ததினால் எவருக்கும் தெரியாமல் இயேசுகிறிஸ்துவைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தைத் தெரிவு செய்தான். (W.Hendriksen, New Testament Commentary : John, p 132) எ்னபதும் உண்மை என்றாலும் “அவன் ஆவிக்குரிய அந்தகாரத்திலிருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்துள்ளான். (H. Hoskyns, The Fourth Gospel, p 211) என்பதை மறுப்பதற்கில்லை. “நிக்கொதேமு இரவுநேரத்தில் இயேசுகிறிஸ்துவிடம் வந்தாலும், அவனது ஆவிக்குரிய வாழ்வின் இருள் அவன் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது“ (E.W. Heisenberg, Commentary on the Gospel of John Volume 1, pp. 157-158; R.H. Lightfoot, St. John's Gospel : A Commentary p. 116)

(3) இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பணிபுரியும் போது, தம்மை அனுப்பிய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே செயற்பட்டு வந்தார் (யோவான் 6:38) இதனால்தான் இவ்வசனத்திலும் நான் “என்னை அனுப்பினவருடை கிரியைகளைச் செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். 

(4) J.C. Ryle, Expository Thoughts on John Volume 2, p. 160

(5) இதனால்தான் புதிய இலகு தமிழ் மொழிபெயர்பபில் இவ்வசனம் “பகல்வேளையாய் இருக்கும் போதே என்னை அனுப்பினவருடைய வேலையை நாம் செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிவிலியத்திலும் “நாம்“ என்றே மொழிபெயர்த்து்ள்ளனர். மேலும் “மோனஹன்“ மற்றும் “ராஜரீகம்“ என்போரது தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் இதனை நாம் அவதானிக்கலாம்.

(6) R.C.H. Lenski, The Interpretation of St. John's Gospel, P. 677

(7) J.C. Ryle, Expository Thoughts on John Volume 2, p 160 இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருந்து சென்றபின்னர் உள்ள காலமே இராக்காலம் என்னும் கருத்திற்கு ஆதாரமாக இவர்கள் ரோமர் 13:12 ஐ சுட்டிக்காட்டுவது வழமை. இவ்வசனத்தில் “இரவு சென்று போயிற்று பகல் சமீபமாயிற்று“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் இரவு என்பது இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் சரீரப்பிரகாரமாக இல்லாத காலம் என்றும் வரவிருக்கும் பகல் அவரது மறுவருகை என்றும் கூறுகின்றனர். (Ibid, p. 161)

(8) D.A. Carson, John : Pillar New Testament Commentary, pp 362-363

(9) G.L. Borchert, John 1-11 the New American Commentary, p. 314

(10) D.A. Carson, John: Pillar New Testament Commentary, pp 362-363

(11) E.A. Blum, John: The Bible Knowledge Commentary New Testament, p. 307

(அவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய “கர்த்தரின் வார்த்தைகளில் கடினமானவரிகள்“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி) 


Wednesday, 27 July 2011

என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55)

(என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55) இவ்வசனத்தினை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்கர்களும் சில கிறிஸ்தவ பிரிவினரும் இயேசு திருவிருந்தை ஏற்படுத்தியுள்ளார்; அதனை நினைவு கூறவேண்டும் எனும் கருத்துடையவர்களாய் இருப்பதோடு, அதனை திருபலியிலும் / ஆராதனைகளிலும் கடைபிடிக்கிறார்கள். இவ்வசனம் நமக்கு உண்மையில் என்ன போதிக்கிறது. இயேசு திருவிருந்தை ஏற்படுத்தினாரா? இக்கட்டுரை அதனை விளக்குகின்றது)

இயேசு ஐந்து அப்பங்களையும இண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின்னர், அவர் தம்மை ஜீவ அப்பமாக வெளிப்படுத்தினார் (யோவா 6:1-35) (1) மக்கள் சரீர உணவான அப்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவர் ஆவிக்குரிய அப்பத்தைப் பற்றி விளக்கிக் கூறியதோடு 'என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது'  என்று யோவான் 6:55 இல் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் இது “கடினமான உபதேசம்“ என்று கூறியதோடு (யோவான் 6:60) “இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான்" என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள் (யோவான் 6:52) அன்று யூதர்கள் மத்தியில் உருவான வாக்குவாதம் இன்றைய கிறிஸ்தவ உலகிலும் உள்ளது. இயேசுக்கிறிஸ்துவன் வார்த்தைகள் அதாவது, “தமது மாம்சம் மாம்சம் மெய்யான போஜனம் என்றும் தமது இரத்தம் மெய்யான பானம்“ என்றும் அவர் கூறும்போது, அவர் என்ன அர்த்ததோடு இவ்வாறு சொன்னார் என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சிரமமாயிருப்பதனால். இது பற்றி வித்தியாசமான கருத்துக்கள் இன்றைய கிறிஸ்தவ உலகில் உருவாகியுள்ளன. 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் யோவான் ஆறாம் அதிகாரத்திலுள்ள இயேசுக்கிறிஸ்துவின் பிரசங்கத்தைத் “திருவிருந்து பற்றிய அருளுரையா கவே“ கருதுகின்றனர்.(2) இதன்படி இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைப் பானம் பணணுவதும் திருவிருந்தைப் பற்றிய அறிவுறுத்தலாக விளக்கப்படுகின்றன. இதனால் “யோவான் 6ம் அதிகாரத்தில் 51 முதல் 58 வரையிலான வசனங்கள் திருவிருந்தின் வார்த்தைகளாகவே உள்ளன. (3) என்றும் கூறப்படுகின்றன.  இயேசுக் கிறிஸ்துவின் கடைசி .இராப்போஜனத்தைப் பற்றி யோவான் குறிப்பிடாத மையால் (4) அதைப் பற்றிய இயேசுக்கிறிஸ்துவின் அருளுரைகளை யோவான் 6ம் அதிகாரத்தில் எழுதியுள்ளார் என்று அநேகர் கருதுகின்றனர்.  இன்று பிரபலமாயிருக்கும் இவ்விளக்கம் சபை சரித்திரத்தின் ஆரம்பகாலத்தில் முக்கியத்துவம் பெறாத ஓர் விளக்கமாக இருந்துள்ளதோடு (5) ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால், “இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சத்தைப் புசி்த்தல்“, “இரத்தத்தைப் பானம் பண்ணுதல்“ என்னும் சொற்பிரயோகங்கள் திருவிருந்தை நினைவூட்டுகின்ற வார்த்தைகளாக உள்ள போதிலும் அதாவது, திருவிருந்தின்போது உபயோகிக்கப்படுகின்றவைகளாக உள்ள போதிலும், யோவான் ஆறாம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே விளக்கியுள்ளார் என்று கூறுவதற்கில்லை. “இயேசுக்கிறிஸ்துவின் உபதேசம் திருவிருந்தைப் பற்றியது“ என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இவ்வதிகாரத்தில் இல்லை. (6)

இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே யோவான் ஆறாம் அதிகாரத்தில் விளக்குகிறார் என்று கூறுபவர்களில் சிலர். ஒருவன் இரட்சிப்படைவதற்குத் திருவிருந்து அவசியமானது என்றும் தர்க்கிக்கின்றனர். (7). ஏனென்றால் 53ம் வசனத்தில் “நீங்கள் மனுகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் மாமிசத்தை புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதன் மூலம் ஒருவனுக்கு ஜீவன் கிடைப்பதனால், திருவிருந்து இத்தகைய ஜீவனைக் கொடுக்கின்றது. என்னும் முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனர். இதனால்., “திருவிருந்தின்போது ஜீவனளிக்கும் கிறிஸ்துவின் ஆவி பெறப்படுவதனால் இரட்சிப்புக்கு திருவிருந்து அவசியமானது. (8) என்று கூறும் வேத ஆராய்ச்சியாளர்கள் “இவ்வுலக வாழ்வுக்கும் இனி வரவிருக்கும் உலகிற்கான வாழ்வுக்கும் அவசியமான ஜீவன் திருவிருந்தின் “அப்பம்“ பானம்“ என்பவற்றின் மூலம் ஒருவனுக்குள் செல்கிறது. (9) என்றும் விளக்குகின்றனர். எனினும் திருவிருந்தின் மூலம் இரட்சிப்பு கிடைக்கும் என்பதற்கு வேதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாததால் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாக உள்ளது. 

யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இயேசுக்கிறிஸ்து எருசலேமில் திருவிருந்து முறையை ஏற்படுத்தியபோது ஆற்றிய பிரசங்கம் அல்ல. அவர் திருவிருந்தை உருவாக்குவதற்கும் ஒரு வருடத்திற்கும் முன்பே இவ்வாறு கூறியுள்ளார். (10) உண்மையில், கலிலேயாவில் தமது அற்புதத்தை கண்டமையால் அடுத்த நாளும் தங்களுக்கு உணவு கிடைக்கும என்னும் எண்ணத்தோடு வந்தவர்களுக்கு (யோவான் 6:26) இயேசுக்கிறிஸ்து கூறியவைகளே யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் திருவிருந்து பற்றிய ஆழமான ஆவிக்குரிய விடயத்தைப் புரிந்து கொள்ளும் அல்லது ஏற்றுக் கொளளும் மனநிலையில் இருந்தவர்கள் அல்ல.இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் கப்பர்நகூமிலுள்ள ஜெபாலயத்தில் வைத்து கூறப்பட்டவை என்று 59ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை இது எருசலேமில் திருவிருந்தை உருவாக்கியபோது அது பற்றி கொடுக்கப்பட்ட விளக்கம் அல்ல என்பதை அறியத் தருகிறது. இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்களில் அநேகர் அவரது உபதேசம் கடினமானது என்று கூறி அவரை வி்ட்டுச் சென்று விட்டனர். (யோவான். 6:60) (11) எனவே இத்தகைய மக்களுக்கு இயேசுக்கிறிஸ்து பற்றிய உபதேசத்தை விளக்கினார் என்று கூறுவது அர்த்தமற்றது. (12)

யோவான் 6ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே விளக்கியுள்ளார் என்று கருதினால் திருவிருந்தின் மூலம் நித்திய ஜீவன் கிடைக்கும் என்னும் தவறான உபதேசத்தேயே உருவாக்கும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் என்றே 53ம் 54ம் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் திருவிருந்து ஒரு மனிதனில் இத்தகைய விளைவை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், ஏற்கனவே ஜீவனைப் பெற்றவர்களே “தமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயான ஐக்கியத்திற்கு அடையாளமாக திருவிருந்தில் பங்கேற்கின்றன (13) மேலும், ஜீவனானது இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகக் கிடைப்பது என்பதை இவ்வதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து பல தடவை சுட்டிக் காட்டியுள்ளார். (யோவான் 6:35, 40, 47) இதிலிருந்து இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதும், அவரது மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதும் மனிதனில் ஒரே விளைவையே ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்கிறோம். உண்மையில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியல்ல ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றியே யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது வார்த்தைகள் “அக்கால யூதக் கலாசாரத்தின் சொற்பிரயோகங்களாகவே உள்ளன (14) அதாவது “புசித்தல் குடித்தல்” என்னும் சொற்பிரயோகம் “ஒருவனுக்குள் எடுத்தல்“ என்னும் அர்த்தத்துடன் அக்காலத்தில் உபயோக்கப்பட்ட ஒரு மொழிவழக்காகும். (15) உபதேசங்களை அல்லது போதனைகளை ஒருவன் தனக்குள் எடுப்பதற்கும் யூதர்கள் இவ்வித சொற்பிரயோகத்தையே அக்காலத்தில் உபயோகித்துள்ளனர். (16) இத்தைகைய அர்த்தத்தில் வேதத்திலும் தேவனுடைய வார்த்தையை புசிக்கும்படியான அறிவுறுத்தல்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் (எரே. 15:16, எசே. 3:1-3, வெளி. 10:9-10) 

இயேசுக்கிறிஸ்துவும் இத்தகைய அர்த்ததுடனேயே தம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உட்கொள்வதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனவே, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து அவரை எமக்குள் எடு்ப்பதே இங்கு அவரது மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைப் பானம் பண்ணுவதுமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இயேசுக்கிறிஸ்துவை நம் உள்ளான வாழ்விற்குள் கொண்டு வருவதே நமக்கு ஆவிக்குரிய ஜீவனைக் கொடுக்கும் செயலாகவுள்ளது. இதைத்தான் இயேசுக்கிறிஸ்து “ என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு“ என்று யோவான் 6:54 இல் குறிப்பிட்டுள்ளார். யோவான் சுவிசேஷத்தின் ஏனைய பகுதிகளில் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிக்கும் விடயமே இங்கு இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சத்தைப் புசிப்பதாகவும் இரத்தத்தைப் பானம் பண்ணுவதாகவும்“ உள்ளது. மேலும் இவ்வதிகாரத்தில் “புசித்தல்“ குடித்தல்“ என்னும் பதங்கள் மூலமொழியில் “ஒருதரம் மட்டும் செய்யும் செயலைக் குறிக்கும் விதத்திலேயே உள்ளது. (17) அதாவது “இயேசுக்கிறிஸ்துவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் ஒருதரம் உட்கொள்வதனால் கிடைக்கும் விளைவே 53ம் 54ம் வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது. (18) எனவே, இதை பலதடவைகள் நாம் பங்கேற்கும் திருவிருந்தாகக் கருதமுடியாது. மேலும், பதிய ஏற்பாட்டில் “இயேசுக்கிறிஸ்துவின் மாம்சம்“ என்னும் சொற்பிரயோகம் திருவிருந்தைக் குறிக்கும் பதம் அல்ல. “இயேசுக்கிறிஸ்துவின் சரீரம்“ என்னும் சொற்பிரயோகம் திருவிருந்தில் உபயோகிக்கப்பட்டுள்ளதும் (19) “மாம்சம்“ என்னும் பதத்தை உபயோகித்துள்ள யோவான் 6ம் அதிகாரம் திருவிருந்தைப் பற்றியல்ல என்பதற்கான ஆதாரமாயுள்ளது. (20)


யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜீவஅப்பம் பற்றிய அருளுரை இயேசுக்கிறிஸ்து உலக மக்களுக்காகத் தம்மையே பலியாகக் கொடுப்பதைப் பற்றியும் அவரை விசுவாசித்து அவரை நமக்குள் எடுத்துக் கொள்ளப்படுவதனால் நமக்குக் கிடைக்கும் ஆவிக்குரிய வாழ்வைப் பற்றியுமே விளக்குகிறது. ஜீவ அப்பமாகத் தம்மை உருவகிக்கும் இயேசுக்கிறிஸ்து 51ம் வசனத்தில், “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே“ என்று குறி்ப்பிடப்பட்டுள்ளார். இது அவரது மரணத்தையே குறிக்கிறது. ஏனென்றால் அவர் சிலுவையிலேயே உலக மக்களின் ஜீவனு்ககாகத் தம்மையே பலியாக கொடுத்தார். இதனைத் தொடர்ந்துவரும் வசனங்களில் தம் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதன் மூலம் நித்திய ஜீவன் கிடைப்பது பற்றியும் இயேசுக்கிறிஸ்து விள்ககியுள்ளார். இதில் உபயோகிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் திருவிருந்தைப் பற்றியது போல் இருந்தாலும் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியல்ல. ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றியே இங்கு விளக்கியுள்ளார். அவரைப் புசிப்பதன் மூலம், அதாவது அவரை நமக்குள் எடுப்பதன் மூலம் நமக்கு ஆவிக்குரிய வாழ்வு கிடைக்கிறது என்பதையே அவர் அறியத் தருகிறார். 

Footnote & References 
(1) “ஜீவ அப்பம் நானே“ என்னும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்கான விளக்கத்திற்கு ஆசிரியரின் “இயேசுக்கிறிஸ்து யார்? எனும் நூலினைப் பாரக்கவும். 

(2) O. Cullmann, Early Christian Worship, P 93

(3) W. Barclay, Jesus As They Saw Him, p 261

(4) திருவிருந்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் புறஜாதியார் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக யோவான் இதைப் பற்றி குறிப்பிடவில்லை. (J Jeremias, The Eucharistic Words of Jesus p 73) என்பது சிலரது கருத்தாய் உள்ளது. எனினும், முதல் மூன்று சுவிஷேச புத்தகங்களிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமையால் கடைசி இராப்போஜனத்தின்போது நடந்த, அது சமயம் ஏனைய சுவிஷேசங்களில் குறிப்பிடாத விடயங்களை யோவான் 13ம் அதிகாரத்தில் எழுதியுள்ளார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமாக உள்ளது. 

(5) M.F.Wiles, The Spiritual Gospel : The Interpretation of the Four Gospel in the Early Church. p52. ஆதிச்சபை பிதாக்கள் யோவான் 6ம் அதிகாரத்தைத் திருவிருந்து போதனையாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும் இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் உள்ள போதிலும் ஒரு சில சபைப் பிதாக்கள் மட்டுமே இத்தகைய கருத்துடையவர்களாக இருந்தார்கள் எனனும் உண்மையை அநேகர் அறியாதிருக்கின்றனர். இயேசுக்கிறிஸ்துவே ஜீவ அப்பம் என்பதை ஏற்றுக் கொண்டிருந்த சபைப் பிதாக்கள், ஜீவ அப்பமாகிய அவர் மாம்சமாகி இவ்வுலகிற்கு வந்த நமக்காக மரித்தார் என்றே விசுவாசித்தார்கள். (D. Waterland, A. Review of the Doctrine of the Eucharist. p. 123)

(6) J. Marsh, The Gospel of St. John, p 281

(7) A. Richardson, An Introduction to the Theology of the New Testament p 377

(8) Ibid, p 327

(9) W. Barclay, Jesus As They Saw Him, p 261

(10) யோவான் 6ம் அதிகாரச் சம்பவம் பாஸ்கா பண்டிகையின் காலத்திலேயே நடைபெற்றுள்ள போதிலும் அவ்வருட பாஸ்காவின் போதல்ல. அதற்கு அடுத்த வருடத்திலேயே திருவிருந்து உருவாக்கப்பட்டது. 

(11) இவர்கள் மோசேயின் காலத்தில் 40 வருடங்களாக இஸ்ரவேல் மக்களுக்கு வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்பட்டதையே பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தனர். (யோவான் 6:31) உண்மையில் இவர்களுடைய பார்வையில் மோசே இயேசுக்கிறிஸ்துவை விட பெரியவராக இருந்தார். ஏனென்றால் மோசே 40 வருடங்களாக மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுத்துள்ளார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ ஒருநேரச் சாப்பாட்டை மட்டுமே கொடுத்திருந்தார். எனவே, அவர்களுக்கு இயேசுக்கிறிஸ்து செய்த அற்புதம், அதாவது ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது பெரிய காரியமாக தென்படவில்லை. இத்தகைய மனநிலையில் இருந்தவர்கள் ஒரு வருடத்திற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திருவிருந்தைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்னும் எதிர்ப்பார்ப்பில் இயேசுக்கிறிஸ்து அவர்களுக்கு அதைப்பற்றி விளக்கினார் எனறு கூறுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. உண்மையில் “மேசியாவாக வருபவர் மோசேயைப் போல வானத்திலிருந்து மன்னாவை மறுபடியும் கொண்டுவருவார் என்று அக்கால மக்கள் எதிர்பார்த்தனர். இதுவே அவர் மேசியா என்பதற்கான அடையாளமாக இருக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. (G.H. Macgregor, The Gospel of John, pp 142-143)

(12) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 312

(13) P.Enns, The Moody Hand Book of Theology, p 362 

(14) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 312

(15) H. Odeberg, The Fourth Gospel, p 239

(16) தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அப்பமாகவும், அதன் வார்த்தைகளை ஒருவன் தனக்குள் எடுப்பதை புசித்தலாகவும் யூத மதப் போதகர்கள் குறிப்பிட்டுள்ளனர். (L. Morris, Jesus is the Christ : Studies in the Thelogy of John, P 30)

(17) அதாவது மூலமொழியில் aorists tense இல் உள்ளது

(18) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 335

(19) ஆதிசபையில் இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சம்“ என்னும் சொற்பிரயோகம் அவர் மனிதராக வந்ததைக் குறிக்கவே பொதுவாக உபயோகிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவிருந்தில் இயேசுக்கிறிஸ்துவின் “சரீரம்“ என்னும் வார்த்தைகளையே உபயோகித்துள்ளனர். (L. Morris. Expository Reflections on the Gospel of John, p. 238)

(20) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 333



இவ்வாக்கமானது 
நூல் தலைப்பு :- கர்த்தரின் வார்த்தையில் கடின வரிகள்,  நூலாசிரியர் :- சகோ. எம்.எஸ்.வசந்தகுமார், வெளியீடு :- இலங்கை வேதாகமக் கல்லூரி 
பெறப்பட்டதாகும்




Wednesday, 25 May 2011

காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறான்றையும் தாமாய் செய்யமாட்டார்( யோவான் 5:19)



இயேசுக்கிறிஸ்துவின் சில கூற்றுக்கள் அவரது தேவத் தன்மையை முரண்படுத்தும் விதத்தில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். வேதபுரட்டர்கள் இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை தறுதலித்து வருகின்றனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் காணப்படும் இத்தகைய கூற்றுக்களில் ஒன்று 5ம் அதிகாரத்தில் உள்ளது(1) இயேசுக்கிறிஸ்து தம்மைத் தேவனுக்குச் சமனாக்குகின்றார் என்னும் யூதர்களின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கும்போது “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்“ என்று 5ம் அதிகாரம் 19ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள் அவர் கூற்றில் “தாமாய் செய்யமாட்டார்“ என்னும் சொற்பிரயோகத்திற்கு மட்டும் அழுத்தம் கொடுத்து, இயேசுக்கிறிஸ்துவினால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது என்று தர்க்கித்து வருகின்றனர். எனினும் இவர்கள் வாதிடுகின்ற விதமாக, “இயேசுக்கிறிஸ்துவினால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது“ என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல“ அதேபோல் இயேசுக்கிறிஸ்து பிதாவில் சார்ந்திருக்கும் அல்லது தங்கியிருக்கும் நிலையையே இவ்வசனம் அறியத் தருகிறது. (3) என்னும் சில வேத ஆராய்ச்சியாளர்களின் விளக்கமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. 

இயேசுக்கிறிஸ்து யோவான் 5:19 இல் சொல்லும் விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு இவ்வசனத்தை முழுமையாகப் பாரக்க வேண்டியது அவசியம். (4) வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியை கருத்திற் கொள்வதில்லை. இவ்வசனத்தின் இறுதிப் பகுதி “அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.“ என்று உள்ளது. அதாவது பிதா செய்பவற்றை குமாரனும் அதேவிதமாக செய்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும. உண்மையில் பிதா செய்பவைகளை தாமும் செய்வதாக இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் அறியத் தருகிறார். இது இருவரும் ஒரே தன்மையும் வல்லமையும் உடையவர்கள் என்பதை அறியத் தருகின்றது. இதனால்தான் இருவராலும் ஒரே காரியத்தைச் செய்யக் கூடியதாக உள்ளது. (5)

இயேசுக்கிறிஸ்துவினுடைய கூற்றில் “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ“ எனும் வாக்கியம் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள அந்நியோன்ய உறவைச் சுட்டிக் காட்டுகிறது. “இது இருவருக்கும் இடையில் எப்பொழுதும் இருக்கும் உறவாகும்“(6) உண்மையில் பிதா செய்கிறவைகளை குமாரனைத் தவிர வேறு எவராலும் பார்க்க முடியாது. (7). இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே பிதாவைப் பார்க்க முடியும் என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையிலுள்ள உறவு மிகவும் நெருக்கமானதும் அந்நியோன்ய சம்பந்தமானதுமாக உள்ளது. எனினும் பிதா செய்கிறவைகளைப் பார்த்து செய்யும் முறையைப் பற்றி இயேசுக்கிறிஸ்து இங்கு குறிப்பிடவில்லை. (8) என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். (9) இது இருவருக்கும் இடையேயுள்ள அந்நியோன்னிய சம்பந்தமான உறவையே சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பிதாவினால் செய்பவற்றைத் தன்னாலும் செய்ய முடியும் என்பதையே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பிதா செய்பவைகளைத் தாமும் செய்வதாக இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் குறி்ப்பிட்டாலும் “குமாரன் தாமாய் எதையும் செய்யமாட்டார்“ எனும் வாக்கியத்தின் மூலம் தாம் “தனித்து தன்னிச்சையாகச் செயற்படுவதில்லை“ என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது “அவர் பிதாவின் சித்தத்தை மீறி அதற்கெதிராகத் தனித்து செயற்படமாட்டார்“ என்பதே இயேசுக்கிறிஸ்துவினுடைய கூற்றின் அர்த்தமாகும். (11) இயேசுக்கிறிஸ்து  இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பிதாவின் சித்தத்தின்படியே செயல்பட்டு வந்தார். (யோவான் 6:38, 5:30) இதனாலேயே குமாரன் தாமாய் எதையும் செய்யமாட்டார் என்று அவர் கூறினார். “இயேசுக்கிறிஸ்து  செய்பவைகள், அவரும் பிதாவும் ஒன்றாகச் சேர்ந்து செய்பவைகள் ஆகும் (12). எனவே இங்கு ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர் என்ற எண்ணத்திற்கு எவ்வித இடமுமில்லை. எனவே, இயேசுக்கிறிஸ்து பிதாவின் சித்தத்திற்கு முரணாக எதுவும் செய்யாமல் இருப்பதனால் அவர் பிதாவை விடத் தாழ்வானவர் என்றோ, இல்லையென்றால் வல்லமை குறைந்தவர் என்றோ எண்ணுவது தவறாகும்

(இவ்வாக்கமானது சகோ வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக கல்லூரி)

Foot Note & Reference 
(1) ஏனைய சுவிசேஷங்களில் காணப்படும் இயேசுக்கிறிஸ்துவின் இத்தகைய கூற்றுக்களின் விளக்கங்களுக்கு ஆசிரியரின் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்“ மறறும் இயேசுக்கிறிஸ்து இறைவனா? எனும் நூல்களைப் பார்க்கவும்

(2) 38 வருடங்களாக வியாதியோடிருந்தவனைக் குணப்படுத்திய இயேசுக்கிறிஸ்து அதை யூதர்கள் எதுவும் செய்யாத ஓய்வுநாளில் செய்தமையால் அவர்கள் அவரைக் கொலைசெய்ய முற்பட்டார்கள். இதை அறிந்த இயேசுக்கிறிஸ்து என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்.“ என்று கூறினார். இதன் மூலம் ஓய்வு நாளில் செயல்படுவதற்கு, தேவனுக்குத் தடைகள் எதுவும் இல்லாதிருப்பது போலவே தமக்கும் எவ்வித தடையும் இல்லை என்பதை இயேசுக்கிறிஸ்து சுட்டிக் காட்டியுள்ளார். இதுவும் அவர் தம்மை தேவனுடைய சொந்தப் பிதாவாக குறிப்பிட்டதும், யூதர்களுக்கு அவர் தம்மைத் தேவனுக்குச் சமமானவராக்குவதாகத் தென்பட்டது. இதனால், நியாயப்பிரமாணத்தில் தேவனை நிந்திப்பதற்குக் கொடுக்கப்படும் தண்டனையான மரணதண்டனை கொடுப்பதற்கு யூதர்கள் வகை தேடினார்கள். (யோவா. 16-18) இதை அறிந்த இயேசுக்கிறிஸ்து தமது தேவத்துவதற்திற்கான ஆதாரங்களை சுட்டிக் காட்டுவதற்காகச் சொல்லும் விடயங்களில் ஆரம்ப வசனம் இதுவாகும். 

(3) G.L. Borchert, John 1-11: The New American Commentary, p 235; M.C. Tenny, The Expositor's Bible Commentary Volume 9, P. 64

(4) வேதப்புரட்டு உபதேசங்கள் கிறிஸ்தவ சபைக்குள் புகுவதற்கு முக்கிய காரணம் வேத வசனங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு அவ்வசனங்களை முழுமையாக நோக்காமல், அவற்றின் ஒரு பகுதிக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து வியாக்கியானம் செய்வதாகும். 

(5) L. Moris, John : The New International Commentary on the New Testament, p. 313

(6) Ibid, p312

(7) தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 1.18) அவர் மனுஷரில் ஒருவரும் கண்டிராத வரும் காணக்கூடாதவருமாய் இருக்கிறார் (1 தீமோ. 6:16)

(8) Schonfiled என்பாரின் ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பும் இயேசுக்கிறிஸ்துவின் இவ்வசனத்தை சரியான விதத்தில் மொழிபெயர்க்கவில்லை. 'What he does the son copies' எனும் மொழிபெயர்ப்பு மூலமொழியி்ன அர்த்தத்தை சரியான விதத்தில் ஆஙகிலத்தில் அறியத் தரவில்லை. 

(9) சில தேவ ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தில் ஒரு உவமை மறைந்திருக்கிறதாகக் கூறுகின்றனர். அதாவது, அக்காலத்தில் தகப்பனுடைய தொழிலை மகன் கற்றுக் கொள்ளும் முறை பற்றி இவ்வசனத்தில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு்ளளதாக இவர்கள் கருதுகின்றனர். (C.H. Dood, A Hidden Parable in the Fourth Gospel' in More New Testament Studies pp 30-40) தகப்பன் செய்கின்றவற்றைப் பார்த்தும் தகப்பன் சொல்கின்றவற்றைக் கேட்டுமே அக்காலத்தில் பிள்ளைகள் தகப்பனின் தொழிலைக் கறறுக் கொண்டனர். ஆனால் இயேசு இப்படிப்பட்ட நிலையில் இருந்தார் என்று கூறுவது அவரது தேவத்துவத்தை மட்டுப்படுத்தும் விளக்கமாகவே உள்ளது.

(10) W. Barclay, John 1-7: The Daily Study Bible, p 188

(11) D.A. Carson, John : The Pillar New Testament Commentary, p 251

(12) E.A. Blum, John : The Bible Knowledge Commentary, p 290